கில்காமெஷ் – நம்காலத்தைப் பேசும் ஆதிகாவியம்

திசெம்பர் 27, 2018

உலகின் ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமெஷ் (c. 2100 BCE) தமிழில் க.நா.சு. மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது (சந்தியா பதிப்பகம்). சுமேரிய மொழியில், குனிப்பார்ம் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பல கற்கள் கிடைத்து, அவற்றிலிருந்து பலரது பங்களிப்பால் புரிந்துகொண்டு தொகுக்கப்பட்டது இக்காவியம்.

அதிலேயே சமகாலச் சிக்கல்கள் பலவற்றின் வேர்களைக் காணலாம்.

இதன் நாயகன் கில்காமெஷ். ‘எந்தக் கன்னிப் பெண்ணையும் அவள் காதலுக்கு அவன் விட்டு வைப்பதில்லை. பிரபுவின் மனைவியானாலும் சரி, போர் வீரனின் பெண்ணானாலும் சரி – எல்லாரும் அவன் பௌருஷத்துக்குப் பலியாகிவிடுகிறார்கள். ஆனால் இவன் மன்னன். நாட்டுக்குக் காவலன்; அறிஞன்; ஞானி; அழகன்; தீர்மானமுள்ளவன்.’

கில்காமெஷ் பெண்களிடம் அத்துமீறுவதைப் பொறுக்கமுடியாமல், தேவர்கள் அவனுக்குச் சமமான வலிமையுடன் எங்கிடுவைப் படைக்கிறார்கள். ஆனால், எங்கிடுவை ஒரு பெண் மூலமாகவே மயக்கி நகரத்து ஈர்க்கிறான் கில்காமெஷ். எங்கிடுவைத் தோற்கடிக்கிறான். எங்கிடு அவனது உற்ற நண்பனாக மாறுகிறான். ஆனால் அதன் பிறகு கில்காமெஷ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.

கில்காமெஷும் எங்கிடுவும் சேர்ந்து, கிருஷ்ணன்-அர்ச்சுனனை நினைவுபடுத்தும் வகையில், செடார் மரங்கள் நிறைந்த ஒரு காட்டினை அழிக்கிறார்கள். அந்த காட்டின் ரட்சகனாக இருக்கும் ஹம்பாபா ஒரு ராட்சசனாகக் காட்டப்படுகிறான். கில்காமெஷ் ஹம்பாபாவை வீழ்த்த சூரியக்கடவுளான காமாஷின் உதவியைக் கோருகிறான்.

கில்காமெஷ் நூலின் இப்பகுதியில் சில கவித்துவமான வரிகள் உள்ளன.

‘காமாஷ் இரவு உறங்கப் போய்விட்டான். அவன் தாயின் மடியில் வெளிச்சம் நிறைந்த தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவன் உறங்குகிறான்.’

காமாஷிடம் கில்காமெஷ்,

“ஹம்பாபாவின் இருப்பிடம் நோக்கி நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேயாக வேண்டும். இந்தக் காரியத்தை என்னால் செய்து முடிக்கமுடியாவிட்டால் ஏன் நீ இந்த எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தாய்? நீ எனக்கு உதவி செய்ய மறுத்தால் நான் எப்படி என் காரியத்தில் வெற்றி பெற முடியும்?”

என்று முறையிடுகிறான். காமாஷ் உதவுகிறான். நண்பர்கள் இருவரும் செடார் மரங்களை வெட்டத் தொடங்குகின்றனர்.

/செடார் மரம் விழுகிற சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட ஹம்பாபா கோபத்துடன் உரத்த குரலில் காடு அதிர, “யாரடா அவன் என் இருப்பிடம் வந்து என் செடார் மரத்தை வெட்டுவது? யாரடா அவன்?” என்று கத்தினான்./

ஹம்பாபா கில்காமெஷுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சரணடைந்தபோதும், நண்பர்கள் இருவரும் அவனை கொன்றுவிடுகின்றனர். செடார் மரங்களை வெட்டி, வேர்களை எரித்து, எடுத்துச்செல்கின்றனர். மரத்தைக் காக்கப்போரிடும் ‘ராட்சசன்’ நகரங்களைக் கட்டமைக்கும் வீர மனிதர்களிடம் தோற்கிறான்.

பின்னர் இங்கிடுவின் மரணத்துக்குப் பிறகு, கில்காமெஷ் மரணமிலா வாழ்வினை நாடிப் பெரும்பயணம் மேற்கொள்கிறான். மரணத்தை வென்று வாழும் உத்னபிஷ்டிம் என்பனைச் சந்திக்கிறான். உத்னபிஷ்டிம் நோவாவைப் போலவே ஒரு பெரும் பிரளயத்தைச் சந்தித்தவன். கடவுள் எச்சரிக்கை செய்ததால், அவனும் ஒரு படகினைக் கட்டி, அதில் விலங்குகளோடு குடியேறி பிரளயத்திலிருந்து தப்புகிறான்.

உத்னபிஷ்டிம், ‘மரணத்தை வெல்வதிருக்கட்டும்; முதலில் உன்னால் உறக்கத்தை வெல்லமுடிகிறதா பார்’ என்று கூறுவதுபோல், கில்காமெஷை ஏழு இரவுகள் உறங்காமலிருக்கச் சொல்கிறான். அவனோ ஏழ நாட்களையும் உறங்கியே கழிக்கிறான்.

மரணத்தை வெல்வதில் தோல்வியுற்ற கில்காமெஷுக்கு, உத்னபிஷ்டிம் மூப்பினை வெல்லும் ஒரு மலர் கடலுக்கடியில் இருப்பது பற்றிக் கூறுகிறான். அந்த மலரை கடலுக்கடியில் மூழ்கித் தேடி எடுத்துச் செல்கிறான் கில்காமெஷ். ஆனால், அவன் ஏமாந்த வேளையில், அதையும் ஒரு பாம்பு உண்டுவிடுகிறது.

மரணத்தையும் மூப்பையும் வெல்லமுடியாமல் தனது ஊரான ஊருகி திரும்பிய கில்காமெஷ் இந்தக் கதையை கல்லில் பொறிக்கிறான். பின்னர் இறந்துபோகிறான். ‘அவன் மகாபலசாலி – அவன் கைகளில் வீரம் செயல்பட்டது. அவன் செய்யாத தீரச் செயல்கள் இல்லை. ஆனாலும் அவன் மீண்டும் வரமாட்டான்.’

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் இயற்கையோடும் நிலையாமையோடும் பொருது கொண்டிருக்கிறான்.


கரையேறாக் கரவுகள்

திசெம்பர் 4, 2018

/நீங்கள் நான்கு மொழிகளில் புலமைபெற்றிருக்கிறீர்கள். பிற மொழியறிவு உங்கள் படைப்பு மொழிக்கு எத்தகைய வலுசேர்த்திருக்கிறது?

பிறமொழி அறிவு தமிழை மேலும் செழுமைப்படுத்த உதவுகிறது. சொல்வளத்தைப் பெருக்குகிறது. குறிப்பிட்ட ஒரு பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைத் தேடும்போது ஏற்கெனவே நாம் அறிந்த ஒரு சொல்லைத் தவிர, இதுவரையிலும் நாம் பயன்படுத்தாத சொற்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மொழியில் கச்சிதம் கூடுகிறது. மிகச் சரியான, பொருத்தமான சொல்லை இட வேண்டும் என்கிற முனைப்பையும் அக்கறையையும் உண்டாக்குகிறது. தவிர, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அதனுடனான கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதுதான். புனைவெழுத்தாளனுக்கு இது மிக அவசியமானது./

தமிழ் இந்துவில் வந்துள்ள பேட்டியில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் சொல்கிற இந்த கருத்து இன்னும் அதிக கவனமும் விரிவும் பெறவேண்டிய ஒன்று. பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழ்மொழியில் பெயர்க்கும்போது மொழியில் சொல்வளமும் கருத்துவளமும் கூடுகிறது; மொழிமீதான நமது (மொழிபெயர்ப்பவனின்) ஆளுமையும் அதிகரிக்கிறது.

நான் அண்மையில் சில ஆங்கிலக் கவிதைகளையும் சிறுவர்களுக்கான சரிதைகளையும் மொழிபெயர்த்தபோது, இதுவரை தமிழில் நான் பயன்படுத்தியிராத பல சொற்களைப் பயன்படுத்த நேர்ந்தது. புதிய தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. உதாரணமாக, Alligator என்பதற்கு முதலில் வழக்கம்போல் முதலை என்ற சொல்லே விழுந்தது. பிறகு அகராதியில் தேடியபோது கரவு என்ற சொல் கிடைத்தது. திருவாய்மொழியில் கரவார்தடம் என்ற தொடர் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சுட்டியது. மேலும் தேடியபோது,

 பரவாள் இவள் நின்று இராப்பகல்
    பனிநீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
   வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்
    தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
    திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே

என்ற இனிய பாசுரத்தை அடைந்தேன். தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப்பார்க்கும் (இணையத்தில்தான் எனினும்) வாய்ப்பு கிடைப்பதே ஒரு பேரனுபவம்தான். பல நூற்றாண்டுகளாய்ப் பல நாட்டு அறிஞர்களின் பேருழைப்பின் மூலம் உருவான பெட்டகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இட்டுச்சென்று கொண்டே இருக்கும்.

கரவு என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அதையே போட்டிருக்கிறேன். கரவு என்பதற்குப் பிறபொருள்களும் உள்ளன (மறைவு, வஞ்சனை, பொய்). ஆனால், ‘கரவு கரையேறியது’ என்கிற இடத்தில் இப்பொருளில்தானே வரமுடியும்.

Crocodile, alligator என்ற சொற்களையும், அவற்றின் வகைகளையும் குறிக்கும் வகையில், தமிழ்ப் பேரகராதியில் மட்டும் 28 சொற்கள் உள்ளன. இவற்றுள் பல திசைச்சொற்களும் இருக்கும்தான்.

Crocodile – இடங்கர் (கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257)), கடு, கோதிகை, சிஞ்சுமாரம், சீங்கண்ணி, தாலுசிகுவம், தீர்க்கவர்ச்சிகை, துவிதாதகி, நக்கரம் (நக்கரக் கடற்புறத்து – கம்பராமாயணம்), மகரம், மகாமுகம், மாசலம், மாயாதம், வன்மீன் , விடங்கர், அவகாரம், ஆட்கடியன், ஆலாசியம் (ஆண் முதலை), கிஞ்சுமாரம், கும்பீலம், சலகண்டகம்

Alligator – ஆட்பிடியன், கரா, கராம், (ஆண் முதலை), சாணாகமுதலை [தீங்குசெய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை ], செம்மூக்கன், நக்கிரம், முசலி.

ஆனால், Alligator சீனாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே உள்ளதால், உண்மையில் இச்சொற்கள் எல்லாமே crocodile வகைகளைக் குறிக்கின்றனவாகவே இருக்கக்கூடும்.

தடந்தொறும் கரையேறாக் கரவுகளாய், இத்தனை சொற்களும் மூழ்கிக்கிடக்கின்றன.

—-

அதே போல, மொழிபெயர்க்கும்போது புதிய சொற்றொடர்களை உருவாக்கவும் முடிகிறது. பழமொழிகளுக்கும் மொழிவழக்குகளுக்கும் இணையான வழக்குகள் தமிழில் இல்லாத போது, பெரும்பாலும் அதன் உட்பொருளையே தருகிறோம். ‘The tide had ebbed’ என்ற ஒரு ஆங்கில மொழிவழக்கு ஓரிடத்தில் வந்தது. ‘சூழல்/நிலைமை சீரடைந்துவிட்டது’ என்று எளிதில் பொருள்படும்படி சொல்லியிருக்கலாம். ஆனால், நேரடி மொழிபெயர்ப்பாக, ‘ஓதம் ஓய்ந்துவிட்டது’ (ஓதம் – tide) என்றே எழுதிப்பார்த்தேன். சரியாகத்தானே இருக்கிறது என்று அப்படியே எடுத்தாண்டுள்ளேன். நம் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ற புதிய மொழிவழக்குகளை உருவாக்குவதில் தவறில்லையே. சினுவா ஆச்சிபி Things Fall Apart நூலில் ஆப்பிரிக்கச் சொலவடைகளை நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்திருப்பார். அவற்றின் பொருளை விளங்கவைக்கும் வகையில் அழகாகத் தன் கதையாடலை அமைத்திருப்பார். அதுவும் அவரது மொழிக்கு ஓர் எழிலைக் கூட்டியிருந்ததாகத் தோன்றியது.

பேச்சு வழக்குக்கு நெருக்கமாக மட்டுமே எழுத்துமொழியையும் அமைக்கும் போது, குறிப்பாகக் கவிதைகளிலும் அவ்வாறு செய்யும்போது, மொழியின் வளம் குன்றிப்போகிறது என்பதாக உணர்கிறேன். (கவிதை வளம் தான் கவிதைக்கு முக்கியம் என்று கவிஞர்கள் கருதலாம். ஆனால் புதிய சொற்கள் கவிதைக்கொன்றும் பகையல்லவே.) ஆங்கிலத்தில் அந்தச் சிக்கல் இல்லை. எளிய நடையிலும் அரிதான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனோ, தமிழில் நமக்கு நாமே இந்த எளிமை விலங்கைப் பூட்டிக்கொண்டோம். புழக்கத்தில் ஒரு சொல் வந்துவிட்டால், அதை மட்டுமே எழுத்திலும் பயன்படுத்துகிறோம். அதற்கிணையான பிற சொற்கள் நாளடைவில் முற்றிலுமாக மறைந்துபோகின்றன. நாஞ்சில் நாடன் இதுகுறித்து நேர்ப்பேச்சிலும், எழுத்திலும் அதிகமும் வருந்துவார்.

ஆங்கிலத்தில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள தினமும் ஆங்கில இந்து படிக்கச்சொல்லித் தருகிறோம். தமிழைப் பள்ளியில் பாடமாக படிக்கின்றவர்களுக்குப் பழைய தமிழில் அருஞ்சொற்பொருள் காணவும் பழக்குகிறோம். ஆனால், நவீனத் தமிழில் புதிய சொற்களைக் கற்கும் வகையில் நம் வார இதழ்களும் நாளிதழ்களும் பெரும்பாலும் இல்லை, அப்படியிருக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பதுமில்லை. பல்லாயிரம் சொற்கள் யாரும் தீண்டாத அகராதிகளுக்குள்ளும், பழந்தமிழ் இலக்கியங்களுக்குள்ளும், சில சிற்றிதழ்களுக்குள்ளும் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கின்றன.

புரியாத சொற்களைக் காணும் போது, ஏன் புரியாமல் எழுதுகிறான் என்று திட்டுவதை விடுத்து, அகராதியைப் புரட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளத்தொடங்கலாம் (இணையத்திலேயே பலவும் உள்ளன). சிடுக்கிலா நடைவேறு, பொருத்தமான அரிய சொற்களைக் கையாள்வது வேறு. மொழிக்குப் புதிதாக ஏதும் தராவிடினும், இருப்பதையேனும் இழக்காமல் காக்கலாம். மீட்டெடுக்கலாம். பேசாக்கிளவியும் பேசலாம்.