மனிதர்கள் மடிந்தபிறகு
கண்ணீர் வடிக்கும்
முன்னர் சிந்தித்ததுண்டா
உறவுகள் முறிந்தபோது
அழுததுண்டா என்று?
உறவுகள் முறிந்தபோது
அழுமுன்னர் சிந்தித்ததுண்டா
முறிவுகள் பழுதுபார்க்க
முனைந்ததுண்டா வென்று?
உறவுகள் முறியுமுன்னே
சிந்தித்ததுண்டா எப்படி
முறிக்காம லிருப்பதென்று?
போதும், இனி எந்த
இழவு வீட்டிலும் அழாதீர்கள்.
செத்தவனுக்குக் கனி
சுவைப்பதில்லை.
—————-
சண்டைக்கார உறவுக்காரியை
நீண்டநாட்கழித்து (தெருவில்
எதிர்பாராமற்) கண்டபோது
சட்டென்று எழுந்த
புன்னகையை மென்றுவிழுங்கினேன்.
அவள் தொண்டைக்குள்ளும்
என்னவோ சிக்கிக்கசிந்தது.
——————
சின்ன வயதில்
காது குடைந்துவிட்ட
பெரியம்மாவோடு சண்டை.
அன்றைக்கொரு விஷேஷத்தில்
அவளைச் சந்திக்கநேர்ந்தால்
விரைப்பாயிருக்கக் கண்ணாடிமுன்
பயிற்சியெடுத்துச் சென்றேன்.
காதுக்குள் தேங்கிக்கிடந்த
அழுக்கு அடைத்தது.