தன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி

ஜூலை 23, 2018

(எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் வெளியீட்டு விழாவின் போது பேசிய அறிமுக உரையின் விரிவான எழுத்து வடிவம்)

கடந்த ஒரு வாரத்தை, எங்கள் கிராமத்தின் மெல்லிய பருவ மழையிலும் இதமான குளிர் காற்றிலும் கோபாலகிருஷ்ணனின் வெம்மையான எழுத்துகளோடு கழித்தேன்.

அழைப்பிதழில் மனைமாட்சியின் அட்டையிலும் ஈரமாய் மழைப்படம். என்னைத் தழுவிய மழையின் ஒரு துளியை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சியே.

கோபாலகிருஷ்ணனின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பே தியாகு நூலகத்தில் அவரது அறிமுகம் கிடைத்துவிட்டது. ஒரு நல்ல வாசகராகவே அவரை முதலில் அறிந்துகொண்டேன். பழகப்பழக ஓர் இனிய நண்பராக அறிந்துகொண்டேன். பின்னர்தான் மணல்கடிகை படித்தேன். அவரை ஒரு நல்ல நாவலாசிரியாக அடையாளம் கண்டுகொண்டேன். மனைமாட்சியில் அது உறுதிப்பட்டிருக்கிறது. ‘வாழ்விலே ஒரு நாள்’ என்ற புத்தகம் அரசு நூலகத்தில் தேடும் போது என் கைகளில் விழுந்தது. அலெக்ஸாண்டர் சோல்ஸனிட்சினின் ‘One day in the life of Ivan Denisovich” என்ற ரஷிய நாவலின் மொழிபெயர்ப்பு. சோவியத் குலாக்களின் கொடூரமும், நம் சூழலுக்கு அந்நியமான பனியும் குளிரும் தமிழில் அற்புதமாக வந்திருந்தது. அப்போது அவரை மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கண்டுகொண்டேன். ஆங்காங்கு படித்த பல கவிதைகளின் மூலமாக சிறந்த கவிஞராகவும் கண்டுகொண்டேன். இப்போது, இந்த உரையின் பொருட்டுதான் அவரது சிறுகதைகளைத் தொகுப்பாகப் படித்தேன். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவரது சிறுகதைகளுக்காகவே அவரைக் கொண்டாடித்தீர்க்கவேண்டும் என்று தோன்றியது.

தொடர் மின்வெட்டுகளால், அடுத்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழையில் நள்ளிரவில் அவரது முதல் தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’யிலிருந்த ‘ஒற்றைச் சிறகு’ சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். அடிபட்டிருந்த ஒரு பறவையையும், குப்பைத்தொட்டியருகில் கைவிடப்பட்ட ஒரு குழந்தையையும் பற்றிய கதை. படிக்கும் போது என் மீது ஒரு கரப்பான் பூச்சி பறந்துவந்து விழுந்தது. கையிலிருந்த புத்தகத்தால் அனிச்சையாய்த் தட்டிவிட்டேன். பூச்சி தலைகீழாக மழையில் வீழ்ந்தது. அதனால் திரும்ப முடியவில்லை. கதையை முடித்தபிறகு என்னால் அடுத்த கதைக்குச் செல்ல முடியவில்லை. மழையில் இறங்கிப் பூச்சியைத் திருப்பிவிட்டுவந்துதான் தொடர முடிந்தது.

அந்த அளவுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை கலைநேர்த்தியோடு படைத்திருக்கிறார். மானுடத்தின் மீதான நேயம் என்பதைத் தாண்டி அனைத்துயிர்களின் மீதும், இயற்கையின் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக ஆரம்ப காலம் முதலே கோபாலகிருஷ்ணனின் கதைகள் அவரைப் பிரகடணம் செய்கின்றன.

கு.ப.ரா.வின் ஆற்றாமை கதையைக் கொண்டாடுகிற அல்லது விமர்சிக்கிற அளவுக்கு கோபாலகிருஷ்ணனின் இரவு கதையையும் நாம் கொண்டாடலாம். ஆற்றாமை கதையில் கணவனைவிட்டுப் பிரிந்திருக்கிற சாவித்திரி அடுத்த உள்ளில் மகிழ்ந்திருக்கும் இளம் தம்பதியினரைக் கண்டு பொருமி, வாய்ப்பு கிட்டியபோது தடங்கல் ஏற்படுத்துகிறாள். இரவு கதையில் gender role reversal நடக்கிறது. உடல் செயலிழந்து படுத்தபடுக்கையாக இருக்கும் அண்ணன் திருமலை, தம்பியின் திருமணம் முடிந்த முதலிரவன்றுத் தொடர்ந்து இடையூறு செய்கிறான். “உடலற்றக் காமத்தின் ஊமை வலி உனக்குத் தெரிய நியாயமில்லை அம்மா” என்று கறுவுகிறான்.
இறுதியில், ‘திருப்திதானா பேயே’ என்று சாவித்திரியின் குற்றவுணர்வு ஆற்றாமையில் வெடிக்கிறது. திருமலையின் தாய், ‘ஏன்டா திருமலே இப்பிடி பண்றே..நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா…பாவம்டா’ என்கிறாள். ‘பாவந்தான்ம்மா..எதையாச்சும் அரச்சு ஊத்திரு. பாவந்தீந்துரும்’ என்கிற திருமலையின் மூலமாக, காமம் மட்டுமல்ல, ஆற்றாமையும் ஆண்பால் பெண்பால் அறியாது என்பதை இக்கதைமூலம் வெளிப்படுகிறது.

இத்தகைய gender role reversal மனைமாட்சியில் தொடர்ந்து நிகழ்கிறது.

மனைமாட்சியில் ஆறு கதைகள் மூன்று பகுதிகளாகச் சொல்லப்பட்டிருகின்றன. மனைமாட்சியைப் படிக்கும் போதும், படித்து முடிந்த பிறகும் எனக்குள் எழுந்த முதல் கேள்வி – ஒவ்வொரு பகுதியிலும் வருகிற இரண்டிரண்டு கதைகளுக்குள்ளே, ஒரு மெல்லிய இழைதான் தொடர்ச்சியாக இருக்கிறது. இவை ஆறும் தனித்தனி நாவல்களாகவேகூட வெளியிடப்பட்டிருக்கிலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு கதையிலும் அடர்த்தியும் சாராம்சமும் இருக்கின்றன. இந்த ஆறு கதைகளும் சேர்ந்து எப்படி ஒற்றை நாவலாகின்றன?

ஏற்கனவே தமிழிலும் உலக இலக்கியங்களிலும் பல கதைச்சரடுகளையுடைய நாவல்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை ஓர் ஊரின் கதையைச் சொல்லக்கூடும். ஒரு மனிதன் ஒரு நாளில் சந்திக்கின்ற பல்வேறு மனிதர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு காலகட்டத்தின் கதையைக் கூறக்கூடும். ஒரு குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு குடியின் பல்வேறு தலைமுறைகளைப் பற்றி கூறக்கூடும். ஏதோ ஒரு வகையில் இவையெல்லாம் ஒரு மையச்சரடால் பிணைக்கப்படுகின்றன. மணல்கடிகையே கூட இப்படிப் பல கதைகளை ஒருங்கே கையாண்ட ஒரு நாவல்தான். ஐந்து நண்பர்களின் வாழ்க்கையைப் பின்தொடர்வதன் மூலமாக ஒரு நகரத்தின் கதையை, சமூகமாற்றத்தின் கதையை, ஒரு காலமாற்றத்தின் கதையைக் கூறுவார்.

அப்படியாக மனைமாட்சியின் ஆறு கதைகளை இணைக்கிற சரடு, அதன் தலைப்பிலேயே தொடங்கி, தொடர்ந்து வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வள்ளுவன் விரல்பிடித்து அவனை ஏற்றும் மறுத்தும் நாவல் நகர்கிறது எனலாம்.

மனைமாட்சி நாவல் இன்றைய சமூகத்தில், குடும்ப வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைச் சொல்கிறது. சிக்கலான இன்றைய குடும்ப வாழ்வின் முக்கிய பரிமாணங்களை வெளிப்படுத்த ஒரு குடும்பம், ஒரு கதையால் சாத்தியமில்லை என்று கோபாலகிருஷ்ணன் ஆறு கதைகளைக் கையாண்டிருக்கிறார் போலும். பெண்ணின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச வந்த நாவலாகவும் இதைக்காணலாம்.

மணமான ஒரு சில நாட்களிலேயே எந்தத் தவறும் செய்யாமல் கணவனைப் பிரிந்த பின்னும், ஒரு பெண் பிரிவை மிக வலுவாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு எதிர்கொள்கிறாள். இன்னொரு பெண் கணவனோடு சேர்ந்தே இருக்கமுடியாத ஒரு சூழலை உருவாக்கிய பின், தன் மீது சுமத்தப்பட்ட பிரிவால் நொறுங்கிப்போகிறாள்.

உடன்வாழத்தகுதியற்றவன் என்று ஒற்றை நிகழ்வின் மூலமாக ஒரு பெண் நிராக்கிற ஒருவனை இன்னொரு பெண் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாள்.

வீட்டினர் அனைவுரும் வற்புறுத்தும்போதுகூட கணவனை இழந்த ஓர் இளம்பெண் மறுமணம் புரிய மறுக்கிறாள். வீட்டினர் கட்டாயத்தால் மணம்புரிந்துகொண்ட இன்னொரு பெண் உடனடியாக மணவாழ்வை முறிக்க முனைகிறாள்.

இப்படியாக இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை எதிரெதிர் கோணங்களில் இந்நாவல் அணுகுகிறது. இரண்டிரண்டு கதைகளாய் வெம்மையையும் தண்மையையும் மாறிமாறித் தருகின்றது என்றும் சொல்லலாம்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

என்கிறார் வள்ளுவர், ஒரே பெண்ணிடம்தான் பிணியும் மருந்தும் உள்ளன என்கிற பொருளில். கோபாலகிருஷ்ணன் ஒரு கதையில் பெண்ணால் ஏற்படும் நோய்க்கு, இணைகதையில் பெண்ணையே மருந்தாக்கிக் காண்பிக்கிறார்.

இக்கதைகளின் சில கூறுகளையும் கதைமாந்தரின் சில சாயல்களையும் நாம் வேறு கதைகளில் பார்த்திருக்கிறோம். ஏன் வணிகத் திரைப்படங்களில் கூட கண்டிருக்கிறோம். முதல் கதையின் சாந்தியில் புதுபது அர்த்தங்கள் கீதாவும், கடைசிக் கதையின் கலைவாணியில் மௌன ராகம் ரேவதியும் எனக்கு நினைவில் வரத்தான் செய்தார்கள். ஆனால், நிஜ வாழ்வோடு இருக்கக்கூடிய நெருக்கம், கதைகளில் இருக்கிற அடர்த்தி, வாழ்க்கைக்குள் அவை செல்கின்ற ஆழம் என்று இந்நாவல் எட்டிப்பிடிக்கற தளம் முற்றிலும் வேறானது, வெகுவாய் மேலானது.

சில உறவுச்சிக்கல்களைப் பார்க்கும்போது, இவை நம்ப முடியாத நிகழ்வுகளோ என்றுகூடத் தோன்றலாம். ஆனாலும், அவை நாம் நம்ப விரும்பாத நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

முதல் கதையின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கிறது.

/கனலும் இரும்புக் கம்பியுடன் நெருங்கி நிற்கும் சாந்தியின் முகத்தைக் கண்டதும் பட்டென்று உடலைக் குறுக்கினான் தியாகு. வெறியேறிய கண்கள். வறட்டுச் சிரிப்பு. பாதங்களைப் பார்க்கிறாள். மறுகணம் அவள் பார்வை அவன் முகத்தில் படிகிறது. “ஒரு இழுப்பு இழுத்தாத்தான் நீ சரியா வருவே.”/

முதல் முறை இதைப் படிக்கும்போது ஏதோ நனவோடைக் காட்சியென அதிகம் கவனம் செலுத்தாமல் கடந்து சென்றுவிட்டேன். மறுமுறை பார்க்கும்தோதுதான் இப்படியொரு காட்சியை மனம் நம்ப மறுத்ததன் விளைவுதான் என்னை அப்படிக் கடந்து போகச் செய்தது என்று தோன்றுகிறது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி என்கிற பாத்திரத்தின் சிக்குகளை அவிழ்த்துச் செல்வதில் கோபாலகிருஷ்ணனின் படைப்பாளுமை வெளிப்படுகிறது. அவளது பாத்திரப்படைப்பு ஊகங்களுக்கு இடமில்லாமல் முற்றிலும் துலங்கிய பிறகு நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது. இங்கும் ஒரு gender role reversal செய்கிறார்.

பெண்கள் உள ரீதியான மிரட்டல்களாலும், வசைச்சொற்களாலும் ஆண்களைத் அச்சுறுத்துவதை நாம் பல கதைகளில் கண்டிருக்கலாம். ஆனால், உடல்ரீதியான வன்முறையைச் செலுத்துவதை இந்தக் கதை அளவுக்கு மூர்க்கமாய்ச் சொன்ன ஆக்கம் என்று நான் வாசித்தவற்றுள் வேறு எதுவும் இல்லை.

குழந்தைகளின் பொருட்டு தியாகு சாந்தியின் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்கிறான். கதையை இன்னும் கூர்ந்து கவனித்தால், சாந்தியின் பொருட்டுமே அவன் சாந்தியைச் சகித்துக்கொள்கிறான்.

இன்னொரு தளத்தில், இது நுகர்வு கலாச்சாரம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாபெரும் சீர்கேட்டைச் சித்தரிக்கிற கதையாகவும் உள்ளது. அண்மையில் வந்த சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை இதனோடு ஒப்பிடலாம்.

உண்மையில் இக்கதையைப் படிக்கிறவரை இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்குறள் என்னுள் இவ்வளவு விரிந்திருக்கவில்லை.

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை உடையவளாக, கணவனின் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நடத்துகிறவளே சரியான துணையாக இருப்பாள் என்கிறார் வள்ளுவர். கதையை முடித்தபின் இக்குறள் பெரும் விரிவை ஏற்படுத்தியது.

காண்கிற பொருள்ளையெல்லாம் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பது ஒரு நோயாக இன்று உருவெடுத்துவிட்டது. கடனட்டைகள் எந்த அளவுக்கு நம்மை complusive buying disorder நோக்கித் தள்ளுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. பல அதிர்ச்சியான தருணங்கள் இக்கதையில் உள்ளன.

இதன் இணைக்கதையும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினாலும், போகப்போக வெம்மையைத் தணிக்கும் தென்றாய் வருடத்தொடங்குகிறது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

என்று காமத்துப்பாலில் ஒரு குறளுண்டு. தீ தொட்டால்தான் சுடும். காம நோய் போல் விட்டாலும் சுடுமா என்கிறார் வள்ளுவர். இக்கதையின் பிரச்சனையே, ராஜம்பாய்க்கு தொட்டாலும் தீ சுடவில்லை என்பதுதான். எத்தனை தொலைவும், காலமும் கடந்தபின்னும் காமநோய் சுடுவதாக இருக்கிறது.

இரண்டாவது பகுதியில் வருகிற இரு கதைகளும் ஓரளவு பிணைக்கப்பட்ட இணை கதைகளாகவே உள்ளன.

ஆரம்பத்தில், ஓர் உக்கிர நாடகத்தில் இருந்து அபத்த நாடகத்துக்குள் நுழைந்த விட்ட உணர்வு ஏற்பட்டது. கட்டியவளைத் தெருவில் விட்டுவிட்டு அவளறியாமல் உணவகத்தில் ஒரு கட்டுகட்டுகிறான் கணவன். பொறுக்கமாட்டாத புது மனைவி பிரிந்து செல்கிறாள். இப்படியொரு அபத்த நிகழ்வோடு தொடங்கும் கதை பின்னர் பல்வேறு உளவியல் சிக்கல்கள் உறவுச் சிக்கல்கள் என்று விரிந்து செல்கிறது.

நாவலின் மூன்றாம் பாகத்தில் வரும் விநோதினி, இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு மறுமணம் செய்ய மறுப்பவளாக இருக்கிறாள். ஆனால், சுற்றத்தார் வற்புறுத்துகின்றனர். மறுமணம் ஓரளவு பரவலாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், இறந்துவிட்ட கணவன் குடும்பத்தின் சொத்து அவளுக்குச் சென்றடைவதில் தயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்நாவலில் அவள் மாமனார் சொல்கிறார்:
“என் பெரிய மருமகளுக்கும் பேரன் பேத்திக்கும்னு நான் குடுத்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி அவ நாளைக்கு மனசு மாறி இன்னொருத்தரைக் கட்டிட்டாலும் என் முடிவுல எந்த மாத்தமும் இருக்காது. ஆமா. நல்லாக் கேட்டுக்குங்க.”

இது இந்நாவலின் உச்சமான தருணங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

சில உடலுறவுக் காட்சிகளையும் வன்புணர்வுக் காட்சியையும் இத்தனை அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமா என்று, என்னுடைய இயல்புக்கு, எனக்கொரு விலகல் ஏற்படத்தான் செய்தது. ஆனால், கோபாலகிருஷ்ணன் ஒரு காட்சியையோ உணர்வையோ விவரிக்க முடிவுசெய்துவிட்டால், கட்டுக்கடங்கா ஆறாகத்தான் பாய்கிறார்.

உதாரணமாக, அவரது முனிமேடு தொகுப்பில் உள்ள பிற்பகல் விளையும் என்ற சிறுகதையில், ஒரு சிறுவன் தேங்காய் பன் மீது பிரியமாக இருக்கிறான். அந்தத் தேங்காய் பன் காட்சியை அத்தனைத் தித்திப்பாய் விவரிக்கிறார்:

‘தேங்காய் பன்னை சாப்பிடும்போது பலரும் பக்குவம் தெரியாமல் சாப்பிடுவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். முக்கோண வடிவில் இருக்கும் தேங்காய் பன்னின் கூரிய முனையை முதலில் பார்க்கும்போது வாகாய் பிளந்துகொண்டு விரல்களால் விண்டெடுக்க வசதியாகத்தான் தெரியும். பிளவினூடாக தேங்காயும் சர்க்கரையும் கலந்து மின்னும் பரப்பு பரவசப்படுத்தும். ஆனாலும் நுனியிலிருந்து பன்னை பிய்த்து சாப்பிடக்கூடாது. தேங்காயும் சர்க்கரையும் இதமான சூட்டிலிருக்கும் பன்னும் சேர்ந்து வெகு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ருசிக்கு மயங்கிவிட்டால் அதோ கதிதான். பிறகு கடைசியில் முக்கோணத்தின் அடிப்பக்கம் வரும்போதுதான் தெரியும் சேதி. பன்னின் தடிச்ச அடிப்பக்கத்தை வாயில் போட்டு மெல்லும்போது தேங்காயில்லாமல் சவசவப்பு மட்டும்தான் மிஞ்சும்.

சண்முகம் முதலில் வெறும் பன்னை மட்டும்தான் தின்பான். இதமான சூட்டில் வெறும் பன்கூட லேசான தித்திப்புடன் சுவையாகவே இருக்கும். இனிப்புக்கு நாக்கு மெல்லப்பழகுவதுபோல சுவை கூடும். இரண்டு அல்லது மூன்றாவது விள்ளலில் தேங்காயும் சர்க்கரையும் வாய்க்கத்தொடங்கிவிடும். இப்போது வெறும் பன்னின் சவசவப்பு காணாமல் போய் தேங்காய் பன்னின் அசலான சுவை தென்பட்டிருக்கும்.’

ஒரு தேங்காய் பன்னைக்கூட இத்தனை ரசனையுடன் விவரிப்பவர் காமத்தைப் பட்டும்படாமல் சொல்லிவிடவா முடியும்?

ஒரு இளம் பெண் எழுத்தாளர் ஸ்காட் பிட்ஜெரால்டுக்கு தனது கதையை அனுப்பி அவரது கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் இப்படி மறுமொழி அனுப்பியிருந்தார்.

Dear Frances:

I’ve read the story carefully and, Frances, I’m afraid the price for doing professional work is a good deal higher than you are prepared to pay at present. You’ve got to sell your heart, your strongest reactions, not the little minor things that only touch you lightly, the little experiences that you might tell at dinner. This is especially true when you begin to write, when you have not yet developed the tricks of interesting people on paper, when you have none of the technique which it takes time to learn. When, in short, you have only your emotions to sell.

This is the experience of all writers. It was necessary for Dickens to put into Oliver Twist the child’s passionate resentment at being abused and starved that had haunted his whole childhood. Ernest Hemingway’s first stories “In Our Time” went right down to the bottom of all that he had ever felt and known. In “This Side of Paradise” I wrote about a love affair that was still bleeding as fresh as the skin wound on a haemophile.

[….]

பின் குறிப்பாக அவர் சொன்னதும் முக்கியமானது:

P.S. I might say that the writing is smooth and agreeable and some of the pages very apt and charming. You have talent—which is the equivalent of a soldier having the right physical qualifications for entering West Point.

‘ஒரு எழுத்தாளன் தன் இதயத்தைத் திறந்து, தன் ஆழமான உணர்வுகளைக் கொட்டத் தயாராக இருக்கவேண்டும். எழுதுவதற்கான விலையை நீ கொடுக்கத்தயாராக இல்லை,’ என்கிறார்.

கோபாலகிருஷ்ணன் அந்த விலையையும் அதற்கு மேலும் தருவதற்குத் தயாராக இருப்பதாலேயே அவரால் இப்படியொரு படைப்பைப் படைக்க முடிகிறது. கசப்பும் வேதனையும் கருணையும் எல்லாம் உதிரமும் சதையுமாய்க் கலந்தே வருகின்றன. நாவலின் மங்கையின் சொற்களில்,

“அந்த ஒரு ராத்திரியில் எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன் ஆயுள் மொத்தத்திலேயும் அனுபவிக்க வேண்டிய கசப்பையும் வேதனையையும் ஒரே ராத்திரியில் அனுபவித்துவிட்டேன். வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் பார்த்துவிட்டேன். வக்கிரமும் குரூரமுமான ஒன்று, பயங்கரமானது. நினைத்தாலே வலிக்கும். ஆனால் அதே ராத்திரியில்தான் அந்த இருவரையும் பார்த்தேன். இப்போது நான் உயிரோடு இருப்பது அவர்களின் கருணையில்தான். அந்தப் பெண்ணின் கண்ணீரும் அவளது அம்மாவின் ஆக்ரோஷமும் மாறி மாறி என்னை அலைகழிக்கும். அடியோடு நினைவிலிருந்து அழிக்க முயன்றும் மறக்கவே முடியாத ராத்திரி. அதுதான் எனக்கு இத்தனை பக்குவத்தையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.”


பெருமழையில் வீழ்தருவே

ஜூலை 12, 2018

நாடெல்லாம் சுற்றியலைந்துவிட்டு, இவ்வாரம்தான் எங்கள் கிராமத்துக்குப் பெருமழை வந்துசேர்ந்தது. வந்தவுடன் விரிந்து பரந்த ஒரு புளியமரம் விழுந்துவிட்டது. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தது அம்மரம்.

மரம் விழும் போது கோவையில் இருந்தோம். அடுத்த நாள்தான் ஊருக்குச் சென்றேன்.

மரம் விழுந்த அதே நாள், எங்கள் பயிலகத்துக்கு வரும் 9 வயதுச் சிறுவன் இளங்கோவின் அம்மாவும் இறந்துவிட்டார். அவனைத்தான் முதலில் பார்க்கச் சென்றேன். வழியிலேயே கண்ணில் பட்டான். அவனது 4 வயது தங்கையுடனும் வேறு இரு குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்தான்.

இளங்கோ எங்கள் பயிலகத்துக்கு வரும் மாணவர்களில் மிகவும் கட்டுக்கடங்காதவன். எந்த வேலை சொன்னாலும், செய்யாமலிருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்துவிடுவான். மனது வைக்கும்போது, எதைச் சொல்லிக்கொடுத்தாலும் எளிதில் கற்றுக்கொள்வான். நல்ல புஷ்டியாக இருப்பான். எந்த உணவானாலும் அலாதியான அடக்கமுடியாத ஆவலுடன் உண்பான்.

அவனது தங்கையைச் சில சமயம் அழைத்துவருவான். மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்வான்.

ஒரு முறை அவனது ஆசிரியர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருக்கிறார். அதைப் பற்றி விசாரிக்க, அவனது பெற்றோரைப் பள்ளிக்குச் சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்த அவனது வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதுதான் அவன் அம்மாவுடன் பேசியிருக்கிறேன்.

‘என்னாச்சு இளங்கோ? உங்க வீட்டுக்குத்தான் வந்தேன். வா போகலாம்,’ என்றேன்.

‘அண்ணா, இருங்கண்ணா வந்தர்றேன். தாத்தா காசு குடுத்தாரு. கடைக்குப் போயிட்டிருக்கேன்,’ என்று அருகிலிருந்த கடைக்குச் சென்று குழந்தைகள் எல்லாருக்கும் மிட்டாய் வாங்கி வந்தான்.

அவனது அப்பா வீட்டிலிருந்தார். எனக்கு நாற்காலி போட்டுவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். இளங்கோவின் அம்மாவுக்கு இரண்டு மாதமாகவே உடம்பு சரியில்லை; காச நோய் வந்து, கழுத்தில் நீர்கோர்த்து, அது கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று ஒருவகையாகப் புரிந்து கொண்டேன்.

 

எங்கள் நாய் காரியைக் காணவில்லை என்று கடந்த இரு வாரங்களாய்த் தேடிக்கொண்டிருந்தோம். இளங்கோவும் அவன் நண்பர்களும்தான் சாலையில் வாகனம் அடித்து மடிந்து கிடந்த ஒரு கறுப்பு நாயைக் காண்பித்தனர். காரி என்றுதான் நான் நினைத்தேன். மகிழ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். ‘காரி இத்தாச்சோடு இருக்குமாப்பா? அடியில இத்தனை வெள்ளையும் காரிகிட்டக் கிடையாது. வேறெங்காவது போயிருக்கும், திரும்பி வந்துரும்.’

மறுபடி இளங்கோவைச் சந்தித்த போதும் காரியைப் பார்த்தானா என்று கேட்டேன்.
‘ஆமாங்கண்ணா.’
‘எங்க?’
‘அந்தப் பீக்குழில தான். அது காரி தாங்கண்ணா,’ என்று அப்போதும் உறுதியாகக் கூறினான்.

 

‘போன வாரம் கூட இளங்கோவ தினமும் பார்த்தோமே. அவன் ஒன்னுமே சொல்லலையே. என்ன ஏதுன்னாவது பார்த்திருக்கலாம்,’ என்று அவன் அப்பாவிடம் அங்கலாய்ப்பாகக் கூறினேன்.

‘அவனுக்கே அம்மாவுக்கு இவ்வளவு முடியலைனு தெரியாதுங்க. இப்ப அவந்தான் காரியமெல்லாம் பண்ணினான். இவனிருக்கும் போது நான் எப்படி பண்ணமுடியும்? இந்தப் புள்ளைக்குத்தான் எப்படிப் புரியவைக்கிறதுன்னு தெரியலங்க. அம்மாவை ஆஸ்பித்திரிக்குக் கூப்பிட்டுப் போயிருக்காங்க, மருந்து கொடுத்திட்டிருங்ககாங்கனுதான் சொல்லிட்டிருக்கேன்,’ என்றார் இளங்கோவின் அப்பா.

‘அண்ணா, இன்னிக்கு ட்யூசன் இருக்கா,’ என்றாள் அவன் தங்கை, மழலை தீராக் குரலில்.
‘இல்லம்மா, மழையா இருக்கு. அடுத்த வாரம் வைச்சுக்கலாம். நீயும் வா, சரியா.’

இளங்கோ கையிலிருந்த சீப்பால் கீழே கிடந்த நாவல் பழக் கொட்டைகளை நோண்டிக்கொண்டிருந்தான். ‘சும்மா இருக்க மாட்டியா,’ என்று அவன் தாத்தா அதட்டினார்.
‘டேய் இளங்கோ, பெரிம்மாட்டப் போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா’ என்று அவன் அப்பா கூறியதும்,
‘இல்லை பரவால்ல, வேண்டாங்க,’ என்று எப்போதும் போல் சம்பிரதாயமாக மறுத்தேன்.

சற்று தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவர், என்னை அங்கு தேநீர் குடிக்கச் சொல்வது சரியல்ல என்று சைகை காண்பிப்பது தெரிந்தது. மறுத்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

‘ஆஸ்பித்திரில இருந்து வந்தவுடனேயே எடுத்துட்டோம்ங்க. உடம்பு ஒரே கொதியா இருந்திச்சு. நல்ல வேளையா நேத்து அந்த மரம் நாங்க புதைச்சுட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் கீழே விழுந்துச்சு. இல்லைனா வண்டிய ஊருக்குள்ளதான் விட்டு எடுத்துட்டுப் போயிருக்கணும். இதுவரைக்கு யாரையும் நாங்க ஊருக்குள்ள கொண்டு போனதில்லை. பெரிய பிரச்சனையாப் போயிருக்கும்.’

—-

வேரோடு பெயர்ந்து சாய்ந்து கிடந்த மரத்தின் முன்னால் நிற்கும்போது, நெருங்கிய உறவுக்காரர் வீழ்ந்துகிடக்கும் சோகம் அப்பிக்கொண்டது. இளங்கோவின் வீட்டிலிருந்த போது எழுந்த அதே உணர்வு. காரியின் இன்மையில் எழும் அதே வெறுமை.

மரத்தின் அருகில் குடியிருக்கும் பார்வதி, ‘மரம் விழுந்த சத்தமே கேட்கல. அவ்வளவு மெதுவா சாய்ஞ்சுது,’ என்றார்.

பார்வதியின் வீட்டு மாடுகள் எல்லாம் அம்மரத்தடியில்தான் கொட்டகை அமைத்துக் கட்டிவைத்திருப்பார்கள். கொட்டகை மரத்துக்கு வடமேற்காக உள்ளது. அவர்களது வீடும் மரத்துக்கு வடக்கே மிக அருகில் உள்ளது. மரத்தின் தென்புறம் உயரமான கைபேசி கோபுரம் ஒன்று உள்ளது.

மரம் கிழக்கு நோக்கிச் சாலையின் மீது சாய்ந்திருந்தது. சாலையைத் தாண்டியுள்ள வீட்டின் சுற்றுச்சுவரைக்கூடத் தொடாமல், யாருக்கும் பாதிப்பில்லாமல் விழுந்துகிடந்தது. சில மின்கம்பிகள் மட்டுமே அறுந்துபோயிருந்தன. சாலையை மறித்த கிளைகளை விரைவிலேயே வெட்டி அகற்றிவிட்டனர்.

மீதி மரம் மணியகாரரால் ஏலம் விடப்படக் காத்துக்கிடக்கிறது. பல ஆயிரங்கள் பெறும்.

அந்த பிரம்மாண்ட மரத்தின் இன்னும் வாடிப்போகாத இலைகளில் பசுமை கசிந்துகொண்டிருந்தது. மழை மீண்டும் தூறத்தொடங்கியது. சிறது நேரம் மௌனமாக நின்றுவிட்டு நகர்ந்தேன்.


தமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’

ஜூலை 12, 2018

கோவை புத்தகக் கண்காட்சியில் ஒருமுறை சந்தித்தபோது, தமிழினி வசந்தகுமார் தமிழ்நாட்டின் மிகமுக்கியமான மெய்யியல் அறிஞர் என்று இரா.குப்புசாமியைக் குறிப்பிட்டு அவரது ‘அறிவு நிலைகள் பத்து’ நூலைப் படிக்கச்சொல்லிக் கொடுத்தார். சரி, அவர் பதிப்பித்த நூல், அதனால் அப்படிச் சொல்கிறாரோ என்ற அசட்டையாலோ என்னவோ நீண்டநாள் படிக்காமலிருந்துவிட்டு சில மாதங்கள் முன்னர் ஒரு நீண்ட பேருந்துப் பயணத்தின் போது படித்தேன். வள்ளுவர், வள்ளலார், திருமூலர், திருவாசகம், சித்த மரபையெல்லாம் இணைத்து எழுதப்பட்ட அருமையான நூல். நானாகத் தேடாது என்னைக் கண்டடைந்த புத்தகங்களில் சிறப்பானதொன்றாக இதைக் கருதுகிறேன். கனமான ஒரு மெய்யியல் நூலை, விறுவிறுப்பானதொரு நாவலைப் போல விடாமல் படித்துமுடித்தேன். இன்னும் ஆழமாய் மீண்டும் படிக்கவேண்டும். கால் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுத்திருந்த என் தந்தைக்கும் கொடுத்தேன். வலியை மறந்து அவரும் கூர்ந்து படித்தார்.

‘அறிவு நிலைகள் பத்து’ நூலில் குப்புசாமி தமிழுக்கு என்று தனியே ஒரு மெய்யியல் மரபு இருப்பதாக நிறுவுகிறார். ஆறாவது அறிவைத் தாண்டி மேலும் நான்கு அறிவு நிலைகளைக் குறிப்பிடுகிறார். அன்பு நிலையை, அருள் நிலையையே உயர்ந்ததாக முன்வைக்கிறார். நவீன நடையில் பழங்கவிதைகளுக்கிடையே இருக்கும் ஒப்புமைகளை நாம் எதிர்பார்க்காத வகையில் கண்டறிந்து முன்வைக்கிறார். இடையிடையே அவர் அறுதியிட்டுச்சொல்லும் சில விஷயங்களை இடக்கு செய்யும் என் பகுத்தறிவால் முற்றாக ஏற்றுக்கொள்ளமுடியாதிருப்பினும் மொத்த நூலையும் பெரும் வியப்புடன் படித்தேன் (அவரே அப்படியானவற்றை அறிவியல் புனைகதை மாதிரி படிக்கலாம் என்று சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்). குறிப்பாக வள்ளுவரைப் புதிய ஒளியில் பார்க்கச்செய்தார். பல குறள்களுக்கு இதுவரை நான் கண்டிராத, ஆனால் ஏற்கத்தகுந்த விளக்கங்களை அளிக்கிறார்.

இந்நூலைப் பற்றி ஜெயமோகனின் ஒரு சிறு குறிப்பும், போகன் சங்கரின் குறுங்குறிப்பும் மட்டுமே இணையத்தில் கண்ணில் பட்டன. நேர்பேச்சில் கோணங்கள் ஆனந்த் அவரது பரவலான வாசிப்புப் பின்புலம் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார்.

தமிழினி மின்னிதழில் இரா.குப்புசாமியின் கட்டுரை வந்துள்ளது. கதே பற்றிய ஆழமான, ஆர்வமூட்டும் அறிமுகத்தைத் தருகிறார். காலங்கள், துறைகள் கடந்து அவர் செய்யும் ‘அறிவு எண்’ ஒப்பீடு போன்றவை மட்டும இடறுகின்றன.

இறுதியில் தொடரும் என்ற சொல்லைக் கண்டபோது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.


சுனில் கிருஷ்ணன்

ஜூலை 1, 2018
[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]
நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.
சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.
பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.
காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.
காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.
அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.
வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.
ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.
இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)
அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.