ஒரு கவிதை – சில கவிஞர்கள்

நவம்பர் 20, 2018

Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse – and Thou
Beside me singing in the Wilderness –
And Wilderness is Paradise enow.

– Rubaiyat of Omar Khayyam, Edward FitzGerald (1859)

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்; – அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்றன்
காவலுற வேணும்;என்றன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

—–

அகத்தூண்டுதல்? தற்செயல்? பலருக்கும் தோன்றும் கரு? எதுவாக இருந்தாலும், ஒரு மகாகவியின் ஒளி இவ்வரிகளில் மிளிர்கிறது. குறிப்பாக, ‘in the wilderness’ – ‘காட்டுவெளியினிலே’ இரண்டுக்கும் உள்ள ஒப்புமை அருமை. உமர்கய்யாம் ஒரு மரக்கிளை கேட்டால், இவன் சற்றே அதிகமாய், காணி நிலமும் ஒரு மாளிகையும் பத்துப்பன்னிரண்டு தென்னைமரமும் கேட்கிறான். நிலவொளியும், குயிலோசையும், இளந்தென்றலும் இருக்கையில் ரொட்டியைப்பற்றிய கவலை இவனுக்கில்லை. பக்கத்திலே பெண்ணும் பாட்டும் வேண்டும் என்று இருவரும் கேட்கின்றனர் – அதிலும் இவனுக்குப் பத்தினிப் பெண் வேண்டும். கவிதை நூல் வேண்டுமென அவன் கேட்க, கவிதைகள் கொண்டுதர வேணும் என்று இவன் வேண்டுகிறான். கூட்டுக் களியில் பிற போதை வஸ்துகள் பற்றிய நினைப்பு பாரதிக்கு இப்போது வரவில்லை. காட்டுவெளியில் களித்திருப்பதே சொர்க்கம் என்று உமர்கய்யாம் நினைக்கிறான். அந்தக் காட்டுவெளியில் களித்திருக்கும்போதும் வையத்தைப் பாலித்திடல் பற்றி பாரதி அக்கறை கொள்கிறான்.

பாரதி உமர்கய்யாமை படித்திருக்கிறானா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லவும். என்னிடமுள்ள கட்டுரைத் தொகுப்புகளிலும், இணையத்திலும் தேடிய வரை எதுவும் கண்ணில் படவில்லை. பாரதியின் முழுத்தொகுப்பில் தேடினால் உறுதிசெய்யலாம்.) விட்மனையும், ஜப்பானிய ‘ஹொக்கு’வையும், நவீனக் கவிதைப் போக்குகளையும் உள்வாங்கியிருந்த பாரதி, முகமது நபி பற்றி உரையாற்றிய பாரதி, பிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமைப் படித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். சாகா வரம் கேட்டு, மரணம் பொய்யாம் என்று சொன்ன பாரதி, நிலையாமையையும் முழுமுற்றான மரணத்தையும் அதிகம் பாடிய உமர்கய்யாமை எப்படி எடை போட்டிருப்பான் என்று தெரியவில்லை.

பாரதியின் சமகாலத்தவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உமர்கய்யாமைப் பின்னாளில் மொழிபெயர்த்திருக்கிறார். அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் கவிமணியின் கருத்துப்படி தமிழில் ‘பாரதி ஒருவர்தான் மகாகவி’ என்று எழுதியுள்ளார். கவிமணி பாரதியைப் பற்றி இப்பிரபல வரிகளைப் பாடியுமிருக்கிறார்:

பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!

—*—*—*—

உமர்கய்யாமின் இக்கவிதையை மொழிபெயர்ப்பதில் கவிமணி நிறைய சுதந்திரம் எடுத்திருக்கிறார். பிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்புமே அப்படித்தான் என்கிறார்கள் (wonderfully unfaithful translation).

வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?


இதே கவிதையை, ஒமர் கய்யாமை வேறு பல மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிபெயர்த்துள்ள ஆசை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:

.ஜாடி மதுவும் கவிதை நூலும்

ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,

பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்

சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.


கண்ணதாசனின், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்ற வரியும் நினைவுக்கு வருகிறது.



எழில்

நவம்பர் 20, 2018

வாணியோட கன்னுக்குட்டி பொண்ணா இருந்தா எழில்னு பேர் வைக்கப் போறேன்.

சரிடா.

ஆணா இருந்தா எழில்னு வர்றமாதிரி என்ன பேர் வைக்கலாம்?

எழில்ங்கிறதே பொதுப்பேருதான். காளையா இருந்தாலும் வைக்கலாம். பசுவா இருந்தாலும் வைக்கலாம்.

இல்லப்பா, அது எப்படிப்பா?

‘ஆமா, இவதான் எல்லாருக்கும் பேரு வைச்ச மகராசி. எத்தன பேருக்கு பேர் வைச்சுருக்க நீ?’ என்று செல்லமாக அதட்டினாள் அம்மா.

‘காரி, மதுரா, வாணி, நிலா, ராசு, கல்லு, குட்டா,…’ என்று மூச்சுவிடாமல் அடுக்கினாள். நாய்,ஆடு, மாடுகளுக்கு அவள் வைத்த பெயர்கள்.

பொம்மைகளுக்கு வைத்த பெயர்களை மறந்துவிட்டாள். ‘தாரா, மேகி, ஜாய்,…’ கைகாலாட்டும் புதிய மர பொம்மைக்கு டின்டின் என்று பெயரிடலாமா என்று யோசித்துவிட்டு, மீசை, தொப்பி இருப்பதால் கேல்குலஸ் என்ற பெயரை முடிவுசெய்திருக்கிறாள்.

ஒரு பார்பி பொம்மைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு காந்தாரி என்று பெயர் வைத்திருந்தாள்.

காந்தார மன்னன் சுபலனுக்குப் பின்னர் காந்தாரி என்ற பெயரைச் சூட்டியவர்கள் யாரேனும் உண்டா அறிஞர் பெருமக்களே?


96

நவம்பர் 20, 2018

96 சன் டீவியில் வரும்வரை காத்திருக்காமல் ஞாயிறன்றே கே.ஜி.யில் பார்த்தோம். பள்ளிக்கால நினைவுகள் ஏராளமாகத் திரண்டு வந்தன.

எத்தனை தடவை இதே போல பேருந்தில் அடித்துப்பிடித்து வந்திருப்போம் என்று மகளிடம் சொல்லியவாறு வந்தேன். எத்தனை முறை அந்தப் படிகளில் அமர்ந்து காத்திருந்திருப்போம். டிக்கெட் வாங்கித்தருவதாகச் சொல்லி 30 ரூபாயை எப்படி என்னிடமிருந்து ஒருவன் ஏமாற்றினான்.

திருமணத்துக்குப்பின் முதன்முதலாக ஒரு படத்துக்கு வந்தோம்…யாராவது அப்பா அம்மாவைக் கூட கூட்டீட்டு வருவாங்களா என்று மனைவிக்கும் அலறும் நினைவுகள்.

உள்ளே சென்றோம். புகைப்படக் கலைஞராக நாயகன். ‘அப்பா, அந்தப் பக்கத்துக்கும் இந்தப் பக்கத்துக்கும் கலர் வித்தியாசமா இருக்குப்பா,’ என்றாள் மகள். இருள் காட்சியொன்றில் தோன்றிய விண்மீன்கள் விடிந்த பின்னும் விலகவே இல்லை. கொஞ்ச நேரம் ஏதோ புது திரை மொழியோ என்று நினைத்திருந்தேன். பின்னர் தான் புரிந்தது.

திரையில் மேலிருந்து கீழாய் நான்கு கோடுகள். நிறைய ஓட்டைகள், ஒளி பாய்ந்து விண்மீன்களாய் மிளிர்ந்தன.


பேருந்து

நவம்பர் 20, 2018

சென்ற வாரம், எங்கள் பயிலக மாணவர்கள் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிற அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குப் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார்கள். பேருந்து வந்ததும் எப்போதும் போல் முண்டியடித்துக்கொண்டு ஏறியிருக்கிறார்கள். நடத்துனர் கோபமாகத் திட்டி, அவர்கள் யாரையும் ஏற்றாமலே பேருந்தை நகர்த்தச்சொல்லிவிட்டார். பேருந்து கொஞ்ச தூரம் போனதுமே, யாரோ ஒரு மாணவன் கல்லை வீசியெறிய, கண்ணாடி சிதறியிருக்கிறது. உடனே காவல்துறையினர் அழைக்கப்பட்டு, 9வது, 10வது படிக்கும் எல்லா மாணவர்களையும் மிரட்டி, விசாரித்திருக்கிறார்கள். ஜட்டியோடு உட்கார வைத்துவிடுவேன் போன்ற மிரட்டல்களையெல்லாம் மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சின்னதாக அடியும் வாங்கியிருக்கலாம். ஆசிரியர்களும் காவல்துறையினருக்கும் நடத்துனருக்கும் ஆதரவாகவே பேசினார்களாம்.

எங்கள் மாணவர்கள் சேதமில்லாமல், தாமதமாக வீடு திரும்பினார்கள்.

‘நீங்க ஏன்டா நெருக்கியடிச்சுட்டு ஏறணும். வரிசையா ஏறலாமில்ல?’

’30-40 பேர் உட்கார்ர பஸ்ஸுல, நாங்க 100 பேர் எறணுங்கண்ணா. அடிதடியில்லாம எப்படிண்ணா ஏற முடியும்? எத்தனை தடவை நானே படில விழுகிற மாதிரி தொங்கிட்டு வந்திருக்கேன். பிரவீன்கூட ஒரு நாள் விழுந்தாட்டாங்கண்ணா.’

பல நூறு மாணவர்கள் படிக்கிற பள்ளி. மேற்கே போகும் பேருந்து அந்த நேரத்துக்கு அது ஒன்றுதான். அடுத்த வண்டி அரை மணிநேரம் கழித்து வரும்.

அடுத்த முறை இப்படி நடந்தால், இது மாதிரி கல்லெறியாதீர்கள். புகார் எழுதிப் பழகுங்கள். கலெக்டர் வரைகூடப் போகலாம். தேவைப்பட்டால் அமைதியாகப் போராடிப் பழகுங்கள். எப்போதும் உங்கள் தரப்பில் தப்பில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்று அறிவுரைகளை அடுக்கினேன். வேறென்ன சொல்ல?


பயிலகத்தில் திருக்குறள்

நவம்பர் 20, 2018

இந்த மனிதர் உண்மையிலேயே கவிதைக்குள் மாயங்கள் செய்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் திருக்குறள் கற்றுக்கொள்வதை நேசிக்கின்றனர். கற்றுத்தரும்படி கட்டாயப்படுத்துகின்றனர் – ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களுக்காவது. புத்தகத்தையே தொட மறுப்பவர்களும், குறள்களைக் கேட்டு மனனம் செய்து ஒப்பிப்பதில் பேருவப்பு கொள்கின்றனர். ஒரு சொல்லைக்கூட உரக்கப் படிக்க மறுப்பவர்களும், தொண்டை கிழிய இக்குறளைக்கூடக் கூவுகின்றனர்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.

திருக்குறள் முழுவதையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒரு தீர்ப்பு தரப்பட்டது. என்னைக் கேட்டால், திருக்குறளைப் பாடத்திட்டத்திலிருந்தும், தேர்வுகளிலிருந்தும் முழுவதுமாய் நீக்கிவிடுங்கள் என்பேன். அதை ஒரு கொண்டாட்டமாக்குங்கள். எங்கள் குழந்தைகளைப் போலவே எல்லாக் குழந்தைகளும் திருக்குறளைக் கற்றுக்கொடுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள், அவர்களாகவே அவரவர் வேகத்தில் கற்பார்கள், மற்றவர்களோடும் மற்றவர்களிடமிருந்தும் கற்பார்கள், ஒருவர் மற்றவரை நிறைவு செய்வார்கள், மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.


குடி

நவம்பர் 20, 2018

கிராமம் நலம்பெற என்னவெல்லாம் செய்யலாம் என்று பயிலக மாணவர்களோடு எதேச்சையாக ஒரு சிறிய உரையாடல் நடந்தது. சுத்தம், பசுமை, கல்வி, சுற்றுச்சூழல் என்று பலவாறாகச் சொன்னார்கள்.

‘பசங்களா, எல்லாம் சரி, குடியை விட்டுட்டீங்களே,’ என்றேன்.

‘டாஸ்மாக்க மூடணும்ணா’

‘சரி, நாம என்ன பண்ணலாம்?’

‘நாங்க சொன்னா வீட்டுல அடிக்கிறாங்கண்ணா.’

‘எல்லாருக்கும் ஒரு மாலையைப் போட்டுவிடறது தாங்கண்ணா ஒரே வழி.’

‘அப்பவும் ரொம்ப நினெப்பு எடுத்தா, மாலையக் கழட்டி வைச்சிட்டுக் குடிச்சிட்டிட்டு வந்துட்டு, அப்புறமா மறுபடியும் மாலையப் போட்டுப்பாங்கண்ணா.’


சிவராம காரந்த்தின் சுயசரிதை

நவம்பர் 20, 2018

சிவராம காரந்த்தின் சுயசரிதையான ‘பித்து மனத்தின் பத்து முகங்கள்’ நூலிலிருந்து (மொழிபெயர்ப்பு: பாவண்ணன், நூறுசுற்றுக்கோட்டை தொகுப்பு) :

[கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, கல்லூரியைத் துறந்திருக்கிறார். கதராடை அணிந்து, கிராமங்கள்தோறும் அலைந்திருக்கிறார். சமூகப் பணிகளும் வெள்ளநிவாரணப் பணிகளும் செய்திருக்கிறார். காந்தியை ஆதர்சமாகக் கொண்டு, அப்போது பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருக்கிறார். தாசிகள் பிரச்சனை அவரை மிகவும் வருத்தியிருக்கிறது.]

(தாசி குலத்தில் பிறந்த நண்பரிடம்) “உன் சகோதரிகளைப் பணத்திற்காக விற்காமல் இருக்கும் பட்சத்தில், எங்கிருந்தாவது அவர்களுக்குத் தகுந்த வரன்களைத் தேடிக்கண்டுபிடித்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னேன். அவனுக்கு ரொம்பவும் சந்தோஷம் ஏற்பட்டது. அவன் ஒத்துக் கொண்டான். ஆனாலும் அவனுடைய வீட்டுக்காரர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா என்கிற ஐயம் எனக்கு இருந்தது. அவன் தன்னுடைய வீட்டுக்குச் சென்று அவர்களிடம் இந்த விஷயத்தை முறையிட்டான். அவர்களும் இத்திருமணத்துக்குத் தம் ஒப்புதலை அளித்தார்கள். அன்று என் வார்த்தையின் பின்னணியிலிருந்த பொறுப்பை உணர்ந்து கொண்டேன்.

காந்தியின் சமாதானப் பேச்சு

ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகள், தாசிக் குலத்திலேயே இத்திருமணத்துக்குத் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைப்பார்களா என்று தேடியலைந்தேன். வடகன்னட மாவட்டம், பம்பாய், மைசூர்ப் பகுதிகளில் சுற்றியலைந்தேன். என் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை. என் வார்த்தைகளின் பின்னணியிலிருந்த பொறுப்பின் சுமை புரிந்தது. மிகவும் நிராசையோடு ஒருமுறை இதைப்பற்றிக் காந்திக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவர், அந்தப் பெண்கள் வாழ்நாள் முழுக்க பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டு வாழட்டும் என்று வழிசொல்லி எழுதினார். அதைப்படித்து நான் மிகவும் அலுத்துக் கொண்டேன். கண்ணீர் சுரந்தது. மனித சுபாவத்தின் அறிமுகமே காந்திக்கு இல்லை. தன்னால் செய்ய முடிந்ததை எல்லாராலும் செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்படிப்பட்ட நிலையில் எனக்கு என்ன பதில்? நண்பனின் வீட்டார் வயசுக்கு வந்த பெண்களை எவ்வளவு காலத்துக்கு வீட்டிலேயே வைத்திருக்க முடியும்? ஒருவேளை இது கைமீறிப்போகும் சந்தர்ப்பம் வரும்போது அம்மூவரில் யாரேனும் ஒரு பெண்ணை நானே திருமணம் செய்துகொண்டு என் வார்த்தையைக் காப்பேற்றவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அப்போது பிரம்மச்சரிய வாழ்க்கை என் லட்சியமாக இருந்தது.

(பிறகு அம்மூவருக்குமே வரன்கிடைத்துத் திருமணம் செய்து வைக்கிறார். ஆண்டுக்கொரு முறையாவது அவர்களைச் சந்திக்கிறார்.)


லேலி லாங் சோல்ஜர் கவிதைகள்

நவம்பர் 20, 2018

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] – தமிழினி மின்னிதழில் வெளிவந்தது

38

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள் வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஒரு குட்டி அர்பன் நக்சல்

நவம்பர் 20, 2018

அப்பா, இந்த புக் படிக்கட்டுமாப்பா?

ம்.

அப்பா!

ம், லைப்ரரி புக் எல்லாம் இருக்கேடா…

அப்பா, ஏதாவது புக் எனக்கு டெம்ப்ட் ஆயிருச்சுனு வைச்சுக்கப்பா…அப்பா!

ம்.

அப்பா, ஏதாவது புக் எனக்கு டெம்ப்ட் ஆயிருச்சுனு வைச்சுக்கப்பா, அத படிச்சு முடிக்கிற வரைக்கும் எம் மனசெல்லாம் அதுலதான் இருக்கும்.

சரி, படி.

ய்யேஏஏ…



சரிதான், இவளும் அர்பன்/ரூரல் நக்சலாகத்தான் வருவாள் போலிருக்கிறது.


பயிலகம்

நவம்பர் 20, 2018

(முகநூலில் செப்டெம்பர் 9ம் தேதி எழுதிய பதிவு)

எங்கள் பயிலகத்திற்கு ஒரு புதிய இடம் கிடைத்துள்ளது. தற்போது ஜப்பானில் வசித்துவரும் அற்புதமான தம்பதியினரான கிருஷ்ணக்குமார்-காயத்ரி தங்கள் நிலத்திலுள்ள வீட்டையும் அறைகளையும் பயிலகம் நடத்த அளித்துள்ளனர். அவர்களது நிலம் எங்களுடையதைக் காட்டிலும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இதுவரை அரச மரத்தடியில், விநாயகர் கோயிலருகில், பயலிகம் நடத்தி வந்தோம். அதற்கென ஒரு தனித்த எழில் இருக்கத்தான்செய்தது. ஆனால், சாதிப் பிரச்சனைகள், மழை, மற்றும் பிற சிக்கல்களும் இருந்தன.

இப்புதிய இடம் குழந்தைகள் மேலும் பல செயல்கள் செய்வதற்கு வழிவகுக்கக்கூடும். பிற நண்பர்கள் பிற வழிகளில் உதவியுள்ளனர். புதிய சவால்களும் உள்ளன…அவற்றையும் சந்தித்துத்தான் பார்ப்போம். ஆனால், இப்போது நாங்கள் தனித்துச் செயல்படவில்லை என்பதே பெரும் உற்சாகமாகத்தான் உள்ளது.