என் வீட்டைச் சுற்றிலும்
அரிதாய் வரும் காகங்கள்,
அடிக்கடி வந்துபோகும் அணில்,
தூரத்தில் கம்பீரமாய்ப் பறக்கும் கழுகுகள்
(அருகில் அமரும்போது ஒடுங்கிப்போய் அழுக்காய்த் தெரிந்தன)
அங்கே எப்போதும் பூத்து நிற்கும் பெயர்தெரியாத
ஏதோ மரத்தில் பச்சைக் கிளிகள்,
மாடிமீது தண்ணீர் தொட்டியின்மேல்
அமர்ந்திருக்கும் புறாக்கள்,
மழைக்காலம் துவங்கும்வரை
வட்டமிட்ட வண்ணவண்ண பட்டாம்பூச்சிகள்,
நீண்டநாள் கண்டிராத தும்பிகள்,
சில வெட்டுக்கிளிகள், கீழ்வீட்டில்
கூண்டுக்குள் லவ் பேர்ட்ஸ்,
ஓணான்கள், இன்னும் பெயர்தெரியாத
எத்தனையோ பூச்சிகள், ஊர்வன பறப்பன,
அடையாளம் காணமுடியாத பறவைகளின் ஒலிகள்,
எதிர்வீட்டில் எப்போதும் குறைக்கும் நாய்,
எல்லாம் தெரியத் தொடங்கின
நவம்பர் 21, 2008 முதல்.
நவம்பர் 21 –
என் மகளுக்கு மட்டுமல்ல
இனிமேல்
எனக்கும் பிறந்தநாள்தான்.