எக்சில் ஒரு நண்பர் அலெக்சி நவால்னி ரசியச் சிறையில் இறந்துபோனது குறித்துச் சினந்து எழுதியிருந்தார். அவர் சினம் நியாயமானதுதான். கருத்துமுரண்களுக்காகக் கொடுஞ்சிறையில் அடைத்துச் சாகடிப்பது கொடுங்கோன்மையே.
ஆனால் மேற்குலகம் ஊதிப்பெருக்கும்/மறைக்கும் எந்த நிகழ்வையும் ஐயத்துடனும் பிற கோணங்களிலும் அணுகவேண்டும் என்ற தெளிவையும் கடந்த சில மாதங்களில் எட்டியுள்ளேன்.
இதே நண்பர், மக்களாட்சி குறித்தும், மனித உரிமைகள் குறித்தும், பேச்சுச் சுதந்திரம் குறித்தும் பாடமெடுக்கும் மேலை நாடுகளால் வேட்டையாடப்பட்டுச் சிறையிலிருக்கும் Julian Assange குறித்து இதுவரை எதுவும் எழுதியதில்லை. இதே நாடுகள் வழங்கும் ஆயுதங்களாலும் ஆதரவாலும் காசாவில் 115 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து எதுவுமே எழுதியதில்லை. இந்த நாடுகளும் அவற்றின் ஊடகங்களுமே நம்முடைய கருத்துகளையும் இரசனையையும் அரசியலையும் முடிவுசெய்யுமளவு தாக்கம் செலுத்துகின்றன.
நம் கருத்துகள் மீது எவ்வித குறிப்பிடத்தக்க தாக்கமும் செலுத்தாத ஒரு முற்றதிகார நாட்டில் நடந்த நவால்னியின் மரணம், பிறரது படுகொலைகளைவிட இவரைப் பாதித்ததற்கும் இந்த மரணத்துக்கு மேலை ஊடகங்களில் கிடைத்துள்ள வெளிச்சமும் பிறவற்றைச் சூழ்ந்துள்ள இருட்டடிப்புமே காரணமாக இருக்கமுடியும்.
பைடன், ஒபாமா, ரிசி சுனாக் முதல் பிபிசி/சிஎன்என் ஊடாக இந்த நண்பர்வரை பலரும் இதைக்குறித்துப் பேசி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களின் சொற்களில் அசாஞ்சும் பாலசுத்தீன ஊடகவியலாளர்களும் ஒருபோதும் முதன்மை பெறப்போவதில்லை. (அசாஞ்சின் ஆதரவாளர்கள் பலர், அவர் மனைவி உட்பட, நவால்னியின் மரணத்தைக் கண்டித்துள்ளனர். அத்தகைய எதிர்ப்பு நிலையானதொரு கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.)
ரசியாவிலேயே ஒடுக்கப்படும் புடினின் பிற அரசியல் எதிரிகளைப் பற்றி – நவால்னியைவிட முக்கியமானவர்களைப் பற்றி, எந்தச் செய்தியும் நாம் அறிவதில்லை என்பதையும் சுட்டி, அது ஏனென்ற கேள்வியை முன்வைக்கிறது இன்னொரு பதிவு: