காந்தி, கள், வெறி

மே 31, 2016

(இதுவும் முகநூலிலிருந்து)

காந்தி கள் விற்பனையை ஒரு கிராம சுயராஜ்யச் செயல்பாடாக ஒப்புக்கொண்டிருப்பார் என்பதிலோ, அது காந்தியத்தின் நீட்சி என்பதிலோ, அதை மறுப்பவர்கள் இறுக்கமான காந்திய-மதவாதிகள் என்பதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. கிராம சுயாட்சியும் கதர் நூற்றல் போன்ற சுதந்திரமான தொழில்களும், மனம் ஒன்றமுடியாத அடிமை உழைப்பிலிருந்து விடுதலை கொடுத்து, கள் உண்பதற்கான தேவையை நீக்கிவிடும் என்றுதான் காந்தி கருதினார். நானும் அவ்வாறுதான் நினைக்கிறேன். எங்கள் தோப்பிலிருந்து கள் இறக்குவதையோ, நாங்களே கள் விற்பதையோ சாத்தியமானவையாகக் கருத இயலவில்லை. கள் ஊட்டச்சத்துக்காக மட்டுமே அருந்தப்படும் ஆரோக்கிய பானம் என்று நிறுவி காந்தியை ஏற்றுக்கொள்ள வைப்பதில் சில சிரமங்கள் இருந்திருக்கும்.

நிற்க. ஒன்று மட்டும் என்னால் உறுதியாகக்கூறமுடியும். ஏதோ லத்தீன் அமெரிக்க நாடுகளில் இப்படி ஏற்கனவே நடப்பதாகக்கூட எங்கோ படித்த ஞாபகம். சாலையில் முந்திச்செல்ல வாய்ப்பே இல்லாத போதோ, சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் போதோ அல்லது பச்சை வந்தவுடனேயோ தொடர்ச்சியாக ஹார்ன் அடிப்பவர்களை லேசாய்ச் சுட்டுத்தள்ளுவதற்கு காந்தி கட்டாயம் ஆட்சேபித்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அகிம்சையை விட உண்மை அவருக்கு முக்கியம். ஹிட்லரைக்கூட அகிம்சைக்குத் திருப்பி விடலாம் என்று நம்பி மடலெழுதிய மாமனிதர்தான் அவர்; ஆனால், தொடர்-ஹார்ன் வெறியர்களைச் சமாளிக்க அகிம்சையால் சாத்தியப்படாது என்கிற அசைக்கவியலாத எளிய உண்மையைப் புரிந்துகொள்ளாமலா போயிருப்பார்? காந்தியை விடச் சிறந்த நவகாந்தியர் வேறு யார் இருந்துவிட முடியும்?

 


இந்தியும் நானும்

மே 31, 2016

முகநூலில் இருந்து இன்னொரு பழைய பதிவு.


ஜாம்ஷெத்பூரில் படித்துக்கொண்டிருந்த போது, தனியே வெளியில் செல்ல நேர்கையிலெல்லாம் என்னுடைய அரைகுறைக்கும் குறைவான இந்தியோடு எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்த காலம். சிறுவயதில் நான் ப்ராத்மிக்கில் 35 வாங்கிப் பாஸ் செய்திருக்கிறேன். அதுவும் இந்தியிலிருந்து தமிழுக்கோ ஆங்கிலத்துக்கோ மொழிபெயர்க்கும் ஒரு பகுதியிருந்து, அதில்தான் பெரும்பகுதி மதிப்பெண்கள் பெற்ற நினைவு. தூர்தர்ஷனில் போட்ட அத்தனை இந்திப் படங்களையும் பார்த்திருந்த அனுபவமும் ஓரளவு கைகொடுத்தது.
கல்லூரி வாழ்வின்போது, இந்தியிலுள்ள மா-பென் கெட்ட வார்த்தைகளையெல்லாம் செவிகள் நுகர்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்தைய நான்காண்டுகள் சகித்துவந்த சென்னைத் தமிழைவிடக் கொடுமொழி உலகில் உண்டு என்னும் ஆறுதல் துளிர்த்து வந்தது. மற்றபடி, கல்லூரிக்குள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாடிக்கொண்டிருந்ததால், இந்தி பழகியாகவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை. ஓரிரு நண்பர்கள் மட்டும் பழக்கதோசத்தில் என்னோடு அடிக்கடி இந்தியிலேயே பேசுவார்கள். நான் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வேன். அங்கிருந்த எனதருமைத் தமிழ்நாட்டுத் தோழர்கள் பெரும்பாலனவர்கள் ஐஐடி-ஆர்இசி வகையறாக்கள்…இந்திக்காரர்களைவிட அதிகமாய் இந்தி பேசுவார்கள். எனவே நான் தனித்த பிராணிதான். விடியவிடியப் படித்துவிட்டோ குடித்துவிட்டோ, அதிகாலையில் மதராஸி சம்மேளனம் சென்று, பொங்கல் சாப்பிட்டுத் தமிழ்ப்பற்றை அவர்கள் வெளிப்படுத்தும்போதுகூட அநேகமாய் நான் உடன் சென்றதில்லை.
‘தண்டா பாணி’ என என்னை நண்பர்கள் கூவி அழைக்கும் போதெல்லாம், இன்னும் உரக்கக் கூப்பிட்டால்தான் கோயமுத்தூரிலிருக்கும் அப்பாவுக்குக் கேட்கும் என்று நவின்று நகர்ந்துவிடுவேன்.

முதலாண்டில் ஒருமுறை, தில்லிக்கார நண்பன் ஒருவன், கடுமையான காய்ச்சல் வந்து டாட்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். வேறு நிறையப்பேருக்கும் காய்ச்சல் தொற்றியிருந்தது. மொழிப்பிரச்சனை வரும் என்று தெரிந்தும், ஏதோ தைரியத்தில், அந்த நண்பனுக்குத் துணையாக மருத்துவமனையில் இரவைக் கழிக்கத் துணிந்தேன். காய்ச்சலின் கடுமையில் அவன் உளறிக்கொண்டே இருந்தான். பொதுவாகவே இந்தியில் லொடலொடவெனப் பேசுபவன். இப்போது கேட்கவே வேண்டாம். புரிந்தும் புரியாமலும் எப்படியோ அவனுக்குப் பரிவுடன் உதவிக்கொண்டிருந்தேன். நர்ஸை அழைத்து வருமாறு அவன் கூறியதைப் புரிந்து அழைத்து வரச்சென்றேன். அந்த நர்ஸிடம் தட்டுத்தடுமாறிப் பேசி அழைத்தும் வந்துவிட்டேன்.

அவரிடம், தில்லியின் மேல்த்தட்டு ஆங்கில உச்சரிப்பில் படபடவென ஆங்கிலத்தில் பொரியத்தொடங்கினான். அவருக்கு ஒரு வார்த்தைகூடப் புரியவில்லை.

இத்தனையையும் நான் மொழிபெயர்க்கவேண்டுமா – முழி பிதுங்கியது. ‘டேய், இந்தியில் பேசுடா,’ என்று என் மனம் கதறியது அவனுக்குக் கடைசிவரை கேட்கவேயில்லை.

கல்லூரி முடித்த ஆண்டு, முதல் வேலை தில்லிப்பக்கம் (நோய்டாவில்). நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை. கிடைத்த முதல் வாய்ப்பில், சென்னைக்குப் பெயர்ந்து விட்டேன் (பிறகு மீண்டும் மும்பய், பெங்களூரு என்று திரிந்தது தனிக்கதைகள்). அதே நண்பன் வேறு வேலைக்கான நேர்முகத்துக்காகச் சென்னைக்கு வந்திருந்தான்; என் வீட்டில் தங்கியிருந்தான். அவனுக்குச் சென்னையிலேயே வேலைகிடைக்கவேண்டும் என்ற எனது பிரார்த்தனைகள் பலிக்கவில்லை.

விட்டு விடுதலையாகி நின்றோம்

மே 31, 2016

முகநூலில் இருந்து ஒரு பழைய பதிவு:


 

அன்றிரவு கிராமத்திலிருந்து பொள்ளாச்சிக்குச் செல்லும் பேருந்தில் ஏறும்போதே பழைய எம்.ஜி.ஆர். பாடலொன்று வரவேற்றது. சற்றே வயதானவர், நின்றபடி உணர்ச்சி ததும்பப் பாடிக்கொண்டிருந்தார். பேருந்தின் நகர்வைவிட அவர் அருந்திய திரவம் அவரை அதிகம் தள்ளாட வைத்துக்கொண்டிருந்தது. சுருதிகூடவில்லையெனினும் மெட்டில் குறையில்லை. உச்சரிப்பில் நல்ல தெளிவு.
பின்புறம் கடப்பாரையுடன் அமர்ந்திருந்த பயணி, மஞ்சள் நிற வொயர் கூடையுடன் இருந்த சகபயணியிடம் சிலாகித்துக்கொண்டிருந்தார்.
‘இவரைக் கிண்டல் பண்ணக்கூடாதுங்க. அவருடைய வாழ்கை அனுபவம் தான் அவரைப் பாட வைக்குது.’
ஆர்வமாய்த் திரும்பிப் பார்த்த என்னிடம் மேலும் சொன்னார், ‘எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த ஜனங்க. இப்ப விடுதலைக்கப்புறம் இந்த அளவுக்குப் பாடறார்னா அப்ப எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க பாருங்க.’
எந்த விடுதலையைச் சொல்கிறார்? ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றதையா? பாடுபவர் வயதானவர்தான்…ஆனாலும் அந்த விடுதலையைச் சொல்கிற மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை சாதி விடுதலை குறித்துப் பேசுகிறாரோ?

பாடியவருக்குப் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. நடத்துனர் பத்திரமாக இறக்கிவிட்டார். இரவு நேரங்களில் நடத்துனர் பாடு படு திண்டாட்டம்தான் – மற்றவர் உயிரையும் தமது உயிரையும் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு செயல்படவேண்டும்.

சகபயணி பதிலளித்துக்கொண்டிருந்தார், ‘அவர் பார்த்த மொதல் படம் எதுன்னு கேட்டேன். மதுரை வீரன்னு சொன்னார். அதனாலதான் இப்படிப் பாடறார். என்னமாப் பாடறார்.’

‘நான் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில பெஞ்சிலதான் உட்கார வைச்சாங்க.’

‘அடப் போப்பா, நான் படிக்கும்போது பெஞ்சே கிடையாது,’ என்று வொயர் கூடைக்காரர் சொல்ல, உரையாடல் தொடர்ந்தது.

கூர்ந்து கவனித்து, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் விடுதலையின் அர்த்தம் புரிந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த தினமாம்.

கே.என்.செந்திலின் அரூப நெருப்பு

மே 31, 2016

கே.என்.செந்திலை கோவையில் அடிக்கடிப் பல இலக்கிய நிகழ்வுகளின் போது சந்திப்பது உண்டு. இனிமையாகப் பழுகுவார், கபாடபுரம் போன்ற ஒரு நேர்த்தியான இணையச் சிற்றிதழை நடத்தச் சிரத்தையுடன் முயன்றுவருகிறார் என்பதில் எனக்கு அவர் மீது ஒரு மதிப்பு உண்டு. ஆனால் அவரது கதைகளை நான் படித்திருக்கவில்லை. ஒரு எழுத்தாளரை அவரது படைப்புகளைப் படிக்காமல் சந்திப்பது என்பது எப்போதும் நெருடலை ஏற்படுத்தக் கூடியது. அவரோடு நெருங்குவதற்குத் தடையாக இருப்பது. அந்தக் குறை, செந்திலைச் சந்திக்கும்போது இனி இருக்காது.

அவரது ‘அரூப நெருப்பு’ சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன். செந்திலே முன்னுரையில் சொல்வது போல் குறுநாவல் அம்சம் மிகுதியாகக் கொண்ட கதைகள். (இத்தகைய வகைமைகள் என் வாசிப்பு அனுபவத்திற்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை.) அதிகம் பேசப்படாத மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுபவை. நேரடியான அனுபவங்கள் சார்ந்து எழுதுகிறாரா, அல்லது ஒரு சிறு பொறியிலிருந்து கிளம்பிப் பெரும்பாலும் தன் படைப்பாற்றலால் அவர்களது யதார்த்தத்தைக் கட்டமைக்கிறாரா என்பதை எளிதில் ஊகித்துவிடமுடியாது; ஆனால், அவற்றில் ஒரு நம்பகத்தன்மை இருக்கிறது. உதாரணமாக, பிணக்கிடங்கில் வேலை செய்யும் செய்யும் மனிதனையும் அவன் மனைவியையும் அவரவர் கோணங்களில் அணுகி, அவர்களது எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் எளிதில் நம்முடையவையாக்கிவிடுகிறார். செந்திலின் கதைகளில் உரையாடல்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. அவ்வப்போது வரும் உரையாடல்களும் மிகவும் காட்டமாக அமைந்துவிடுகின்றன; வசைச்சொற்கள் இயல்பாக நிகழாமல், திணிக்கப்பட்டவையோ என்பது மட்டும் உறுத்தியது. உத்திகள், வடிவம் என்பதையெல்லாம் மீறிச் சொல்லப்படாத கதையைச் சொல்லும் எத்தனிப்பும், கதை மாந்தர்களின் வாழ்க்கைக்குள் ஆழமாகப் பயணிக்கும் முயற்சியுமே மேலோங்கித் தெரிந்தன. அதனாலேயே இந்தக் கதைகள் அனைத்தையும், எனது தற்போதைய இயல்புக்கு மாறாக, தொடர்ச்சியாக வாசித்துவிட முடிந்தது.

இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை மிகக் குறைவாகவே படித்திருக்கிறேன். செந்திலை அடையாளம் கண்டுகொள்ளமுடிந்தது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து வாசிக்கவேண்டும்.


சர்வோதய தின நிகழ்வுகள் – சில நினைவுகள்

மே 30, 2016

சர்வோதயம் மலர்கிறது மார்ச் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை.


 

சர்வோதய இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் பங்காற்றி, உயிர்ப்புடன் வழிநடத்திய ஜெகந்நாதன் அவர்களை நினைவுகூரும் கருத்தரங்கம் ஒரு மாறுபட்ட முயற்சியாக ஆண்டுதோறும் (பிப்ரவரி 10,11,12 தேதிகளில்) மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது. ஜெகந்நாதன் என்கிற ஒரு தனிநபரைப் பற்றிய அஞ்சலிகளாகவும், பலராலும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரைப் பற்றிய புகழுரைகளாகவும் மட்டும் குறுக்கிவிடாமல், அவர் விரும்பிய சமூக மாற்றத்திற்கான ஒரு தேடலாக இந்த மூன்று தினங்கள் அமைந்துவிடுகின்றன. இவ்வாண்டு கல்வி, மருத்துவம் ஆகியவை குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன. துறை வல்லுனர்களும், இளம் மாணவர்களும் ஒன்றிணைந்து சிந்தித்து, கருத்துகளைப் பரிமாறி, செயலூக்கம் பெற்றுச் செல்வதற்கான ஒரு களமாக இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது.

முதல் நாளன்று, மருத்துவர் பூமிக்குமார் வரவேற்புரையாற்ற, க.மு.நடராஜன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.   ஜகந்நாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆசிரியராக இருந்தபோது ஜகந்நாதன் தனது கைக்கடிகாரத்தை மகாத்மா காந்தியிடம் ஹிரிஜன் சேவை நிதிக்காக நேரடியாக அளித்ததைப் பற்றிப் பேசினார். மு.அருணாசலம் போன்ற பல சர்வோதயத் தலைவர்கள் அவரது மாணவர்களாக இருந்து உருவானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஜகந்நாதன் ஜவ்வாது மலையில் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவித்ததையும் நினைவுகூர்ந்தார்.

அடுத்து பேசிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் பங்கஜம், பள்ளிமுதல் பட்டப்படிப்புவரை ஆதாரக்கல்வி முறையில் தான் பயின்றதாகக் கூறினார். எதிர்காலக் கல்வித்திட்டம் மாணவர்களிடமிருந்து வரவேண்டும் என்றார். எல்லாருக்குமான கல்வி மறுக்கப்படுவது, தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்காதது, ஊரகப் பகுதிகளில் அதிக மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிடுவது, கற்றவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பது, திறன்மிக்கவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது, ஆசிரியர்களின் தரத்தில் வீழ்ச்சி என்று இன்றைய கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்களைப் பட்டியலிட்டார்.  ஆதாரக் கல்வி முறை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வளர்க்கப்பட வேண்டும்; ஆய்வுகள் பட்டங்களும் பதவியுயர்வும் பெறுவதற்காகவன்றி, செயல்படுத்தப்படக்கூடிய தீர்வுகளை நோக்கியனவாக இருக்க வேண்டும்; தில்லியிருந்து பாடத்திட்டம் வகுக்கப்படாமல், கிராமங்களின் தனித்தன்மைக்கேற்ப உள்ளூரில் வடிவமைக்கப்படவேண்டும்; இளவயதிலேயே திறமைகளை அடையாளம் காணவேண்டும்; ஆரம்பக்கல்விக்கும் முன்பிருந்தே குழந்தைகளும் அதிக அறிவூட்டம் அளிக்கவேண்டும்; மாணவர்கள் தேர்வு செய்யப் பல்வேறு மாற்றுகளை வழங்கவேண்டும்; நீடிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும் என்று மேலும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்து பேசிய ஜெனிஃபர் லேட், அமெரிக்காவில் ‘Class Action’ என்ற அமைப்பை நடத்தி வருபவர்.  பொருளாதார மாற்றங்களும், பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்துவரும் சூழலில் உறுதியான சமூகக்கட்டமைப்பினை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வியை எழுப்பி அதனுள் கல்வியின் பங்கினைப் பற்றிப் பேசினார். கல்வியின் அடித்தளம் என்று ஆறு அம்சங்களை அடையாளப்படுத்தினார்: ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஒளி உள்ளது – கல்வியின் நோக்கம் அந்த ஒளியை வெளிக்கொணர்வது; சூழலுக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறும் தன்மை; குடும்பம், சமூகம், சரித்திரம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் அமைப்பு சார்ந்த சிந்தனை; பெருமாற்றம் விளைவிக்கும் வழிகளைக் கண்டடைதல்; நீடிக்கும்திறன் மீதான கவனம் – ஏழு தலைமுறைகளின் மீதான பாதிப்பினை மனதில் வைத்து முடிவெடுத்தல்; துணிவு. அதைத் தொடர்ந்து, ஜெனிஃபர் என்னோடும் என் மனைவி நித்யாவோடும் ஓர் உரையாடலை நிகழ்த்தியது இனிய அனுபவமாக அமைந்தது. பெருநிறுவன வாழ்விலிருந்து விலகி கிராமத்திற்கு இடம்பெயர்ந்து விவசாயத்தையும் கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்தலையும் மேற்கொண்டிருப்பதையும், எங்கள் மகள் வீட்டிலேயே கற்றுக்கொள்வதையும் கவனப்படுத்தினார்.

பின்னர் குழுமியிருந்த அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து, கல்வி குறித்து உரையாடி, தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். குழுவிவாதங்களின் சாரமாகப் பின்வரும் கருத்துகள் அமைந்தன:

கல்வி சார்ந்து திட்டமிடுதல் பன்முகப்படுத்தப்படவேண்டும். உள்ளூர் தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைய வேண்டும்.
ஆதாரக் கல்வியின் அடிப்படையில் கைத்தொழில் மூலமாகப் பல செய்திகள் கற்றுத்தரப்பட வேண்டும்.
அறம் குறித்தும் விழுமியங்கள் குறித்தும் கவனத்தை ஏற்படுத்தவேண்டும்.
மாணவர்களின் திறன்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அளவிடப்படக்கூடாது.
எல்லாருக்கும் தரமான கல்விக்கான சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
தாய்மொழி பயிற்று மொழியாக அமையவேண்டும்.
ஆசிரியர்கள் பயிற்சியிலும் மதிப்பிடலிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
அச்சமின்றி எல்லாரும் கற்கும் நிலை உருவாகவேண்டும்.

இரண்டாம் நாளுக்கான கருப்பொருளாக மருத்துவம் அமைய, நிகழ்ச்சிகளை டாக்டர்.சத்யா ஒருங்கிணைத்தார். அரவிந்த் கண்மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரான கண்மருத்துவர். நாச்சியார் தன் நிறுவனத்தின் சமூகப்பயணம் குறித்து உரையாற்றினார். உலகில் 39 மில்லியன் மக்களும் இந்தியாவில் 12 மில்லியன் மக்களும் கண்பார்வை இழந்துள்ளதாகவும், 80 விழுக்காடு பார்வைக் குறைபாடுகளை மருத்துவம் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்றார். அரவிந்த் மருத்துவமனை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 56 ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக மக்களை நேரடியாகச் சென்றடைவதாகக் கூறினார். நகரங்களிலுள்ள பெருமருத்துவமனைகளைவிட கிராம மையங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை; அவற்றில் உள்ளூர் மக்களுக்கே பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார். இலவச மருத்துவம் அளித்தாலும் நோயுற்றவர்களுக்கு அது இலவசமாக இருப்பதில்லை; அந்த உதவியைப் பெற அவர்கள் குறிப்பிடத்தக்க விலையை அவர்கள் வழங்க வேண்டியிருக்கிறது என்று அவர் கூறியது முக்கியமான திறப்பாக எனக்கு அமைந்தது.

மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனருமான ராமசுப்பிரமணியன் சமூக மனநல மருத்துவத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இன்றைய சமூகம் மனநிலைக் குறைபாடுகளை ஒரு சாபமாகக் கருதுகிறது; தனிநபர்கள் மட்டுமல்லாமல் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படுகிறது என்றார். அறியாமையாலும், பயத்தாலும், அதிக கட்டணத்தாலும் மனநல மருத்துவர்களைப் பெரும்பாலானவர்கள் அணுகவதில்லை; ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் எல்லா மனநோய்களும் குணப்படுத்தகூடியவையே என்றார். அவரது அறக்கட்டளை வாயிலாக முசுண்டகிரிப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு மனநல மருத்துவமனை தொடங்கியதன் பின்னணியைப் பகிர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் கிராம மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை; ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குணப்படுத்தி, அவரையே பணியில் அமர்த்தியபிறகு கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றார். ஏர்வாடி தீவிபத்துக்குப் பிறகு, அங்கு இருந்த மத நிறுவனங்களோடு இணைந்து, அவர்கள் மூலமாகவே மனநல மருத்துவர்களிடம் நோயாளிகளை அனுப்பும்படியான ஒரு ஏற்பாட்டினைச் செய்ததாகக் கூறினார். சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளின் போது, மத நம்பிக்கைகளோடு முரண் ஏற்படும்போது கையாள்வதற்குச் சிறந்த வழியாக இது தெரிந்தது.

நார்வே நாட்டில் ஸ்டாவெங்கர் பல்கலைக்கழக மருத்துவமனையின் பல்பண்பாட்டு மையத்தில் மனநல மருத்துவராக உள்ள ஜோனே சான்சே ஓல்சன் (Jone Schanche Olsen), போரில் பாதிக்கப்பட்டவர்களோடும் அகதிகளோடும் பணிசெய்ததில் கிடைத்த அனுபவங்களைப் பதிவுசெய்தார். எரித்ரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது சிரியாவிலிருந்தும் அகதிகள் பெருமளவில் வரத்தொடங்கியுள்ளனர். பல நாடுகளைத் தரை வழியாகவும், நீர் மார்க்கமாகவும் இவர்கள் கடந்து வரவேண்டியுள்ளது. இவர்களில் பலரும் சிறுவர்கள்; பதின்பருவத்தினர். பல கோர சம்பவங்களைக் கண்டதாலும், பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததாலும் இவர்களது மனநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவர்களோடு பணி செய்ய செவிலியர்க்கும், சமூகப் பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. குழு சிகிச்சை வழங்கப்படுகிறது.

டேவிட் ஆல்பர்ட் இந்தியாவிற்கு நாற்பது ஆண்டு காலமாக வந்துகொண்டிருப்பவர்; ஜகந்நாதன்- கிருஷ்ணம்மாள் தம்பதியினரோடு நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்; இல்லக்கல்வி (Homeschooling) குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். Friendly Water for the World என்கிற நிறுவனத்தின் மூலமாக ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கல்விக்கும் சுகாதாரத்துக்கும் குடிநீருக்குமான தொடர்பினைக் குறித்துப் பேசினார். இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நீரின் தரம் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்நிலை தாழ்ந்துவிட்டது. 48 விழுக்காடு குழந்தைகள் பிறப்பின்போது ஊட்டச்சத்துக்குறைவால் வளர்ச்சி குன்றிப் பிறக்கின்றனர். குழந்தைகள் நீரினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவிலும்கூட கறுப்பினக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இந்தியா அளவிற்கே உள்ளது. அவர்களிடம் இறப்புவீதமும் இந்தியாவின் அளவிலேயே உள்ளது. நீர் சுத்திகரிப்பு, நீர் மேலாண்மை குறித்த அறிவினை நமது கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறிவிட்டன. ஒவ்வொரு ஆசிரியரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்; ஒவ்வொரு குழந்தைக்கும் சுத்தமான நீர் குறித்தும் கைகளைச் சுத்தம் செய்வது குறித்தும் கற்றுத்தர வேண்டும். காந்தி கழிப்பறைகள் தொடர்பாகச் செய்த சோதனைகள் அனைத்தும் சத்திய சோதனைகள். ஊழலும், சுகாதாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்வதும் மனநலக் குறைபாடுகளே என்று பல விஷயங்களைத் தொட்டுப் பேசிய டேவிட், அவற்றையெல்லாம் நீருடனான தொடர்பால் இணைத்தார்.

மூன்றாம் நாள் (பிப்ரவரி 12) ஜகந்நாதனின் நினைவுநாள். சர்வோதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. காந்தியப் பணிகளில் ஈடுபட்டுவரும் பல ஊழியர்கள் ஒன்றுகூடும் தினம் இது. கிருஷ்ணம்மாள்-ஜகந்நாதன் பணியாற்றிய நாகப்பட்டினம் பகுதியிலிருந்து பல கிராம மக்களும் வந்து கூடியிருந்தனர். ம.பா.குருசாமி, பாதமுத்து, மார்க்கண்டன், மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர். இனாமுல் ஹசன், ராஜேந்திரன் ஆகியோர் வெள்ள நிவாரணப் பணிகளின் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். மருத்துவப் பணியில் நெடுங்காலமாகப் பெருஞ்சேவை செய்துவரும் மருத்துவர் கௌசல்யா தேவி, சர்வோதய இயக்கங்களில் தொடர்ந்து பணியாற்றித் தன் பாடல்கள் மூலம் உணர்வெழுச்சி ஏற்படுத்திவரும் வேங்கையன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. காந்திகிராம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். நடராஜன் மருத்துவர் கௌசல்யா தேவி குறித்தும், க.மு.நடராஜன் வேங்கையன் குறித்தும் பேசினர்.

இந்த மூன்று நாட்களும் மேலும் உத்வேகத்துடன் நாம் மேற்கொண்டுள்ள பணிகளைச் செய்வதற்கும் இன்னும் பல பணிகளை மேற்கொள்வதற்கும் ஊக்கம் தருவனவாக அமைந்தன. மூன்று நாட்களின் முத்தாய்ப்பாக அமைந்த நிகழ்வு, கடைசி நாள் காலை நிகழ்வுகள் முடிவுக்கு வரும் போது நடந்தது. பலரும் பேசிய பிறகு, உணவு வேளையும் நெருங்க, குழுமியிருந்தவர்களின் கவனம் சற்றே குலையத் தொடங்கியிருந்த போது, கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேச வேண்டிய தருணம் வந்தது. மேடையில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வேகமாக நடக்கத்தொடங்கினார்; அறையின் நடுவில் நின்று ஒரு சிறு பிரார்த்தனைக்குப் பின் உருக்கமான பேச்சுத் தமிழில் உரையாடத் தொடங்கினார்.  அவர் தட்டிவிட்ட மைக்கை ஒருவர் பிடிவாதமாக நீட்ட வேண்டியிருந்தது.  என்னருகில் மொழிபுரியாதபோதும், மரியாதை நிமித்தம் அத்தனை நேரம் பொறுமையாக அமர்ந்திருந்த அமெரிக்க நண்பர், ‘This is the way to do it,” என்று எழுந்துவிட்டார். கூட்டம் நடந்த அதே இடத்தில், 1948ல் தான் ஒரு விடுதியில் தலைவியாக இருந்து, அங்கிருந்த ஆதரவற்ற பெண்களைச் செவிலியராக்க உதவியதையும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்தபோது கீழவெண்மணிப் படுகொலை பற்றிக் கேள்விப்பட்டவுடன் அங்கு விரைந்து சென்று, அங்கேயே தங்கி நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கித் தரும் பணியைத் தொடங்கியதையும் நினைவு கூர்ந்தார். “பேப்ர்ல வந்துச்சு – எல்லாருக்கும் பொங்கலுக்கு அரிசி, வெல்லம், ஒரு துண்டு கரும்பு….வக்கத்தா போனீங்க, கழுதைகளா? வக்கத்துப் போனீங்களேடா – பத்து ரூபாய்க்கு அரிசியும், வெல்லமும், கரும்பும் வாங்க. இத்தனை வருஷமா ஆட்சியில இருந்தவங்க, அறுபது ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவங்கெல்லாம் என்ன வேலை செய்தாங்க. மக்களுக்கு நிலம் கொடுத்தானா, வீடு கட்டுனானா, அல்லது எல்லாரையும் படிக்க வைச்சானா, மிஞ்சினதெல்லாம் ‘இவன் தாழ்ந்தவன்’னு பேரு,” என்று முடித்துவிட்டு சட்டென்று திரும்பிவிட்டார். அதுவரை நீடித்திருந்த துல்லியமான அமைதி, சில நொடிகள் திக்கற்று நின்று, பின் கரவொலியில் கலைந்தது. அந்த சில கணங்கள், கூட்டத்துள் மின்சாரம் பாய்ந்த உணர்வு எழுந்தது.


இரா. முருகவேளின் முகிலினி – நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

மே 30, 2016

நாவல் அனுபவம் என்கிறார்கள். முகிலினி எனக்குப் பல முதல் அனுபவங்களை அளித்த ஒரு நாவல். முகிலினியின் புத்தக ஆக்கத்தில் (அறிந்தும் அறியாமலும்) மிகச்சிறு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. முன்னுரையில் என்னையும் என் மனைவியையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகு நூலகத்து நண்பர்களும், எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களும் சூழ, முகிலினி நூல் வெளியீட்டு விழா எங்கள் தோட்டத்தில் நடந்தது விழாக்காலக் களிப்பினை அளித்தது. இங்கேயே பிறந்து வளர்ந்தும், நானறிந்திராத கோயமுத்தூரை இந்நாவல் எனக்கு அறிமுகம் செய்தது வெட்கத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

கோவை தியாகு நூலகத்தில் அறிமுகமாகி, மிளிர் கல் மூலமாக அறிந்து, ஒரு சில சந்திப்புகளில் மிக நெருக்கமான நண்பராக இரா.முருவேளை உணர்ந்து கொண்டேன். நூலகத்தில் சனிக்கிழமை சங்கமங்களின் போதும், விஷ்ணுபுரம் விழாவின் போதும் சுற்றிலும் உள்ள அனேகரும் அவருக்கு முரணான கருத்துகளை அடித்துப் பேசும்போது, புன்சிரிப்பு மாறாமல் அனைவரையும் தனியொருவராய் அவர் எதிர்கொண்ட விதம் அவர்மீது ஒரு தனியான மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. விவசாயப் பின்னணியில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னதும், எங்கள் தோட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அடுத்த வாரமே வந்திருந்தார். பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். மார்க்சியப் பார்வையில் அவரும் காந்தியப் பார்வையில் நானும் வெகுசில முரண்களையும் பெரும்பாலும் ஒத்த நோக்கும் கொண்டிருந்ததாகவே உணர்ந்தேன். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியமான உணவு சார்ந்ததாகவோ, தொழில்நுட்பமாகவோ மட்டும் குறுகிவிடக்கூடாது, ஒரு சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக அமையவேண்டும் என்கிற புள்ளியில்தான் நாங்கள் சந்தித்தோம் என்று நினைக்கிறேன். இந்த அம்சத்தை மிக அழகாக நாவலின் பிற்பகுதியில் வளர்த்து எடுத்திருக்கிறார். ஒரு சிறு புள்ளி, ஒரு தேர்ந்த படைப்பாளியின் கைகளில் எப்படி ஒரு அழகான சிற்பமாக மாறுகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது ஒரு பேரனுபவம் தான்.

DSC_2932
முகிலினி ‘உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு’ என்று முருகவேள் முன்னுரையிலேயே இந்நாவலை அடையாளப்படுத்துகிறார். அதிலும் அண்மைக்கால வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலில், புனைவு எது, உண்மை எது என்கிற குறுகுறுப்பு வாசகனுக்கு இருந்துகொண்டே இருக்கும். புனைவு மிகுந்தால் நம்பகத்தன்மை சிதைந்துவிடும்; வரலாறு மிகுந்தால் வாசிப்பின்பம் குறைந்துவிடக்கூடும். இரண்டும் நேர்ந்துவிடாமல், 487 பக்கங்கள் பெரும்பாலும் விறுவிறுப்பாக நகர்கின்றன.

ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பல இழைகள் நாவலில் வருகின்றன. டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் வரலாறு, கோவையின் தொழிற்சங்க வரலாறு, இந்தி எதிர்ப்பு, திராவிட இயக்கம், சாதியச் சிக்கல்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள், நவீன இயற்கை விவசாயத்தின் தோற்றம், ஓர் இளம் வழக்குரைஞனின் வாழ்க்கை, பழங்குடியினர் பிரச்சனைகள் என்று பல்வேறு திரிகள்; இவையனைத்தும் கோவை மாவட்டத்தின் அறுபது ஆண்டுகால மாற்றத்தைச் சித்தரிப்பனவாகவும் அமைந்துவிடுகின்றன; ஒருவகையில் மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தை விவரிப்பதாகவும் கொள்ளலாம்; நம் காலத்தின் முக்கியமான பொருளாதார, சுற்றுச்சூழல் சித்தாந்தங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், மோதல்களையும் முரண்களையும் சமரசங்களையும் காட்சிப்படுத்தும் படைப்பாகவும் முகிலினியைப் பார்க்கலாம். எல்லாத் திரிகளையும் இணைத்து நொய்யல் நதியும், முகிலினி என்ற செல்லப்பெயருடன் பவானியும் நாவல் முழுவதும் ஓடுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டுவிட்ட என் தாத்தா மரணமடைவதற்குச் சில மாதங்கள் முன்னால் நொய்யல் நதிபற்றி என்னோடு நீண்ட நேரம் பேசினார். நொய்யலிருந்து குறிச்சிக் குளத்திற்கு (அது ஒரு தாசியால் நிர்மாணிக்கப்பட்டதால், தாசி குளம் என்று அறியப்பட்டது என்றார்) நீர் பாயும் வழித்தடத்தில் தான் அவரது வயல் இருந்தது. நெல் பயிரிட்டிருக்கிறார். நொய்யல் நதிமீது 32 சிறு அணைகள்  இருந்ததாகச் சொன்னார். இருட்டில் கைக்குக் கிடைத்த குமுதத்தையோ விகடனையோ எழுத்துக்கூட்டி உரக்கப் படிப்பார். நிறையப் படித்துவிட்டதாய் நினைத்திருந்த எனக்கு நொய்யல் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. என் தாத்தா பெயரும் ராஜு. நொய்யலை நேசித்த முகிலினியின் ராஜு என் தாத்தாவின் அடுத்த தலைமுறைதானெனினும், அவர்களது நொய்யல் அனுபவங்கள் ஓரளவு ஒரே மாதிரி இருந்திருக்கக்கூடும். என் அப்பாவும், தன் ஒரே பள்ளிச்சீருடையைத் துவைத்துக்கொண்டிருந்தபோது, நொய்யலின் ஓர் அணைமீதிருந்து விழுந்து காவிரியில் கலந்திருக்கவேண்டியவர்தான்; எப்படியோ பிழைத்துக்கொண்டார். முருகவேளின் நொய்யல் பழைய குடும்ப நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருந்தது.

இன்றைக்குப் பெரும் சிதைவை உருவாக்கும் பல தொழில்நுட்பங்களை, விடுதலைக்குப் பின்னான ஆரம்ப கட்டத்தில் அறிமுகப்படுத்தியவர்களை மிக எளிதில் கொடியவர்களாய், சதிகாரர்களாய்ச் சித்தரித்துவிடும் அபாயம் உள்ளது. பலரும் இன்று அதைச் செய்து கொண்டும் இருக்கிறோம். ஆனால், கஸ்தூரிசாமியையும், சௌந்திரராஜனையும், சௌதாமினியையும் முருகவேள் கருப்பு வெள்ளையில் காட்டிவிடவில்லை. தொழிற்சங்கப் போராளியான ஆரானைப் படைத்துள்ள அதே அக்கறையோடும் கவனத்தோடும் கரிசனத்தோடும்தான் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான இவர்களையும் படைத்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில், உலகம் முழுவதும் நவீனத் தொழில்நுட்பத்தின் மீது ஒரு விமர்சனமற்ற ஈர்ப்பு இருந்திருக்கிறது. இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இதில் பெரிய மாறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. வளரும் மக்கள் தொகையையும், அதைவிட வேகமாக வளர்ந்துவந்த மக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அதி நவீன தொழில்நுட்பத்தாலும் விஞ்ஞானத்தின் பாய்ச்சலாலும் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை அன்றைய தலைமுறைக்கு முழுமையாக இருந்திருக்கிறது. நேருவும் காமராஜரும் திராவிட இயக்கங்களும் அன்றைய இடதுசாரிகளும் முதலாளிகளும் முகிலினியில் இந்த நம்பிக்கையைப் பிரிதிபலிக்கும் வகையில் வருகின்றனர். அதற்கு எதிர்க்குரல் காந்தியிடமிருந்தும் குமரப்பாவிடமிருந்தும் கிளம்பின. தாகூருடையது அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும்  ஒலித்த இன்னொரு மாற்றுக்குரல் (முருகவேள் தாகூருக்கும் காந்திக்குமிடையில்  அடிப்படையான வேறுபாடுகள் இருந்ததாக நினைக்கிறார். நான் அடிப்படையான ஒற்றுமைகளும் வழிமுறைகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க முரண்களும் இருந்ததாகவே நோக்குகிறேன்). இந்த மாற்றுக்குரல்களின் மெல்லிய எதிரொலியையும் முகிலினியில் கேட்கலாம். வரைமுறையற்ற தொழில் வளர்ச்சியின் போதாமைகளுக்கும் பெரு நிறுவனப் பேராசைகளுக்கும் எதிரான வலுவான குரலை எழுப்புகிறது இயற்கை – மாசுபட்ட முகிலினியின் சீற்றமாய்.

இத்தகைய தொழில் வளர்ச்சிக்கு எதிராகவும் மாற்றாகவும் எழும் சுற்றுச்சூழல் போராட்டங்கள், இயற்கை வேளாண்மை சார்ந்த தனிநபர் முயற்சிகள், பிற மாற்றுகளுக்கான தேடல் என்று சித்தாந்தங்களைத் தாண்டிய அடுத்த கட்டத்திற்கு இளம் வழக்குரைஞர் கௌதம் வாயிலாக முகிலினி பயணிக்கிறது. அமெரிக்காவிலிருந்து திரும்புகிற இரு இளைஞர்கள் மூலமாய் மேலும் இரு எதிர்நிலைகளை முருகவேள் படைக்கிறார். டெக்கான் ரேயானைத் தோற்றுவித்த அதே குடும்பத்தைச் சார்ந்த ராஜ்குமார் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை வியாபார லாபத்திற்குப் பயன்படுத்துகிறான். துணையாக நாமறிந்த பல கார்ப்பரேட் சாமியார்களின் சாயலில் ஆஸ்மான் ஸ்வாமிகள். அதே வேளையில் உண்மையான தேடலில் தன் வாழ்வையே சோதனைக்கூடமாக்கிக் கொள்கிற திருநாவுக்கரசு. இயற்கை வேளாண்மையின் நோக்கங்களும் கிராமப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அதன் இடமும் அதன் போதாமைகள் குறித்த ஐயங்களும் பல விவாதங்கள் மூலமாக வலுவாக வெளிப்படுகின்றன.

இடையில் ஜான் க்ரிஷாம் நாவல்களின் விறுவிறுப்போடு ஒரு தனித் திரி நாவலில் பிரிகிறது. மூடப்பட்ட ஆலையில் கொள்ளை, வாகனங்களின் துரத்தல் காட்சி, நீதி மன்ற விவாதங்கள் என்று திடீரென்று வேறொரு தளத்திற்கு திசைமாறுவது போலிருந்தது. இது அவசியம்தானா என்கிற கேள்வியும் எழாமலில்லை. ஆனால், இந்தத் திரியையும் நாவலின் மையமான தேடலோடு அழகாக இணைத்து விடுகிறார் முருகவேள். தொழில் வளர்ச்சியால் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் எதற்கு நகர்கிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள் என்பதன் தேடல் இந்த வழக்கின் மூலமாக நிகழ்கிறது.   ‘ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு அவர்கள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றமும் சாட்டுவது நியாயமானது அல்ல. இந்த அணை கட்ட உழைத்தவர்கில் இவர்களின் முன்னோர்களும் உண்டு. அந்த அணை டெக்கான் ரேயானுக்கும் பயன்பட்டது. அதற்கு நிதியுதவி அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இந்த கம்பெனி ஏற்படுத்திய பேரழிவில் பங்குண்டு. அடித்த கொள்ளையிலும் பங்குண்டு. இவர்கள் நஷ்டப்படக்கூடாது என்று அரசு முனைந்து நிற்கிறது. ஆனால் எல்லாவற்றையும் இழந்த இந்த மக்கள் நீதி மன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கிறார்கள்,’ என்று பல நெருடலான வாதங்களை இந்த வழக்கின் வாயிலாக முன்வைக்கிறார் முருகவேள்.

திருநாவுக்கரசு பாத்திரம் நான் எனது அண்மைக்காலப் பயணங்களில்  சந்தித்த பல உண்மை மனிதர்களை நினைவுபடுத்துகிறது. தேவைகளைக் குறைப்பதும், தற்சார்பை அடைவதுமே ஒரு நிலையான தீர்வுக்கான வழி என்கிற தரப்பின் பிரதிநிதியாய்த் திருநாவுக்கரசு வருகிறான். ‘தமிழகம் முழுவதும் அறிவு ஜீவிகள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்து பரிசோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆயுதப் புரட்சியின்போது செய்யப்படுவதைப் போன்றே இந்த சோதனை முயற்சிகளிலும் தியாகங்கள் செய்யப்படுகின்றன,’ என்கிற சொற்கள் நானறிந்த பலருக்கும் நெருக்கமாகப் பொருந்துகிறது.

டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ், இயற்கைக்குத் திரும்புவோம் போன்ற அமைப்புகளாக டெக்கான் ரேயான் மறு அவதாரம் எடுக்கிறது.

ராஜூவும் ஆரானும் தொடங்கிய தேடலை கௌதமும், திருநாவுக்கரசுவும் தொடர்கிறார்கள்.

நொய்யல் சாக்கடையாகிவிட்டாலும் முகிலினியின் கலகலவென்ற சிரிப்போடு நாவல் முடிகிறது.

மிகுந்த சமூக அக்கறையுடனும் நிறைந்த இலக்கிய நேர்த்தியுடனும் ஒரு சிறப்பான படைப்பினை அளித்துள்ள முருகவேளுக்கு வாழ்த்துகள்.

நூல்: முகிலினி
ஆசிரியர்: இரா.முருகவேள்
பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்

பி.கு.
நாவலின் முன்னுரையில் தோழர் முருகவேள் எங்களைப் பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
‘இந்நூலை முடிக்கும் தருவாயில் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடுபவர்களின் நோக்கம் பற்றிய குழப்பம் ஏறக்குறைய ஒரு பெரிய மனத்தடையை ஏற்படுத்திவிட்டது. அந்த நேரத்தில் நண்பர் வெ.சுரேஷ் மூலம் அறிமுகமான நண்பர் கண்ணன், நித்யா ஆகியோருடனான உரையாடல் நல்ல புரிதலை வழங்கியது. கண்ணன் வழங்கிய அறிவார்ந்த, கூர்மையான, அதேநேரம் சுருக்கமான கருத்துகள் இல்லையென்றால் நான் மேலும் பலபக்கங்கள் எழுதி வாசகரின் மதிப்பிற்குரிய நேரத்தை வீணடித்திருக்கக்கூடும்.’

இவ்வளவு பெருந்தன்மையுடன் அவர் இப்படி எழுதியிருக்காவிட்டாலும், இதே மாதிரியான ஓர் உணர்வைத்தான் முகிலினி எனக்கு அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.


நிலம் சுமந்தலைபவன் – சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி

மே 30, 2016

வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா ஆகியோருடன் எழுத்தாளர் சு.வேணுகோபாலிடம் பதாகை இணைய இதழுக்காகச் சென்ற ஆண்டு எடுத்த பேட்டி.


சு.வேணுகோபால் – இருபது ஆண்டுகளாகப் பல காத்திரமான இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வருபவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற தனது முதல் நாவலான ‘நுண்வெளி கிரகணங்கள்’ மூலமாக இலக்கிய உலகில் அறிமுகமான போதும், இன்னமும், தீவிர இலக்கியங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களின் சிறிய வட்டத்துக்குள் மட்டுமே பெரிதும் சிலாகிக்கப்படுபவராக இருக்கிறார். வேணுகோபால் விவசாயப் பின்னணியில் நிறையப் புனைவுகள் எழுதியுள்ளார் என்பதை மட்டுமே அவரைப் படித்துள்ள வாசகர்கள் அறிவார்கள். ஆனால் வேணுகோபால் யார், அவரது பின்னணி என்ன, அவரது ரசனை எத்தகையது, அவரது இலக்கியப் பார்வை என்ன, பயணம் எத்தகையது, அவரது ஆதர்சங்கள் யார் என்பது குறித்து அறிந்தவர்கள் மிகச் சிலரே. இணைய உலகுக்கு அவரது அறிமுகம் முற்றிலுமாகக் கிடையாது என்றே சொல்லலாம்; இணைய உலகின் அறிமுகம் அவருக்கும் கிடையாது. அவரை இணைய இலக்கிய வாசகர்களுக்கு விரிவான முறையில் அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நேர்காணலை எடுத்தோம். நம்மிடையே உள்ள ஒரு முக்கியமான படைப்பாளி, சு.வேணுகோபால் அளிக்கும் முதல் விரிவான நேர்காணல் இதுதான் என்பது எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது; அதேவேளை,இந்த முதல் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வேணுகோபால் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று பல இலக்கிய வகைமைகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ‘களவு போகும் புரவிகள்’, ‘வெண்ணிலை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், பால்கனிகள், கூந்தப்பனை, திசையெல்லாம் நெருஞ்சி ஆகிய குறுநாவல் தொகுப்புகளும், நுண்வெளி கிரகணங்கள், நிலமென்னும் நல்லாள், ஆட்டம் ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன. அவரது எழுத்து உக்கிரமாகவும் இருக்கும்; மென்மையாகவும் இருக்கும். அப்பட்டமாய் முகத்திலும் அறையும்; கூர்ந்து கவனித்தால் மட்டுமே புலப்படும் நுட்பங்களோடும் இருக்கும். கிராமிய வாழ்க்கையின் அவலங்களையும் அழகுகளையும் ஆழங்களையும், நகரத்துக்குப் பெயர்ந்துவிட்டவர்களின் போக்குகளையும் பல்வேறு தளங்களில் அவர் எழுதியுள்ளார்.

இந்த நேர்காணலை நடத்திய நண்பர்களான வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா, கண்ணன் ஆகியோர் கொண்ட எங்கள் குழுவுக்கு வேணுகோபால் ஏற்கனவே மிகவும் பரிச்சயமானவர்தான். கோவையில் உள்ள தியாகு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் நிகழும் இலக்கிய உரையாடல்களில் அடிக்கடி எங்களோடு வேணுகோபாலும் இணைந்துகொள்வார். ஒரு படைப்பாளியாக அவரை நாங்கள் நேசிக்கும் அளவுக்கு, ஒரு நண்பராக ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நேசத்தோடும் மிகந்த அக்கறையோடும் நடந்துகொள்பவர் அவர்.

அத்தகைய ஒரு நண்பரோடு, அதே தியாகு நூலகத்தில் ஒரு விரிவான நேர்காணலை நிகழ்த்த முடிந்தது அனைவருக்கும் இனிமையான அனுபவம். ஐந்து மணிநேரம் தொடர்ந்து நிகழ்ந்த இந்த உரையாடலின் பெரும் பகுதியைப் பதிவு செய்துள்ளோம். வேணுகோபால் சுவாரசியமான பேச்சுக்காரர். செந்தமிழும், போடி வட்டாரத்து கிராமியப் பேச்சுவழக்கும், நகரத்துப் பாதிப்பும் மாறிமாறி இயல்பாக அவரது பேச்சில் வெளிப்படும். ஏற்ற இறக்கங்களுடன், உணர்ச்சிப் பரவசத்துடன், அவ்வப்போது நாடகீய பாவனைகளுடன் பேசக்கூடியவர். அவரது பேச்சின் சுவையை எழுத்தில் முழுமையாய்க் கொண்டுவருவது சிரமமானதுதான். இலக்கியத்தின் மீது, குறிப்பாய் தி.ஜானகிராமன் மீது, பெரும் காதல் கொண்டுள்ளவர் என்பதை நாங்கள் அறிவோம். அதைவிட ஆழமாய்த் தன் மண்மீதும் மனிதர்கள்மீதும் அளப்பிலாப் பேரன்பு கொண்டவர் என்பதும் அறிவோம். அவரது ஊரும் நிலமும் அவர் எங்கிருந்தாலும் அவருள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நிலமென்னும் நல்லாள் நாவலுக்கு அவர் முதலில் வைக்க விரும்பிய தலைப்பு, ‘நிலம் சுமந்தலைபவன்’ என்பதையும் அறிவோம். அவரும் அவர் சுமந்துகொண்டு இருக்கும் நிலமும், இலக்கியக் கனவுகளும் பார்வையும் இந்த நேர்காணலில் வெளிப்படும் என்று நம்புகிறோம்.

இனி நேர்காணல்.