Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse – and Thou
Beside me singing in the Wilderness –
And Wilderness is Paradise enow.
– Rubaiyat of Omar Khayyam, Edward FitzGerald (1859)
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்; – அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்றன்
காவலுற வேணும்;என்றன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
—–
அகத்தூண்டுதல்? தற்செயல்? பலருக்கும் தோன்றும் கரு? எதுவாக இருந்தாலும், ஒரு மகாகவியின் ஒளி இவ்வரிகளில் மிளிர்கிறது. குறிப்பாக, ‘in the wilderness’ – ‘காட்டுவெளியினிலே’ இரண்டுக்கும் உள்ள ஒப்புமை அருமை. உமர்கய்யாம் ஒரு மரக்கிளை கேட்டால், இவன் சற்றே அதிகமாய், காணி நிலமும் ஒரு மாளிகையும் பத்துப்பன்னிரண்டு தென்னைமரமும் கேட்கிறான். நிலவொளியும், குயிலோசையும், இளந்தென்றலும் இருக்கையில் ரொட்டியைப்பற்றிய கவலை இவனுக்கில்லை. பக்கத்திலே பெண்ணும் பாட்டும் வேண்டும் என்று இருவரும் கேட்கின்றனர் – அதிலும் இவனுக்குப் பத்தினிப் பெண் வேண்டும். கவிதை நூல் வேண்டுமென அவன் கேட்க, கவிதைகள் கொண்டுதர வேணும் என்று இவன் வேண்டுகிறான். கூட்டுக் களியில் பிற போதை வஸ்துகள் பற்றிய நினைப்பு பாரதிக்கு இப்போது வரவில்லை. காட்டுவெளியில் களித்திருப்பதே சொர்க்கம் என்று உமர்கய்யாம் நினைக்கிறான். அந்தக் காட்டுவெளியில் களித்திருக்கும்போதும் வையத்தைப் பாலித்திடல் பற்றி பாரதி அக்கறை கொள்கிறான்.
பாரதி உமர்கய்யாமை படித்திருக்கிறானா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லவும். என்னிடமுள்ள கட்டுரைத் தொகுப்புகளிலும், இணையத்திலும் தேடிய வரை எதுவும் கண்ணில் படவில்லை. பாரதியின் முழுத்தொகுப்பில் தேடினால் உறுதிசெய்யலாம்.) விட்மனையும், ஜப்பானிய ‘ஹொக்கு’வையும், நவீனக் கவிதைப் போக்குகளையும் உள்வாங்கியிருந்த பாரதி, முகமது நபி பற்றி உரையாற்றிய பாரதி, பிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமைப் படித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். சாகா வரம் கேட்டு, மரணம் பொய்யாம் என்று சொன்ன பாரதி, நிலையாமையையும் முழுமுற்றான மரணத்தையும் அதிகம் பாடிய உமர்கய்யாமை எப்படி எடை போட்டிருப்பான் என்று தெரியவில்லை.
பாரதியின் சமகாலத்தவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உமர்கய்யாமைப் பின்னாளில் மொழிபெயர்த்திருக்கிறார். அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் கவிமணியின் கருத்துப்படி தமிழில் ‘பாரதி ஒருவர்தான் மகாகவி’ என்று எழுதியுள்ளார். கவிமணி பாரதியைப் பற்றி இப்பிரபல வரிகளைப் பாடியுமிருக்கிறார்:
பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!
—*—*—*—
உமர்கய்யாமின் இக்கவிதையை மொழிபெயர்ப்பதில் கவிமணி நிறைய சுதந்திரம் எடுத்திருக்கிறார். பிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்புமே அப்படித்தான் என்கிறார்கள் (wonderfully unfaithful translation).
வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?
இதே கவிதையை, ஒமர் கய்யாமை வேறு பல மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிபெயர்த்துள்ள ஆசை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:
.ஜாடி மதுவும் கவிதை நூலும்
ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,
பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்
சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.
கண்ணதாசனின், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்ற வரியும் நினைவுக்கு வருகிறது.