புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் – இருவர் இருவிதமாகக் கண்ட ஒரே ஒளி

ஜனவரி 12, 2019

புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் கதை நான் மொழிபெயர்த்துவரும் காந்தி தொகுதிக்காகத்தான் படித்தேன். காந்தி வந்துசேர்வதற்கு முன்பே கதை முடிந்துவிட்டாலும், மிகச்சரியான கதையைத் தான் சுனில் கிருஷ்ணன் தேர்வு செய்திருக்கிறார்.


காந்தியும் பெரியாரும்(/அம்பேத்காரும்) எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படும் இன்றைய சூழலில், 1934ல் வந்த இக்கதை, அவர்களது அத்தனை முரண்களுடனும், அவர்கள் இணைகிற புள்ளியை மையப்படுத்துகிறது.
முதல் மேலோட்டமான வாசிப்புக்குச் சாதாரணமான தொடக்க‍ கால சீர்திருத்தக்கதையாகத்தான் தெரிந்தது.


ஆனால் மொழிபெயர்ப்பதில் இருக்க‍க்கூடிய அனுகூலம், படைப்புக்குள் நம்மை ஆழ்ந்து செல்ல வைத்துவிடுகிறது. புதிய ந‍ந்தன் கதையில் பல்வேறு அடுக்குகள் நுட்பமாகப் புனையப்பட்டிருப்பது புரிந்தது.


இப்போதுதான் ந‍ந்தனார் திரைப்படம் பார்த்திருந்த‍தால், ந‍ந்தன் கதையின் நவீன வடிவம் நன்றாக மனதில் நின்றிருந்த‍து.

‘நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக்கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்.’ போன்ற கூரிய வாசகங்களுடன் கதை தொடங்குகிறது. ஆங்கில ஆட்சி வந்த‍தே அறியாத நெடுந்தூக்க‍த்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


ஆங்கில ஆட்சி வந்த‍தன் அடையாளமாக முனிசிபல் விளக்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவும் தீண்டப்படாமல் இருக்க, மரியாதையான தூரத்திலேயே இருக்கிறது.


ந‍ந்தன் ஆண்டையிடம் அடிமைப்பட்டிருப்பதாக உணர்வதே இல்லை. அவனது அனுமதிக்காகவும் ஆணைக்காகவும் காத்திருக்கிறான். கருப்பனும் அப்படித்தான். தன்னை அக்கிரகாரக் கிணற்றில் நீரள்ளிக் குடித்த‍தற்காக அடித்துக் குருடாக்கிய ஆண்டையிடம்தான் கடைசிவரை காவலனாக வேலை செய்கிறான். அவன் கிணற்றில் நீரள்ளியது புரட்சி செய்வதற்காக அல்ல; அது அறியாமையால் நிகழ்ந்த விபத்து.


பெரிய நிலக்கிழார்களாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசாங்க வேலைகளில் சென்று சேர்கிற சித்திரமும் வருகிறது. அப்படியானவர்களின் அடுத்த தலைமுறை காந்தியின் உந்துதலால் ஏற்பட்ட லட்சிய வேகத்தில் பெரும் மன மாற்றமடையும் சித்திரமும் வருகிறது. பழைய வேதியர் வழியில் வந்த புதிய வேதியரான பெரிய பண்ணையாகவும், சப்-ரெஜிஸ்டிராராகவும் இருந்தவரின் பிள்ளையான ராமநாதன், எம்.ஏ. படித்து கலெக்டராவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தால் ஈர்க்கப்பட்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு சிறைக்குச் செல்கிறான்.


என்னதான் ஆண்டைக்கு விசுவாசமாக இருந்தாலும் கருப்பனும் பிள்ளையை ஆண்டை மாதிரி ஆக்குகிறேன் என்று மதம் மாற்ற வந்த ஜான் ‘ஐயர்’ என்கிற போதகர் ஆசை காட்டும்போது இணங்குகிறான். மகன் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்கிற ஆசையும் அவனுக்கு உள்ளது. ஆங்கிலத்துக்கு ‘இங்குருசி’ என்ற சொல்லைப் புதுமைப்பித்தன் பயன்படுத்துகிறார். இன்றும் இந்தியில் அங்கிரேசி என்றுதான் சொல்கிறார்கள்.


ஆனால் மகனை முன்னேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற கருப்பன், ஆண்டையின் மகன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது, பெரும் பாவம் என்று சொல்லி மறுக்கிறான். முன்னேற வேண்டும் என்கிற நினைப்பை, சாதியப்பழைமையில் ஊறிய உணர்வுகள் சமன்செய்துவிடுகின்றன.

கருப்பனின் மகன் பாவாடை தானியேல் ஜான் ஆகி, கிருத்துவத்திலும் சாதி மறையவில்லை என்பதை அறிந்து முதல் விலக்கம் கொள்கிறான். வேளாள ஜான் ஐயர் வேளாளராகவே இருக்கிறார் – தானே முன்னின்று மதம்மாற்றிய தானியேலை “பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுகிறார்.


பின்னர் கத்தோலிக்க மத‍த்தைத் தழுவி ‘சுவாமியார்’ ஆகப் பயிற்சிபெறுகிறான். அங்கும் ‘சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம்’ ஆகியவற்றைப் புதுமைப்பித்தன் சுட்டுகிறார்.


தானியேல் ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறான். தோழர் நரசிங்கம் ஆகிறான். ராமநாதனுக்கும் தன் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தந்தையைக் கட்டாயப்படுத்துகிறான் நரசிங்கம். ஆனால் அவனாலும் கருப்பனின் நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை.


தமிழ்நாட்டுக்கு ஹரிஜன நிதி திரட்ட வரும் காந்தியை ஆதனூருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்கிறான் ராமநாதன். அவனது சனாதனத் தந்தையும் பெரியாரிய நரசிங்கமும் காந்தியிடம் வாதம் செய்து வெல்லக் காத்திருக்கிறார்கள்.


ராமநாதனும் நரசிங்கமும் – இரண்டு பேரும் ஒரே உண்மையை இரண்டு விதமாகக் கண்டார்கள். புதிய ஒளியை இருவிதமாக‍க் காண்கின்றனர்.


ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் கருப்பனை ரயிலில் அடிபடாமல் காக்க முயன்று மூவருமாய் இரத்தக்களரியில் மடிந்து, மூவரது இரத்தமும் கலக்கும்போது, கருப்பனும் அதே ஒளியை வேறுவிதமாக‍க் கண்ட‍டைந்திருப்பான் என்பதை ஆசிரியர் நேரடியாக‍க் கூறாமல் விட்டுவிடுகிறார்.


உண்மையில், இது மூன்று பேர் மூன்று விதமாக‍க் கண்ட ஒரே ஒளிதான்.


2018ல் படித்தவை

ஜனவரி 3, 2019

கூட்டிக்கழித்துப் பார்த்தால், சென்ற ஆண்டு சிறிதும் பெரிதுமாக, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிறையப் படித்திருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனாலும் நிறைவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படித்து முடிக்க நினைத்த புத்தகங்கள் பலவும் முடிக்கப்படாமல் காத்திருக்கின்றன. பாதியில் தொக்கிக்கொண்டும், புத்தக அடுக்குகளில் புதையுண்டும் பல புத்தகங்கள் காத்துக்கிடக்கின்றன.

இந்த ஆண்டின் கணிசமான பகுதியைக் கவிதைகளோடு கழித்தேன். பட்டியலில் இடம் பெறாத புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள்-காமத்துப்பால் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி கொங்குதேர் வாழ்க்கை (தமிழினி), இசை, போகன் சங்கரின் கவிதைகள் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை நூல்கள், இணைய தளங்கள் என்று ஆண்டு முழுவதும் கவிதையின் வாசனையை முகர்ந்துகொண்டும் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டும் இருந்தேன். (கூடவே தொடரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும்.)

1984 – பல ஆண்டுகளாகப் படித்துப்படித்துக் குறிப்பான காரணம் ஏதுமின்றி பாதியில் விட்ட புத்தகம். இவ்வாண்டு முழுவதுமாய்ப் படித்துவிட்டேன். வலிமையான அரசுகள், தனிமனிதச் செயல்பாடுகளை வேவு பார்த்தல் ஆகியவை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தைக் கட்டியம் கூறும் நாவல். மேற்கோள்களுக்காக அடிக்கடி அங்கே செல்லப்போகிறேன் என்பது உறுதியாகப் புலப்படுகிறது. பாதியில் நிற்கும் மார்கரெட் ஆட்வுட்டின் Handmaid’s Tale இதே ரகம். ஜனவரியில் முடித்துவிட வேண்டும்.

ஹோமரின் இலியட், ஒடிசி ஆகிய நூல்களும் பல ஆண்டுகளாய்ப் படித்து விடுத்து எடுத்து, இவ்வாண்டு முடித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் போப் மொழிபெயர்ப்பு அபாரமானது. மூலத்துக்கு நெருக்கமாகக் கருதப்படும் வேறு சில நவீன மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கியே படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஹோமரின் உச்சங்களைப் போப் போல யாராலும் தொடமுடியவில்லை. ஒடிசியின் பல பகுதிகளை போப் எழுதவில்லை என்றும், நேர நெருக்கடியால் வேறு இருவருக்கு அயலாக்கம் (outsource) செய்துவிட்டார் என்றும் அறிந்தேன். மொழிபெயர்ப்பில் இலியடின் நேர்த்தி ஒடிசியில் நூல் முழுவதும் சீராக இல்லை என்றே சொல்லலாம்.

டால்ஸ்டாயின் Resurrection (புத்தியிர்ப்பு) என்னோடு பல காலம் தங்கியிருக்கப்போகிற இன்னொரு புத்தகம். நான் படித்துள்ள மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. நம் சமூக அமைப்பின் மீதும் சட்ட அமைப்பின் மீதும் பல நுட்பமான கேள்விகளை எழுப்புகிறது.

சி.எஸ்.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராடத்தில் எனது சாட்சியம்’ தமிழ்ச்சூழலில் இன்னும் அதிகம் பேசப்பட வேண்டிய நூல். 70களில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னணியை அறிய உதவும் நூல்.

இரா.குப்புசாமியின் அறிவு நிலைகள் பத்து தமிழினி வசந்தகுமாரின் அழுத்தமான சிபாரிசின் பேரில் படிக்கத்தொடங்கினேன். அவர் சொன்னதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது.

வினோபாவின் வாழ்க்கை வரலாறான Moved by Love முன்பொரு முறை படித்ததைக் காட்டிலும் இப்போது ஆழமாய் மனதைத் தொட்டது.

Slaughterhouse Five அவல நகைச்சுவையோடு போரின் அபத்தத்தை அழுத்தமாய்ப் பேசிய நூல்.

Whereas, Citizen: An American Lyric ஆகிய இரண்டும் அமெரிக்காவில் ஆதிகுடிகளும் கறுப்பின மக்களும் ஒழிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் வரலாற்றின்மீது கூர்மையான கவிதைகளின் மூலம் ஒளிபாய்ச்சும் நூல்கள்.

Things Fall Apart – ஐரோப்பிய மிசனரிகள் ஆப்பிரிக்கப் பழங்குடி சமூகத்தில் கிருத்துவத்தைப் பரப்பிய போது ஏற்பட்ட சிக்கல்களைப் பேசிய நூல். ஆங்கிலம் பேசாத ஒரு பகுதியின் கதையை ஆங்கிலத்தில் இவ்வளவு அழகாகச் சொன்ன நாவல்கள் வேறு உள்ளனவா என்று தெரியவில்லை. குறிப்பாக ஆப்பிரிக்கப் பழமொழிகளையும் மக்கள் வழக்குகளையும் ஆங்கிலத்தில் கொண்டுவந்திருந்த விதம் ஒரு சிறப்பான முன்மாதிரியாகத் தெரிகிறது. வேற்று மனிதர்கள் தம் பண்பாட்டினைத் திணிக்கும் முன் அச்சமூகமே மாற்றத்துக்கான ஏக்கத்துடன் சிதைவுற்றுக் கொண்டிருப்பதையும் சினுவா அசபே சித்தரித்திருப்பார்.

பசி, கில்காமெஷ் போன்ற பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் க.நா.சு. என்பதை ஒவ்வொரு முறையும் ஒரு நன்றியுணர்வுடனேயே நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

ஆஸ்கார் வைல்டின் The Picture of Dorian Gray ஆரம்பத்தில் ஆஸ்கார் வைல்டின் நகைமுரண் மேற்கோள்களைத் தொகுத்துப் போட்ட மாதிரி இருந்தாலும், பின்னர் வேறொரு தளத்துக்கு நகர்கிறது. தமிழில் வானகெட், ஆஸ்கார் வைல்ட் போன்றவர்களின் கூர்மையான அங்கதமும் நகைமுரணும் கொண்ட உரையாடல்களுக்குப் பஞ்சம்தான். இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை; மொழிபெயர்ப்பது பெரும் சவாலாகவே இருக்கும். ஆனால், தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கூட்ட இயலும்.

ஜூரெக் பெக்கரின் கட்டுரைத் தொகுப்பினை நூலகத்தில் எதேச்சையாகக் கண்டெடுத்தேன். அற்புதமான எழுத்தாளர். சிறு பிள்ளையாக இருந்தபோது யூத வதை முகாம்களில் இருந்து பின்னர் கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர். உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர் என்கிற முறையிலும், மேற்கு ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து விட்டாலும் சோசியலிசம் மீது மதிப்பு கொண்டிருந்தவர் என்கிற முறையிலும் அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘வைர ஊசி’ அஸ்வகோஷர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. பாரதி வைர ஊசி என்ற உபநிஷத்தை மொழிபெயர்த்து ‘பிராமணன் யார்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளான். இவ்விரண்டையும் தொகுத்து விரிவாக ஒரு குறிப்பு எழுதியுள்ளேன். விரைவில் பதிவிட வேண்டும்.

கஸ்தூர்பா குறித்த சுசீலா நய்யாரின் நினைவலைகளைப் படித்த உந்துதலில்தான் கஸ்தர்பா மீதான நீண்ட கட்டுரையை தமிழினி இதழில் எழுதத் தொடங்கினேன்.காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் இருந்த அற்புதமான உறவையும், கஸ்தூர்பாவின் கடைசிக் காலங்களில், சிறையில், காந்தி அவரை கனிவுடனும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்தகொண்டதையும் பேசுகிற முக்கியமான சிறிய நூல் இது.

பன்னாலால் தாஸ்குப்தாவின் Revolutionary Gandhi காந்தி பற்றி நான் படித்த நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதுவதற்காக இந்நூலை இவ்வாண்டு மறுவாசிப்பு செய்யக் கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்புதான்.

சகுந்தலை பற்றிய ரோமிலா தப்பாரின் நூல் ஒரு வித்தியாசமான முயற்சி. மகாபாரதத்தில் வரும் சகுந்தலை கதை, காளிதாசனின் நாடகம், பிற சகுந்தலை கதைகள், காலினிய காலத்தில் வந்த சகுந்தலை மொழிபெயர்ப்புகள், அவற்றின் காலம், களம், தாக்கம், மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைத்த எதிர்வினைகள் என்று அனைத்தையும் தொகுத்து விரிவாக ஆய்வு செய்யும் ஒரு நூல்.

பாவண்ணனின் நூறு சுற்றுக் கோட்டை கன்னட இலக்கியத்தின் முக்கியமான எழுத்தளர்களுக்கு அறிமுகமாக அமையும் ஒரு அருமையான தொகுப்பு.

எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி நூல் வெளியீட்டு விழாவில் என்னைப் பேச அழைத்திருந்ததை ஒட்டி அவருடைய பல படைப்புகளைப் படித்து முடித்தேன். அவரது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் மிகவும் ஈர்த்தன. சு.வேணுகோபாலின் பூமிக்குள் ஓடுகிறது நதி தொகுப்பிலும் பல சிறப்பான சிறுகதைகள் உள்ளன.

அம்புப்படுக்கை நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் பெற்றுத்தந்த நூல். அது குறித்தும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

என் மகளோடு சேர்ந்து படித்த சில புத்தகங்களும் உண்டு. நான் சிறுவயதில் முதன்முதலாகச் சுருக்கப்பட்ட வடிவில் படித்த ஆங்கில நாவல் Black Arrow. மகள் சுருங்கிய நாவலைப் படிக்க நான் முழு நாவலைப் படித்தேன். அடிக்கடி நாங்கள் ஆடும் இந்த ஆட்டம் பிடித்துள்ளது. அவள் படித்த நூல்களின் பட்டியல் ஒன்றும் உள்ளது. அவள் அனுமதி கொடுத்தால் விரைவில் வெளியிடுகிறேன் 🙂

எதிர்பாராமல் இவ்வாண்டு படித்தவை Game of Thrones வரிசை நாவல்கள். Binge reading செய்து வெகுசில நாட்களில் முடித்தேன். தொலைக்காட்சித் தொடருக்கு இணையான சுவாரசியத்தோடு இருந்தன. இப்படியான அதீத கற்பனை கொண்ட மிகு புனைவுகளையும் வணிக எழுத்துகளையும் அவ்வப்போது படிக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன்.

எழுத்தாளர்கள் எப்போதும் விருதுபெறும்போது மனைவிக்கு நன்றி சொல்வார்கள். அதுபோல, வாசகனாக, புத்தகங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, படிப்பதற்கு அனுமதி தந்து, அதற்கான நேரத்தையும் சூழலையும் ஏற்படுத்தித்தந்து, போட்டி போட்டுக்கொண்டு தானும் படித்து ஒரு நீளமான பட்டியலைக் கைவசம் வைத்துள்ள மனைவிக்கு ஒவ்வொரு ஆண்டும் நன்றி சொல்லிவிடுவதென்றும், அவரது அனுமதியோடு முடிவுசெய்துள்ளேன்.

தமிழில்: (படித்துமுடித்த வரிசையில்)

  1. என் தந்தை – சகுந்தலா பாரதி
  2. சுயசரிதை, பாரதி அறுபத்தியாறு – பாரதி
  3. ஈழப்போராடத்தில் எனது சாட்சியம் – சி.எஸ்.புஸ்பராஜா
  4. சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை
  5. இறுதி யாத்திரை – எம்,டி.வாசுதேவன் நாயர் (தமிழில் கே.வி.ஷைலஜா)
  6. யுத்தங்களுக்கிடையில் – அசோகமித்திரன்
  7. மரநிறப் பட்டாம்பூச்சிகள் – கார்த்திகைப் பாண்டியன்
  8. செம்புலம் – முருகவேள்
  9. காலவெளி – விட்டல் ராவ்
  10. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
  11. எல்லாம் கலந்த காற்று – கலாப்ரியா
  12. அறிவு நிலைகள் பத்து – இரா.குப்புசாமி
  13. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன்
  14. ஏழாம் உலகம் – ஜெயமோகன்
  15. குண்டலகேசி – இந்திரா பார்த்தசாரதி
  16. பசி – நட் ஹாம்சன் (க.நா.சு) (Hunger – Knut Hamsun)
  17. மண்ணில் தெரியுது வானம் – ந.சிதம்பர சுப்பிரமணியன்
  18. அம்புப் படுக்கை – சுனில் கிருஷ்ணன்
  19. ஜெயமோகன் குறுநாவல்கள்
  20. தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
  21. காலம் – வண்ணநிலவன்
  22. பிறிதொரு நதிக்கரை – எம்.கோபாலகிருஷ்ணன்
  23. மனைமாட்சி – எம்.கோபாலகிருஷ்ணன்
  24. முனிமேடு – எம்.கோபாலகிருஷ்ணன்
  25. அம்மன் நெசவு – எம்.கோபாலகிருஷ்ணன்
  26. புயல் – ரவீந்திரநாத் தாகூர் (த.நா.குமாரசாமி) (Noukadubi – Rabindranath Tagore)
  27. நூறு சுற்றுக் கோட்டை – பாவண்ணன்
  28. பனி மனிதன் – ஜெயமோகன்
  29. வைர ஊசி – அஸ்வகோஷர்
  30. கில்காமெஷ் – மொழிபெயர்ப்பு: க.நா.சு
  31. எரிவதும் அணைவதும் ஒன்றே – போகன் சங்கர்
  32. இத்தாலியத் திரைப்பட மேதை டி சிகா – எஸ்.ஆனந்த்

ஆங்கிலத்தில்:

  1. 1984 – George Orwell
  2. Titus Andronicus – Shakespeare (RR)
  3. Slaughterhouse Five – Kurt Vonnegut
  4. The court statement of Nathuram Vinayak Godse
  5. Moved by Love – Vinoba Bhave (Kalindi/Marjorie Sykes) (RR)
  6. J.P. A Biography – Allan Scarfe, Wendy Scarfe
  7. Sakuntala – Texts, Readings, Histories – Romila Thappar
  8. Annihilation of Caste – Ambedkar (RR)
  9. The Shattered Thigh and other plays – Bhasa (Translated by A.N.D.Haskar)
  10. Rhyming Rilke – Rainer Maria Rilke (Tr. Rolf A. Eberle)
  11. Resurrection – Leo Tolstoy
  12. The Black Arrow – R.L.Stevenson (RR)
  13. Government Brahmana – Aravind Malagatti (Tr. Dharani Devi Malagatti, Janet Vucinich, N. Subramanya)
  14. Hadji Murad – Leo Tolstoy
  15. Game of Thrones series – George R.R.Martin
  16. The Illiad – Homer (Tr.Alexander Pope)
  17. Charlie and the Chocolate Factory – Roald Dahl
  18. The Odyssey – Homer (Pope, Emily Wilson, Robert Fitzgerald, Robert Fagles)
  19. Chasing the Monsoon – Alexander Frater
  20. Whereas – Layli Long Soldier
  21. If not, Winter – Fragments of Sappho – Anne Carson
  22. Gandhi on Health – Mark Lindley
  23. Kasturba – A personal Reminiscence – Sushila Nayar
  24. Gandhiji on Religious Conversion – Sandhya Mehta
  25. Things Fall Apart – Chinua Achebe
  26. Arms and the Man – G.Bernard Shaw (RR)
  27. Waiting for Godot – Samuel Beckett
  28. Citizen: An American Lyric – Claudia Rankine
  29. Revolutionary Gandhi – Pannalal Dasgupta (RR)
  30. Rubaiyat of Omar Khayyam – Edward FitzGerald
  31. The Picture of Dorian Gray – Oscar Wilde
  32. Typhus – Jean-Paul Sartre (Tr. Chris Turner)
  33. My Father, The Germans and I : Essays, Lectures, Interviews – Jurek Becker (Edited by Christine Becker)

(RR – Books that I re-read this year – இவ்வாண்டு மீண்டும் வாசித்த புத்தகங்கள்)

2017ல் படித்தவை

2016ல் படித்தவை

2015ல் படித்தவை