சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது – மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில். ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும் அருகிலிருந்த குற்றாலக்குறவஞ்சியையும் (அதிலும் மருத்துவர் ராமதாசுவின் படம்) வாங்கிவந்தேன். இரண்டும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் வெளியீடுகள்.
என் வெறுப்பை ஒதுக்கிவிட்டு நடுநிலையில் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. இரண்டுமே தரமான படைப்புகள். தமிழில் இத்தகைய முயற்சிகள் வெகு சில. இளையராஜாவின் திருவாசகத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த வகை முயற்சி இது. தமிழ் இலக்கியங்களை நவீன ஒலிகளில் நேர்த்தியாய் வெளிக்கொணர முடியும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.
இசையமைப்பாளர் ந.கோபிநாத் ஓர் அரிய கண்டுபிடிப்பு. பழந்தமிழ்ப் பாடல்களை அழகாய் இக்கால இசைக்குள் கட்டுப்படுத்துவது கடினம். பாரதியின் பாடல்களையே இளையராஜா, விசுவநாதன் தவிர பலரும் சிதைத்திருக்கிறார்கள். நவீன இசை என்பது கீபோர்ட், தபலா, சலிப்பூட்டும் பழைய தூர்தர்ஷன் இசையைத் தாண்டியதில்லை. கர்நாடக இசையில், திருப்புகழ் தவிர வேறு பாடல்கள் இடம்பெறுவது அரிது. தமிழ்ப் பாடல்கள் இசைக்குப் பொருந்தாது என்று அவர்களாய் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.
இத்தகு சூழலில், இதுவரை கேட்டறியாத ஓர் இசையமைப்பாளர் இனிய பாடல்கள் மூலம் ஒரு புதிய பாதையில் பயனிக்கறார். தமிழ்ச் சொற்கள் இதமாய் செவிகளுக்கு விருந்தாயின. மிகக்குறைந்த நேரமே நீடித்ததுதான் பெரும் குறை. மற்றபடி இப்படியோர் முயற்சியில் சிறுபிழைகள் மனதில் நிற்பதில்லை.
இக்கட்டுரை எழுதும் போதே எஸ்.ராமகிருஷ்ணின் இதே ஏக்கம் குறித்துப் படிக்க நேர்ந்தது. இளையராஜா இன்னமும் இந்தப் பக்கம் முழுக்கவனத்தை திருப்ப மறுத்தாலும், ந.கோபிநாத் அந்தக் குறையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார். இருந்தாலும் இளையராஜாவின் கைவண்ணம் பட்டால் இன்னும் எத்தனை திருவாசகங்கள் உருவாகக்கூடும்! ஹீம்…
இம்முயற்சிக்காக ந.கோபிநாத்தைப் போற்றுதும். பொங்கு தமிழ் அறக்கட்டளையைப் போற்றுதும். இத்தோடு நின்று விடாதீர்கள். உங்கள் இலக்கிய-இசைப் பயணம் இன்னமும் நீளட்டும்.