இருசுடரொடு இயமானன்

ஏப்ரல் 10, 2021

மகள் மகிழ்மலர் ஒரு திருவாசகப் பதிகம் பாடிக்கொண்டிருந்தாள். பெரும்பாலான திருவாசகப் பாடல்களை மோகனத்தில்தான் (முல்லைப்பண்) பாடுவார்கள். இப்பாடல் அவளுக்குப் புதிய ராகமான ஹம்சநாதத்தில் அமைந்துள்ளது.

போற்றிஎன் போலும் பொய்யர்
    தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
    நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
    புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்று இயமானன் வானம்
    இருசுடர்க் கடவு ளானே

(திருவாசகம் – திருச்சதகம், 7: 62-63)

இதில் வந்த இயமானன் என்ற சொல் அடிக்கடி கேட்டுப் பழகியதென்றாலும் வேறு எங்கு வருகிறது என்பது உடனே இருவருக்கும் பிடிபடவில்லை. சிறிது ஆராய்ச்சிக்குப்பின் திருவாசகத்திலேயே சிவபுராணத்திலும் ‘வெய்யாய்! தணியாய்! இயமானனாம் விமலா’ என்ற வரி உண்டு என்பது நினைவுக்கு வந்தது. ‘பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி,’ என்று மகிழ் பாடலைத் தொடர்ந்தாள். [பாடும்போது ஏனோ இயம்+ஆன+நாம் என்று பிரித்து மனதில் பதித்திருந்ததால் சட்டென்று நினைவு வரவில்லை என்றாள்.]

இச்சொல்லுக்குப் பொருள் தேடிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக்குச் சென்ற போது, அதற்கு ஆன்மா, உயிர், யாகத்தலைவன் ஆகிய பொருள்கள் தரப்பட்டிருந்தன. இயமானனாம் விமலா என்று தொடரில் இச்சொல்லுக்கு யாகத்தலைவன் என்ற பொருளைப் பேரகராதியில் தருகிறார்கள். பேரகராதியில் இயமானனுக்கு வேர்ச்சொல் வடமொழியின் எஜமான என்றும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எஜமானவின் வேர்ச்சொல் இயமானன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு பதிகங்களுக்கும் thevaaram.org பொழிப்புரையில் இயமாமனுக்கு ஆன்மா என்ற பொருளையே கொண்டுள்ளனர்.

பேரகராதியில் மணிமேகலையிலுள்ள ஒரு சொற்றொடரும் சுட்டப்பட்டிருக்கவே, கைவசமிருந்த மணிமேகலை நூலில் தேடியதில் ஒரு நெருங்கிய தொடர்பு தென்பட்டது.

இறைவன் ஈசனென
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
‘பரசும்நின் தெய்வம் எப்படித்து?’ என்ன –
இருசுடரோடு இயமானன் ஐம்பூத மென்று
எட்டு வகையும், உயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும்….

(மணிமேகலை; 27: 89).

சாத்தனாரின் சொல்லாட்சியான ’இருசுடரொடு இயமானன்’ திருவாசகத்திலும் அதே சூழலில் எடுத்தாளப்பட்டுள்ளது – ‘காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவு ளானே’. இயமானன், இருசுடரான சூரியன், சந்திரன், ஐம்பூதங்கள் ஆகிய எட்டு மூர்த்திகளாக உள்ளாய் என்பதே இதில் பொதிந்துள்ள கருத்து.

‘நின் கருணை வெள்ளப் புதுமது’ என்ற உவமையும் அதன் சொற்சுவையும் சொக்கவைக்கின்றன.

திருமுறையின் பிற இடங்களிலும் இயமானன் இதே சூழலில் பயன்படுத்தப்படுகிறது. சைவத்தில் இது முக்கியமானதொரு கருத்தாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மணிமேகலையில் சைவவாதியின் கூற்றாகவே இது வருதலால் அதற்கு முந்தைய நூல்களிலும் இச்சொற்சேர்க்கை வந்திருக்கக்கூடும்.

அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் – அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

(காரைக்கால் அம்மையார், 11ம் திருமுறை: 004 அற்புதத் திருவந்தாதி பாடல் 21)

தேவார மூவருக்கும் முன்னே இருந்த காரைக்கால் அம்மையாரின் காலம் மணிமேகலைக்கு முந்தையதாக இருக்ககூடும். (தேவாரம் இணையதளத்தில் வி. சா. குருசாமி தேசிகர், ஞானசம்பந்தர் காரைக்கால் அம்மையாரைப் பாடியிருப்பதைச் சுட்டி, இவரது காலம் ‘கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்’ என்கிறார். மணிமேகலை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.)

அப்பர், சுந்ததரர் ஆகியோரும் ஒருவரையொருவர் விஞ்சும் அழகான பாடல்களில் இயமானனைக் கையாண்டுள்ளனர்.
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
.
(திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, 94: பாடல் 1)

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
    சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
    தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
    முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே

(சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை, 9:பாடல் 3)

சுந்தரர் ஞாயிற்றுக்கு சவிதா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை’ என்பது எத்தனை எழில்மிகு வரிகள். [கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரை]

எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்

(அருணந்தி சிவாசாரியார், மூன்றாம் திருநெறி, பதிகம் 3-இருபா இருபது 2:14-15)

ஒரு சொல்லுக்குப் பின்னான பயணத்துக்குப்பின்னர், மகிழ்மலர் நன்கறிந்த நாஞ்சில் நாடன் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு சொல்லைத் தேடியும் எத்தனை முனைப்புடன் உழைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தமிழினியில் ‘யானைபோம் வழியில் வாலும் போம்’ என்ற கட்டுரையைப் படிக்கக் கொடுத்தேன். நாஞ்சில் நாடன் பெரிதும் அச்சுப்பிரதிகளைச் சார்ந்திருப்பவர். விசைப்பலகையின் ஒற்றைத் தட்டில் நமக்குப் பல செய்திகள் இணையத்திலிருந்து வந்துவிழுகின்றன. அச்சுப்பிரதிகள்கூட இல்லாத காலத்தில் நிகண்டுகளையும் அகராதிகளையும் தொகுத்தவர்களை நினைக்க மலைப்பாகத்தான் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்றான ‘இசையில் தொடங்குதம்மா’வும் ஹம்சநாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாம். தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் என்ற அப்பரின் சொற்றொடரும் மனதில் எழுந்தது.


ஊரடங்கில் இன்னொரு நாள் – 2

ஏப்ரல் 23, 2020

தேங்காய் எண்ணெய் ஆட்டச் சென்றிருந்தோம். எங்கள் ஊரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பினைத்தாண்டிச் செல்வதற்காக முன்பே அங்கிருந்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்போனேன். விடிய விடிய அங்கிருக்கிறார்கள். உணவு, நுங்கு என்று பக்கத்து வீடுகளிலிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு பெண்காவலரும் இருந்தார். இருப்பதிலேயே மூத்தவரிடம் கேட்டேன். சிரித்தபடியே போகச்சொன்னார். சிறிது உரையாடிவிட்டுவந்தேன். பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்களுக்குக் கொரோனா வந்துவிட்டதால், மருத்துவமனை மூடப்பட்டுவிட்டதாகவும், பிரசவம் மட்டும் ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். வீட்டுக்குவந்து உடைத்துக் காயவைத்த தேங்காய்க் கொப்பரையை காரில் ஏற்றிக்கொண்டு சென்றோம்.

செக்குக் கடையில் நல்ல கூட்டம். அனைவரும் முகக்கவசங்களுடன் இருந்தனர். தேங்காய் இறக்கிவைத்தபின் காரை அங்கேயேவிட்டுவிட்டு, வீட்டுரிமையாளரின் மின்கட்டணம் செலுத்த, வங்கியில் பணம் எடுக்க, காய்கறி வாங்க என்று ஒரு நடை சென்றோம். ஒரு திருப்பத்தில், வருகின்ற இருசக்கர வாகனங்களிலெல்லாம் கைகளில் போத்தலும் தூரிகையுமாக இருந்த ஒரு காவலர் நிறுத்தி, பச்சைச் சாயம் பூசிவிட்டார். ஏன் எதற்கு என்ற கேள்விகளெல்லாம் பின்னர்தான் கேட்டார். ‘எங்களுக்கும் கணக்குக் காமிக்கணுமில்ல. யாராவதுவந்து ஏன் சாயம் பூசலன்னு கேட்டா நான்தான பதில்சொல்லணும்?’ என்று ஒரு வண்டியோட்டியிடம் கூறிக்கொண்டிருந்தார்.

வாகனங்கள்மீது ஒரு முறை சாயம் பூசிவிட்டால் சாலையில் ஒரு வாரத்துக்கு அவ்வாகனத்தை ஓட்டமுடியாதாம். அடுத்த வாரம் வேறு நிறச் சாயமாம். எண்ணெய் ஆட்ட வந்த ஒரு வயதானவர் இதற்குப் பயந்துகொண்டு மதியம் இரண்டு மணிக்கும் வீட்டுக்கு உணவுண்ணச் செல்லாமல் வேலைமுடியக் காத்துக்கொண்டே அமர்ந்திருந்தார். ‘எல்லாம் இந்த மைனர்களால வர்ற பிரச்சனை. நேத்து மருந்துவாங்கப் பொள்ளாச்சி போயிருந்தேன். அறுபது எழுபது பைக்ல இந்த மைனர்க அங்கயும் இங்கயும் பறந்துகிட்டிருக்கானுக. அப்புறம் போலீஸ் இப்படி எல்லாத்தையும் தடுக்கமாம என்ன பண்ணுவாங்க,’ என்றார்.

விவசாயப் பணிக்கு வருகிறவர்கள் ஒருமுறை மாட்டிவிட்டால் பிறகு அந்த வண்டியை ஓட்டமுடியாதே என்று கேட்டேன்.

‘ஆமாங்க. பாவம் அதுக்குப் பயந்துட்டே யாரும் வேற கிராமத்துக்கு வேலைக்குப் போக மாட்டேங்கிறாங்க.’

பக்கத்து வளாகத்தில் மும்முரமாகத் தேங்காய் மட்டை உரித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்றார் அவர்.

முந்தைய நாள் எங்கள் ஊர்த் தேங்காய் வியாபாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியூரிலிருந்து யாரும் வர அஞ்சுவதால் ஆள் கிடைக்காமல் வேலை மெதுவாகச் செல்வதாகத்தான் கூறியிருந்தார்.

கடையில் எண்ணெய் ஆட்டுவதற்கு எங்களுக்கு முன் வந்திருந்த இரு இளைஞர்கள் இருநூறு கிலோ கொப்பரை கொண்டுவந்திருந்தார்கள். மருந்திடாத காய்கள் வீட்டுப்பயன்பாட்டுக்கு, மருந்திட்ட காய்கள் தோட்டத்தில் பணிசெய்பவர்களுக்கு என்று பிரித்துவைத்திருந்தனர். அவர்களுக்கு ஆட்டிமுடிக்கவே மணி மூன்றாகிவிடும் போலிருந்தது. மகள் வேறு வீட்டில் மதிய உணவு உண்ணாமல் காத்திருப்பாள். காவல்துறைக் கெடுபிடியும் 1 மணிக்குமேல் அதிகமாக இருக்கும். என் மனைவி அந்த இளைஞர்களிடம் பேசிப் பாதியில் எங்கள் தேங்காயை ஆட்டிக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளவைத்துவிட்டாள். அவர்கள் தயவில் இரண்டு மணிக்கு எங்கள் வேலை முடிந்துவிட்டது. அவர்களிருவரது உணவும் மேலும் ஒரு மணிநேரம் தாமதப்படும்.

காற்றோட்டமில்லாத அறையில் எண்ணெய் ஆட்டிக்கொண்டிருந்தவர் வெயில் தாளாமல் மயக்கம் வருவதாகக் கூறினார். நல்லவேளையாக எங்களிடம் குடுவையில் கொஞ்சம் சூடான (பாலில்லா) தேநீர் இருந்தது. குடித்துவிட்டுத் தெம்பாக வேலைசெய்தார். நித்யாவும் கூடமாட உதவிசெய்தாள். அவர் கோவையில் ஒரு பல்மருத்துவரிடம் தோட்டவேலை செய்திருக்கிறாராம். நித்யாவும் பல்மருத்துவர் என்றறிந்தவுடன் கூடுதல் பிரியத்துடன் வேலை செய்தார். கொப்பரையைச் சக்கையாகப் பிழிந்து நிறைய எண்ணெய் எடுத்தார். புண்ணாக்கை அவர்களுக்கே கொடுத்துவிட்டதால் ஆட்டுக்கூலி கிடையாது. வீடு திரும்பினோம். இனி இரண்டு மூன்று நாட்கள் எண்ணெயை இளம்வெயிலில் காயவைத்து, வடிகட்டினால் முடிந்தது. மாலையில் மழைமேகங்கள் கூடின. மின்னலும் இடியுமாக இருந்தது. ஆனால் கருமுகில்கள் தென்மேற்காய் நகர்ந்தபோது மழை வரப்போவதில்லை என்று தெரிந்தது. எப்படியோ மழைக்குமுன் ஒருவழியாக தேங்காயெண்ணெய் வேலை முடிந்தது. ஆனால், இப்பட்டத்தில் சோளம் கடலை என்று விதைத்தவர்கள் எல்லாருக்கும் பெரும் இழப்புதான். முதல் ஈரத்தில் உழவு ஓட்ட வண்டிகிடைத்தவர்கள் மட்டும் ஓரளவு பிழைத்துக்கொள்வார்கள்.

இந்த முறை தேங்காய்க் கொப்பரை காயவைக்கும்போது எப்போதுமில்லாமல் ஒரு புதிய பிரச்சனை. தவளைகள். இவ்வாண்டு ஏராளமான தவளைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஆங்காங்கு மூத்திரமும் மலமும் கழித்துவிடுகின்றன. ஆரம்பத்தில் நான் மகளிடம் அவளது நாய்கள்தாம் அசுத்தப்படுத்துகின்றன என்று சண்டைப்போட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அவள்தான் தவளைகள் அவ்வாறு செய்வதைக் கண்டுபிடித்தாள். அவளுக்குப் பிடிக்காத விலங்கினமாகத் தவளைகள் ஆகிவிட்டன. இரவு குளிக்கப்போனால் குறைந்தது பத்துத் தவளைகள் குளியலறையில் இருக்கின்றன. விரட்டுவதும் கடினம். சுவரோடு அப்பிக்கொள்கின்றன. மிகவும் விரட்டி அவை குதித்தால், இவளும் குதிக்கிறாள். அப்படியே ஒரு மூலையில் இருக்கவிட்டுக் குளித்துவரவேண்டியதுதான். வெயிலில் காயப் பரப்பிய தேங்காய்களை மழையில்லாதபோதும் இரவில் சுருட்டி வைக்கவேண்டியதாயிற்று. இல்லையெனில் தேங்காயெண்ணையோடு தவளை மூத்திரமும் கலந்தே இருக்கும் அபாயம் இருந்தது. நான்கு நாட்களும் காலையில் மறுபடியும் (எப்போதும்போல்) கடைபரப்பி, ஒவ்வொரு தேங்காய்த்துண்டாய் வெண்புறம் மேல்நோக்கித் திருப்பிவைக்கவேண்டியிருந்தது. பகலில் அணில்கள், நாய்கள், காக்கைகள், தவிட்டுக்குருவிகள் ஆகியவற்றிடமிருந்து காக்கவேண்டும். உச்சிக்குப்பின் வெயிலே பெருமளவு அந்த வேலையைச் செய்துகொண்டது.


ஊரடங்கில் ஒரு நாள்

ஏப்ரல் 23, 2020

17-4-2020

கிணற்றிலிருந்து வரும் குழாய் இணைப்பு விட்டுப்போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அழைத்துப்பார்த்த குழாய்நுட்பர் [ப்ளம்பர் ] வருவதாகச் சொல்லிச்சொல்லி வரவேயில்லை. இரண்டு மழை கிடைத்ததால் நானும் அதிகம் கவலைப்படவில்லை. இப்போது ஈரம் காய்ந்துவிட்டது. வெயில் கொளுத்துகிறது. இன்றைக்கு நாமே ஒட்டிவிடலாம் என்று இரண்டு கிராமம் தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று குழாய் ஒட்டும் பசைவாங்கிவர நானே கிளம்பிவிட்டேன். எங்கள் ஊர் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நுழைவாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, எந்நேரமும் மூன்று நான்கு காவல்துறையினர் அமர்ந்திருக்கின்றனர். காரில் செல்ல வாய்ப்பில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் பேச்சு.

மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கைக்குட்டையையும் இரண்டு ரப்பர் வளையங்களையும் கொண்டு நானே ஒரு முகக்கவசம் செய்துகொண்டேன். சின்னதாக இருப்பினும் மூக்கு வாயினை நன்றாக மூடுகிறது.

கடை மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ளது. யாருமற்ற சாலையில் முகமூடியோடு நடந்துசெல்வது வினோதமாகத்தான் இருந்தது. கிழக்கு நோக்கி நடந்துகொண்டிருந்ததால், காலை நேரத்து இளம் வெயில் முகத்தில் நேராக விழுந்தது. ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் நான் அணிந்திருந்த கண்ணாடி ஈரமாகிக் கண்ணை மறைத்தது.

பாதிவழியில் ஒரு மரத்தடியில் புதிய சாலையோரக் காய்க்கடை முளைத்திருந்தது. நிறையக் காய்வகைகள் ஓரளவு புதிதாக இருந்தன. திரும்பும் போது வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

கடைக்குச் சென்றதும் ஏக வரவேற்பு. அக்கடைக்கு எதிரில் இரண்டாண்டுகள் குடியிருந்திருக்கிறோம். கடைக்காரர் ஜப்பார் (ஜாஃபர்) பொருள்கள் வாங்க வெளியில் சென்றிருந்தார். அவரது மனைவி, மக்கள், மருமக்கள் எல்லாரும் இருந்தனர். காபி வேண்டுமா தேநீர் வேண்டுமா ஜூஸ் குடியுங்கள் என்று உபச்சாரம் பலமாக இருந்தது. பழமாவது சாப்பிடுங்கள் என்றார்கள். நான் வாங்க வந்த பசை என்னவோ 16ரூபாய்தான். மகளுடைய செருப்பினை நாய்க்குட்டிகள் கடித்துப்பிய்த்துவிட்டன. ஊரடங்கின் போது செருப்பெதற்கு என்று அவை நினைத்திருக்கலாம். அவளுடைய அளவுக்கு அங்கு செருப்பும் இருந்தது. 100 ரூபாய், உங்களுக்கு எழுபதுக்குத் தருகிறேன் என்றார் கடைக்காரம்மா. அவற்றுடன் இரண்டு சோப்புகளும் வாங்கிக்கொண்டேன்.

எதிர் வீட்டில் இருப்பவர் ஊர்ஊராக நெகிழி வாளிகளையும் பிற சாமான்களையும் எடுத்துச்சென்று விற்பவர். மகன் சுவர்ச்சாயம் பூசுபவர். இருவரும் வெளியில் செல்ல வழி இல்லை. எப்படியோ சமாளிக்கிறோம் என்றார்.

வழியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டேன். அங்கும் எங்களிடம் படித்த பையன் துணைக்கிருந்தான். 120 ரூபாய்க்கு ஐந்தாறு நாட்களுக்குத் தேவையானவை கிடைத்தன.

வீட்டுக்கு வந்ததும் கைக்குட்டையைக் கழற்றித் துவைத்துக் காயப்போட்டபிறகுதான் இதை எந்நேரமும் அணிந்துகொண்டு பணிசெய்பவர்களின் பாடு புரிந்தது.

நாராயணனை ஐந்து நிமிட வேலைதான் என்று உதவிக்கு அழைத்துக்கொண்டு, தோட்டத்துக்குச் சென்றேன். அவரே குழாய்களை இணைத்து ஒட்டிவிட்டார். குழாய் மீண்டும் பெயர்ந்துவராமல் இருக்கக் குழிதோண்டிக் கம்பு நட்டு அணைப்புக்கொடுத்தார். ஆனால் மோட்டார் ஓட்ட வழியில்லை. மின்சாரம் ஒரு ஃபேஸ் போயிருந்தது. நாளைவரை காத்திருக்கவேண்டும்.

அவர் சென்ற பிறகு தேங்காய்களை எடுத்துப் போட்டேன். ஓரிடத்தில் கீழே விழுந்தேன். கையிலிருந்த தேங்காய் தரையில்பட்டுத் தெறித்து வாய்மீது பட்டதில், உதடு சிறிதே கிழிந்து சற்று நேரம் உதிரம் சொட்டியது. இரு நாட்களாக மகளுக்குக் காலிலும் மனைவிக்குத் தலையிலும் அடிபட்டிருந்தன.

பார்வதி நிலத்தை உழுது விதைத்திருந்த சோளம் இன்னும் பெரிதாக முளைக்கவில்லை. டிராக்டர் கிடைக்கத் தாமதமாகியிருந்தது. நிழலடியில் மட்டும் கொஞ்சம் துளிர்த்திருந்தன. பார்வதிக்கு நாலாயிரம் செலவாகியிருக்கும். இன்னொரு தூறலாவது கிடைக்காவிட்டால் கடினம்தான் என்கின்றனர்.

நாளை தேங்காய் உடைத்து எண்ணெய் ஆட்டலாம் என்றிருக்கிறோம். செக்குக் கடை திறந்துள்ளதாம். மழைக்குமுன் காயவைத்துவிடவேண்டும். காரில் எடுத்துச்செல்வதில் சிரமங்கள் இருக்கலாம். பார்ப்போம்.

மாலையில் மாபி டிக் கொஞ்சம் படித்தேன். மகள் தாகூர் சிறுகதைகள் படித்தாள். அம்மாவோடு வாழைப்பழ கேக் செய்தாள். பின்னர் திடீரென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்றாள். உயிரெழுத்துகள் சொல்லிக்கொடுத்தேன். இணையத்தில் வரிசை உச்சரிப்பு எல்லாம் மாறிமாறிச் சொல்கிறார்கள் – குறிப்பாக ஐ, ஔ, ரி அல்லது ரூ (சின்ன வயதில் க்ரூ என்று படித்த நினைவு). என்ன மொழியோ என்று கிண்டலடித்தாள். நானும் மனைவியும் இரவு முபியில் ஒரு ஜார்ஜியப் படம் [Brother] மெதுவான இணைய இணைப்பில் பார்த்தோம். அவ்வப்போது இரு காட்சிகளுக்கிடையே விழும் இடைவெளிகளில் காரோட்டும் போது சிக்னலில் உறங்குவதுபோலத் தூங்கித்தூங்கி விழித்தேன்.

அவ்வளவுதான். சொல்வதற்கு வேறொன்றும் பெரிதாக இல்லை. ஊரடங்கில் ஒரு நாள் கழிந்தது.


ஊரடங்கும் காவல்துறையும்

மார்ச் 27, 2020

ஒவ்வொரு சிக்கல் வரும்போதும் நாம் ஒரே தவறைச் செய்கிறோம். காவல்துறையினருக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கி அச்சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் இது புதிய சிக்கல்களுக்கே இட்டுச்செல்லும். இட்டுச்சென்றிருக்கிறது.

வெளியில் வருபவர்களையெல்லாம் காவல்துறையினர் அடித்து நொறுக்கவேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை?

விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் ஆடு மாடுகளுக்குத் தீவனம் வைக்கவும் மேய்க்கவும் பால்கறக்கவும் அவரவர் நிலங்களுக்குச் சென்றுதான் ஆகவேண்டும். மருத்துவம் போல், காவல்துறை போல் இதுவும் அத்தியாவசியப் பணிதான். உணவுப்பொருள் விற்பனை அத்தியாவசியம் எனில் உணவு உற்பத்தி எப்படி அத்தியாவசியமாகமற் போகும்.

இவ்வார இறுதிக்குள் எல்லாருக்கும் காய்கறிகள் தீர்ந்துவிடும். கிராமங்களில் ஓரளவு சமாளிக்கலாம் என்றாலும் கூட இன்றைய சூழலில் சந்தைக்கும் நகரத்துக்கும் சென்றுதான் காய்கறிகள் வாங்கவேண்டிய நிலை பல இடங்களிலும் உள்ளது. பலருக்கும் மருந்துகள் தீர்ந்துவிடும். வாங்குவதற்கு வெளியில் சென்றுதான் ஆகவேண்டும். கிராமங்களுக்கெல்லாம் வீட்டு சேவை வந்துசேர்ந்துவிட்டதா?

இன்று பராக்குப் பார்க்கச் செல்பவர்களை அடித்துக் கொல்லுங்கள் என்று நீங்கள் காவல்துறைக்குக் கொடுக்கும் அதிகாரம்தான் பால் வாங்கச் சென்றவரையும் கொன்றிருக்கிறது.

ஒரு காவலர் மனமுடைந்து கண்ணீர் வடித்ததைக் காண நாமெல்லாம் துடித்துப்போகிறோம்.

இன்று பல மாநிலங்களில் இருக்க இடமின்றித் தமது ஊர்களுக்கு நடைபயணமாகவே சென்றுகொண்டிருக்கும் தொழிலாளிகளைக் காவலர்கள் பல்வேறு நூதனமான முறைகளில் துன்புறுத்திக்கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

காய்வண்டிகளை அடித்து நொறுக்கிக்கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

எங்கள் பகுதியில் ஒரு சின்ன தேநீர் கடைக்காரர் கடையைத் திறந்துவிட்டாரென்றும், காவல்துறையினர் வந்து அவரைச் சூழ்ந்து லத்திகளால் அடித்து, கதறக்கதற இழுத்துச் சென்றதாகவும் கேள்விப்படுகிறோம்.

அமைதிக்காலமானாலும் நெருக்கடி நிலையானாலும் காவல்துறையினருக்கு அத்துமீறும் அதிகாரத்தை ஒருபோதும் நாம் வழங்கக்கூடாது.

தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை மட்டும் அவர்கள் எடுக்கட்டும்.

மக்கள் சட்டத்தை மதித்து எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதைவிட அதிகப் பொறுப்புடனும் பொறுமையுடனும் காவல்துறையும் நடந்துகொள்ள வேண்டும்.

கொரோனா சென்ற பிறகும் இந்த தேசத்தில் நாம் உயிர்வாழத்தான் வேண்டும். நம் எல்லா உரிமைகளையும் நாமே தாரைவார்த்துத் தந்துவிடவேண்டாம்.


கொரோனா குறித்த குறிப்புகள்

மார்ச் 27, 2020

18, மார்ச், 2020

பள்ளிகளை மூடியாயிற்று. மாணவர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் பயிலகத்துக்கும் மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராக விடுப்பு கொடுத்தாயிற்று.

ஆனால் பக்கத்து கிராமத்தில் டாஸ்மாக் கடை எப்போதும் போல் ஜெகஜோதியாய்க் காட்சியளித்தது.

இரு வாரங்கள் முன்பு, பயிலக மாணவர்கள் சிலரது வீடுகளுக்கு இரவு வகுப்பு முடிந்த பிறகு சென்றிருந்தேன். ஏனோ சில வாரங்கள் மாணவர்கள் வராமல் பயிலகம் தடைபட்டிருந்தது. அன்றுதான் வந்திருந்தார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்றதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஒருவனது வீட்டில், நடுக்கூடத்தில் அவன் அப்பா மல்லாந்து படுத்துக்கிடந்தார். வாசலில் நாற்காலியிட்டார்கள். அங்கேயே அமர்ந்து கொண்டேன். சத்தமில்லாமல் அந்த மாணவன் வாயிற்கதவைச் சாத்திவைத்தான். பக்கத்து வீட்டிலிருந்தோ கடையிலிருந்தோ தேனீர் கொண்டு வந்தார்கள். பிறரது தந்தையர் அன்று தெளிவாகவே இருந்தார்கள். தாங்கள் படிக்கவில்லை, பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்பது பற்றியே மிகுந்த அக்கறையுடன் பேசினார்கள்.

அடுத்த நாள், “அண்ணா, நேத்து எங்கப்பாவப் பார்த்தீங்களாண்ணா?” என்றான் அவன். “நேத்து ஹால்ல படுத்துட்டிருந்தாரில்ல, அவர்தானே” என்றேன் சங்கடமாக. “ஆமாங்கண்ணா. தினமும் இப்படித்தான்,” என்றான் கூச்சத்துடன். பல சமயங்களில் அவன் வீட்டில் இருந்தால் அவனது அம்மாவை அதிகமாக அடிக்கமாட்டார் என்பதாலேயே அவன் பயிலகத்துக்கு வராமல் இருந்துவிடுவதுண்டு என்று பிற மாணவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்குமேல் என்ன பேச. “சரி, பரவால்ல விடு. நீ தினமும் ஒழுங்கா இங்க வந்துடு.”

சென்ற வாரம் இன்னொரு மாணவன் தனது 5 வயதுத் தங்கையையும் 6 வயது அத்தை பெண்ணையும் அழைத்து வந்திருந்தான். அவனது அம்மா இரு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போயிருந்தார். அத்தை பெண் விருந்துக்கு வந்திருக்கிறாளா என்று கேட்டேன். இல்லை, இனிமேலே அத்தையும் அவரது இரண்டு குழந்தைகளும் இங்கேதான் இருக்கப்போகிறார்கள் என்றான்.
அவனது தங்கை தன் மழலை மொழியில் மேலும் விவரங்கள் தந்தாள். “அண்ணா, அண்ணா, அவங்க அப்பா தினமும் குடிச்சிட்டு வந்து அவங்க அம்மாவப் போட்டு அடிஅடின்னு அடிக்கிறாராம்மா. இந்தப் பொண்ணு ‘இனிமே எங்க அம்மாவ அடிச்சேன்னா நான் இங்க இருக்கவே மாட்டேன்’னு சொல்லிட்டா. இங்கயே வந்துட்டாங்கண்ணா. இனிமே எங்க ஸ்கூல்லதான் படிக்கப்போறா.’

சொல்லிவைத்தாற்போல், இவ்வாரமே இன்னொரு குடிக்கதையையும் கேட்க நேர்ந்தது. ‘எங்க சித்தப்பா எங்க அப்பா வேனை எடுத்துப்போயிருந்தாருங்கண்ணா. லேசா குடிச்சிருந்தாரு. எங்கயோ பலமா மோதி வேன்ல முன்பக்கமெல்லாம் உடைஞ்சு போச்சு. ஈவில்லாம இப்படிப் பண்ணிட்டாரேன்னு எங்கப்பா ரெண்டு நாளா தூங்கவே இல்ல. மில்லுக்கு எப்படி எல்லாரையும் கூட்டிட்டுப் போறது? இனிமே எங்ககூட இருக்கக் கூடாதுன்னு அவங்கள பொள்ளாச்சிக்கே அனுப்பிட்டாங்க.’ கூடவே முன்பு இங்கு வந்துகொண்டிருந்த அவர்களது குழந்தைகளும் சென்றுவிட்டனர்.

கிராமத்தில், (நண்பரின்) தோட்டத்தின் நடுவே, காற்றோட்டமான, சுவரற்ற கூடத்தில் என்ன ஆகிவிடப்போகிறது, பயிலகத்தைத் தொடர்ந்து நடத்தலாமா என்றுகூட ஒரு சபலம் எழத்தான் செய்கிறது. இங்கே வராவிட்டாலும் சிறுசிறு குழுக்களாகச் சேர்ந்துதான் விளையாடப்போகிறார்கள். எனினும், யாருக்கும் நம்மால் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்கி, விடுமுறை விட்டுவிட்டோம். விடுமுறை அறிவித்த பிறகும் நேற்று மாலை எல்லாரும் வந்துவிட்டார்கள். நேற்றைய வகுப்பை மட்டும் எட்டு மணிவரை நடத்திவிட்டு, இன்றுமுதல் கட்டாயம் விடுமுறை, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அனுப்பிவைத்தோம்.

பள்ளிகளை மூடலாம்; ஆனால் அரசுக்கும் குடிமக்களுக்கும் டாஸ்மாக் இன்றியமையாதது என்றாகிவிட்டது. குடிகாரத் தகப்பன்களோடு பல குழந்தைகள் முழுநேரமும் இருக்க நேர்ந்திருப்பதை நினைத்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது.

[நீண்ட பள்ளி விடுமுறையோ பயிலக விடுமுறையோ புதிதல்லதான். பெற்றோர்களின் பங்கை ஆசிரியர்களின் பங்கு விஞ்சிவிடப்போவதில்லைதான். இருப்பினும் இம்முறை இக்கட்டாய விடுப்பால், இவ்விரு வார நிகழ்வுகளால் இந்த உணர்வே மேலோங்குகிறது.

பயிலகம் வருவதை வீட்டிலிருந்து கிடைக்கும் விடுதலையாக நினைப்பவர்கள் எல்லாரும் பள்ளிகளை ஏன் அப்படிக் கருதுவதில்லை என்பதையும் சிந்திக்கவேண்டியுள்ளது.]


20-மார்ச்-2020

சுவரில் எந்த ஆணியும் அசைக்கப்படாமல் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே, மித்ர.


22-மார்ச்-2020

இன்று கிராமத்தில் இருக்கிறோம். நேற்றிரவு ஓரளவு நல்ல மழை. மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்னும் வரவில்லை. இன்று இனி வரும் என்று தோன்றவில்லை. எனது கைபேசியும் மடிகணினியும் விரைவில் அணைந்துவிடும். எனது நேரலைப் பதிவுகளிலிருந்து நீங்கள் தப்பிவிடலாம்.

மழைக்குப் பின்னான அதிகாலைகள் அழகானவை. பறவைகளும் அணில்களும் ஆர்ப்பாட்டமாய் ஒலியெழுப்புகின்றன. கதிரவன் மெல்ல மேலெழுகிறான். நாங்கள் நான்கு சுவர்களுக்குள் இருக்கவேண்டியதில்லை. ஓரெட்டெடுத்து வாசலுக்கு வந்தால், சுவர்களற்ற நிலம் எங்களைச் சூழ்கிறது. நாய்க்குட்டிக்கள் பொன்னனும், பாங்கோவும் கால்மீது தொற்றுகிறார்கள். வெயிலேறியதும், விரைவில் வியர்த்துக் கொட்டப்போகிறது. மின்சாரம், மின்விசிறி இருக்கப்போவதில்லை. மாமரத்து நிழலை நாடிப்போகலாம். கொஞ்சம் படிக்கலாம்.

இன்று நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் நாராயணன் வேலைக்கு வந்துவிட்டார். அவருக்குக் காது கேட்காது; ஆனால் ஊரடங்கைப் பற்றி அறிந்திருந்தார். அதையெல்லாம் பார்த்தால் வேலையாகுமா. ஆடுமாடுகளுக்கு தீவனம் வைக்கவேண்டும். மேயவிடவேண்டும். அதிகாலையிலேயே பால் எடுக்கவருவதாக பால்க்காரர் கூறியிருக்கிறார். அதனால் காலை ஐந்து மணிக்கே வந்து, மாட்டுக்கொட்டகையில் அவரது கயிற்றுக்கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்திருக்கிறார். வழியில் பொள்ளாச்சியில் இருந்து வரும் இன்னொரு விவசாயி, அவரது தோட்டித்திலிருந்து பாலெட்டுத்துச் செல்வதற்கு வரும்போது சந்தித்ததாய்க் கூறினார். ‘அவருக்கு 30 லிட்டர் பால் கிடைக்கும் – அத்தனையும் எப்படி வீணாப் போக விடறது. எடுத்துட்டுப் போய் பொள்ளாச்சில எல்லாருக்கும் ஏழு மணிக்கு முன்னாடி குடுத்துருவார்.’ கிராமத்தில் பிறருக்கு அந்த நல்வாய்ப்பு இல்லை…அவர்களது பால்க்காரர்கள் பால்கறக்க வர இயலாது என்று கூறிவிட்டார்கள். கிராமத்தில் மற்ற வீடுகளுக்குப் பாலை இலவசமாக வழங்கிவிடுவார்கள்.

நமது நற்தலைவர்கள் இந்தியாவின் பாதிக்கும் மேலானோர் இன்னும் கிராமங்களில் இருப்பதை மறந்துவிட்டார்கள். கிராமங்களுக்கென்று தனித்த அணுகுமுறைகள் தேவைப்படும். வீட்டில் குடிகாரப் மகனோடோ தந்தையோடோ அடைந்துகிடப்பதைவிட தோட்டத்தில் தனியே வேலைசெய்யும்போது நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கக்கூடும்.

என் மனைவியும் எங்கள் தோட்டத்துக்கு நடந்து சென்றுவிட்டாள். மழைக்கு அடுத்த நாளை அவள் ஒருபோதும் தவறவிடவிரும்புவதில்லை – கொஞ்சம் களையெடுக்கலாம், எங்கள் தொல்லையின்றி அவளது பறவைகளோடு காலங்கழிக்கலாம். நீங்களென்னவோ நான்தான் எங்கள் வீட்டின் கலகக்காரன் என்று நினைத்திருக்கிறீர்கள்.

(இது ஊரடங்கை மீறுவதற்கான அழைப்பெல்லாம் இல்லை. எங்கள் வழியில் எங்களை நாங்கள் தனிமைப்படுத்திவிட்டோம். எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள். இன்று மட்டுமன்றி, இனி வரும் வாரங்களிலும் இயன்றவரை தனித்திருங்கள். எனது எச்சரிக்கையின்மையால், கரோனாவைத் தாங்கிச்சென்றுப் பிறருக்குப் பரப்பிவிட்டால், ஒருபோதும் என்னை நான் மன்னிக்கமாட்டேன். மளிகை, காய்கறி வாங்க வெளியில் செல்லவேண்டியிருக்கும்போது, இந்த அச்சம்தான் மிகவும் தொந்தரவு செய்கிறது.)


24-மார்ச்-2020

மறுபடியுமா/மீண்டுமா/அடக் கடவுளே/once again?/not again/OMG போன்ற சொற்களும் உணர்வுகளும் இன்று எத்தனை பேர் மனதில் தோன்றின?



அரசியல் குறள்

மார்ச் 27, 2020

நீண்ட நாள்களுக்குப் பிறகு சமகாலக் கட்சியரசியல் பற்றி எதுவும் குறிப்பிடாமல் திருக்குறள் குறித்து இவ்வாரம் ஒரு நீண்ட உரையாற்றினேன். வள்ளுவன் அரசியல் பற்றிச் சொன்ன சில குறள்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546)

இயற்றலு மீட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம். (386)

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (388)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு. (389)

எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்ததாற் றானே கெடும். (548)

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (113)

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து. (551)

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்கும் படை. (555)

குடிதழிக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு. (544)


ஜல்லிக்கட்டு – சில எண்ணங்கள்

ஜனவரி 22, 2020

முகநூல் மூன்றாண்டுகள் முன் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டிருக்கிறது. அப்போது சில போராட்டங்களில் நான் அமைதியாகக் கலந்துகொண்டும், தீவிரமாக எழுதிக்கொண்டும் இருந்தேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் மீதான எனது ஆர்வத்துக்கும் அதற்கான ஆதரவுக்கும் அடிப்படையாக அமைந்தது ஒரு முக்கியக் கூறு:

தமிழ்நாட்டில் மாணவ சமூகத்தை அரசியல்படுத்தி ஒன்றிணைப்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் உதவியது. சுயநலம் சார்ந்து தம் பிழைப்பு, தம் வளர்ச்சி என்றிருந்த ஒரு தலைமுறை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒரு சமூகப் பிரச்சனைக்காகக் களமிறங்கவைத்தது. நான் போராட்டங்களின் போது கண்ட நிகழ்ச்சிகளின் மூலமாக இது ஒரு பரந்த விழிப்புணர்வுக்கும் மாணவர்களிடம் பசுமைச் சிந்தனைக்கும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை கொண்டேன்.

உழவு, சுற்றுச்சூழல் சார்ந்து பெருமளவு ஆர்வத்தை இப்போரட்டங்கள் ஏற்படுத்தத்தான் செய்தன. சில இளைஞர்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடவும் செய்தனர். தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக இதை நாம் காணலாம். ஆனால் இது தன்னளவில் ஓர் இயக்கமாக வளரவில்லை. அதற்கு ஒரு காரணம், போராட்டத்தை ஒருங்கிணைத்த சிலர் அதை அவசரமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஜல்லிக்கட்டு மட்டுமே போராட்டத்தின் நோக்கம் என்றும் அது நிறைவேறிவிட்டது என்று அறிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு விசயங்களைப் பற்றி பேசிவந்தனர். இது அடுத்த நாள் மாணவர்கள்மீது காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய கொடூர வன்முறைத் தாக்குதலுக்கு வழிகோலியது. மீண்டும் அந்த மாணவர்கள் பிற காரணங்களுக்காகப் போராட்டம் செய்வதற்கு அஞ்சும்படியான ஒரு சூழலை உருவாக்கியது. அதனால்தான் தமிழக மாணவர்கள் நீட் எதிர்ப்பு, குடியுரிமைச் சட்ட திருப்பு எதிர்ப்பு என்று எதிலும் பெருமளவு ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது. இது அகிம்சைப் போராட்டங்களில் நமக்குப் போதிய புரிதலும் பயிற்சியும் இல்லையென்பதையும் வெளிப்படுத்தியது.

ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு மாடுகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப்பிறகு நாட்டு மாடுகளின் விலை அதிகரித்தது. மரபான உழவர்களிடையே – குறிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறாத எங்கள் பகுதியில் – பெரிதாக ஆர்வம் அதிகமானது மாதிரித் தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால், இது ஆர்வத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான ஒரு செயற்கையான வழிமுறைதான். உழவர்கள் நாட்டு மாடுகளை நோக்கித் திரும்புவதற்குத் தேவையான உண்மையான பொருளாதார காரணிகளை இது அடையாளம் கண்டு சரி செய்வதில்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்னொரு வகையில் முக்கியமானது. உள்ளூர்ச் சமூகங்கள் தங்கள் பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதற்கான உரிமையை நிலைநாட்டவும், அப்படியான உரிமைகளில் தலைநகர் தில்லியோ சர்வதேச நிறுவனங்களோ தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கவும் பயன்பட்டது. வெளியாட்களின் தலையீட்டால், உள்ளூர்ப் பழக்கங்களை மாற்றுவதில் எனக்கு இன்னும் உடன்பாடில்லையெனினும், உள்ளூர்ச் சமூகங்கள் தாங்களே தங்கள் மரபுகளையும் பழக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்தி, தொடர்ந்து பரிணமித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒரு விளையாட்டாகவோ, சடங்காகவோ ஜல்லிக்கட்டு என்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக ஈர்க்கவில்லை. உணர்வெழுச்சியில்லாமல் இப்போது இதைப் பார்த்தால், அதன்மீது எனக்கு எந்த ஆர்வமும் தோன்றவில்லை. ஜல்லிக்கட்டை நான் நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் பார்த்திருப்பதோடு சரி. ஆனால் அதுவே இது குறித்துப் பேசுவதற்கான தகுதி எனக்கில்லை என்றாக்கிவிடாது. இதில் எந்தவிதமான அழகியலோ இக்காலத்துக்கேற்ற வேறு உயர்ந்த நோக்கமோ இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

இது வீரத்தைக் கொண்டாடுவதாகக் கொண்டால், இன்றைய உலகில் இத்தகைய வீரத்துக்கான இடம் என்ன என்பதைப்ற்றி நாம் கேள்வி எழுப்பவேண்டும். முரட்டுக் காளைகளின் பின்னால் ஓடித்தான், இன்றைய மக்களாட்சிக்கும், அகிம்சைப் போராட்டங்களுக்கும் எளிமையான வாழ்க்கைக்கும் தேவையான வீரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் எல்லாருக்கும் ஒரு புதிய பாதையில் நடப்பதற்கான வீரத்தை இப்போட்டிகள் வழங்கிவிடுவதில்லை. இது ஒரு முக்கியான மரபுதான். ஆனால் எல்லா மரபுகளும் என்றென்றும் தொடரப்பட வேண்டியவையல்ல. தொடர்ச்சியாக மக்களைக் காயப்படுத்தியும் காவுவாங்கியும் வருகிற ஒரு விளையாட்டு நமக்கு இன்னும் தேவைதானா? இந்த மரணங்களையும் காயங்களையும் அவற்றின் மீது நாம் காட்டும் அக்கறையின்மையையும் பிற விளையாட்டுகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவதையும் காண்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு மனிதருக்கும் விலங்குகளுக்கும் தீங்கான ஒன்றாக உள்ளது. அப்போது குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை என்று கேட்டால், மேற்கோ கிழக்கோ எப்பகுதியாயினும் இத்தகைய வன்முறை விளையாட்டுகள் காட்டுமிராண்டித்தனமானவை என்றே நான் கருதுகிறேன்.

நாட்டு மாடுகள் – பசுக்கள் மாட்டுமல்லாமல் எருமைகளும், காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மாடுகளைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை பொருளாதார ரீதியான தற்சார்புடையதாக வேண்டும். இன்றேல், ஜல்லிக்கட்டு மாதிரி என்தனை முட்டுகள் கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் பயன்படாது.

நாம் விரும்பியதைச் செய்யும் உரிமையை வென்றுவிட்டோம். இனி அந்த உரிமையை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்.


குடியுரிமைச் சட்ட திருத்தத்தின் நோக்கம்

ஜனவரி 17, 2020

இந்த அரசாங்கம் நல்ல நோக்கத்தோடுதான் குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதாக நம்ப விரும்புபவர்கள், அமித் சாவின் இந்தப் பேச்சுகளைக் கேட்க வேண்டும்.

மிகவும் சாமார்த்தியமாக, அகதிகள் ஊடுருவிகள் என்று இரு பிரிவுகளைக் கட்டமைத்துப் பல இடங்களில் மிக வெளிப்படையாகவே வெறுப்பைக் கக்குகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த (அல்லது இந்நாட்டினர் என்று நிரூபிக்கமுடியாத) முஸ்லிம்கள் மட்டும் ஊடுருவிகள், பிறரெல்லாம் அகதிகள் என்று எப்படி ஆகமுடியும்?

CAA, NRC ஆகிய திட்டங்களுக்கிடையே ஏதோ மிகையான இணைப்பைப் போராட்டக்காரர்கள் ஏற்படுத்திவிட்டதாக நினைக்கவேண்டாம். இந்த அரசாங்கமே தனது நோக்கமாக இதைத்தான் பலமுறை அறிவித்திருக்கிறது.

https://scroll.in/article/947436/who-is-linking-citizenship-act-to-nrc-here-are-five-times-amit-shah-did-so?fbclid=IwAR2LEe9fEGr47JhotIVY-59DRNqtgfJabdNvGMo6utuOhzhOtATDKo-OxmM

CAA, NRC ஆகிய இரண்டையும் ஆதரிப்பதாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் தங்களுடைய முகநூல் சுயவிவரப் படத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்த வன்மமான திட்டத்தின் மூலம் அவர்களது கட்சி எதைச் செய்ய நினைக்கிறது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

இது பாதிக்கப்பட்ட சிலரை இணைப்பதற்கான திட்டமன்று. பலரை நீக்குவதற்கான திட்டம். இதில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் சரி, அல்லது தீவிர ஆதரவாளர்களுக்கும் சரி, எவ்வித ஐயமும் இல்லை. நடுவில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறவர்கள்தான இந்த அரசுக்கு சில நற்பண்புகளைக் கற்பிக்கிறார்கள். அத்தகைய நல்லெண்ணம் இருப்பதாகக் காட்டிக்கொள்ள அவர்களேகூட விரும்புவதில்லை.


மார்கழித் திங்கள் குளிர்குறை இந்நாள்

ஜனவரி 17, 2020

(2-ஜனவரி-2020)

மார்கழி மாதத்தின் இருள்விலகாத அதிகாலையில் வியர்த்துப்போய் எழுந்தேன். கொடுங்கனவொன்றும் கண்டுவிடவில்லை. புழுக்கமாக இருந்தது. எழுந்து வெளியே சென்றேன். விண்மீன்களைப் பார்த்தபடி திரும்பும்போது மூன்றடி முன்னால் ஒரு கட்டுவிரியன் நெளிந்து சென்று ஒரு மூலையில் ஒடுங்கியது. அதன்மீது மின்பந்தத்தின் ஒளிபாய்ச்சி ஒரு பாதுகாப்பான தூரத்துக்கு வழியனுப்பிவிட்டு வந்து மின்விசிறியைச் சுழலவிட்டுப் படுத்தேன்.

அந்நாளின் இறுதியில் இரவு எட்டு மணிக்குமேல் மகள் தலை நீராடி மீதம் வைத்த அரப்புப்போட்டுக் குளிர்ந்த நீரில் குளித்தேன். சற்றும் நடுங்கவில்லை. எப்போதும் தண்ணீரில் குளிப்பது வழக்கம்தானெனினும், நாற்பதைக் கடந்தபின் வரும் முன்பனிக்காலங்களில் குளியலறையில் கனன்றுகொண்டிருக்கும் கொதிகலனின் வெந்நீர் சபலத்தைக் கிளப்பும். ஒன்றிரண்டு போசி வெந்நீர் எடுத்துவிடவைக்கும். ஆனால் இவ்வாண்டு அச்சபலம் எட்டிப்பார்க்கவில்லை. நாங்கள் இக்கிராமத்துக்கு வந்தபின், கடந்த ஐந்து வருடங்களில் மார்கழி மாதம் இந்த அளவுக்கு குளிரும் பனியும் அற்றிருந்ததில்லை. ஓட்டுவீட்டில் கசிந்திறங்கும் குளிர் தாளாமல் கம்பளியும் சுவெட்டரும் குல்லாவும் முதல் ஆட்களாய் அணிந்துவிடும் மனைவியும் மகளும், இன்னும் அவற்றை வெளியில் கூட எடுக்கவில்லை.

“மார்கழி மாசம் ஃபேனே போடமுடியாது. இத்தனை உப்புசமா இருந்ததே இல்லை. திண்ணைக்கு வரலாம்னா கொசு ஜாஸ்தியா இருக்கு. க்ளைமேட் ரொம்பத்தான் மாறிப்போச்சு,” என்றார் பக்கத்துவீட்டுப் பாட்டி.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாவதுபோல் ஆறு காலங்களும் தம்மியல்பு இழந்து திரிவதற்கு ஏதேனும் பெயர் உண்டா? பருவச்சூழல் நெருக்கடிநிலையின் வெளிப்பாடுதானா இது?
பொள்ளாச்சியின் ஒற்றை கிராமத்தின் ஒற்றைத் திங்களைக் கொண்டு பூமி வெப்பமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்திவிடமுடியாதுதான். எனினும் அடுத்த பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நாம் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான உலகை விட்டுச்செல்கிறோம் என்பதை முடிவு செய்யும். இதுவே நம் காலத்தின் மிக முக்கியமான அக்கறையாக இருக்கவேண்டும். ஆனால் நம் கவனத்தைக் கட்டுவிரியன்கள் களவாடிக்கொண்டிருக்கின்றன.


காந்தியின் தேசியம்

ஜனவரி 17, 2020

இம்மாத காலச்சுவடு இதழில் ‘காந்தியின் தேசியம்’ குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. இது குடியுரிமைச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை. எனினும் இச்சூழலில் காந்தியின் தேசியம் குறித்த கருத்துகளும், அவர் மிகவும் மதித்த தாகூர், தல்ஸ்தோய் ஆகியோர் தேசியத்தை எதிர்த்துக் கூறிய கருத்துகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


இணையத்தில் சந்தாதாரர்கள் மட்டுமே இப்போது படிக்கமுடியும். கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

/நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக்கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திரத் தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பாரென்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு./

—-

/தாகூரும் தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்திலிருந்த குழுமனப்பான்மையும் வன்முறையும் மிகையான பழம்பெருமையும், தாம்-பிறர் என்ற இருமையும், காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின்மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை; காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயப் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்ததால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை; தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சி நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்றாலும் அது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாதென்றும் எத்துணை குறைபாடுகள் இருந்தாலும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றும் பின்னர் கூறினார்./

/1909இல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (‘திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார்’ என்கிறார் ராமச்சந்திர குஹா.) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் “தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை” என்றும் “இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்” என்றும் “சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்” என்றும் தன்னிடம் சொன்னதாக வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்.

இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப்போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள்./