க.மு.நடராஜன்: நண்பென்னும் நாடாச் சிறப்பு

ஜூன் 27, 2021

(சர்வோதயம் மலர்கிறது இதழில் எழுதிய அஞ்சலிக் கட்டுரை)

2012ம் ஆண்டு மதுரையில் நாராயண் தேசாயின் ‘காந்தி கதா’ நிகழ்வு நடக்கவிருப்பதாகத் தெரிந்தவுடன் சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நாராயண் தேசாய் காந்தியின் அணுக்கச் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன். காந்தியின் கண்பார்வையில் வளர்ந்த அனுபவங்களை அழகாகப் பதிவு செய்தவர். எனவே அந்நிகழ்ச்சியைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தேன். அங்குதான் க.மு.நடராஜன் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அந்த ஐந்து நாள் உரையை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார். நாராயண் தேசாயிடம் நேர்காணல் செய்வதற்கான அனுமதியை அவரிடம்தான் பெற்றேன். ஆனால், அப்போது கே.எம்.என். அண்ணாச்சி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நடராஜன் ஐயாவைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட நெருங்கிய உறவு அன்று தொடங்கவிருக்கிறது என்பதையும் நான் அப்போது உணரவில்லை. முதலில் காந்தி-இன்று தளத்தில் அந்த நேர்காணல் வெளிவந்தது. பிறகு நண்பர்கள் சுனில் கிருஷ்ணன், ராட்டை ரகு ஆகியோர் அந்த நேர்காணலை நடராஜன் ஐயாவிடம் பகிர்ந்துகொண்டபோது, உடனே அதை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்வடிவம் கொடுத்துப் பதிப்பித்தார். அப்போதுதான் அவரோடு எனது பழக்கம் முறையாகத் தொடங்கியது. ஒருவகையில் இந்த அனுபவமே எனக்கு அவரைப்பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. காந்தியின் மீது ஆர்வம் கொண்டவர்களை சர்வோதய இயக்கத்தோடுப் பிணைப்பதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவர் தவறவிடுவதில்லை என்பதை உணர்ந்தேன். காந்தியப் பணியைச் செய்யக்கிட்டும் எந்த வாய்ப்பையும் அவர் தேடிப்போய்ப் பற்றிக்கொள்வார் என்பதையும் அறிந்தேன். முதலில் நாராயண் தேசாயின் காந்தி கதா கூடங்குளம் போராட்டக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டதை அறிந்தவுடன், உடனே அவரை அணுகி மிகக்குறுகிய காலத்தில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை நடராஜன் செய்தார். பலவகைகளில் இந்நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொடர்புகளும், அனுபவங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு வேறு தடத்தில் செலுத்தக்கூடியவையாக மாறின. அந்த மாற்றத்தின்போது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஊக்கம் தருபவராகவும் வழிகாட்டுபவராகவும் நடராஜன் ஐயா இருந்தார். முதன்முதலாக என்னை ஜெகந்நாதன் நினைவாக நடைபெறும் சர்வோதய தின நிகழ்ச்சிக்கு வரச்செய்ததும் நடராஜன் ஐயாதான். அங்கு அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குடும்பத்தினருடனும் உலகெங்கும் இருந்து வரும் காந்திய அன்பர்களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு எங்கள் வாழ்வை நெறிப்படுத்தின. அவரது எழுபதாண்டுகால காந்தியப் பணியில் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை நம் ஒவ்வொருவராலும் நினைவுகூர முடியும்.

க.மு.நடராஜன் ஒரு மிகப்பெரிய செயல்பாட்டாளராகவும் அதே நேரத்தில் தேர்ந்த அறிஞராகவும் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சர்வோதயக் குடும்பத்தைத் தாண்டி பொதுச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாடத் தவறிவிட்டோம். எனினும் காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து புதிய தலைமுறைகளுக்குக் கடத்திவந்த ஆளுமைகளுள் அவர் முதல் வரிசையில் நின்றவர்.

பல சர்வோதய நிறுவனங்களுக்குத் தலைவராகவும் இருந்து, மூன்று இதழ்களுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்து நடத்தியதென்பது ஓர் அரிய சாதனை. அதனை எண்பத்தெட்டு வயதுவரை அவர் செய்துவந்தார் என்பது அவருக்கு காந்தியத்தின் மீதிருந்த ஈடுபாட்டையும், நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையடைந்த பிறகும் தன் பணி முடிந்துவிடவில்லை என்ற எண்ணத்தையும், உலகம் உய்வதற்குத் தன்னால் இன்னும் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் காட்டுகின்றன.

புதியவர்களைச் சர்வோதயக் குடும்பத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் எப்போதும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை அவருடன் தொடர்பில் வந்துவிட்டால் தன் அன்புக்கரங்களால் பற்றிக்கொள்வார். அவர் தன்னோடு தொடர்பில் வந்தவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து அன்பு பாராட்டினார். ஒவ்வொருவரோடும் இடைவிடாத தொடர்பில் இருந்தார். அவருக்கான அஞ்சலிக் கூட்டங்களின்போது நான் உணர்ந்தது அதுவே. அனேகமாக அனைவரும் தம்மை அவர் கைப்பேசியில் அழைத்துப் பேசியவண்ணம் இருந்ததாகக் குறிப்பிட்டனர். அனைவருமே அவர் தம்மீது தனிக்கவனம் செலுத்திவந்ததாகவும் தனிப்பிரியம் கொண்டிருந்ததாகவும் கருதியிருந்தனர். ஒவ்வொருவரையும் அவர்கள் இன்றியமையாத பங்காற்றவேண்டியிருப்பதாக உணரச்செய்தார்.

நானும் அப்படித்தான் அவரோடு எனக்கு மட்டுமே வாய்த்த தனிச்சிறப்புகொண்ட ஓர் உறவு இருந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக என்னோடு வாரமொருமுறையேனும் பேசாமலிருக்கமாட்டார். ஒவ்வொரு முறையும் ஒருமணிநேரமாவது பேசுவார். என்னைவிட இருமடங்கு வயதும் பன்மடங்கு அனுபவமும் அவருக்கு இருந்தாலும் என்னோடு ஒரு இணைநண்பனாகவே பழகினார். நான் அண்மைக் காலங்களில் அதிகம் உரையாடியது அவருடன்தான். இதுகுறித்து என் மனைவிக்கு அவர் மீது ஓர் அன்பான பொறாமையே உண்டு. அதிலும் கடந்த ஓராண்டாக இருந்த பொதுமுடக்கத்தின் போது கிராமத்திலுள்ள நான் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். எனது அப்பாவை முதுமையின் தனிமை தீண்டாமல் அடிக்கடி போய் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார். கபசுரக்குடிநீர் கிடைத்ததா என்று கேட்டு இல்லை என்றபோது மதுரையிலிருந்து கபசுரக்குடிநீர்த் தூளும் பிற மருந்துகளும் அனுப்பிவைத்தார்.

அவர் பல நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்நிகழ்ச்சிகளைக் குறித்து எழுதவைத்தார். அங்கு வருபவர்களில் அனேகருடனும் அறிமுகம் செய்துவைப்பார். நான் மதுரையில் இல்லாமல் போய்விட்டேன் என்று ஆதங்கப்படுவார். இருந்தால் மேலும் அதிக பணிகளைச் சேர்ந்து செய்யலாமே என்பார். ஏதேனும் புத்தகம் படித்ததாகக் கூறினால் உடனே அதுகுறித்து எழுதி அனுப்பச் சொல்வார். அவரும் புத்தகங்கள் அனுப்பி வைப்பார்.

என் மனைவி என்னைவிட நன்றாக மொழிபெயர்ப்பதாகக் கூறி அவரையும் எழுதுவதற்குத் தூண்டுவார். பல நிகழ்ச்சிகளில் பிறரது உரைகளை அவரை மொழிபெயர்க்கவைத்தார். எங்கள் மகளின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார். அவள் அவருக்குத் தெரிந்த பாடலைப் பாடினால் பெருமகிழ்ச்சி கொள்வார். அந்தப் பாடலுக்கும் அவருக்குமான தொடர்பினைப் பற்றி அவளிடம் கூறுவார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாவண்ணனை அவருக்கு அறிமுகப் படுத்தியிருந்தேன். அதன்பிறகு பாவண்ணன் பல ஆளுமைகளைப் பற்றி எழுத நடராஜன் தூண்டுதலாக இருந்தார். அவருக்கு வேண்டிய நூல்களும் தொடர்புகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார். ஒவ்வொருமுறை என்னோடு பேசும்போதும் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறுவார். அதுபோலவே நான் அறிமுகப்படுத்திய பிற நண்பர்களான சித்ரா பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியம் முத்துசாமி போன்ற பிறரையும் தொடர்ந்து எழுதவைக்கவேண்டும் என்று கூறியபடி இருப்பார்.

பிற செயல்களில் திசைமாறி நான் எழுதவதாகக் கூறிய ஏதேனும் கட்டுரையை எழுதாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தால், சிறிதும் கடிந்துகொள்ளாமல் தொடர்ந்து பொறுமையாக நினைவுபடுத்துவார். நல்ல நூல்களை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் அவருக்கிருந்தது. பன்னாலால் தாஸ்குப்பதாவின் Revolutionary Gandhi என்ற நூல்பற்றிக் கூறியவுடன் கல்கத்தாவில் இருந்து அதைத் தருவித்து எனக்கு அனுப்பிவைத்தார். அந்நூலுக்கான விமர்சனக் கட்டுரையை நான் வெகுகாலம் எழுதாமலே இருந்தேன். சளைக்காமல் என்னை உந்தியுந்தி அந்நூலைப் பற்றி எழுதவைத்தார். மார்க்சிய நோக்கில் காந்தியை அறிமுகப்படுத்திய அந்நூல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகப் பட்டது. இறுதியாக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு அந்நூலைப் படிக்கவிரும்புவதாகக் கூறிய மருத்துவர் ஜீவாவுக்கும் அந்நூலை வாங்கி அனுப்பினார். எனது தல்ஸ்தோய் பற்றிய ‘எழுத்தில் விரியும் வியனுலகம்’ கட்டுரையை பல இதழ்களில் பிரித்துத் தொடர்ந்து பதிப்பித்தார். அதற்கு ஆதாரமான ‘The Kingdom of God is Within You’ என்ற தல்ஸ்தோயின் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அறிந்து மருத்துவர் ஜீவாவை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார். அவர் ருசிய மொழி அறிந்த தனது சகோதரியை மொழிபெயர்க்கச் சொல்லியிருப்பதாகக் கூறினார். மருத்துவர் இறந்த செய்தி அறிந்தபோது இடிந்துபோனார். அவருக்கு வந்த அஞ்சலிக் குறிப்புகளையெல்லாம் தொகுத்து அனுப்பிவைக்கும்படி கூறி படித்தார். சர்வோதயம் மலர்கிறது இதழ் மூலமாக அவருக்குச் சிறப்பான அஞ்சலி செலுத்தினார். இன்று அண்ணாச்சியும் நம்மிடையே இல்லை.

எனது ஆங்கில மொழிநடை அவருக்குப் பிடிக்கும். அதை எல்லாரிடமும் குறிப்பிடுவார். ஆனால் என் தமிழ் மொழிநடை மீது அவருக்கு விமர்சனங்கள் உண்டு. இலக்கிய நடையில், பண்டித நடையில் எழுதுவதாகக் குறிப்பிடுவார். எளிமையாக எழுதவேண்டும்; எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்துவார். எனினும் என் கட்டுரைகளை அதிக மாற்றங்களின்றிப் பதிப்பிப்பார்.

சமூகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால் இலக்கியமெல்லாம் அவர் விரும்பிய அளவு தீவிரமாகப் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பார். ஜெயகாந்தன் போன்றவர்களால் ஈர்க்கப்பட்டாலும் அவர் குடிப்பழக்கத்தை நியாயப்படுத்திப் பேசியது தனக்கு உவப்பாக இல்லை என்பார். இலக்கியவாதிகள் தனிவாழ்விலும் அறத்தைப் பேணவேண்டும் என்று கருதினார். அவர் விரும்பியவண்ணம் இலக்கியம் பயிலாவிட்டாலும் இருமொழிகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சொல்ல வந்த கருத்துகளை – எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும – மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், சுவையாகவும் கூறும் ஆற்றல் அவருக்கிருந்தது.

எல்லாரைப் பற்றியும் கூற பிறருக்குத் தெரியாத தகவல்கள் அவரிடம் இருந்தன. குமரப்பா, வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயண், கெய்தான், ஜெகந்நாதன், காமராசர், கக்கன் போன்ற தலைவர்களைக் குறித்தெல்லாம் பகிர்ந்துகொள்ள பல தனிப்பட்ட அனுபவங்கள் அவருக்கிருந்தன. இவான் இலிச், E.F. ஷூமேக்கர், மார்க் லிண்ட்லே, ராமச்சந்திர குகா போன்ற அறிஞர்களுடனும் வெவ்வேறு தருணங்களில் பழகும் வாய்ப்பு அவருக்குக்கிட்டியது. பல மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களுடனும் சிறந்த நட்பிலிருந்தார். கம்யூனிச இயக்கத்தொடர்பு கொண்ட நா.தர்மராஜன், எஸ்.என்.நாகராசனுடனும் ஆகியோர் அவரது நெருங்கிய நண்பர்கள்.

நடராஜன் சர்வோதய இயக்கத்தில் பல பதவிகளை வகித்துவந்த போதும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவராகவே இருந்தார். தனி உரையாடல்களின்போதும் உரைகளின்போதும் எண்ணற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டே இருப்பார். ஆனால் அந்த அனுபவப் பகிர்வுகளில் பிறரது ஆளுமைகள்தாம் வெளிப்பட்டனவேயொழிய இவரது பங்கினை மிகக் குறைவாக முன்வைப்பார். இவ்வாண்டு சர்வோதய விழாவில், ஜெகந்நாதன்-சர்வோதயா விருது நடராஜன் அண்ணாச்சிக்கு வழங்கப்பட்டது. விருதாளர்களின் பட்டியலை இறுதிசெய்யும் பொறுப்பு எப்போதும் அவரிடமே இருந்தது. ஆனால் இம்முறை அவருக்குத் தெரியாமலே அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும் விருதுச் சான்றிதழை அவரது அலுவலகத்தில் எப்போதும்போல அவரிடமே அனுப்பிவைத்தனர். எனவே அவருக்குக் கிடைக்கவிருந்த கடைசிநேர இனிய அதிர்ச்சி நிகழவில்லை. அவர் அந்த விருதினைக் கூச்சத்துடனே ஏற்றுக்கொண்ட போதும், அதை அவரது வழிகாட்டியாக இருந்த ஜெகந்நாதனுக்குச் செய்யும் மரியாதையாகக் கருதினார். அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையை நான் சர்வோதய தினம் பற்றிய கட்டுரையில் சற்றே விரிவாக எழுதியிருந்தேன். கட்டுரையின் நீளம் கருதி முழுமையாகக்கூட எழுதவில்லை. ஆனாலும் கட்டுரையை அவருக்கு அனுப்பியபோது உடனே என்னை அழைத்து, ‘எதுக்கு நான் பேசனதெல்லையாம் இவ்வளவு விரிவா எழுதினீங்க?’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார்.

நடராஜன் ஒரு மாபெரும் வரலாற்றுப் பெட்டகமாக இருந்தார். அவரது நினைவுகளையும் அனுபவங்களையும் நாம் முழுமையாகப் பதிவுசெய்யவில்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாகவே இருக்கும். ஒவ்வொரு முறை அவரிடம் ஒரு நீண்ட நேர்காணல் செய்வதற்கு நேரம் கேட்கும் போதும் அதற்கென்ன அவசரம் என்று வேறு ஏதேனும் பணியில் நம்மை ஈடுபடுத்திவிடுவார். அவரோடு சில நாட்கள் கூடவே இருந்து உரையாடி அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற நானும் உரிய வேகம் காட்டவில்லை என்பது எனக்குள் ஒரு குற்றவுணர்வையே ஏற்படுத்துகிறது.

அண்மையில் அயல்நாட்டு நண்பர்களோடு நடந்த கூட்டமொன்றில் நடராஜன் அண்ணாச்சியை நினைவுகூர்ந்த அம்மா கிருஷ்ணம்மாள் தன்னையும் அறியாமல் நிகழ்ச்சி முழுவதும் கண்ணீர் சொரிந்தபடியே அமர்ந்திருந்தார். அவர்களது நீண்ட நெடிய சமூகப்பயணத்தில் நடராஜன் அண்ணாச்சி எத்தனை உற்ற துணையாக இருந்திருக்கிறார் என்பதை நாம் எழுதக்கூடிய எந்த சொற்களையும் விட அந்தக் கண்ணீரே சான்றாகியது. அவரளவு நீண்ட தொடர்பு எனக்கு இல்லாவிட்டாலும் அவர் உணர்ந்த அதே வெறுமையை நடராஜன் ஐயாவின் மறைவிலிருந்து நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன். சர்வோதய இயக்கத்தில் அவர் விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடம் அவ்வளவு எளிதில் நிரப்பிவிடக்கூடியதன்று.


காந்திய காலத்துக்கொரு பாலம்

ஒக்ரோபர் 30, 2012

நாராயண் தேசாய் – காந்தி, வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயண் ஆகியோரோடு நெருங்கிப் பழகி, உடன் போராடி உழைத்தவர். அவரை மதுரையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல் குறித்து  ‘காந்தி இன்று’ தளத்தில் எழுதியுள்ளேன். ‘காந்தி இன்று’ தளத்தை நடத்திவரும் நண்பர் டாக்டர்.சுனில் கிருஷ்ணனையும் மதுரையில் சந்தித்தேன். காந்தியைப் பற்றிய நூல்களையும் குறிப்புகளையும் தேடித்தேடிப் படித்து, தமிழாக்கம் செய்து பதிவேற்றி வருகிறார்.

ஆறு பகுதிகளாய்ப் பதிப்பித்த அந்தக் கட்டுரைக்கான இணைப்புகள் இங்கே.

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

பகுதி 4   பகுதி 5   பகுதி 6

ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

இந்த நேர்காணலும், சுனில் எழுதிய ஒரு கட்டுரையும் ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சர்வோதய இலக்கியப் பண்ணையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் (நேர்காணல் மட்டும்) கிடைக்கும்.

சர்வோதய இலக்கியப் பண்ணை,

எண் 32/1, மதுரை சந்திப்பு அருகில், மேற்கு வெளி வீது, தெற்கு ரயில்வே காலனி, மதுரை – 625001. தொலைபேசி – 0452 234 1746