ஒளிர்மணம் கொண்ட மலர்கள்: காந்தியின் அரையாடை நூற்றாண்டு

செப்ரெம்பர் 22, 2021

காந்தியின் அரையாடையேற்பு நூற்றாண்டையொட்டிப் பேசுமாறு நண்பர் சரவணன் கடந்த வாரம் கேட்டார். நான் அன்றிருந்த ஏதோ மனநிலையில் தயங்கினேன். அதைப்பற்றிக் குறிப்பாக அதிகம் படித்ததில்லையே என்றேன். இப்போது எண்ணிப்பார்த்தால் அத்தயக்கம் பொருளற்றதாகத் தெரிகிறது. காந்தியின் அரையாடை என்பது வெறும் ஆடைத்துறப்பு மட்டுமன்று. அன்றுர அரையாடை மட்டுமே உடுத்த இயன்ற பிற மனிதர்மீது கொண்ட கண்ணோட்டம் மட்டுமன்று. கருமம் சிதையாமற் கண்ணோட வல்லவர் காந்தி. இது மொத்த காந்தியத்தின் குறியீடு. சொற்களால் விளக்க இயலாத கொள்கைகளை எளியோர்க்கும் விளக்கிய குறியீடு. இன்றும் காந்தியத்தின் சாரத்தை நமக்கு நினைவூட்டி நிற்கும் படிமம்.

சத்தியாகிரகத்தைவிட, நாட்டுவிடுதலையைவிட மகாத்மா காந்தியின் முதன்மையான பங்களிப்புகளாக நான் கருதுபவை அதிகாரப் பரவலாக்கம், உற்பத்திப் பரவலாக்கம், கிராம/ தற்சார்புப் பொருளாதாரம், நுகர்வு அடிமைத்தனத்துக்கு எதிரான எளிய வாழ்க்கை, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற சர்வோதயக் கொள்கை, அறிவியலின் நோக்கம் குறித்த தெளிவு, ஆதாரக் கல்வி முதலியவை. இவையே நம்மை மூழ்கடிக்கும் சூழலியல் நெருக்கடியில் மாந்த இனத்தின் எதிர்காலத்தைக் காக்கத் தேவையானவை. இவை அனைத்தையும் உள்ளடக்கி முழுமை பெறுவதே காந்தியம். இவை அனைத்தையும் அந்த அரைக்கதராடை தன்னுள் தாங்கி நிற்கிறது. இவை காந்திய அகிம்சையின் பிரிக்கவியலாக் கண்ணிகள். எதிராளியைத் தாக்காமல் அவருக்கு வலிக்காமல் திக்கற்ற அன்பு செலுத்துவது மட்டுமே அகிம்சையன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சையின் வெற்றி என்பதை முதலில் மறுத்தவர் காந்திதான். பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெறுவதை முழுமையான விடுதலை என்றே முதலில் ஏற்கமறுத்தவரும் காந்திதான். காந்தி காட்டும் மாற்றுப் பாதை கரடுமுரடானதாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் கிட்டக்கூடிய வசதிகளைத் துறந்து எல்லாருக்கும் எட்டக்கூடிய எளிமையை ஏற்பதை வலியுறுத்தினாலும், பாழ்குழியிலிருந்து வெளியேற இருக்கும் வழி அது. இல்லை, இப்பாழ்குழியே மேலென்று களிப்புடன் தீராச்சுழலில் உழன்று புதையுண்டும் போகலாம். காந்தியத்தின் தலையாய கூறுகளை மறுத்து காந்தி என்ற மாமனிதரைப் போற்றுதல் மலரைக் கட்டிய நாரை வியத்தலன்றி வேறில்லை. இம்மலர்கள் எதிர்வரும் இருளைக் கடக்கவல்ல ஒளிர்மணம் கொண்டவை.