இந்த ஞானம் வந்தாற்பின் வேறெது வேண்டும்

பிப்ரவரி 1, 2011

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

வெளியே ஏதோ சத்தம் கேட்கவும், என் மகளை எடுத்துக்கொண்டு பால்கனியிலிருந்து வேடிக்கைக் காண்பிக்கச் சென்றேன். குடியரசு தினப் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. பெரியவர்களும் குழந்தைகளும் நடந்தும் ஓடியும் கலந்துகொண்டிருந்தனர்.

“மகிழ்குட்டி! யாருடா ஜெயிப்பாங்க, அஜினி அக்காவா, ராதிகா அக்காவா? யாரு ஜெயிப்பாங்க?’ என்றேன்.

“எல்லாரும் ஜெயிப்பாங்க அப்பா” என்றாள். “அஜினி அக்கா, ராதிகா அக்கா, ஸ்ருதி அக்கா, ஜான்வி அக்கா எல்லாரும் ஜெயிப்பாங்க’.

இவளுக்கு நான் இனி என்ன சொல்லித்தருவது? இதெல்லாம் இரண்டு வயதில் தெரியக்கூடாது,  இன்னும் அறுபது ஆண்டுகள் ஆகவேண்டும் என்றா? பள்ளிக்குச் சென்று பாடம் கற்கத்தான் வேண்டுமா? அழகிய வெள்ளைத்தாளில் கறுப்புப் பென்சில் கிறுக்கப்போகிறது.

பின் தலைப்புக் கதை படித்தபோது,  சிலிர்த்தது.