நம்ப ஆசைப்படுபவன் – பேர் லாகர்குவிஸ்டின் அன்பு வழி

பிப்ரவரி 10, 2019

பேர் லாகர்குவிஸ்டு எழுதிய அன்பு வழி (Par Lagerkvist – Barabbas) நாவலை முதலில் ஆங்கிலத்தில் படிக்கத்தொடங்கினேன். ஒரு சில அத்தியாயங்களுக்குப் பிறகு, தமிழுக்கு மாறிவிட்டேன். இதற்கு முன், பிற நூல்களைத் தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் முடித்திருக்கிறேன். இது மாறுபட்ட அனுபவம்தான். சுவீடிஷ்ஷிலிருந்து ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும்கூட க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்பதை விட மேலானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தது [சொல்லுக்குச் சொல் இணையாக இல்லாவிட்டாலும், ஆங்கில மூலத்துக்கு நெருக்கமாகவே மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டாம் முறை மீண்டும் வேகமாக ஆங்கிலத்திலும் படித்து முடித்தேன். எந்த இடமும் நெருடவில்லை.] நல்ல மொழிபெயர்ப்புகளுக்கு இன்னும் அவசியம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படாத உலக இலக்கியங்களை (நல்ல) தமிழிலேயே படிப்பது சில சமயங்களில் நிறைவாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது.

‘மனதை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்,’ என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில், அதிக எதிர்பார்ப்போடு நிகழ்ந்த முதல் வாசிப்பில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ‘அன்பு வழி’ என்ற தலைப்பு காட்டிய தடத்தில் நான் எதிர்பார்த்தது பக்கத்துக்குப் பக்கம் பீறிடும் அன்பை. ஆனால், அங்கு அதிகமாகக் கண்டதோ, பீறிடத்துடிக்கும் அன்பை அடக்கி எழும் அவநம்பிக்கையை. எனினும் வண்ணநிலவனுக்காகச் செய்த இரண்டாம் வாசிப்பில் வேறு ஓர் உணர்வு கிடைத்தது; முதல் வாசிப்பில் விட்ட இடைவெளிகளை இரண்டாம் வாசிப்பில் நிரப்பிக் கொள்ள முடிந்தது; தொய்வாகத் தெரிந்த இடங்கள் அவ்வளவு தொய்வாகத் தெரியவில்லை. யேசு காட்டிய அன்பு வழியை மையமாகக் கொண்டிருந்தாலும், அன்பை அறிந்திராத, யாருக்கும் அன்பை வழங்கவியலாத பாரபாஸின் கதைதான் இது. ‘வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் வெறுத்து அவ்வெறுப்பிலே உயிர் வைத்திருந்தவன் பாரபாஸ்.’ தனக்குப் பதிலாக யேசு சிலுவையில் அறையப்படுவதை மறைந்திருந்து கண்ட நாள் முதலே ஒரு தேடல் தொடங்கியிருந்தாலும், அவனால் யேசு கடவுள் என்பதையோ கடவுளின் மகன் என்பதையோ அவர் புத்துயிர்ப்பு பெற்று மீண்டார் என்பதையோ நம்பமுடியவில்லை. லசாரஸைச் சந்தித்தபின் அவனை மரணத்திலிருந்து அவர் எழுப்பினார் என்பதை நம்பினாலும், அப்படி எழுப்பியிருக்கக்கூடாது என்று நினைக்கிறான். இந்த நம்பிக்கையின்மையே அவனை நீங்காப் பெருந்துயரில் ஆழ்த்துகிறது. அடிமைத்தனத்தின் அடையாளமான அவனது கழுத்துப்பட்டையில் ‘கிருஸ்து-ஏசு’ என்று பொறித்துக்கொண்டிருந்தாலும், விசாரணையின் போது அவரை நம்பாமலிருப்பதாகவே சொல்கிறான். பின் ஏன் அப்பெயரைப் பொறிக்கவேண்டும் என்று கேட்டதற்கு, ‘நான் நம்ப ஆசைப்படுவதால்’ என்கிறான். அப்பெயரை அடித்துவிடவும் ஒப்புக்கொள்கிறான்.

ஏசுவின் மீதான நம்பிக்கையின் பொருட்டு உயிரைத் துறக்கும் இரண்டு பாத்திரங்கள் பாரபாஸுக்கு நெருக்கமானவர்களாக வருகின்றனர். யேசுவுக்குச் சாட்சியம் கூறியதால் கல்லடிபட்டு மரணமடைந்த உதடு பிளந்த பெண்ணைப் பல காத தூரம் கைகளால் சுமந்து சென்று அடக்கம் செய்கிறான். அவனோடு பல காலம் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஸஹாக் யேசுவை மறுக்க மறுத்து, மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறான். சிலுவைக்கு அனுப்பப்படுகிறான்.
/“உன் கடவுளை நீ மறுக்காவிட்டால், உன்னை யாரும் காப்பாற்றமுடியாது. நீ சாகவேண்டியதுதான்.”
‘என் பிரபுவை, என் கடவுளை நான் மறுப்பது எப்படி?”/

ஸஹாக்கின் மரணத்தையும் கண்ணீர் மல்க மறைந்து நின்று பார்க்கிறான் பாரபாஸ். ஆனால் எதுவும் பாரபாஸின் அவநம்பிக்கையை முழுவதுமாக அசைக்கமுடியவில்லை. ரோமாபுரியின் புதுமைகளாலும் அவனது வெறுப்பை அகற்ற முடியவில்லை.

‘பல தேசத்து மக்கள், பல பாஷை பேசுகிறவர்கள் இங்கு வந்து கூடினர். பொருளும் பணமும் ஏராளமாக எங்கும் இறைபட்டது. […] இதெல்லாம் கண்டு வேறு ஒருவனின் கண்கள் பரவசப்பட்டிருக்கும். பாரபாஸ் இதெல்லாவற்றையும் கண்டும் காணாதமாதிரி நடமாடினான். அவனுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவு. இந்த உலகத்தின் படாடோபங்களைப் பற்றி அவனுக்கு என்ன கவலை? இது அவன் கவனத்துக்குரியதல்ல என்றே அவன் எண்ணினான். அப்படி அவனால் அலட்சியமாகவ இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம்பற்றி அவன் அடிமனதிலே ஒரு வெறுப்பும் தோன்றிக் கொண்டிருந்தது.’

அவன் இறுதியில் கிருத்துவத்துக்கு உதவுவதாக நினைத்துச் செய்யும் ஒரே செயலும் அதற்கு எதிரானதாக, சீசருக்கு இயைந்ததாக, ஒருவித துன்பியல்-நகைப்பில் முடிகிறது. யேசுவைச் சிலுவையில் ஏற்றுவதற்காக, முதலில் சிலுவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் இறுதியில் சிலுவையிலேயே அறையப்படுகிறான்.

/அவன் ஆயுள் பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் அவன் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து, அதனிடம் பேசுகிற மாதிரிச் சொன்னான்.

“என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்.” /

அப்போதும் அவன் ஆத்மாவை அளித்தது இருளுக்கா, இறைவனுக்கா என்பது உறுதியாகத் தெரிவதில்லை.

வேறு எவரை விடவும் தனக்காகவே யேசு உயிர்விட்டதாக பாரபாஸ் கருதுகிறான். அப்படித் தனக்காக உயிர் துறந்த ஒருவனுக்காக பிறர் தமது உயிர்களையும் தரத் தயாராக இருக்கும் போது தன்னால் குறைந்தபட்சமான நம்பிக்கையைத் தர முடியவில்லையே என்பதுதான் பாரபாஸை வருத்திய உணர்வாக இருக்கவேண்டும். அந்த அவநம்பிக்கை தரும் குற்றவுணர்வே வெறுப்பாகவும் அக்கறையின்மையாகவும் மாறுகிறது. நம்ப விரும்புகிற ஒருவனுக்கு நம்பிக்கை வராத போது நிகழும் துயரமும், ஒரே சங்கிலியால் பல்லாண்டுகள் பிணைக்கப்பட்டாலும் மனம் பிணைக்கப்படாமல் தனிமையில் உழல்வதும், அத்தனை வெறுப்பையும் மீறி எப்போதாவது பீறிட்டெழும் அன்புமே பாரபாஸ்.

பாரபாஸை அடிமைப்படுத்தியிருந்த கவர்னரைப் பற்றிய ஒரு நுட்பமான சித்திரம் வருகிறது. இக்காலத்துக்கான பொருத்தப்பாடு கருதி, உக்கிரமான கதையினிடையே குறுமுறுவல் எழும்பியது.

/சில நாள்களில் கவர்னர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அவர் ஆட்சி செலுத்திய காலத்தில் தனக்கும் அரசாங்கத்துக்கும் நிறையப் பொருளீட்டினார். எத்தனையோ அடிமைகளும் அடிமை ஓட்டிகளும் இந்தப் பொருளீட்டுதலுக்கு உதவினார்கள். எத்தனையோ கொடுமைகள் எத்தனையோ பேர்வழிகளுக்கு இழைக்கப்பட்டன. அந்தத் தீவின் இயற்கை வளத்தையும் சுரங்கச் செல்வத்தையும் பூரணமாக ஆராய்ந்து லாபமடைந்தார் அந்த கவர்னர். ஆனால் அவர் கொடூர சித்தமுள்ள மனிதர் அல்ல. அவர் ஆட்சி கொடுமையாக இருந்ததே தவிர, அவர் நல்லவர்தான். அவரைக் குறை சொல்லக்கூடியவர்கள், அவரைச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்கள்தான். அவரைப் பலருக்குத் தெரியாது என்பதும் உண்மையே! எட்டாத உயரத்தில் இருந்தவர் அவர். அவர் போகப் போகிறார் என்றறிந்து கஷ்டப்பட்ட பலர் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். புதிதாக வருபவர் நல்லவராக இருக்க மாட்டாரா என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்தப் பசுமையான அழகிய தீவை விட்டு மனசில்லாமல்தான் பிரிந்தார் அவர். அவர் பல சந்தோஷ நாட்களை அங்கு கழித்திருந்தார்./

நிற்க. அடிமைகளின் கழுத்துப்பட்டையை (ஆங்கிலப் பிரதியில் slave’s disk) க.நா.சு. எல்லா இடங்களிலும் தாலி என்றே மொழிபெயர்க்கிறார். அதில் ஏதாவது சிறப்புக் குறியீடு இருக்குமோ?


லேலி லாங் சோல்ஜர் கவிதைகள்

நவம்பர் 20, 2018

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] – தமிழினி மின்னிதழில் வெளிவந்தது

38

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள் வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சிறுநா அளவளாவிய சொல்

ஏப்ரல் 28, 2015

என் மகளும் நானும் எதற்கோ பச்சை நிறத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயற்கையின் நிறம் பச்சை, என்று தொடங்கி வைத்தேன். இலையின் நிறம் பச்சை, கிளியின் நிறம் பச்சை என்று தொடர்ந்தாள்.
தாவும்புல் பச்சை என்று முடித்தாள். சீக்கிரம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துல்லியத்துடன், புல்தாவி என்று சொல்லும் திறன் பெற்றுவிடுவாள் என்பது அவள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நீர்வீழ்ச்சியாய்ப் பொழிந்தது.

என் மனைவி கொஞ்சம் யதார்த்த தளத்தில் இயங்குபவள் – வெட்டுக்கிளியென்று திருத்துகிறாள். அவள் இப்படித்தான். காந்தி பற்றி கல்கி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பகுதியை – 1956ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரதியைப் பத்திரமாக பைண்ட் செய்து வைத்து, கண்டுபிடித்தும் கொடுத்துவிட்ட தியாகுவின் நூலகத்திலிருந்து நேற்று எடுத்துவந்திருந்தாள். மகிழ் அப்புத்தகத்தைப் பிரித்து, எழுத்துக்கூட்டி, மாந்தருக்குள் ஒரு மாணிக்கம் என்று தலைப்பைப் படிக்கிறாள். நான் மாந்தர் என்றால் மனிதர், மாணிக்கம் என்றால் என்ன தெரியுமா என்று அவளை கேட்கிறேன். மனைவி குறுக்கிட்டு, அந்தத் தலைப்பு மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்கிறாள். மோனை நயம் தெரியாத மனிதராக இருந்திருப்பாரோ என்று கல்கியை நொந்துகொள்கிறேன்.


பாரதி – ஆங்கிலத்தில்

ஒக்ரோபர் 13, 2008

பாரதியின் உணர்ச்சி வேகத்தை ஆங்கிலத்தில் அடக்கி, வெளியுலகிற்கு வெளிச்சம் போடுவதில், என் சில முயற்சிகள்:

  1. நல்லதோர் வீணை
  2. தேடிச் சோறு நிதந்தின்று
  3. அஃகினிக் குஞ்சு

நல்லதோர் வீணை – ஆங்கிலத்தில் மீட்டினால்!

ஒக்ரோபர் 7, 2008

தாகூரைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தோன்றியது, ஏன் தாகூர் அளவிற்கு, பாரதி கவனிக்கப் படவில்லை? நல்ல மொழியாக்கம் இல்லை என்பதாலா? தாகூரின் கவிதையின் சாரத்தை ஆங்கிலத்தில் கண்டு என்னால் தமிழில் ஓரளவு தர முடியும்போது, பாரதியின் படைப்புகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்த இயலாதா?

தாகூருக்கு ஒரு W.B.Yeats, R.K.Narayanக்கு ஒரு Graham Greene மாதிரி பாரதிக்கு…?

இதோ என்னால் இயன்ற எளிய முயற்சி. இன்னும் வல்லமை மிக்கவர் கரங்களில் இந்த வீணை மேலும் அழகாய் மீட்டப்படக் கூடும்.


கீதாஞ்சலி

ஒக்ரோபர் 6, 2008

என் காதலா, எங்கே எல்லோருக்கும் பின்னே நிழலுக்குள் மறைந்து நிற்கிறாய்?

உன்னை வெறும் வெறுமையாய் நினைத்து, புழுதியில் தள்ளித் தாண்டிச் செல்கிறார்களே!

உனக்காக நான் கடைபரப்பிக் காத்திருக்கிறேன். எல்லோரும் ஒவ்வொன்றாய், உனக்கான, என் பூக்களை எடுத்துவிட்டார்கள்.

காலை கடந்துவிட்டது. மதியமும் தான். மாலையின் நிழலில் என் கண்கள் சொருகக் காத்திருக்கிறேன்.

கடந்து செல்கிறவர்கள் என்னைக்கண்டு புன்னகைத்து என்னை நாணத்தால் நிரப்புகிறார்கள். பிச்சைக்காரியைப் போல சேலையால் முகத்தை மறைத்து அமர்ந்துள்ளேன். என்னதான் வேண்டும் என்று கேட்கிறவர்களுக்கு, முகத்தைத் தாழ்த்தி, விடையுரைக்க மறுக்கிறேன்.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை. எனைக்காண வருவேன் என நீ வாக்களித்திருப்பதை.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்கு வரதட்சனையாய் என் வறுமையை மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதை.

ஆ! என் இதயத்தின் ஆழங்களில் இந்தப் பெருமையை மறைவாய் அணைத்துக்கொள்கிறேன.

புல்வெளியில் அமர்ந்து உன் வருகையைக் கனவு காண்கிறேன். பொற்கொடி பறக்க, ஒளிவீசி, வரும் உன் தேர் கண்டு பிரமித்து வாய்பிளக்கிறார்கள். வெட்கத்தோடும், பெருமையோடும் படபடத்து நிற்கும் என்னைப் புழுதியிலிருந்து அள்ளி, அணைத்து, உன் அருகில் அமர்த்திக்கொள்கிறாய்.

ஆனால் நேரம் சறிந்துசெல்கிறது. ஆர்ப்பரிப்போடு நிறைய ஊர்வலங்கள் கடந்து செல்கின்றன.  உன் தேர் வரும் ஓசை இன்னும் செவிகளில் விழவில்லை.

நீ மட்டும்தான் அந்த நிழலுக்குள் மறைந்து நிற்பாயா? நான் மட்டும்தான், வீண் ஏக்கத்தால், இதயம் தேயக் கண்ணீரோடு காத்திருப்பேனா?

– தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)