(14-4-2024)
இசுரேல் இரானியத் தூதரகத்தைத் தாக்கி இரானியத் தளபதிகளைக் கொலை செய்ததற்கு எதிர்வினையாக இரான் இப்போது இசுரேலைத் தாக்கியுள்ளது. அமெரிக்காவையும் பிற நட்பு நாடுகளையும் போரிலும் இனப்படுகொலையிலும் நேரடியாக ஈடுபடவைக்க நேதன்யாகு செய்யும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்துத்துவ அரசு எந்தவித அரசியல் முன்யோசனையும் அறம்சார் நிலைப்பாடும் இன்றி, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற மத உணர்வோடு இசுரேலுடன் இணக்கமாகிக் கொண்டுள்ளது. பல்லாயிரம் ஏழை இந்துத் தொழிலாளர்களை இசுரேலுக்குப் போர்ச்சூழலில் அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.
மீண்டும் இசுரேல் இரானைத் தாக்கினால் பெரும்போராக இது மாறலாம்.
இந்துத்துவ அரசு மீட்பு விமானங்களை அனுப்பி இந்துத் தொழிலாளர்களை மீட்டு வரலாம். பின்னர் ஒரு திரைப்படம் எடுக்கலாம்.
பைடன்(/டிரம்ப்), நேதன்யாகு, மோடி போன்ற தலைவர்களை மக்களாட்சிகளில் தேர்ந்தெடுப்பது நம் காலத்தின் பெருஞ்சோகம்.
(13-4-2024)
பிபி-மோடி கூட்டு
காசாவில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் நேதன்யாகுவின் அன்புக் கோரிக்கையை ஏற்று மோடியும் பாசக அரசும் பல்லாயிரம் ஏழை இந்தியத் தொழிலாளிகளை இசுரேலுக்கு அனுப்பிக்கொண்டுள்ளனர். Bibi-Modi bromance என்று இக்கூட்டைச் சுட்டுகிறது Boston Review. பால்சனாரோ, டிரம்ப் முதலானோர் உள்ள மோடியின் கொடுங்கோலர் நட்புப்பட்டியலில் நேதன்யாகுவுக்கு இடமில்லாது போகுமா? பாலசுத்தீனர்கள் செய்துகொண்டிருந்த பணிகளை இந்தியர்கள் மேற்கொள்ளப்போகின்றனர். இன அழித்தொழிப்புக்குத் துணைபோகும் செயல் இது.
தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற இந்தியாவின் நட்பு நாடுகள் இசுரேல் மீது இன அழிப்பு வழக்குத் தொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா தன் வரலாற்றுப் பங்கினை மறந்து இப்படியொரு செயலைச் செய்கிறது. அது அறமற்றது என்பதோடு மோசமான அரசியலும்கூட.
அது மட்டுமல்லாமால், அண்டை நாடுகளையும் போருக்கிழுத்துச் சீண்டிக்கொண்டிருக்கிறது இசுரேல். இத்தகைய ஆபத்தான சூழலில் இத்தனை ஆயிரம் ஏழைத் தொழிளாளர்களை உ.பி., பிகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் இருந்து அனுப்புகின்றனர். எத்தனை இடர் வந்தாலும் எங்கேனும் ஏதேனும் பணி வேண்டும் என்னுமளவுக்கு அம்மாநிலங்களின் வேலைவாய்ப்பும் பொருளாதாரச் சூழலும் இவர்களது ஆட்சியில் உள்ளன.
மேலும் இந்துக்களின் காவலனான இந்துத்துவ அரசும் சயனிய இசுரேலிய அரசும் இப்பணிகளுக்கு இந்துக்களை மட்டுமே வரவேற்கின்றன என்கிறது இக்கட்டுரை. தாங்கள் செல்லுமிடம் போர்முனையாகக்கூடும் என்பதை அந்த இந்துக்கள் அறிவார்களா?
11-4-2024
‘பாலசுத்தீனத்தில் ஈகைத் திருநாளுக்கு முந்தைய மாலை.
குழந்தைகளுக்கு மிட்டாய்கள் இல்லை.
குழந்தைகளே இல்லை.’
என்று கவிஞர் மொசாப் அபு தொகா ஒரு பதிவிட்டிருக்கிறார்.
ஒரு கணம் உறைந்து, பின் கீழே வந்தேன்.
வருத்தம் தொனிக்கும் எதிர்வினைகளுக்குக் கீழே,
‘கர்மா’ என்றொரு பதில்.
இசுரேலியர் யாராவது இட்டதா எனில், இல்லை. எழுதிய நபரின் பெயரின் பின்னொட்டாக, ‘மோதி கா பரிவார்’ (மோடியின் குடும்பம்). இசுரேலுடன் இவர்கள் தம்மை இணைவைத்துக்கொள்வதில் எந்த வியப்புமில்லை. இவர்கள் நாட்டை அழைத்துச் செல்ல முனைவது அதே அழிவுப்பாதையில். இதுபோன்ற எண்ணற்ற பதிவுகளால் இவர்கள் சமூக ஊடகங்களைச் சகிக்கமுடியாதவையாக்கினாலும் இவ்வொற்றைச் சொல் கூடுதலாகவே தைத்தது. இப்பின்னொட்டு, “தவறியும் என்னைப் படித்துவிடாதே,” என்பதற்கான எச்சரிக்கை மணி. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
5-4-2024
வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.
(The extortion and graft done wielding the sceptre
is no different from robbery done pointing a spear.)
கொடுங்கோன்மை அதிகாரத்திலுள்ள இக்குறளை என் பயிற்சி வகுப்புகளில் பயன்படுத்துவதுண்டு. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய என் மொழிபெயர்ப்பு. இதற்கான காட்சிப்பக்கத்தின் துணைப்படமாக வண்டியோட்டுநர் ஒருவரை வழிமறித்துக் கையூட்டு பெறும் போக்குவரத்துக் காவலரின் படத்தையே வைத்திருந்தேன். கடைநிலை அலுவலரின் சிறு வழிப்பறி. படித்து நற்பதவிகளில் இருப்போரின் அறப்பிறழ்வு குறித்து உரையாட எடுத்துக்கொண்ட இக்குறளுக்கு நிறைவாகப் பொருந்தாத படமாக அது இருந்தது.
இனி அங்கு உலகின் மாபெரும் பணப்பறிப்புத் திட்டம் சார்ந்த ஈர்ப்பானதொரு படத்தை எளிதாகத் தேர்ந்து பயன்படுத்திவிடலாம் என்ற முடிவிலுள்ளேன். அதுவே சாலப் பொருந்தும்.
2-4-2024
விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களின்படியே இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர்கள் 95 பேர் கொலையுண்டுள்ளனர், 163 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 211 பேர் மிரட்டப்பட்டுள்ளனர். இத்தனை தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களின் இழப்புகளை மலினப் படுத்தும்வகையில் ஒரு கீழ்மையான அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது.
ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர் இத்தனை நாள் பொதுத்தளத்தில் உள்ள வரலாற்றுத் தகவல்களை விடுத்து, மிகக்குறிப்பாக இரண்டு ஆவணங்களைத் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கோரி உடனே பெறுகிறார். வெளியுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்நாள் அமைச்சர் ஊடகக்கூட்டம் கூட்டிப் பழைய ஆவணங்களை அகழ்ந்து வந்து வழங்குகிறார். பிரதமரும் தன் கைச்சொடுக்கில் கிட்டக்கூடிய தரவுகளை விடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெற்ற தகவல்களைப் புதுக் கண்டுபிடிப்பு போல தேர்தல் பரப்புரைகளில் முன்வைத்து முழங்குகிறார். இந்த அளவுக்குத்தான் இவர்களின் ஆட்சித்திறனும் பொறுப்புணர்வும் உள்ளனவெனில், உடனடியாக ஆட்சி மாற்றம் நடந்தாக வேண்டும் என்பதற்கு வேறென்ன காரணம் வேண்டும்? கட்சத்தீவு சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஈழம் தொடர்பாகச் சுமத்த காங்கிரசு மீதும் திமுக மீதும் இதைவிடப் பெரும்பழிகள் உள்ளன. ஆனால் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் அயல்நாட்டு உறவுகளை வெறும் பரப்புரைக் கருவிகளாக்குவது உலகளவில் ஒரு நாட்டின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் செயல். தேர்தல் வெற்றிக்காகப் படித்தவன் சூதும் வாதும் செய்வதெப்படி என்பதற்கான செய்முறை விளக்கம் காட்டியுள்ளனர். ஆட்சிக்காகத் தேர்தல்நேரப் போர்களைத் தொடங்கவும் தயங்க மாட்டார்கள். அதுவும் இவர்களுக்குப் புதிதன்றே.
பி.கு.: இதன் பக்கவிளைவாக, இப்போதுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ ஆகியுள்ளனர்.
31-3-2024
கோவையில் IIMA, Phd, IPS வேட்பாளர்கள் களம் காண்பதால் அவர்களின் தனித்தகுதிகளை முன்னிறுத்தும் உரையாடல்களை இம்முறை கேட்கவேண்டியுள்ளது. இளமை, படிப்புத்தகுதி போன்றவற்றுக்கும் அரசியலில் திறம்படச் செயல்படுவதற்கும் தொடர்பு காணும் மாயைகளில் சிக்குண்டு தத்தளித்து வாக்களிப்பவர்கள் பயன்மதிப்பற்ற பண்டங்களை அளந்து எடை போடட்டும். மற்றவர்கள் இம்முறை எந்தக் கட்சி தோற்றாக வேண்டும், யார் நுழைவதற்கு இங்கு ஓர் இம்மி அளித்தாலும் நீங்காத பெருந்தீங்கு நேரும் என்ற தெளிவை முதலில் அடைந்தால் சரி. அதிகாரப் பரவலாக்கம் பெறாத வலுவற்ற மக்களாட்சியில் யார் வெல்லவேண்டும் என்பதைக் காட்டிலும் யார் தோற்கவேண்டும் என்பதே நாம் விடையறுக்க வேண்டிய முதன்மை வினா. கூடாத கட்சிகளைக் கழித்தபிறகே எஞ்சிய கட்சிகள்/வேட்பாளர்களின் தகுதிகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
மதவெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் ஒரு கட்சி (பல்லாயிரம் கோடி தேர்தல் பத்திரப் பறிப்பு நிதி வேறு கதை), மக்களாட்சிக்கு எல்லா வகைகளிலும் அச்சுறுத்தலான கட்சி, பன்மைத்தன்மை கொண்ட நிலப்பரப்பில் ஒற்றைத்தன்மையை நிலைநிறுத்த முயலும் ஓர் இயக்கம் எக்காரணம் கருதியும் ஏற்கப்படக்கூடாத ஒன்று. பொருளாதாரம், வளர்ச்சி, கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்பு, ஊழலின்மை போன்ற அளவுகோள்களில் அவர்கள் எப்படிச் செயலாற்றினார்கள் என்பதை அலச வேண்டிய அவசியமே இல்லை. அவ்வலகுகளில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலுமே அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். வெறும் அறிதல் ஆர்வத்துக்காக நோக்கினால், அவற்றிலும் அவர்கள் சறுக்கியே இருக்கிறார்கள் என்பது அரசின் பரப்புரைகளைத் தாண்டித் தரவுகளைப் பார்த்தாலோ அலைபேசி/கணினியைத் தாண்டி களத்தில் கால்வைத்தாலோ புரியும். அது தேர்தலுக்குத் தொடர்பற்ற ஒரு தனி அவலம்.
28-3-2024
சஞ்சீவ் பட், அரவிந்த் கேச்ரிவால் போன்றவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை அவர்கள் உண்மையிலேயே புரிந்தார்களா இல்லையா என்ற வினாவுக்கு வழக்காடுமன்றங்கள் என்றாவது ஐயமற விடைகூறலாம். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் உண்மையோ பொய்யோ, அவர்கள் மோடிக்குப் பாதிப்பு வரும்வகையில் அவரை எதிர்த்தார்கள் என்பதற்கும் அவர்களது விடாப்பிடியான சிறைவாசங்களுக்கும் உள்ள வெளிப்படையான தொடர்பைக் காணத் தேர்ந்த அரசியலறிவு தேவையில்லை. தற்செயல் என்று புறந்தள்ள முனைபவர்களின் அகங்களும் அதை அறியும்.
22-3-2024
சென்ற வாரம் தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சூடான அரசியல் நிகழ்வுகளுக்கிடையில் விறுவிறுப்பற்ற நிகழ்வுதான்.
திருவள்ளூர் என்று நினைக்கிறேன்….ஓர் அரசுக் கல்லூரியில் ‘புள்ளிங்கோ’ முறையில் முடிவெட்டி வந்த மாணவர்களை நிறுத்தி காவல்துறையினர் மாற்றி வெட்டி வருமாறு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தனர்.
பொதுவாகவே நடையுடை பாவனைகளில் சற்றே மாறுபட்டுத் தெரியும் இளைஞர்களை ஆசிரியர்களுக்கும் பிடிக்காது. காவல்துறையினருக்கும் பிடிக்காது. அவர்களது அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக அத்தகைய இளைஞர்களைக் காண்கிறார்கள்.
ஆனாலும் சிகையலங்காரத்திலெல்லாம் எதற்குக் காவல்துறை தலையிட வேண்டும்? பண்பாட்டுக் காவலர்களாக மாறும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது? நல்லதுதானே செய்கிறோம் என்று அவர்கள் நினைக்கலாம்; ஆசிரியர்களும் பெற்றோர்களும் அரசும் அவ்வாறே நினைக்கலாம். பெருந்தொற்றுக் காலத்தில் காவல்துறை அத்துமீறலைச் சுட்டிக்காட்டி எழுதியபோது பலர் அந்நேரத்தில் அது இன்றியமையாதது என்றே வாதாடினர். இப்படித்தான் நம் சுதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுத்தருவதற்குப் பழகிக்கொள்கிறோம். அதிகாரத்துக்கு அடிபணிதலைக் கற்றுத்தருவதையே நம் கல்வி நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக்க அனுமதிக்கிறோம்.
22-3-2024
திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகளைப் பற்றி அவர்களும் பிறரும் உரக்கப் பேசி எதிர்க்கக்கூடும். ஆளுங்கட்சியாக இருக்கையில் அவர்களும் பேசுவதில்லை. எதிர்க்கட்சிக்கு வந்துவிட்ட மற்றவர்களும் பெரிதாக எதிர்ப்பதில்லை. காவல்துறையிடம் வரம்பு மீறிய அதிகாரம் குவிவதும் அவர்களின் குற்றங்கள் மென்மையாகக் கையாளப்படுவதும் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
22-3-2024
நல்லது. சூரியமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளர் எப்படியோ? சமூக ஊடகத்தில் எழுந்த மெல்லிய எதிர்ப்புக்குத் திமுக செவிசாய்த்திருப்பது நன்று.
தேர்தல் அரசியல் தேவைகளுக்காக இதுபோன்ற சாதியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதும் சாதிவெறியர்களுக்குத் தம் கட்சிகளில் இடமளிப்பதும் சாதியக் கணக்குகளின்படியே வேட்பாளர்களை நிறுத்துவதும் முடிவுக்கு வரவேண்டும். இந்தியாவில் மதவெறியும் சாதியமும் ஒரே தீமையின் இருமுகங்கள்.
—
19-3-2024
திமுகவின் கூட்டணிக் கட்சியான கொமதேக, சூரியமூர்த்தி என்பவரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. முகநூலில் அவரது உரையொன்றின் பகுதியைக் கேட்க நேர்ந்தது. சகிக்கமுடியாத அப்பட்டமான சாதிவெறி, கொலைவெறிப் பேச்சு.
நாற்பதும் நமதே என்று இவரையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்களா? எவ்வகையிலும் தேர்ந்தெடுக்கப்படவே கூடாத வேட்பாளர். மதவெறிக்குச் சாதிவெறி எவ்வகையில் மாற்றாகும்? சலிப்பாக உள்ளது.
18-3-2024
நானும் என் முகநூல் ஓடையை மேலும் கீழும் உருட்டிப் பார்க்கிறேன். முன்தினம் தேர்தல் பத்திரப் பதிவுகளாய் நிறைந்து வழிந்து காட்டாறாகப் பாய்ந்தது, நேற்று முதல் சலனமற்று அமைதியாகத் தேங்கி நிற்கிறது. இப்படியொரு லாட்டரி அடித்ததை அறிந்த பிறகு, தேர்தல் பத்திரத் திட்டம் ஊழல்தானா இல்லையா, வழிப்பறிதானா இல்லையா என்று எதுவும் முடிவு சொல்வதற்கில்லாமல் திமுக சார்பாளர்கள் தவிப்பது புரிகிறது.
வேறு எந்தக் கட்சிக்கும் ஒற்றை நிறுவனத்திடமிருந்து, அதுவும் ஒரு சூதாட்ட நிறுவனத்திடமிருந்து, 500 கோடி ரூபாய் கிடைத்திருந்தால் தமிழ்ச் சமூக ஊடகங்களில் மாபெரும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும். நடக்கவேண்டும்.
தொழில் நிறுவனங்கள் கட்சிகளுக்குப் பணம் அளிப்பது புதிதன்று. உலகநடைமுறைதான். அரசியல் கட்சிகளின் ஊழலைப் பேசுமளவு தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஊழலில் இருக்கும் சம பங்கினைப் பற்றி நாம் பேசுவதில்லை. எதையும் எதிர்நோக்காமல் ஈவதற்கு அவர்கள் கொடைவள்ளல்களல்லர். இது சந்தைப் பொருளாதாரம் அனுமதிக்கும் சட்டப்பூர்வமான ஊழல்.
எனினும் இது பெருந்தொகை. பல்வேறு முறைகேடுகளுக்கான சோதனைகளுக்கு ஆளான நிறுவனத்திடமிருந்து பெற்ற தொகை. அவர்கள் எப்படி எதற்காக இத்தனை பணத்தை எந்தக் கட்சிக்கும் தரவேண்டும், இவர்கள் ஏன் அதை ஏற்கவேண்டும் என்ற வினாக்கள் எழுப்பப்படவேண்டும். தக்க விடைகள் இருந்தால் அளிக்கப்பட வேண்டும். இதனால் ஊழல் நடந்ததா இல்லையா, அவர்களுக்குகந்த தவறான கொள்கைகள் வகுக்கப்பட்டனவா இல்லையா என்பவையெல்லாம் அடுத்தக்கட்ட வினாக்கள். (அந்நிறுவனம் பாசகவுக்கும் கொடுத்திருப்பார்கள், பாசகவைப் போல் பொய் சொல்லாமல் திமுகவே நீதிமன்றத்திடம் தரவுகளை வழங்கியது என்ற வாதங்களில் உண்மையிருந்தாலும், இதை நியாயப்படுத்திவிடாது. )
ஊழலைவிட மதவாதம் ஆபத்தானதுதான். அதனை மறுப்பின்றி ஏற்பதன் பொருள் ஊழலுக்கும் சொத்துக்குவிப்புக்கும் முழு உரிமம் கொடுப்பது என்றாகிவிடாது. தமிழ்நாட்டில் ஊழலையும் சொத்துக்குவிப்பையும் கேள்விக்குட்படுத்தாத இடத்தில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பது மதவாதம் வேர்பிடிக்க நீரூற்றும் செயல். வேரூன்றிவிட்டால் மதவாதத்துக்கு ஊழல் ஊழலின்மை எதுவும் பொருட்டல்ல. மதம் ஒன்றே அதற்குத் தேவையான ஊட்டம்.
மதச்சார்பின்மையை ஏட்டளவிலேனும் ஏற்கும் கட்சிகள் ஊழலற்றைவை என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லை. எழுத்துலகம் தொடர்ந்து அமைதி காப்பது அவற்றைக் கெடுப்பாரிலானும் மேலும் கெடச்செய்யும்.
15-3-2024
தேர்தல் நிதிப் பத்திர விவரங்களை வெளியிடுவதில் பாசக அரசுக்கு இத்தனை தயக்கம் இருந்திருக்கவே தேவையில்லை. அதில் எவ்வளவு தகிடுதத்தங்கள் இருந்தாலும், அவற்றைப் பார்த்துவிட்டெல்லாம் இந்துத்துவ வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிடவா போகிறார்கள்? இல்லை, பண விவகாரங்களில் அவர்கள் தூய்மையானவர்களாக (வாய்ப்பில்லையெனினும், தப்பித்தவறி) இருந்துவிட்டால் நாம் அவர்களுக்கு வாக்களித்துவிடப் போகிறோமா? மதவெறி அரசியல்தான் இங்கு மையத்தில் இருப்பது. மற்றவையெல்லாம் சும்மா ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடும் விளையாட்டுகள்தாமே.
ஆனால் ஒன்று, உங்கள் முகமூடிகளை நீங்கள் கழற்றிக் கொள்ளலாம்.
13-3-2024
இந்தியாவில் மத்தியிலோ மாநிலத்திலோ ஆட்சியில் இருந்தபடி தேர்தலைச் சந்திப்பதில் பெரும் அனுகூலங்கள் உள்ளன. தேர்தல் நாள் அறிவிப்பு வரும்வரை ஆளுங்கட்சிகள் அரசாங்கச் செலவில் எக்கச்சக்கமான விளம்பரங்களைத் தரலாம். ஏராளமான புதுத் திட்டங்களை அறிவிக்கலாம். பிற கட்சிகள் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகுதான் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவார்கள். அதிலும், பாவம், அவர்கள் சந்திக்கும் பேரின்னல்கள் கொஞ்சநஞ்சமா? ஆனால் எக்குத்தப்பாக எகிறவிட்ட சமையல் எரிவாயு விலையை நூறு ரூபாய் குறைத்தால், எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக ஒவ்வொரு வீட்டுக்கும் நூறு ரூபாய் வழங்கிவிடலாம். எத்தனை கோடானுகோடிகள் குவிந்திருந்தாலும் இப்படியெல்லாம் பணம் மிச்சமாக்கிச் சேமித்தால்தான் பின்னர் வேட்பாளர்களையும் கட்சிகளையும் தேவைக்கேற்ப விலைக்கு வாங்கமுடியும்.
ஒன்றிய அரசுக்கு இவற்றையெல்லாம் நிறைவாகச் செய்துமுடித்துக் காலம் கனியும்வரை தேர்தல் அறிவிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் மறைமுக அதிகாரம் கூடுதல் வன்மை தரும். மாநில அரசுகளும் ஏன் இத்தனை தாமதம் என்று அறச்சீற்றம் கொள்ளாமல் காலம் தந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இவையெதுவும் புதிதில்லைதான். முன்பும் பிறர் செய்துள்ளனர் என்பதை மறந்துவிடவில்லை. செய்தும் தோற்றுள்ளனர் என்ற நினைவுதான் மங்கிவருகிறது.
10-3-2024
செய்தித்தாளை எப்போதாவதுதான் படிப்பவன் நான். தினமலர், தினத்தந்தி தவிர வேறு நாளிதழ்கள் எங்கள் கிராமத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம். கோவை வந்து, பெற்றோர் வாங்கியுள்ள இவ்வாரத் தமிழ் இந்து இதழ்களைப் புரட்டுகையில் இரு செய்திகள் கண்ணை உறுத்தின. பெண்களுக்கு விருது வழங்கும் கூட்டத்தில் மோடி பேசியது பற்றி ஒரு செய்தி. மோடி நகைச்சுவை ததும்பப் பேசினார் என்று எழுதியுள்ளனர். ஓர் இதழுக்கு அரசியற் சாய்வு இருக்கலாம். ஆனால் செய்தியில் editorialise செய்யக்கூடாது என்ற வழக்கமெல்லாம் தமிழ் இதழ்களுக்கு ஏன் வகுத்துக்கொள்வதில்லை?மோடி பேசியது என்னவென்று சொல்லலாம், அவர் பேசியதைக் கேட்டவர்கள் சிரித்தனர் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் அவர் நகைச்சுவை ததும்பப் பேசினார் என்பதொரு கருத்து; சர்ச்சைக்குரிய கருத்து; அதைச் செய்தியில் ஏற்றுவது தவறு என்றுதான் நல்லதொரு இதழாசிரியர் முடிவெடுக்கவேண்டும் அல்லவா?
அடுத்துச் சனாதனம் குறித்த தீர்ப்பு. உயர்நீதி மன்ற நீதிபதி கருத்துரிமைக்கு எல்லைகள் உள்ளது எனலாம். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தக் கூடாது என்றுகூடச் சொல்லலாம். இவற்றை நாம் ஏற்கவோ மறுக்கவோ போகிறோம். ஆனால் உதயநிதியும் ராசாவும் இந்துத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்படி அவர் சொல்லலாம்? இந்துத்துவம் ஓர் அரசியல் தரப்பு; மத நம்பிக்கையன்று. சமய நம்பிக்கையை இழிவுபடுத்தக்கூடாது என்பது உறுதியான சட்ட வரம்பாக இருக்கலாமா என்பதே விவாதத்துக்குரியது. எந்தவோர் அரசியல் தரப்பையும் சரியாகவோ தவறாகவோ புரிந்துகொள்ளும் உரிமையும் அதைப் போற்றவோ தூற்றவோ செய்யும் உரிமையும் எவருக்கும் உண்டு என்பதில் கூடவா ஊசலாட்டம்?