உறக்கம்

ஏப்ரல் 29, 2011

நடக்கக் கூடாது.

நடக்கக் கூடாது.

நடக்கக் கூடாதது

நடக்கவே கூடாது.

நினைத்து நினைத்து

உறக்கமில்லை.

நடக்கக் கூடாதது

நடந்தே விட்டது.

நன்றாய் உறங்கினேன்.


வளர்ச்சி

ஏப்ரல் 29, 2011

நாடு வளர

நெடு்ஞ்சாலைகள் வளர்ந்தன.

நவயுக நதிகளாகிச்

சுற்றிலும் ஊர்கள் பிறந்தன.

நாடு மேலும் வளர

நெடுஞ்சாலைகள் விரிந்தன.

மரங்கள் வழிவிட்டன.

வழிவிடாத ஊர்களை

என்ன செய்ய?

சில நதிகள் 

ஊரை விழுங்கும்.

சில நதிகள்

தடுப்பைச் சுற்றிப்

பாதையை மாற்றும்.

காணாமற்போன ஊரில்

காபிகுடிக்க

எந்த வழிபோக்கனும்

தேடிப்போனதாய்த் தகவலில்லை.


காற்றடைத்த பலூன்

ஏப்ரல் 20, 2011

என் மகளுக்கு பலூன் மிகப்பிடிக்கும்.

காற்று நிரப்பிப் பெரிதாய் ஊதிக்கொடுத்தேன்.

உருட்டியும், விரட்டியும், தாவியும் ஓடியும்

பரவசமாய் விளையாடினாள்.

பட்டென்று வெடித்தது.

வீலென்று கத்தினாள். ஓவென்று அழுதாள்.

சே! இப்படி ஏமாற்றமடைகிறாளே.

இனி இவளுக்கு பலூன் ஆசையே காட்டக்கூடாது.

கண்ணீர் காயுமுன் வேறென்னவோ வேடிக்கை.

ஓடிவிட்டாள்.

மறுநாளே,

அப்பா! எனக்கு பிங்க் பலூஊன் வேணும்.

ஆசையாய் ஓடிவந்தாள்.

மறுபடியும் வெடிக்கும். மறுபடியும் அழுவாய்.

இல்லப்பாஆ, வெடிக்காஆது.

வெடிச்சா,

நாளைக்கு யெல்லோஓ பலூஊன் ஊதிக்கலாம்.

​காற்று நிரப்பிப் பெரிதாய் ஊதிக்கொடுத்தேன்.

உருட்டியும், விரட்டியும், தாவியும் ஓடியும்

பரவசமாய் விளையாடுகிறாள்.


நானும் கவிஞன்தான்

ஏப்ரல் 18, 2011

என்னையே சுட்டெரிக்கும்

தாகம் இல்லை என்னுள்.

பிறரைச் சுட்டெரிக்கும்

கோபம் இல்லை என்னுள்.

எல்லோரையும் சுட்டெரிக்கும்

மோகம் இல்லை என்னுள்.

காதாலாகிக் கசிந்தொழுகும்

பக்தி இல்லை என்னுள்.

வாடிய பயிரைக்கண்டுருகும்

கருணை இல்லை என்னுள்.​

போற்றிப் புகழும்

புரவலர் இல்லை எனக்கு.

வாட்டி வருத்தும்

வறுமையும் இல்லை என்னிடம்.

இருப்பினும் சொல்கிறேன்:​

நானும் கவிஞன்தான்.​