(சர்வோதயம் மலர்கிறது இதழுக்காக எழுதியது)

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் சர்வோதய தினம் மறைந்த சர்வோதயத் தலைவர் ஜெகந்நாதனின் நினைவாக காந்திகிராமம் ஊழியரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், நாகப்பட்டினம் பகுதி கிராமங்களிலிருந்தும் பலரும் திரண்டுவந்து பங்கேற்கும் நிகழ்வாக இது இருந்திருக்கிறது. இவ்வாண்டு கொரோனா பெருந்தொற்றால் பல நூறு பேர் ஒரே இடத்தில் கூடுகிற விழாவாக இந்நிகழ்வு அமைக்கப்படவில்லை. எனினும் ஒருசிலர் நேரில் வந்தும் வேறு பலர் இணையம் மூலமாக இணைந்தும் பங்குபெற்று இவ்வாண்டும் சர்வோதய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 10ம் நாள் முதல் 12ம் நாள் வரை மூன்று நாட்கள் நேரிலும் மெய்நிகர் கூடுகையிலும் பல செம்மையான உரைகள் ஆற்றப்பட்டு செறிவான கலந்துரையாடல்களும் நிகழ்ந்தன.
முதல் நாள் – பெருந்தொற்று தோற்றுவித்த சவால்கள்
முதல் நாள் நிகழ்ச்சி பெருந்தொற்றின் போதும் அதற்கு அப்பாலும் சந்திக்கிற சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடந்தது. காந்திகிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ராஜா அன்றைய தினத்தின் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
முதலில் பேசிய பேராசிரியர் ரிச்சர்ட் ரோஸ் இங்கிலாந்தின் நார்த்தம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். உலகெங்கிலும் கல்வி குறித்துச் சந்திக்கும் சவால்களை முன்வைத்துப் பேசினார். சமூக-பொருளாதார இடைவெளி அண்மைக்காலங்களில் அதிகரித்து விட்டதைச் சுட்டிக்காட்டினார். விளிம்புநிலைச் சமூகக் குழந்தைகள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். வறுமையை ஒழிக்காமல், பெண்கள் ஒடுக்கப்படுவதைக் களையாமல் கல்வியில் சமத்துவத்தை எட்டமுடியாது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும்வரை சமமான கல்வி வழங்க இயலாது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் (258 மில்லியன்) சகாராவையொட்டிய ஆப்பிரிக்க நாடுகளிலும் தெற்கு ஆசியாவிலும் வாழ்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டார். கடந்த இருபது ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஐரோப்பாவைவிட இந்தியாவில் அதிகமான மில்லியனர்கள் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளிடம் பல உளச்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எல்லாப் பெற்றோர்களாலும் தங்கள் இல்லங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத்தர முடியாது. பெற்றோர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். தொழில்நுட்பம் பொய்யான தீர்வுகளைத் தந்துள்ளது – எல்லாக் குழந்தைகளும் இணையத்தையும் தொலைக்காட்சியையும் பயன்படுத்த வழியில்லை என்றார். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அவசியம்தானா, குழந்தைகள் கற்ற வேண்டியவை என்ன என்ற வினாக்களை எழுப்பினார் ரிச்சர்ட ரோஸ்.
அடுத்து பேசிய ஹெதர் குமின்ஸ் ஜாம்பியா நாட்டிலிருந்து பேசினார். SSAP என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைதூர கிராமத்தில் இருப்பதாகவும், அக்கிராமம் அடுத்த நகரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலிருப்பதாகவும் குறிப்பிட்டார். மின்னிணைப்பு இல்லாததால் சூரியஒளியைக் கொண்டு குறைந்த மின்சாரம் உற்பத்திசெய்து மடிகணினியைப் பயன்படுத்துகிறார். ஜாம்பியாவில் தனிமைப்படுத்துதல் ஓரளவு உதவியாக இருந்துள்ள போதும், மக்கள் முகக்கவசம் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. பெருந்தொற்றின் பாதிப்பை அவர்கள் கண்ணால் காணவில்லை. அங்கு மிக அதிகமாக மலேரியா, எய்ட்ஸ், டைபாய்ட், காலரா போன்ற நோய்களை அவர்கள் தொடர்நுத சந்தித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் இரண்டாண்டுக்கொரு முறை வறட்சியும் மூன்றாண்டுக்கொரு முறை பெருமழையும் பெய்கின்றன. இப்புவியை மாசுபடுத்த அவர்கள் எதுவும் செய்யாவிடிலும், மிக அதிக பாதிப்புக்கு அவர்களே ஆளாகின்றனர். ஹெதர் குமின்ஸ் சியரா லியோனில் ஓர் அகிம்சை ஆசிரமம் நிறுவ வேண்டும் என்று விரும்புகிறார். காந்தியை இறந்தபோன குருவாகக் கருதுகிறார். அகமதாபாத்தின் குஜராத்தி வித்யாபீடத்தில் அவர் காந்தியம் குறித்துப் படித்திருக்கிறார். மக்கள் பணி செய்வதற்கு காந்தியே உந்துதலாக இருப்பதாகக் கருதுகிறார். அவரது தொண்டு நிறுவனம் வழங்கும் குறுங்கடன்களைப் பெறுவதற்கு வருபவர்கள் காலணிகள் அணிந்திருப்பதில்லை. கிழிந்த உடைகளை உடுத்தியிருப்பர். கடனைத் திரும்பக் கட்டுவது எப்படி என்று யோசித்திருக்கமாட்டார்கள். அப்போதைக்கு உணவுக்காகும் என்று மட்டுமே நினைப்பார்கள். ஹெதரின் அச்சிறு திட்டம்தான் அவர்களுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை, ஒரே வாய்ப்பு. வேறு எவரும் அத்தகைய வாய்ப்பை அவர்களுக்குத் தந்ததில்லை. ஒரு தனிநபர் நிறையச் செய்துவிட முடியும் என்றார் ஹெதர்.
பிறகு உரையாற்றிய முனைவர் பங்கஜம் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். இந்தியாவில் முதன்முதல் ஒருநாள் அடையாள வீடடங்கு அறிவிக்கப்பட்டபோது எப்படி எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்; இத்தனை ஒழுங்குடன் எப்படி நடந்தகொண்டனர் என்று வியந்தார். ஆனால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட பிறகு மக்கள் அதன் நெருக்கடியை உணரத்தொடங்கினர். குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மின்சாரம் கூடக் கிடையாது. எப்படி இணையம் மூலம் கற்றுக்கொள்வார்கள். கல்வி என்பது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். உடல் வளர்ப்பது மட்டுமன்று, ஆன்மாவையும் வளர்க்கவேண்டும். தொழில்நுட்பத்தால் அதைச் செய்யமுடியுமா என்று வினவினார். இப்போது இருப்பது கல்வித்திட்டமே அல்ல என்றார். குழந்தைகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். படித்தவர்கள் எல்லாரும் முன்வந்து கிராமத்துக் குழந்தைகள் கல்விகற்க உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இறுதியாகப் பேசிய முனைவர் ஜெனிஃபர் லாட் நிற, இன, வர்க்க பேதங்களைக் குறைக்கப் பணியாற்றும் கிளாஸ் ஏக்ஷன் என்ற அமைப்பை நடத்துகிறார். அன்றைய தினம் அமெரிக்காவிலிருந்து பேசியபோது அவருக்கு அங்கு காலை 4 மணி. 1980களில் முதன்முதலாக இந்தியா வந்து கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு அவர்களால் உள எழுச்சியுற்று, தொடர்ந்து அவர்களது இயக்கத்தோடும் இந்தியாவோடும் தொடர்பிலிருக்கிறார்.
ஜெனிஃபர் லாட் அமெரிக்கா செல்வச்செழிப்புக்குப் பெயர் போனதெனினும் அங்கு கடுமையான வறுமையும் உண்டு என்றார். அமெரிக்கர்களில் 12% பேர் வறுமையில் உள்ளனர் (3.8 கோடி). அவர்களுள் 1.5 கோடிப் பேர் குழந்தைகள். கொரோனா காலத்தில் செல்வர்களிடம் மேலும் செல்வம் சேர்ந்தது. கோடீஸ்வரர்களின் செல்வம் 38% உயரந்தது. மிகப்பெரும் செல்வந்தர்கள் ஐவரது செல்வம் 85% அதிகரித்தது. இனம், வர்க்கம், வீடற்றோர், ஆங்கிலம் பேசாதோர், உடல் குறைபாடுடையோர், சிறப்புக் கல்வி தேவைப்படும் குழந்தைகள், நகரம்/கிராமம், பாலினம் என்று பல பரிமாணங்களில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. கொரோனா இறப்பு விகதம் அமெரிக்க ஆதிக்குடிகளிடமும், கறுப்பினத்தவரிடம் கூடதலாக உள்ளது. ‘சூம் (zoom) பள்ளி’களில் உள்ள அநீதியை அவர் விளக்கினார். விரைவான இணைய இணைப்பு எல்லாருக்கும் இருப்பதில்லை. 5 குழந்தைகள் உள்ள வீடுகளில் பெற்றோரிடம் ஒரு திறன்பேசிதான் இருக்கக்கூடும். அதைப் பகிர்ந்துகொள்வது கடினமானது. இளஞ்சிறார்கள் கணிப்பொறியையே தினமும் 4-5 மணிநேரம் பார்த்துக்கொண்டிருப்பதும், விளையாடாமலும், தனித்திருப்பது அவர்களது சமூக ஊடாட்டங்களைக் குறைத்து அவர்களது சமூகரீதியான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. பள்ளி வகுப்புகளுக்கு மட்டம்போடுதல் இருமடங்காகியுள்ளது. வீடற்ற குழந்தைகள் அதிக இடர்ப்படும் சூழலில் உள்ளனர். கோவிட்டால் வேலைகள் பறிபோதல், வருமானம் குறைதல் ஆகியவற்றால் வீடுகளை இழத்தலும். குடும்பங்கள் சிதறுவதும் அதிகரித்துள்ளது. கோவிட் பாதிப்பு பெண்கள் மத்தியில்தான் அதிகம். பெண்களில் அதிக விகிதம் வேலையை இழக்கின்றனர். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேலைகளில் இருந்து நீங்கவும் செய்கின்றனர் என்று பல பிரச்சனைகளை ஜெனிஃபர் பட்டியலிட்டார். முக்கியமாக, பள்ளிகள் கல்வியோடு சேர்த்து ஏழைக்குழந்தைகளுக்கு உணவும் வழங்கிவந்தன. ஐந்து குழந்தைகளில் ஒருவர் உணவுப்பாதுகாப்பின்றி உள்ளனர். அவர்கள் உணவின்றிப்போகும் அபாயம் உள்ளது. இன்றும் பல பள்ளிகள் வீடுதேடி உணவு வழங்குகின்றன என்றார். ஜெனிஃபர் பல ஆக்கப்பூர்வமான தீர்வுகளையும் முன்வைத்தார். வீட்டிலிருந்து படிப்பதன் சாதகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மெய்நிகர் வகுப்புகளின் போதும் குழந்தைகள் தமக்குள் தனியே பேசிக்கொள்ளவும் விளையாடவும் இடைவேளைகளை வழங்க வேண்டும். ஆசிரியரும் புதிர்களையும் விளையாட்டுகளையும் பயன்படுத்தவேண்டும். அண்டைஅயல் வீட்டுக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து கற்கலாம்; குடும்பங்களே குட்டிப்பள்ளிகளை வீடுகளில் அமைத்திடலாம். பள்ளிகள் சமூகத்தின் பல அங்கங்களோடு இணைக்கப்படுவதை ஒரு முறையான செயல்திட்டமாக்கவேண்டும் என்று பல தீர்வுகளையும் கோடிட்டுக் காட்டினார். எல்லாவகைகளிலும் எல்லாநிலைகளிலும் சமூக அமைப்பிலுள்ள அநீதியையும் ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனைப் பேணுவதே கல்வியின் தலையாய கடமையாக அவர் காண்கிறார்.
பின்னர் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை எல்லா உரைகளையும் தொகுத்து, அனைவருக்குமிடையே ஓர் உரையாடலை ஒருங்கிணைத்தார். அப்போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த ரிச்சர்ட் ரோஸ், கோவிட் எதையும் மாற்றிவிடவில்லை; ஏற்கனவே உள்ள நிலையை நமக்கு மேலும் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கிறது என்றார். டேவிட் வில்லிஸ், இந்த இக்கட்டு எங்கும் போய்விடப் போவதில்லை. இது பருவநிலைச் சீரழிவால் இனிவர இருக்கும் அழிவுகளுக்கு ஓர் முன்னோட்டம்தான் என்றார். பூமிக்குமார் மனிதன் இயற்கையைச் சிதைப்பதால், பெருந்தொற்றுக்களுக்கு இடையே இருந்த கால இடைவெளி குறைந்து வருவதைக் குறிப்பிட்டார். வாசிமலை குடும்பமே ஒரு பள்ளியாகச் செயல்படக்கூடிய சாத்தியத்தைப் பற்றி என்னோடு உரையாடினார். கல்வி எல்லோரது பணியும்தான் என்றார். தத்துவம்தான் அறிவியலை வழிநடத்தவேண்டும் என்று அன்றைய உரையாடலை முடித்துவைத்தார்.
இரண்டாம் நாள் – வளங்குன்றா வேளாண்மை
இரண்டாம் நாள் உரைகள் வளங்குன்றா வேளாண்மையும் மக்களை முன்னிறுத்தும் செயல்திட்டங்களும் என்ற கருப்பொருளில் அமைந்தன.
முதலில் பேசிய பாமயன் சர்வோதய இயக்கத்தோடு நீண்ட நெருங்கிய தொடர்புடையவர். தமிழகத்தின் தலையாய வேளாண் அறிஞர்களில் ஒருவர். இந்தியா வேளாண்மை சார்ந்த சமூகம்; காலச்சூழலில் மாற்றம், மழையளவிலும் வெப்ப அளவிலும் மாற்றங்கள், நீராதாரங்கள் குன்றிவருவது ஆகியன நிகழும் சூழலில் தற்சார்பு வேளாண்மையின் அவசியத்தை வலியுறுத்தினார். நான்கு அடிப்படைகளை முன்வைத்தார். முதலாவதாக, பசுமைப் புரட்சியின் விளைவாக தற்சார்பு அழிக்கப்பட்டது. விதைகளும் உரங்களும் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. இரண்டாவதாக, இந்திய ஒரு ஜனநாயக நாடு. மக்கள் ஒன்றுகூடிக் குரல் கொடுத்தால்தான் அவர்களுக்கான நன்மைகள் கிடைக்கும். ஆனால் உழவர் சமுதாயம் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்க முடியாத சமூகமாக உள்ளது. உதிரிகளாகத் தனிமைப்பட்டு இருக்கிறார்கள். உழவர்கள் போராடினால் அவர்களேதான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முதல் ஐந்தாண்டுத் திட்டத்துக்குப் பிறகான சட்டங்கள் உழவர்களை நிலத்திலிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருக்கின்றன. மூன்றாகவதாக, சந்தைகள் உழவர்களுக்குச் சாதகமாக இல்லை. நான்காவதாக, இவற்றுக்குத் தீர்வாக மரபு சார்ந்த வேளாண்மையை, தாளாண்மைப் பண்ணை என்கிற தற்சார்பு வேளாண்மை முறை அமையும்.
பண்டைத் தமிழர்கள் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்தனர். ஐந்திணைகளை வகுத்தனர். நிலத்தின் தன்மைக்கேற்ப வேளாண்மை முறையும் மாறுபட்டது. குறிஞ்சி நில வேளாண்மை மசானபு புக்கோக்கா சொல்வது போன்ற உழாத வேளாண்மையாக இருந்தது. குறிஞ்சி நிலங்கள் அடுக்குமுறைத் தாவர அமைப்பு கொண்ட அணிநிழல் காடுகளைக் கொண்டவை. அங்கு ஏழு வகைப் பயிர்கள் ஒரே இடத்தில் காணப்படும்; பெய்கின்ற மழையோ அடிக்கின்ற வெயிலோ மண்ணைத் தொடாது. மண்மீது விழுகின்ற இலைகளும் தழைகளும் சேர்ந்துசேர்ந்து மண்ணைப் பஞ்சு போன்று ஆக்கும். மண்வளம் சிறப்பாக இருக்கும். உழத்தேவையில்லை. ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை,’ என்றது மலைபடுகடாம். முல்லை நிலத்தில் கால்நடைகளால் கிடைக்கக்கூடிய கழவுகளை மக்கவைத்து மக்குஉரம் செய்தனர். மருத நிலத்தில் நீர்ப்பாசண முறைகளை அமைத்தனர். கல்லணை போன்ற அணைகளில் ஆற்றுநீரைத் தேக்கினர். 40000 ஏரிகளைத் தமிழ்நாட்டில் அமைத்தனர். 36 வகைக் கலப்பைகளைப் பயன்படுத்தினர். மிக உயர்ந்த வேளாண்மை முறையாக இது இருந்ததால் பேரரசுகள் உருவாகின. நெய்தலில் பழனம் எனப்படும் வேளாண்மை இருந்தது. நெல்லும் மீனும் சேர்ந்திருந்தன. பாமயன் இவற்றைத் தான் குறிப்பிடுவது மரபைத் தூக்கிப்பிடிக்கவோ பழைமையைப் பேசவோ அல்ல என்று தெளிவுபடுத்தினார். நில இயல்புக்கு மாறாகப் பயிர் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. நீர்ப்பற்றாகுறை வரும். ஆழ்துளைக்கிணறுகள் தோண்டி நிலத்தடி நீர் குறைகிறது. இச்சூழலில் நிலத்துக்கேற்ற வேளாண்மை முறை அவசியமாகிறது என்றார். தாளாண்மைப் பண்ணைகளை நல்லதொரு தீர்வாக முன்வைக்கிறார். கூட்டுப் பண்ணைகள் கொண்ட பசுமை/திணை கிராமம் அமைந்தால் பல துறைசார்ந்த விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். ஆண்டுமுழுதும் பண்ணைகள் உயிரோட்டத்துடன் இருக்கும் என்றார்.
தென்காசி அருகில் 110 ஏக்கர் நிலத்தை 103 நண்பர்கள் வாங்கி ஒரு பசுமை கிராமம் அமைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இங்கு நிர்வாகத்தை ஒரு கூட்டமைப்புதான் மேற்கொள்கிறது. மதிப்புக்கூட்டும் சிறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு முதல் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. பண்ணை இயக்கம் ஒன்றை நடத்தி தற்சார்பு வாழ்வியலை நோக்கி நகரவேண்டும். அமைதியும் வளமும் நிறைந்த உலகம் அப்போதுதான் அமையும் என்றார் பாமயன்.
அடுத்த பேசிய ராமசுப்பிரமணியன் சமன்வயா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். அன்றைய தினம் தில்லியில் நடந்துகொண்டிருந்த விவசாயிகள் போராட்டம் 76 நாட்களைத் தொட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். 200 பேருக்கு மேல் இறந்திருந்தார்கள். எனினும் வேறெங்கும் இல்லாதவாறு அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தனர் என்று கூறி அவர்களுக்காக ஒரு சீக்கியப் பிரார்த்தனையுடன் தனது உரையைத் தொடங்கினார். பாமயன் போன்ற வேளாண் அறிஞர்கள் ஏன் நம் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக அமர்த்தப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பினார். உழவர்கள் ஒட்டுவிதைகள் மூலம் அதிக பணம் ஈட்டுவதைவிட, நாட்டு விதைகள் மூலம் அதிக மகிழ்ச்சியோடும் சுதந்திரத்தோடும் இருப்பதையே விரும்பதை விளக்கும் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். கடந்த 15-20 ஆண்டுகளில் மரபான வேளாண்மையைக்குறித்தும் இயற்கை வேளாண்பொருள்களின் நன்மை குறித்தும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இப்பெரும் மாற்றம் அரசாங்கத் திட்டங்களால் வரவில்லை. மக்கள் இயக்கங்களால் ஏற்பட்டுள்ளது என்றார். ராம் மூன்று முக்கியமான பிரச்சனைகளை எழுப்பினார். முதலாவதாக, நம் கல்விமுறையில் நம் மரபில் இருக்கும் மிகப்பரந்த அறிவு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இயற்கை வேளாண்மை குறித்த பாடத்திட்டங்களைக் கொண்டிருப்பதில்லை. நம் மராபார்ந்த அறிவை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரவும், அரசாங்கக் கொள்கைகளில் உள்ளடக்கவும் தவறிவிட்டோம். இன்றும் தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக் கொள்கை இல்லை. இரண்டாவதாக, நாம் இன்னும் காலனிய ஆட்சிமுறையிலிருந்து விடுபடவில்லை. அதிகாரத்தை மையப்படுத்துதல் அதிகரித்துவருகிறது. மூன்றாவதாக, சந்தைகள் மக்களுக்கும் குறிப்பாக உழவர்களுக்கு எதிராக உருவெடுத்துள்ளது. மக்கள் இயக்கங்களுக்கு அவை எதிரானவை. மாதிரி கிராமங்கள் 1952லேயே முயன்றுபார்க்கப்பட்டன. ஆனால் மையப்படுத்தப்பட்ட சந்தையைச் சென்றடைவதில் தோல்வியுற்றன. வட்டார, உள்ளூர் சந்தைகளை உருவாக்கவேண்டும் என்றார். இவ்வாண்டு காந்திய வரலாற்று அறிஞர் தரம்பாலின் நூற்றாண்டு கொண்டாடப்படுவதையும் நினைவுகூர்ந்தார். அவர் எழுத்துகளைத் தொகுத்து dharampal.net என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்து பேசிய பாலசுப்பிரமணியம் முத்துசாமி ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர். டான்சானியா நாட்டில் பணிசெய்துகொண்டிருக்கிறார். அமுல், அரவிந்த் போன்ற நிறுவனங்களை காந்திய முறையில் வர்த்தக ரீதியாகவும் வெற்றிகரமாக நடத்தப்படும் நிறுவனங்களாக முன்வைக்கிறார். வேளாண்மையில் கூட்டுறவு இயக்கத்துக்கான சாத்தியங்களை இந்த உரையில் ஆராய்ந்தார். ஆனந்த பால் கூட்டுறவு வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், திரிபுவன்தாஸ் படேல் ஆகியோரின் ஈடுபாட்டுடன் 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பிறகு வர்கீஸ் குரியனின் தலைமையில் மிகப்பெரிய இயக்கமாகவும் நிறுவனமாகவும் வளர்ந்தது. 22 மாநிலங்களில் 1.25 கோடி பால் உற்பத்தியாளர்கள் பால் கூட்டுறவுத் துறையில் அங்கம் வகிக்கின்றனர். வாடிக்கைகயாளர்கள் கொடுக்கும் விலையில் 70% இந்திய பால் உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது. அமெரிக்காவில் இந்த விகிதம் 30% தான். மிகப்பெரும் கூட்டுறவு நிறுவனமான அமுல் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர்கள் வருமான ஈட்டுகிறது. 35 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுகின்றனர். இது போலவே எண்ணெய் வித்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த காலத்தில், சாம் பிட்ரோடாவின் தலைமையில் இந்நிலையை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய பால்வள வளர்ச்சி வாரியம் இப்பணியிலும் ஈடுபடுத்தப்பட்டது. எண்ணெய் வித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தொடங்கப்பட்டது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கி, தன்னிறைவை அடையும் நோக்க்கதுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஆபரேஷன் கோல்டன் ஃப்ளோ என்று பெயரிட்டார்கள். இந்தச் செயல்பாடுகளின் மையமாக ‘தாரா’ என்னும் பிராண்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தி அதிகரித்தது. இறக்குமதி சரிந்தது. நான்கு ஆண்டுகளில் சமையல் எண்ணெயில் தன்னிறைவடைந்தோம். ஆனால் மீண்டும் 1991க்குப் பிறகு சரிவடைந்தது. நுகர்வோர் நலனுக்காக உற்பத்தியாளர் நலன்கள் பலியிடப்பட்டன. இப்போது சமையல் எண்ணெய்க்கான சந்தை மாபெரும் தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளது. இவர்களது வலிமைக்கு முன்னர் உழவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. குமரப்பா இந்த அதிகாரச் சமநிலையின்மை குறித்துப் பேசியிருக்கிறார். ஒரு வணிகர் அதே அளவு பணம் கொண்ட உழவரை விட அதிக அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். இந்தியாவில் பால் பொருளாதாரம் உணவுத்தானியப் பொருளாதாரத்தை விடப் பெரிதாக உள்ளது. ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியும் பால் உற்பத்தியாளர்களின் உரிமையிலேயே இருக்கிறது. இடைத்தரகர்கள் எவரும் இல்லை. இந்திய வேளாண்மைக்கும் கூட்டுறவு முறையே மிகப் பொருத்தமான வழியாக இருக்க முடியும். பாலோடு சேர்த்து உணவுத்தானியங்களும், மாமிசம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை கூட்டுறவு முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் உழவர்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்றார் பாலசுப்பிரமணியம்.
இறுதியாகப் பேசிய முனைவர் சோபனா நெலாஸ்கோ ஒரு பொருளாதார வல்லுனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இந்தியாவில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒரு சிறுபான்மையினரின் கரங்களில் இருப்பதாகவும், வேளாண்மையைச் சார்ந்திருக்கும் 70 விழுக்காடு மக்களை அவர்கள் ஆலோசிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். இந்நிலையை மாற்ற ஒரு புரட்சிகரமான இயக்கம் தேவைப்படுவதாகச் சொன்னார். வேளாண்மையோடு தொடர்பில்லாதவர்கள் வேளாண்மை குறித்த சட்டங்களை வகுக்கின்றனர். தவறாக நபர்களுக்கு விருதுகளும் மரியாதைகளும் வழங்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு டாஸ்மாக் மூலம் மதுவை வழங்கிக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் முடிவெடுக்கும் இடத்திலிருந்து விலகி இளையவர்களுக்கு வழிவிடவேண்டும். வேளாண்மை மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். எல்லாரும் அடிப்படை ஊதியம் வழங்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் சமூகச் செயல்பாட்டாளாராக மாறி அரசியலில் பங்கெடுக்கவேண்டும் என்று பல்வேறு கருத்துகளை முன்வைத்தார் முனைவர் சோபனா.
பிறகு பேராசிரியர் பழனித்துரை உரையாற்றியவர்களின் கருத்துகளைத் தொகுத்து கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை வேளாண்மைக்குப் பொருந்திவராது. அது சந்தைக்குத்தான் உதவியாக இருக்கும். முன்பு திட்டங்களைச் செயல்படுத்தும்போது ஊழல் இருக்கும். இப்போது நாம் கொள்கையளவிலேயே ஊழலைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாநிலத்துள் பல வட்டாரங்களுக்கும் என்ன மாதிரியான கொள்கைகள் வேண்டுமென்பதைச் சிந்திக்கவேண்டும். சந்தைகள் அரசியல் கட்சிகளைக் கைப்பற்றிவிட்டன. அரசியல் கட்சிகள் மீது தாக்கம் செலுத்துவதன் மூலம்தான் நம்மால் கொள்கை வகுத்தல் மீது தாக்கம் செலுத்தமுடியும். இளைஞர்கள் பலரும் நம்மாழ்வாரின் இயக்கத்தால் இயற்கை வேளாண்மைக்குள் வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்றார்.
மூன்றாம் நாள் – ஜெகந்நாதன் நினைவுச் சிறப்புரை

இறுதி நாளான சர்வோதய தினம் சங்கரன்கோயில் உலக அமைதிக் கோயிலிருந்து வந்திருந்த புத்த பிக்குகளின் தலைமையில் நிகழ்ந்த ஓர் அமைதி நடையுடன் தொடங்கியது.
மூத்த சர்வோதயத் தலைவர் க.மு.நடராஜன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கையிலிருந்து பல எழுச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஜெகந்நாதன் பள்ளிப் பருவத்திலேயே சத்தியாகிரத்தில் ஈடுபட்டவர். பின்னர் கோகுலம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி நடத்தியிருக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் தொடங்க உதவியிருக்கிறார். விவசாய சங்கம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி மாயவரம் அருகே ஒரு சங்கம் தொடங்கக் காரணமாக இருந்தார். அம்பாசமுத்திரம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களிலிருந்தெல்லாம் சங்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்த்தார். நிலம் சார்ந்த பல போராட்டங்களில் ஈடுபட்டார். திருநெல்வேயில் அவர் நடத்திய போராட்டத்துக்கு வந்த ஜே.சி.குமரப்பாவை கதர் சட்டை போட்ட கம்யூனிஸ்டு என்று குறிப்பிட்டு நிலச்சுவாந்தார்கள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுக்குக் கடிதம் எழுதினார்கள். ஜெகந்நாதன் கள்ளங்குடியில் நிலவெளியேற்றத்துக்கெதிரான போராட்டம் நடத்தினார். விளாம்பட்டியில் கோயில் நிலத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். வலிவலம் தேசிகர் 390 ஏக்கர் கோயில் நிலத்தை அனுபவித்து வந்தார் – அதை எதிர்த்துப் போராட்டம்; வடபாதிமங்கலத்தில் கரும்பு ஆலையைச் சேர்ந்த 4000 ஏக்கர் நிலம் சும்மா கிடந்ததை எதிர்த்துப் போராட்டம் என்று பல போராட்டங்களை நடத்தினார். ஊழியரகத்தில் கதர் பயிற்சி, மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் போன்றவை நடைபெற்றன. நடராஜன் 1950ல் பத்தாம் வகுப்பு முடித்திருந்த நிலையில் குமரப்பா தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டதாகக் கூறினார். Agrarian Reform Committee தலைவராக குமரப்பா இருந்தபோது ‘நிலம் உழுபவர்க்குச் சொந்தமாக வேண்டும்,’ என்று அவர் சொன்னது ஜெகந்நாதனுக்குப் பிடித்திருந்தது. தஞ்சாவூர்ச் சிறையிலிருந்தபோது, நிலத்தில் பாடுபடுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்; அப்போதுதான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று அவர் மனதிலே ஒரு தீர்மானம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அவர் பூமிதான இயக்கத்தில் பங்குபெற்றார். காந்திகிராம டிரஸ்ட் அலுவலகத்தின் எதிரில் தான் கிருஷ்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஜி.ராமச்சந்திரன், குமரப்பா, கெய்தான் ஆகியோர் உடனிருந்தனர். கெய்தான் இருவருக்கும் சேர்த்து ஒரு சிட்டம் செய்து அவர்களது கழுத்துகளைச் சுற்றிப் போட்டார். குமரப்பா முதுகில் ஓங்கி அடித்துத் தன் ஆசிகளைத் தந்தார். மதுரைக்கு 25000 பேரைத் திரட்டிக் கொண்டு ஓர் யாத்திரை சென்றனர். தஞ்சாவூரில் 15000 ஏக்கர் நிலத்தை ஹரிஜனக் குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளனர். கீழ்வெண்மணியில் பல கட்சியினர் ஆண்டுவிழாவைக் கொண்டாடினாலும், அங்கிருப்பவர்கள் இவர்கள் பெயரையே சொல்கிறார்கள். அத்தனை பேருக்கும் 1 ஏக்கர் நிலம் வாங்கித்தந்தார்கள். கிருஷ்ணம்மாள் படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்களுக்கும் கூட திருவருட்பா அகவலைக் கற்றுத்தந்துவிடுவார். இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டத்தைப் பெண்களை முன்னிலைப் படுத்தியே நடத்தினர். 20000-25000 பேர் அவர்களாகவே வந்துவிடுவார்கள். சட்டப்பூர்வமான அவர்களது வெற்றி வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. ஜெகந்நாதன் மாணவர்கள் வேலை, விவசாயிகள் வேலை, தொழிலாளர்கள் வேலை, ஆதிவாசிகள் வேலை, பொருளாதார சமத்துவம் சார்ந்த வேலை என்று எப்போதும் வேலை வேலை என்றே இருந்தார். எப்போதும் போராட்டம்தான். செயல்தான். நிர்மாணப்பணிதான். தற்போது கனவில் வந்தால்கூட ஏதேனும் யாத்திரைக்கு அழைக்கிறார் என்று நடராஜன் அவர்கள் பல சுவையான அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்பேராளுமையின் நினைவுநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
அடுத்த பேசியவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவைச் சேர்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி. சமூக மாற்றத்தில் பெண்கள் பங்கு குறித்து அவர் பேசினார். இந்தியா உலகுக்கு வழிகாட்டும். பெண்களே வழிநடத்துவார்கள். பெண்கள் ஒன்று சேர வேண்டும். நாங்கள் அஞ்சமாட்டோம், ஓடமாட்டோம், தாக்கவும் மாட்டோம் என்று எதிர்த்து நிற்குமுடியும். சிப்கோ இயக்கத்தின் போது பெண்கள் மரங்களைக் கட்டிக்கொண்டனர். இப்போது காடுகள் அழிக்கப்படுவதால் உத்தராகண்டில் நிலச்சரிவுகளும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பெண்களே பாதுகாக்க முடியும். சமூக அந்தஸ்தினைப் பெறுவதற்கு அவர்கள் போராடவேண்டும். வாழ்வின் நிலையான விழுமியங்களை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டும் – பயன்படுத்தி எறிந்துவிடும் கொள்கைகளை அல்ல. மரபான அறிதலுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். லாரி பேக்கர் போன்றவர் மரபார்ந்த அறிவினைக் கட்டிடக்கலையில் சிறப்பாகப்பயன்படுத்தியுள்ளனர். பெண்கள் கருணையோடும் புரிந்துணர்வோடும் நடந்துகொள்ளவேண்டும். விடாமுயற்சியோடு இருக்கவேண்டும். இவற்றை கிருஷ்ணம்மாள் அம்மாவிடமிருந்து கற்க வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி பெண்களுக்கான பாதை குறித்து உரையாற்றினார்.
பிறகு கோயமுத்தூர் சாந்தி ஆசிரமத் தலைவர் மருத்துவர் வினு அறம் பேசினார். கோவிட் பெருந்தொற்றின் போது குழந்தைகளிடம் ஒரு சமூக பாதுகாப்பு வலையை ஏற்படுத்துவது என்ற தலைப்பில் உரையாற்றினார். 1948ல் சர்வோதய தினம் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது. இன்றுவரை நாம் ஒன்றுகூடுவதற்கான தேவை இருக்கிறது என்றார். பெருந்தொற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, நாம் தனிமைப்படுத்தப்படும்போது மனித உணர்வுகள் வெளிப்படுகின்றன. இது நாம் விமர்சனங்கள் மட்டுமே செய்வதைத் தவிர்த்து, ஆழ்ந்து சிந்தித்து அசைபோட வேண்டிய தருணம். நவீன இந்தியாவோ நவீன உலகோ இப்படி மொத்தமாக ஸ்தம்பித்ததே இல்லை. பருவநிலை மாற்றம் குறித்துப் பணிசெய்யும் செயல்பாட்டாளர்கள் இப்படியான ஒரு சாத்தியத்தை எப்போதும் முன்வைத்தே இருந்திருக்கிறார்கள். எல்லா மாற்றங்களும் ஒரு நோய்த்தொற்று தோன்றுவதற்கான அறிகுறிகுளைக்கொண்டிருந்தன. நாம் இப்படியான பேரிடரைச் சந்திக்கத் தயாராக இல்லை. வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, செல்வம் பரவியிருப்பதலில் சமமின்மை ஆகியவை நம்மை இத்தகைய பேரிடருக்கு உட்படுத்தப்படும் அபாயத்தைக் கொண்டிருந்தன. நாம் ஒரு சமூக பாதுகாப்பு வலையை உருவாக்கவேண்டும். ஆய்வுசெய்தலில் அதிக நேரமும் செயல்பாட்டில் குறைந்த நேரமும் செலவழிக்காமல் இரண்டையும் சமமாகச் செய்யவேண்டும். சாந்தி ஆசிரமம் இப்பெருந்தொற்றின் போது எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குழந்தைகள், குடும்பங்கள், தனித்திருக்கும் பெண்கள், பிற நோயாளிகள் என்று குறிப்பிட்ட தரப்பினரை முதன்மைப்படுத்தி அணுகியது. சமூகத்தோடு தொடர்ந்த இணைப்பிருந்தது பெரிய சாதகமாக இருந்தது. ஏழைகளுக்கு மிக உயர்தரமான தீர்வுகளை நாம் வழங்க வேண்டும். காந்தியச் சிந்தனைகளை இளைஞர்களுக்கு அவர்கள் ஏற்கும்படியாக எடுத்துச்செல்லவேண்டும். இனிமேலும் இத்தகைய அதிர்ச்சிகள் குறைந்த இடைவெளிகளில் ஏற்படும். அவற்றைச் சந்திக்க நாம் தயாராக வேண்டும் என்று கூறினார் வினு அறம்.
அடுத்ததாக ஜெகந்நாதன் நினைவுச் சிறப்புரையை ஏக்தா பிரிஷத்தின் தலைவர் திரு.பி.வி.ராஜகோபால் வழங்கினார். இன்று வெற்றி என்பது பணத்தைக் கொண்டும் அதிகாரபலத்தைக்கொண்டுமே அளக்கப்படுகிறது. தியாகம், அர்ப்பணிப்பு, உழைப்பு போன்ற விழுமியங்கள் மறைந்து வருகின்றன. பல சொற்கள், உதாரணமாக ஜனநாயகம், அரசியல் போன்ற சொற்கள், மறைந்தும் பொருள் திரிந்தும் வருகின்றன. அச்சொற்களை இளைஞர்களுக்கு நாம் சரியான பொருளில் மறுஅறிமுகம் செய்யவேண்டும். தலைமைப் பண்புகளுக்கான மாதிரிகளை நாம் உருவாக்கவேண்டும். இன்று ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும், துருக்கியிலும், பிரேசிலிலும் காணக்கிடைப்பவை சரியான முன்னுதாரணங்கள் அல்ல. ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் போன்ற உதாரணத் தலைவர்களை நாம் அறிமுகப்படுத்தவேண்டும். இளைஞர்கள் வெறும் பேச்சுகளில் ஆர்வமிழந்துவிட்டார்கள். தலைமை என்றால் என்ன என்பதைச் செயலில் காட்டவேண்டும். அடுத்ததாக, மக்களை அடுத்தக்கட்ட விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வெறும் வெறுப்புப் பேச்சுகளால் குறுகிய குழுக்களான தலைவர்களை மட்டுமே உருவாக்க முடியும். நம் நாட்டில் இப்போது தேசியத் தலைவர்களோ சர்வதேசத் தலைவர்களோ இல்லை. இந்நிலை இந்தியாவை வெகுதூரம் கொண்டு செல்ல முடியாது. சர்வோதய இயக்கம் இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண வேண்டும். இறால் பண்ணைகள் இவ்வளவு பெரும் பிரச்சனை என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. ஜெகந்நாதன் அதை உயர் மட்டத்துக்கு எடுத்துச்சென்றார். உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்தபோது இங்கிலாந்தில்கூட அதைக்கொண்டாடினார்கள். காரணம் உலகெங்கும் பல லட்சம் மக்கள் அதனால் பாதிப்படைந்துவந்தனர். இயற்கை வளங்களையும் செல்வத்தையும் மக்களிடம் சமமாகப் பகிர்ந்தளித்தல் முக்கியமானது. பிரேசில் நாட்டில் வாசகங்களைக் கொண்டு வரலாற்றை எழுதும் முறை உண்டு. அதுபோல இந்தியாவில் இருந்துள்ள வாசகங்களை வைத்துப் பார்த்தால், வாசகங்கள்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய மக்கள் நிலை பெருமளவு மாறவில்லை என்பதை உணரலாம். நிலப்பிரச்சனையைத் தீர்க்க நான்கு வழிகள் உள்ளன. 1) தொலைந்து போன நிலத்தை மீட்பது 2) சரியான பட்டங்கள் பதிவு செய்யப்படாத நிலங்களுக்குப் பதிவு செய்வது. 3) சர்ச்சைக்குரிய நிலங்களில் சச்சரவைத் தீர்ப்பது. 4) நிலம் பகிர்ந்தளிப்பது. 2012ல் 1 லட்சம் மக்கள ஒரு மாதம் நடையாத்திரை சென்று போராடியதால் ஆக்ரா ஒப்பந்தம் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இன்னும் அவை நடைமுறைக்கு வரவில்லை. அடிமட்டத்தில் மக்களோடு உழைப்பது இன்றியமையாதது. அதே வேளையில் கொள்கை உருவாக்கத்திலும் நாம் பங்கு வகிக்கவேண்டும். கோவிட் பெருந்தொற்று வந்தபோது நாம் நமது வளர்ச்சி மாதிரிகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவோம் என்று நம்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. இது நீடிக்கக்கூடியதன்று. பருவநிலை நெருக்கடியால் பத்தாண்டுகளில் உலகையே அழித்துவிடுவோம். எனவே, தொடர்ந்து மக்களுக்கு எழுச்சியூட்டி வரவேண்டும் என்று பி.வி.ராஜகோபால் பல முக்கியமான கருத்துகளை உள்ளடக்கிய சிறப்புரையை வழங்கினார்.
இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் நினைவு சர்வோதய விருதுகள் க.மு.நடராஜன், வினு அறம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து கிராமப் புனரமைப்பிலும் கிராம சபைகளை வலுப்படுத்துவதிலும் ஈடுபட்டிருக்கும் இளைஞரான க.செல்வராஜ் விருதுபெற்றார். மேலும், Spark Academy என்ற நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்தும் நாய்களுக்கான காப்பகம் நடத்தியும் வரும் கே.பி.மாரிக்குமார் என்பவருக்கும் விருதுவழங்கப்பட்டது.
இறுதியில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ‘ஒரு அஞ்சு நிமிஷம் பேசட்டுமா?’ என்று கேட்டு எப்போதும் போல முத்தாய்ப்பான ஒரு சிற்றுரையாற்றினார். ‘நின்னுட்டே பேசறேன். ரொம்ப சீக்கிரமா சொல்லணுமில்ல,’ என்று நின்றவாறே பேசினார். ‘இப்ப எங்கயும் போறதில்லை. வீட்டில படுத்துட்டே இருக்கேன். ஆனா மண்டைல மட்டும் சில காரியங்க ஓடிட்டே இருக்கு. அது என்ன காரியம்னா, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகுது. ஆனா இந்த நாட்டைப் பத்தி நாம நினைக்கும் போது, ஐயா பாடின பாட்டு ஒன்னு:
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலில்லை
உண்ணவோ உணவுக்கும் வழியில்லை
படுக்கவோ பழம்பாய்க்கும் கதியில்லை
பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
எடுக்கவோ துணிவில்லை
என்று ஐயா இராமலிங்கம் பாடினாரு. இன்னிக்கு கோடிக்கணக்கான ஆத்மாக்கள், ஐயோ, சோறில்லையே, கண்ணில்லையே, படுக்க ஒரு பாய்கூட இல்லையே அப்படினு பதறிட்டுக்கிடக்கு. அதை எட்டி யாரும் பார்க்கறதுக்கு ஆளுக இல்ல. நம்ம சர்வோதயக் குடும்பமாவது பார்க்கணும்னு நினைச்சு நான் பண்ணினேன்…’ என்று ஆதங்கத்தோடு கலந்த தன் அனுபவங்களைப் பகிரத் தொடங்கினார். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் சென்று, அதிகாலையில் சந்தித்து, நிலத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்யவும், இலவசமாகப் பதிவு செய்யவும் அனுமதி பெற்றதைக் கூறினார். அவர் கட்டிய வீடுகள் புயலில் அழிந்துவிட்டதால், மீண்டும் வீடுகள் கட்ட நினைக்கிறார். மீண்டும் எல்லாரையும் சென்று சந்தித்து நிதி திரட்டி இப்பணியைத் தொடங்க வேண்டும் என்கிறார். அதற்கு உறுதுணையாக, அவருக்கு ஒரு நண்பரிருப்பதாகவும், அவர் ‘எல்லாம் செயல்கூடும்’ என்று சொல்வதாகவும் கூறினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த லீலா அவர்கள் கூறியது போல், அம்மாவைப் பார்க்குந்தோறும் அவரது பேச்சினைக் கேட்குந்தோறும் ஒவ்வொருக்கும் புதிய உத்வேகம் பிறக்கிறது.