இவ்வாண்டு படிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது என்பது இப்பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது. எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவ்வாண்டுதான் மிகவும் அதிகம் பயணம் செய்திருக்கிறோம்; கிராமக் குழந்தைகளோடு நிறைய நேரம் கழித்திருக்கிறோம்; மகிழ்மலரின் தேவார-திருவாசக இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம்; விவசாயம், தேங்காயெண்ணெய் ஆட்டுதல் என்று முற்றிலும் புதிதான பணிகளுக்குள் ஆழமாகச் சென்றிருக்கிறோம்; தோப்பில் ஒரு சிறு அறையினை எங்கள் உடலுழைப்பையும் அளித்துக் கட்டியுள்ளோம். நன்றாக உறங்கியிருக்கிறேன்; ஓரளவு எழுதியுமிருக்கிறேன்; தியாகு நூலக நண்பர்களைத் தொடர்ந்து சந்தித்து இலக்கிய-அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்; சில நல்ல திரைப்படங்களையும் கண்டிருக்கிறேன். இத்தனைக்குமிடையில் படிப்பதற்கு நிறைய நேரம் இருந்திருக்கிறது; சும்மா இருக்கும் சுகத்துக்கும் நிறைய நேரமிருந்திருக்கிறது; ஒரு புத்தகம் (முகிலினி) எங்கள் தோட்டத்தில் வெளியிடப்பட்டது என்பதெல்லாம் எல்லோரும் சபிக்கும் 2016ம் ஆண்டை பாசத்துடன் திரும்பிப் பார்க்கவைக்கின்றன.
பட்டியலில் பல புத்தகங்கள் அளவில் சிறியவை; அதனாலும் பட்டியலின் நீளம் கூடியிருக்கலாம். குறைபட்டுக்கொள்ளவும் விசயங்கள் இல்லாமலில்லை: அறிவியல், வரலாறு, விவசாயம், கல்வி குறித்தெல்லாம் மேலும் அதிகமாய்ப் படித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் படிக்கவேண்டும். படித்த புத்தகங்கள் குறித்து மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறேன்; மிகக் குறைவான குறிப்புகளே எடுத்திருக்கிறேன். எழுத வேண்டும். திருக்குறள் மொழிபெயர்ப்பு ஓராண்டாய்த் தடைபட்டு நிற்கிறது.
பட்டியலில் உள்ள புத்தகங்களில் அனேகமாக அனைத்தையும் துணிவுடன் பிறருக்குப் பரிந்துரைப்பேன். பரிந்துரைக்க முடியாதவற்றை பெரும்பாலும் பாதியில் நிறுத்திவிடுகிறேன் – அதுவே ஒரு நல்ல வடிகட்டிதான்.
ரஷ்ய எழுத்தாளர்கள் தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிகிறார்கள். தாஸ்தோவஸ்கியும் தால்ஸ்தோயும் இந்த ஆண்டும் என் படிப்பு நேரத்தை ஆக்கிரமிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
இவ்வாண்டு படித்தவற்றுள் டாப் 2 புத்தகங்கள்: ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சின் The Second-hand Time, Chernobyl Prayers.
அலெக்ஸிவிச் இலக்கியத்தின் எல்லைகளை விரித்திருக்கிறார். புனைவுகளும் கவிதைகளும் அரிதாகவே எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிற பல உயரங்களை இந்த இரண்டு புத்தகங்களிலும் எட்டியிருக்கிறார். அவரது எழுத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும், அவரது எழுத்துமுறையாலும் தொகுப்புமுறையாலும் தனித்து விளங்குகின்றன. படிக்கும் நமக்குள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. நாவல்களின் ஆழ அகலங்களைவிட அதிகமாய்ப் பயணப்பட்டிருக்கின்றன.
ஸெகண்ட் ஹாண்ட் டைம் சோவியத் வாழ்க்கை குறித்தும், அதன் சிதைவுக்குப் பின்னான மாற்றங்கள் குறித்தும் பல கோணங்களில் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது. சோவியத் கால அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி, ஒரு மோசமான வணிகச் சூழலில் சிக்கிக் கொண்ட மக்களின் உணர்வுகளை இந்நூலின் மையமாகக் கொள்ளலாம். நாங்கள் போராடியது சுதந்திரத்திற்காக, பிட்சாவுக்கும் பர்கருக்காகவும் அல்ல என்பது அடிக்கடி கேட்கும் ஒரு குரல். எத்தனை விதவிதமான குரல்கள்? ஒவ்வொரு குரலுக்கும் பல மாற்றுக்குரல்கள் ஒலிக்கின்றன. நிஜத்தில் நடந்ததிருக்கக்கூடும் என்று நாம் நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் கதையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் வெளிப்படுகிறது. ஒட்டுமொத்தமாய் ஒரு நாவலின் முழுமையை விஞ்சுகின்றன.
செர்னோபில் ப்ரேயர்ஸ் அணு உலை விபத்துக்குப் பின்னர் நிகழ்ந்த மக்களின் வரலாற்றினைப் பதிவு செய்கிறது. கடந்த காலமா எதிர் காலமா என்ற மயக்க நிலையை உருவாக்குகின்றது. கதிர்வீச்சுகளால் பாதிப்படுவோம் என்று தெரிந்தும் கணவனோடு அவன் சாகும்வரையில் துணையாக இருக்கும் இளம்பெண், கதிர்வீச்சுகளின் பாதிப்புகளைப் பற்றி அறியாமலே அப்பகுதியில் வேலைக்கு அமர்த்துபடுபவர்கள், தெரிந்திருந்தும் துணிந்து செல்பவர்கள், ரோபோக்கள் கூட செல்ல முடியாத நெருக்கத்திற்குச் சென்று வரும் ராணுவத்தினர் என்று பலரும் பேசுகிறார்கள். அவர்களது வாழ்க்கை, காதல், அவர்கள் படித்த இலக்கியம், அரசியல் என்று ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களைக் குறித்துப் பதிவு செய்கிறார்கள். அசாத்தியமான துணிச்சல், அசட்டுத்தனமான நம்பிக்கை என்று சோவியத் மனநிலையின் இருவேறு கூறுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. இதிலும் ஒவ்வொரு பதிவையும் ஒரு சிறுகதையாகக் கொள்ளலாம். உண்மை புனைவை விட விசித்திரமானது, சோகமானது; சுவாரசியமானதும்கூட என்கிற எண்ணம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இதைச் செய்திக்கட்டுரை என்று ஒதுக்கிவிட்டிருந்தால், இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பேரிழப்பாக இருந்திருக்கும். நல்ல வேளைவயாக நோபல் குழுவினர் அந்தத் தவிறைச் செய்யவில்லை.
‘பல குரல்களை இணைக்கும் எழுத்தின் மூலம், நமது காலத்தின் துயரத்துக்கும் துணிச்சலுக்கும், அவர் எழுப்பிய நினைவுச்சின்னத்துக்காக,’ அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ‘நம் காலத்தின் உணர்வுகளின் சரித்திரத்தையும், ஆன்மாவின் சரித்திரித்தையும் அவர் எழுதினார்; கூறுபொருளால் மட்டுமின்றி வடிவ ரீதியாகவும் சோதனை செய்து ஒரு புது இலக்கிய வகைமையை அவர் உருவாக்கினார்,’ என்றும் நோபல் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நோபல் குழு அறிவித்தத்து. இப்பாராட்டுகள் எவ்வகையிலும் மிகையானவை அல்ல.
டோரிஸ் லெஸ்ஸிங்கின் Grass is Singing – இனவெறி, மாறும் விவசாய முறைகள், திருமணத்துக்குப் பின் கிராமத்துக்குக் குடிபெயரும் ஒரு இளம் பெண்ணின் தனிமை என்று இந்த நூல் பல விதங்களில் எனக்கு அணுக்கமாக இருந்தது.
அதே போல், கண்மணி குணசேகரனின் கோரை. அகற்றமுடியாத கோரை முளைத்தவிட்ட விவசாய பூமியை களமாகக் கொண்டு, மாறும் பொருளாதாரச் சூழலில் ஒரு விவசாயியின் வாழ்க்கையை நேரடியாகவும், நுட்பமாகவும் விவரிக்கிறது.
விருதுகள் அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்கள் முன்பே வண்ணதாசனின் உலகிலும் சஞ்சாரம் செய்துவந்தேன். பின்னர், நெல்லையின் ஈரத்திலிருந்து, அசோகமித்திரனின் வரண்ட தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல்.
தமிழ் நவீன கவிதைகளை இவ்வாண்டு அதிகம் படிக்கவில்லை. ஆனால், பாரதியும், பழந்தமிழ்ப் புலவர்களும், திருமுறை நால்வரும், ஆங்கிலக் கவிகளும் ஆண்டு முழுவதும் துணைக்கு வந்தனர்.
இனி, பட்டியல்:
- How Children Learn – John Holt
- The Child’s Language and the Teacher – Krishna Kumar
- Vinoba on Education – Vinoba Bhave
- Woman in the Dunes – Abe Kobe
- Grass is Singing – Dorris Lessing
- Poems of Love and War – A.K.Ramanujan
- The Nation’s Favourite Poems (BBC Books)
- The Best of Ruskin Bond – Penguin
- சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
- அரூப நெருப்பு (சிறுகதைகள்) – கே.என்.செந்தில்
- கனிவு – வண்ணதாசன்
- உயரப்பறத்தல் – வண்ணதாசன்
- பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன்
- முகிலினி – இரா.முருகவேள்
- சிலப்பதிகார ஆய்வுரைகள் – ம.பொ சிவஞானம்
- வள்ளுவரும் இளங்கோவும் – அ .சா.ஞானசம்பந்தம்
- பகவான் புத்தர் – தர்மானந்த கோஸம்பி (மராத்தி) – தமிழில், கா.ஸ்ரீ.ஸ்ரீ.
- பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம்
- Box – ஷோபா சக்தி
- இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (கிழக்கு பதிப்பகம்) (நான் முடித்தவை:)
– மழை
– போர்வை போர்த்திய உடல்கள்
– கால எந்திரம்
– நந்தன் கதை
– ஒளரங்கசீப்
– ராமானுஜர்
– கொங்கைத்தீ - பருவம் – எஸ்.எல். பைரப்பா – தமிழில், பாவண்ணன்
- தண்ணீர் – அசோகமித்திரன்
- படைப்பாளிகளின் உலகம் (கட்டுரைத் தொகுப்பு) – அசோகமித்திரன்
- வ.வே.சு. ஐயர் – தி.செ.சௌ.ராஜன்
- அறம் – ஜெயமோகன் (இணையத்தில் சில கதைகளைப் படித்தது. முழுத் தொகுப்பு இப்போதுதான் படிக்கிறேன்)
- தேர்ந்தெடுத்த கதைகள் – கி.ராஜநாராயணன்
- காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும் – அருணன்
- The SecondHand Time – Svetlana Alexievich
- Chernobyl Prayers – Svetlana Alexievich
- தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் – நா.தர்மராஜன்
– இரண்டு ஹுஸ்ஸார்கள் (Two Hussars)
– குடும்ப மகிழ்ச்சி (Family Happiness)
– கஜக்கோல் (Kholstomer)
– நடனத்திற்குப் பிறகு (After the Ball)
– கிரைஸ்ஸர் சொனாட்டா (The Kreutzer Sonata) - குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்
- Beowolf – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
- Sir Gwain and The Green Knight – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
- A Study in Scarlet – Arthur Conan Doyle
- The Sign of the Four – Arthur Conan Doyle
- The Hound of the Baskervilles – Arthur Conan Doyle
- பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
- சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்
- Notes from Underground – Dostoevsky
- White Nights – Dostoevsky
- கோரை – கண்மணி குணசேகரன்
- சாகுந்தலம் – காளிதாசன் (கவித்துவம் குறைவான உரைநடை மொழியாக்கம்தான்…மொழிபெயர்ப்பாளர் பெயர் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேன்; அல்லயன்ஸ் பதிப்பகம் என்று நினைக்கிறேன்)
- பாஞ்சாலி சபதம் – பாரதி
- என் கதை – கமலா தாஸ் – தமிழில், நிர்மால்யா
- உலகப் புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைகள்) – வைக்கம் முகம்மது பஷீர்
- தபால்காரன் (Vieille France (The Postman)) – மார்ட்டின் டுகார்ட் (Roger Martin du Gard) – தமிழில், க.நா.சு
- The Agricultural Testament – Sir Albert Howard
- ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்
- A Street Car named Desire – Tennessee Williams
- கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் – போகன் சங்கர்
கூடுதலாக, இவ்வாண்டு படித்த சில நீண்ட சிறுகதைகளும், ஒரு முக்கியமான கட்டுரையும்:
- The Crocodile – Dostoevsky
- The Cloak – Gogol
- What we talk about when we talk about love – Raymond Carver
- Patriotism and Government – Leo Tolstoy
பகுதி படிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சில புத்தகங்கள்:
- (கு.அழகிரிசாமி சிறுகதைகள்)
- (கு.ப.ரா சிறுகதைகள்)
- (The Story of Philosophy – Will Durant)
- (தொல்காப்பியம்)
- (சிலப்பதிகாரம் – உ.வே.சா. பதிப்பு)
- (Norton’s Anthology of English Literature, The Major Authors)
- (Where I am calling from – Short stories – Raymond Carver)
தொடர்புடைய பதிவுகள் :