நவயுக விலங்குப் பண்ணைகள்

ஜனவரி 29, 2008

பல நிகழ்வுகளைக் காணும்போது,  ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm புத்தகம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

Animal Farmல், மனிதர்களின் கொடுங்கோலாட்சியைச் சகிக்கமுடியாத விலங்குகள், புரட்சி செய்து, மனிதர்களை விரட்டிப் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுகின்றன. அந்தப் பொதுவுடைமை அரசு மெதுவாய், பன்றிகளின் தலைமையில் இன்னொரு கொடுங்கோலாட்சியாய் மாறுகிறது. இறுதியில் பன்றிகள் மனிதரைப் போலவே இருகால்களை உயர்த்தி நடக்கக்கூடக் கற்றுக்கொள்கின்றன.

ரஷ்யப் புரட்சியையும், ஸ்டாலினின் எழுச்சியையும் நையத் தாக்கிய இந்த நையாண்டிக்கதை, அறுபது ஆண்டுகளாகியும் அதன் இயைபை இழக்கவில்லை. அதிகாரம் படைத்தவன் மனிதனாகினும், பன்றியாகினும் ஒரே விளைவுதான் – அதிகாரம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான உதாரணங்கள்.

ஹிட்லரின் கொடுமைகளின் விளைவாய் உருவான இஸ்ரேல், அவனுக்கு இணையான கொடுமைகளைத் தொடர்ந்து புரிந்துவந்திருக்கிறது.

அப்கானிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பலபடிகள் பின்னோக்கியே நகர்ந்திருக்கிறார்கள். ரஷ்சிய ஆக்ரமிப்பில் ஆட்சி செய்த நஜிபுல்லா ஆகட்டும், பின் அமெரிக்க ஆதரவில் எழுந்த முஜாகிதின்களாகட்டும், அவர்களை வீழ்த்திவந்த தாலிபன் ஆகட்டும், இப்போதைய அமெரிக்கக் கைப்பாவைகளாகட்டும் ஒருவருக்கொருவர் மிஞ்சிய கொடுங்கோலர்கள்.

தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பில் துவங்கிய திராவிட இயக்கம் வெற்றிபெற்று, பல நூறு சாதிச்சங்கங்களிடம் தமிழ்ச் சமுதாயத்தை ஒப்படைத்துவிட்டது.

காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராய் குஜராத்தில் இந்துக்களின் தீவிரவாதம்.

இலங்கையில் சிங்கள இனவெறிக் கொடுமைக்கு மாற்றாய், புலிகளின் வன்முறை வெறியாட்ட முறைகள்.

வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் எந்தவிதத்திலும் மாறுபட்ட ஆட்சிகளை அளித்தவிடவில்லை. நந்திகிராம் – ‘முதலாளித்துவ’ இடதுசாரி சர்வாதிகாரத்திற்கான இன்னொரு எடுத்துக்காட்டு. 

இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஆங்கிலேயரைவிட அதிகமாகவே செலுத்துவோம் என்பதற்கு பணபலம் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) சாட்சி. ஹர்பஜன்-சிமண்ட்ஸ் இனவெறிக் குற்றச்சாட்டை நியாயமான முறையில் அணுகி, உண்மையைக் கண்டறிந்து நிலைநாட்டாமல், அதிகாரத்தையும், மிரட்டலையும் பயன்படுத்துவது வெள்ளையரிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம்.

காணுமிடமெங்கும் இன்னும் ஏராள விலங்குப் பண்ணைகள்.


Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும்

ஜனவரி 25, 2008

தமிழ் இலக்கியம் மக்களைச் சென்றடையாமல், மிகச்சிறிய வட்டங்களுக்குள் சிறைபட்டுக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இதற்கு முதன்மையான காரணம் தமிழ் இலக்கியவாதிகளிடம், கர்நாடக சங்கத வித்வான்களிடம் போல், பரவலாகக் காணப்படுகிற ஒரு வகையான தீவிர brahminical elitist mentality தான்.

தமிழ் வாசகர்கள் வட்டம் ஆங்கில உலகமளவிற்கு விரிவானதல்ல. ஆனால் இங்குள்ள இலக்கியப் பாகுபாடுகள் ஆங்கிலத்தைவிடவும் அதிகம் என்றே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், தனித்தமிழ் இலக்கியம், திராவிட இலக்கியம், இடதுசாரி இலக்கியம், பெண்கள் இலக்கியம்  என்று எண்ணற்ற பிரிவுகள். இத்தனை வகைகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒவ்வொரு வகையினரும் அவரவர்க்கென ஒரு வட்டமைத்து, அந்த வட்டத்திற்குள்ளேயே சிறைபட்டு, வெளியிலிருப்பவர்களை மட்டமாய் நினைப்பது ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே தெரிகிறது.

பல சமயங்களில் வர்த்தக வெற்றியை, இலக்கியத் தோல்வியாகவே கருதுகிறார்கள். வர்த்தக வெற்றி மட்டுமே இலக்கியத் தரத்திற்கு அளவுகோளாக முடியாது. அதேசமயம், எதிர்மறையாய், பெரும் வர்த்தக வெற்றி பெறுகிறவர்களை அந்த ஒரே காரணத்திற்காகத் தாழ்த்தி எடைபோடவும் கூடாது.

எடுத்துக்காட்டு – வைரமுத்துவிற்கு ஒரு சாராரிடம் கிடைக்கிற அவமரியாதை. இதோ ஜெயமோகன்  – ”’பில்லா’ கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு முப்பது பாகையில் முகம் திருப்பி ‘தமிழின் நிகழ்காலம்’ [இறந்தகாலம் முதல்வர் கருணாநிதியா?] என்று சுவரொட்டி அடித்து வெட்கமில்லாமல் தெருத்தெருவாக ஒட்டும் வைரமுத்து எப்படி உணர்வாரோ தெரியவில்லை, நல்ல வாசகராக நான் அறிந்த நா.முத்துக்குமார் அதைக் கண்டால் கூசிப்போவார் என்றே நினைக்கிறேன். [இதழில் எனக்குப்பிடித்த இரண்டு கவிதைகளில் ஒன்று அவர் எழுதியது] ”.

இலக்கியத்திற்கும் விளம்பரம் தேவைதான். விளம்பரம் கிடைப்பதாலேயே (சுய விளம்பரமா, தெரியவில்லை) அவரது இலக்கியத்தரம் ஏன் தாழ்ந்து போவதாய் நினைக்க வேண்டும். அவரது படைப்புகளில் நிறைய சேறிருந்தாலும், சேற்றை மறைக்குமளவிற்குச் செந்தாமரைகளும் நிறைந்துதானிருக்கின்றன. படைப்பாளிகள் அத்தனை பேருக்கும் இதே கூற்று ஓரளவு பொருந்தும்.

தனிமனித விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, பலவகைப்பட்ட படைப்புகளையும் சுவைத்துப்பாராட்டுகிற பக்குவம் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் Naipaul, Rushdie போன்ற தனிமனிதர்கள் மீதும், அவர்கள் கருத்துகளுடனும் உடன்பாடில்லாதவர்கள்கூட அவர்களின் படைப்புகளுக்குத் தரவேண்டிய மதிப்பைத் தருவதைப் பார்க்கிறோம்.

எனக்கு Tolkien, Walter Scottம் பிடிக்கும், Franz Kafka, Albert Camusம் பிடிக்கும். அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வனும் பிடிக்கும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளும் பிடிக்கும். ஜெயமோகனின் விஷ்னுபுரமும் பிடிக்கும், வைரமுத்துவின் சிகரங்களை நோக்கியும், ஏன், பல நயமான திரைப்பாடல்களும் பிடிக்கும். இவற்றில் முரண்பாடுகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.

ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் பிரபல வார இதழ்களில் எழுதியதாலேயே தரம்தாழ்ந்தவர்களாய்ச் சில சிற்றிதழ்கள் சித்தரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விந்தையான வாதம்தான். பத்துப்பேர் மட்டுமே படிப்பதுதான் இலக்கியம் என்று எண்ணுகிற இவர்களின் மனோபாவத்தைத்தான் brahminical elitist mentality என்று கூறினேன், ஜாதி அடிப்படையில் அல்ல (பார்ப்பனன் என்பதால் பாரதியை மட்டம்தட்டுகிறவர்களும் நம்மில் உண்டு!).

இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மென்மேலும் வளரும். அதற்காக நவீன வியாபர உத்திகள் தேவைப்பட்டால், அவற்றையும் பயன்படுத்தித்தான் பார்ப்போமே.  நாம் வறுமையால் இறந்த பாரதிகளையும் புதுமைப்பித்தன்களையும் பார்த்தது போதும்.  இலக்கியத்தால் செழிப்படைந்து, இன்னும் உற்சாகமாய் இலக்கியத்தைச் செழிப்படையச் செய்கிற நிலை, உலகெங்கிலும் போல் இங்கும், உதயமாகட்டும்.


இந்தியாவில் ஒரு Google உருவாகுமா?

ஜனவரி 24, 2008

இந்தியர்கள் கணிப்பொறியுலகில் பெரும் வெற்றிகளைக் குவித்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனாலும் மென்பொருள் சேவைகளில் (software services) செழிப்பாய் வளர முடிந்த அளவிற்கு, ஏன் இன்னமும் Google, Microsoft போல் மென்பொருள் ஆக்கப்பொருள்களையும் (software products என்பதற்கு என்னால் இயன்ற மொழிபெயர்ப்பு), கருவிகளையும் (software tools) இந்திய நிறுவனங்களால் உருவாக்கி உலக அரங்கில் விற்க முடியவில்லை என்பது விந்தையான புதிர்.

பத்தே ஆண்டுகளில் Google போன்ற நிறுவனங்கள், ஆண்டாடுகளாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவருமே எட்டியிராத எல்லைகளைக் கடந்தது எப்படி? இந்த வெற்றிகளில் இந்திய வல்லுனர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதும், அமெரிக்க இந்தியர் சிலர் Hotmail, i2 மாதிரியான நிறுவனங்களை அங்கே உயிர்ப்பித்திருப்பதும் அடுத்த புதிர். இன்று அனைத்து மேனாட்டு ஆக்கப்பொருள் நிறுவனங்களும் (Microsoft, Intel, Google, TI, i2, SAP, Oracle)  ஆராய்ச்சிப் பணிகளை இந்தியாவிற்குப் பெருமளவு இடம்பெயர்த்துவிட்டன.

இத்தகைய நிறுவனங்களை நிறுவுவதற்குப் பெரும் முதலீடும் தேவையில்லை. மிகச் சிறிய அளவில், பல தருணங்களில் கார் கொட்டகைகளில், தொடங்கப்பட்டவைதாம் இந்நிறுவனங்கள்.

ஆக இத்தகு நிறுவனங்களை நிறுவ,

அ) இந்தியர்களுக்குத் தொழில்நுட்பத் திறன் இருக்கிறது.

ஆ) முதலீடு ஒரு பொருட்டல்ல

இ) புதுத்தொழில் துவங்கத் தேவையான நிர்வாக அறிவுக்கும் பஞ்சமில்லை.

தேவையானதெல்லாம் (இந்தியாவில் இருக்கும்போதே) வையத்தை விழுங்கும் விசாலப் பார்வை, அகண்ட சிந்தனை. ஒருமனதான விடாமுயற்சி. தெளிவான திட்டம். திண்ணமான நிர்வாகம். அவ்வளவே.

நம்பிக்கையுள்ளது.விரைவில் இங்கிருந்தும் ஒரு Google உருவாகும்.


கங்குலி – உறுதிகொண்ட போராளிக்கு ஒரு சரிவு

ஜனவரி 22, 2008

கங்குலியை உங்களுக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலிருக்கலாம். ஆனால், நிச்சயமாய் ஏற்றுக்கொள்வீர்கள் அவர் ஒரு கடுமையான போராளி என்பதை. இன்றைய இந்திய அணியின் அவ்வப்போதைய முக்கிய வெற்றிகளுக்குப் பலவகைகளில் அடித்தளம் அமைத்தது கங்குலிதான். கங்குலிக்கு முன் எந்த இந்திய அணித்தலைவரும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று இவ்வளவு வெறியோடு விளையாடியதில்லை; வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் பகுதி (நன்றாக விளையாடுவோம் முடிந்தால் வெல்வோம்) என்கிற எண்ணமே நிலவியிருக்கிறது. கங்குலிதான் முதன்முதல் வெற்றியைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளாத மன உறுதியோடு விளையாடியவர். எல்லாவற்றையும் அவர் வென்றுவிடவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றி மட்டுமே குறியாய்க் கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை.

 கங்குலியின் மற்ற பலவீனங்கள் அவரை வீழ்த்தின. பல்வேறு தருணங்களில் சுயநலக்காரராய், தலைக்கனம் மிக்கவராய் கங்குலி சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த பலவீனங்கள் தான் அவரது பலமும்கூட. சுயநலமற்ற எந்த மனிதன் வெற்றியை ஒருமனதாய் விரட்டியிருக்கிறான். தன்னம்பிக்கையை மிகுதியாய்க் கொண்ட எவன் கொஞ்சம் தலைக்கனம் இல்லாமல் இருந்திருக்கிறான். கங்குலியும் அப்படித்தான். சச்சினுக்கு இணையாய் இயற்கையான திறமை இல்லை எனினும் அவருக்கிணையாய் விளையாடியது (ஒரு நாள் போட்டிகளில்) கங்குலியின் ‘பலவீனங்களின்’ வெளிப்பாடுதான்.

இவர் இனித்திரும்பவே முடியாது, அவ்வளவு மனவுறுதி கிடையாது என்று எல்லோரும் (நான் உட்பட) நினைத்திருந்தபோது அவர் மறுபிரவேசம் செய்து, அருமையாய் விளையாடியது எதிர்பாராத திருப்பம். எதிரணிகளைக் கூட, அவரை முற்றிலுமாய் வெறுத்த ஸ்டீவ் வா போன்றோரைக்கூட அசாத்திய திருப்பம். ஊழையும் உப்பக்கம் காண முடியும் என்பதற்கு அத்தாட்சி.

முந்தைய வீழ்ச்சி ஓரளவு சரியான காரணங்களுக்காக நிகழ்ந்தது என்றாலும், மறுபடி அவர் ஓரம்கட்டப்படுவது உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் வந்த சோதனை. வயதைக் காரணம் காட்டித் திறமையை, முயற்சியை, நல்ல பங்களிப்பை நிராகரிப்பது நியாயமான வாதமாய் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

கங்குலி உழைவின்றி மறுபடியும் ஊழை உப்பக்கம் காண்பாரா, இல்லை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


பீமா – விமர்சனம்

ஜனவரி 21, 2008

என் ‘விமர்சனம் பற்றிய விமர்சனம்’  இடுகையில் சொன்ன கருத்திலிருந்து சற்றே விலகி இந்த விமர்சனம் செய்கிறேன் (தற்காலிகமாக;hopefully, this is an exception and not a rule). சில வேளைகளில் நம் விமர்சனங்களுக்கு நாமே இலக்காகவேண்டியிருக்கிறது.

படம் பிடிக்காது என்று தெரிந்தேதான் சென்றேன், வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்க்காக. இவ்வளவு மட்டமாக இருந்தது என் எதிர்பார்ப்பையும் மீறியது.

இதற்குமேல் விமர்சிக்க இந்தப் படத்தில் எதுவுமில்லை. இடைவேளையின் போது, ‘first half சுமாரா இருந்திச்சு, second half சகிக்கல’ என்று துவக்கத்தில் உள்ளே நுழையும் போது கேட்ட குரல் செவிக்குள் மறுஒளிபரப்பாகி, பயங்கரமாய் பயமுறுத்தியது – சுமாருக்கு அர்த்தம் இதுவாகின், சகிக்காத இரண்டாம் பாகம் எப்படி இருக்குமென்று.

வியாபர நோக்கில் எடுக்கப்பட்ட மாதிரித் தெரியவில்லை; அப்படி நினைத்திருந்தால், எங்கு வியாபரமாகும் என்று எண்ணினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். தமிழர்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையை இவர்களுக்கு அளித்ததற்காகத் தமிழர்கள் தலைகுனிய வேண்டும்.


Anil’s Ghost – இலங்கை பற்றிய பார்வை

ஜனவரி 18, 2008

இலங்கைக் கலவரங்கள் பற்றிய புத்தகம் Michael Ondatjeவின் Anil’s Ghost. இலங்கை பற்றிய நடுநிலையான பார்வையுடன், இலங்கையோடு நேரடித் தொடர்பில்லாத ஒரு மூன்றாம் மனிதனால் எழுதப்பட்ட புதினம்.

வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காண்பிக்கிறது.  உயிர்ச் சேதம் ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்கப் போவதில்லை. சிந்துவது சிங்கள ரத்தமாயினும், தமிழ் ரத்தமாயினும் விளைவு ஒன்றுதான் – இன்னும் சில சடலங்கள், தீர்வைவிட்டு இன்னும் கொஞ்சம் விலகல்.

நாவலில் எனக்குப்பிடித்த வரிகள் – ‘அமெரிக்கத் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், இறுதியில் நாயகன், நிறைய சண்டைக்காட்சிகளுக்குப் பின், வியட்னாம் மாதிரியான நாட்டிலிருந்து, நிம்மதியாய் விமானத்தில் பறந்து செல்வான். அவனைப் பொருத்தவரை, வாசகர்களைப் பொருத்தவரை, கதை சுபமாய் முடிந்தது. கீழே தொடர்ந்து கொண்டிருக்கும் போர்பற்றி எவருக்கும் கவலையில்லை.’


விமர்சனம் பற்றிய விமர்சனம்

ஜனவரி 18, 2008

விமர்சர்களின் வேலை மிகச் சுவையானது என்று எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால் அது எவ்வளவு துயரமயமானது என்பது இப்போது தான் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு நல்ல விமர்சகர் நல்ல அறிவாளியாக, விமர்சக்கிற விஷயத்தைப்பற்றி ஞானமுள்ளவராக இருக்க வேண்டும். இன்றேல் விமர்சனம் வலுவற்றதாய், மேலோட்டமானதாய் இருக்கும். அத்தகைய விமர்சகர்களை வாசகர்களும், படைப்பாளிகளும் மதிக்கப் போவதில்லை.

தமிழ் இலக்கிய உலகில் கவனிக்கத் தக்க, பாரபட்சமற்ற விமர்சகர்கள் இருப்பதாய்த் தெரியவில்லை. என் அறியாமையாகவும் இருக்கலாம். திரைப்பட விமர்சகர்கள் – மதன், சுஹாசினி போன்றவர்கள் தொலைக்காட்சியின் தயவில் உருவாகியிருக்கிறார்கள். இருவரும் நல்ல ஞானமுள்ளவர்கள். அறிவாளிகள் மாதிரித்தான் தெரிகிறார்கள். இவர்களின் விமர்சனங்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் படியே இருக்கின்றன.

என் கேள்வி இதுதான். வாராவாரம் எப்படி இவர்களால் இத்தனை திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது – பெருமளவில் மோசமான திரைப்படங்களே வெளிவருகிற நிலையில், அறிவுஜீவிகளாகப் பாவிக்கப்படுகிற இவர்களால் எப்படி இவ்வளவு மட்டமான படங்களை முழுவதுமாய்ப் பார்த்து அலச முடிகிறது? காளை, பழனி மாதிரியான படங்களைப் பார்க்க வேண்டிய கட்டாயக் கொடுமைக்கு ஆட்படுவதைக் காட்டிலும் வறுமையை விரும்பி அணைத்துக்கொள்ளலாம்.

நான் விமர்சகனாக வேண்டியிருந்தால், நானாய்த் தேர்ந்தெடுத்துப் பார்க்கிற படங்களையும், படிக்கிற புத்தகங்களையும் மட்டுமே விமர்சிக்கும் வாய்ப்பு வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் எல்லா சமயங்களிலும் சந்திக்கப்படப் போவதில்லை – பின் விமர்சனமே தேவையில்லை. ஆனால் நிச்சயமாய் எதிர்பார்க்கக்கூட எதுவும் இல்லை என்று தெரிந்தே தரமாயிருக்க வாய்ப்பேயற்ற ஒரு படைப்பை நல்ல விமர்சகன் அலசவேகூடாது.


டாடா நேனோ -கார்வலம் போகலாம்

ஜனவரி 11, 2008

இந்திய நடுத்தர வர்க்கம் எட்டிப்பிடிக்கிற விலையில் டாடா நிறுவனம் கார் தயாரித்திருக்கிறது. அனைவரும் ஒரு மனதாய் வரவேற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம் தான் – நிறைய எதிர்ப்புகள், இரு சாராரிடமிருந்து. நிலம் தரக்கூடாது என்று கொடி உயர்த்தியிருக்கிற அரசியல்வாதிகள் ஒருபுறம். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வருந்துகிறவர்கள் மறுபுறம். இரண்டுமே யார் சரி என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாத பிரச்சனைகள்.

முதலில் சிங்கூர். கம்யூனிஸ்ட்டுகள் ஆண்டாண்டுகளாய் அவர்களே வளர்த்துவந்த சித்தாந்தத்திற்கு எதிராகச் செல்ல நினைக்கிறார்கள். பழகிப்போன வங்க மக்களோ மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எதிர்த்தே பழகிய இடதுசாரிகளுக்கு, எதிர்ப்பைச் சரியான முறையில் எதிர்கொள்ளத் தெரியாததுதான் கைமீறிய கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம். சிங்கூரில் எழுந்த எதிர்ப்பலைகள் நந்திகிராமில் இரத்த ஆறாகின. சிங்கூர் எப்படியோ தப்பித்தது.

அடுத்த எதிர்ப்பு இன்னமும் சிக்கலானது, சுற்றுச்சூழல் பற்றியது. எல்லோரும் கார் வாங்கிவிட்டால், உலகமே புகை மண்டலத்தால் சூழ்ந்துவிடும், வெப்பம் பெறுகிவிடும் என்ற அச்சங்களின் அடிப்படையிலானது. நோபல் பரிசு பெற்ற பச்சோரி, சுனிதா நாராயண் போன்றவர்களின் இந்த அச்சத்தில் நியாயம் இருந்தாலும், இந்த நியாயத்தை மிஞ்சுகிற வேறு சில நியாயங்களும் இருக்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய கவலையால், விஞ்ஞான வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யமுடியுமா? இல்லை. கூடாது.

ஏற்கனவே வளர்ந்துவிட்ட மேல்நாடுகள் வளர்ந்துகொண்டிருந்த போது, இத்தகைய கவலைகள் எதுவும் எழவில்லை. இன்று மற்றவர்கள் முன்னேற நினைக்கையில், சுற்றுச்சூழலின் பெயரால் அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவது முறையல்ல. மேல்நாட்டில் டாம், டிக், ஹேரி  எல்லாம் கார் ஓட்டும்போது நம் ஊர் குப்புசாமியும் கந்தசாமியும் கார் வாங்க வழிவகுக்கக் கூடாதா? இவர்கள் பேருந்தில் செல்ல ஒப்புக்கொண்டால், வெள்ளையர்களும் அவ்வழியைப் பின்பற்றுவார்களா? நடுத்தர வர்க்கம் கார் ஓட்டினால்தான் சுற்றுச்சூழல் மாசுபடுமா? பச்சோரியும் சுனிதாவும் பேருந்தில் செல்கிறார்களா என்பது தெரியவில்லை. சந்தேகம்தான்.


தமிழன் அசாத்திய பொறுமைசாலி

ஜனவரி 10, 2008

எழுபது ஆண்டுகளாய் சினிமாவாலும், பத்திரிக்கைகளாலும் நிகழ்த்தமுடிந்த கலாச்சார, சிந்தனைச் சீர்கேட்டைவிட பன்மடங்கு அதிகமாய் தொலைக்காட்சியால் முடிந்திருக்கிறது. கலாச்சார, சமுதாய மாற்றங்களுக்கு எதிரானவனல்ல நான். ஆனால் மாற்றம் முன்னோக்கி நிகழவேண்டுமேயன்றி பின்னோக்கியல்ல.

சினிமா பார்த்து இளைஞர்கள் கெட்டுப்போவார்கள் என்று பெற்றோர்கள் வருந்திய காலம் மாறி, தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ என்று இளைஞர்கள் பொறுமுகிற காலம் வந்துவிட்டது. இந்த நீள்தொடர்கள் சமுதாயத்தில் விதைக்கிற வக்கிரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படி இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களையும், கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் நம்மவர்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. இதுவும் ஒருவித போதைப்பொருளாகவே எனக்குத் தென்படுகிறது.

ஒரு புறம் சிந்தனைச் சீர்கேடு என்றால் மறுபுறம் மொழிச் சீர்குலைப்பு.  அரசுத் தொலைக்காட்சி மட்டுமே இருந்தபோது தமிழை வளர்க்க, வளரவிட மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினோம். இன்று தமிழ் தொலைக்காட்சியில் தமிழை வலைவீசித் தேடவேண்டியுள்ளது. தமிழே பேசத் தெரியாதவர்களை நடிக்கவைத்தார்கள், ஏற்றுக்கொண்டோம் – பின்னனி பேசியவருக்காவது தமிழ் தெரிந்தது என்பதால். ஆனால் தமிழே தெரியாதவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராய் நியமிப்பது குதர்க்கமானது. நம் அறிவை அவமதிக்கற செயல்.

சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.


போதுமே இந்தப் போர்கள்…

ஜனவரி 3, 2008

தீவிரவாதம்தான் உரிமைப்பிரச்சனைகளுக்குத் தீர்வு என்கிற எண்ணம் எப்போது மாறும்? என்றைக்கும்விட இன்றைக்கு, முற்றிலுமாக இணைக்கப்பட்ட உலகில், அகிம்சைப் போராட்டம் வலிமையானதாகிவிட்டது. அமைதிப்போரின் நிலையான வெற்றிகளை நிறையப் பார்த்துவிட்டோம். வன்முறையால் கிடைக்கிற வெற்றிகள் வெறும் தற்காலத் தீர்வுகளையே தரமுடிந்திருப்பதையும் பார்த்துவிட்டோம்.

ஆயுதங்கள் ஏற்படுத்துகிற காயங்கள் ஆறுவதேயில்லை; வன்முறையால் கிடைத்த வெற்றிக்குப் பின்னும், வெவ்வேறு வடிவங்களில் வன்முறை வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் திடமான நியாயத்தின் அடிப்படையில் தொடரப்படுகிற அமைதிப்போரால் எவ்வளவு பெரிய எதிரியையும் வீழ்த்திவிட முடியும். வீழ்த்தியபின் எதிரியோடு நிரந்தரமாய் உறவாடவும் முடியும்.

இணையதளமும் நேரடித் தொலைக்காட்சிகளும் இல்லாத காலத்திலேயே காந்தியால் ஓர் அமைதிப்போர் தொடர முடிந்திருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் வன்முறையைக் கைவிட்டு ஒரு பரவலான அமைதிப்போர் வெடித்தால், இந்தியாவால் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும். இன்று இந்திய மக்களில் எத்தனைபேர் காஷ்மீர் பக்கம் நியாயம் இருப்பதாய் நினைக்கிறார்கள்? இந்நிலை மாறும் வரை எத்தனை குண்டுகள் வெடித்தாலும் இந்தியா காஷ்மீர் மீதான உரிமையை விட்டுவிடப் போவதில்லை.

இலங்கையிலும் இதே நிலைதான் என்று தோன்றுகிறது. தொடரும் வன்முறையால் நியாயம் யார்பக்கம் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏற்கனவே தேவையற்ற ராஜீவ் படுகொலையால் பெருவாரியான இந்தியத் தமிழர்களின் ஆதரவை இழந்துவிட்டது இந்தப் போராட்டம். இன்னும் தொடரும் வன்முறை இலங்கைத் தமிழர்களை உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தும். கண்ணெதிரே தெரியும் வன்முறை முன்னால், நியாமான உண்மைகள் கூட புதைந்துபோகும்.

போர்தொடுப்பதைவிட, தொடங்கிய போரை நிறத்துவதற்கும், போரின் போக்கை வேறுவிதமாய் திருப்புவதற்கும் அதிக துணிவும், அரசியல் திறனும் தேவை. கடினமான பாதைதான். ஆனால் நிரந்தனமான ஒரு தீர்வுகிட்ட இப்பாதையில் நடந்துதான் ஆகவேண்டும்.