பயிலகம்

நவம்பர் 20, 2018

(முகநூலில் செப்டெம்பர் 9ம் தேதி எழுதிய பதிவு)

எங்கள் பயிலகத்திற்கு ஒரு புதிய இடம் கிடைத்துள்ளது. தற்போது ஜப்பானில் வசித்துவரும் அற்புதமான தம்பதியினரான கிருஷ்ணக்குமார்-காயத்ரி தங்கள் நிலத்திலுள்ள வீட்டையும் அறைகளையும் பயிலகம் நடத்த அளித்துள்ளனர். அவர்களது நிலம் எங்களுடையதைக் காட்டிலும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இதுவரை அரச மரத்தடியில், விநாயகர் கோயிலருகில், பயலிகம் நடத்தி வந்தோம். அதற்கென ஒரு தனித்த எழில் இருக்கத்தான்செய்தது. ஆனால், சாதிப் பிரச்சனைகள், மழை, மற்றும் பிற சிக்கல்களும் இருந்தன.

இப்புதிய இடம் குழந்தைகள் மேலும் பல செயல்கள் செய்வதற்கு வழிவகுக்கக்கூடும். பிற நண்பர்கள் பிற வழிகளில் உதவியுள்ளனர். புதிய சவால்களும் உள்ளன…அவற்றையும் சந்தித்துத்தான் பார்ப்போம். ஆனால், இப்போது நாங்கள் தனித்துச் செயல்படவில்லை என்பதே பெரும் உற்சாகமாகத்தான் உள்ளது.


ராசு

நவம்பர் 20, 2018

(என் மனைவி நித்யா செப்டெம்பர் 6ம் தேதி முகநூலில் எழுதியது)

மதுரா
எங்கள் வீடு உள்ள தோட்டத்தில் இருக்கும் நாட்டு மாடுக்கு மகிழ் வைத்த பெயர் “மதுரா”. ” வாணி”யும், “நிலா” வும் காலேஜ் மாடுகள். போன வாரத்திலிருந்து எப்போ மதுரா ஈனுவால் என்று எல்லோரும் காத்துக்கொண்டு இருந்தோம், குறிப்பாக மகிழ்.

“அம்மா இந்த humansக்கு தான் labour ward,அது இதுனு… அன்னிக்கு விடமாட்டேங்கிறாங்க. ஆனா மதுரா ஈனும் போது, நான் பக்கத்திலே இருந்து குட்டி எப்படி வருதுனு பார்க்கப் போகிறேன். யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க இல்ல அம்மா” என்றாள்.

போன வார இறுதில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல ஊருக்கு கிளம்பும்போது, ” அம்மா இந்த வாரம் எனக்கு ஊருக்கு வர மனசே இல்லை. இங்கையே பாட்டு class இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! நம்ம ஊருக்கு போயிட்டு வருவதற்குள்ள மதுரா கன்னு போட்டுவிடுவாள். எனக்கு இங்கு இருக்கனும்” னாள். சமாதானம் சொல்லி அழைத்து சென்றோம். தோட்டத்து உரிமையாளர்களை அவள் பாட்டி, தாத்தா என்று அழைப்பாள், ஊருக்குப் போகும் முன்பு, பாட்டியிடம் “கன்னு போட்டுச்சுனா போன் பண்ணி சொல்லுங்கனு” சொல்லிவிட்டு வந்தாள்.

நான், ஐய், நமக்கு இந்த வாரம் சுவையான நாட்டு மாட்டு சீம்( சீப்பம்) பால் கிடைக்கும் என்ற குஷியோடு இருந்தேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பெருமழையில் வீழ்தருவே

ஜூலை 12, 2018

நாடெல்லாம் சுற்றியலைந்துவிட்டு, இவ்வாரம்தான் எங்கள் கிராமத்துக்குப் பெருமழை வந்துசேர்ந்தது. வந்தவுடன் விரிந்து பரந்த ஒரு புளியமரம் விழுந்துவிட்டது. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தது அம்மரம்.

மரம் விழும் போது கோவையில் இருந்தோம். அடுத்த நாள்தான் ஊருக்குச் சென்றேன்.

மரம் விழுந்த அதே நாள், எங்கள் பயிலகத்துக்கு வரும் 9 வயதுச் சிறுவன் இளங்கோவின் அம்மாவும் இறந்துவிட்டார். அவனைத்தான் முதலில் பார்க்கச் சென்றேன். வழியிலேயே கண்ணில் பட்டான். அவனது 4 வயது தங்கையுடனும் வேறு இரு குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்தான்.

இளங்கோ எங்கள் பயிலகத்துக்கு வரும் மாணவர்களில் மிகவும் கட்டுக்கடங்காதவன். எந்த வேலை சொன்னாலும், செய்யாமலிருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்துவிடுவான். மனது வைக்கும்போது, எதைச் சொல்லிக்கொடுத்தாலும் எளிதில் கற்றுக்கொள்வான். நல்ல புஷ்டியாக இருப்பான். எந்த உணவானாலும் அலாதியான அடக்கமுடியாத ஆவலுடன் உண்பான்.

அவனது தங்கையைச் சில சமயம் அழைத்துவருவான். மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்வான்.

ஒரு முறை அவனது ஆசிரியர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருக்கிறார். அதைப் பற்றி விசாரிக்க, அவனது பெற்றோரைப் பள்ளிக்குச் சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்த அவனது வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதுதான் அவன் அம்மாவுடன் பேசியிருக்கிறேன்.

‘என்னாச்சு இளங்கோ? உங்க வீட்டுக்குத்தான் வந்தேன். வா போகலாம்,’ என்றேன்.

‘அண்ணா, இருங்கண்ணா வந்தர்றேன். தாத்தா காசு குடுத்தாரு. கடைக்குப் போயிட்டிருக்கேன்,’ என்று அருகிலிருந்த கடைக்குச் சென்று குழந்தைகள் எல்லாருக்கும் மிட்டாய் வாங்கி வந்தான்.

அவனது அப்பா வீட்டிலிருந்தார். எனக்கு நாற்காலி போட்டுவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். இளங்கோவின் அம்மாவுக்கு இரண்டு மாதமாகவே உடம்பு சரியில்லை; காச நோய் வந்து, கழுத்தில் நீர்கோர்த்து, அது கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று ஒருவகையாகப் புரிந்து கொண்டேன்.

 

எங்கள் நாய் காரியைக் காணவில்லை என்று கடந்த இரு வாரங்களாய்த் தேடிக்கொண்டிருந்தோம். இளங்கோவும் அவன் நண்பர்களும்தான் சாலையில் வாகனம் அடித்து மடிந்து கிடந்த ஒரு கறுப்பு நாயைக் காண்பித்தனர். காரி என்றுதான் நான் நினைத்தேன். மகிழ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். ‘காரி இத்தாச்சோடு இருக்குமாப்பா? அடியில இத்தனை வெள்ளையும் காரிகிட்டக் கிடையாது. வேறெங்காவது போயிருக்கும், திரும்பி வந்துரும்.’

மறுபடி இளங்கோவைச் சந்தித்த போதும் காரியைப் பார்த்தானா என்று கேட்டேன்.
‘ஆமாங்கண்ணா.’
‘எங்க?’
‘அந்தப் பீக்குழில தான். அது காரி தாங்கண்ணா,’ என்று அப்போதும் உறுதியாகக் கூறினான்.

 

‘போன வாரம் கூட இளங்கோவ தினமும் பார்த்தோமே. அவன் ஒன்னுமே சொல்லலையே. என்ன ஏதுன்னாவது பார்த்திருக்கலாம்,’ என்று அவன் அப்பாவிடம் அங்கலாய்ப்பாகக் கூறினேன்.

‘அவனுக்கே அம்மாவுக்கு இவ்வளவு முடியலைனு தெரியாதுங்க. இப்ப அவந்தான் காரியமெல்லாம் பண்ணினான். இவனிருக்கும் போது நான் எப்படி பண்ணமுடியும்? இந்தப் புள்ளைக்குத்தான் எப்படிப் புரியவைக்கிறதுன்னு தெரியலங்க. அம்மாவை ஆஸ்பித்திரிக்குக் கூப்பிட்டுப் போயிருக்காங்க, மருந்து கொடுத்திட்டிருங்ககாங்கனுதான் சொல்லிட்டிருக்கேன்,’ என்றார் இளங்கோவின் அப்பா.

‘அண்ணா, இன்னிக்கு ட்யூசன் இருக்கா,’ என்றாள் அவன் தங்கை, மழலை தீராக் குரலில்.
‘இல்லம்மா, மழையா இருக்கு. அடுத்த வாரம் வைச்சுக்கலாம். நீயும் வா, சரியா.’

இளங்கோ கையிலிருந்த சீப்பால் கீழே கிடந்த நாவல் பழக் கொட்டைகளை நோண்டிக்கொண்டிருந்தான். ‘சும்மா இருக்க மாட்டியா,’ என்று அவன் தாத்தா அதட்டினார்.
‘டேய் இளங்கோ, பெரிம்மாட்டப் போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா’ என்று அவன் அப்பா கூறியதும்,
‘இல்லை பரவால்ல, வேண்டாங்க,’ என்று எப்போதும் போல் சம்பிரதாயமாக மறுத்தேன்.

சற்று தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவர், என்னை அங்கு தேநீர் குடிக்கச் சொல்வது சரியல்ல என்று சைகை காண்பிப்பது தெரிந்தது. மறுத்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

‘ஆஸ்பித்திரில இருந்து வந்தவுடனேயே எடுத்துட்டோம்ங்க. உடம்பு ஒரே கொதியா இருந்திச்சு. நல்ல வேளையா நேத்து அந்த மரம் நாங்க புதைச்சுட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் கீழே விழுந்துச்சு. இல்லைனா வண்டிய ஊருக்குள்ளதான் விட்டு எடுத்துட்டுப் போயிருக்கணும். இதுவரைக்கு யாரையும் நாங்க ஊருக்குள்ள கொண்டு போனதில்லை. பெரிய பிரச்சனையாப் போயிருக்கும்.’

—-

வேரோடு பெயர்ந்து சாய்ந்து கிடந்த மரத்தின் முன்னால் நிற்கும்போது, நெருங்கிய உறவுக்காரர் வீழ்ந்துகிடக்கும் சோகம் அப்பிக்கொண்டது. இளங்கோவின் வீட்டிலிருந்த போது எழுந்த அதே உணர்வு. காரியின் இன்மையில் எழும் அதே வெறுமை.

மரத்தின் அருகில் குடியிருக்கும் பார்வதி, ‘மரம் விழுந்த சத்தமே கேட்கல. அவ்வளவு மெதுவா சாய்ஞ்சுது,’ என்றார்.

பார்வதியின் வீட்டு மாடுகள் எல்லாம் அம்மரத்தடியில்தான் கொட்டகை அமைத்துக் கட்டிவைத்திருப்பார்கள். கொட்டகை மரத்துக்கு வடமேற்காக உள்ளது. அவர்களது வீடும் மரத்துக்கு வடக்கே மிக அருகில் உள்ளது. மரத்தின் தென்புறம் உயரமான கைபேசி கோபுரம் ஒன்று உள்ளது.

மரம் கிழக்கு நோக்கிச் சாலையின் மீது சாய்ந்திருந்தது. சாலையைத் தாண்டியுள்ள வீட்டின் சுற்றுச்சுவரைக்கூடத் தொடாமல், யாருக்கும் பாதிப்பில்லாமல் விழுந்துகிடந்தது. சில மின்கம்பிகள் மட்டுமே அறுந்துபோயிருந்தன. சாலையை மறித்த கிளைகளை விரைவிலேயே வெட்டி அகற்றிவிட்டனர்.

மீதி மரம் மணியகாரரால் ஏலம் விடப்படக் காத்துக்கிடக்கிறது. பல ஆயிரங்கள் பெறும்.

அந்த பிரம்மாண்ட மரத்தின் இன்னும் வாடிப்போகாத இலைகளில் பசுமை கசிந்துகொண்டிருந்தது. மழை மீண்டும் தூறத்தொடங்கியது. சிறது நேரம் மௌனமாக நின்றுவிட்டு நகர்ந்தேன்.


மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018


மருத்துவமனையில்

ஜனவரி 6, 2018

சென்ற மாதம் எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் ஏதோ பிரச்சனை, கோவை அரசு மருத்துவமனையில் ‘ஆப்பரேசன்’ ஒன்று நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். அவர் பண்ணையம் செய்யும் தோட்டம் எங்கள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில்தான் உள்ளது. அவர்களுக்கு ஒரே மகள் – கணவனையிழந்தவர். 10,11,12வது படிக்கும் மூன்று பேத்திகள்.

அறுவைசிகிச்சைக்கு முந்தைய நாள் மாலை அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

அவர்களது தோட்டத்து உரிமையாளரின் தந்தை வந்திருந்ததாகவும், அவர்களிடம் பணம் தந்துசென்றதாகவும் சொன்னார்கள்.

‘பத்தாயிரம் செலவாயிருக்குங்க’

‘இங்க என்ன செலவு?’

‘காசு கொடுத்தாத்தான் நமக்கு ஓரளவுக்கு நல்ல பெட் கெடைக்கும். இல்லைனா, அப்படியே ஒரு ஓரத்துல தூக்கிப் போட்டுருவாங்க.’

‘…’

‘தனியார் ஆஸ்பித்திரில பண்ணியிருந்தா, ஒன்றரை லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஒன்றரை லட்சத்துக்குப் பத்தாயிரம் பரவாயில்லைதானுங்க? அதெல்லாம் கணக்குப் பார்க்காம காசு கொடுத்துத்தான் ஆகணும்ங்க’

நர்ஸிடம் கேட்டு கேஸ் ஷீட் பார்த்த்தில், அவருக்கு இன்று cystoscopy செய்ய இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி நான் புரிந்துகொண்டவரை, இது மேலும் என்ன பிரச்சனை என்று ஆய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; சில கருவிகளைக்கொண்டு சிறய கட்டிகளை நீக்கவும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு என்ன நோக்கத்தில் செய்கிறார்கள் என்பது அப்போது தெளிவாகத்தெரியவில்லை.

அடுத்த நாள் அந்தப் பெரியவரின் மனைவி அழைத்திருந்தார். பெரியவரோடு அவர் மட்டுமே தனியாக இருந்தார். ஒரு வாரமாக, குளிர்ந்த தரையில் துணிவிரித்துப் படுத்திருந்ததில் அவருக்கும் சளி. பொதுவாகவே அவரது குரலில் ஒரு நடுக்கம் இருக்கும். அப்போது தொலைபேசியில் அவரது குரல் நடுக்கம் அதிகமாகத் தெரிந்தது.

‘ஐயாவுக்கு இன்னிக்கு ஆப்பரேசன் செஞ்சாச்சுங்க.’

‘வார்டுக்கு வந்துட்டாருங்களா? எப்படி இருக்காரு?’

‘நல்லா இருக்காருங்க. ட்ரிப்ஸ் எறக்கிட்டிருக்காங்க.’

‘டாக்டர் என்ன சென்னாருங்க?’

‘டாக்டர் கிட்ட நாமெல்லாம் கேக்க முடியாதுங்க.’

‘இல்ல, ஐயாவுக்கு இன்னிக்கு செஞ்ச சிகிச்சை, இன்னியும் ஏதாவது பிரச்சனையிருக்கான்னு தெரிஞ்சக்கிறதுக்காவுந்தான். அதான் ஏதாவது சொன்னாங்களான்னு கேட்டேன்.’

‘டாக்டரெல்லாம் நம்ம கிட்ட பேச மாட்டாருங்க. நர்ஸ்கிட்ட எழுதிக்கொடுத்துட்டுப் போயிருவாங்க.’

‘நர்ஸ்கிட்ட கேட்டீங்களா?’

‘நர்ஸ் எல்லாம் நம்ம கிட்ட எதுவும் சொல்ல மாட்டாங்க.’

‘சரிங்க. நான் அங்க வர்றப்பப் பார்த்துக் கேட்கிறேங்க. உங்களுக்கு ஏதாவது தேவைப்படுதுங்களா?’

‘இல்ல, ஒண்ணும் வேண்டாம் தம்பி.’

பிறகு நானும், நித்யாவும் அடுத்த நாளும் மருத்துவமனை சென்று அவர்களைப் பார்த்தோம்.
‘எப்படியிருக்கு, என்ன பிரச்சனைன்னு டாக்டரைக் கேட்கலாமில்லைங்க? கேட்டா, அவங்க கண்டிப்பா சொல்லுவாங்க.’
‘இல்லீங்க. அப்படியெல்லாம் கேட்க முடியாதுங்க. நம்மள வெளிய அனுப்பிச்சுருவாங்க.’

நாங்கள் மருத்துவரைக் காணச் சென்ற போது, ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நித்யா தானும் மருத்துவர் என்றதும் உடனே உள்ளே அனுப்பினார்கள். மருத்துவரும் அவளை அமர வைத்துப் பேசினார். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்துவிளக்கினார். சிறுநீர்ப்பைக் கட்டியின் தன்மை பற்றித் தெரிந்துகொள்வதற்காக cystoscopyயும், TURBTம் செய்திருப்பதாகவும், புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் வரப் பத்து நாட்கள் ஆகுமென்றும் சொன்னார். நான்கு நாட்களில் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஒரு வாரம் கழித்து வரலாம் என்றார்.

திரும்பும் போது, ஒரு வார்ட்டில் மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வந்திருந்தார்கள். துணைக்கு இருப்பவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
’28 நாளா ஆஸ்பித்திரில இருந்தோம்க. ஆப்பிரேசனெல்லாம் பண்ணினாங்க. ஆனா என்ன பிரச்சனைனு யாரும் இதுவரைக்கும் சொல்லல,’ என்றார் எங்களுக்கு வழிசொல்லி அனுப்பியவர்.

பெரியவரிடம் நாங்கள் புற்றுநோய் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆய்வு முடிவுகள் வரட்டும் என்றிருந்தோம். அப்போது செய்யப்பட்டது சிகிச்சை அல்ல என்பதை மட்டும் விளக்கினோம். ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு எங்கள் பணிகளுக்குத் திரும்பினோம்.

அதன்பிறகு அவ்வார இறுதியில் அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். இரண்டு வாரங்கள் கழித்து மறுபடி வரச்சொல்லியிருப்பதாகத் தெரிவித்தனர். அவர்கள் மீண்டும் சென்றபோது ஆய்வு முடிவுகள் வரவில்லை என்று கூறிவிட்டார்கள். பாரசெட்டமால் மாத்திரைகளும் விட்டமின் மாத்திரைகளும் தந்திருந்தார்கள். பெரியவர் வலி தாங்க முடியவில்லை என்று அழுதார். அதற்குள்ளாகப் பாதியாக இளைத்திருந்தார்.

மறுவாரம் சென்றபோதும், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது விளக்கப்படவே இல்லை. ஆனால், வேறு மருத்துவப் பிரிவுக்கு அவரை மாற்றியிருந்தார்கள். அவர்கள் வேறு சில ஆய்வுகள் எழுதிக்கொடுத்திருந்தார்கள். ஆனால், எடுத்து முடிக்கும் முன்னர் அந்த லேப்கள் மூடப்பட்டுவிட்டன. மீண்டும் அதற்காகக் கோவைக்குப் பயணம் செய்யவேண்டியிருந்தது. புதிதாக மாற்றப்பட்ட துறையில், அவர்கள் ஆய்வுக்காகக் கொடுத்த தாளினைப் பார்த்தோம். அது புற்றுநோய்த் துறை என்பது புரிந்தது. அந்தப் பெரியவரின் பேத்தி அரசுப் பள்ளியில் 12வது படிக்கிறாள் – அவளும் அந்தத் தாளைப் பார்த்துவிட்டு, ‘கான்சர் வார்டுனு போட்டிருக்கு. தாத்தாவுக்கு கான்சரா பாட்டி’ என்று கேட்டிருக்கிறாள்.

இப்படியாக இவர்கள் மேலும் மூன்று முறை கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டியிருந்தது. 45 கிலோமீட்டர். பேருந்தில் சென்றால் 3 மணிநேரத்திற்கு மேல் ஆகும். 3 பேருந்துகள் மாறவேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும், பக்கத்துத் தோட்டத்திலிருந்த காரை இரவல் வாங்கி, ஒரு ஓட்டுனர் வைத்து, பெட்ரோல் போட்டுக்கொண்டு சென்றார்கள். ஒருநாளைக்கு 3000 ரூபாய்க்கு மேல் செலவு. கடைசி முறை ஆட்டோவில் சென்றிருக்கிறார்கள். ஆட்டோவின் குலுங்கலில், பெரியவருக்குத் தாங்கவொண்ணாப் பெருவலி ஏற்பட்டதாகக் கூறினார்கள்.

தெரிந்த ஒருவர் மருத்துவமனையில் அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நபரை அறிமுகப்படுத்தியிருந்தார். அவர்தான் இவர்களைப் போகவேண்டிய இடங்களுக்கு அழைத்துச்செல்வார். அரசுமருத்துவமனையில் வேலைபார்த்து, ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது இடைத்தரகராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவருக்கு 500-1000 கொடுக்கவேண்டியிருந்ததாம். அவரில்லாமல், இவர்களுக்கு எங்கு செல்வது, யாரைப் பார்ப்பது என்பதிலெல்லாம் பெரும் தயக்கம். மலைப்பு.

நாங்கள் கோவை செல்லும் போதெல்லாம், எங்களோடு வருமாறு அழைத்தோம். ஆனால், அதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நாங்கள் அவர்களை விட்டுவிட்டு கோவையில் எங்கள் வேலைகளுக்குச் சென்றுவிடுவோம், உடனிருந்து அவர்களுக்கு உதவ இயலாது, அன்றே திரும்பவேண்டியிருந்தால் எங்களால் திரும்ப வரமுடியாது என்று அவர்களுக்கு அச்சம். அதில் உண்மையும் இருந்தது. அந்த ஓட்டுனர், அவர்களோடே இருந்து முழுமையாக உதவக்கூடியவர். வேறொருவரைச் சார்ந்திருக்கக்கூடாது என்ற உணர்வும் அவர்களுக்கு இருந்தது. பிற பணிகளை விட்டுவிட்டு, அவர்களோடு முழுமையாக இருந்து உதவும் அர்ப்பணிப்பு எங்களிடமும் இல்லை.

எப்படியோ, அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு அவர்களுக்குப் பல்லாயிரம் செலவாகியிருக்கிறது. பல நாட்கள் அலைந்தும் நோய் பற்றிய முழுமையான தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தேவையான ஆய்வுகளுக்கு எழுதித்தரப்பட்டதே தவிர, சிகச்சை பற்றி எதுவும் அவர்கள் புரிந்துகொள்ளும்படி யாரும் அவர்களிடம் பேசவே இல்லை.

இறுதியில் அவர்களிடம் ஓர் ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது. அதை நாங்கள் பார்த்தோம். புற்றுநோய் தீவரமடைந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
மேலும் சில ரத்தப் பரிசோதனைகளுக்காக ரத்தம் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

‘நாங்க மறுபடி போகப்போறதில்லை. இப்படியே இருந்திடலாம்னு இருக்கோம்,’ பாட்டி தனது நடுங்கும் குரலில் மிகவும் உறுதியாகக் கூறினார். தாத்தாவும் ஆமோதித்தார்.

ஜாதகம் பார்த்த சோதிடரும், பக்கத்து கிராமத்தில் ஒரு மருத்துவரும் அதையே சொன்னார்களாம்.

பணம் கூடப் பெரிய பொருட்டல்ல. அவர்களைப் பணியிலமர்த்தியிருப்பவர்கள் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால், அந்த அலைச்சலும், பிறரைச் சார்ந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தமும், மருத்துவமனைகளில் அவர்கள் சந்திக்கின்ற உதாசீனமும் அவர்களை நிராதரவாக உணரச்செய்துவிட்டது. நடைமுறையில் நல்ல முடிவாகவும் எனக்குத் தோன்றியது.

ஆங்கில மருத்துவத்தில் உள்ள பிற சாத்தியங்கள், மாற்று சிகிச்சை முறைகள் என்று நிறையப் பேசினோம். இனிமேல் ஓட்டுனர் அமர்த்தி வாகனத்தில் தனியாக வேறு ஊர்களுக்குச் செல்வதோ, நீண்ட நாட்கள் தங்கியிருப்பதோ சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டிருந்தனர். அந்த மூத்த தம்பதியினர், எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தயாராகிவிட்டனர்.

எனக்கு சுஜாதாவின் நகரம் சிறுகதை நினைவுக்கு வந்தது. நாற்பது வருடங்களில் சாலைகளும் மருத்துவ வசதிகளும் எத்தனையோ மாறிவிட்டன. ஆனால், எதுவும் மாறவில்லை.

———————————

(Update: இவ்வாரம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோய் மருத்துவத்துக்கான வசதிகள் அங்கு இல்லாத போதும், ‘ஒவ்வொரு முறையும் கோவைக்குப் போகமுடியாது. என்னுடைய வலியையேனும் நிறுத்துங்கள்’ என்று பிடிவாதமாகக்கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக அவரது மகள் சொன்னார்.)


சுழன்றாடு மத்தே

நவம்பர் 26, 2017

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வர்தா சென்றிருந்தபோது இரண்டு பெட்டிச் சர்க்காக்களை (ராட்டை) வாங்கி வந்திருந்தோம். நூற்க கற்றுக்கொண்டு, ஒரு சில நாட்கள் பயன்படுத்தினோம். பெட்டிச் சர்க்காவில் நூற்கப்படும் நூல் இன்று கதராடைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதிலிருந்த ஆர்வம் விரைவில் விலகிவிட்டது. ஆனால், சர்க்காவைப் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான உற்பத்திக் கருவிக்கான ஏக்கம் என் மனதில் எப்போதும் உண்டு. எதாச்சையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, மோர் கடையும் வேலையைத் தொடங்கினோம். அன்றிலிருந்து மோர் கடையும் அச்சிறு மத்தே எங்கள் சர்க்கா ஆனது. நான்கைந்து நாட்கள் மோர் கடைந்தால், அடுத்த வாரத்துக்குத் தேவையான நெய் கிடைத்துவிடுகிறது. நாங்கள் மூவரும் தினமும் பங்களிக்கக்கூடிய இன்னொரு செயலாக இது அமைந்துவிட்டது. தயிரை விட மோர் பிடித்திருக்கிறது. அதுவே ஆரோக்கியமானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில், மோர் என்றால் என்னவென்றே இப்போதுதான் உணர்கிறேன். இது போல், நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் எத்தனையோ?

****
நெய் என்பது கடைக்குச் சென்று புட்டியில் வாங்குவது அல்ல; பால் கறப்பது முதல் வெண்ணெய் உருக்குவது வரை நெய் உருவாக்குவதற்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது என்கிற அனுபவப் பாடம் என் பெண்ணுக்கு.

****

மகிழ்மலர் மோர்கடைந்து கொண்டிருந்தாள். நான் ஜெயமோகனின் கொற்றவை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி…ஆயர் சேரியில் கண்ணகி விழித்தெழும்போது:
‘புலரியில் கண்ணகி நூறு நூறு புறாக்கள் குறுகும் ஒலி கேட்டுப் பலகைமஞ்சம் விட்டெழுந்தபோது மூதாய்ச்சியர் மாயோன் புகழ்பாடி மோர்கடையும் ஒலியே அது என்றறிந்தாள்.’

இந்த வரியை அவளுக்குப் படித்துக் காண்பித்தேன்.
‘ஆமாம்பா. மோர் கடையும் போது புறாச் சத்தம் மாதிரியே கேக்குது.’

அன்றுமுதல் அதிகாலையில் எங்கள் திண்ணையில் புறாக்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

****

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம்.எஸ்.குரலில் அருமையாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ogm5odfetE4

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’

****

சென்ற வாரம், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவோடு மருத்துவர் ரமேஷ் வீட்டில் மூன்று நாட்கள் கழித்தோம். சிலப்பதிகாரம் சார்ந்தே அதிகமும் பேசினார். ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்’களும், முல்லைத்தீம்பாணியும் எங்களுள் ஆழப் பதிந்தன. (எம்.எஸ். பாடல் முல்லைத்தீம்பாணியில் இல்லை என்றறிகிறேன்)

 


அனுபவக் கல்வி

நவம்பர் 7, 2017

நாராயணன் நாங்கள் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள தோப்பில் வேலை செய்பவர். சரியாகக் காது கேட்காது. கடும் உழைப்பாளி. காலை ஐந்தரை-ஆறு மணிக்கு வந்து தொழுவத்தைச் சுத்தம் செய்து பால் கறப்பதில் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு மேல் மாலை கறந்த பாலை பால்க்காரரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுவரை ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பார்.

எங்கள் கிராமத்தில் பலரும் பாம்புகளைப் பற்றிப் பல கதைகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் பார்க்கும் பாம்புகள் எப்போதும் கட்டுவிரியனாகவோ நாகமாகவோ தான் இருக்கின்றன. ஐந்து தலை நாகம் பற்றியெல்லாம் சிறுவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர்களுக்குப் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா, அல்லது எந்தப் பாம்பைப் பார்த்தாலும் விஷப்பாம்பு என்று அஞ்சுகிறார்களோ என்று எனக்குச் சில சமயங்களில் சந்தேகம் தோன்றுவதுண்டு.

‘நம்முடன் வாழும் பாம்புகள்’ என்று என்.பி.டி. பதிப்பித்துள்ள ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிரபல பாம்பு நிபுணர் விட்டேக்கரின் நூலின் மொழிபெயர்ப்பு. கருப்பு வெள்ளைப் படங்களுடன், பாம்புகளுக்கான தமிழ்ப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும், அவற்றைப் பற்றிய ஓரளவு விரிவான குறிப்புகளும் கொண்ட நூல்.

அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நாராயணனால் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கலாம் என்று தோன்றியதோ, அல்லது பாம்புப் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் இருக்கும் என்று தோன்றியதோ தெரியவில்லை- அவரிடம் அப்புத்தகத்தில் ஒரு படத்தைக் காண்பித்து இது என்ன பாம்பு என்று சைகையில் கேட்டேன். அவருக்குப் படிக்கத் தெரியாது. படத்தைப் பார்த்த உடன் கண்ணாடி விரியன் என்றார். அதற்கு முன்புள்ள படத்தில் கட்டுவிரியனையும், அதற்கும் முன்பு நாகத்தையும் சரியாகக் காண்பித்தார்.

‘எங்க அப்பா கண்ணாடி விரியன் கடிச்சுத்தான் செத்துப்போனார். அப்போ நான் நம்ம பாப்பா வயசுகூட இருந்திருக்க மாட்டேன். என் கடைசித் தம்பி கைக்குழந்தை,’ என்றார்.

‘அப்போ மழைக்கு வீடெல்லாம் ஒரே சொத சொதன்னு இருக்கும். தூங்கிட்டு இருக்கும் போது ஏதோ கடிச்சுது. ரொம்ப நேரம் எங்க அப்பா ஒன்னும் இல்லேன்னுட்டாரு. அப்புறம்தான் எங்க அம்மா கண்ணாடி விரியனப் பார்த்தாங்க. உடனே அடிச்சுட்டாங்க. பின்னாடியே முருங்க மரத்துகிட்ட இருந்து இன்னும் நாலு பாம்புக வந்தது. அந்தக் காலத்துல ஏது பஸ்ஸூ காரெல்லாம். அதுவும் நடு ராத்திரி வேற. வண்டிகட்டி அவர கொண்டு போறதுக்குள்ள இறந்துட்டாரு. மொழங்காலுக்கிட்ட கடிச்சிருந்தது. அம்மா அவருக்குத் தொடைல இறுக்கிக் கட்டுப் போட்டிருந்தாங்க. புதூர்ல ஒரு அம்மா, அந்த கட்டு எதுக்குன்னு அவுத்தாட்டாங்க. சீக்கிரமா விஷம் தலைக்கேறிடுச்சு.’

‘அதுக்கப்புறம் நாங்க யாரும் படிக்கலை. நான் பெரிசானப்புறம் என்னையும் ஒரு கட்டுவிரியன் கடிச்சிடுச்சி. ஆனா, அப்ப நான் வேலை செஞ்சிட்டிருந்த காட்டுக் கவுண்டர் கிட்ட கார் இருந்துச்சு. உடனே என்னை கேரளாவுல ஒரு கிருஸ்துவங்க ஆஸ்பித்திரி இருக்கு. அங்க கூட்டிட்டுப் போனாங்க. ஒரு கல்லு வைச்சு விஷத்தை உறிஞ்சி எடுத்துட்டாங்க.’

‘அப்புறம் எங்க அண்ணன் பொன்னுசாமி இல்ல…அவரு மாட்டுக்குச் சோளத்தட்ட அறுத்திட்டு இருக்கும் போது, சர்ருன்னு சுத்தி வந்து ஒரு கண்ணாடி விரியன் அவரு மொழங்கால்ல கடிச்சிருச்சு. ராத்திரி எட்டு மணிக்கு கே.பி.கே. பஸ்ஸூலதான் பொள்ளாச்சி கொண்டு போனோம். அப்பவே பத்தாயிரம் ரூபா செலவாச்சு.’

மேலும் சாரைப் பாம்பு பற்றி, நாகப் பாம்பு பற்றியெல்லாம் சொன்னார். அவர் சொன்ன தகவல்கள், உடல்கூறுகள் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தோடு ஒத்துப் போகிற மாதிரித்தான் இருந்தன.

உண்மையில், எத்தனை புத்தகங்களைப் புரட்டினாலும் என்னால் பாம்புகளைச் சரியாக அடையாளம் காணமுடியும் என்றோ, பாம்பு கடித்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றோ நம்பிக்கை இல்லை. குழவியோ தேனீக்களோ வீட்டுக்குள் கூடு கட்டிவிட்டால்கூட நாராயணனிடம்தான் ஓடுகிறோம். யார் யாருக்குக் கற்றுக்கொடுக்கிறோம்?

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊசலாடியபடியே அவர்களுக்கு நிகழும் அனுபவக் கல்வியை எந்தக் கல்விமுறையால் கொடுக்க முடியும்? அவர்களது அனுபவங்களில் இருந்து அவர்களை அந்நியப் படுத்தாமலேனும் இருக்கமுடியுமா?


ஒரு கிராமத்து மாணவன்

ஜூலை 19, 2016

கிராமத்தில் எங்கள் பயிலகத்திற்கு வரும் ஒரு மாணவன் பத்தாவது முடித்திருக்கிறான்.மிகக் குறைந்த மதிப்பெண்கள். மேலே படிப்பதற்கான ஆர்வம் இல்லை. ஆனால், நல்ல துடியான பையன். தொழிற்பயிற்சி பெற்று, சீக்கிரம் வேலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். வீட்டிலோ எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள். எங்களுக்கு அவனை ITIல் சேர்த்தால் நல்லது என்று தோன்றியது. நண்பர் அன்பழகன் ஐடிஐ.யில் பணியாற்றுகிறார். அந்த மாணவனையும் அவனது தந்தையையும் ஐடிஐக்கு அழைத்துச் சென்று நண்பரைச் சந்தித்தோம். அவர் அங்கு படிப்பதன் சாதகபாதகங்களைப் பற்றிக் கூறி, வளாகத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். அங்கு சேர்ப்பது என்று ஒருமனதாக முடிவு செய்தோம். நண்பரே விண்ணப்பத்தை இணையத்தில் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகும் அடிக்கடி விண்ணப்ப நிலவரம் பற்றி மிகுந்த அக்கறையுடன் அழைத்துக் கூறிவந்தார்.கவுன்சலிங் நடக்க ஒரு மாதத்திற்கும்
மேலாகும், அவனுடைய மதிப்பெண்களுக்கு இடம் கிடைப்பது சற்றே சந்தேகம் என்பதால், தற்காலிகமாகப் பள்ளியில் சேர்ந்து கொண்டான்.

நேற்றைக்கு கவுன்சலிங். சென்ற வாரம் முழுவதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இடம் கிடைக்குமோ கிடைக்காதோ, அவன் ஆர்வத்தை எப்படி மட்டுப்படுத்துவது என்று சிந்தித்த வண்ணம் இருந்தோம். வெள்ளிக்கிழைமை கோவைக்கு வந்துவிட்டோம். ஞாயிறு அன்று கைபேசியில் அவன் தந்தையோடு பேசினோம். ஒரு திருவிழாவிற்குப் போக வேண்டியிருக்கிறது, அவன் தனியாகத்தான் வருவான் நீங்களே அழைத்துச்செல்லுங்களேன் என்றார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்த என் மனைவி, ‘இல்லை, நீங்களும் வாங்க – என்ன கோர்ஸ் கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்து நிறைய முடிவெடுக்கவேண்டியிருக்கும்’ என்று நிர்ப்பந்தித்தாள். அவர் சரி என்றிருந்தார். ‘கண்டிப்பா முதல் பஸ் பிடிச்சுடுங்க. வர்றதுக்கு எப்படியும் மூணு மணிநேரம் ஆயிடும்.’

நேற்று காலை, கதர் சட்டை அணிந்து கொண்டு கிளம்பினேன். ஐடிஐ செல்லப் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வழியில், அவர்கள் வந்துவிட்டார்களா என்று உறுதிசெய்துகொள்ள அவன் தந்தையை அழைத்தேன். ‘நானே பேசணும்னு இருந்தங்க. போன்ல காசில்லை. பிரக்காசுக்கு இன்னிக்கு ஸ்கூல்ல ஃபுட்பால் மேட்ச் இருக்குன்னு கட்டாயம் வரணும்னாங்க. நேத்து மேட்ச்ல ஜெயிச்சு பைனல்ஸ் வந்துட்டாங்க. அவன் கிணத்துக்கடவு கிட்ட எங்கயோ விளையாடப் போயிட்டான்.’

வீட்டிற்கு வந்து கதர் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு, பியூஷ் மனுஷுக்கான இணையப் போராட்டத்தில் முழுமூச்சுடன் பதிவிட ஆரம்பித்தேன்.


விட்டு விடுதலையாகி நின்றோம்

மே 31, 2016

முகநூலில் இருந்து ஒரு பழைய பதிவு:


 

அன்றிரவு கிராமத்திலிருந்து பொள்ளாச்சிக்குச் செல்லும் பேருந்தில் ஏறும்போதே பழைய எம்.ஜி.ஆர். பாடலொன்று வரவேற்றது. சற்றே வயதானவர், நின்றபடி உணர்ச்சி ததும்பப் பாடிக்கொண்டிருந்தார். பேருந்தின் நகர்வைவிட அவர் அருந்திய திரவம் அவரை அதிகம் தள்ளாட வைத்துக்கொண்டிருந்தது. சுருதிகூடவில்லையெனினும் மெட்டில் குறையில்லை. உச்சரிப்பில் நல்ல தெளிவு.
பின்புறம் கடப்பாரையுடன் அமர்ந்திருந்த பயணி, மஞ்சள் நிற வொயர் கூடையுடன் இருந்த சகபயணியிடம் சிலாகித்துக்கொண்டிருந்தார்.
‘இவரைக் கிண்டல் பண்ணக்கூடாதுங்க. அவருடைய வாழ்கை அனுபவம் தான் அவரைப் பாட வைக்குது.’
ஆர்வமாய்த் திரும்பிப் பார்த்த என்னிடம் மேலும் சொன்னார், ‘எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த ஜனங்க. இப்ப விடுதலைக்கப்புறம் இந்த அளவுக்குப் பாடறார்னா அப்ப எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க பாருங்க.’
எந்த விடுதலையைச் சொல்கிறார்? ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றதையா? பாடுபவர் வயதானவர்தான்…ஆனாலும் அந்த விடுதலையைச் சொல்கிற மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை சாதி விடுதலை குறித்துப் பேசுகிறாரோ?

பாடியவருக்குப் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. நடத்துனர் பத்திரமாக இறக்கிவிட்டார். இரவு நேரங்களில் நடத்துனர் பாடு படு திண்டாட்டம்தான் – மற்றவர் உயிரையும் தமது உயிரையும் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு செயல்படவேண்டும்.

சகபயணி பதிலளித்துக்கொண்டிருந்தார், ‘அவர் பார்த்த மொதல் படம் எதுன்னு கேட்டேன். மதுரை வீரன்னு சொன்னார். அதனாலதான் இப்படிப் பாடறார். என்னமாப் பாடறார்.’

‘நான் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில பெஞ்சிலதான் உட்கார வைச்சாங்க.’

‘அடப் போப்பா, நான் படிக்கும்போது பெஞ்சே கிடையாது,’ என்று வொயர் கூடைக்காரர் சொல்ல, உரையாடல் தொடர்ந்தது.

கூர்ந்து கவனித்து, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் விடுதலையின் அர்த்தம் புரிந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த தினமாம்.