இல்லமும் உலகமும் – ஒரு நாவலும் திரைப்படமும்

ஏப்ரல் 17, 2008

தாகூர், சத்யஜித் ரே இருவரது வேறுபட்ட அணுகுமுறையில் இல்லமும் உலகமும் (காரே பாரே/ The Home and the World) என்கிற கதை உருவாக்கப்பட்டிருக்கிற நயம், ஒரு நாவலைத் திரைப்படமாய் எடுப்பதற்கான சிறந்த பாடம்.

முதலில் ரேயின் படத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன் கண்டேன். தேசிய இயக்கத்தைக் கதைக்களமாய்க் கொண்டு, மனித உறவுகளை, தன்மைகளை அலசிய விதம் பிடித்திருந்தது.

தாகூரின் கதையை, அண்மையில் படிக்க நேர்ந்த போதுதான் ரேயின் ஆக்கத்தை இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிந்தது.

கதைக்களம் முற்றிலும் புதியது. சுதேசி இயக்கத்தின் குறைபாடுகளை இவ்வளவு அப்பட்டமாய் அக்காலத்திலேயே அலசுவதற்கு, தாகூருக்கு ஒரு தனித் துணிவு இருந்திருக்க வேண்டும். திலகர்களும், காந்திகளும் மட்டும் கொண்டதல்ல சுதந்திர இயக்கம்; சுயநலவாதிகளும் போலிப் போராளிகளும் கூடப் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதைத் தாகூர் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறார்.

மூன்று பாத்திரங்கள் மாறிமாறிக் கதை சொல்கிற ‘நவீன’ உத்தி கையாளப்பட்டிருக்கிறது. பலமுறை ஒரே நிகழ்ச்சியை மூவரும் வெவ்வேறு விதமாய், தத்தமது மாறுபட்ட கோணங்களில் வர்ணிக்கிறார்கள். நாயகன் நிக்கில் 24 காரட் நல்லவன். அதனால் மனைவி பிமலாவுக்குப் பலவீனமானவனாய்த் தென்படுகிறான். அவன் நண்பன் சந்தீப் நேர்எதிர். 24 காரட் சுயநலவாதி. தன் சுயமுன்னேற்றத்திற்கு சுதேசி இயக்கத்தைக் கருவியாக்குகிறான். அவன் வசீகரத்தாலும், சுதேசி இயக்கத்தாலும் ஈர்க்கப்படுகிறாள் பிமலா. நிக்கில் தேசத்தைவிட மனிதர்களை அதிகம் நேசிக்கிறவன். தன்னளவில் மற்றவர்களுக்கு முன்பே சுதேசிப் பொருள்களைப் பயன்படுத்தினாலும், சுதேசி இயக்கம் ஏழைகள் மீது சுமையாய் திணிக்கப்படுவதை எதிர்க்கிறான். மனைவி தன் நண்பனின் மீது கொண்ட மோகத்தை அறிந்தும், அவள் சுதந்திரம் அது என்று சகித்துக்கொள்கிறான். இந்த மூவரின் மனப்போராட்டங்களை, தத்துவ விவாதங்களை விரிவாய் விவரிக்கிறார்.

சந்தீப் Miltonஇன் சாத்தான் (நாவலில் Paradise Lost பற்றிய ஓர் சிறு குறிப்பு எதேச்சையான coincidence  அல்ல என்று நினைக்கிறேன்), ஷேக்ஸ்பியரின் Iago வரிசையைச் சார்ந்தவன். குற்ற உணர்வு சிறிதுமின்றி, தன் ஆற்றல்மீது மிக்க நம்பிக்கையுடன், மிகுந்த  சுயநலச் சிந்தனைகளைச் சிந்திக்கிறான். இறுதிவரை தன்னிலை மாறாமல் இருக்கிறான்.

படிக்கும் போது சத்யஜித் ரேயின் திரைப்படம் குறித்த நினைவுகள் பிரம்மிப்பாய் மலர்ந்தன. உரையாடல்களும், மனப்போராட்டங்களும், தத்துவ விவாதங்களும் நிறைந்த இந்தக் கதையைத் தொய்வில்லாத, உரையாடல் குறைந்த, திரைப்படமாய் உருவாக்கியது அவரது திறமைக்குச் சான்று. உரையாடல்களால் கூற முடியாத சிந்தனை ஓட்டங்களைக் காட்சி அமைப்பின் மூலமும், முகபாவங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார். வார்த்தைகளால் வடிக்கப்பட்ட தாகூர் கதையின் ஓட்டத்தை பொருத்தமான காட்சிகளாலும், பார்வையாளர்களை ஊகிக்கத்தூண்டுவதன் மூலமும் வெளிப்படுத்துகிறார்.

நாவல்களைத் திரைப்படமாக்கும் போது பொதுவாய் அதை அப்படியே (இந்த ஊடகத்திற்குப் பொருந்தாமல்) எடுத்தோ, அதை முற்றிலும் மாற்றியோ சிதைத்துவிடுவார்கள். தாகூரின் ஒரு சிறப்பான overstated நாவலை, சற்றும் சிதைக்காமல், understated திரைப்படமாக எடுத்தது சத்யஜித் ரேயின் சாதனைதான். தாகூருக்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது, ரேக்கு ஏன், ஆஸ்கார் உட்பட, பல பெருமைகள் கிடைத்தன என்பதற்கு இந்தப் படைப்புகள் விடையளிக்கின்றன.


சுஜாதா என்றொரு இளைஞர் (சற்றே தாமதமான அஞ்சலி)

ஏப்ரல் 1, 2008

சுஜாதா என்கிற மற்றுமொரு சிறப்பான தமிழ் எழுத்தாளர் இளமையில் மரணமடைந்தார் – பாரதி, புதுமைப்பித்தனைப் போல். இறக்கும் போது, வயது எழுபது இருக்கும் என்கிறார்கள், அவரது எழுத்தைப் படிக்காதவர்கள். நாற்பது ஆண்டுகளாய் இளமை மாறாமல், மாறுகிற இளமைக்கு ஏற்பத் தான் மாறி எழுதியவரை எந்த அடிப்படையிலும் என்னால் ஓர் இளைஞனாய் அன்றி வேறு எவராகவும் எண்ண முடியவில்லை.

இலக்கியப் படைப்பாளியாக சுஜாதா எந்த அளவிற்கு எத்தனை நாட்களுக்குப் போற்றப்படுவார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழுக்குப் புத்தம்புதிதாய் ஒரு துள்ளலான நடையை அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமை அவருக்கு என்றைக்கும் நிலைத்து நிற்கும். வார்த்தைகளை வாரி இரைப்பதில் வள்ளல்களாய் இருந்த தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிக்கனத்தைக் கற்பித்தவர் சுஜாதா. சுருக்கமாய் நறுக்கென்று எழுதுவதில் சுஜாதாவிற்கு இணையாய் யாரையும் நினைக்க முடியவில்லை.

எந்த எழுத்தாளனையும் அளவுக்கு அதிகமாய்ப் படித்தால் வாசகனுக்கு ஒரு சலிப்பு உண்டாகும் – பொதுவாக சொன்னதையே திரும்பத் திரும்ப உருமாற்றிச் சொல்வார்கள், அல்லது, புதிதாய்ச் சொல்கிற எதிலும் பழைய ஆழம் இருக்காது. சொல்ல இருப்பதையெல்லாம் சொன்ன பிறகு பெருமளவு எழுதுவதையே நிறுத்தியவர்களும் உண்டு (ஜெயகாந்தன், மௌனி போல). சுஜாதா இந்த விதிகளுக்கு விதிவிலக்கு. அவர் எவ்வளவு எழுதினாலும் அவ்வளவும் புதுமைப் பொலிவு மாறாமல் ஆர்வத்தைக் கிளறும் வண்ணம் இருந்தது வியப்புதான். அவரது படைப்புலகு அகலமானது; ஆழமானதும் கூட.

இவை எல்லாவற்றையும் விட, தமிழ்ச் சமுதாயத்திற்கு, சுஜாதாவின் இன்னொரு மறைமுகப் பங்களிப்பு சரியாய் இதுவரை அலசப்படவில்லையோ என்று நினைக்கிறேன். இந்தியாவின் மற்ற எந்தப் பகுதியையும்விட அதிகமாய் கணிப்பொறி வல்லுனர்களைத் தமிழகம் தந்தது எப்படி? நாமும் அதே கல்விமுறை, கலாச்சாரச் சூழலில் தான் வாழ்ந்திருக்கிறோம். ஆனாலும் தமிழர்களுக்கு early movers advantage கிடைத்தது எப்படி. இதில் IIT, Anna Universityகளுக்கு இணையாய் சுஜாதாவிற்குப் பெரும்பங்கு உண்டு என்பது என் தியரி. ஒரு தலைமுறைக்கே கணிப்பொறி என்கிற கருத்தையும், அதன் சாத்தியங்களையும் எளிய முறையில் அறிமுகப்படுத்தி இளம்வயதில் ஈடுபாடு வரச்செய்ததில் சுஜாதாவின் எழுத்துகளுக்கு முதலிடம் தரலாம். மற்ற மொழிகளில் சுஜாதா எழுதியதில்லை. அவர் போன்றவர்கள் இருந்த மாதிரித் தெரியவில்லை. ஆகையினால் தமிழர்களுக்கு அந்த first movers advantage.

ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கவும்: கணிப்பொறி இளைஞர்கள் (அல்லது அவர்கள் பெற்றோர்கள்) எத்தனை பேர் சுஜாதாவின் அறிவியல் அறிமுகத்தோடு வளர்ந்திருக்கிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சி செய்து அவரின் தாக்கத்தை நிர்ணயிக்கிலாம்; நிலைநிறுத்தலாம்.

ஒரு செயலின் சாத்தியங்களை அறியவைத்துவிட்டால், அந்தச் செயலைச் செய்துமுடிப்பதற்கான வழிமுறைகளை மனிதன் எளிதில் வடிவமைத்து விடுவான். சுஜாதாவும், அண்மையில் மரணமடைந்த Arthur Clarkeம் சாதித்தது அதுதான். Clarke செயற்கைக்கோள்கள், இணையம் பற்றி அவை தோன்றும் முன்பே எழுதியதன் மூலம், அவற்றின் சாத்தியங்களைச் சிந்தித்ததன் மூலம், அவை உருவாவதற்கு வழிவகுத்தார் என்று போற்றப்படுகிறார். சுஜாதாவிற்கும் தமிழுலகில் க்ளார்க்கிற்கு இணையான இடத்தை வழங்கலாம்.

அறிவியல் திறனும் மொழிவளமும் ஒருசேர அமைவது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ மனிதர் சுஜாதா. ஆங்கிலத்தில் பத்து வார்த்தைகள் கொடுத்து மிகச் சிறந்த வாக்கியம் அமைக்க வேண்டுமானால் அண்மைய எழுத்தாளர்களில் Naipaul அல்லது Coetzeeயிடம் போகலாம். அதுமாதிரி தமிழில்  சுஜாதாவைத்தாண்டித் தேடவேண்டியதில்லை. பத்து வார்த்தைகளைக்கொண்டு, ஒரு அழகான வாக்கியம் அல்ல, பத்து வாக்கியங்களைப் படைத்து சங்கத்தமிழையும் அறிவியலையும் இழைத்திருப்பார் இந்த அபூர்வ மனிதர்.

பி.கு.:

சுஜாதாவின் சகோதரரை ஒருமுறை நீண்ட இரயில்பயணத்தில் சந்திருக்கிறேன். என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி. ஓரளவு அவர் போலவே இருப்பார். MTNL தலைமைப் பொறுப்பில் இருந்தவர். நான் Naipaul படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துத் தானாய் பேச்சை ஆரம்பித்தார். அவர் சுஜாதாவாக இருக்குமோ என்று உள்ளூர சிந்தித்தவண்ணம், எப்படிக் கேட்பது, என்ற தவிப்போடு இருந்த எனக்கு அது பொன்னான வாய்ப்பு. Naipaul பற்றிக் கொஞ்சம் பேசிவிட்டு, ‘by any chance, are you related to writer Sujatha?” என்று கேட்டேவிட்டேன். சுஜாதாவின் எழுத்தில் கண்ட ஆழத்தையும் அகலத்தையும் அவரிடம் நேரில் கண்டேன். நிறையப் பேசினோம் – இலக்கியம், நிர்வாகம் முதல் இலங்கை வரை. Meaning no disrespect to either of them, சுஜாதாவோடு இரண்டு நாட்கள் கழித்தமாதிரியான நிறைவு எனக்கு. எல்லா இரயில் சினேகங்களையும் போல அதன்பின் அவரை நான் தொடர்பு கொள்ளவில்லை. சுஜாதாவோடும் அவர் சகோதர்ரோடும் ஏதோ ஒருவகையில் தொடர்பு ஏற்பட்டது என்பதை இன்று பெருமையோடு நினைத்துப்பார்க்கிறேன்.