கண்ணாடிச் சிறையில்
குளிர்த்த தனியறையில்
வேலை செய்து
குளிர்த்த காரில்
பயணம் செய்து
கொசு வாராதிருக்க
வீட்டுச் சாளரங்களடைத்துக்
காற்றின் தழுவலற்ற வாழ்க்கை
பழகிவிட்டது.
சொந்த ஊர் சென்றிருந்தபோது
அரவமற்ற ஓர் ஞாயிற்றுக்கிழமை
அரசாங்கப் பேருந்தில் பயணித்தேன்.
அடுக்குமாடிகளுக்கிடையே முழுக்க
அடக்கம் செய்யப்படாத சாலைகளில்
விரைந்த பேருந்தில்
அகலத்திறந்திருந்த
சன்னல்கள் வழியாகக்
காற்று முகத்தில்
அறைந்தது.
காலம் பின்னே
பறந்தது.
‘டிக்கட் டிக்கட்!
சட்டுன்னு சொல்லுங்க,
எங்க போகனும்?’
அம்மாவிடம் என்றேன்.