தேங்காய் எண்ணெய் ஆட்டச் சென்றிருந்தோம். எங்கள் ஊரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பினைத்தாண்டிச் செல்வதற்காக முன்பே அங்கிருந்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்போனேன். விடிய விடிய அங்கிருக்கிறார்கள். உணவு, நுங்கு என்று பக்கத்து வீடுகளிலிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு பெண்காவலரும் இருந்தார். இருப்பதிலேயே மூத்தவரிடம் கேட்டேன். சிரித்தபடியே போகச்சொன்னார். சிறிது உரையாடிவிட்டுவந்தேன். பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்களுக்குக் கொரோனா வந்துவிட்டதால், மருத்துவமனை மூடப்பட்டுவிட்டதாகவும், பிரசவம் மட்டும் ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். வீட்டுக்குவந்து உடைத்துக் காயவைத்த தேங்காய்க் கொப்பரையை காரில் ஏற்றிக்கொண்டு சென்றோம்.
செக்குக் கடையில் நல்ல கூட்டம். அனைவரும் முகக்கவசங்களுடன் இருந்தனர். தேங்காய் இறக்கிவைத்தபின் காரை அங்கேயேவிட்டுவிட்டு, வீட்டுரிமையாளரின் மின்கட்டணம் செலுத்த, வங்கியில் பணம் எடுக்க, காய்கறி வாங்க என்று ஒரு நடை சென்றோம். ஒரு திருப்பத்தில், வருகின்ற இருசக்கர வாகனங்களிலெல்லாம் கைகளில் போத்தலும் தூரிகையுமாக இருந்த ஒரு காவலர் நிறுத்தி, பச்சைச் சாயம் பூசிவிட்டார். ஏன் எதற்கு என்ற கேள்விகளெல்லாம் பின்னர்தான் கேட்டார். ‘எங்களுக்கும் கணக்குக் காமிக்கணுமில்ல. யாராவதுவந்து ஏன் சாயம் பூசலன்னு கேட்டா நான்தான பதில்சொல்லணும்?’ என்று ஒரு வண்டியோட்டியிடம் கூறிக்கொண்டிருந்தார்.
வாகனங்கள்மீது ஒரு முறை சாயம் பூசிவிட்டால் சாலையில் ஒரு வாரத்துக்கு அவ்வாகனத்தை ஓட்டமுடியாதாம். அடுத்த வாரம் வேறு நிறச் சாயமாம். எண்ணெய் ஆட்ட வந்த ஒரு வயதானவர் இதற்குப் பயந்துகொண்டு மதியம் இரண்டு மணிக்கும் வீட்டுக்கு உணவுண்ணச் செல்லாமல் வேலைமுடியக் காத்துக்கொண்டே அமர்ந்திருந்தார். ‘எல்லாம் இந்த மைனர்களால வர்ற பிரச்சனை. நேத்து மருந்துவாங்கப் பொள்ளாச்சி போயிருந்தேன். அறுபது எழுபது பைக்ல இந்த மைனர்க அங்கயும் இங்கயும் பறந்துகிட்டிருக்கானுக. அப்புறம் போலீஸ் இப்படி எல்லாத்தையும் தடுக்கமாம என்ன பண்ணுவாங்க,’ என்றார்.
விவசாயப் பணிக்கு வருகிறவர்கள் ஒருமுறை மாட்டிவிட்டால் பிறகு அந்த வண்டியை ஓட்டமுடியாதே என்று கேட்டேன்.
‘ஆமாங்க. பாவம் அதுக்குப் பயந்துட்டே யாரும் வேற கிராமத்துக்கு வேலைக்குப் போக மாட்டேங்கிறாங்க.’
பக்கத்து வளாகத்தில் மும்முரமாகத் தேங்காய் மட்டை உரித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்றார் அவர்.
முந்தைய நாள் எங்கள் ஊர்த் தேங்காய் வியாபாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியூரிலிருந்து யாரும் வர அஞ்சுவதால் ஆள் கிடைக்காமல் வேலை மெதுவாகச் செல்வதாகத்தான் கூறியிருந்தார்.
கடையில் எண்ணெய் ஆட்டுவதற்கு எங்களுக்கு முன் வந்திருந்த இரு இளைஞர்கள் இருநூறு கிலோ கொப்பரை கொண்டுவந்திருந்தார்கள். மருந்திடாத காய்கள் வீட்டுப்பயன்பாட்டுக்கு, மருந்திட்ட காய்கள் தோட்டத்தில் பணிசெய்பவர்களுக்கு என்று பிரித்துவைத்திருந்தனர். அவர்களுக்கு ஆட்டிமுடிக்கவே மணி மூன்றாகிவிடும் போலிருந்தது. மகள் வேறு வீட்டில் மதிய உணவு உண்ணாமல் காத்திருப்பாள். காவல்துறைக் கெடுபிடியும் 1 மணிக்குமேல் அதிகமாக இருக்கும். என் மனைவி அந்த இளைஞர்களிடம் பேசிப் பாதியில் எங்கள் தேங்காயை ஆட்டிக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளவைத்துவிட்டாள். அவர்கள் தயவில் இரண்டு மணிக்கு எங்கள் வேலை முடிந்துவிட்டது. அவர்களிருவரது உணவும் மேலும் ஒரு மணிநேரம் தாமதப்படும்.
காற்றோட்டமில்லாத அறையில் எண்ணெய் ஆட்டிக்கொண்டிருந்தவர் வெயில் தாளாமல் மயக்கம் வருவதாகக் கூறினார். நல்லவேளையாக எங்களிடம் குடுவையில் கொஞ்சம் சூடான (பாலில்லா) தேநீர் இருந்தது. குடித்துவிட்டுத் தெம்பாக வேலைசெய்தார். நித்யாவும் கூடமாட உதவிசெய்தாள். அவர் கோவையில் ஒரு பல்மருத்துவரிடம் தோட்டவேலை செய்திருக்கிறாராம். நித்யாவும் பல்மருத்துவர் என்றறிந்தவுடன் கூடுதல் பிரியத்துடன் வேலை செய்தார். கொப்பரையைச் சக்கையாகப் பிழிந்து நிறைய எண்ணெய் எடுத்தார். புண்ணாக்கை அவர்களுக்கே கொடுத்துவிட்டதால் ஆட்டுக்கூலி கிடையாது. வீடு திரும்பினோம். இனி இரண்டு மூன்று நாட்கள் எண்ணெயை இளம்வெயிலில் காயவைத்து, வடிகட்டினால் முடிந்தது. மாலையில் மழைமேகங்கள் கூடின. மின்னலும் இடியுமாக இருந்தது. ஆனால் கருமுகில்கள் தென்மேற்காய் நகர்ந்தபோது மழை வரப்போவதில்லை என்று தெரிந்தது. எப்படியோ மழைக்குமுன் ஒருவழியாக தேங்காயெண்ணெய் வேலை முடிந்தது. ஆனால், இப்பட்டத்தில் சோளம் கடலை என்று விதைத்தவர்கள் எல்லாருக்கும் பெரும் இழப்புதான். முதல் ஈரத்தில் உழவு ஓட்ட வண்டிகிடைத்தவர்கள் மட்டும் ஓரளவு பிழைத்துக்கொள்வார்கள்.
இந்த முறை தேங்காய்க் கொப்பரை காயவைக்கும்போது எப்போதுமில்லாமல் ஒரு புதிய பிரச்சனை. தவளைகள். இவ்வாண்டு ஏராளமான தவளைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஆங்காங்கு மூத்திரமும் மலமும் கழித்துவிடுகின்றன. ஆரம்பத்தில் நான் மகளிடம் அவளது நாய்கள்தாம் அசுத்தப்படுத்துகின்றன என்று சண்டைப்போட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அவள்தான் தவளைகள் அவ்வாறு செய்வதைக் கண்டுபிடித்தாள். அவளுக்குப் பிடிக்காத விலங்கினமாகத் தவளைகள் ஆகிவிட்டன. இரவு குளிக்கப்போனால் குறைந்தது பத்துத் தவளைகள் குளியலறையில் இருக்கின்றன. விரட்டுவதும் கடினம். சுவரோடு அப்பிக்கொள்கின்றன. மிகவும் விரட்டி அவை குதித்தால், இவளும் குதிக்கிறாள். அப்படியே ஒரு மூலையில் இருக்கவிட்டுக் குளித்துவரவேண்டியதுதான். வெயிலில் காயப் பரப்பிய தேங்காய்களை மழையில்லாதபோதும் இரவில் சுருட்டி வைக்கவேண்டியதாயிற்று. இல்லையெனில் தேங்காயெண்ணையோடு தவளை மூத்திரமும் கலந்தே இருக்கும் அபாயம் இருந்தது. நான்கு நாட்களும் காலையில் மறுபடியும் (எப்போதும்போல்) கடைபரப்பி, ஒவ்வொரு தேங்காய்த்துண்டாய் வெண்புறம் மேல்நோக்கித் திருப்பிவைக்கவேண்டியிருந்தது. பகலில் அணில்கள், நாய்கள், காக்கைகள், தவிட்டுக்குருவிகள் ஆகியவற்றிடமிருந்து காக்கவேண்டும். உச்சிக்குப்பின் வெயிலே பெருமளவு அந்த வேலையைச் செய்துகொண்டது.