ஒரு கவிதை – சில கவிஞர்கள்

நவம்பர் 20, 2018

Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse – and Thou
Beside me singing in the Wilderness –
And Wilderness is Paradise enow.

– Rubaiyat of Omar Khayyam, Edward FitzGerald (1859)

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்; – அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்றன்
காவலுற வேணும்;என்றன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

—–

அகத்தூண்டுதல்? தற்செயல்? பலருக்கும் தோன்றும் கரு? எதுவாக இருந்தாலும், ஒரு மகாகவியின் ஒளி இவ்வரிகளில் மிளிர்கிறது. குறிப்பாக, ‘in the wilderness’ – ‘காட்டுவெளியினிலே’ இரண்டுக்கும் உள்ள ஒப்புமை அருமை. உமர்கய்யாம் ஒரு மரக்கிளை கேட்டால், இவன் சற்றே அதிகமாய், காணி நிலமும் ஒரு மாளிகையும் பத்துப்பன்னிரண்டு தென்னைமரமும் கேட்கிறான். நிலவொளியும், குயிலோசையும், இளந்தென்றலும் இருக்கையில் ரொட்டியைப்பற்றிய கவலை இவனுக்கில்லை. பக்கத்திலே பெண்ணும் பாட்டும் வேண்டும் என்று இருவரும் கேட்கின்றனர் – அதிலும் இவனுக்குப் பத்தினிப் பெண் வேண்டும். கவிதை நூல் வேண்டுமென அவன் கேட்க, கவிதைகள் கொண்டுதர வேணும் என்று இவன் வேண்டுகிறான். கூட்டுக் களியில் பிற போதை வஸ்துகள் பற்றிய நினைப்பு பாரதிக்கு இப்போது வரவில்லை. காட்டுவெளியில் களித்திருப்பதே சொர்க்கம் என்று உமர்கய்யாம் நினைக்கிறான். அந்தக் காட்டுவெளியில் களித்திருக்கும்போதும் வையத்தைப் பாலித்திடல் பற்றி பாரதி அக்கறை கொள்கிறான்.

பாரதி உமர்கய்யாமை படித்திருக்கிறானா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லவும். என்னிடமுள்ள கட்டுரைத் தொகுப்புகளிலும், இணையத்திலும் தேடிய வரை எதுவும் கண்ணில் படவில்லை. பாரதியின் முழுத்தொகுப்பில் தேடினால் உறுதிசெய்யலாம்.) விட்மனையும், ஜப்பானிய ‘ஹொக்கு’வையும், நவீனக் கவிதைப் போக்குகளையும் உள்வாங்கியிருந்த பாரதி, முகமது நபி பற்றி உரையாற்றிய பாரதி, பிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமைப் படித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். சாகா வரம் கேட்டு, மரணம் பொய்யாம் என்று சொன்ன பாரதி, நிலையாமையையும் முழுமுற்றான மரணத்தையும் அதிகம் பாடிய உமர்கய்யாமை எப்படி எடை போட்டிருப்பான் என்று தெரியவில்லை.

பாரதியின் சமகாலத்தவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உமர்கய்யாமைப் பின்னாளில் மொழிபெயர்த்திருக்கிறார். அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் கவிமணியின் கருத்துப்படி தமிழில் ‘பாரதி ஒருவர்தான் மகாகவி’ என்று எழுதியுள்ளார். கவிமணி பாரதியைப் பற்றி இப்பிரபல வரிகளைப் பாடியுமிருக்கிறார்:

பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!

—*—*—*—

உமர்கய்யாமின் இக்கவிதையை மொழிபெயர்ப்பதில் கவிமணி நிறைய சுதந்திரம் எடுத்திருக்கிறார். பிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்புமே அப்படித்தான் என்கிறார்கள் (wonderfully unfaithful translation).

வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?


இதே கவிதையை, ஒமர் கய்யாமை வேறு பல மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிபெயர்த்துள்ள ஆசை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:

.ஜாடி மதுவும் கவிதை நூலும்

ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,

பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்

சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.


கண்ணதாசனின், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்ற வரியும் நினைவுக்கு வருகிறது.



காசிநகர் தமிழ்ப்புலவர்

திசெம்பர் 24, 2016

குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை முழுவதும், பேரூர் கோயிலில், பச்சைநாயகி கருவறை முன்பு, ஒரு கரும்பளிங்குக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் அங்கு சென்றிருந்தபோது, அங்கேயே நின்று முழுவதையும் படித்துச் சுவைத்தேன்.

நாஞ்சில் நாடன் குமரகுருபரரை ‘மேஜர் போயட்’ என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகத் தெரிந்தது.

காசியில் மடம் நிறுவுவதற்காக அருள் வேண்டி சகலகலாவல்லி மாலையைக் குமரகுருபரர் பாடியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலின் பல வரிகள், அவர் வேறொரு நவீன காசிவாசிக்கு முன்னோடியாக இருந்திருப்பார் என்று எண்ணவைக்கின்றன.

‘நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்’

‘மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்’

ஆகிய வரிகள் பாட்டுத்திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும், எமக்குத் தொழில் கவிதை போன்றவற்றை நினைவுபடுத்தின.

இன்றைக்கும் விஷ்ணுபுரம் விழாவில் நாஞ்சில் நாடனுடன் சிறிது நேரம் தனியே உரையாட முடிந்தது. குமரகுருபரர் குறித்துப் பேசினோம். ‘வெண் தாமரைக்கன்றி நின்பதந்தாங்க’ என்று குமரகுருபரர் தொடங்கியுள்ளதையும் வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள் என்று பாரதி தொடங்கியதையும் ஒப்பிட்டுப்பார்த்தார்.

சகலாவல்லி என்கிற சொற்றொடரே எத்தனை அழகாக அமைந்துள்ளது என்று வியந்தார். குமரகுருபரர் தாமரைக்குக் கஞ்சத்தவிசு என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளதையும், கம்பன் கஞ்சம் என்ற சொல்லைப் எடுத்தாண்டுள்ளதையும் (கஞ்சநிமிர் சீரடியளாகி) குறிப்பிட்டார். [பாரதியும் பாஞ்சாலி சபதத்தில் ‘கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக் கட்டிநிறுத்தினார் பொற்சபை ஒன்றே’ என்கிறான்.]

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் வாங்கிவைத்திருப்பதாய்க் கூறினேன். குமரகுருபரனின் பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்தையும் கட்டாயம் படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

படிக்கத்தான் வேண்டும்.


மூளையில் ஒரு புத்தக அடுக்கு

செப்ரெம்பர் 19, 2013

 

crow-ஆ

குப்பைத்தொட்டியின் மீது அமர்ந்திருந்த காக்கை, தீடீரென்று பறக்கவும், அதிர்ந்து குனிந்தாள் மகிழ். நேற்று மொட்டைமாடியிலும் இதே போல் நடந்தது – அவளோடு சேர்ந்து நானும் ஒரு கணம் குனிந்திருந்தேன். அப்போது, ‘காக்கா தலைல கொட்டிருச்சுனா வலிக்கும், இல்லப்பா?’ என்று சொல்லியிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே தொடரான லிட்டில் கிருஷ்ணாவையும் நிறுத்திவிட அவளைச் சம்மதிக்க வைக்கவேண்டும்.
‘காக்காயைப் பார்த்து பயப்படக்கூடாதுடா. நீ தினமும் சாப்பாடு வைக்கறியில்ல? பாரதியார் என்ன சொல்லியருக்கார்:
காக்கைகுருவி எங்கள்…..’

‘என்னப்பா? காக்கைச் சிறகினிலேவா?’

‘இல்ல, இல்ல. காக்கைகுருவி எங்கள் ஜாதி. உனக்கு அந்தப் பாட்டு தெரியுமில்ல? நீ சொல்லு.’ அவள் கற்றுக்கொண்ட முதல் கவிதைகளில் இது ஒன்று. நோக்க நோக்கக் களியாட்டம் என்று ஆனந்தமாய்ச் சொல்வாள்.

‘எனக்கு மறந்து போச்சுப்பா’

‘நீ பாட்டுக்கு சொல்லத்தொடங்கு. உன்னோட மூளை அந்த புக் ஷெல்ஃபிலயிருந்து இந்தப் பாட்டை எடுத்துக் கொடுக்கும்.’

நேற்றுத்தான் அவள் மூளை எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்து கண்டுபிடித்திருந்தாள். அவள் கற்றுக்கொள்கிற விஷயங்கள், மூளையில் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டு, ஒரு பெரிய புத்தக அடுக்கில் வைக்கப்பட்டுவிடுமாம். தேவைப்படும்போது, தேவையான புத்தகம் திறக்கப்பட்டு சரியான செய்தியை மூளை அவளுக்குத் தெரிவிக்குமாம்.

‘இல்லப்பா. அந்தப் பாட்டை என்னோட பிரெய்ன் எழுதிவைக்காம விட்டுருச்சு. ஆசை முகம் எல்லாம் மறக்காம எழுதி, புக் ஷெல்ஃப்ல வைச்சுருச்சு. ஆனா இந்தப் பாட்டு இல்லை.’

‘சரி நான் சொல்றேன். உனக்கு ஞாபகம் வந்துரும். காக்கைகுருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும்…’

‘இங்க ரோட்ல வேண்டாம்பா. ஸ்கூல்ல இருந்து வந்தவுன்ன நீ எனக்கு சொல்லிக்குடு.’

 

ஆங்கிலத்தில் காக்கைகுருவி


எடைக்கு வந்த பாரதி

நவம்பர் 10, 2011

பழைய பேப்பர் சில மாதங்களாய் அவனிடம்தான் போடுகிறோம். பதினைந்து வயதிருக்கும். இரு மாத பேப்பர் அவன் தராசில் எடைகூடுதலாய்த் தெரியும்.

அன்று, மேஜை மீதிருந்த கிழிந்த பாரதி புத்தகத்தைக் கேட்டான்.

‘அது எடைக்கில்லப்பா’.

‘இல்ல சார்,  என் தம்பி ஸ்கூல்ல படிக்கறான். அவனுக்குப் பேச்சுப்போட்டிக்கு நான்தான் எழுதித்தருவேன். பாரதியார் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும. நான் வேணாக் காசு தரேன் சார்’

மகிழ்ந்துபோய், வீட்டுக்குள்ளிருந்த இன்னொரு பாரதி புத்தகம் தந்தேன்.

புதிதாய் வாங்கியது.

‘காசெல்லாம் வேண்டாம்பா. எடைக்குப் போட்டுற மாட்டியே?’

‘அதெப்படி சார்? பாரதியாரப் போய் எடைக்குப் போடுவனா?’


பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் – ஒரு கடிதம்

ஒக்ரோபர் 25, 2011

பாரதி பற்றிய இந்தப்பதிவுக்குப்பின், ஜெயமோகன் எதிரிவினையாற்றத் ‘தேர்ந்தெடுக்காத’  ஒரு கடிதத்தை அவருக்கு இரண்டு வாரங்களுக்குமுன் எழுதியிருந்தேன். அவர் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன் என்கிறமாதிரி தோற்றமளிக்கக்கூடிய பதிவினையிட்டதால், நானும் ‘எழுதிய கடிதம் ஏன் எவர் கண்ணிலும் படாமற்போகவேண்டும்?’ என்று இதை இங்கு பதிவிடுகிறேன்.  முடிவில், விவாதம் great poet என்பது குறித்தா, greatest poet என்பது குறித்தா என்று குழம்பிப்போயிருக்கிறேன்.  அவரும் குழம்பியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.  அவரோடு எதிரிவினையாற்றும் தகுதிபடைத்த புதிய குரல் அவருக்குள்ளேயே எழும்பிவிட்டதால் இதோடு நாமெல்லாம் விலகிக்கொள்வது நல்லது.

எனக்கு இவ்விவாதத்தைத் தொடர்ந்ததன் மூலம் எம்.டி.முத்துக்குமாரசாமி, டகால்டிறியாஸ் குரானா போன்ற ரசமான எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடிந்ததில் மகிழ்ச்சி.

————————————————————————

அன்புள்ள ஜெயமோகன்,

சுஜாதா, நகுலன் பற்றிய பிம்பங்களை நீங்கள் உடைத்தபோது, அவற்றோடு முழுமையாக உடன்படாத போதும், உங்கள்  கோணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதி விவாதத்தில் அப்படியொரு புரிதல் எனக்கும், எதிர்வினைகளை வைத்துப்பார்க்கும்போது பலருக்கும், ஏற்படவில்லை. பாரதியின் கவிதைகளில் கொப்பளிக்கிற உணர்ச்சிகளையும், அவன் எழுதிய காலகட்டத்தையும், அவனிக்கிருந்த சூழலையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவன் சரித்திரம் நிலைக்கிறவரை, அவனை அலசவே முடியாது. பாரதி எளிமையை நாடி எளிமையாய் எழுத முயன்றவன். கடினமாய் எழுதியவற்றைக்கூட மற்றவர்களுக்குப்படித்துக்காட்டி, அவர்களுக்குப் புரியாதபோது, மாற்றியவன் (வ.ரா., யதுகிரியின் சரிதைகளின்படி). அவன் கவிதைகள் மீது மரபுக் கவிதையின் அளவுகோள்களையும், நவீனத்துவ நோக்கையும் பாய்ச்சி, அளப்பது சரியாகப் படவில்லை.

நம் உள்ளுணர்வுக்கு எதிராய், பாரதியை நிராகரித்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம். பாரதியின் பிம்பம் உடைக்கப்பட வேண்டியதாகவே நீங்கள் கருதினாலும், உடைவதால் எதை அடையப்போகிறோம்? அவனை மிஞ்சுவதற்கு எவ்வகையில் மற்றவர்களுக்குப் பாரதி தடையாயிருக்கிறான். பாரதியின் மதிப்பையும், பாதிப்பையும் குறைவாகவே எடைபோட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் – எனவேதான் உங்களைத் தொடர்ந்து படிக்கிற என்னைப்போன்ற பலரிடமிருந்தும் இவ்வளவு கடுமையான எதிர்வினைகள்.

தயவுசெய்து, பாரதியை வெறும் பக்திக் கவிஞன் என்ற குப்பிக்குள் அடைக்காதீர்கள். நாத்திகனான நான், திருவாசகத்துக்கும் கம்பராமாயணத்தும் இணையாக, பாரதியின் பக்திக்கவிதைகளிலும் (அவன் மற்ற கவிதைகளைப் போலவே) ஆழமான உணர்வெழுச்சயை அடைந்துள்ளேன்.

“ஒரு இலக்கியவாதி இலக்கியப்பரம்பொருளை அடைய நினைப்பது தப்பா? தப்பா? தப்பா?” என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஏன் பரம்பொருள் ஒன்றுதான் என்று நினைக்கிறீர்கள். வாசகனாய், இலக்கிய ஆர்வலனாய், எனக்கு, பாரதி சொன்னமாதிரி ‘பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே’ என்றுதான் தோன்றுகிறது. அந்த இலக்கியப்பரம்பொருள் வள்ளுவனிலும், இளங்கோவிலும், கம்பனிலும், பாரதியிலும் பரவி நிற்பதாகவே நான் காண்கிறேன். ஒவ்வொன்றாய் விலக்கிச்சென்றால் பின் பரம்பொருளே இல்லை என்கிற இலக்கிய-நாத்திக நிலைப்பாட்டிற்குத்தான் வந்தாக வேண்டும்.

எது எப்படியோ, நீங்கள் தொடங்கிய இந்த விவாதங்களின் மூலம் ஒரு நன்மை: பாரதியை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும், அதன் மாறாத்தன்மையும், எனக்கு மறுபடியும் உறுதியாய்ப் புரிகின்றன.

கண்ணன்.

————————————————————————-

என் மூன்றுவயது மகள் ஆக்ரோஷமாய் ‘அக்கினிக்குஞ்சு’ பாடல் பாடிக்கொண்டிருக்கிறாள்;  ‘காக்கை குருவி’களை நோக்கிநோக்கிக் களியாட்டம் கொண்டிருக்கிறாள்; தீக்குள் விரலை வைத்தால் என்னவாகும் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறாள். பாரதி இன்னும் 70 வருடங்களுக்காவது மகாகவிதான். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


பாரதி என்றொரு மானுடன்

ஒக்ரோபர் 11, 2011

முதலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. பாரதி ஒரு மகாகவி இல்லை என்ற விவாதத்தைத் தொடங்கி, பாரதியை விமர்சினங்களால் கண்டடைய முடியாது என்ற தெளிவை ஏற்படுத்தியதற்காக. அவர் எவ்வளவு அற்புதமான மகாகவி என்று எங்களுக்கு நினைவுபடுத்தி, மறுபடியும் நிறுவியதற்காக.

பாரதி ஓர் அற்புதமான நிர்வாணச் சிலை செய்துசென்றான். அதன் நிர்வாணமே அதன் அழகு. அச்சிலையை ரசிப்பதைவிட்டு,  மற்ற சிலைகளின் ஆடை ஆபரணங்கள் போல் இதில் இல்லையே என்று விவாதிப்பதில் பொருளில்லை.

பாரதியின் பல கவிதைகள் நேரடித்தன்மையோடு இருக்கலாம்; ஆழ்படிமங்கள் இல்லாமல் இருக்கலாம்.  ஆனாலும் அவற்றின் உணர்வெழுச்சியே அவற்றிற்கான தனியிடத்தை ஏற்படுத்துகின்றன. அவன் கவிதைகளை, உணர்ச்சிகளைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் விமர்சனப் பார்வையோடு பார்த்தால், வெற்று விவாதங்கள் தான் விளையும்.

பாரதியை வெறும் இசைப்பாடல் எழுதியவனாகவும், பக்திக் கவிஞனாகவும், உரைநடை முன்னோடியாகவும் மட்டுமே பார்க்க முடிகிறபோது,  ஜெயமோகனின் இலக்கியப்பார்வைமீது எனக்கிருந்த மதிப்பு பலகாதம் கீழிறங்கிவிட்டது.

மற்ற மொழியினர் பாரதியை மட்டுமல்ல, கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் தான் இன்னும் அறியாமல், பாராட்டாமல் இருக்கிறார்கள்.  அந்த அளவுகோளின்படி தமிழில் கவிஞர்களே இல்லை என்றாகும். பாரதி உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தவன். வெறும் மேடைப்பேச்சு தரும் தற்காலிக உணர்வெழுச்சியல்ல அவனுடையது – நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் சற்றும் மங்காத உணர்வெழுச்சி.  அத்தகைய உணர்வெழுச்சியை மொழிபெயர்ப்பதற்கு பாரதியின் திறத்தோடு இன்னொரு கவிஞன்தான் வரவேண்டும். என்னுடைய மொழிபெயர்ப்புகளையே நான் மறுபடி படிக்கும் போது, எனக்கு என்னுடைய போதாமை புரிகிறது. தமிழில் இருக்கும் வேகத்தையும், எளிமையையும், அழகையும் ஒருசேர என்னால் (மற்றவர்களாலும்) ஒருபோழ்தும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியவில்லை என்பது தெளிவு.

ஆனாலும், அது ஒரு பொருட்டல்ல. தொடர்ந்து முயல்வோம். மற்றவர்களை பாரதி சென்றடைந்தாலும், அடையாவிடினும், தமிழனுக்குப் பாரதி மகாகவிதான்.

பாரதியை பக்தி, சமூகம், வேதாந்தம், மொழி என்கிற கூட்டிலெல்லாம் அடைத்துப்பார்க்க முடியாது. அவன் கவிதைகளிற் பொங்கிநிற்பது மானுடம். ஆத்திகனையும், நாத்திகனையும் நகரவிடாமற் கிறங்கடிக்கும் மானுடம். பாரதி என்றொரு மானுடன் கவிபுனைந்த மொழியினை அறிந்தவன் நான். எனக்கு என்றும் அவன் மகாகவிதான்.

பாரதியின் படிமங்களற்ற, காலத்தை வென்று நிற்கும் இந்த நேரடிக் கவிதையையே எல்லா விமர்சனங்களுக்கும் பதிலாய்த் தரலாம்.

தேடிச்சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்ப மிகவுழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்க்கூற்றுக் கிரையெனப்பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போல் நானும்
வீழ்வேனென்று நினைத்தாயோ ?


காணி நிலம் வேண்டும் – ஆங்கிலத்தில்

மார்ச் 25, 2011

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பாரதியின் இன்னொரு கவிதையை மொழிபெயர்த்துள்ளேன்:

http://tkan.wordpress.com/2011/03/25/a-tiny-tract-of-land-bharatis-wish/

இதற்கு முந்தியவை நல்லதோர் வீணை, அக்கினிக்குஞ்சு, தேடிச்சோறு நிதந்தின்று.

திருக்குறளை மொழியாக்கம் செய்வதற்கிடையில், இந்த முயற்சி சற்றே மாறுபட்ட அனுபவமாக இருந்தது.


பாரதி – ஆங்கிலத்தில்

ஒக்ரோபர் 13, 2008

பாரதியின் உணர்ச்சி வேகத்தை ஆங்கிலத்தில் அடக்கி, வெளியுலகிற்கு வெளிச்சம் போடுவதில், என் சில முயற்சிகள்:

  1. நல்லதோர் வீணை
  2. தேடிச் சோறு நிதந்தின்று
  3. அஃகினிக் குஞ்சு

நல்லதோர் வீணை – ஆங்கிலத்தில் மீட்டினால்!

ஒக்ரோபர் 7, 2008

தாகூரைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தோன்றியது, ஏன் தாகூர் அளவிற்கு, பாரதி கவனிக்கப் படவில்லை? நல்ல மொழியாக்கம் இல்லை என்பதாலா? தாகூரின் கவிதையின் சாரத்தை ஆங்கிலத்தில் கண்டு என்னால் தமிழில் ஓரளவு தர முடியும்போது, பாரதியின் படைப்புகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்த இயலாதா?

தாகூருக்கு ஒரு W.B.Yeats, R.K.Narayanக்கு ஒரு Graham Greene மாதிரி பாரதிக்கு…?

இதோ என்னால் இயன்ற எளிய முயற்சி. இன்னும் வல்லமை மிக்கவர் கரங்களில் இந்த வீணை மேலும் அழகாய் மீட்டப்படக் கூடும்.


பாரதி – சில இணைப்புகள்

செப்ரெம்பர் 24, 2008

 Subramania Bharati’s Letters: a treasure trove

Early views of nationalist-poet Subramania Bharati

“Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never understand political liberty.” – காந்தியும் பாரதியும் ஒரே தளத்தில்தான் சிந்தித்திருக்கிறார்கள்.

 மகாகவி பாரதியின் கடிதங்கள்

பாரதியின் மொத்த எண்ணங்களின் சாரம் இந்தக் கடிதத்தில்…உரைநடையிலும் கவிதையின் காரம் மாறாமல்:

“தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு 
ஏறு ஏறு  மேலே மேலே மேலே

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ 
பற. பற – மேலே மேலே மேலே
**

தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது  

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி சக்தி சக்தி என்று பாடு “