காணி நிலம் வேண்டும் – ஆங்கிலத்தில்

மார்ச் 25, 2011

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பாரதியின் இன்னொரு கவிதையை மொழிபெயர்த்துள்ளேன்:

http://tkan.wordpress.com/2011/03/25/a-tiny-tract-of-land-bharatis-wish/

இதற்கு முந்தியவை நல்லதோர் வீணை, அக்கினிக்குஞ்சு, தேடிச்சோறு நிதந்தின்று.

திருக்குறளை மொழியாக்கம் செய்வதற்கிடையில், இந்த முயற்சி சற்றே மாறுபட்ட அனுபவமாக இருந்தது.


அப்பாவின் சொத்து

மார்ச் 25, 2011

கொஞ்சம் சம்பளத்தில்

கொஞ்சம் கொஞ்சமாய்ப்

புத்தகம் சேர்த்தார்

என் அப்பா.

கம்பனும் இளங்கோவும்

திருவாசகமும் தேவாரமும்

ஜெயகாந்தனும் லாசாராவும்.​

ஓய்வுக்குப்பின் படிக்க.​

முப்பத்தைந்து ஆண்டுகள்

காத்திருந்து​

ஓய்வும் ​பெற்றுவிட்டார்.

கொஞ்சம் சம்பளம்

நிறைய பென்ஷனாகிவிட்டதால்

அவ்வளவாய்ப் பிடிக்காத​

பெரிய புராணம்கூட

வாங்கிவிட்டார்​.​

கண்மங்கி

கவனம்சிதறிப்​ போவதால்

​இப்போது சொல்லத்

தொடங்கியிருக்கிறார்:​

இதுதான் நான்

உங்களுக்குச் சேர்த்து

வைக்கும் சொத்து​.

கைப்படாமலே பழசாகும்​

​அப்பாவின் சொத்தும்

தாத்தாவின் சொத்தும்

சேர்ந்து அச்சு உறுத்த

என் மகள் இப்போதே

கிண்டிலுக்கு மாறிவிட்டாள்.​


E=mc2, பிரமிள், ஜப்பான்

மார்ச் 13, 2011

E=mc2 – நேற்று காலை பிரமிளின் இந்த அற்புதமான கவிதை படித்தேன். பின் இணையம் எங்கும் ஜப்பான் அணுமின் நிலைய வெடிப்பு குறித்த செய்திகள் இரைந்து கிடந்ததைக் காணும்போது, அந்தக் கவிதை இன்னும் ஆழமாய் என்னுள் பதிகிறது.

ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்

தெறிக்கிறது பரிதி.

பிரமிள் வாழ்ந்த காலத்தில், சில காலம் நானும் வாழ்ந்திருக்கிறேன். ஆயினும் அவன் இருந்தவரை அவன் பெயரே தெரியாமல் இருந்திருக்கிறேன் என்னும்போது கூசுகிறது. அதுவும் நல்லதுதான்…தருமு சிவராமு என்கிற மனிதன் குறித்து யாரும் நல்லவிதமாய் எழுதியிருப்பதாய்த் தெரியவில்லை. அந்த மனிதன், பிரமிள் என்கிற கவிஞனை அடையத் தடையாக இருந்திருக்கக்கூடும்.

இப்போதுதான் புதுக்கவிதை வெளியில் புரளத் தொடங்கியிருக்கிற எனக்கு, பாரதிக்குப்பின் மிகப் பெரிய கவிஞனாய் பிரமிள்தான் தெரிகிறான். உயிரோடு இருக்கிற காலத்தில் நாம் எந்த இலக்கியவாதியைப் போற்றியிருக்கிறோம்? பிரமிளின் இந்த வரிகள் அவனுக்கும் கச்சிதமாய்ப் பொருந்துகின்றன –

நேற்று நேற்று என்று

இறந்த யுகங்களில்

என்றோ ஒருநாள் அவிந்த

நக்ஷத்ர கோளங்கள்

ஒளிவேகத்தின்

மந்தகதி தரும் நிதர்சனத்தில்

இன்றும் இருக்கின்றன –

காலமே வெளி!

இன்று கண்டது

நேற்றையது,

இன்றைக்கு நாளைக்கு.

 

இதோ கவிதை…’கொங்குதேர் வாழ்க்கை – பகுதி 2′ என்கிற ராஜமார்த்தண்டனின் அற்புதமான கவிதைத் தொகுப்பிலிருந்து…இந்த நூல் புதுக்கவிதையின் அகநானூறு – அவசியம் அனைவரும் வாங்கவேண்டியது.

E=mc2

ஒற்றைக் குருட்டு

வெண்விழிப் பரிதி

திசையெங்கும் கதிர்க்கோல்கள்

நீட்டி

வரட்டு வெளியில் வழிதேடி

காலம் காலமாய்

எங்கோ போகிறது.

‘எங்கே?’

என்றார்கள் மாணவர்கள்.

ஒன்பது கோடியே

முப்பதுலெச்சம் மைல்

தூரத்தில்

எங்கோ

ஒரு உலகத்துளியின்

இமாலயப் பிதுக்கத்தில்

இருந்து குரல்கொடுத்து,

நைவேத்தியத்தை

குருக்கள் திருடித் தின்றதினால்

கூடாய் இளைத்துவிட்ட

நெஞ்சைத் தொட்டு

‘இங்கே’ என்றான் சிவன்.

‘அசடு’ என்று

மாணவர்கள் சிரித்தார்கள்.

 

ஒரு குழந்தை விரல்பயிற்ற

ஐன்ஸ்டீனின் பியானோ

வெளியாய்

எழுந்து விரிகிறது.

மேஜையில் அக்ஷர கணிதத்தின்

சங்கேத நதி!

மனித மனத்தின் மணற்கரையில்

தடுமாறும்

ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.

நதி பெருகி

காட்டாறு.

காலமும் வெளியும் ஒருமித்து

ஓடும் ஒற்றை நிழலாறு.

ஒரு புதிய பிரபஞ்சம்.

நேற்று நேற்று என்று

இறந்த யுகங்களில்

என்றோ ஒருநாள் அவிந்த

நக்ஷத்ர கோளங்கள்

ஒளிவேகத்தின்

மந்தகதி தரும் நிதர்சனத்தில்

இன்றும் இருக்கின்றன –

காலமே வெளி!

 

இன்று கண்டது

நேற்றையது,

இன்றைக்கு நாளைக்கு.

இக்கணத்தின் கரையைத்

தீண்டாத

இப்புதிய புவனத்தின் பிரவாகம்

வேறொரு பரிமாணத்தில்.

 

விரிந்து

விண்மீன்களிடையே

படர்ந்த நோக்கின்

சிறகு குவிகிறது.

பிரபஞ்சத்தின்

சிறகு குவிந்தால்

அணு.

அணுவைக் கோர்த்த

உள் அணு யாவும்

சக்தியின் சலனம்.

அணுக்கள் குவிந்த

ஜடப்பொருள் யாவும்

சக்தியின் சலனம்.

ஒளியின் கதியை

ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி!

மெக்ஸிக்கோவில்

பாலைவெளிச் சாதனை!

1945

ஹிரோஷிமா நாகசாகி.

ஜடமே சக்தி.

கண்ணற்ற

சூர்யப் போலிகள்.

கெக்கலித்து

தொடுவான்வரை சிதறும்

கணநேர நிழல்கள்.

பசித்து

செத்துக் கொண்டிருக்கும்

சிவனின்

கபாலத்துக்

கெக்கலிப்பு.

 

இசைவெளியின் சிறகுமடிந்து

கருவி ஜடமாகிறது.

 

பியானோவின் ஸ்ருதிமண்டலம்

வெறிச்சோடிக் கிடக்கிறது.

உலகின் முரட்டு இருளில்

எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.

ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்

தெறிக்கிறது பரிதி.

ஒரு கணப் பார்வை.


சபிக்கப்பட்டவர்கள்

மார்ச் 8, 2011

அப்பா,

பயங்கமா நாத்தம்

அக்குது ​என்றாள் மகள்.

அதிகாலையில் கீழ்வீட்டில்

வெள்ளைச்சுருளில் கொஞ்சம்

உயிர்​கசிந்து மேலெழுந்து வந்தது.

முகம்சுளித்துச் சபித்தாள் என்மனைவி.

கல்லாய் நின்று கால் இடறிவிட்ட ​அகலிகைக்குப்

பெரிய சாபம் என்னவாயிருக்கும்?

ராமன் தடம்மாறுவதா?

மிதிப்பதா?

 

நன்றி: கீழ்வீட்டில் புகைபிடித்தவன், பிரமிள், புதுமைப்பித்தன்.