மகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்

மார்ச் 13, 2018

மகாராஷ்டிரத்தில் போராட்டப்பாதையில் நடந்த விவசாயிகள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான, ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று, நதிநீர் இணைப்பால் அவர்களது நிலங்கள் மூழ்கவிருப்பது குறித்தது.

நதிநீர் இணைப்புதான் நம் தண்ணீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று இந்த கானல்நீரைக் கேட்டுக் கோரிக்கை வைக்கும் பெருவாரியான தமிழக விவசாயிகள், இதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்களாக. தமிழகத்திலும் பிற இடங்களிலும் நிலங்களை இழந்து, பாதச்சதைகிழிய நீங்கள் போராட்டம் செய்ய நேரிட்டால், நதிநீர் இணைப்பைத் தீர்வாகக் காட்டும் எந்த ஆன்மீக அறிவியல் அரசியல் சினிமா மேதைகளும் துணைவரப் போவதில்லை.

https://www.outlookindia.com/website/story/modis-pet-river-linking-project-is-a-reason-why-maharashtra-farmers-are-protesti/309398


காந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை

மார்ச் 13, 2018

கோவையில் செயல்பட்டு வரும் அருவி அமைப்பினர் இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த பல தலைப்புகளில் நீண்ட உரைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். சென்ற ஞாயிறன்று, என்னை உரையாற்ற அழைத்திருந்தனர்.

நிறைய நண்பர்கள், உறவினர்கள் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றியது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். வித்தியாசமான அனுபவம்.

‘காந்திய ஒளியில் சில பயணங்கள்’ என்ற பரந்த தலைப்பை எடுத்துக்கொண்டதில், நிறைய புத்தகங்களுக்குள் பயணமும், மீள் பயணமும் செய்ய முடிவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இதைச் சாக்காட்டி, மனைவியிடம் நிதியொதுக்கீடு பெற்று, நீண்ட காலமாக வாங்க நினைத்திருந்த ஜெ.பி. குறித்த ஒரு வரலாற்றுநூலையும், போனஸாக பல வருடங்களுக்கு முன் தண்ணீரில் நனைந்து வீணாகப்போன Complete Works of Shakespeare புத்தக்கத்துக்குப் பதிலாக இன்னொரு பிரதியையும் வாங்க முடிந்தது. (ஷேக்ஸ்பியருக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது)

இந்நிகழ்ச்சி குறித்து ஒரு விரிவான குறிப்பை எழுதிய நண்பர் சுரேஷுக்கும், ஒருங்கிணைத்த அருவி நண்பர்களுக்கும், நெகிழ்ச்சியான அறிமுக உரையாற்றிய எழுத்தாளர் சு.வேணுகோபாலுக்கும், வந்திருந்த பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


தனது முகநூல் பக்கத்தில் வெ.சுரேஷ் எழுதிய பதிவு:

“காந்திய ஒளியில் சில பயணங்கள் கண்ணன் அவர்களின் உரை:
அப்பா சாஹேப் பட்வர்தன் என்ற பெயரை நான் இன்று காலை வரை கேள்விப்பட்டதில்லை.அல்லது சுத்தமாக மறந்திருக்கிறேன்..அவர் காந்தியோடு பணியாற்றிய காங்கிரஸ்காரர். இவருக்காக காந்தி ஒரு நாள் உண்ணா விரதமிருந்திருக்கிறார். ரத்னகிரி சிறையில்,காந்தியோடு இருந்தபோது, சிறையில், மலமள்ளும் பணியைத் தனக்கு வழங்கக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அந்தப் பகுதியில், மலம் அள்ளும், பணியைச் செய்யாத,மஹர்(தலித்) இனத்தை சேர்ந்தவர்களே இருந்ததால், வேறு பகுதிகளில் இருந்து பங்கி வகுப்பு தலித்துகளை கொண்டு வந்து சிறையில் மலம் அள்ளும் பணியை செய்திருக்கிறார்கள்.இதை எதிர்த்துதான், அப்பாசாஹெப் பட்வர்தன் அந்தப் பணியைத் தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார்.அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தபோது அதனை எதிர்த்து உண்ணா விரதத்தை தொடங்கியிருக்கிறார். அவரின் இந்த செயலை ஆதரித்துத்தான், காந்தியும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமிருந்திருக்கிறார். இந்த அப்பாசாஹெப் பட்வர்தன்,பிராமணர்களிலேயே மிகவும் உயர்ந்த வகுப்பாக தம்மை கருதிக் கொள்ளும், சித்பவன் பிராமணர் . அவர் மேலான காந்தியின் பாதிப்பு இவ்வளவு தூரம் இருந்திருக்கிறது.இந்த நிகழ்வை, இன்று முதல் முறையாக, கோவை அருவி, அமைப்பினர், ஒருங்கமைப்பு செய்த்திருந்த “காந்திய ஒளியில் சில பயணங்கள் என்ற ,நிகழ்ச்சியில், நண்பர் ,கண்ணன் வாயிலாகக் கேட்டு மெய்சிலிர்த்து அமர்ந்திருந்தோம். ,இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற பல உயர் வகுப்பினர், காந்தியின், கருத்துக்களால், தம்மை மாற்றிக் கொண்டனர்.. கண்ணனின் காந்திய ஒளியில் சில பயணங்கள் என்ற அருமையான உரையில், மேலே சொன்ன பட்வரதன், வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, ராஜேந்திர பிரசாத்,வ.வே .சு அய்யர்,கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினர்,,இன்னும் பலரின் வாழ்க்கைப் பயணங்கள் அடைந்த மாற்றத்தை விவரித்தார்,காந்திய ஒளியில் சில பயணங்கள் எனும்போது, காந்தியின், பயணங்கள் அவரது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள், மற்றும், காந்தியின் தாக்கத்தால், பிறரதுவாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று இரண்டு விதமாக கண்ணன் பிரித்து அடையாளப்படுத்தியது,வெகு சிறப்பாக அமைந்தது. கூடவே, சில காணொளிகளையும் காட்டினார் . நவகாளி யாத்திரையின் காணொளியில், பின்னணியில் வரும்,அந்த வங்கப்பாடல், மனமுருக வைத்தது.(அதன் இணைப்பை கண்ணன் வழங்கிடக் கோருகிறேன்.),
வினோபா பாவே, ஜேபி.போன்றவர்களின் மகத்தான பணிகளை நினைவு கூர்ந்த கண்ணன்,பொது புத்தியில் உறைந்திருப்பதைப் போல அவர்களின் வாழ்வும் பணியும், தோல்விகரமானது அல்ல என்று தீர்மானமாக சொன்னார். தமது பூதான் இயக்கத்தின் மூலம்,வினோபா, 44 லட்சம்,ஏக்கர்,நிலத்தைப் பெற்று மறு வினியோகம் செய்தார் என்பதும், தன்னிடமிருந்த ஒரு ஏக்கரில் மனமுவந்து கால்பங்கு கொடுக்க முன்வந்த எளிய விவசாயிகளும் அடக்கம் என்ற தகவல் பிரமிப்பையம், நேர்கிஸ்ச்சியையும் அளித்தது.அதோடு, தற்காலத்தில், காந்திய ஒளியில், பயணம் செய்வோரைக் குறித்தும், ஒரு சிறிய அறிமுகத்தை செய்து வைத்தார். லட்சியவாத காலமெனும்,காந்திய சகாப்தமெனும்,அந்த உன்னதப் பெருவெளியில், இரண்டு மணி நேரங்கள் எம்மை, உலவ வைத்த நண்பர் கண்ணன் அவர்களுக்கும், நிகழ்வினை, ஏற்பாடு, செய்திருந்த அருவி அமைப்பினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். கண்ணன் உரைக்கு முன் திரையிடப்பட்ட, பேப்பர் பேக்,புத்தகங்களின் வரலாறு குறித்த ஆவணப் படமும் அற்புதம். உரையின் இறுதியில், அமைந்த கேள்வி பதில் நேரத்தில் வழக்கம் போல வந்த சில சம்பந்தமில்லாத கேள்விகளுக்கும், கண்ணன் பொறுமை இழக்காமல், நிதானமாக தெளிவாக பதில் சொன்னதும், பாராட்டத்தக்கது. கூட அமர்ந்திருந்த நண்பர் செந்தில்குமார் தான் பதட்டமடைந்தார்.நண்பர்,இன்னொரு(விழுப்புரம்) செந்தில் குமார் அர்த்தமுள்ள ஒரு கேள்வியை முன்வைத்தார்.


மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018