சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் – ஓர் இனிய இசைவிருந்து

ஜூலை 31, 2008

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது – மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும் அருகிலிருந்த குற்றாலக்குறவஞ்சியையும் (அதிலும் மருத்துவர் ராமதாசுவின் படம்)  வாங்கிவந்தேன். இரண்டும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் வெளியீடுகள்.

என் வெறுப்பை ஒதுக்கிவிட்டு நடுநிலையில் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. இரண்டுமே தரமான படைப்புகள். தமிழில் இத்தகைய முயற்சிகள் வெகு சில. இளையராஜாவின் திருவாசகத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த வகை முயற்சி இது. தமிழ் இலக்கியங்களை நவீன ஒலிகளில் நேர்த்தியாய் வெளிக்கொணர முடியும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

இசையமைப்பாளர் ந.கோபிநாத் ஓர் அரிய கண்டுபிடிப்பு. பழந்தமிழ்ப் பாடல்களை அழகாய் இக்கால இசைக்குள் கட்டுப்படுத்துவது கடினம். பாரதியின் பாடல்களையே இளையராஜா, விசுவநாதன் தவிர பலரும் சிதைத்திருக்கிறார்கள். நவீன இசை என்பது கீபோர்ட், தபலா, சலிப்பூட்டும் பழைய தூர்தர்ஷன் இசையைத் தாண்டியதில்லை. கர்நாடக இசையில், திருப்புகழ் தவிர வேறு பாடல்கள் இடம்பெறுவது அரிது. தமிழ்ப் பாடல்கள் இசைக்குப் பொருந்தாது என்று அவர்களாய் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இத்தகு சூழலில், இதுவரை கேட்டறியாத ஓர் இசையமைப்பாளர் இனிய பாடல்கள் மூலம் ஒரு புதிய பாதையில் பயனிக்கறார். தமிழ்ச் சொற்கள் இதமாய் செவிகளுக்கு விருந்தாயின. மிகக்குறைந்த நேரமே நீடித்ததுதான் பெரும் குறை. மற்றபடி இப்படியோர் முயற்சியில் சிறுபிழைகள் மனதில் நிற்பதில்லை.

இக்கட்டுரை எழுதும் போதே எஸ்.ராமகிருஷ்ணின் இதே ஏக்கம் குறித்துப் படிக்க நேர்ந்தது. இளையராஜா இன்னமும் இந்தப் பக்கம் முழுக்கவனத்தை திருப்ப மறுத்தாலும், ந.கோபிநாத் அந்தக் குறையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார். இருந்தாலும் இளையராஜாவின் கைவண்ணம் பட்டால் இன்னும் எத்தனை திருவாசகங்கள் உருவாகக்கூடும்! ஹீம்…

இம்முயற்சிக்காக ந.கோபிநாத்தைப் போற்றுதும். பொங்கு தமிழ் அறக்கட்டளையைப் போற்றுதும். இத்தோடு நின்று விடாதீர்கள். உங்கள் இலக்கிய-இசைப் பயணம் இன்னமும் நீளட்டும்.


காலச் சுழலில் சிக்கிய கர்நாடகஇசை

ஜூலை 17, 2008

ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.

சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.

ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?

முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.

அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.

ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.


அகிரா குரோசவாவின் The high and the Low திரைப்படம்

ஜூலை 4, 2008

குரோசவாவின் இந்த ஜப்பானியப் படத்தை, அரை உறக்கத்தில், ஓர் ஞாயிறு பிற்பகலில் zee studioவில் பார்க்கத் துவங்கினேன். தன்னுடைய நிறுவனத்தில் தொடர்ந்து நீடிக்க முயற்சி செய்கிற ஒரு தொழிலதிபரைச் சுற்றி படம் சற்று நேரம் சுழன்றது; என் கண்களும் தான். அவருக்கு ஏதோ நெருக்கடி. நிறைய பங்குகளை, இருக்கிற பணத்தையெல்லாம் திரட்டி உடனே வாங்கியாக வேண்டும், இல்லையேல் நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலை என்பது மட்டும் புரிந்தது.

ஒரு காட்சி என்னை அரைஉறக்குத்திலிருந்து, உலுக்கி எழுப்பியது. அவருடைய மகன் கடத்தப்பட்டு விட்டதாய் செய்தி வருகிறது. கடத்தியவன் 30 லட்சம் யென் கேட்கிறான். இவரும் பங்குகள் வாங்கப் புரட்டிய அத்தனை பணத்தையும் தன் குழந்தையை மீட்பதற்காகத் தர ஒப்புக் கொள்கிறார். பின்தான் இவருக்கும் கடத்தியவனுக்கும் தெரிகிறது கடத்தப்பட்டது இவரது குழந்தையல்ல, இவரது ஓட்டுனரின் குழந்தை என்று.

பணமும், குழந்தையும், வாழ்க்கையும் பிழைத்தது என்று இவரும், உடன் இருந்த காவல் அதிகாரியும் பெருமூச்சு விட்டுமுடிக்கும்முன், கடத்தியவனிடமிருந்து மறுபடி தொலைபேசி. ‘நான் கடத்தியது யாருடைய குழந்தை என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நீ தான் அதே அளவு மீட்புத் தொகை தர வேண்டும். இன்றேல் குழந்தையைக் கொன்று விடுவேன்’ என்று உறுதியுடன் மிரட்டுகிறான்.

அப்பா, என்ன சிக்கலான, இக்கட்டான சூழ்நிலை; திருப்பம். திரைக்கதை என்பது இதுதானோ? பார்க்கிற எனக்கே உள்ளுக்குள் என்னவோ பிசைந்தது.

பணத்தைக் கொடுத்துக் குழந்தையை மீட்பதா? இல்லை, தன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு வராமல் காப்பதா? இந்த moral dilemma தான் இன்னும் வெகு நேரம், பல்வேறு திருப்பங்களுடன் பலப்படுத்தப்பட்டது. நீண்ட மனப்போரட்டத்திற்குப் பிறகு, அந்தக் குழந்தையின் உயிரைக் காக்க எல்லாவற்றையும் இழக்கத் துணிகிறார் அவர். இழக்கவும் செய்கிறார். வாழ்நாள் முழுக்க ஈட்டிய பணத்தை, ஓடும் ரயிலில் வெளியே எறியும் காட்சி உறுக்கம்.

அதன் பின்னர் படம் ஒரு சீரான துப்பறியும் கதையாய் உருமாறுகிறது; அவரது இழப்பின் கனத்தைச் சுமந்து முன்னிறுத்தியவாறே.

ஒரு சாதரணக் கதையை, திறமையான திரைக்கதை, இயக்கத்தின் மூலம், நாயகனின் மனப்போரட்டத்தை பார்ப்பவர் மீது சுமத்தி, திரைப்படத்தை வேறுதளத்திற்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு இப்படம் சான்று.


புதியதோர் -இசம் செய்வோம்

ஜூலை 4, 2008

தனியுடைமை, பொதுவுடைமை தாண்டி ஒரு புதுவுடைமைக் கொள்கை தேவை.

நான் ஆங்கிலத்தில் சிந்தித்தது இங்கே-

என்றைக்காவது, நேரம் கிடைக்கையில, தமிழில் இதுகுறித்து இன்னும் ஆழமாய் எழுதவேண்டும்.


தசாவதாரம் – விமர்சனம்

ஜூலை 4, 2008

உலக நாயகன் படம் என்பதாலோ என்னவோ, ஆங்கிலத்தில் விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றியது.

இங்கே; எழுத மறந்தது – நல்ல படங்களில் கூட, ‘உலக நாயகனே’ மாதிரியான குமட்டலான தற்பெருமைப் பாடல்கள் தேவையா? கடவுள் பக்தியைக் கிண்டலடிக்கிற கமலை ரசிக்கிற அதே வேளையில், மனித பக்தியை முன்னிலைப் படுத்தும் இத்தகு பாடல்களைக் கண்டிக்கவும் வேண்டும்.

நல்ல வேளையாய், மற்ற விமர்சனங்கள் படிக்கும் முன்னரே, படம் பார்த்து, என் கருத்துகளையும் பதிப்பித்து விட்டேன். பின்னர் பார்க்க, படிக்க நேர்ந்த விமர்சனங்கள் எல்லாமே அதீதமாய் தாக்கியும், தேவையில்லாமல் பாராட்டியும் இருந்தது எதுவும் பிடிக்கவில்லை. பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ரவிக்குமாரின் சுயபுராணத்தைப் பார்த்த பிறகு, இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேனேயானால், நிச்சயம் எனக்குப் பிடித்திருக்காது. அப்படி நிகழாதது குறித்து இப்போது மகிழ்ச்சிதான்.