இரு நாய்கள்

ஜனவரி 9, 2018
நாங்கள் குடியிருக்கும் தோட்டத்து வீட்டில், துணைக்கும் காவலுக்கும் இரண்டு நாய்களை வளர்க்கிறார்கள்.
 
முதல் நாய் உயர்சாதி. ஜெர்மன் ஷெப்பர்ட. நல்ல விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். பெயர் டஃபி (Duffy). அர்த்தம் அவர்களுக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது.
 
இன்னொன்று நாட்டு நாய். எங்கோ சென்றவிடத்தில் கண்டெடுத்து வந்திருந்தார்கள். பெயர் காரி. முழுப்பெயர் காரொளி. என் மகள் வைத்தது. ‘காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்’ என்று அவள் உருகிப் பாடக்கூடிய ஆழ்வார் பாசுரத்தில் இருந்து எடுத்தது. காரியையும் காரிம்மாஆ என்று உருகி உருகித்தான் அழைக்கிறாள்.
 
நாங்கள் மூவருமே நாய்களோடு அவ்வளவு நெருக்கமாய் இருந்ததில்லை. இப்போது இரண்டு நாய்களோடும் விளையாடுவதும் உணவிடுவதும் எங்களுக்கும் மகளுக்கும் பிடித்தமான ஒரு செயலாகிவிட்டது. இரண்டு நாய்களும் வெவ்வேறு வகைகளில் நேசிக்கத்தக்கவை. Lovable. காரி செருப்புகளை (குறிப்பாக என் மனைவியின் செருப்புகளை) எடுத்துச் சென்று ஒளித்துவைத்து விளையாடும். கொஞ்சம் மிரட்டுகிற என்னைக் கண்டால் பம்பும். மனைவியையும் மகளையும் பிராண்டும்; நக்கும்; கொஞ்சும். டஃபி ஆள் மீது தோள்வரை தாவும்; கைவைத்து நீவியவுடன், செவி மடல்களை மடித்துக்கொண்டு சொகுசாகப் படுத்துக்கொள்ளும்.
 
நாய்களுக்குத் தேவையான உணவை வீட்டு உரிமையாளர்களே சமைத்து விடுவார்கள். உணவெடுக்க, மகிழ் செல்லும்போது கேட்கக்கூடிய வாசகம்:
‘டஃபிக்கு நிறைய வை. காரிக்கு மிச்சத்தை வை.’
 
டஃபிக்குப் பூச்சிமருந்துகள், டானிக், பெடிக்ரீ என்று அனேக கவனிப்பு நிகழும்.
 
காரி, தோட்டத்தில் வேலை செய்யும் நாராயணனை அதிகாலையிலேயே ஓடிச்சென்று வரவேற்று நக்கித் தாவி, அவர் கரக்கும் புத்தம்புதுப் பசும்பாலில் ஒரு பங்கினை வாங்கிவிடும். எங்கள் வீட்டில் மீதமாகும் உணவும் காரிக்கே.
 
நாங்கள் பொறிவைத்துப் பிடித்த எலிகளை வெளியில் விடும்போது, காரி பாய்ந்து விரட்டிப் பிடித்து உண்டும் பழகிவிட்டது. தானே பிடிக்கவும் தொடங்கிவிட்டது.
 
டஃபிக்கு எப்போதாவது சில எலும்புத்துண்டுகள் கிடைக்கும்.
 
இளநீர் குடித்துவிட்டு தேங்காயை வைத்தால், காரி தன் கூரிய சிறு பற்களால் கரண்டி எடுத்து உண்டுவிடும். டஃபிக்கு அது கைவருவதில்லை. தனது கோட்டாவை முடித்துவிட்டு ஓடிவரும் காரி, டஃபிக்கு வைத்த தேங்காய் மூடிகளையும் பிடுங்கி உண்டுவிடுகிறது. சில சமயம் தேங்காயைக் கீறி டஃபிக்கு வைப்போம்.
 
காரி எங்கு புரண்டு வந்தாலும் பெரிதாக அழுக்காவதில்லை. டஃபிக்கு நிறைய முடியிருப்பதால், நிறைய முட்கள் குத்திப் படிந்துவிடுகின்றன. காரி வந்த இரண்டாம் நாள் முதலே வாசலை விட்டு நகர்ந்து சென்று மலஜலம் கழிக்கக்கற்றுக்கொண்டுவிட்டது. டஃபி இன்னுமே நினைத்த இடத்தில் அசுத்தம் செய்துவிடுகிறது. வேலைக்கு வரும் மாராத்தாவிடம் தினமும் வசை வாங்கும். காரி மாராத்தாவின் செருப்பையும் தூக்கிச் சென்று எங்கோ போட்டுவிட்டது.
 
காரி யார்வந்தாலும் குரைக்கும். துரத்தும். ஒரு பெரிய வண்டைப் பார்த்து ஒரு மாலை முழுதும் குரைத்துக்கொண்டிருந்தது. டஃபி சாது. சத்தமே இருக்காது. பசி வேளையில் உணவைக் கண்டால் மட்டும் வெறி கிளம்பும்.
 
காரியை முதல் ஒன்றிரண்டு நாட்கள் இரவில் ஒரு கூடை கொண்டு மூடியிருந்தார்கள். அதற்குப் பிறகு அதற்கு முழு சுதந்திரம் தான். வேண்டிய இடத்தில் குளிருக்கு இதமாய்க் கிடைத்ததை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும்.
 
டஃபி தோட்டத்துக்குள் சென்று கண்டதையும் உண்டால் வாந்தி எடுத்துவிடுகிறது. வெளியில் சென்று மற்ற தெரு நாய்களோடு பழகிவிடும் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு. அதனால் அதற்கு ஆரம்பம் முதலே பெரும்பாலும் சங்கிலி வாழ்க்கைதான். சில நாட்களில் அது சங்கிலியைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துக்கடித்து உடைத்துவிட்டது. அதற்குள் ஒரு பெரிய கூண்டு தயாராகிவிட்டது.
Dog's

மருத்துவமனையில்

ஜனவரி 6, 2018

சென்ற மாதம் எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் ஏதோ பிரச்சனை, கோவை அரசு மருத்துவமனையில் ‘ஆப்பரேசன்’ ஒன்று நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். அவர் பண்ணையம் செய்யும் தோட்டம் எங்கள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில்தான் உள்ளது. அவர்களுக்கு ஒரே மகள் – கணவனையிழந்தவர். 10,11,12வது படிக்கும் மூன்று பேத்திகள்.

அறுவைசிகிச்சைக்கு முந்தைய நாள் மாலை அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

அவர்களது தோட்டத்து உரிமையாளரின் தந்தை வந்திருந்ததாகவும், அவர்களிடம் பணம் தந்துசென்றதாகவும் சொன்னார்கள்.

‘பத்தாயிரம் செலவாயிருக்குங்க’

‘இங்க என்ன செலவு?’

‘காசு கொடுத்தாத்தான் நமக்கு ஓரளவுக்கு நல்ல பெட் கெடைக்கும். இல்லைனா, அப்படியே ஒரு ஓரத்துல தூக்கிப் போட்டுருவாங்க.’

‘…’

‘தனியார் ஆஸ்பித்திரில பண்ணியிருந்தா, ஒன்றரை லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஒன்றரை லட்சத்துக்குப் பத்தாயிரம் பரவாயில்லைதானுங்க? அதெல்லாம் கணக்குப் பார்க்காம காசு கொடுத்துத்தான் ஆகணும்ங்க’

நர்ஸிடம் கேட்டு கேஸ் ஷீட் பார்த்த்தில், அவருக்கு இன்று cystoscopy செய்ய இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி நான் புரிந்துகொண்டவரை, இது மேலும் என்ன பிரச்சனை என்று ஆய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; சில கருவிகளைக்கொண்டு சிறய கட்டிகளை நீக்கவும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு என்ன நோக்கத்தில் செய்கிறார்கள் என்பது அப்போது தெளிவாகத்தெரியவில்லை.

அடுத்த நாள் அந்தப் பெரியவரின் மனைவி அழைத்திருந்தார். பெரியவரோடு அவர் மட்டுமே தனியாக இருந்தார். ஒரு வாரமாக, குளிர்ந்த தரையில் துணிவிரித்துப் படுத்திருந்ததில் அவருக்கும் சளி. பொதுவாகவே அவரது குரலில் ஒரு நடுக்கம் இருக்கும். அப்போது தொலைபேசியில் அவரது குரல் நடுக்கம் அதிகமாகத் தெரிந்தது.

‘ஐயாவுக்கு இன்னிக்கு ஆப்பரேசன் செஞ்சாச்சுங்க.’

‘வார்டுக்கு வந்துட்டாருங்களா? எப்படி இருக்காரு?’

‘நல்லா இருக்காருங்க. ட்ரிப்ஸ் எறக்கிட்டிருக்காங்க.’

‘டாக்டர் என்ன சென்னாருங்க?’

‘டாக்டர் கிட்ட நாமெல்லாம் கேக்க முடியாதுங்க.’

‘இல்ல, ஐயாவுக்கு இன்னிக்கு செஞ்ச சிகிச்சை, இன்னியும் ஏதாவது பிரச்சனையிருக்கான்னு தெரிஞ்சக்கிறதுக்காவுந்தான். அதான் ஏதாவது சொன்னாங்களான்னு கேட்டேன்.’

‘டாக்டரெல்லாம் நம்ம கிட்ட பேச மாட்டாருங்க. நர்ஸ்கிட்ட எழுதிக்கொடுத்துட்டுப் போயிருவாங்க.’

‘நர்ஸ்கிட்ட கேட்டீங்களா?’

‘நர்ஸ் எல்லாம் நம்ம கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க.’

‘சரிங்க. நான் அங்க வர்றப்பப் பார்த்துக் கேட்கிறேங்க. உங்களுக்கு ஏதாவது தேவைப்படுதுங்களா?’

‘இல்ல, ஒண்ணும் வேண்டாம் தம்பி.’

பிறகு நானும், நித்யாவும் அடுத்த நாளும் மருத்துவமனை சென்று அவர்களைப் பார்த்தோம்.
‘எப்படியிருக்கு, என்ன பிரச்சனைன்னு டாக்டரைக் கேட்கலாமில்லைங்க? கேட்டா, அவங்க கண்டிப்பா சொல்லுவாங்க.’
‘இல்லீங்க. அப்படியெல்லாம் கேட்க முடியாதுங்க. நம்மள வெளிய அனுப்பிச்சுருவாங்க.’

நாங்கள் மருத்துவரைக் காணச் சென்ற போது, ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நித்யா தானும் மருத்துவர் என்றதும் உடனே உள்ளே அனுப்பினார்கள். மருத்துவரும் அவளை அமர வைத்துப் பேசினார். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்துவிளக்கினார். சிறுநீர்ப்பைக் கட்டியின் தன்மை பற்றித் தெரிந்துகொள்வதற்காக cystoscopyயும், TURBTம் செய்திருப்பதாகவும், புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் வரப் பத்து நாட்கள் ஆகுமென்றும் சொன்னார். நான்கு நாட்களில் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஒரு வாரம் கழித்து வரலாம் என்றார்.

திரும்பும் போது, ஒரு வார்ட்டில் மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வந்திருந்தார்கள். துணைக்கு இருப்பவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
’28 நாளா ஆஸ்பித்திரில இருந்தோம்க. ஆப்பிரேசனெல்லாம் பண்ணினாங்க. ஆனா என்ன பிரச்சனைனு யாரும் இதுவரைக்கும் சொல்லல,’ என்றார் எங்களுக்கு வழிசொல்லி அனுப்பியவர்.

பெரியவரிடம் நாங்கள் புற்றுநோய் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆய்வு முடிவுகள் வரட்டும் என்றிருந்தோம். அப்போது செய்யப்பட்டது சிகிச்சை அல்ல என்பதை மட்டும் விளக்கினோம். ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு எங்கள் பணிகளுக்குத் திரும்பினோம்.

அதன்பிறகு அவ்வார இறுதியில் அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். இரண்டு வாரங்கள் கழித்து மறுபடி வரச்சொல்லியிருப்பதாகத் தெரிவித்தனர். அவர்கள் மீண்டும் சென்றபோது ஆய்வு முடிவுகள் வரவில்லை என்று கூறிவிட்டார்கள். பாரசெட்டமால் மாத்திரைகளும் விட்டமின் மாத்திரைகளும் தந்திருந்தார்கள். பெரியவர் வலி தாங்க முடியவில்லை என்று அழுதார். அதற்குள்ளாகப் பாதியாக இளைத்திருந்தார்.

மறுவாரம் சென்றபோதும், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது விளக்கப்படவே இல்லை. ஆனால், வேறு மருத்துவப் பிரிவுக்கு அவரை மாற்றியிருந்தார்கள். அவர்கள் வேறு சில ஆய்வுகள் எழுதிக்கொடுத்திருந்தார்கள். ஆனால், எடுத்து முடிக்கும் முன்னர் அந்த லேப்கள் மூடப்பட்டுவிட்டன. மீண்டும் அதற்காகக் கோவைக்குப் பயணம் செய்யவேண்டியிருந்தது. புதிதாக மாற்றப்பட்ட துறையில், அவர்கள் ஆய்வுக்காகக் கொடுத்த தாளினைப் பார்த்தோம். அது புற்றுநோய்த் துறை என்பது புரிந்தது. அந்தப் பெரியவரின் பேத்தி அரசுப் பள்ளியில் 12வது படிக்கிறாள் – அவளும் அந்தத் தாளைப் பார்த்துவிட்டு, ‘கான்சர் வார்டுனு போட்டிருக்கு. தாத்தாவுக்கு கான்சரா பாட்டி’ என்று கேட்டிருக்கிறாள்.

இப்படியாக இவர்கள் மேலும் மூன்று முறை கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்தது. 45 கிலோமீட்டர். பேருந்தில் சென்றால் 3 மணிநேரத்திற்கு மேல் ஆகும். 3 பேருந்துகள் மாறவேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும், பக்கத்துத் தோட்டத்திலிருந்த காரை இரவல் வாங்கி, ஒரு ஓட்டுனர் வைத்து, பெட்ரோல் போட்டுக்கொண்டு சென்றார்கள். ஒருநாளைக்கு 3000 ரூபாய்க்கு மேல் செலவு. கடைசி முறை ஆட்டோவில் சென்றிருக்கிறார்கள். ஆட்டோவின் குலுங்கலில், பெரியவருக்குத் தாங்கவொண்ணாப் பெருவலி ஏற்பட்டதாகக் கூறினார்கள்.

தெரிந்த ஒருவர் மருத்துவமனையில் அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நபரை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர்தான் இவர்களைப் போகவேண்டிய இடங்களுக்கு அழைத்துச்செல்வார். அரசுமருத்துவமனையில் வேலைபார்த்து, ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது இடைத்தரகராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவருக்கு 500-1000 கொடுக்கவேண்டியிருந்ததாம். அவரில்லாமல், இவர்களுக்கு எங்கு செல்வது, யாரைப் பார்ப்பது என்பதிலெல்லாம் பெரும் தயக்கம். மலைப்பு.

நாங்கள் கோவை செல்லும் போதெல்லாம், எங்களோடு வருமாறு அழைத்தோம். ஆனால், அதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நாங்கள் அவர்களை விட்டுவிட்டு கோவையில் எங்கள் வேலைகளுக்குச் சென்றுவிடுவோம், உடனிருந்து அவர்களுக்கு உதவ இயலாது, அன்றே திரும்பவேண்டியிருந்தால் எங்களால் திரும்ப வரமுடியாது என்று அவர்களுக்கு அச்சம். அதில் உண்மையும் இருந்தது. அந்த ஓட்டுனர், அவர்களோடே இருந்து முழுமையாக உதவக்கூடியவர். வேறொருவரைச் சார்ந்திருக்கக்கூடாது என்ற உணர்வும் அவர்களுக்கு இருந்தது. பிற பணிகளை விட்டுவிட்டு, அவர்களோடு முழுமையாக இருந்து உதவும் அர்ப்பணிப்பு எங்களிடமும் இல்லை.

எப்படியோ, அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு அவர்களுக்குப் பல்லாயிரம் செலவாகியிருக்கிறது. பல நாட்கள் அலைந்தும் நோய் பற்றிய முழுமையான தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தேவையான ஆய்வுகளுக்கு எழுதித்தரப்பட்டதே தவிர, சிகச்சை பற்றி எதுவும் அவர்கள் புரிந்துகொள்ளும்படி யாரும் அவர்களிடம் பேசவே இல்லை.

இறுதியில் அவர்களிடம் ஓர் ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது. அதை நாங்கள் பார்த்தோம். புற்றுநோய் தீவரமடைந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
மேலும் சில ரத்தப் பரிசோதனைகளுக்காக ரத்தம் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

‘நாங்க மறுபடி போகப்போறதில்லை. இப்படியே இருந்திடலாம்னு இருக்கோம்,’ பாட்டி தனது நடுங்கும் குரலில் மிகவும் உறுதியாகக் கூறினார். தாத்தாவும் ஆமோதித்தார்.

ஜாதகம் பார்த்த சோதிடரும், பக்கத்து கிராமத்தில் ஒரு மருத்துவரும் அதையே சொன்னார்களாம்.

பணம் கூடப் பெரிய பொருட்டல்ல. அவர்களைப் பணியிலமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், அந்த அலைச்சலும், பிறரைச் சார்ந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தமும், மருத்துவமனைகளில் அவர்கள் சந்திக்கின்ற உதாசீனமும் அவர்களை நிராதரவாக உணரச்செய்துவிட்டது. நடைமுறையில் நல்ல முடிவாகவும் எனக்குத் தோன்றியது.

ஆங்கில மருத்துவத்தில் உள்ள பிற சாத்தியங்கள், மாற்று சிகிச்சை முறைகள் என்று நிறையப் பேசினோம். இனிமேல் ஓட்டுனர் அமர்த்தி வாகனத்தில் தனியாக வேறு ஊர்களுக்குச் செல்வதோ, நீண்ட நாட்கள் தங்கியிருப்பதோ சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டிருந்தனர். அந்த மூத்த தம்பதியினர், எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தயாராகிவிட்டனர்.

எனக்கு சுஜாதாவின் நகரம் சிறுகதை நினைவுக்கு வந்தது. நாற்பது வருடங்களில் சாலைகளும் மருத்துவ வசதிகளும் எத்தனையோ மாறிவிட்டன. ஆனால், எதுவும் மாறவில்லை.

———————————

(Update: இவ்வாரம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோய் மருத்துவத்துக்கான வசதிகள் அங்கு இல்லாத போதும், ‘ஒவ்வொரு முறையும் கோவைக்குப் போகமுடியாது. என்னுடைய வலியையேனும் நிறுத்துங்கள்’ என்று பிடிவாதமாகக்கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக அவரது மகள் சொன்னார்.)


2017ல் படித்தவை

ஜனவரி 5, 2018

சென்ற வாரம் இரண்டு புத்தகங்கள் பாதி படித்த நிலையில் இருந்தன. எனவே புத்தாண்டை ஒரு வாரம் தள்ளிப்போட்டுவிட்டேன். இன்றுதான் புத்தாண்டு தொடங்கியது. 2017ல் நான் படித்த புத்தகங்களின் பட்டியல் இதோ. ஆண்டு முழுவதுமே காலத்தோடு விளையாடிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஆங்கிலத்திலும் தமிழிலும், சிறியதும் பெரியதுமாக, முக்கியமானவையும் முக்கியமற்றவையுமாகப் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். தரம்பால் நூலைத் தவிர வேறு எதற்கும் விரிவான குறிப்புகள் எழுதவில்லை என்பதுதான் பெரிய குறை. சில புத்தகங்களுக்குக் கட்டாயம் எழுதவேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.

புத்தகங்களைக் கோவையிலும், கிராமத்தில் தோட்டத்திலும், மருத்துவமனைகளிலும், திருமண மண்டபங்களிலும், பயணங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் என்று வெவ்வேறு சூழல்களில் படித்தேன். அச்சு வடிவத்திலும், மடிகணினியிலும், கின்டிலிலும், ஐபேடிலும், கைபேசியிலும் என்று பல்வேறு கருவிகளில் படித்தேன் – ஒரே புத்தகத்தை வெவ்வேறு ஊடகங்களில் படித்ததும் நிகழ்ந்தது . ஹர்ஷாவின் ‘நாகநந்தா’ நாடகத்தை பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, அதே பேருந்துநிறுத்தத்தில் மீண்டும் அமர்ந்து படித்து முடித்துவிட்டுத்தான் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்றேன். ஒரு புத்தகம் பேருந்தில் திருட்டுப் போய்விட்டதாக நினைத்து, போலீசுக்குக் கொடுத்தப் புகார் கடிதத்தில் கூட குறிப்பிட்டுவிட்டேன். ஆனால், அது களவு போகவில்லை. இன்னொரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது, இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால், அவசரமாக, கவனமின்றி இறங்கியதில் இன்னொரு பர்சைப் பறிகொடுத்தேன்.

மனைவியோடும், மகளோடும் சேர்ந்து பல புத்தகங்களும் கதைகளும் படித்தேன். மகள் Gulliver’s Travelsன் சுருங்கிய வடிவம் படிக்கும்போது, கூடவே நான் மூல நூலைப் படித்தது ஒரு புதிய அனுபவம்; சிறு வயதில் படித்த சுருக்கப்பட்ட க்ளாசிக்களையெல்லாம் மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

 

  1. இன்று – அசோகமித்திரன்
  2. சீர்மை – அரவிந்த் க
  3. சின்னு முதல் சின்னு வரை – வண்ணதாசன்
  4. முத்துக்கள் பத்து (சிறுகதைகள்) – சா.கந்தசாமி
  5. 1945ல் இப்படியெல்லாம் இருந்தது – அசோகமித்திரன்
  6. குழந்தைப் பருவத்துக் கதைகள் – கி.ராஜநாராயணன்
  7. கடல்புரத்தில் – வண்ணநிலவன் (மறுவாசிப்பு)
  8. ஒரு நாள் – க.நா.சு.
  9. பறவை வேட்டை – அசோகமித்திரன்
  10. கண்டி வீரன் – ஷோபா சக்தி
  11. அன்புள்ள ஸ்நேகிதிக்கு – லா.ச.ராமாமிருதம்
  12. கொற்றவை – ஜெயமோகன்
  13. எழுதழல் – ஜெயமோகன்
  14. காடு- ஜெயமோகன்
  15. சிலப்பதிகாரம் – உ.வே.சா பதிப்பு, புலியூர் கேசிகன் உரை (மறுவாசிப்பு)
  16. தொல்காப்பியம்: பொருளதிகாரம்
  17. அம்பேத்கரின் கல்விக்கொள்கைகள் – ரவிகுமார்
  18. காந்தியக் கல்வியும் பிற கல்விமுறைகளும் – பங்கஜம்
  19. புகழ் பெற்றி நாவல்கள் – க.நா.சு.
  20. புதுமைப்பித்தன் வரலாறு – தெ.மொ.சி.ரகுநாதன்
  21. இலக்கியத்தின் ரஹசியம் (கட்டுரைகள்) – புதுமைப்பித்தன்
  22. தேவார இசையமைப்பாய்வு – இ.அங்கயற்கண்ணி
  23. சிலப்பதிகார இசைத்தமிழ் – S.ராமநாதன்
  24. நண்பர்கள் நினைவில் பாரதியார் – இலசை மணியன்
  25. உறவினர் நினைவில் பாரதி – இலசை மணியன்
  26. The Bellarosa Connection – Saul Bellow
  27. Happy Days – Samuel Beckett
  28. Henry IV Part 1 – William Shakespeare (மறுவாசிப்பு)
  29. Doctor Zhivago – Boris Pasternak
  30. The Last Temptation – Nikos Kazantzakis
  31. The Blue Umbrella – Ruskin Bond
  32. Death in Venice and other stories – Thomas Mann
  33. The Forged Coupon and other Stories – Leo Tolstoy
  34. What Men Live by and other Stories – Leo Tolstoy
  35. Crime and Punishment – Dostoevsky
  36. Hocus Pocus – Kurt Vonnegut
  37. Across the Black Waters – Mulk Raj Anand
  38. Nagananda – Harsha
  39. Gulliver’s Travels – Jonathan Swift
  40. Poems of Love and War – A.K.Ramanujan
  41. Taking Issue and Allah’s Answer – Iqbal
  42. Four Centuries of American Poetry – Mohan Ramanan
  43. The Waste Land – T.S.Eliot (With great annotations from Norton’s Anthology of English Literature)
  44. The Ruined Cottage – William Wordsworth (From Norton’s)
  45. Don Juan (Canto 1) – Lord Byron (From Norton’s)
  46. C.N.Annadurai – P.C.Ganesan
  47. The Dragons of Eden – Carl Sagan
  48. Essential Writings of Dharampal – Gita Dharampal
  49. Zinky Boys – Svetlana Alexievich
  50. Deschooling Society – Ivan Illich
  51. Gandhi Patel: Letters and Speeches – Differences within Consensus – Neerja Patel
  52. The Charkha and the Rose – Publications Division
  53. My Life is my Message – Sadhana (Part 1) – Narayan Desai
  54. Ram Manohar Lohia – Indumati Kelkar (Translated by Desh Raj Goyal)
  55. Jeevani: Ayurveda for Women – Dr.P.L.T.Girija

 

இவ்வாண்டில் கணிசமான பகுதி படிக்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாத புத்தகங்கள்:

  1. Capital: Volume 1 – Karl Marx
  2. Capital in 21st Century – Thomas Piketty
  3. Sakuntala: Texts, Readings, Histories – Romila Thappar
  4. Collected Stories of Isaac Bashevis Singer
  5. Open Letter on Famine to Lord Curzon – RC Dutt
  6. White Mughuls – William Dalrymple
  7. Iliad – Homer (Translated by Alexander Pope)
  8. Norton’s Anthology of English Literature, The Major Authors
  9. புறநானூறு
  10. ஊரும் பேரும் – ரா.பி.சேதுப்பிள்ளை
  11. இசைத்தமிழ் வரலாறு இரண்டாம் பகுதி — து.ஆ.தனபாண்டியன்
  12. அ.முத்துலிங்கம் கதைகள்
  13. டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி – டெட்ககோ குரோயாநாகி

 

தொடர்புடைய பதிவுகள் :

2016ல் படித்தவை

2015ல் படித்தவை

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை