இருசுடரொடு இயமானன்

ஏப்ரல் 10, 2021

மகள் மகிழ்மலர் ஒரு திருவாசகப் பதிகம் பாடிக்கொண்டிருந்தாள். பெரும்பாலான திருவாசகப் பாடல்களை மோகனத்தில்தான் (முல்லைப்பண்) பாடுவார்கள். இப்பாடல் அவளுக்குப் புதிய ராகமான ஹம்சநாதத்தில் அமைந்துள்ளது.

போற்றிஎன் போலும் பொய்யர்
    தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
    நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
    புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்று இயமானன் வானம்
    இருசுடர்க் கடவு ளானே

(திருவாசகம் – திருச்சதகம், 7: 62-63)

இதில் வந்த இயமானன் என்ற சொல் அடிக்கடி கேட்டுப் பழகியதென்றாலும் வேறு எங்கு வருகிறது என்பது உடனே இருவருக்கும் பிடிபடவில்லை. சிறிது ஆராய்ச்சிக்குப்பின் திருவாசகத்திலேயே சிவபுராணத்திலும் ‘வெய்யாய்! தணியாய்! இயமானனாம் விமலா’ என்ற வரி உண்டு என்பது நினைவுக்கு வந்தது. ‘பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி,’ என்று மகிழ் பாடலைத் தொடர்ந்தாள். [பாடும்போது ஏனோ இயம்+ஆன+நாம் என்று பிரித்து மனதில் பதித்திருந்ததால் சட்டென்று நினைவு வரவில்லை என்றாள்.]

இச்சொல்லுக்குப் பொருள் தேடிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக்குச் சென்ற போது, அதற்கு ஆன்மா, உயிர், யாகத்தலைவன் ஆகிய பொருள்கள் தரப்பட்டிருந்தன. இயமானனாம் விமலா என்று தொடரில் இச்சொல்லுக்கு யாகத்தலைவன் என்ற பொருளைப் பேரகராதியில் தருகிறார்கள். பேரகராதியில் இயமானனுக்கு வேர்ச்சொல் வடமொழியின் எஜமான என்றும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எஜமானவின் வேர்ச்சொல் இயமானன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு பதிகங்களுக்கும் thevaaram.org பொழிப்புரையில் இயமாமனுக்கு ஆன்மா என்ற பொருளையே கொண்டுள்ளனர்.

பேரகராதியில் மணிமேகலையிலுள்ள ஒரு சொற்றொடரும் சுட்டப்பட்டிருக்கவே, கைவசமிருந்த மணிமேகலை நூலில் தேடியதில் ஒரு நெருங்கிய தொடர்பு தென்பட்டது.

இறைவன் ஈசனென
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
‘பரசும்நின் தெய்வம் எப்படித்து?’ என்ன –
இருசுடரோடு இயமானன் ஐம்பூத மென்று
எட்டு வகையும், உயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும்….

(மணிமேகலை; 27: 89).

சாத்தனாரின் சொல்லாட்சியான ’இருசுடரொடு இயமானன்’ திருவாசகத்திலும் அதே சூழலில் எடுத்தாளப்பட்டுள்ளது – ‘காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவு ளானே’. இயமானன், இருசுடரான சூரியன், சந்திரன், ஐம்பூதங்கள் ஆகிய எட்டு மூர்த்திகளாக உள்ளாய் என்பதே இதில் பொதிந்துள்ள கருத்து.

‘நின் கருணை வெள்ளப் புதுமது’ என்ற உவமையும் அதன் சொற்சுவையும் சொக்கவைக்கின்றன.

திருமுறையின் பிற இடங்களிலும் இயமானன் இதே சூழலில் பயன்படுத்தப்படுகிறது. சைவத்தில் இது முக்கியமானதொரு கருத்தாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மணிமேகலையில் சைவவாதியின் கூற்றாகவே இது வருதலால் அதற்கு முந்தைய நூல்களிலும் இச்சொற்சேர்க்கை வந்திருக்கக்கூடும்.

அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் – அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

(காரைக்கால் அம்மையார், 11ம் திருமுறை: 004 அற்புதத் திருவந்தாதி பாடல் 21)

தேவார மூவருக்கும் முன்னே இருந்த காரைக்கால் அம்மையாரின் காலம் மணிமேகலைக்கு முந்தையதாக இருக்ககூடும். (தேவாரம் இணையதளத்தில் வி. சா. குருசாமி தேசிகர், ஞானசம்பந்தர் காரைக்கால் அம்மையாரைப் பாடியிருப்பதைச் சுட்டி, இவரது காலம் ‘கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்’ என்கிறார். மணிமேகலை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.)

அப்பர், சுந்ததரர் ஆகியோரும் ஒருவரையொருவர் விஞ்சும் அழகான பாடல்களில் இயமானனைக் கையாண்டுள்ளனர்.
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
.
(திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, 94: பாடல் 1)

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
    சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
    தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
    முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே

(சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை, 9:பாடல் 3)

சுந்தரர் ஞாயிற்றுக்கு சவிதா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை’ என்பது எத்தனை எழில்மிகு வரிகள். [கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரை]

எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்

(அருணந்தி சிவாசாரியார், மூன்றாம் திருநெறி, பதிகம் 3-இருபா இருபது 2:14-15)

ஒரு சொல்லுக்குப் பின்னான பயணத்துக்குப்பின்னர், மகிழ்மலர் நன்கறிந்த நாஞ்சில் நாடன் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு சொல்லைத் தேடியும் எத்தனை முனைப்புடன் உழைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தமிழினியில் ‘யானைபோம் வழியில் வாலும் போம்’ என்ற கட்டுரையைப் படிக்கக் கொடுத்தேன். நாஞ்சில் நாடன் பெரிதும் அச்சுப்பிரதிகளைச் சார்ந்திருப்பவர். விசைப்பலகையின் ஒற்றைத் தட்டில் நமக்குப் பல செய்திகள் இணையத்திலிருந்து வந்துவிழுகின்றன. அச்சுப்பிரதிகள்கூட இல்லாத காலத்தில் நிகண்டுகளையும் அகராதிகளையும் தொகுத்தவர்களை நினைக்க மலைப்பாகத்தான் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்றான ‘இசையில் தொடங்குதம்மா’வும் ஹம்சநாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாம். தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் என்ற அப்பரின் சொற்றொடரும் மனதில் எழுந்தது.


கல்வி

பிப்ரவரி 10, 2019

நேற்று மழை வராமலே ஏராளமான ஈசல்கள் வந்தன. கொஞ்ச நேரத்தில் மகிழ்மலர்தான் கவனித்துச் சொன்னாள், ‘அம்மா, அங்க பாரு, 7 பல்லிக’. 7 விரைவில் 10 ஆனது. மின்விளக்கைச் சுற்றிப் பல்லிகளின் உக்கிரமான ஈசல் வேட்டைக்குப்பின் ஈசல்கள் கிட்டத்தட்ட காணாமல் போயின.

இன்று காலை, கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கக் காத்திருந்த அண்டங்காக்கைகளை விரட்டப் போனவள், சற்று நேரத்தில் சன்னலோரம் நின்று கூவுகிறாள், ‘அப்பா, ஒரு குட்டிப் பல்லி கோழிகிட்ட வந்துச்சா, அது புடிச்சு குத்து குத்துனு குத்திக் கொன்னே போடுச்சு. அப்புறம் எல்லாக் குஞ்சுகளும் வந்து ஓடிப் புடிச்சு விளையாண்டுட்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுதுக.’

முத்திநெறி அறியாத என்ற திருவாசகப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாள். ஓரளவு எளிமையான பாடல்தான். உரை எதுவுமின்றி நானும் அவளுமே பொருள் கூட்டி அறிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தோம். (இடையிடையே புணர்முலையார் போகம், கணியிழையார் கலவி எல்லாம் வேறு.)

‘பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு’ என்ற வரிக்கு ‘இளம்பெண்களுடைய சுட்டெரிக்கும் கடைக்கண் பார்வையின் முன்னால் பஞ்சுபோல எரிந்து துன்பப்பட்டு’ என்று நாங்களாக ஒரு பொருள் கற்பித்தோம்.

உடனே அவள், “நெஞ்சுக்கு நீதியும் பாட்டுல, ‘ பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ’னு ஒரு வரி வருமில்லப்பா?” என்று அவளுக்குத் தோன்றிய வகையில் இணைத்துப்பார்த்தாள். [அதன் பொருளை நானும் ஆராய்ந்ததில்லை. பெருந்தீ முன் பஞ்சுபோல அவள் பார்வைக்குமுன் துன்பங்கள் இல்லாமற் போகும் என்று பொருள் கொள்ளலாம். தீ முன் பஞ்சு படும் துன்பங்கள் போல, அவள் பார்வைக்கு முன் பெருந்தீயும் பொசுங்கிப்போகும் என்றும் பொருள்படுமோ? இரண்டையும் பின்னர் விவாதித்தோம்.]

“அட, ஆமாண்டா கண்ணு. பாரதியார் எங்க இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுத்திருக்கார் பாரு.”

[பின்னர் இணையத்தில் தேடியபோது திருவாசக வரிக்கு வேறு பொருள் கொடுத்திருப்பதை அறிந்தோம். பஞ்சு ஆய – பஞ்சு போன்ற, அடி – பாதங்கடையுடைய, மடவார் – பெண்டிரது, கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு. சரி, இருந்துவிட்டுப் போகட்டும். ]

—-

அவள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது சரியான முடிவுதானா என்ற சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம், இப்படியாகப் போகிறது அவளது கல்வி. எங்களுடையதும்.

The child is father of the man – இதுவும் கவிஞர் வேறு அர்த்தத்தில் சொன்னதுதான். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொள்கிறேன்.


எழில்

நவம்பர் 20, 2018

வாணியோட கன்னுக்குட்டி பொண்ணா இருந்தா எழில்னு பேர் வைக்கப் போறேன்.

சரிடா.

ஆணா இருந்தா எழில்னு வர்றமாதிரி என்ன பேர் வைக்கலாம்?

எழில்ங்கிறதே பொதுப்பேருதான். காளையா இருந்தாலும் வைக்கலாம். பசுவா இருந்தாலும் வைக்கலாம்.

இல்லப்பா, அது எப்படிப்பா?

‘ஆமா, இவதான் எல்லாருக்கும் பேரு வைச்ச மகராசி. எத்தன பேருக்கு பேர் வைச்சுருக்க நீ?’ என்று செல்லமாக அதட்டினாள் அம்மா.

‘காரி, மதுரா, வாணி, நிலா, ராசு, கல்லு, குட்டா,…’ என்று மூச்சுவிடாமல் அடுக்கினாள். நாய்,ஆடு, மாடுகளுக்கு அவள் வைத்த பெயர்கள்.

பொம்மைகளுக்கு வைத்த பெயர்களை மறந்துவிட்டாள். ‘தாரா, மேகி, ஜாய்,…’ கைகாலாட்டும் புதிய மர பொம்மைக்கு டின்டின் என்று பெயரிடலாமா என்று யோசித்துவிட்டு, மீசை, தொப்பி இருப்பதால் கேல்குலஸ் என்ற பெயரை முடிவுசெய்திருக்கிறாள்.

ஒரு பார்பி பொம்மைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு காந்தாரி என்று பெயர் வைத்திருந்தாள்.

காந்தார மன்னன் சுபலனுக்குப் பின்னர் காந்தாரி என்ற பெயரைச் சூட்டியவர்கள் யாரேனும் உண்டா அறிஞர் பெருமக்களே?


ஒரு குட்டி அர்பன் நக்சல்

நவம்பர் 20, 2018

அப்பா, இந்த புக் படிக்கட்டுமாப்பா?

ம்.

அப்பா!

ம், லைப்ரரி புக் எல்லாம் இருக்கேடா…

அப்பா, ஏதாவது புக் எனக்கு டெம்ப்ட் ஆயிருச்சுனு வைச்சுக்கப்பா…அப்பா!

ம்.

அப்பா, ஏதாவது புக் எனக்கு டெம்ப்ட் ஆயிருச்சுனு வைச்சுக்கப்பா, அத படிச்சு முடிக்கிற வரைக்கும் எம் மனசெல்லாம் அதுலதான் இருக்கும்.

சரி, படி.

ய்யேஏஏ…



சரிதான், இவளும் அர்பன்/ரூரல் நக்சலாகத்தான் வருவாள் போலிருக்கிறது.


சிறுநா அளவளாவிய சொல்

ஏப்ரல் 28, 2015

என் மகளும் நானும் எதற்கோ பச்சை நிறத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயற்கையின் நிறம் பச்சை, என்று தொடங்கி வைத்தேன். இலையின் நிறம் பச்சை, கிளியின் நிறம் பச்சை என்று தொடர்ந்தாள்.
தாவும்புல் பச்சை என்று முடித்தாள். சீக்கிரம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துல்லியத்துடன், புல்தாவி என்று சொல்லும் திறன் பெற்றுவிடுவாள் என்பது அவள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நீர்வீழ்ச்சியாய்ப் பொழிந்தது.

என் மனைவி கொஞ்சம் யதார்த்த தளத்தில் இயங்குபவள் – வெட்டுக்கிளியென்று திருத்துகிறாள். அவள் இப்படித்தான். காந்தி பற்றி கல்கி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பகுதியை – 1956ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரதியைப் பத்திரமாக பைண்ட் செய்து வைத்து, கண்டுபிடித்தும் கொடுத்துவிட்ட தியாகுவின் நூலகத்திலிருந்து நேற்று எடுத்துவந்திருந்தாள். மகிழ் அப்புத்தகத்தைப் பிரித்து, எழுத்துக்கூட்டி, மாந்தருக்குள் ஒரு மாணிக்கம் என்று தலைப்பைப் படிக்கிறாள். நான் மாந்தர் என்றால் மனிதர், மாணிக்கம் என்றால் என்ன தெரியுமா என்று அவளை கேட்கிறேன். மனைவி குறுக்கிட்டு, அந்தத் தலைப்பு மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்கிறாள். மோனை நயம் தெரியாத மனிதராக இருந்திருப்பாரோ என்று கல்கியை நொந்துகொள்கிறேன்.


புழுவையும் பறவையாக்கும்

ஜனவரி 4, 2015

நேற்று ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றிய உரை. தாமல் ராமகிருஷ்ணன். இதற்கு முன் அவர் பேசியதை வீட்டில் யாரும் கேட்டதில்லை. அழைத்துச்செல்லச்சொல்லி என்னைக் கேட்டால் பிலுக்குவானே என்று அப்பா முறிந்த கையைப் பிசைய முடியாமல் இரண்டு நாட்களாய்த் தவித்துக்கொண்டிருந்தார். சரி ஆண்டாள் ஆயிற்றே என்று பெற்றோர், மனைவி மகளுடன் நானும் ஆஜராகிவிட்டேன். தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எப்போ முடிப்பாரோ என்ற கவலை கவிந்தது. சுற்றியிருந்தவர்களின் லயித்த சிரிப்பு என் கவலையை இரட்டிப்பாக்கியது. இதே கூட்டத்தில் ஜெயமோகன் எப்படிப் பேரூரையாற்றப்போகிறாரோ என்று கவலை பேரருவியானது. இந்த மாதிரியான இக்கட்டுகளைச் சமாளிக்கத்தானே உடன் மகளை அழைத்துச்செல்கிறோம். அவள் நெளிந்துகொண்டிருப்பதைக் கண்டு புதுக்கரிசனம் பொங்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பாதியில் விட்டுவிட்டு, மகிழ்மலரோடு விளையாடுவதற்காக வெளியேறினேன்.

அவள் கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வீடுதிரும்பும் பெண்ணாம். நான் அவ்வளவாக முடிநரைக்காத அப்பா. அவள் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதால், தூக்கியணைத்துக் கொஞ்ச முடியவில்லையே என்று என்னைப் பீடித்த துக்கத்தைப் பகிர்ந்துகொண்டேன்; அவள் கைகளை மென்மையாகப் பற்றியவாறு தோட்டத்து வீட்டுக்கு நடந்து சென்றேன். கல்லூரியின் இறுக்கமான விதிகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். விடுதியின் வசதிகள் பற்றியும், யார் அவள் அறைத் தோழி என்றும் விசாரித்தேன்.

‘நந்தன்,’ என்றாள்.
‘என்னது?’
‘கல்யாணம் ஆயிட்ட மாதிரி boyக்கும் கேர்ல்க்கும் ஒரே ரூம் குடுத்துட்டாங்கப்பா.’
பின் என் அதிர்ச்சியைக் குறைக்கத் தலைப்பட்டாள்.
‘ஆனா, அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னு நான் போராடினேன். அப்புறம் எனக்கு வேற ஃப்ரெண்ட் குடுத்தாங்க. அவ பேரு கிருத்திகா. நல்ல பொண்ணுப்பா.’
‘அப்ப சரி.’
‘எனக்கு மட்டும் தான் கேர்ல் கேர்ல். மத்தவங்களுக்கெல்லாம் உடனே மாத்துல. ரொம்ப நாள் போராடுனதுக்குப் பின்ன இப்பத்தான் மாத்தியிருக்காங்க.’ (மகளைப் பெற்ற அப்பா என்பதால் பாவம் பையன்கள் என்ற கண்ணோட்டம் தோன்றவில்லை.)

என் போராளி மகளை, பசிக்கிறது, அம்மா ஆண்டாள் பேச்சு கேட்கப் போய்விட்டாள் என்று சொல்லி, சமையலறைக்கு அனுப்பி வைத்தேன்.

கல்லை நுணுக்கித் தாளில் சுற்றித்தந்த சப்பாத்தி ரோல் சுவையாகவே இருந்தது.

‘இன்னும் LKG மாதிரி God’s Love பாட்டுத்தான் ப்ரேயர்ல பாடுறாங்க. தமிழ்ப் பாட்டே பாடறதில்லை. தமிழ் மீடியம்னா ஃபீஸ் அதிகம்பா,’ என்று அலுத்துக் கொண்டாள்.
‘சரி வா. நாம இங்க தமிழ்ல கவிதை படிக்கலாம்.’ எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பாதுகாப்புக்காக தேவதேவனின் ‘விண் வரையும் தூரிகைகள்’ கவிதைத் தொகுப்பு எடுத்து வந்திருந்தேன். தலைவலியோடு திரும்பிய அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

‘கொக்கு’ கவிதை அவளுக்கு விளக்க வாகாக இருந்தது.

நிலைநின்ற நிலையால்
கன்றிச் சிவந்த கால்களும்
இடையறாது கழுவிச் செல்லும் நீரால்
வெண்மை கொண்ட உடலுமாய்
கொக்கு;
நமக்கு தேவதைகளை ஈன்றளித்த தாய்.
சிறகு விரித்தால் வானுலகு
சிறகு குவித்தால் நீர் விரிப்பு.
புழுவையும் பறவையாக்கும்
செயலே உயிர்வாழ்வு.

ஆண்டாள் உரை முடிந்ததும் தரைக்குத் திரும்பினேன்.


அவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை

நவம்பர் 10, 2014

தாத்தாவிடம் நீங்க ஸ்டூடன்ட் நான் ப்ரின்சிப்பல் என்கிறாள்
ஆத்தாவை, தாத்தா குறும்பு செய்யாமல் பார்த்துக்கொள் என்கிறாள்
அத்தையும் மாமாவும் சீண்டவும் சண்டையிடவும் வேண்டியதை வாங்கிவரவும்.

காது சரியாகக் கேளாத கொள்ளுத்தாத்தாவுக்குத்
விஸ்தாரமாய்த் தாளம் போட்டுப் பாடிக் காண்பிக்கிறாள்.

கண் பிடுங்கப்பட்ட பார்பி பொம்மை
பள்ளங்களை மறைக்கத் துணி கட்டிக்கொண்டு
நேற்றுவரை காந்தாரியாக இருந்தது;
இன்று கையில் தென்னங்குச்சித் தராசு சகிதம்
நீதி தேவைதையாகிவிட்டது.
விழி என்ற செல்லப்பெயருமுண்டு.

தோட்டம் பார்க்கச் செல்லும்போது
கன்றுக்குட்டிக்குக் கைபேசியில்
தான்வருவதைத் தெரியப்படுத்துகிறாள்.

அவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை.
அதைப் பற்றிய கவலை அவளுக்கு மட்டும் இல்லை.
சுற்றியிருந்த எல்லோரையும் எல்லாவற்றையும்
குழந்தைகளாக்கிக் கொண்டாள்.


சிறுகை அளாவிய சூப்

ஒக்ரோபர் 12, 2014

மகிழ், நேற்று, பல சின்ன கிண்ணங்களில் ஸ்பூனோடு, ஆளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு, தக்காளி சூப் எல்லாருக்கும் கொடுத்தாள். எப்போதும் வெறும் குண்டாவில் தானே எல்லாமும் தருவாள், இன்று எப்படி நிஜ சூப் வந்ததென்று பார்த்தேன்.

அம்மா சொன்னபோதுதான் தெரிந்தது, அது அவளே தக்காளியைப் பிசைந்து, சீரகம், மிளகு, மக்காச்சோள மாவு, உப்பு எல்லாம் போட்டு, நாற்காலி மீது ஏறி நின்று அடுப்பில் வைத்துச் சிறுகையால் அளாவிய சூப். உண்மையிலேயே ருசித்தது.

மலாலா நோபல் பரிசு வென்றதைக் கொண்டாடுகிறாளாம்.

Mahirl_Malala

சென்ற ஆண்டு மகிழ் பள்ளியில் இருந்தபோது, ஒரு விழாவில், மலாலா வேடத்தில்.


வயதாகுதல்

திசெம்பர் 23, 2011

குழந்தைகள் தினத்தன்று
நேரு மாமா ஏன் வரவில்லை
என்று இன்னமும்
குழம்பிப் போயிருக்கிறாள் அவள்.

‘அப்பா! நேரு மாமா வரமாட்டாங்களாப்பா?’

‘மாட்டாங்கடாம்மா’

‘காந்தித் தாத்தாவும் வரமாட்டாங்களாப்பா?’

‘ஹூஹூம்.’

‘டிவிலதான் வருவாங்களா? ஏம்பா?’

‘ஆமாடா. அவங்களுக்கு வயசாயிருச்சா,
அதனால இந்த பூமியவிட்டு போயிட்டாங்க.’

‘அப்பா, உனக்கு வயசாயிட்டா நீயும்
பூமியவிட்டுப் போயிடுவயா?’

‘….’

‘என்னவிட்டுட்டு நீ எங்க்கயும் போகக்கூடாது.
சரியா?’


விழித்திருந்த இரவினிலே

நவம்பர் 24, 2011

உடல் சாய்ந்தவுடன் கண்சாய்ந்துவிடும் எனக்கு

அரிதாய் வாய்க்கும் சில உறக்கமற்ற இரவுகள்.

அப்போதுதான் தெரிகிறது

அருகிலுறங்கும்

அவள்

தளிர்க்கரங்கள் மார்மீது விழுவதுவும்,

மென்முகம் என்முகத்தோடு இணைவதுவும்,

இசைபாடும் அவள் சுவாசத்தின் இளஞ்சூடும்,

மடிமீது படர்ந்திடும் அவள் சிறுபாதமும்,

உடலெங்கும் பரவிடுமோர் பரவசமும்

எனக்கெனக் கென்றேங்கும் முழங்காலும் அதன்கீழும்,

மனதினிலே அரும்பிடுமோர் பெருங்கனிவும்

ஆற்றொழுக்காய் ஊற்றெடுக்கும் கவிச்சொல்லும்

மறக்குமுன்னே பதியவெண்ணும் படபடப்பும்

எழுந்துவிட்டால் இதையிழப்போ மெனும்பதைப்பும்

இடையிடையே இடைவருடும் அவளுதைப்பும்

அப்பப்பா!

முகம்திருப்பி அவள் தேன்னுதலில்

இதமாகப் பதிக்கின்றேன் என்னிதழை.

இன்று மட்டும்

என்னைக் கொஞ்சம் விழிப்பில் வைத்தால்

வணங்குவேன் தாயே!