ஒரு சிறுமியின் மரணம்

ஒக்ரோபர் 14, 2017

எங்கோ நடக்கும் மரணங்களைக் குறித்து ஆவேசமாகப் பொங்கும் மனம் விரைவில் வேறு செயல்களில் ஈடுபட்டுவிடுகிறது. அருகில் நிகழும் மரணம் விளைவிக்கும் குற்றவுணர்வு எத்தனை திசைதிருப்பல்களுக்குப் பின்னும் அகல மறுக்கிறது.

இவ்வாரம், பத்தாவது படிக்கும் மாணவியான நித்யா எங்கள் கிராமத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். பள்ளியில் ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதுதான் ஊரில் பேச்சு. பத்து நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் கைக்காயத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக்கூட கூறுகிறார்கள். சரியாகப் படிக்காததால், ஆசிரியர் பெற்றோரை அழைத்துவரச் சொல்லிக் கட்டாயப் படுத்தியிருக்கிறார். கூலி வேலை செய்யும் பெற்றோர் வேலைப் பளுவாலோ, அறியாமையாலோ அசட்டையாலோ பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கின்றனர். ஆசிரியர் தொடர்ந்து கண்டித்தும் எச்சரித்தும் வந்திருக்கிறார். அந்த நாளில், பள்ளிக்குக் கிளம்பி விட்டு, தலைசீவி, பேருந்துக்குக் காசு வாங்கிவிட்டு, பையை வீட்டிலேயே விட்டுவிட்டு அந்தக் கிணற்றில் விழுந்திருக்கிறாள். புதர் மண்டி, அது நாள் வரையில் வற்றிக் கிடந்த கிணற்றில் இந்த வாரம் தான் ஆழ்குழாய்க்குழியிலிருந்து நீர் நிரப்பியிருக்கிறார்கள். அந்த தோட்டத்துக்குச் செல்வதைக் கூட நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் வேலை செய்பவர் பார்த்திருக்கிறார். காலைக் கடன்களுக்காகச் செல்லலாம் என்று நினைத்து ஏதும் கேட்காமல் இருந்திருக்கிறார். பெற்றோர் ரேசன் கடை வரிசையில் நின்றிருந்துவிட்டு, அவளது பையையும் செருப்பையும் வீட்டில் பார்த்ததால், மகளைக் காணோம் என்று எல்லா இடங்களிலுல் தேடியிருக்கிறார்கள். எதேச்சையாக அந்தக் கிணற்றில் எட்டிப் பார்த்த யாருக்கோ பள்ளிச் சீருடை தெரிந்திருக்கிறது. பின் ஊரே கூடிவிட்டிருக்கிறது.

இது எதுவும் தெரியாமல் நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் எங்கள் தோப்பில் இருந்தோம். மாலை அந்தச் சிறுமியின் பிணம் அடக்கம் செய்யப்படும் போதுதான் செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்ந்தோம்.

‘நாங்களா இருந்திருந்தா வாத்தியாரத் தூக்கிட்டுவந்து வெட்டிப்போட்டிருப்போம்,’ என்கிறார்கள் சில மலையாளிகள்.
‘படிப்பு வரலைன்னா வாத்தியார் அடிக்காம என்ன பண்ணுவாங்க? அதுக்காக இந்தப் பொண்ணு இப்படிப் பண்றதா?’
‘யாரைச் சொல்லி என்ன பண்றது? இவங்க அப்பா அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்கணுமில்ல? போறதுக்குப் பயந்திட்டு இதுக பாட்டுக்கு வீட்டிலையோ உக்காந்துட்டா என்ன செய்யறது?’
‘ஒண்ணும் இல்லாதவங்கங்கிறாதால ஒண்ணும் செய்யாம விட்டுட்டாங்க. வசதியான குடும்பமா இருந்திருந்தா பெரியா ரகளை ஆயிருக்கும்.’
‘இதுவே எஸ்.சி. பொண்ணா இருந்திருந்தா சும்மா விட்டிருக்க மாட்டாங்க. நடந்திருக்கிறதே வேற.’

எத்தனையோ பேச்சுகள். மரணத்தை நோக்கித்தள்ளும் அளவிற்குப் பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. குழந்தையைக் குறைகூறுவதில் நியாயமில்லை. பெற்றோரைக் குறை சொல்வதிலும் பயனில்லை. நித்யா அமைதியான பெண் என்றும் பயந்த சுபாவம் என்றுமே எல்லாரும் கூறக்கேட்கிறேன். நித்யாவின் அண்ணனும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறான்.

காவல்துறை விசாரணையில், ஆசிரியர் கண்டித்திருக்கிறார்/அறிவுறுத்தியிருக்கிறார் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அவ்வாறே வந்தது.

அடுத்த நடவடிக்கை குறித்து நான் உரையாட முனைந்தபோது, பெற்றோரும் ஊர்ப்பெரியவர்களும் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஆசிரியருக்குத் தண்டனை வாங்கித்தந்தாக வேண்டும் என்பதில் ஏனோ எனக்கும் பெரிய வெறி இல்லை. தண்டனைகளில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதால் இருக்கலாம். மனமாற்றம் தான் இங்கு அவசியம். இது ஒருவரிடமுள்ள பிரச்சனையல்ல. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல பெற்றோர்களே அடிப்பதை ஊக்குவிக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல முடிவுகள் வரவேண்டும் என்கிற அழுத்தம் இன்று அரசுப் பள்ளிகளையும் நெருக்கத்தொடங்கிவிட்டது. நன்றாகப் படிக்காத குழந்தைகள், முன்பே வடிகட்டப்பட்டிருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பெரும் சுமையாகக் கருதுகிறார்கள்.

எனக்கு நானே என்னென்னவோ சால்சாப்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

இது இன்னொரு குழந்தைக்கு மறுபடி நேர்ந்துவிடக்கூடாது. எவரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ஆசிரியர்களுக்கு வந்துவிடக்கூடாது.

அடுத்த வாரம் இன்னொரு நண்பருடன் அந்தப் பள்ளிக்குச் செல்ல இருக்கிறேன். ஆசிரியர்களோடு கலந்துரையாடல், கவுன்சலிங் என்று என்னால் இயன்ற செயல்களைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள முனையவிருக்கிறேன்.

எங்கள் தோட்டம் இக்கிராமத்தில் இருந்தாலும், இதுவரை பக்கத்து கிராமத்தில்தான் குடியிருந்தோம். இதே கிராமத்துக்குக் குடிபெயர்ந்து ஒன்றரை மாதங்கள்தான் ஆகின்றன. குழந்தைகளோடு கூடுவதற்கு இங்கு இடம் அமையாததால், இன்னும் பயிலகம் தொடங்கவில்லை. குழந்தைகளோடு பணியாற்றத் தொடங்கவில்லை. ஒருவேளை இந்தத் தாமதத்தைத் தவிர்த்திருந்தால், இந்த மரணத்தைக்கூடத் தவிர்த்திருக்க முடியுமோ என்னவோ? என் தெளிவின்மையும் போதாமைகளும் பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

எங்கள் வீட்டுச் சன்னல்களிலிருந்து பார்த்தால் அந்தக் கிணறு இருக்கும் இடம் தெரிகிறது. அங்கு கிணறு இருப்பதை இதுநாள்வரை நாங்கள் அறியவில்லை. நித்யாவை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால், அவள் அந்தக் கிணற்றினை நோக்கிப் பதுங்கிச் சென்று, புதர்களில் சரிந்து விழுந்தபோது நாங்கள் நூறடி தொலைவில் தான் இருந்திருக்கிறோம். அங்கு பார்வை திரும்பியிருந்தால், அவளைக் கண்டிருக்கக்கூடும். அவள் அலறியிருந்தால் கேட்டிருக்கக்கூடும். எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் வழியில்தான் அவளுக்கு எழுப்பப்பட்ட மண் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சமாதி இனிவரும் மழையில் தரையோடு சமனாகிவிடும். என் மனம் ஒருபோதும் சமாதனமாகப் போவதில்லை.

ஒவ்வொரு முறை ஒரு குழந்தையை நோக்கிக் கையை உயர்த்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது கைகளில் கொலைக்கயிறு இருக்கக்கூடும் என்கிற உணர்வு எழட்டும். அவர்கள் உதிர்க்கும் வசைச் சொற்கள், கொடுக்கும் தண்டனைகள் உயிரைக் குடிக்கக்கூடும் என்பதை உணரட்டும். அன்பை மட்டுமே விதையுங்கள். கல்வி, மதிப்பெண்கள், உங்கள் ஊதியம் எல்லாமே இரண்டாம்பட்சம். நித்யா தேர்வில் தோல்வியடைந்திருந்தால் அடைந்திருக்கட்டுமே. மரணம் எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்குகிறது. கல்வி, கல்விமுறை, குழந்தைகள் குறித்து நமது பார்வைகளில், புரிதல்களில் பெருமாற்றங்கள் வந்தாகவேண்டும் – இன்னொரு அனிதாவையோ நித்யாவையோ இழப்பதற்குமுன்.


முகநூல் பதிவுகள் – 2017

ஒக்ரோபர் 13, 2017

(2017ல் இதுவரை முகநூலில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு)

(11-9-2017)

மூலப்பிரச்சனைகளைத் துளியும் தீர்க்காமல், அவற்றை இடம்பெயர்த்து, தீர்வு தந்துவிட்டதாய் மாய்மாலம் செய்யும் தந்திரத்தில் நாம் தேர்ந்தவர்கள். இத்தந்திரம் ‘டாஸ்மாக்கிஸம்’ என்ற நாமத்தால் இனி அறியப்படும்.

குடிப் பிரச்சனையா – அரசே மதுவை வாரிவழங்கும்.

நெடுஞ்சாலைகளில் மது விற்கக்கூடாதா – நோ ப்ராப்ளம். நெடுஞ்சாலைகளை வெறுஞ்சாலைகள் ஆக்கிவிடலாம்.

ஆங்கில வழிக் கல்வி தரும் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகிறார்களா – அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப்படுத்துவோம். அரசே தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தைக் கட்டும். (RTE)

அரசு மருத்தவமனைகளைப் பிடிக்கவில்லையா – இதோ, பிடியுங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

நீட்டால் பிரச்சனையா? – கவலையை விடுங்கள், இனி அரசே பயிற்சி மையங்கள் நடத்தும். (அப்படியே, பள்ளிகளை மூடிவிட்டால், மாணவச் செல்வங்களுக்குச் செலவும் நேரமும் மிச்சம். ஆசிரியர்கள் முழுநேரக் கணக்கெடுப்பாளர்களாகிவிடலாம்.)

 


இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


காந்திய விழிப்புணர்வு யாத்திரை – ஓர் அகப் பயணம்

ஒக்ரோபர் 13, 2017

(சர்வோதயம் மலர்கிறது இதழுக்காக எழுதிய கட்டுரை. முதல் பகுதி பயண அனுபவங்களையும், இரண்டாம் பகுதி காந்தியம் குறித்த என் பார்வைகள் சிலவற்றையும் உள்ளடக்கியுள்ளன.)

(1)

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டனின் ஒருங்கிணைப்பில், ஆகஸ்ட் மாதம் (3 முதல் 12ம் தேதி வரை) காந்திய விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பல்வேறு ஊர்களில் பள்ளி-கல்லூரிகளிலும், சர்வோதய சங்கங்களிலும், பொது இடங்களிலும் உரையாற்றியவாறு வாகனத்தில் சென்றோம். 7 பேர் முழு யாத்திரையையும் நிறைவுசெய்தோம். [மார்க்கண்டன், தலைவர், தமிழிக மக்கள் சேவை இயக்கம், கண்ணன், நித்யா, மகிழ்மலர் (சேர்வைகாரன்பாளையம், கோவை), சுப்பையன் (அன்னூர்), சிவக்குமார் (ஆசிரியர், விழிப்புணர்வின் குரல்), ராஜாமணி (திண்டுக்கல்)]. மேலும் சிலர் யாத்திரையின் சில பகுதிகளில் பங்கெடுத்தனர். நான் இந்த யாத்திரையில் மனைவி மகளோடு கலந்துகொண்டேன். புறத்தில் நிகழ்ந்த பயணத்தின் தாக்கம் வரும் காலங்களில்தான் தெரியும். தூவப்பட்ட விதைகள் கண்ணுக்குத் தெரியாமல் முளைக்கலாம்; முளைப்பதே தெரியாமலும் போகலாம். ஆனால் பயணம் செய்த எங்களது அகங்களில் நிகழ்ந்த யாத்திரை முக்கியமானது. காந்தியின் நிழலால் தீண்டப்படும் ஒவ்வொருவரும் அந்த அக யாத்திரையிலிருந்து தப்ப முடியாது.

DSC_1911

முதலில் புற யாத்திரை பற்றிய சில குறிப்புகள். ஆகஸ்ட் 3ம் தேதி கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில், சர்வமத வழிபாட்டுப் பாடல்களுடன் யாத்திரை தொடங்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், டி. கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை, காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல், திருச்சி, கரூர், காங்கயம், படியூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, கோத்தகிரி, சத்தி, கோபி, ஈரோடு, நாமக்கல், மல்லூர், சேலம், திருப்பத்தூர், பச்சூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னை தக்கர் பாபா மையத்தில் முடிந்தது.

நாகர்கோயில் இந்து கல்லூரி, பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரி, காந்திகிராம் பல்கலைக்கழகம், கரூர் ஜெயராம்ஸ் கல்லூரி, மேட்டுப்பாளையம் நஞ்சய்யா லிங்கம்மாள் பாலிடெக்னிக், ஈரோடு வேளாளர் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும், கல்லுப்பட்டி காந்தி நிகேதன், கோத்தகிரி விக்டோரியா ஆர்ம்ஸ்ட்ராங் (நாவா) பள்ளி, பச்சூர் அரசுப் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் உரையாற்றினோம். பெரும்பாலான இடங்களில் சர்வோதய சங்கங்கள் கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தனர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து சர்வோதய சங்கங்களைச் சார்ந்த நூற்போர், நெசவோர் இக்கூட்டங்களுக்குத் திரளாக வந்திருந்தனர். அனேகமாக எல்லா இடங்களிலும் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. எல்லா இடங்களிலும் மார்க்கண்டன் இன்றைய சமூக அரசியல் சூழல் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான காந்தியத்தின் தேவை குறித்தும் நீண்ட உரைகளாற்றினார். பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் எளிமை, சுயநலமற்ற அர்ப்பணிப்பு, சாதி மத நல்லிணக்கம், மக்கள் அனைவரையும் அணைத்துச்செல்லும் வளர்ச்சி, அதிகாரத்தைப் பரவலாக்குதல், காந்திய வழியில் தொழில் சார்ந்த கல்வி, கைத்தொழில்களிலும் சூழலைப் பாதிக்காத அளவு நவீன முறைகளைப் புகுத்துதல், சர்வோதய சங்கங்களை வலுப்படுத்துதல் – அவற்றின் பணிகளை இன்றைய சூழலுக்கேட்ப விரிவு படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார். மற்றவர்களும் ஆங்காங்கு சிறுது நேரம் உரையாற்றினோம். எங்கள் ஒன்பது வயது மகள் பாடல்கள் பாடினாள் – பல இடங்களில் ‘சாந்தி நிலவ வேண்டும்’ பாடல் அவளது இளங்குரலில் உணர்ச்சிகரமாக ஒலித்தது. சர்வோதய ஊழியர்களும், மாணவர்களும் பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அந்த கேள்விகளுக்கான பதில்களின் வாயிலாக காந்தியத்தையும், இன்றைய சூழலையும் பற்றி மேலும் விவாதிக்கவும் புரிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது.

 

(2)

பயணம் முழுவதும் காந்தியே என் மனதை நிறைத்திருந்தார். புறக்காட்சிகளினூடாக அகப்பயணமே ஆழமாக நிகழ்ந்தது. வெம்மையான கோவில்பட்டியின் கரிசல் காடுகள் வழியாகப் பயணித்தபோதாகட்டும், நீலகிரியின் குளிர்ந்த மழைக்காடுகளின் வழியாகச் சென்றபோதாகட்டும், வேலூரருகே கொட்டும் மழையிலாகட்டும், சென்னையின் வாரயிறுதி போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டபோதாகட்டும், அகத்தினுள் நிகழ்ந்த பயணம் ஒரே திசையில்தான் இருந்தது. யாத்திரையின் பெரும்பாலான இரவுகளில் பயணக்களைப்பையும் மீறி காந்தி நித்திரையைக் கலைத்தார். அன்றாட வாழ்வின் சமரசங்கள் காந்தியின் கண்ணாடிவழியாகப் பார்த்தபோது பூதாகரமாகத் தெரிந்தன. மக்களுக்கு நாம் எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் காந்தி யார், எடுத்துச்செல்லவேண்டிய காந்தி யார் என்பவை குறித்து என்னுள் பல கேள்விகள் எழுந்தன. பயணத்தின்போது சந்திக்க நேர்ந்த பலரோடும், உடன் பயணித்தவர்களோடும், உரையாற்றியவர்களோடும் நிகழ்ந்த உரையாடல்களை மனம் அசைபோட்டுக்கொண்டேயிருந்தது. காந்தியின் இந்திய சுயராச்சியம் (ஹிந்த் ஸ்வராஜ்) பாணியில், ஆசிரியனும் வாசகனும் போல, என்னுள்ளேயே ஒரு விமர்சகனும் பயணியும் தோன்றி விவாதித்துக்கொள்ளத் தொடங்கினர். யாத்திரை முடிந்தபின்னும் இந்தப் பயணம் தொடர்ந்தது.

விமர்சகன்: காந்தியை அறியாதவர்கள் யார்? எதற்கு விழப்புணர்வு, பயணம் எல்லாம்?

பயணி: நம்மில் பெரும்பாலனவர்கள் அறிந்துள்ள காந்தி, நமக்குச் சுதரந்திரம் வாங்கித் தந்த காந்தி; பணத்தாள்களில் உள்ள காந்தி; பசுமை பாரதத்தின் விளம்பரப்படங்களில் தோன்றும் காந்தி. ஆனால், காந்தியின் ஆதாரமான கொள்கைகள், செய்திகள் குறித்தெல்லாம் அறிந்தவர்கள் மிகச்சிலரே. அறிந்தவர்களிலும் அக்கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள் அதனினும் குறைவே. இப்பயணம் மூலம் உண்மையான காந்தி எதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார், அவரது கொள்கைகளில் பொருத்தமானவற்றை இன்றைய சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்க்கலாம் என்பவை குறித்த சிந்தனையைத் தூண்டி, மக்கள் நலச்செயல்களுக்கு உந்துதலாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

விமர்சகன்: இது என்ன கதையாக இருக்கிறது. காந்தியுடைய கொள்கைகள் எங்களுக்குத் தெரியாதா? காந்தி சுதந்திரத்துக்காக அகிம்சை முறையில் போராடினார். எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்றார். உண்மையாக இருக்க வேண்டும் என்றார். நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றார். இவையெல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூட தெரியுமே!

பயணி: நாம் அனைவரும் அவரவர் வசதிக்குத் தேவையான காந்தியை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அவரவர் தேவைக்கேற்ப காந்தியைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம். வாய்மை, அன்பு, அகிம்சை – இவையெல்லாம் காந்தியின் கொள்கைகளுக்கு ஆதாரமானவை. மறுக்க முடியாது. ஆனால், இவற்றின் நீட்சியாக காந்தி சமூகத்தைப் பாதிக்கும் எல்லா அம்சங்களைப் பற்றியும் தொடர்ந்து உரையாடியிருக்கிறார். பல்வேறு சோதனைகளைச் செய்திருக்கிறார். நாம் அவற்றையும் கவனிக்க வேண்டும்.

ஒருபுறம் காந்தியின் சுத்தம் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு, சுத்தம் செய்யும் ஏழை மக்களை உயர்த்த காந்தி என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டோம். ஒருபுறம் காந்தியின் அன்பு பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு, இயற்கை மீதும் வருங்காலச் சந்ததியினர்மீது எந்த அக்கறையும் கருணையும் இல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் நாம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வன்முறை காந்தியத்துக்கு முற்றிலும் விரோதமானது.

விமர்சகன்: அப்போது காந்தி வளர்ச்சிக்கு எதிரானவர் என்கிறீர்களா?

பயணி: காந்தி என்ன மாதிரியான வளர்ச்சியை விரும்பினார் என்பதை நாம் ஆராய வேண்டும். காந்தி முன்வைத்த வளர்ச்சி ‘சர்வோதயம்’ – கடையனுக்கும் கடைத்தேற்றம். இயற்கையோடு இயைந்து, இச்சமூகத்தின் ஒவ்வொருவரையும் முன்னேற்றுவதே காந்தி கண்ட வளர்ச்சி. எல்லாப் பணிகளையும் சமமாகக் கண்டு, எல்லாப் பணிகளுக்கும் சமமான வருமானம் வரும்படி செய்வதே காந்தி கண்ட வளர்ச்சி. இயற்கையைச் சுரண்டி, சமூகத்தில் ஒரு சிலர் மட்டும் பெரு வளர்ச்சி அடைந்து, பெரும்பகுதியினர் அவர்களைச் சார்ந்திருப்பதை காந்தி ஒரு போதும் வளர்ச்சி என்று ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். பேராசையின் வெளிப்பாடான நுகர்வுக் கலாச்சாரத்தால் உருட்டப்படும் பொருளாதாரத்தை வளர்ச்சி என்று ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

விமர்சகன்: நவீன வளர்ச்சியின் விளைவாகத்தானே உங்களது இந்த யாத்திரையே சாத்தியம் ஆகியிருக்கிறது. அகலமான நெடுஞ்சாலைகள் இருந்ததால்தானே உங்களால் இத்தனை வேகமாக இத்தனை ஊர்களுக்குப் பயணிக்க முடிந்தது.

பயணி: உண்மையில், இந்த யாத்திரையின் போதுதான் நவீன வளர்ச்சியின் இன்னொரு முகத்தையும் என்னால் காண முடிந்தது. வழியில் பல கிராமங்கள் இருக்கும்; நாங்கள் கிராமத்து மக்களைச் சந்திக்கலாம்; அவர்களோடும் உரையாடிச் செல்லலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இந்த அசுர நெடுஞ்சாலைகள் கிராமங்களை விழுங்கிவிட்டன. அல்லது கிராமங்களை ஒதுக்கிவிட்டன. வழியெங்கும் மக்களும் இல்லை, மரங்களும் இல்லை. இந்த மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகிச்செல்கின்ற வளர்ச்சியின் குறியீடாகவே இந்த வரண்டு நீண்டகன்ற நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.

இந்நவீன நெடுஞ்சாலைகள் இல்லாத போதும், காலங்காலமாய் இந்தியாவிலும் உலகெங்கிலும் யாத்திரைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. எங்களது யாத்திரையின் பலவீனமே இந்த வேகம்தான் என்று தோன்றுகின்றது.

விமர்சகன்: மக்கள் இத்தகைய நவீன வளர்ச்சித்திட்டங்களையே விரும்புகின்றனர். அதைத்தானே நீங்கள் தொடர்ந்து காண்கிறீர்கள். உதாரணமாக, திருச்சி சர்வோதயக்கூட்டத்திலும் ஓர் அம்மா நதிநீர் இணைப்பே இன்றைய உடனடித் தேவை என்று கூறினாரே.

பயணி: மக்கள் தண்ணீர் பிரச்சனையால் தவிப்பதைக் கண்டு அவர் அவ்வாறு கூறுகிறார். அவரது ஆதங்கம் உண்மையானது; அதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், காந்திய அணுகுமுறையில் நதிநீர் இணைப்பு என்கிற பேச்சு எழுவதற்குமுன் உள்ளூர் அளவில் வேறு பல முயற்சிகள் நடந்திருக்கும். முதலில் நாம் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும். அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்கவேண்டும். நம் ஆறுகளில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மழைநீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும். தண்ணீரை அளவாகப் பயன்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீரை விழுங்கும் பயிர்களையும் விவசாய முறைகளையும் தவிர்க்கவேண்டும். நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சி மண்ணைப் பாழாக்கி, வருங்காலச் சந்ததியினிருக்குச் சொந்தமானதை விரயமாக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். நம் தேவைகளை, நம் வளங்களுக்கேற்றாற்போல் சுருக்கிக் கொள்ளவேண்டும். மழைக்காடுகளை அழிப்பதைத் தடுக்கவேண்டும்.

முக்கியமாக, நீர் மேலாண்மை கிராம மக்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையே நீர் மேலாண்மையை மக்களிடமிருந்து விலக்கி, இன்றைய பற்றாக்குறையை நோக்கித் தள்ளியிருக்கிறது.

உள்ளூர் மக்களே செய்யக்கூடிய இத்தனை பணிகளை ஊக்குவிக்காமல், மைய அதிகாரத்தை மேலும் வலுவாக்கி, பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பினை உருவாக்கி, பெருமளவு மக்களை இடம்பெயரச்செய்யக்கூடிய நதிநீர் இணைப்பையோ அசுர அணைகளையோ பொதுநலனுக்கு எதிரானதாகவும் குறுகியகால நோக்கம் கொண்டதாகவும் காந்திய அணுகுமுறைக்கு மாறானதாகவுமே நாம் பார்க்கமுடியும்.

நாட்டின் நன்மைக்காக ஒரு கிராமம் தியாகம் செய்யவேண்டும், ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம் தியாகம் செய்யவேண்டும், குடும்பத்துக்காக ஒரு தனிநபர் தியாகம் செய்யவேண்டும் என்று காந்தி கூறியதாக கூறப்படுவதை, அவரது ஒட்டுமொத்தப் பார்வையிலிருந்து விலக்கி நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். தனிநபர்களும் கிராமங்களும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்; ஆனால் அரசுகள் மக்களையும் ஊர்களையும் பலியிடக்கூடாது. ஒவ்வொரு தனிநபரையும், ஒவ்வொரு கிராமத்தையும், இயற்கையையும் அக்கறையுடன் அரவணைத்து, அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதே சரியான காந்தியப் பார்வை. அவ்வாறு செயல்படும்போது, பொதுநலனுக்காகத் தங்கள் சுயநலன்களைத் தியாகம் செய்வதற்கு மக்களே முன்வருவார்கள்.

ஒவ்வொரு வளர்ச்சிப் பணியையும் நாம் இந்த அளவுகோள்களின்படி அணுகினால், எல்லா மட்டத்திலுள்ள மக்களுக்கும் இயற்கைக்கும் ஏதுவான திட்டங்களை வகுக்கமுடியும்.

விமர்சகன்: மைய அதிகாரத்தை வலுவாக்கக்கூடாது என்கிறீர்கள். மக்கள் வலுவான மையம் வேண்டும் என்றுதானே நினைக்கிறார்கள். எல்லாப் பிரச்சனைகளையும் விரைவாகத் தீர்க்கக்கூடிய வலுவான தலைவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைத்தானே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பயணி: வலுவான தலைமை நமக்குத் தேவைதான். ஆனால், அது வெறும் மத்திய மாநில அரசாங்கங்களில் இருந்து பயனில்லை. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ளூர் அமைப்புகளைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய வலுவான கூட்டுத்தலைமைதான் நமக்குத் தேவை. அதிகாரத்தைக் குவிக்கின்ற தலைமை சர்வாதிகாரத்தையும் சகிப்பின்மையையும் நோக்கியே இட்டுச்செல்லும்.

அதிகாரம் பரவலாகும் போதுதான், மக்கள் தங்களுக்கான பாதையை தாங்களே சரியான முறையில் தேர்ந்தெடுப்பார்கள். காந்தி கண்ட கிராம சுயாட்சியை அடையும்போதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைவோம்.

விமர்சகன்: சகிப்புத்தன்மை குறித்துப் பேசுகிறீர்கள். காந்தியவாதிகளுக்குச் சகிப்புத்தன்மை இருப்பதுபோலத் தெரியவில்லையே. கோவையில் நடந்த கூட்டத்தில், ஒரு காந்தியவாதி குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக்கூடாது, கொக்கொ கோலா போன்ற நிறுவனங்களின் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாரே, இல்லையேல் வெளியேறிவிடுவேன் என்று அச்சுறுத்தினாரே. அப்போது, ஒரு பேச்சாளர்கூட காந்தியவாதிகளுக்கு சகிப்புத்தன்மை அவசியம் என்று சுட்டிக்காட்டினாரே.

பயணி: நான் சொல்கிற சகிப்பின்மை அதுவல்ல என்பது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் குறிப்பிடும் வகையான சகிப்புத்தன்மையை காந்தி ஒருபோதும் வலியுறுத்தியிருக்கமாட்டார். எந்தவொரு கூட்டத்திலும் தவறு நிகழும்போது சுட்டிக்காட்டுவதற்கு அவர் தயங்கியதே இல்லை. இங்கிலாந்து அரண்மனையில்கூட ‘எனக்கும் சேர்த்து அரசரே உடையணிந்திருக்கிறார்’ என்று சொன்னவர்தான் காந்தி. பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்திலோ சமஸ்கிரதத்திலோ பேசும்போது, ஏன் தாய்மொழியில் பேசவில்லை என்று கேட்டவர்தான் காந்தி. சிறுமை கண்டு பொங்குகிறவராகவே அவர் எப்போதும் இருந்திருக்கிறார். எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறையில் தான் அகிம்சையைக் கடைபிடித்தார்.

விமர்சகன்: உங்கள் கருத்தை என்மீது திணிப்பதும் வன்முறைதானே.

பயணி: உண்மைதான். ஆனால், உங்கள் கருத்து தவறென்று சுட்டிக்காட்டுவதில் வன்முறை ஏதும் இல்லை. தான் ஆணித்தரமாக நம்பும் கருத்து ஏற்கப்படாவிட்டால், வெளியேறிவிடுவதாகச் சொல்வதிலும்கூட வன்முறை ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் கருத்தை நிலைநாட்டப் போராடுவதிலும் வன்முறை இல்லை. போராடுகிற முறைகளில்தான் வன்முறையும் அகிம்சையும் வருகின்றன.

காந்தியை முன்னிறுத்தி நாம் செயல்படும்போது, குறைந்தபட்ச எளிமையும் நேர்மையும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே.

குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாமல், தனிவாகனத்தைப் பயன்படுத்தும்போதோ குற்றவுணர்ச்சி மேலெழுகிறது. மற்றவர்களுக்காகவும் நமது வசதிகளுக்காகவும் நாம் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் சமரசங்கள் செய்து பழகிவிட்டோம். அத்தகைய சமரசங்கள் நிகழும் போதெல்லாம் காந்தி நம்மைக் கேள்வி கேட்கிறார். காந்தியும் சமரசங்கள் செய்திருக்கிறார்; அவற்றை அவர் சொல்லித்தான் நமக்குத் தெரியும். நாமும் நம் சமரசங்களை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு, முடிந்தவரையில் களைவதுதான் காந்திய வழிமுறைக்கு நம்மை நெருக்கமாக இருக்கச்செய்யும்.

விமர்சகன்: காந்தியைப் பற்றி உயர்வாகவே பேசுகிறீர்கள். காந்தி மீதான விமர்சனங்கள் மீது உங்கள் சகிப்புத்தன்மை எப்படி? ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி கேள்வி கேட்டபோது, பெண்களைச் சோதனைக்குள்ளாக்கியது குறித்து விமர்சனம் எழுந்ததே.

பயணி: காந்தியும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லர். காந்தி மீது வைக்கப்படுகிற விமர்சனங்களைத் தொடக்கி வைத்தவரே காந்திதானே. எல்லா விமர்சனங்களுக்கும் காந்திய ஆர்வலர்கள் தொடர்ந்து பொறுமையாக பதிலளித்து வந்திருக்கின்றனர். உண்மையில், இன்றைக்கு உள்ள சூழலில், காந்தி மீதுதான் மிக எளிமையாக எந்தவிதமான விமர்சனமும் வைத்துவிட்டு எந்தவிதமான வன்முறையான எதிர்விளைவையும் சந்திக்காமல் இருக்க முடியும். அதுவே காந்தியின் வெற்றி.

பகத் சிங் குறித்து, நேதாஜி குறித்து, தலித்கள் குறித்து, வர்ணாசிரமக் கொள்கைகள் குறித்து, பெருமுதலாளிகளின் நிதியுதவியை ஏற்றுக்கொண்டது குறித்து, பெண்கள் குறித்து, ஆப்பிரிக்க மக்கள் பற்றிய ஆரம்பகால எழுத்துகள் குறித்து என்று பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் விரிவாக மறுப்புகளோ விளக்கங்களோ எழுதப்பட்டிருக்கின்றன.

இந்த யாத்திரையின் போது இரண்டு விமர்சனங்களைக் குறித்துப் பேச நேர்ந்தது.

முதலில் ஹரிஜன சேவை. ஹரிஜன் என்ற சொல்லை காந்தி உயர்ந்த நோக்கத்துடனேயே பயன்படுத்தினாலும், இன்றைக்கு அது அம்மக்களுக்கு ஏற்பற்றதாக ஆகிவிட்டது என்பதால் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே பொருத்தமானது. காந்தி அளவிற்குத் தலித் மக்களுக்காகப் பணியாற்றியவர் வேறு எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். பாதிக்கப்ப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுவது அவசியம் என்றபோதும், ஆதிக்கம் செலுத்தும் மக்களின் மனங்களை மாற்றும் பணி அதனைவிட அவசியம். பாதிக்கப்பட்டவர்களும் ஆதிக்கவாதிகளும் ஒரே சமூகமாக ஒரே இடத்தில் வாழவேண்டியிருக்கும்போது இந்த மனமாற்றம் மிகவும் முக்கியமானது. காந்தி அந்த மனமாற்றத்தைக் கொண்டுவந்தார். கடக்க வேண்டியது இன்னும் வெகு தூரம் என்ற போதினும், கடந்துவந்த பாதையும் வெகு நீளம்தான்.

தலித்களுக்கு அனுமதி மறுக்கும் கோயில்களுக்கு, தானோ தன்னைச் சார்ந்தவர்களோ செல்லக்கூடாது என்று காந்தி நினைத்தார். கஸ்தூர்பா காந்தியும், மகாதேவ் தேசாயும் பூரி ஜகன்னாதர் கோயிலுக்குச் சென்றபோது, அதைக் கண்டித்துப் பத்திரிக்கையில் எழுதினார். வர்ணாசிரமத்தை ஆரம்ப காலங்களில் வலியுறுத்திய அதே காந்தி, பின்னாளில் தான் கலந்துகொள்ளும் திருமணங்கள் கலப்புத் திருமணங்களாக – அதிலும் மணமக்களில் ஒருவர் தலித்தாக, இருக்கவேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

தலித்பெண் ஒருவர்தான் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பியவர் காந்தி. தலித் அறிஞரான அம்பேத்கர், அரசியல் ரீதியாக எதிர்தரப்பில் இருந்தபோதும்கூட, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குத் தலைமை தாங்கும் சூழலை ஏற்படுத்தியவர் காந்தி. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்திலும், அம்பேத்கர் காந்தி ஆகிய இருவரது தரப்பிலும் சில நியாயங்கள் இருந்தன. சமூகம் பிளவுபட்டுவிடக்கூடாது என்கிற நோக்கிலும், ஆதிக்கவாதிகளின் மனமாற்றம் நிகழவேண்டும் என்ற நோக்கிலும் காந்தியின் அணுகுமுறையே அன்றைய நாளுக்குப் பொருத்தமாக இருந்தது. அதனாலேயே தனிவாக்காளர் தொகுதிக் கோரிக்கையை ஏற்ற அம்பேத்கர், பின்னாளிலும் வலியுறுத்தவில்லை. தனித்தொகுதி ஒதுக்கீடு முறையில், ஆதிக்க சாதியினரின் விருப்பப்படிதான் தலித் பிரதிநிதிகள் செயல்படமுடியும் என்ற அம்பேத்கரின் அன்றைய வாதம் இன்றைக்கும் உண்மையாக உள்ளது. இருவரையும் எதிரெதிர் துருவங்களாகக் கட்டமைப்பதைவிடுத்து, இருவரது பங்களிப்பையும் அங்கீகரித்து, இவருவரது நியாயங்களையும் புரிந்துகொண்டு, காந்தியர்களும் தலித் இயக்கத்தினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் தலித் மக்களுக்கும் பிற சமூகத்தினருக்கும் நன்மை விளைவிக்கும்.

அடுத்து, பெண்கள் சார்ந்த சோதனை. காந்தியின் பிரம்மச்சரிய விரதம் குறித்த பார்வையும், பாலியல் உணர்வுகளை வென்றெடுக்க அவர் நிகழ்த்திய சோதனைகளும் இன்றைய மதிப்பீடுகளின்படி நெருடலானவை. ஆனால், அவரோடு நெருங்கிச் செயல்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் எழுந்ததே இல்லை. அவரது சோதனைகள் குறித்து நாம் அறிந்துகொண்டதெல்லாம், பெரும்பாலும், அவரது எழுத்துகள் வாயிலாகத்தான். நவகாளியில் அவரது உக்கிரமான சோதனையின் போது உடனிருந்த மனு காந்தி, தனது புத்தத்திற்கு, ‘Bapu – My Mother’ என்று பெயரிட்டார். தந்தை என்றுகூடச் சொல்லவில்லை. அன்னை என்கிறார். இந்த ஒற்றை வாசகத்தின் முன் எந்தக் குற்றச்சாட்டும் அர்த்தம் இழக்கும். (யாத்திரையின் போது நிகழ்ந்த உரையாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய டாக்டர் ஜீவானந்தம் அவர்கள், இந்நூலை உடனே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். விரைவில் பதிப்பில் வரும் என்று நினைக்கிறேன்.)

விமர்சகன்: பாலியல் சோதனைகளை விடுவோம். தனது மனைவியை அவர் நடத்திய விதத்தைப் பார்த்தால், பெண்ணுரிமை விஷயத்தில் மிகவும் பிற்போக்கானவராகத்தானே தெரிகிறார்.

பயணி: இளமைக் காலத்தில், கஸ்தூர்பாவைப் பல சமயங்களில் காந்தி தவறாக நடத்தியிருக்கிறார். இவையும் அவரது எழுத்துகளில் இருந்துதான் அறிகிறோம். அவர் நடந்துகொண்ட விதத்திற்காக வருத்தம் தெரிவித்தே எழுதியிருக்கிறார். ஆனால், பின்னாளில் கஸ்தூர்பாவிடம் மிகப்பெரும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். போராட்டங்களைத் தலைமைதாங்கி நடத்த ஊக்குவிக்கிறார்.

பெண்களைப் போராட்டக் களத்தில் பங்கெடுக்க வழிவகுத்ததில், வரலாற்றில் மிகப்பெரிய இடம் காந்திக்கு என்றும் இருக்கும். கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் துணைகொண்டு நடந்த வரை போர்க்களங்கள் பெரும்பாலும் ஆண்களின் தனிக்களங்களாகவே இருந்துள்ளன. ஆனால், சத்தியாகிரகம் என்கிற ஆயுதத்தை காந்தி அறிமுகம் செய்த பின்னர்தான் திரளான பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கிப் பணியாற்றி, தலைமையேற்க வழி பிறந்தது.

பெண்களுக்கு காந்தி கொடுத்த அடுத்த ஆயுதம் ராட்டை. வீட்டிலிருந்தே தங்களது நேரத்தில், அவர்கள் பிரயோகிக்கக்கூடிய போர்க்கருவி.

விமர்சகன்: என்னது, ராட்டையா? பிற்போக்குத்தனத்தின் இன்னொரு அடையாளம்.

பயணி: உண்மையில், காந்தியின் ராட்டை ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம். இங்கிலாந்து மீதான பொருளாதாரச் சார்பைத் துண்டித்து, ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க முனைந்த ஆயுதம்.

இன்றைக்கும் ராட்டை கிராம சுயாட்சியின் குறியீடு என்பதை இப்பயணத்தின் போதுதான் உணர்கிறேன். சர்வோதய சங்கங்கள் நடத்திய கூட்டங்களுக்கு வரும் நூற்போரையும், நெசவோரையும், குறிப்பாக பெண் ஊழியர்களைப் பார்க்கும் போது காந்தி விதைத்த சுயாட்சி விதை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று தெரிகிறது. காந்தியத்தின் மிச்சங்களில் முக்கியமானது சர்வோதய சங்கம்; அவர் தக்கார் என்பது காணப்படும் எச்சம். இன்றைக்குப் பல்லாண்டு கால இருப்பின்போது சேர்ந்துவிட்ட குறைகளோடே சர்வோதய சங்கங்கள் இயங்குகின்றன. ஆயினும் அவற்றின் சாத்தியக் கூறுகள் பிரமிக்கவைக்கின்றன.

நம் பொருளாதார அமைப்பு மக்களுக்காக மக்களால் இயங்க முடியும் என்பதன் சாத்தியத்தைச் சர்வோதய சங்கங்கள் போன்ற காந்திய அமைப்புகள் உள்ளடக்கியிருக்கின்றன.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக கதராடைகளுக்கும் கைவினைப்பொருள்களுக்கும் வரி விதிக்கப்பட்டிருப்பது, இந்த சுயாட்சிக்கு எதிரான ஒரு செயல்பாடாகவே நாம் பார்க்கவேண்டும்.

இத்தடைகளையும் மீறி, சர்வோதய சங்கம் போன்ற அமைப்புகள் மக்களுக்குப் பொருளாதார சுதந்திரம் ஏற்படுத்தித்தந்தால்தான், அதிகாரம் பரவலாக்கப்பட்ட அரசியல் சுயாட்சியை நோக்கி நாம் நகரமுடியும்.

இன்றைய சூழலியல் தேவைகளுக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இந்த அமைப்புகளுக்கு உண்டு. அமைப்பின் செயல்பாடுகள், நோக்கங்கள், எதிர்காலக் குறிக்கோள்கள் குறித்து ஓர் ஆழமான அலசலும், கூர்நோக்கும், தொலைநோக்கும் தேவைப்படுகின்றன.

விமர்சகன்: நவீன உலகின் போக்குக்கு முற்றிலும் முரணானதாக இத்தகைய அரசியல், பொருளாதாரப் பார்வை உள்ளது. மைய நீரோட்டத்திற்கு இது ஒரு போதும் வர முடியாது. அதனால்தான் அம்பேத்கர், நேரு ஆகியோர் காந்தியத்தின் இந்த கூறுகளை முற்றிலும் நிராகரித்தனர்.

பயணி: மைய நீரோட்டத்திற்கு இப்பார்வை வராவிட்டால், மைய நீரோட்டம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு அழிவை நோக்கி நாம் சரிந்துவிடுவோம் என்பது நம்மை அச்சுறுத்தும் சூழலியல் சாத்தியம். அம்பேத்கர், நேரு ஆகியோர் அவர்களது காலகட்டங்களின் நிதர்சனத்தில் கால் பதித்திருந்தனர். அந்த நிதர்சனங்களே அவர்களது பார்வைகளைச் செதுக்கின. காந்தியின் ஒரு கால் நிதர்சனத்தில் இருந்தாலும், மறு கால் சத்தியத்தை நோக்கியே நீண்டுகொண்டிருந்தது.

விமர்சகன்: இச்சிக்கலால்தான், காந்தியை அரசியல் தளத்திலிருந்து விலக்கி தனிமனித தளத்தில் மட்டுமே வைக்கவேண்டும் என்று ஒரு பார்வை உள்ளதே.

பயணி: தனிமனித தளத்தில் காந்தி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது காந்தியத்தின் சாத்தியங்களைச் சுருக்கிவிடும். அது தொடக்கப்ப்புள்ளி மட்டுமே. எந்த ஒரு நேர்மையான ஆன்மீகவாதியும் காந்தி வெளிப்படுத்திய தனிமனித ஒழுக்கத்தையும், அன்பையும், நேர்மையையும் வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், காந்தியை சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் விரித்தெடுக்கும் போதுதான் விசுவரூபம் கொள்கிறார். பல சங்கடம் தரும் கேள்விகளை எழுப்புகிறார். சங்கடம் தரும் தீர்வுகளைத் தருகிறார். தனிமனித தளத்தில் ஆன்ம சாந்தி தரும் காந்தியைவிட, சமூகத் தளத்தில் சங்கடம் தரும் காந்தி தான் நமக்கு அத்தியாவசியம்.

விமர்சகன்: காந்தியை இந்துத்துவர்கள் தமதாகக் கொண்டாடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறதே. இருவருக்கும் பொதுவான கூறுகள் பல இருக்கின்றனவே – பசுவதை எதிர்ப்பு, சைவ உணவு, இந்திய பண்பாட்டினை மீட்டெடுத்தல், ராமர் பற்று, தேசியம், சுதேசியம், இந்தி ஆர்வம் என்று அடுக்கிக்கொண்ட போகலாமே.

பயணி: காந்தியைச் சுவீகரிக்க முடியுமானால், இந்நேரம் இந்துத்துவர்கள் அதைச் செய்திருப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் காந்திக்கும் இந்துத்துவர்களுக்கும் மேலோட்டமான ஒற்றுமை இருப்பதுபோலத் தோன்றினாலும், ஆணித்தரமான மாறுபாடுகள் இருக்கின்றன.

காந்தியின் ராமனும் இந்துத்துவர்களின் ராமனும் ஒருவனல்ல. காந்தியின் ராமன் சரித்திர ராமனோ, புராண ராமனோ அல்ல; எல்லாருக்குமான கடவுளின் ஒரு பெயர்; அவர் கடவுளாகக் கருதிய வாய்மையின் ஒரு பெயர். காந்தியின் ராமன் ஒருபோதும் வன்முறையின் சின்னமாக இருக்கமாட்டான். ஒரு போதும், பெரும்பான்மையினர் ஆதிக்கத்தின் நாயகனாக மாறமாட்டான். எக்காரணம் கொண்டும் ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்துவீழ்த்தமாட்டான்.

காந்தி பசுக்கொலையை எதிர்த்தது, பெருந்திரளான மக்களின் மதநம்பிக்கை சார்ந்திருப்பதனாலும், பசு கிராமப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்ததாலும்தான். ஆனால், சட்டங்கள் மூலம் பசுக்கொலையைத் தடுக்க ஒருபோதும் அவர் துணைபோகவில்லை. பசுவின் பெயரால் இஸ்லாமியர்கள்மீதும், தலித்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை எப்போதும் எதிர்த்தே இருப்பார். அவர் கோரியது மாற்றுத்தரப்பின் மன மாற்றத்தையே. தம் தரப்பின் திணிப்பை அல்ல. அது மட்டுமன்றி, அவர் பசுவதை ஆங்கிலேயர் காலத்தில்தான் நிறுவனமாக்கப்பட்டு அதிகரித்தது என்று கருதினார். இந்துத்துவர்கள் இஸ்லாமிய ஆட்சியைத்தான் இதற்குக் காரணமாகக் காட்டுகின்றனர். பசுப் பொருளாதாரத்தைச் சிதையவிட்டுவிட்டு, பசுவுக்காகக் கண்ணீர்விடுவதில் உள்ள பாசாங்கினை காந்தி அம்பலப்படுத்தியிருப்பார்.

அதே போல, சைவ உணவை தனிப்பட்ட ஒழுக்கநெறியாகப் பார்த்தாரேயன்றி, ஒரு தேசியத் திட்டமாக அதை முன்வைக்கவில்லை. கான் அப்துல் கஃபார் கான் தன் மகன்களோடு வர்தாவில் தங்கியிருந்தபோது, அவரது மகன்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்யலாம் என்று கூறியதை நாம் நினைவுகூர வேண்டும்.

காந்தியின் தேசியம் மனிதநேயத்துக்குக் கீழ்ப்படிந்ததாகத்தான் இருந்தது. பாக்கிஸ்தான் உருவாக்கத்தை கடுமையாக எதிர்த்த காந்தி, மக்களின் விருப்பம் அதுவாக இருப்பதை அறிந்தபோது, விரக்தியுடன் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தார். மக்களின் மனங்களை மாற்றுவதிலேயே அவர் முனைப்பு இருந்தது. ஜின்னாவை பிரிக்கப்படாத இந்தியாவின் பிரதமராக்கலாம் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அளவிற்கு பிரிவினையைத் தவிர்க்க முயற்சிகள் எடுத்தார். ஆனால், பிரிவினையை எதிர்த்துப் போராட யாரும் துணையாக இருக்கப்போவதில்லை என்பதை அறிந்தபோது, தனியே அதை எதிர்த்துப் போராட அவர் முனையவில்லை. தன் கவனம் முழுவதையும் பிரிவினை விளைவித்த வன்முறையை எதிர்கொள்வதிலேயே செலுத்தினார். தேசியத்தின் பெயரால் எப்பகுதி மக்கள்மீதும் போர்தொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ ஒருபோதும் காந்தி இணங்கமாட்டார். இந்தியாவின் பன்மைத்தன்மையை முழுவதும் உணர்ந்திருந்தார் காந்தி. ஒற்றைத்தன்மையுள்ள ஒரு கலாச்சாரத்தை எவர்மீதும் திணிப்பதை எதிர்த்தே இருப்பார். தேசியவாதத்தின் பெயரால், ராணுவப் பலப்பரீட்சைக்கு பெருந்தொகை செலவிடப்படுவதற்கு எதிராக இருந்திருப்பார்.

இந்தியப் பண்பாட்டின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த போதும், இந்தியப் பண்பாட்டின் எதிர்மறை அம்சங்களை விமர்சிக்கவும், துறக்கவும் காந்தி தயங்கியதில்லை. நடக்காதவற்றை நடந்ததாகக் கட்டமைக்கவும் அவர் முயலவில்லை. சாத்திரங்களுக்கும் சத்தியத்திற்கும் முரண் வரும்போது சத்தியத்தையே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

காந்தியின் சுதேசியம் ஆத்மார்த்தமானது. கிராம சுயாட்சியையும் அதிகாரப் பரவலாக்குதலையும் அடித்தளமாகக்கொண்டது. வெறுப்பின் ஊற்றுக்கண்ணிலிருந்து உதித்ததல்ல. அதனால்தான், இங்கிலாந்தில் கதர் இயக்கத்தால் வேலையிழந்த மில் தொழிலாளர்கள் காந்தியைத் தம்மவராக ஏற்றுக்கொண்டாட முடிந்தது. பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியப் பெருநிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்தாலும், சமூக ஏற்றதாழ்வுகளை அதிகரிப்பதை சுதேசியத்தின் பெயரால் ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்.

ஏகாதியபத்திய எதிர்ப்பின் இன்னொரு ஆயுதமாகவும் தேச ஒருமைப்பாட்டின் கருவியாகவுமே காந்தி இந்தியைப் பார்த்தார். மாற்று மொழியினரின் விருப்பத்திற்கு எதிராக எந்த மொழியையும் திணிப்பது காந்தியம் ஆகாது. இந்தியாகட்டும், வேறு எந்த மொழியாகட்டும், இயல்பாக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதே காந்திய வழி. சட்டங்கள் மூலமாகவும், அதிகார பலத்தின் மூலமாகவும் திணிப்பது அல்ல. அது மட்டுமன்றி, தாய்மொழி வழியில் கல்வி, தகவல் பரிமாற்றத்தில் தாய்மொழிக்கே தலையாய இடம் என்று தாய்மொழியின் பயன்பாட்டையே பிரதானமாக வலியுறுத்தியவர் காந்தி. ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கமாட்டார். (காந்தியர்கள் பலரும் மும்மொழிக் கொள்கையை முன்வைப்பவர்களாக உள்ளனர். இந்த யாத்திரையின் போதும், மார்க்கண்டன் அவர்கள் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்றே பேசினார். ஆனால், அவர்கள் எவரும் மக்கள் விருப்பத்துக்கு எதிரான மொழித்திணிப்பை ஆதரிப்பவர்களாக இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.)

ஆக, இந்துத்துவர்கள் காந்தியை ஓர் ஆன்மீகவாதியாகவும், தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு வசதியான ஒரு பிம்பமாகவும் ஏற்றுக்கொள்ளமுடியமே அன்றி, அவரை முழுமையாக சுவீகரித்தால் அவர்களும் இந்துத்துவத்தைத் துறந்து காந்தியர்களாகிவிடுவார்கள். அவர்கள் இந்துத்துவர்களாக இருக்கும்வரை காந்தியைக் கூறு போட்டு, வெகுசில அம்சங்களைத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அவர் கையில் திணிக்கப்பட்ட விளக்குமாறு அவர்களையும் சேர்த்தே பெருக்கித்தள்ளும் என்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

விமர்சகன்: இந்துத்துவம் மிகவும் வலிமையாகிவரும் இந்த வேளையில், காந்தியர்கள் இந்துத்துவத்துக்கு எதிராகப் பெரிதாக ஏதும் போராட்டம் நடத்தவில்லையே? போராட்டக் களங்களில் இன்று பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் பெயர் கேட்கிற அளவிற்கு காந்தியின் பெயர் கேட்பதில்லையே? காந்தி ஒத்துழைப்பின் அடையாளமாகிவிட்டாரா?

பயணி: சர்வோதயம் மலர்கிறது இதழில் க.மு.நடராஜன், பாதமுத்து போன்றவர்கள் தொடர்ந்து இந்துவத்துக்கு எதிராக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காந்திய விழிப்புணர்வு யாத்திரையில் மார்க்கண்டன் பள்ளி, கல்லூரிகளிலெல்லாம் இந்துத்துவத்துக்கு எதிரான குரலில்தான் பேசினார். இவர்கள் எல்லாம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். அடுத்தடுத்த தலைமுறையினர்களிலும், முகநூலிலும் பிற இதழ்களிலும் காந்தியர்கள்/காந்திய ஆர்வலர்கள் காந்தியத்தை முன்னிறுத்தி இந்துவத்துக்கு எதிராக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனினும், இந்துவத்துக்கு எதிரான பெரிய இயக்கமெதுவும் இதுவரையில் காந்தியர்களால் நடத்தப்படவில்லைதான். தமிழகத்தின் பெரிய போராட்டக் களங்களில் பெரியார், அம்பேத்கர் அளவிற்கு இன்று காந்தியின் பெயர் ஒலிப்பதில்லைதான். கலகக்கார காந்தி இன்றைய மாணவர்களை/இளைஞர்களைச் சென்றடையவில்லை. அல்லது, போராட்டக் களத்தில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோரும் காந்தி நமக்கு ஏற்புடையவராக இல்லை.

ஆனால், காந்தியை ஒத்துழைப்புக் குப்பிக்குள் நீண்ட நாள் அடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒத்துழையாமையின் தோற்றுவாய் அவர். காந்தியர்களின் போதாமைகளையும் மீறி, சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்டு, சத்தியத்தை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பவராகவே காந்தி இருப்பார்.

விமர்சகன்: காந்தி அப்படிச் செய்திருப்பார், இப்படிச் செய்திருப்பார் என்று சொல்வதில் என்ன பயன். ஏன், கடந்த காலத்தின் சிறைக்குள் நாம் இருக்கவேண்டும்? இன்றைய சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம், இல்லையா?

பயணி: காந்தி மானுடச் சிந்தனையின், செயல்பாட்டின் உச்சம். காந்தி இப்படி இருந்திருப்பார் என்று கணிப்பதும், நாம் செய்ய வேண்டியது இதுவென்று அறிவதும் வெவ்வேறல்ல. காந்தியைக் கடந்த காலத்தின் பிரதிநிதியாக நான் பார்க்கவில்லை. அவர் நம் நிகழ்காலத்துக்குரியவர்; எதிர்காலத்துக்கு வழிகாட்டி.

*****

மதுரை காந்தி அருங்காட்சியத்தை எனது மகளோடு பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஒரு படத்தைக் காண்பித்து, காந்தி செருப்பு அணியாமல் வெறுங்காலோடு நடந்துகொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினாள். அந்தப் புகைப்படம் நவகாளி யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. தன் வாழ்வில் தான் சந்தித்த மிகச் சிக்கலானப் பிரச்சனையைத் தீர்க்க, தன்னைச் சூழ்ந்திருந்த இருளைக் கிழித்து ஒளி பிறக்க, மிகக் கடுமையான தவம் தேவைப்பட்டது என்று நம்பிய காந்தி, தன் ஏற்கனவே எளிமையான வாழ்க்கையை, மேலும் எளிமைப்படுத்திக் கொள்ள முயன்றார். அப்படியான ஒரு செயல்தான், 77 வயதில், செருப்பு அணியாமல், நவகாளியின் ஈரநிலங்கள் முழுவதும் நடக்கத் துணிந்தது.

யாத்திரையின் போது கேட்ட எல்லா உரைகளை விடவும், அங்கு கண்ட அந்த புகைப்படம் என் மகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோல், யாத்திரையின்போது ஒரு சொல், ஒரு காட்சி, ஒரு செயல் எங்காவது ஒரு விதையாக விழுந்து கொண்டே இருந்திருக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக தென்னாப்பிரிக்காவிலும், சுதந்திரத்துக்காக தண்டியை நோக்கியும், இந்துக்களுக்காக நவகாளியிலும், முஸ்லிம்களுக்காக பீகாரிலும், தலித்களுக்காக இந்தியாவெங்கும் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டவர் காந்தி. அவரது வாழ்க்கையே சத்தியத்தையும் சர்வோதயத்தையும் நோக்கிய ஒரு யாத்திரைதான். அந்த யாத்திரை இன்னும் தொடர்கிறது. தொடரவேண்டும்.


இரு கோடுகள்

ஒக்ரோபர் 13, 2017

சென்ற வாரம், தொலைந்து போன ஓட்டுனர் உரிமத்துக்கு மாற்று உரிமம் பெறுவதற்காக எங்கள் வீட்டருகே உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகம் சென்றிருந்தேன். நான் அங்குதான் எடுத்திருந்தேன். அப்போது அது கோவை-வடக்கு அலுவலகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால், இப்பொது கோவை-வடக்கு வெள்ளக்கிணறு அருகில் மாற்றப்பட்டுவிட்டது. என்னை அங்கே அனுப்பினார்கள். இரண்டு பேருந்துகள் மாற்றி அங்கே சென்றேன். (ரூ.4+ரூ.13). அங்கே 11 மணிவரைதான் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றிருந்தது. இப்போது இணையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று இணையதள முகவரி ஒன்றும் இருந்தது. (parivahan.gov.in). உடன் ரூ.20 பத்திரத்தில் ஏதோ விண்ணப்பம் வேண்டும், மருத்துவச் சான்றிதழ் வேண்டும் என்றெல்லாம் இருந்தது. ஆனால், இணையத்தில் நான் தேடிய போது, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தளத்தில் வேறு ஒரு வழிமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இணைய தள விண்ணப முறை பற்றி அந்தத் தளத்தில் எதுவுமில்லை. பழைய தளமாக இருக்கவேண்டும். விசாரித்தபோது, அங்கிருந்த அறிவிப்புப் பலகையைப் பாருங்கள் என்பதற்கு மேல் எந்த பதிலும் பெறமுடியவில்லை. மகிழ்ச்சி. எதுவும் செய்யாமல் வீடு திரும்பினேன். இம்முறை காந்திபுரம் செல்ல எதிர்திசைப் பேருந்தில் ஏறினேன். (ரூ.15). அரசாங்க அலுவல் அதற்குள்ளாக முடிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை என்பதால், மனதில் ஒரு வெறுமைதான் இருந்தது. ஏற்கனவே, இந்த உரிமம் தொடர்பாக காவல்துறை சான்றிதழ் பெறுவதற்காக ஆறேழு முறைகள் சிங்கநல்லூர் சென்று வந்த அனுபவம் இருந்தது. (இப்போது அதற்கும் இணையதள வசதி வந்துவிட்டது. எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்போம்.)

நெருங்கிய நண்பர் ஒருவர், 2000 ரூபாய் கொடுத்தால், எந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியிலும் இந்த வேலையை அலைச்சல் இல்லாமல் செய்து கொடுத்துவிடுவார்கள் என்று அக்கறையுடன் சொன்னபோது, நானே எடுத்துவிடுவேன் என்று கூறியிருந்தேன். நேரடியாகவோ மறைமுகமாக லஞ்சம் கொடுக்காமல் ஒரு செயலைச் செய்து முடிக்க நாம் தர வேண்டிய விலை அலைச்சலும் மன உழைச்சலும். அந்த அலைச்சலையும் மன உழைச்சலையும் உச்சப்படுத்துவதற்கான செயல்முறைகளை வடிவமைப்பதில் நம் அரசு அமைப்புகள் அசாத்திய தேர்ச்சி பெற்றுள்ளன. இதனாலேயே இந்த வேலைகளையெல்லாம் முடிந்தவரை செய்யாமல் தள்ளிப்போட்டுவிட்டு, ஊழலற்ற தேசம் பற்றி கனவு காண்பதற்காக தூங்கப்போய்விடுகிறோம்.

பேருந்தில் வீட்டுக்கு வரும் வழியில், இரண்டு பெண்மணிகள் தமது தோள்களில் ஆளுக்கொரு குழந்தையுடன் பேருந்தில் ஏறினார்கள். வறுமையும் அறியாமையும் சமூகநிலையும் முகத்திலும் உடையிலும் பேச்சிலும் தெரிந்தன. குழந்தைகள் மெலிந்திருந்தனர். இருவரும் நடத்துனரிடம் காந்திநகர் போகுமா என்றனர். இல்லையென்றதும் காந்திபுரத்துக்கு 2 பயணச்சீட்டு கேட்டனர். இளையவள் முப்பது ரூபாயை நீட்டினார்.

‘அந்தக் குழந்தைங்களுக்கு எடுக்கலையா?’ என்றார் நடத்துனர், கடுமையுடன்.
‘அவங்களுக்கும் எடுக்கணுமாங்க?’ என்றார் முதியவள்.
‘இந்தப் பாப்பாவுக்கு என்ன வயசாகுது?’
‘மூணு இருக்கும்ங்க,’ குத்துமதிப்பாகச் சொல்கிறார் என்று புரிந்தது. குழந்தையின் வயது தெரியவில்லை. ஆனால், அதன் மெலிந்த உடலில் மூன்று ஆண்டுகளின் தடயம் இல்லை.
‘மூணு வயசாச்சுனா டிக்கெட் எடுத்தாகணும். இதோட வயசென்ன?’ அடுத்த குழந்தையைக் காட்டிக் கேட்டார்.
அந்தக் குழந்தை முந்தைய குழந்தையை விடவும் மெலிருந்தாள். நடுத்தர வர்க்கமாக இருந்தால், சட்டென்று 2 வயது என்று பதில் வந்திருக்கும்.
‘அவளுக்கும் மூணு வயசிருக்கும்ங்க,’ இன்னொரு உத்தேசமான பதில்தான் வந்தது.
‘ரெண்டு பேருக்கும் டிக்கெட் எடுங்க. 56 ரூபா ஆகும். இல்லைனா இறங்கி வேற பஸ்ஸுல வாங்க.’
மறுபேச்சில்லாமல், ஒரு 100ரூபாய்த் தாளைத் தேடி எடுத்துத் தந்தார்.
‘நாங்க புதுசுங்க. எங்க எறங்கணும்னு எங்களுக்குத் தெரியாது. இடம் வந்தா சொல்லுங்க,’ என்றார். நடத்துனரிடம் பதிலேதும் இல்லை. இன்னும் இரண்டுமூன்று மெல்லிய குரலில் கேட்டபோதும், அவர் காதில் வாங்கிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை.
‘எல்லாரும் அங்கதான் இறங்குவாங்க. கடைசி ஸ்டாப் தான்,’ என்று நான்தான் சொல்லவேண்டியிருந்தது.

அவர்கள் செல்லவேண்டிய காந்திநகர் எதுவென்று எனக்கும் தெரியவில்லை. விசாரித்துச் சென்றுவிடுவார்கள் என்றுதான் நம்பவிரும்பினேன். அது எந்த இடமாக இருந்தாலும், சொகுசுப் பேருந்தாக இல்லாமல் சாதாரணப் பேருந்தாகவும், இவ்வளவு பிடிவாதமான விதிமுறைக்கார நடத்துனராக இல்லாமலும் அமையும் என்றும் நம்பிக்கொண்டேன்.

எங்கள் கிராமத்தில் ஒரு பெண் ஊழியருக்கான தினக்கூலி 180ரூ.

எத்தனைதான் ஊழல், சிகப்பு நாடா என்று நடுத்தர வர்க்கம் புலம்பினாலும், பெரும்பாலான தேர்தல்களில் இவை முக்கியப் பிரச்சனைளாக இருப்பதில்லை. அவற்றின் அருவே வேறு பெரிய கோடுகள் உள்ளன.