சர்வோதய தினம் 2019

பிப்ரவரி 18, 2019

சுதந்திரத்துக்குப் பின்னான காந்தியத் தலைவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவரான ஜெகந்நாதன் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னெடுப்பில் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வோதய தின நிகழ்வுகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் விருது கட்டிடத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்.கீதா, மூத்த சர்வோதய இயக்கச் செயல்பாட்டாளர்களான சுந்தரராஜன், ராஜேந்திரன் ஆகியோருக்கும், மறைந்த இத்தாலிய காந்தியத் தலைவர் ஆல்பர்டோ லபாட்டே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த மூத்த செயல்பாட்டாளர்களோடு சேர்த்து இளம் நண்பர்களான ‘தன்னாட்சி’ நந்தகுமார், ‘குக்கூ’ சிவராஜ் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

நந்தகுமார் சிவா கிராம சபைகள் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பங்காற்றியிருக்கிறார்.

சிவராஜ் குழந்தைகளோடு பணியாற்றுவதற்கு ஒரு பெரிய இளைஞர் திரளை ஈர்த்திருக்கிறார்.

முந்தைய நாள், மாணவர்களோடு பேசிய ‘துலா’ அனந்து சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும் கரிசனத்துடன் செய்ய வேண்டிய தொழில்கள் குறித்த தன் விரிவான, செறிவான, உணர்வுப்பூர்வமான உரை மூலம் வந்திருந்த அனைவரின் மனசாட்சிகளையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்.

நண்பர்கள் சிவகுருநாதன், ஸ்டாலின் ஆகியோரும் மூன்று நாட்களும் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி கடலைமிட்டாய், குக்கூ நூல்கள் ஆகியவற்றுக்கான விற்பனையரங்குகளை அமைத்து, மாணவர்களோடு உரையாடி சமூகநலத் தொழில்கள் குறித்த ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழா முடிந்தபிறகு, கடந்த ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து இந்தியா வந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் வில்லிஸ் தன் மனைவி மிக்காவுடன் எங்களோடு வந்து எங்கள் கிராமத்திலும், கோவையில் பெற்றோர் வீட்டிலும் தங்கியிருந்தது மாறுபட்ட ஓர் அனுபவமாக அமைந்தது. கிராம மாணவர்களுக்கும் அயல்நாட்டினரோடு முதன்முதலாக உரையாடி பல்வேறு கேள்விகளைத் தொடுத்து உறவாட ஒரு வாய்ப்பு.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.


நம்ப ஆசைப்படுபவன் – பேர் லாகர்குவிஸ்டின் அன்பு வழி

பிப்ரவரி 10, 2019

பேர் லாகர்குவிஸ்டு எழுதிய அன்பு வழி (Par Lagerkvist – Barabbas) நாவலை முதலில் ஆங்கிலத்தில் படிக்கத்தொடங்கினேன். ஒரு சில அத்தியாயங்களுக்குப் பிறகு, தமிழுக்கு மாறிவிட்டேன். இதற்கு முன், பிற நூல்களைத் தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் முடித்திருக்கிறேன். இது மாறுபட்ட அனுபவம்தான். சுவீடிஷ்ஷிலிருந்து ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும்கூட க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்பதை விட மேலானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தது [சொல்லுக்குச் சொல் இணையாக இல்லாவிட்டாலும், ஆங்கில மூலத்துக்கு நெருக்கமாகவே மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டாம் முறை மீண்டும் வேகமாக ஆங்கிலத்திலும் படித்து முடித்தேன். எந்த இடமும் நெருடவில்லை.] நல்ல மொழிபெயர்ப்புகளுக்கு இன்னும் அவசியம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படாத உலக இலக்கியங்களை (நல்ல) தமிழிலேயே படிப்பது சில சமயங்களில் நிறைவாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது.

‘மனதை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்,’ என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில், அதிக எதிர்பார்ப்போடு நிகழ்ந்த முதல் வாசிப்பில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ‘அன்பு வழி’ என்ற தலைப்பு காட்டிய தடத்தில் நான் எதிர்பார்த்தது பக்கத்துக்குப் பக்கம் பீறிடும் அன்பை. ஆனால், அங்கு அதிகமாகக் கண்டதோ, பீறிடத்துடிக்கும் அன்பை அடக்கி எழும் அவநம்பிக்கையை. எனினும் வண்ணநிலவனுக்காகச் செய்த இரண்டாம் வாசிப்பில் வேறு ஓர் உணர்வு கிடைத்தது; முதல் வாசிப்பில் விட்ட இடைவெளிகளை இரண்டாம் வாசிப்பில் நிரப்பிக் கொள்ள முடிந்தது; தொய்வாகத் தெரிந்த இடங்கள் அவ்வளவு தொய்வாகத் தெரியவில்லை. யேசு காட்டிய அன்பு வழியை மையமாகக் கொண்டிருந்தாலும், அன்பை அறிந்திராத, யாருக்கும் அன்பை வழங்கவியலாத பாரபாஸின் கதைதான் இது. ‘வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் வெறுத்து அவ்வெறுப்பிலே உயிர் வைத்திருந்தவன் பாரபாஸ்.’ தனக்குப் பதிலாக யேசு சிலுவையில் அறையப்படுவதை மறைந்திருந்து கண்ட நாள் முதலே ஒரு தேடல் தொடங்கியிருந்தாலும், அவனால் யேசு கடவுள் என்பதையோ கடவுளின் மகன் என்பதையோ அவர் புத்துயிர்ப்பு பெற்று மீண்டார் என்பதையோ நம்பமுடியவில்லை. லசாரஸைச் சந்தித்தபின் அவனை மரணத்திலிருந்து அவர் எழுப்பினார் என்பதை நம்பினாலும், அப்படி எழுப்பியிருக்கக்கூடாது என்று நினைக்கிறான். இந்த நம்பிக்கையின்மையே அவனை நீங்காப் பெருந்துயரில் ஆழ்த்துகிறது. அடிமைத்தனத்தின் அடையாளமான அவனது கழுத்துப்பட்டையில் ‘கிருஸ்து-ஏசு’ என்று பொறித்துக்கொண்டிருந்தாலும், விசாரணையின் போது அவரை நம்பாமலிருப்பதாகவே சொல்கிறான். பின் ஏன் அப்பெயரைப் பொறிக்கவேண்டும் என்று கேட்டதற்கு, ‘நான் நம்ப ஆசைப்படுவதால்’ என்கிறான். அப்பெயரை அடித்துவிடவும் ஒப்புக்கொள்கிறான்.

ஏசுவின் மீதான நம்பிக்கையின் பொருட்டு உயிரைத் துறக்கும் இரண்டு பாத்திரங்கள் பாரபாஸுக்கு நெருக்கமானவர்களாக வருகின்றனர். யேசுவுக்குச் சாட்சியம் கூறியதால் கல்லடிபட்டு மரணமடைந்த உதடு பிளந்த பெண்ணைப் பல காத தூரம் கைகளால் சுமந்து சென்று அடக்கம் செய்கிறான். அவனோடு பல காலம் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஸஹாக் யேசுவை மறுக்க மறுத்து, மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறான். சிலுவைக்கு அனுப்பப்படுகிறான்.
/“உன் கடவுளை நீ மறுக்காவிட்டால், உன்னை யாரும் காப்பாற்றமுடியாது. நீ சாகவேண்டியதுதான்.”
‘என் பிரபுவை, என் கடவுளை நான் மறுப்பது எப்படி?”/

ஸஹாக்கின் மரணத்தையும் கண்ணீர் மல்க மறைந்து நின்று பார்க்கிறான் பாரபாஸ். ஆனால் எதுவும் பாரபாஸின் அவநம்பிக்கையை முழுவதுமாக அசைக்கமுடியவில்லை. ரோமாபுரியின் புதுமைகளாலும் அவனது வெறுப்பை அகற்ற முடியவில்லை.

‘பல தேசத்து மக்கள், பல பாஷை பேசுகிறவர்கள் இங்கு வந்து கூடினர். பொருளும் பணமும் ஏராளமாக எங்கும் இறைபட்டது. […] இதெல்லாம் கண்டு வேறு ஒருவனின் கண்கள் பரவசப்பட்டிருக்கும். பாரபாஸ் இதெல்லாவற்றையும் கண்டும் காணாதமாதிரி நடமாடினான். அவனுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. இந்த உலகத்தின் படாடோபங்களைப் பற்றி அவனுக்கு என்ன கவலை? இது அவன் கவனத்துக்குரியதல்ல என்றே அவன் எண்ணினான். அப்படி அவனால் அலட்சியமாகவ இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம்பற்றி அவன் அடிமனதிலே ஒரு வெறுப்பும் தோன்றிக் கொண்டிருந்தது.’

அவன் இறுதியில் கிருத்துவத்துக்கு உதவுவதாக நினைத்துச் செய்யும் ஒரே செயலும் அதற்கு எதிரானதாக, சீசருக்கு இயைந்ததாக, ஒருவித துன்பியல்-நகைப்பில் முடிகிறது. யேசுவைச் சிலுவையில் ஏற்றுவதற்காக, முதலில் சிலுவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் இறுதியில் சிலுவையிலேயே அறையப்படுகிறான்.

/அவன் ஆயுள் பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் அவன் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுகிற மாதிரிச் சொன்னான்.

“என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.” /

அப்போதும் அவன் ஆத்மாவை அளித்தது இருளுக்கா, இறைவனுக்கா என்பது உறுதியாகத் தெரிவதில்லை.

வேறு எவரை விடவும் தனக்காகவே யேசு உயிர்விட்டதாக பாரபாஸ் கருதுகிறான். அப்படித் தனக்காக உயிர் துறந்த ஒருவனுக்காக பிறர் தமது உயிர்களையும் தரத் தயாராக இருக்கும் போது தன்னால் குறைந்தபட்சமான நம்பிக்கையைத் தர முடியவில்லையே என்பதுதான் பாரபாஸை வருத்திய உணர்வாக இருக்கவேண்டும். அந்த அவநம்பிக்கை தரும் குற்றவுணர்வே வெறுப்பாகவும் அக்கறையின்மையாகவும் மாறுகிறது. நம்ப விரும்புகிற ஒருவனுக்கு நம்பிக்கை வராத போது நிகழும் துயரமும், ஒரே சங்கிலியால் பல்லாண்டுகள் பிணைக்கப்பட்டாலும் மனம் பிணைக்கப்படாமல் தனிமையில் உழல்வதும், அத்தனை வெறுப்பையும் மீறி எப்போதாவது பீறிட்டெழும் அன்புமே பாரபாஸ்.

பாரபாஸை அடிமைப்படுத்தியிருந்த கவர்னரைப் பற்றிய ஒரு நுட்பமான சித்திரம் வருகிறது. இக்காலத்துக்கான பொருத்தப்பாடு கருதி, உக்கிரமான கதையினிடையே குறுமுறுவல் எழும்பியது.

/சில நாள்களில் கவர்னர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அவர் ஆட்சி செலுத்திய காலத்தில் தனக்கும் அரசாங்கத்துக்கும் நிறையப் பொருளீட்டினார். எத்தனையோ அடிமைகளும் அடிமை ஓட்டிகளும் இந்தப் பொருளீட்டுதலுக்கு உதவினார்கள். எத்தனையோ கொடுமைகள் எத்தனையோ பேர்வழிகளுக்கு இழைக்கப்பட்டன. அந்தத் தீவின் இயற்கை வளத்தையும் சுரங்கச் செல்வத்தையும் பூரணமாக ஆராய்ந்து லாபமடைந்தார் அந்த கவர்னர். ஆனால் அவர் கொடூர சித்தமுள்ள மனிதர் அல்ல. அவர் ஆட்சி கொடுமையாக இருந்ததே தவிர, அவர் நல்லவர்தான். அவரைக் குறை சொல்லக்கூடியவர்கள், அவரைச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்கள்தான். அவரைப் பலருக்குத் தெரியாது என்பதும் உண்மையே! எட்டாத உயரத்தில் இருந்தவர் அவர். அவர் போகப் போகிறார் என்றறிந்து கஷ்டப்பட்ட பலர் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். புதிதாக வருபவர் நல்லவராக இருக்க மாட்டாரா என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்தப் பசுமையான அழகிய தீவை விட்டு மனசில்லாமல்தான் பிரிந்தார் அவர். அவர் பல சந்தோஷ நாட்களை அங்கு கழித்திருந்தார்./

நிற்க. அடிமைகளின் கழுத்துப்பட்டையை (ஆங்கிலப் பிரதியில் slave’s disk) க.நா.சு. எல்லா இடங்களிலும் தாலி என்றே மொழிபெயர்க்கிறார். அதில் ஏதாவது சிறப்புக் குறியீடு இருக்குமோ?


கல்வி

பிப்ரவரி 10, 2019

நேற்று மழை வராமலே ஏராளமான ஈசல்கள் வந்தன. கொஞ்ச நேரத்தில் மகிழ்மலர்தான் கவனித்துச் சொன்னாள், ‘அம்மா, அங்க பாரு, 7 பல்லிக’. 7 விரைவில் 10 ஆனது. மின்விளக்கைச் சுற்றிப் பல்லிகளின் உக்கிரமான ஈசல் வேட்டைக்குப்பின் ஈசல்கள் கிட்டத்தட்ட காணாமல் போயின.

இன்று காலை, கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கக் காத்திருந்த அண்டங்காக்கைகளை விரட்டப் போனவள், சற்று நேரத்தில் சன்னலோரம் நின்று கூவுகிறாள், ‘அப்பா, ஒரு குட்டிப் பல்லி கோழிகிட்ட வந்துச்சா, அது புடிச்சு குத்து குத்துனு குத்திக் கொன்னே போடுச்சு. அப்புறம் எல்லாக் குஞ்சுகளும் வந்து ஓடிப் புடிச்சு விளையாண்டுட்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுதுக.’

முத்திநெறி அறியாத என்ற திருவாசகப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாள். ஓரளவு எளிமையான பாடல்தான். உரை எதுவுமின்றி நானும் அவளுமே பொருள் கூட்டி அறிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தோம். (இடையிடையே புணர்முலையார் போகம், கணியிழையார் கலவி எல்லாம் வேறு.)

‘பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு’ என்ற வரிக்கு ‘இளம்பெண்களுடைய சுட்டெரிக்கும் கடைக்கண் பார்வையின் முன்னால் பஞ்சுபோல எரிந்து துன்பப்பட்டு’ என்று நாங்களாக ஒரு பொருள் கற்பித்தோம்.

உடனே அவள், “நெஞ்சுக்கு நீதியும் பாட்டுல, ‘ பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ’னு ஒரு வரி வருமில்லப்பா?” என்று அவளுக்குத் தோன்றிய வகையில் இணைத்துப்பார்த்தாள். [அதன் பொருளை நானும் ஆராய்ந்ததில்லை. பெருந்தீ முன் பஞ்சுபோல அவள் பார்வைக்குமுன் துன்பங்கள் இல்லாமற் போகும் என்று பொருள் கொள்ளலாம். தீ முன் பஞ்சு படும் துன்பங்கள் போல, அவள் பார்வைக்கு முன் பெருந்தீயும் பொசுங்கிப்போகும் என்றும் பொருள்படுமோ? இரண்டையும் பின்னர் விவாதித்தோம்.]

“அட, ஆமாண்டா கண்ணு. பாரதியார் எங்க இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுத்திருக்கார் பாரு.”

[பின்னர் இணையத்தில் தேடியபோது திருவாசக வரிக்கு வேறு பொருள் கொடுத்திருப்பதை அறிந்தோம். பஞ்சு ஆய – பஞ்சு போன்ற, அடி – பாதங்கடையுடைய, மடவார் – பெண்டிரது, கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு. சரி, இருந்துவிட்டுப் போகட்டும். ]

—-

அவள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது சரியான முடிவுதானா என்ற சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம், இப்படியாகப் போகிறது அவளது கல்வி. எங்களுடையதும்.

The child is father of the man – இதுவும் கவிஞர் வேறு அர்த்தத்தில் சொன்னதுதான். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொள்கிறேன்.


உரையாடும் காந்தி : PSG நிலா முற்றம்

பிப்ரவரி 10, 2019

உரையாடும் காந்தி நூலை முன்வைத்து கோவை பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரியில் நடைபெறும் நிலா முற்றம் கூடுகையில் உரையாற்றினேன். அதற்கான சுட்டி.

நிலா முற்றம் நிகழ்வில் பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் ராமராஜின் வழிகாட்டுதலில் மாணவர்கள் தொடர்ந்து கூடி, நூல்கள் குறித்து உரையாடுகிறார்கள். நிறைவூட்டும் முயற்சி.