‘மகிழ்மலர்’ என்று பெயர் வைத்ததென்னவோ வைத்துவிட்டோம். அவள் பிறந்தவுடன், ‘அவள்’ என்றறிந்தவுடன்.
பின் எத்தனை கேள்விக்குறிகள், ஆச்சர்யக் குறிகள்!
பெயர் கேட்டு நான் சொன்னவுடன், “oh, what else should I have expected from you”, என்றான் நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்த தமிழ் நண்பன்.
பொருள் கேட்டு நான் சொன்னவுடன், அற்புதம் என்றனர் தமிழறியாத நிறைய நண்பர்கள்.
“ஏதோ சமஸ்கிருதச் சொல்லோடு ‘ழ’ சேர்த்து தமிழாக்கியாக்கியிருக்கிறார்கள்” என்று ஆணித்தரமாய் அடித்துச்சொன்னார் ஒரு மலையாள நண்பனின் தந்தை.
“After growing up, she is going to curse you for keeping such a complex name”, என்றனர் பெயரை உச்சரிக்கமுடியாத சில நண்பர்கள்.
இத்தனைக்கிடையிலும், ஆனந்தம் தருவன:
என் இரண்டரை வயது மகளிடமிருந்து வரும் இந்தச் சொற்கள்:
“My name is Mahirl Malar KN”. (”zh’ என்பது ‘ழ்’ என்பது யாருக்குப் புரியும்?)
“உன்னை மகிழ்னு கூப்பிடலாமா, வேறபேரு வைச்சுக் கூப்பிடலாமா?”
என்ற கேள்விக்கு, அவள் கோபமாய்த்தரும் பதில்:
“இல்லம்மா! மகிழ்னே வைச்சுக்கலாம்”.
மலர் மலர் என்றழைத்துக்கொண்டிருந்த
அவளது பஞ்சாபித் தோழி,
(அவள் அன்னைக்கு வாயில் நுழையாததால்)
ஒரு நாள் நாவை மடித்து ‘மகிழ்’ என்றழைத்தபோது.
அவளது பள்ளிப்பையில் அவள் பெயருக்கருகில் smiley போட்டு மலர் போட்டதும்
அவளால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தபோது.
சமஸ்கிருத அகராதியில் மகிழ் என்ற சொல்லுக்கான வேர்கள் எதுவும் இல்லாததைக் கண்ட போது.