கிரிக்கெட் பற்றிய காவியம்

செப்ரெம்பர் 2, 2008

C.L.R. James எழுதிய Beyond the Boundary படிக்க நேர்ந்தது. விளையாட்டினைக் குறித்து இவ்வளவு அழகாக, ஆழமாக எழுத முடியுமா என்ற வியப்பு எழுந்தது. ஏனோ, தமிழில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுவதில்லை. இந்திய ஆங்கில இதழ் எழுத்தாளர்களில்  ராமச்சந்திர குகா, நிர்மல் சேகர், ஆர்.மோகன், ப்ரேம் பணிக்கர் போன்றவர்களின் எழுத்துகளைப் பெரிதும் சுவைத்திருக்கிறேன். தமிழில் இவர்களுக்கு இணையான பெயர் இதுவரை இல்லை.

விளையாட்டுகளைக் கண்டு களிப்பதில் நமக்கு இருக்கிற ஆர்வம் ஏன் விளையாட்டு விமர்சன எழுத்தில் இல்லை? ஜேம்ஸின் இந்தப் பழைய புத்தகம் என்னுள் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. விளையாட்டை ஒரு கலையாக – ஓவியம், நாடகம், இசைக்கு இணையான கலையாக, நிறுவுகிறார் ஜேம்ஸ். அத்தோடு நிற்கவில்லை. கிரிக்கெட், இனவெறி, மனித உணர்வுகள், கலாச்சாரம், இலக்கியம் இவற்றிற்கெல்லாம் உள்ள நுண்ணிய இணைப்புகளைக் கண்டறிந்து வெளிச்சம் போடுகிறார்.

விளையாட்டை நாம் வெறும் விளையாட்டாக மட்டும் பார்ப்பதால் நம்மிடம் விளையாட்டு இலக்கியம் இல்லை; அதில் இழையோடுகிற மற்ற undercurrents நம் கண்ணில் படுவதில்லை; நாடகத்தை விடவும் விளையாட்டால் வாழ்க்கையை அதிக துல்லியமாய், நாம் எதிர்பாராத விதங்களில், சித்தரிக்க முடியும் என்பதை நாம் உணர்வதில்லை. விளையாட்டு வெற்றிகளும் அதனால் தான் குறைவோ? இத்தனை நாட்களில் ஒரே ஒரு அபிநவ் பிந்திரா. ஆனால் விளையாட்டு ரசனை, ஏன், வெறி கூட நம்முள் உண்டு. தமிழகத்தற்கென்று தனி விளையாட்டுக் கலாச்சாரம் உண்டோ இல்லையோ, தனி விளையாட்டு ரசனைக் கலாச்சாரம் உண்டு. சில ஆண்டுகளுக்குமுன், டெண்டுல்கர் தன்னுடைய முதுகு வலிக்கும், பாக்கிஸ்தானுக்கும் எதிராகத், தனியாய், ஓர் அசாத்தியப் போராட்டம் நடத்தி, இறுதியில் தோல்வியைத் தழுவிய பின் பாக்கிஸ்தான் அணிக்குக் கிடைத்த கரவொலி, மரியாதை, இந்தியாவில் வேறு எங்கும் நிகழ வாய்ப்பில்லை. இது – விளையாட்டு ரசனையில் மட்டுமல்ல – நமக்கென உள்ள தனி விருந்தோமல் மரபு.  விளையாட்டில் வள்ளுவன் தாக்கம். இதை இன்னும் ஆழமாய் அலச வேண்டும்.

விளையாட்டிற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்தால், இன்னும் நிறைய விளையாட்டு வெற்றிகளை நாம் குவிக்க முடியும். வாழ்க்கையை வேறு விதங்களில் அணுகிப் பழக முடியும்.