கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்

ஏப்ரல் 28, 2015

கோவையில் இருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனை பதாகை இதழுக்காக நேர்காணல் செய்திருந்தோம். அவருடைய அநேக படைப்புகளைப் படித்திருந்த சுரேஷ், அன்பழகன், செந்தில் ஆகிய நண்பர்கள் உடனிருந்ததால் அமைந்த நல்லதொரு உரையாடலும், அதற்குப் பின், (பதிவு செய்யப்பட்ட) உரையாடலை எழுத்து வடிவத்தில் கொண்டுவர எடுத்துக்கொண்ட முயற்சியும் மிகவும் நிறைவான அனுபவங்களாக இருந்தன.

நீண்ட நேர்காணல்தான். எங்களுக்கும் கூட நீளத்தைக் குறைக்கலாமா என்ற சபலம் இருந்தது. ஆனால், நேர்காணலின் தரத்தையும் அதன் ஆவண மதிப்பையும் கருதி, எங்களுக்கு ஊக்கமளித்து, துணிவாக, சுருக்காமல் வெளியிட்டிருக்கும் பதாகை நண்பர்களுக்கு நன்றி.

கட்டாயம் படித்துப் பாருங்கள். அருமையானதொரு படைப்பாளியின் மனதுக்குள் ஓர் இனிய பயணமாக அமையும்.

——————————————

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


நாராயண் தேசாய்: காந்தியின் விளையாட்டுத் தோழர்

ஏப்ரல் 28, 2015

தி இந்துவில் வெளியான கட்டுரை.

———————-

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


நாராயண் தேசாய்: காந்தியின் ஒளியில் ஒரு பயணம்

ஏப்ரல் 28, 2015

சர்வோதயம் மலர்கிறது இதழில் வெளிவந்த கட்டுரை.

………………………..

Sarvodaya Cover

மார்ச் 15, 2015. காந்தியோடு நெருங்கிய நேரடித் தொடர்பில் இருந்தவர்களில், நம்முடன் வாழ்ந்துகொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவரான நாராயண் தேசாய் காலமானார். “காந்தியைக் கண்டிராத ஒரு தலைமுறைக்கு, காந்தி இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணரச் செய்தவர்,” என்று ‘காந்தி இன்று’ தளத்தை நடத்தும் நண்பர் சுனில் கிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து வருத்தத்தோடு தெரிவித்தார். என் மனதில் ஓடிக்கொண்டிருந்தவையும் அதே சொற்கள்தாம்.  இரண்டரையாண்டுகளுக்கு முன்பு, நாராயண் தேசாய், மதுரை காந்தி அருங்காட்சியம் ஒருங்கிணைத்த அவரது ‘காந்தி கதா’ நிகழ்வுக்காக வந்திருந்தபோதுதான் நாங்கள் இருவரும் அவரைச் சந்தித்தோம். அதன் பின் நாராயண் தேசாயோடு தனியே ஒரு நீண்ட நேர்காணலை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அந்த நேர்காணலையும், சுனில் எழுதிய ஒரு கட்டுரையையும், மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டது. நாராயண் தேசாயுடனான அந்தச் சந்திப்புதான் எனக்கு ஒரு புதிய உலகத்துக்கான வாயிலைத் திறந்துவிட்டது; பல காந்திய அன்பர்களோடு தொடர்பினை ஏற்படுத்தித் தந்தது. அதற்குப் பிறகும் அவரை இரண்டு முறை சந்தித்தேன். அவரோடு சில நாட்கள் என் குடும்பத்தோடு தங்கியும் இருந்திருக்கிறேன். இன்று அவர் நம்மோடு இல்லை என்பதை ஒரு காந்தியத் தலைவர் மறைந்துவிட்டார் என்பதைவிடக் கூடுதலாய், குடும்பத்தில் நெருக்கமான ஒரு மூத்தவரை இழந்துவிட்டதாகவே உணர்கிறேன். அதே சமயம், நாராயண் தேசாய் ஏன் என் மனதுக்கும் என்னைப் போன்ற பலருடைய மனங்களுக்கும் அவ்வளவு நெருக்கமாகவராகத் தோன்றினார் என்பதை விளக்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த கனமான தருணத்தைக் காண்கிறேன்.

நாராயண் தேசாய் பிறந்ததுமுதலே காந்தியின் அண்மையில் வளர்ந்தவர். காரணம், அவர் மகாதேவ் தேசாய்-துர்காபென் தம்பதியர்க்கு 1924ல் பிறந்தவர். மகாதேவ் தேசாய் காந்தியின் செயலராகவும், நண்பராகவும், இன்னொரு மகனாகவும் இருந்தவர். கடுமையான உழைப்பாளி. காந்தியுடன் இருந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரண்டுமுறைதான் விடுப்பு எடுத்திருக்கிறார். வாரயிறுதி, பண்டிகைநாள் என்று எதுவும் அவருக்கு இருந்ததில்லை. பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரவிக்கிடக்கும் காந்தியின் எழுத்துகளில் கணிசமான பகுதி மகாதேவ் தேசாயின் எழுதுகோள் வழியாக வெளிப்பட்டவை. காந்தி சொல்ல நினைத்தவற்றை காந்தியின் சொற்களில் அவரளவுக்குச் சிறப்பாக எழுதக்கூடியவர் மகாதேவ் தேசாய். மகாதேவ் எழுதிய கட்டுரைகள் பலவற்றோடு முற்றிலும் உடன்பட்டு, எந்த மாற்றமும் இல்லாமல், காந்தி தனது கையொப்பமிட்டு தன் பெயரில் ஹரிஜன் இதழில் பதிப்பித்திருக்கிறாராம்.  அந்த அளவுக்கு, காந்தியின் குரலாகவும் எழுத்தாகவும் விளங்கியவர் மகாதேவ். காந்தியின் அன்றாட வாழ்க்கையைத் தனது நாட்குறிப்புகள் மூலமாகப் பதிவுசெய்து உலகம் அறிய வழிவகுத்தவர். அத்தகைய ஒருவருடைய மகனாகப் பிறந்ததால், காந்தியின் நேச நிழல் அவரது இளமையில் அவர்மீது எப்போதும் படர்ந்திருந்தது. மகாதேவ் மறைந்து, பின் காந்தியும் மறைந்தபின்னும் அவர்மீது படர்ந்த அந்த நிழல் இறுதிவரை அவரைவிட்டு அகலவில்லை. “என் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கினை காந்தியின் பௌதிக இருப்பில் கழித்ததும், மீதி வாழ்வை அவரது ஆன்ம இருப்பில் கழித்ததும் எனக்கு பேருவகையூட்டும் அனுபவமாக இருந்ததுள்ளது,” என்று அவரது வாழ்வில் காந்தியின் நிரந்தர இருப்பைப்பற்றிக் கூறுகிறார்.

  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


சிறுநா அளவளாவிய சொல்

ஏப்ரல் 28, 2015

என் மகளும் நானும் எதற்கோ பச்சை நிறத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயற்கையின் நிறம் பச்சை, என்று தொடங்கி வைத்தேன். இலையின் நிறம் பச்சை, கிளியின் நிறம் பச்சை என்று தொடர்ந்தாள்.
தாவும்புல் பச்சை என்று முடித்தாள். சீக்கிரம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துல்லியத்துடன், புல்தாவி என்று சொல்லும் திறன் பெற்றுவிடுவாள் என்பது அவள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நீர்வீழ்ச்சியாய்ப் பொழிந்தது.

என் மனைவி கொஞ்சம் யதார்த்த தளத்தில் இயங்குபவள் – வெட்டுக்கிளியென்று திருத்துகிறாள். அவள் இப்படித்தான். காந்தி பற்றி கல்கி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பகுதியை – 1956ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரதியைப் பத்திரமாக பைண்ட் செய்து வைத்து, கண்டுபிடித்தும் கொடுத்துவிட்ட தியாகுவின் நூலகத்திலிருந்து நேற்று எடுத்துவந்திருந்தாள். மகிழ் அப்புத்தகத்தைப் பிரித்து, எழுத்துக்கூட்டி, மாந்தருக்குள் ஒரு மாணிக்கம் என்று தலைப்பைப் படிக்கிறாள். நான் மாந்தர் என்றால் மனிதர், மாணிக்கம் என்றால் என்ன தெரியுமா என்று அவளை கேட்கிறேன். மனைவி குறுக்கிட்டு, அந்தத் தலைப்பு மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்கிறாள். மோனை நயம் தெரியாத மனிதராக இருந்திருப்பாரோ என்று கல்கியை நொந்துகொள்கிறேன்.