சில கவித்துளிகள்

நவம்பர் 15, 2010

1)

நெடுஞ்சாலை ஓரத்து
ஆலம் விழுதுகளைப்
பிடித்தாட ஆசைப்பட்ட
இளவயதுப்
பேருந்துப் பயணங்களை
நினைத்தவாறு
காரில் விரைந்து
கடந்தேன்.

2)

பழைய சிற்பத்தின் முகத்தில் புதிய சாயம்

கொலைக் கைதியின் கழுத்தில் பதிந்த கயிறு.

3)

அழுத்தம் தாங்காது மடிந்து போயின
பீலியின் மெல்லிய இறகுகளில்
குடியிருந்த நுண்கிருமிகள்.

4)

விழும்போதும்,

மேகம் மழையாய்

ஆறு அருவியாய்

கனி விதையாய்

இலை உரமாய்

கதிர் ஒளியாய்

மனிதன்?

5)

ஒரு கவிதை
தன்னை மாய்த்து
இன்னொன்றை
ஈன்று சென்றபோது
அறிந்தேன் அது
நல்ல கவிதையென்று.


உதிர்ந்த மலர்கள் – உ.வே.சா வால் மலர்ந்த மலர்கள்

நவம்பர் 11, 2010

உதிர்ந்த மலர்கள் உ.வே.சா வடித்த அற்புதமான நினைவோவியம். பொருத்தமான தலைப்பு. கி.வ.ஜ எழுதிய ‘தமிழ்த் தாத்தா’ படித்தபோதே, உ.வே.சா பற்றி மேலும் படிக்க வேண்டும் என்றிருந்தேன். இப்போது அவருடைய ‘என் சரித்திரம்’ படித்தே ஆகவேண்டும். இவர் போன்றவர்கள் தம் வாழ்வைத் தமிழுக்கு அர்ப்பணிக்காமல் இருந்திருந்தால், நமக்கு இன்று திருக்குறளும், சங்கப்பாடல்களும், கம்பனும், சிலம்பும் கிடைக்காமலே போயிருக்கும்.

அவருடைய ‘சருகு அரித்தேன், குளிர்காய நேரமில்லை’, எங்கோ, எப்போதோ கேட்டு, இன்றும் என்னால் மறக்க முடியாத வரி. என்னுடைய முந்தைய பதிவின் தலைப்புக்கு inspiration.

‘என் சரித்திரம்’  இங்கே படிக்கலாம்.

இன்று எத்தனை தமிழர்களுக்குத் தங்கள் தாத்தாவைத் தெரியும்?

அவருக்கும் தாத்தாக்கள் இருந்திருக்கிறார்கள், இருந்த தடம் தெரியாமல், பழந்தமிழ் நூல்களைக் கண்டெடுத்து கொடுத்துச்சென்றிருக்கிறார்கள் என்பதை இந்தத் தளத்தில்தான் தெரிந்து கொண்டேன்.