க.மு.நடராஜன்: வரலாற்றுடன் ஒரு வாழ்க்கைப் பயணம்

ஓகஸ்ட் 25, 2021

(2021 ஜூலை மாதக் காலச்சுவடு இதழில் வெளிவந்த அஞ்சலிக் கட்டுரை)

உலக அளவில் க.மு.நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனாக்காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் நேர்ந்த அவரது திடீர் மரணம். 88 வயதிலும் அவர் சுமந்துகொண்டிருந்த பொறுப்புகள் ஏராளம். காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து 21ம் நூற்றாண்டுக்குக் கடத்திவந்த காந்திய ஊழியர்களின் முதல் வரிசையில் நின்றவர் அவர். கே.எம். அண்ணாச்சி என்று மிகுந்த அன்புடன் சர்வோதய இயக்கத்தினரால் அழைக்கப்பட்டார். முதல் தலைமுறை காந்தியர்களுக்கும் அவர்களது நேரடிச் செயல்பாட்டினை அறியாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

க.மு.நடராஜன் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும் அதே நேரத்தில் தேர்ந்த அறிஞராகவும் இருந்தவர். அவர் மதுரை காந்தி அருங்காட்சியகம், தமிழ்நாடு சர்வோதய மண்டல், அனைந்திந்திய காந்தி நினைவு நிதி, சர்வ சேவா சங்கம், சர்வோதய இலக்கியப் பண்ணை ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் வகித்தார். சர்வோதய இலக்கியப் பண்ணை, காந்திய இலக்கிய சங்கம் ஆகிய பதிப்பகங்களின் மூலம் பல முக்கியமான காந்திய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் ஆகிய இதழ்களுக்கும், Sarvodaya Talisman என்ற ஆங்கிய இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். இறுதிவரை அவரது நேரடிப் பங்களிப்பில் வெளிவந்த இந்த மூன்று இதழ்களும் காந்தியக் கருத்துகளையும் சரித்திரத்தையும் காந்திய நோக்கில் சமகால விமர்சனங்களையும் தொடர்ந்து தாங்கி வரும் முதன்மையான காந்திய இதழ்களாக உருவெடுத்தன.

கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினரின் பல்லாண்டுகாலப் பணிகளுக்கு நடராஜன் உற்ற துணையாக இருந்தார். 1950ம் ஆண்டில் ஜெகந்நாதனின் கரம் பிடித்தே அவர் பொது வாழ்வுக்கு வந்தார். அதற்கு முன்பாகவே அவர் காந்தியால் ஈர்க்கப்பட்டிருந்தார். காந்தி 1946ம் ஆண்டு கடைசிமுறையாகத் தமிழ்நாடு வந்தபோது, மதுரையில் கூடியிருந்த பெருந்திரளான கூட்டத்தில் சிவகங்கையிலிருந்து வந்திருந்த நடராஜனும் இருந்தார். கூட்டத்தில் கட்டுக்கடங்காத சலசலப்பு ஏற்பட்டதால் காந்தி அன்று பேசவில்லை. மேடையிலிருந்த தலைவர்கள் பதின்மவயது நடராஜனுக்குச் சிறு புள்ளிகளாகவே தெரிந்ததாகக் கூறிவார். அடுத்தநாள் ஒரு கடையின் மேல்மாடியிலிருந்தும் காந்தியைப் பார்த்திருக்கிறார். அதுவே அவருக்குச் சமூகப் பணியில் ஈடுபடவேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்திருக்கிறது. மதுரையில் அருணா அஸப் அலியுடைய உரையாலும் உந்துதல் பெற்றிருக்கிறார்.

பள்ளிப்படிப்பு முடித்தவுடனேயே காந்திகிராமப் பல்கலைக்கழக வளாகத்தையொட்டியுள்ள ஊழியரகத்தில் ஜெகந்நாதன் ஒருங்கிணைத்திருந்த கோடைக்காலப் பயிற்சி முகாம் நடந்தது. அதில் ஜே.சி. குமரப்பா ஒருவாரம் தங்கியிருந்து பயிற்றுவித்திருக்கிறார். ரவீந்திர வர்மா, ஆச்சார்ய கிருபளாணி, வங்க முதல்வராக இருந்த பி.சி.கோஷ் போன்றவர்களெல்லாம் வகுப்பெடுத்திருக்கிறார்கள். அப்போதே குமரப்பாவின் உரைகளைத் தொகுத்து ‘உழவும் தொழிலும்’ என்ற இதழில் நடராஜன் எழுதியிருக்கிறார். பிறகு கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் முடித்துவிட்டு மீண்டும் ஜெகந்நாதனிடமே சேர்ந்துவிட்டார். அச்சமயம் அவருக்குக் கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டார். 2021ம் ஆண்டுக்கான சர்வோதயா-ஜெகந்நாதன் விருது நடராஜனுக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை ஏற்றுப் பேசும்போது, “ஜெகந்நாதனை நம்பிப் போகாதே, அரசுவேலையில போயிச் சேரு; இதுலதான் ஜாப் செக்யூரிட்டி இருக்குன்னாக. இப்ப எனக்கு 89 வயதாகுது. இப்பவும் எனக்கு ஜாப் செக்யூரிட்டி இருக்கு, ஜெகந்நாதனோட சேர்ந்ததால,” என்றார். பிறிதொரு முறை கோடை வானொலிக்கு அளித்த நேர்காணலில், அரசு வேலையை உதறியதால், உலகெங்கும் உள்ள பல காந்தியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார்.

வினோபா பாவேயின் பூமிதான இயக்கம் தமிழகத்தில் தொடங்கிய காலம் முதலே நடராஜன் அதில் முக்கிய பங்காற்றினார். வினோபா தெலுங்கானாவில் பூமிதான யாத்திரையைத் தொடங்கிய உடனேயே அவருடன் ஜெகந்நாதன் நான்கைந்து மாதங்கள் நடந்திருக்கிறார். பிறகு தமிழ்நாட்டிலும் பூமிதான இயக்கத்தைத் தொடங்குவதற்காகச் சிவகங்கையில் ஒரு மாநாடு நடத்தியிருக்கிறார். அதற்கு அவினாசிலிங்கம் செட்டியார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம், சங்கர் ராவ் தியோ போன்ற காந்தியத் தலைவர்கள் வந்திருந்தனர். நடராஜன் அந்த மாநாட்டை நடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு ராமேசுவரம் தனுஷ்கோடியிலிருந்து சங்கர் ராவ் தியோ தலைமையில் பூமிதான யாத்திரை தொடங்கியிருக்கிறது. அதிலும் இவர் கலந்துகொண்டிருக்கிறார். “எம்.ஜி.சங்கர ரெட்டியார் என்பவர் நாங்குநேரி பகுதியிலிருந்து 150 ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்தார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் ராஜா 1000 ஏக்கர் கொடுத்தார்,” என்றும் நடராஜன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 26000 ஏக்கர் நிலம் கிடைத்ததாகவும், அவற்றில் பெரும்பங்கு நிலத்தை வேளாண்மைக்கு ஏற்றவாறு செப்பனிடும் பணிகளைச் செய்து கொடுத்தனர் என்றும் கூறியுள்ளார். 1956ல் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்தபோது பூமிதானம் பெறுவதை நிறுத்திவிட்டு கிராமதானம் கேட்கத்தொடங்கியிருந்தார். பீகாருக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டில்தான் அதிகமாக கிராமதானம் நிகழ்ந்திருக்கிறது. காமராஜர் ஆட்சியிலிருந்த போது பூமிதான-கிராமதான இயக்கத்துக்குப் பெரும் ஆதரவாக இருந்திருக்கிறார். பின்னர் வந்த அரசுகள் அதிக அக்கறை காட்டவில்லையென்றும் நடராஜன் கூறுவார்.

ஜெகந்நாதன் பூமிதான இயக்கத்தோடு நின்றுவிடவில்லை. பல நிலவுரிமைப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். வலிவலம், விளாம்பட்டி போன்ற இடங்களில் கோயில் நிலங்கள் சரியான முறையில் குத்தகைக்கு விடப்படாமல் சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைக்கண்டு சத்தியாகிரகம் நடத்தியிருக்கிறார். வினோபாவுக்கு இப்படியான சத்தியாகிரகங்களில் முழு உடன்பாடு இல்லாதபோதும் ஜெகந்நாதனின் பொருட்டு இவற்றை அரைமனதுடன் அனுமதித்திருக்கிறார். ‘Gentle, gentler, gentlest’ ஆக சத்தியாகிரகங்கள் இருக்கவேண்டும் என்றிருக்கிறார். இப்போராட்டங்களின்போது நடராஜன் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். கூட்டங்களில் பேசுமாறு ஜெகந்நாதன் நடராஜனை மட்டுமே அனுமதிப்பாராம். ‘ஆள வையக்கூடாது. ஒழுங்கா அந்தப் பிரச்சனைய மட்டும் சொல்லணும்,’ என்று இருவரும் கவனமாக இருப்பார்கள். அமைச்சர்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதுவது, நாளிதழ்களுக்கு அறிக்கைகள் வழங்குவது, பல ஊர்களில் இருந்து சத்தியாகிரகிகளை ஒருங்கிணைத்து வரவழைப்பது என்று பல பணிகளையும் நடராஜனே செய்துவந்ததாக அவருடன் 60 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள வாடிப்பட்டி சுந்தரராஜன் நினைவுகூர்கிறார்.

வடபாதிமங்கலத்தில் இருந்த ஒரு கரும்பு ஆலை செயல்படாமலிருந்து அதற்குச் சேர்ந்த 4000 ஏக்கர் நிலம் சும்மா கிடந்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டம் வெற்றிபெற்று, 4000 குடும்பங்களுக்கு அந்நிலத்தைப் பிரித்தளித்திருக்கின்றனர். நடராஜன் ஜெகந்நாதனுடன் சேர்ந்து 60களிலும், பிறகு 80களிலும் கிராம சுயராச்சிய பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நடத்திய மதுவிலக்கு யாத்திரையிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஜெகந்நாதன் தலைமையில் மதுவிலக்கு சத்தியாகிரகத்தையும் ஒருங்கிணைத்திருக்கிறார். தினமும் 100 பேர் மதுக்கடைகள் முன்னர் மறியல் செய்வார்கள் என்று தில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணாமலை கூறுகிறார்.

இந்திரா காந்தி கொணர்ந்த அவசரநிலைக் காலத்தில் ஜெகந்நாதன், நடராஜன் ஆகியோர் ஜெயப்பிரக்காஷ் நாராயணனின் தலைமையை ஏற்று அவருடன் இணைந்திருந்தனர். திமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டபோது ஜெகந்நாதனும் கைது செய்யப்பட்டார். வெளியிலிருந்து பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளையும், வடக்கிலிருந்து தமிழ்நாடு வந்திருந்த பலரையும் பாதுகாப்பாகத் தங்கவைக்கும் பணியையும் நடராஜன் செய்திருக்கிறார்.

1990களில் நாகப்பட்டினம் பகுதியில் இறால் பண்ணைகள் பெரும் சுற்றுச்சூழல் கேட்டையும் வேலைவாய்ப்பிழப்பையும் ஏற்படுத்துவதைக் கண்டு ஜெகந்நாதன் இறால் பண்ணைகளுக்கெதிராகப் போராடத் தொடங்கினார். அப்போதும் 90 வயதினை நெருங்கிக்கொண்டிருந்த ஜெகந்நாதன் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டார். பிறகு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். இறால் பண்ணைகளின் கேடுகள் குறித்த தகவல்களைத் திரட்டுவது முதல் பல்வேறு பணிகளையும் நடராஜன் உடனிருந்து செய்தார். உச்சநீதிமன்றம் 1996ல் இறால் பண்ணைகளுக்கெதிரான தீர்ப்பினை வழங்கியது. ஆனால் அத்தீர்ப்பை மழுங்கடிக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றறிந்த ஜெகந்நாதன் தில்லியில் காந்தி சமாதி முன்னர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதும் அவருக்குத் துணையாக நடராஜன் இருந்தார். அரசு தரப்பிலிருந்து உறுதிகள் பெற்றபிறகே உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகும் அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதில் அரசுகள் மெத்தனமாகவே இருந்தன.

நடராஜன் இப்படியான பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் போது அவற்றுக்குச் சாட்சியமாகவும் அவற்றை நிகழ்த்துபவராகவும் இருந்திருக்கிறார். அவருடைய அற்புதமான நினைவாற்றலும் பேச்சுத்திறனும் அவரை ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மாற்றியிருந்தன. சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான தலைவர்களைக் குறித்தும் நிகழ்வுகளைக் குறித்தும் கூறுவதற்கு அவரிடம் எப்போதும் ஏதேனும் தனிப்பட்ட செய்திகள் இருந்தன. வினோபாவோடும், ஜெயப்பிரக்காஷ் நாராயணனோடும் பயணம் செய்திருக்கிறார். அவர்களுடைய உரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

வினோபா திருவாசகத்துக்கு எப்போதும் உருகுவார் என்பார். பல இடங்களில் திருக்குறளிலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் வினோபா தமிழிலேயே மேற்கோள் காட்டிப் பேசுவார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனையும் வினோபா பார்க்கும் போதெல்லாம் ‘முத்தி நெறி அறியாத’ என்ற அச்சோ பதிகத்தைப் பாடச் சொல்வார். கோவை அருகில் வினோபா பேசவிருந்த ஒரு கூட்டத்தில் தலித் மக்கள் வெகுதொலைவில் தனியே கூடியிருந்ததைக் கண்டித்து, எல்லாரும் ஒன்றாக அமர்ந்தால்தான் பேசுவேன் என்று கூறிவிட்டாராம். பிறகு அனைவரும் ஒன்றாகக் கூடியபிறகே பேசியிருக்கிறார். ராமச்சந்திர குகா வினோபா மீது வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு மறுப்பாக நடராஜன் இந்நிகழ்வை முன்வைப்பார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் குடியேறி, ஜெகந்நாதனுடன் சேர்ந்து ஊழியரகத்தைத் தன் கைகளால் கட்டிய ரால்ப் ரிச்சர்ட் கெய்த்தானுடைய வாழ்க்கையை ஆய்வுசெய்துகொண்டிருக்கும் ராமச்சந்திர குகா நடராஜனை நேரில் சந்தித்தார். அப்போது வினோபா குறித்த கருத்துகளை குகா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியதாக நடராஜன் சொல்வார். குகா நடராஜனுக்குச் சிறப்பானதொரு சிறு அஞ்சலிக் குறிப்பை எழுதியுள்ளார். அதில் நடராஜனுக்கு கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கிரிக்கெட் பற்றிய ஒரு புத்தகத்தையும் நடராஜன் பதிப்பித்திருப்பதாகவும், அதைத் தனக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் எழுதினார். இந்த கிரிக்கெட் ஆர்வம் அவரோடு நெருங்கிப் பழகிய பலருக்குமே (நான் உட்பட) புதிய செய்தியாக இருந்தது.

நடராஜனைப் பற்றிய தனது அஞ்சலிக் கட்டுரையில், அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் ப்ளேக் வில்லிஸ் 1977ல் கெய்த்தான் மூலமாகத்தான் நடராஜனை முதன்முதலாகச் சந்தித்ததாகக் கூறுகிறார். அந்த உறவு இறுதிவிரை நீடித்தது. ’சர்வோதயா என்றாலே எனக்கு அண்ணாச்சிதான். அமைதி, திடம், கனிவு,’ என்கிறார் டேவிட். அவரது ஜப்பானிய-அமெரிக்க மனைவி மிக்கா ஓபயாஷி, ‘களிப்பு மின்னும் கண்களோடும் புன்னகையோடும் அவர் அமர்ந்திருப்பதே என் நினைவிலிருக்கும்,’ என்கிறார்.

காமராஜருக்கு ஜெகந்நாதன் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு என்பார் நடராஜன். ஜெகந்நாதன் காமராஜரிடம் சென்று நிலப்பிரச்சனை தொடர்பாகப் பேசிவிட்டு, சத்தியாகிரகம் செய்யப்போவதாகக் கூறினால், ‘நீங்க சத்தியாகிரகம் செய்யுங்க. எங்க அப்பன் சத்தியாகிரகம் செஞ்சாலும் பிடிச்சு ஜெயில்ல போட்டுறுவேன்,’ என்பாராம் காமராஜர். ஆனால் அவர் காங்கிரசு செயற்குழுவின் தலைவராகப் போனபிறகு இவர்கள் போராட்டம் செய்தபோது, கூட்டத்திலேயே வந்து, ‘என்னய்யா, எழுநூறு பேரு ஜெயிலுக்குப் போயிருக்கான். பேசாம இருக்கீங்க. யாரையாவது அனுப்பி சமரசம் பண்ணுங்கய்யா,’ என்றிருக்கிறார். அதன் விளைவாகத்தான் விளாம்பட்டி சத்தியாகிரகத்தில் கக்கன் வந்து சமரசம் செய்து போராட்டத்தை முடித்துவைத்திருக்கிறார்.

திருநெல்வேலியில் ஜெகந்நாதன் நடத்திய ஒரு போராட்டத்துக்கு வந்த ஜே.சி.குமரப்பாவை ‘கதர்ச் சட்டை போட்ட கம்யூனிஸ்டு’ என்று குறிப்பிட்டு நிலக்கிழார்கள் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்குப் புகார்க் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தைப் படேல் குமரப்பாவிடமே விளையாட்டாகப் பகிர்ந்து கொண்டதாக நடராஜன் கூறினார். குமரப்பாவுக்கும் நேருவுக்கும் பொருளாதார அடிப்படையில் நேர்எதிரான கருத்துகள் இருந்தன என்பார். திட்டக்குழுக் கூட்டத்துக்கு குமரப்பா மாட்டுவண்டியில் போக முயன்ற கதையையும் சொல்வார். ‘விவசாயிகள் வாழக்கூடிய இந்த நாட்டில் மாட்டு வண்டியை அனுமதிக்க மாட்டேன்னு சொல்லலாமா?’ என்று கேட்டதற்கு, நேரு, ‘ராணுவ வண்டிகள் வரக்கூடிய சாலையில் மாட்டுவண்டிகளுக்கு விபத்து நேர்ந்துவிடும்,’ என்று பதில் சொன்னதாகவும், அதற்கு குமரப்பா, ‘விபத்தை ஏற்படுத்துபவனை விட்டு ஏன் பாதிக்கப்படுகிறவனைத் தடுக்கவேண்டும்,’ என்று கேட்டார் என்பார். குமரப்பாவின் பேச்சுத்தமிழ் மழலைத் தமிழ் போல இருக்கும் என்றும் சொல்வார். காந்திகிராம அறக்கட்டளை அலுவலகத்தின் எதிரில்தான் கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் திருமணம் நடைபெற்றது. சௌந்தரம், ஜி.ராமச்சந்திரன், குமரப்பா, கெய்த்தான் ஆகியோர் உடனிருந்தனர். கெய்த்தான் இருவருக்கும் சேர்த்து ஒரு கதர் சிட்டம் செய்து அவர்களது கழுத்துகளைச் சுற்றிப் போட்டார். குமரப்பா முதுகில் ஓங்கி அடித்துத் தன் ஆசிகளைத் தந்தார் என்றார் நடராஜன். அப்போது மாணவர் சேவாதளத்தின் பிரதினிதியாகச் சென்றிருந்த நடராஜன் ஒரு வாழ்த்து மடலைப் படித்திருக்கிறார்.

நடராஜனுக்கு இவான் இலிச், E.F. ஷூமேக்கர், மார்க் லிண்ட்லே, ராமச்சந்திர குகா போன்ற பல்வேறு அறிஞர்களுடன் வெவ்வேறு தருணங்களில் பழகும் வாய்ப்புக்கிட்டியது. உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து அங்குள்ள காந்தியச் சோதனைகளைக் கண்டிருக்கிறார். பல மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுடனும் சிறந்த நட்பிலிருந்தார். ருசிய இலக்கியங்களை மொழிபெயர்த்த நா.தர்மராஜன் இவரது நெருங்கிய நண்பர். கீழை மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராசனுடனும் அடிக்கடி உரையாடுவார். பூமிதான இயக்க காலத்திலேயே கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தைப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார். நல்லக்கண்ணுவோடும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஈரோடு ஜீவா, பாவண்ணன் போன்றோரை சர்வோதயம் மலர்கிறது இதழில் தொடர்ந்து எழுதவைத்தார். என்னையும் எப்போதும் எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பார். பிற செயல்களில் திசைமாறி நான் எழுதவதாகக் கூறிய ஏதேனும் கட்டுரையை எழுதாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தால், சிறிதும் கடிந்துகொள்ளாமல் தொடர்ந்து பொறுமையாக நினைவுபடுத்துவார். நல்ல நூல்களைச் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. அவற்றை வாங்கி அனுப்பி அவற்றுக்கான விமர்சனங்களை எழுதச் சொல்வார்.

சமூகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால் இலக்கியமெல்லாம் அவர் விரும்பிய அளவு தீவிரமாகப் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பார். ஜெயகாந்தன் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டாலும் அவர் குடிப்பழக்கத்தை நியாயப்படுத்திப் பேசியது தனக்கு உவப்பாக இல்லை என்பார். இலக்கியவாதிகள் தனிவாழ்விலும் அறத்தைப் பேணவேண்டும் என்று கருதினார். ஜி.நாகராஜன் அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் என்ற சுவையான செய்தியைப் பாமயன் எழுதியுள்ளார். நடராஜன் விரும்பியவண்ணம் இலக்கியம் பயிலாவிட்டாலும் இருமொழிகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சொல்ல வந்த கருத்துகளை – எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும – மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுவையாகவும் கூறும் ஆற்றல் அவருக்கிருந்தது.

காந்தியப் பொருளாதாரத்திலும், கிராம சுயாட்சியிலும் நடராஜன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவற்றுக்கெதிரான போக்குகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியும் எழுதியும் வந்தார். இன்றைய சூழலியல் சிக்கல்களுக்கு பரவலாக்கப்பட்ட அதிகாரமும், உற்பத்தி முறைகளும், வேலைவாய்ப்புகளும் அவசியம் என்று கருதினார். மதச்சார்பின்மையை வலியுறுத்தியும் அரசின் பல நடவடிக்கைகளைக் கண்டித்தும் பல தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.

2012ம் ஆண்டு மதுரையில் நாராயண் தேசாயின் ‘காந்தி கதா’ நிகழ்வு நடக்கவிருப்பதாகத் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நாராயண் தேசாய் காந்தியின் அணுக்கச் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன். காந்தியின் கண்பார்வையில் வளர்ந்த அனுபவங்களை அழகாகப் பதிவு செய்தவர். எனவே அந்நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். அங்குதான் க.மு.நடராஜன் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அந்த ஐந்து நாள் உரையை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார். நாராயண் தேசாயிடம் நேர்காணல் செய்வதற்கான அனுமதியை அவரிடம்தான் பெற்றேன். ஆனால், அப்போது நடராஜனைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட நெருங்கிய உறவு அன்று தொடங்கவிருக்கிறது என்பதையும் நான் அப்போது உணரவில்லை. முதலில் காந்தி-இன்று தளத்தில் அந்த நேர்காணல் வெளிவந்தது. பிறகு நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், ராட்டை ரகு ஆகியோர் அந்த நேர்காணலையும் சுனிலின் கட்டுரையையும் நடராஜனிடம் பகிர்ந்துகொண்டபோது, உடனே அதை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்வடிவம் கொடுத்துப் பதிப்பித்தார். அப்போதுதான் அவரோடு எனது பழக்கம் முறையாகத் தொடங்கியது. ஒருவகையில் இந்த அனுபவமே எனக்கு அவரைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. காந்தியின் மீது ஆர்வம் கொண்டவர்களை சர்வோதய இயக்கத்தோடுப் பிணைப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை என்பதை உணர்ந்தேன். காந்தியப் பணியைச் செய்யக்கிட்டும் எந்த வாய்ப்பையும் அவர் தேடிப்போய்ப் பற்றிக்கொள்வார் என்பதையும் அறிந்தேன். முதலில் நாராயண் தேசாயின் காந்தி கதா கூடங்குளம் போராட்டக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனே அவரை அணுகி மிகக்குறுகிய காலத்தில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நடராஜன் செய்தார். பலவகைகளில் இந்நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொடர்புகளும், அனுபவங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு வேறு தடத்தில் செலுத்தக்கூடியவையாக மாறின. அந்த மாற்றத்தின்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஊக்கம் தருபவராகவும் வழிகாட்டுபவராகவும் நடராஜன் இருந்தார். அவரது எழுபதாண்டுகால காந்தியப் பணியில் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை அவருடன் தொடர்பில் வந்த ஒவ்வொருவராலும் நினைவுகூர முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக என்னோடு வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். என்னைவிட இருமடங்கு வயதும் பன்மடங்கு அனுபவமும் அவருக்கு இருந்தாலும் என்னோடு ஒரு இணைநண்பனாகவே பழகினார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். அதிலும் கடந்த ஓராண்டாக இருந்த பொதுமுடக்கத்தின் போது கிராமத்திலுள்ள நான் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். எனது அப்பாவை முதுமையின் தனிமை தீண்டாமல் அடிக்கடி போய் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார். கபசுரக்குடிநீர் கிடைத்ததா என்று கேட்டு இல்லை என்றபோது மதுரையிலிருந்து கபசுரக்குடிநீர்த் தூளும் பிற மருந்துகளும் அனுப்பிவைத்தார்.

இப்படியான அனுபவங்களை அவரது அஞ்சலிக் கூட்டங்களில் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவரும் தம்மீது அவர் தனிக்கவனமும் தனிப்பிரியமும் வைத்திருந்ததாக எண்ணியிருந்தனர். எல்லோருடனும் தனித்துவமான உறவை அவரால் பேணமுடிந்தது. ஒரு கூட்டம் முடியும்வரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடர்ந்து கண்ணீர் சொரிந்தபடியே அமர்ந்திருந்தார். அவர்களது நீண்ட நெடிய சமூகப்பயணத்தில் நடராஜன் எத்தனை உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்பதற்கு நாம் எழுதக்கூடிய எந்த சொற்களையும் விட அந்தக் கண்ணீரே சான்றாகியது.

பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராகவும் இருந்து, இரண்டு இதழ்களைத் தொடங்கி, மூன்று இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து தொடர்ந்து நடத்தியதென்பது ஓர் அரிய சாதனை. அதனை எண்பத்தெட்டு வயதுவரை அவர் செய்துவந்தார் என்பது அவருக்கு காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டையும், நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையடைந்த பிறகும் தன் பணி முடிந்துவிடவில்லை என்ற எண்ணத்தையும், உலகநலனுக்காகத் தன்னால் இன்னும் பங்காற்ற முடியும் என்று அவருக்கிருந்த நம்பிக்கையையும் காட்டுகின்றன. தன்மீது அவருக்கிருந்த நம்பிக்கையும் மற்றவர்கள் மீதிருந்த தீராத அன்புமே அவரது இந்த எழுபதாண்டுகாலச் சமூகப்பணியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.


காந்தியும் திருக்குறளும்

நவம்பர் 6, 2019

(சில ஆண்டுகளுக்கு முன் ‘காந்தி இன்று’ தளத்துக்காக எழுதிய கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்)

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத் திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.

தென்னாப்ரிக்காவில் தமிழர்களோடு ஏற்பட்ட தொடர்பிற்கு முன், காந்தி திருக்குறள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க  வாய்ப்பில்லை. அறிந்திருந்தால், அது அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. சிறுவயதில் அவரை மிகவும் ஈர்த்து வழிநடத்தியவை என்று இரண்டு கோட்பாடுகளைத்தான் குறிப்பிடுகிறார்: உண்மை, தீங்கிழைத்தவர்க்கும் நன்மையே செய்தல். (1) இரண்டுமே திருக்குறள் முன்வைக்கும் முக்கிய நெறிகள். அப்போது அவரைக் கவர்ந்த ஒரு குஜராத்திப் பாடலை, சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்தபோதும், ஷாமல் பட் எழுதிய அதே பாடலை மீண்டும் நினைவுகூர்கிறார்; புதிய ஏற்பாட்டில்  மலைப் பிரசங்கத்தைப் படிக்கும்போது இப்பாடல் அவர் நினைவுக்கு வருகிறது. 

பெற்ற ஒரு குவளை நீருக்கு, நிறைவான ஒரு வேளை உணவை அளி:

ஓர் எளிய வாழ்த்துக்கு, உற்சாகமாய்ப் பணிந்து வணங்கு:

சில நாணயங்கள் பெற்றிருந்தால், பொற்குவை திரும்பக் கொடு:

உயிர்காத்தவனுக்காய் உயிரையும் தரத் தயங்காதே.

சொற்களையும் செயல்களையும் இங்ஙனமே கருதுவர் அறிவோர்,

பெற்ற சிற்றுதவிக்குப் பதிலாய் பன்மடங்கு பேருதவி புரிவர்.

ஆனால், பெருஞ்சான்றோர் மனிதன் ஒன்றே என்றரிவர்;

இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்திடுவர்.

இப்பாடல், பல குறட்பாக்களின் இணைவடிவமாகத் தெரிகிறது:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். [104]

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. [102]

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. [987]

அதற்குப்பின்னும் காந்தியைப் பாதித்த, அவரே எழுதிய பலவற்றுள்ளும் குறளின் கருத்துகள் பொதிந்திருந்தாலும், வளரும் பருவத்தில் அவரை ஈர்த்த இப்பாடல் குறிப்பிடத்தகுந்தது.

காந்திக்குத் திருக்குறள் பற்றிய முதல் அறிமுகம் ஜி.யு.போப் மூலமாக நிகழ்ந்திருக்கலாம். (2) “நான் தமிழும் உருதுவும் கற்றுத்தருவதற்கு முன்வந்திருந்தேன். எனக்குத் தெரிந்த சிறிதளவு தமிழை கடற்பயணங்களின் போதும் சிறைவாசங்களின் போதும் கற்றிருந்தேன். போப் எழுதிய அருமையான தமிழ்க் கையேட்டினை நான் தாண்டவில்லை.” (3) ஜி.யு.போப் திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அது இன்றளவும் பிரபலமாக உள்ளது. இக்கையேட்டுக்கான அறிமுகத்தில், போப் திருவள்ளுவரின் குறள் குறித்து, “இப்படைப்பின் ஆசிரியல் இதனை எல்லாவிதமான அறிவின் பெட்டகமாக அமைத்து, தமிழ் மக்களுக்கு வேதத்தின் இடத்தில் இருத்தக் கருதினார்.” திருக்குறளின் அமைப்பை விளக்கும்போது, ஏங்கிலிக்கன் கிருத்துவப் பாதிரியாரான இவர், ‘மூன்றாம் பால் புலனின்பம் சார்ந்தது; அதன் பெரும்பகுதி படிக்கத் தகுதியானதன்று,’ என்று காமத்துப்பாலைப் புறந்தள்ளிப் பேசுகிறார்.(4) (எனினும், மொழிபெயர்க்கும்பொது காமத்துப்பாலையும் சேர்த்தே மொழிபெயர்த்தார்.) கூடுதலாக, கையேட்டின் இரண்டாவது பகுதியில், திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு விரிவான அறிமுகம் தந்து, முதல் நான்கு அதிகாரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகிறார். ‘தமிழ்க் கவிதைக்கு மிகச் சிறந்த அறிமுகம்’ என்றும், ‘திருவள்ளுவரின் கவிதை எவ்வகையிலும் நீளமானதல்ல; ஆயினும், மதிப்பில், மொத்தத் தமிழ் இலக்கியத்தின் பிறநூல்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது; ஒட்டுமொத்த மக்கள் குழுவொன்றின் கூட்டு ஆன்மாவுக்குள் நுழைந்த மிகச்சில மகத்தான நூல்களில் இதுவும் ஒன்று; இதற்கு அழிவே கிடையாது,’ என்றும் திருக்குறளை விதந்து கூறுகிறார். ‘வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் கீழ்ச்சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று வாய்மொழி மரபுகள் கூறுகின்றன’ என்று சொல்லிவிட்டு, உடன் இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் வள்ளுவர் ‘உறுதியாக ஒரு பறையர்’ என்ற முடிவுக்கு வருகிறார். மேலும், ‘கிருத்துவ ஆகமநூல்களும் இக்கவிஞருக்கு உந்துதலாக இருந்த நூல்களில் அடங்கும்,’ என்றும் தயங்காமல் கூறுகிறார். “தற்போதும் பிற காலங்களிலும் தென்னிந்தியாவில் நிலவிய பல சிந்தனைகள் செயல்பாடுகளின் தடயமே திருக்குறளில் இல்லை; ஏனெனில், இம்முனிவரின் பரந்துபட்ட நம்பிக்கையாலும் நடத்தையாலும் இவை ஒதுக்கப்பட்டிருக்கும்; இவரது படைப்பு அறிவுறுத்துவதாகவும் சர்ச்சைகளைத் தவிர்ப்பதாகவும் உள்ளது. அவரது மெய்யியல் பகவத் கீதையைப் போன்ற பரந்துபட்ட தரிசனத்தைச் சார்ந்தது,” என்று போப் சொன்னது காந்தியைப் பெரிதும் ஈர்த்திருக்கக்கூடும். (5)

காந்தியின் எழுத்துகளில் போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், அவரது பிந்தைய எழுத்துகளின் அடிப்படையில், அவர் போப்பின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறாக இருக்காது. 

1905ம் ஆண்டு முதலே, அவரது உறவினர்களான சகன்லால் காந்தி, மகன்லால் காந்தி ஆகியோருக்கு எழுதிய பல கடிதங்களில் ஜி.யு.போப் பற்றிக் குறிப்பிடுகிறார். சகன்லாலை ஜி.யு.போப்பின் கையேட்டின் புதிய பதிப்பின் மூன்று பாகங்களையும் மூன்று பிரதிகள் வாங்கும்படி அறிவுறுத்துகிறார். (6) மார்ச் 1908ல், ஜி.யு.போப்புக்கு இந்தியன் ஒப்பினியன் இதழில் ஓர் அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார். டைம்ஸ் இதழில் வந்த அஞ்சலிக் கட்டுரையையும் பதிவிடுகிறார். இரண்டு அஞ்சலிக் குறிப்புகளிலுமே திருக்குறள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆச்சரியம்தான். “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்தவேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக்காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாற்றைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்கள் வெளிச்சத்திற்கு கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப்பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார். (7)

1909ல்தான் காந்தியின் வாழ்வில் திருக்குறள் நேரடியாக நுழைந்ததற்கான தடயத்தைக் காண்கிறோம். லியோ தால்ஸ்தோய் எழுதிய ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ (A Letter to a Hindu)  என்ற கட்டுரையைக் காந்தி தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் தால்ஸ்தோய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.  

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள். [311]

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [312]

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும். [313]

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். [314]

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. [315]

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். [317]

இந்த ஆறு குறட்பாக்களையும் குறிப்பிட்டு,  ‘இவ்வாறே எங்கும் நடந்தது. அன்பே மிக உயர்ந்த அறம் என்கிற புரிதல் எங்கும் மறுக்கப்படவில்லை. ஆனால், இந்த உண்மை பல்வேறு பொய்களோடு பிணைந்து  சிதைந்திருந்ததால், வெறும் சொற்களே எஞ்சியிருந்தன,’ என்கிறார் தால்ஸ்தோய். ‘இல்வாழ்க்கைக்கு மட்டுமே இந்த உயர்ந்த அறம் அவசியமாகக் கற்பிக்கப்பட்டது. பொது வாழ்வில் எல்லாவிதமான வன்முறையும் (சிறை, மரணதண்டனை, போர்கள்) பெரும்பான்மை மக்களைக் காக்க, அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சிறுபான்மையினர் மீது ஏவப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – இன்னமும் சிறிதே எஞ்சியிருக்கும் அன்புக்கு அது நேர்மாறாக இருந்தபோதிலும்.’ (8)

காந்திக்கு இக்குறள்களும், அவற்றையொட்டிய தால்ஸ்தோயின் கருத்துகளும் உறுதியாகப் பிடித்திருக்கும். தனிவாழ்வையும் பொதுவாழ்வையும் என்றைக்கும் அவர் பிரித்து வைத்ததில்லை. இக்கட்டுரையை முன்வைத்துத்தான் காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. ஆனால், திருக்குறள் பற்றிக் குறிப்பாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.

மகன்லால் காந்திக்கு 1910ல் எழுதிய ஒரு கடிதத்தில், திருக்குறள் வாசகம் ஒன்றைச் சற்றே வினோதமான சூழலில் குறிப்பிடுகிறார். “சந்தோக்கிற்குக் குழந்தை பிறந்துவிட்டதால், அவளைப்பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கற்க கசடறக் கற்பவை. போப்பின் இலக்கண நூலின் முதல் பக்கத்தில் உள்ள இந்த வாசகத்தை மனதில் அசைபோட்டுப் பார். தனது மனைவி மீதான காம உணர்வை வெல்வதைக் காட்டிலும் கடினமான பணி எதுவும் இருக்கமுடியாது.”  (9)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. [391]

என்ற குறளை மனதில் கொண்டு எழுதியுள்ளார். ஆனால், இதில் சுவையான செய்தி என்னவெனில், ‘கற்கக் கற்கக் கசடறும்’ என்ற பழமொழிதான் போப்பின் கையேட்டில் முதல்பக்கத்தில் உள்ள வாசகம். காந்தி தவறுதலாகச் சரியான ஒரு குறளைக் குறிப்பிட்டிருப்பது, அவர் திருக்குறளைப் படித்திருக்கவேண்டும் என்பதைப் பெருமளவு உறுதிசெய்கிறது என்பது இதில் ஓர் எதிர்பாராத நன்மை. இன்னொரு கடிதத்திலும் இத்தவறினை மீண்டும் செய்வார் என்பதைக் காண்போம். 

இந்தியா திரும்பியபின், நண்பர் ஜி.ஏ.நடேசனுக்கு, “எனக்கு தயவுசெய்து தமிழ்ப் புத்தங்களை அனுப்பி வையுங்கள். ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கும், சுந்தரம் போன்றவர்களுக்கும் எனக்குப் புத்தகங்கள் வேண்டும். டாக்டர்.போப்பின் அனைத்துப் புத்தகங்களும் வேண்டும். எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இதைச் செய்துவிடுங்கள்,” என்று எழுதினார். (10)

மகன் தேவதாஸ் காந்திக்கு, 1919ல் எழுதிய ஒரு கடிதத்தில் முன்பு போலவே தவறுதலாகத் திருக்குறள் வாசகத்தைக் குறிப்பிடுகிறார். “இவ்வாசகத்தை தமிழில் அடைமொழியாகக் கொள்ளவும்: கற்க கசடறக் கற்பவை. […] போப்பின் கையேட்டில் முதல் பக்கத்தில் இது வருகிறது. தெலுங்கில் இதன் மொழிபெயர்ப்பையும் அறிந்து அதையும் கொடுத்துவிடு.”  (11)

1920ல், அகமதாபாத்தில் ஆற்றிய ஓர் உரையில், ஜி.யு.போப் பற்றிக் கவித்துவமாகப் பேசினார்: “சென்னையில் எந்த இந்தியரும் போப் அளவுக்குத் தென்னிந்தியாவுக்குச் சேவை செய்துவிடவில்லை – இவர் இலியட் புகழ் போப் அல்லர். மனிதர்கள்மீது எப்போதும் நான் பேரன்போடு இருக்கிறேன். எனவே அவர்களது உள்ளங்களைக் கவரவேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன். தென்னிந்தியச் சகோதரர்களின் உள்ளங்களைக் கவர்வதற்காக, அவர்களது மொழியைக் கற்க வேண்டியிருந்தது. இப்போது போப் அவர்களின் எழுத்துகளில் இருந்து உடனடியாக மேற்கோள் காட்டமுடியவில்லையெனினும், இதைச் சொல்வேன்: விவசாயிகள்கூட தோட்டத்துக்கு நீர்பாய்ச்சும்போது இன்புற்று அனுபவிக்கக்கூடிய வகையில் தமிழில் இருக்கும் கவிதைகள் அற்புதமானவை. கதிரவன் உதிக்கும் முன்பே தோட்டங்களுக்குத் நீர் பாய்ச்சும் வேலை தொடங்கிவிடும். கம்பு, கோதுமை ஆகிய அனைத்தும் பனி முத்துகளால் மூடப்பட்டுள்ளன. மரங்களின் இலைகள் மீதுள்ள நீர்த்துளிகள் முத்துகள் போல ஒளிர்கின்றன. இப்பாடல்களைத்தான் விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சும்போது பாடுகிறார்கள்.” (12) இது அவர் போப்பின் கவிதைகளைப் படித்துள்ளார், குறிப்பாகத் திருக்குறளையும் படித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக உள்ளது.

அடுத்து, நாம் திருக்குறளை காந்தியின் பதிவுகளில் 1927ம் ஆண்டு காண்கிறோம். ரங்கூன் நகரிலிருந்து ஒரு நண்பர், கதர்ப் பிரச்சாரத்துக்காக இருபத்தைந்து ரூபாய் கொடையும் அதனோடு ஒரு கடிதமும் அனுப்புகிறார். அக்கடிதத்தை இறந்துபோன தனது தந்தைக்குப் பதினாறாம் நாள் சடங்குகளைச் செய்வதில் தனக்கிருக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்தித் தொடங்குகிறார். அது அடிமைத்தனமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருப்பதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்கள்மீது திணிக்கப்படும் ஒரு ஏமாற்றுவேலையாகயும் கருதுகிறார். அர்ப்பணிப்புடனும் கொடைநோக்குடனும் செய்யப்படும் ஈமச்சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் திருக்குறளைப் பயன்படுத்தி நிறுவுகிறார். 

“24-2-1927 யங் இந்தியா இதழில், நீங்கள் சொல்வது போல, ‘கொடைபெறுவதற்கு இரண்டு வர்க்க மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, பிறருக்கில்லை – தனக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், புனிதக் கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தரும் பிராமணன், உடல் ஊனமுற்றவர்கள் அல்லது பார்வையற்றவர்கள்.’ மரணமற்ற எங்கள் மாமுனி திருவள்ளுவர் ‘எல்லா உயிர்களிடத்தும் பொங்கிப்பெருகும் அன்பைக் கொண்டுள்ள சந்நியாசிகளே அந்தணர்’ என்று சொல்லியிருக்கிறார். கொடையளிப்பதற்கு உங்களைவிடச் சிறப்பான மனிதரையும்  ராட்டையைவிடச் சிறப்பான ஒரு நோக்கத்தையும் என்னால் காணமுடியவில்லை என்பதால் உங்களுக்கு இத்தொகையை அனுப்பியுள்ளேன். பெற்றோரின் நினைவினைப் போற்றுவதற்கு இன்னொரு வழியும் உண்டு. முனி வள்ளுவன் சொல்கிறான்: ‘மகன் தந்தைக்குச் செலுத்தக்கூடிய நன்றி என்பது இவனது தந்தை இவனைப்பெறப் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும என்ற பெயரை எடுக்கும்வண்ணம் உலகில் மிகச் சிறப்பாக நடந்துகொள்ளவதுதான்.’ இக்குறிக்கோளை எனது மனதில் நான் தாங்கியுள்ளேன் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.” (13)

இக்கடிதம் பின்வரும் குறள்களையொட்டி அமைந்துள்ளது:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். [30]

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல். [70]

காந்தி இக்கடிதத்தின் கருத்தினை அமோதிக்கும்வகையில், அர்த்தமற்ற சடங்குகளைத் தானும் எதிர்ப்பதாகவும், இக்கடிதம் எழுதியவரைப் போல பிறரும் தமக்குச் சரியென்று படுவதையே செய்ய முனைந்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் எழுதினார். எனினும் திருக்குறள் பற்றி நேரடியாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை.  

1927ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலில் காந்தி திருக்குறள் பற்றி நேரடியாகப் பேசியது பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எழுந்திருந்த ஒரு குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். அப்போது,

‘திருக்குறளில் காணக்கிடைக்கிற புதையல்களின்பால் எனது கவனத்தை நீங்கள் ஈர்த்தது சரிதான். உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் – சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை அதன் மூலமொழியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையோடும் குறிக்கோளோடும் நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். தமிழைக் கற்று முடிப்பதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுக்கவில்லை என்பது என் ஆழ்ந்த வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். பிராந்திய மொழிகளையேப் பாடமொழியாக ஆக்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். நாம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்; ஆங்கிலத்தைவிட தமிழையே விரும்பவேண்டும்; தமிழை மற்ற மொழிகளுக்கெல்லாம் மேலான இடத்தில் இருத்தவேண்டும்,’ என்று கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளியானது. (14)

அதே ஆண்டு, காந்தி தமிழகப் பயணத்தில் சந்தித்த பல கேள்விகளை, குறிப்பாக பிராமணர்-பிராமணரல்லாதார் மோதல் குறித்த உரையாடல்களைத் தொகுத்து, மகாதேவ் தேசாய் ஒரு குறிப்பு எழுதினார். ஒரு கேள்வியில் திருக்குறள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“கேள்வி. நீங்கள் குறள் பற்றி அறிவீர்கள். இந்நூலின் ஆசிரியர் பிறப்பால் சாதி இல்லை என்று சொல்கிறார் என்பதை அறிவீர்களா? பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்கிறார் அவர். 

பதில்: நிகழ்கால அத்துமீறல்களுக்கு எதிர்வினையாக அவர் இதைச் சொல்கிறார். தாம் உயர்ந்தவர் என்று ஒரு வர்ணம் கூறிக்கொள்ளும்போது, அதற்கெதிராக அவர் குரலை எழுப்ப வேண்டியிருந்திருக்கும். ஆனால் அது வர்ணத்தின் வேரைப் பிறப்பிலிருந்து அறுக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளின் வேரையறுக்கும் ஒரு சீர்திருத்தவாதியின் முயற்சியே இது.” (15)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். [972]

என்ற குறளை முன்வைத்து இந்த உரையாடல் நடைபெறுவதை உணரலாம்.

இது திட்டமிடப்பட்ட உரையாடல் இல்லையெனினும், காந்தி சரியான குறிளை விரைவாக அடையாளம் கண்டுகொண்டு அதைக்குறித்துப் பெருமளவு சரியான புரிதலுடன் விளக்குவதாகவே தெரிகிறது. 

அடுத்து, 1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார். (16)

“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.  வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. [327]

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்

மரணத்தை நான் விதிப்பதில்லை;

என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,

அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’

அடுத்த தேர்வு:

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. [339] 

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:

மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’ “

காந்திக்குத் திருவள்ளுவர் ஒரு ஹரிஜன் என்றும், நெசவாளர் என்றும் கூறப்பட்டது இரட்டை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தீண்டாமை இயக்கமும், கதர் இயக்கமும் தான் அவரது ஈடுபாட்டை மிகவும் அதிகமாய்க் கோரிய இயக்கங்கள். திருவள்ளுவர் முன்வைக்கும் அன்பு, அறம், கொல்லாமை, வாய்மை, ஈகை என்ற பல கருத்துகள் காந்தியின் கருத்துகளுக்கு முழுக்கவே இணையானவை.

காந்தியின் முதன்மைச் சீடரான வினோபா, திருக்குறளை நன்றாகக் கற்றிருந்தார். பல உரைகளில் திருக்குறளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் மேற்கோள் காட்டுவார் என்று அவரோடு நெருங்கிப் பழகிய நாராயண் தேசாய், என்னுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். காந்தியோடு தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த நாராயண் தேசாயை,  குஜராத்தில், அவரது சம்பூர்ண கிராந்தி வித்தியாலயத்தில் சந்தித்தபோது, புதிதாக வெளிவந்த ஒரு குஜராத்தி இலக்கியச் சிற்றிதழில் இருந்த திருக்குறள் பற்றிய ஒரு கட்டுரையை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்துப் படித்துக் காட்டியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மார்க்கண்டன் அவர்களோடு ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, வினோபாவிடம் அவர் ஏதேனும் செய்தி கேட்டதாகவும், அப்போது அவரது கைப்பட எழுதித்தந்த ஒரு குறள் பற்றியும் குறிப்பிட்டார்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய். [360]

ஆனால், காந்தியைப் பொருத்தவரை, இந்த இரு குறிப்புகளைத் தவிரத் திருக்குறள் பற்றிப் பேசியதற்கான வேறு தரவுகள் இதுவரை தென்படவில்லை. எனினும், ‘என் வாழ்க்கைதான் எனது செய்தி’ என்று சொன்னவரின் அச்செய்தியில் பல குறள்கள் மிளிரக் காணலாம்.

குறிப்புகள்:

  1. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 44
  2. Dr. G. U. Pope (1820.1908), translator of Thirukkural and Thiruvasagam, author of First Lessons in Tamil, A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, A Textbook of Indian History, etc.
  3. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 406
  4. G.U. Pope, First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, London: W.H.Allen & Co. 1883, Part I, Page 5. 
  5. ibid…Part II, Pages 52-76.
  6. LETTER TO CHHAGANLAL GANDHI, Johannesberg, May 1, 1905, The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  7. THE LATE DR. POPE, The Collected Works of Mahatma Gandhi, Volume 8…Indian Opinion, 14-3-1908
  8. Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, Dec 14th, 1908….Indian Opinion, November 26, 1910. [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]
  9. LETTER TO MAGANLAL GANDHI, Tolstoy Farm [July 25, 1910], The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  10. LETTER TO G. A. NATESAN, Bombay, May 10, 1915, The Collected Works of Mahatma Gandhi, Volume 14
  11.  LETTER TO DEVDAS GANDHI, Ahmedabad, February 23, 1919, The Collected Works of Mahatma Gandhi, Volume 17
  12.  SPEECH AT GUJARATI SAHITYA PARISHAD, Ahmedabad, April 2, 1920, The Collected Works of Mahatma Gandhi, Volume 20
  13. TRUE ‘SHRADDHA’, The Collected Works of Mahatma Gandhi, Volume 39…Young India, 1-9-1927
  14. SPEECH AT PUBLIC MEETING, TUTICORIN, October 6, 1927, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…The Hindu, 8-10-1927.
  15. BRAHMIN-NON-BRAHMIN QUESTION, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…Young India, 24-11-1927
  16. TAMIL HOLY BOOK, The Collected Works of Mahatma Gandhi, Vol 67…Harijan, 6-7-1935 [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]