பேருந்து

நவம்பர் 20, 2018

சென்ற வாரம், எங்கள் பயிலக மாணவர்கள் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிற அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குப் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார்கள். பேருந்து வந்ததும் எப்போதும் போல் முண்டியடித்துக்கொண்டு ஏறியிருக்கிறார்கள். நடத்துனர் கோபமாகத் திட்டி, அவர்கள் யாரையும் ஏற்றாமலே பேருந்தை நகர்த்தச்சொல்லிவிட்டார். பேருந்து கொஞ்ச தூரம் போனதுமே, யாரோ ஒரு மாணவன் கல்லை வீசியெறிய, கண்ணாடி சிதறியிருக்கிறது. உடனே காவல்துறையினர் அழைக்கப்பட்டு, 9வது, 10வது படிக்கும் எல்லா மாணவர்களையும் மிரட்டி, விசாரித்திருக்கிறார்கள். ஜட்டியோடு உட்கார வைத்துவிடுவேன் போன்ற மிரட்டல்களையெல்லாம் மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சின்னதாக அடியும் வாங்கியிருக்கலாம். ஆசிரியர்களும் காவல்துறையினருக்கும் நடத்துனருக்கும் ஆதரவாகவே பேசினார்களாம்.

எங்கள் மாணவர்கள் சேதமில்லாமல், தாமதமாக வீடு திரும்பினார்கள்.

‘நீங்க ஏன்டா நெருக்கியடிச்சுட்டு ஏறணும். வரிசையா ஏறலாமில்ல?’

’30-40 பேர் உட்கார்ர பஸ்ஸுல, நாங்க 100 பேர் எறணுங்கண்ணா. அடிதடியில்லாம எப்படிண்ணா ஏற முடியும்? எத்தனை தடவை நானே படில விழுகிற மாதிரி தொங்கிட்டு வந்திருக்கேன். பிரவீன்கூட ஒரு நாள் விழுந்தாட்டாங்கண்ணா.’

பல நூறு மாணவர்கள் படிக்கிற பள்ளி. மேற்கே போகும் பேருந்து அந்த நேரத்துக்கு அது ஒன்றுதான். அடுத்த வண்டி அரை மணிநேரம் கழித்து வரும்.

அடுத்த முறை இப்படி நடந்தால், இது மாதிரி கல்லெறியாதீர்கள். புகார் எழுதிப் பழகுங்கள். கலெக்டர் வரைகூடப் போகலாம். தேவைப்பட்டால் அமைதியாகப் போராடிப் பழகுங்கள். எப்போதும் உங்கள் தரப்பில் தப்பில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்று அறிவுரைகளை அடுக்கினேன். வேறென்ன சொல்ல?


பயிலகத்தில் திருக்குறள்

நவம்பர் 20, 2018

இந்த மனிதர் உண்மையிலேயே கவிதைக்குள் மாயங்கள் செய்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் திருக்குறள் கற்றுக்கொள்வதை நேசிக்கின்றனர். கற்றுத்தரும்படி கட்டாயப்படுத்துகின்றனர் – ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களுக்காவது. புத்தகத்தையே தொட மறுப்பவர்களும், குறள்களைக் கேட்டு மனனம் செய்து ஒப்பிப்பதில் பேருவப்பு கொள்கின்றனர். ஒரு சொல்லைக்கூட உரக்கப் படிக்க மறுப்பவர்களும், தொண்டை கிழிய இக்குறளைக்கூடக் கூவுகின்றனர்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.

திருக்குறள் முழுவதையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒரு தீர்ப்பு தரப்பட்டது. என்னைக் கேட்டால், திருக்குறளைப் பாடத்திட்டத்திலிருந்தும், தேர்வுகளிலிருந்தும் முழுவதுமாய் நீக்கிவிடுங்கள் என்பேன். அதை ஒரு கொண்டாட்டமாக்குங்கள். எங்கள் குழந்தைகளைப் போலவே எல்லாக் குழந்தைகளும் திருக்குறளைக் கற்றுக்கொடுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள், அவர்களாகவே அவரவர் வேகத்தில் கற்பார்கள், மற்றவர்களோடும் மற்றவர்களிடமிருந்தும் கற்பார்கள், ஒருவர் மற்றவரை நிறைவு செய்வார்கள், மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.


குடி

நவம்பர் 20, 2018

கிராமம் நலம்பெற என்னவெல்லாம் செய்யலாம் என்று பயிலக மாணவர்களோடு எதேச்சையாக ஒரு சிறிய உரையாடல் நடந்தது. சுத்தம், பசுமை, கல்வி, சுற்றுச்சூழல் என்று பலவாறாகச் சொன்னார்கள்.

‘பசங்களா, எல்லாம் சரி, குடியை விட்டுட்டீங்களே,’ என்றேன்.

‘டாஸ்மாக்க மூடணும்ணா’

‘சரி, நாம என்ன பண்ணலாம்?’

‘நாங்க சொன்னா வீட்டுல அடிக்கிறாங்கண்ணா.’

‘எல்லாருக்கும் ஒரு மாலையைப் போட்டுவிடறது தாங்கண்ணா ஒரே வழி.’

‘அப்பவும் ரொம்ப நினெப்பு எடுத்தா, மாலையக் கழட்டி வைச்சிட்டுக் குடிச்சிட்டிட்டு வந்துட்டு, அப்புறமா மறுபடியும் மாலையப் போட்டுப்பாங்கண்ணா.’


பயிலகம்

நவம்பர் 20, 2018

(முகநூலில் செப்டெம்பர் 9ம் தேதி எழுதிய பதிவு)

எங்கள் பயிலகத்திற்கு ஒரு புதிய இடம் கிடைத்துள்ளது. தற்போது ஜப்பானில் வசித்துவரும் அற்புதமான தம்பதியினரான கிருஷ்ணக்குமார்-காயத்ரி தங்கள் நிலத்திலுள்ள வீட்டையும் அறைகளையும் பயிலகம் நடத்த அளித்துள்ளனர். அவர்களது நிலம் எங்களுடையதைக் காட்டிலும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இதுவரை அரச மரத்தடியில், விநாயகர் கோயிலருகில், பயலிகம் நடத்தி வந்தோம். அதற்கென ஒரு தனித்த எழில் இருக்கத்தான்செய்தது. ஆனால், சாதிப் பிரச்சனைகள், மழை, மற்றும் பிற சிக்கல்களும் இருந்தன.

இப்புதிய இடம் குழந்தைகள் மேலும் பல செயல்கள் செய்வதற்கு வழிவகுக்கக்கூடும். பிற நண்பர்கள் பிற வழிகளில் உதவியுள்ளனர். புதிய சவால்களும் உள்ளன…அவற்றையும் சந்தித்துத்தான் பார்ப்போம். ஆனால், இப்போது நாங்கள் தனித்துச் செயல்படவில்லை என்பதே பெரும் உற்சாகமாகத்தான் உள்ளது.


மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018