பாரதி பற்றிய இந்தப்பதிவுக்குப்பின், ஜெயமோகன் எதிரிவினையாற்றத் ‘தேர்ந்தெடுக்காத’ ஒரு கடிதத்தை அவருக்கு இரண்டு வாரங்களுக்குமுன் எழுதியிருந்தேன். அவர் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன் என்கிறமாதிரி தோற்றமளிக்கக்கூடிய பதிவினையிட்டதால், நானும் ‘எழுதிய கடிதம் ஏன் எவர் கண்ணிலும் படாமற்போகவேண்டும்?’ என்று இதை இங்கு பதிவிடுகிறேன். முடிவில், விவாதம் great poet என்பது குறித்தா, greatest poet என்பது குறித்தா என்று குழம்பிப்போயிருக்கிறேன். அவரும் குழம்பியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். அவரோடு எதிரிவினையாற்றும் தகுதிபடைத்த புதிய குரல் அவருக்குள்ளேயே எழும்பிவிட்டதால் இதோடு நாமெல்லாம் விலகிக்கொள்வது நல்லது.
எனக்கு இவ்விவாதத்தைத் தொடர்ந்ததன் மூலம் எம்.டி.முத்துக்குமாரசாமி, டகால்டி, றியாஸ் குரானா போன்ற ரசமான எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடிந்ததில் மகிழ்ச்சி.
————————————————————————
அன்புள்ள ஜெயமோகன்,
சுஜாதா, நகுலன் பற்றிய பிம்பங்களை நீங்கள் உடைத்தபோது, அவற்றோடு முழுமையாக உடன்படாத போதும், உங்கள் கோணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதி விவாதத்தில் அப்படியொரு புரிதல் எனக்கும், எதிர்வினைகளை வைத்துப்பார்க்கும்போது பலருக்கும், ஏற்படவில்லை. பாரதியின் கவிதைகளில் கொப்பளிக்கிற உணர்ச்சிகளையும், அவன் எழுதிய காலகட்டத்தையும், அவனிக்கிருந்த சூழலையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவன் சரித்திரம் நிலைக்கிறவரை, அவனை அலசவே முடியாது. பாரதி எளிமையை நாடி எளிமையாய் எழுத முயன்றவன். கடினமாய் எழுதியவற்றைக்கூட மற்றவர்களுக்குப்படித்துக்காட்டி, அவர்களுக்குப் புரியாதபோது, மாற்றியவன் (வ.ரா., யதுகிரியின் சரிதைகளின்படி). அவன் கவிதைகள் மீது மரபுக் கவிதையின் அளவுகோள்களையும், நவீனத்துவ நோக்கையும் பாய்ச்சி, அளப்பது சரியாகப் படவில்லை.
தயவுசெய்து, பாரதியை வெறும் பக்திக் கவிஞன் என்ற குப்பிக்குள் அடைக்காதீர்கள். நாத்திகனான நான், திருவாசகத்துக்கும் கம்பராமாயணத்தும் இணையாக, பாரதியின் பக்திக்கவிதைகளிலும் (அவன் மற்ற கவிதைகளைப் போலவே) ஆழமான உணர்வெழுச்சயை அடைந்துள்ளேன்.
“ஒரு இலக்கியவாதி இலக்கியப்பரம்பொருளை அடைய நினைப்பது தப்பா? தப்பா? தப்பா?” என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஏன் பரம்பொருள் ஒன்றுதான் என்று நினைக்கிறீர்கள். வாசகனாய், இலக்கிய ஆர்வலனாய், எனக்கு, பாரதி சொன்னமாதிரி ‘பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே’ என்றுதான் தோன்றுகிறது. அந்த இலக்கியப்பரம்பொருள் வள்ளுவனிலும், இளங்கோவிலும், கம்பனிலும், பாரதியிலும் பரவி நிற்பதாகவே நான் காண்கிறேன். ஒவ்வொன்றாய் விலக்கிச்சென்றால் பின் பரம்பொருளே இல்லை என்கிற இலக்கிய-நாத்திக நிலைப்பாட்டிற்குத்தான் வந்தாக வேண்டும்.
எது எப்படியோ, நீங்கள் தொடங்கிய இந்த விவாதங்களின் மூலம் ஒரு நன்மை: பாரதியை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும், அதன் மாறாத்தன்மையும், எனக்கு மறுபடியும் உறுதியாய்ப் புரிகின்றன.
கண்ணன்.
என் மூன்றுவயது மகள் ஆக்ரோஷமாய் ‘அக்கினிக்குஞ்சு’ பாடல் பாடிக்கொண்டிருக்கிறாள்; ‘காக்கை குருவி’களை நோக்கிநோக்கிக் களியாட்டம் கொண்டிருக்கிறாள்; தீக்குள் விரலை வைத்தால் என்னவாகும் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறாள். பாரதி இன்னும் 70 வருடங்களுக்காவது மகாகவிதான். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.