பொறுமையானவர்கள்

ஓகஸ்ட் 12, 2019

உண்மையில், எல்லாரையும்விட
அவர்கள்
பொறுமையானவர்கள்.

அதனால்தான்
பனிமலை பற்றியெரியும்போது
நிதானமாக அவர்களால்
விவாதிக்கமுடிகிறது.
நம் கொந்தளிப்பைப் பார்த்துக்
கைகொட்டிச் சிரிக்கமுடிகிறது.
மக்களாட்சி பற்றி
சகிப்புத்தன்மை பற்றி
வகுப்பெடுக்கமுடிகிறது.
கல்லெறியும்
கல்லெறிவதாய்ச் சொல்லப்படும்
சிறுவர்களின்
கண்களைக் குருடாக்குவதை
இரும்புக்கரம் கொண்டு அடக்குதல் என்று
விளக்கமுடிகிறது.
அன்னையர் தம் மக்களுடன்
ஒரே ஒரு நிமிடம்
ஒற்றைத் தொலைபேசியில் உரையாட
அனுமதித்து மேற்பார்வையிடுவதை
மென்மையான அடக்குமுறையென்று
மெச்சமுடிகிறது.

அதனால்தான்
ஒவ்வொருமுறையும்
கோட்சேவால் காந்தியைக்
கைநடுக்கமில்லாமல்
சுடமுடிகிறது.


லேலி லாங் சோல்ஜர் கவிதைகள்

நவம்பர் 20, 2018

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] – தமிழினி மின்னிதழில் வெளிவந்தது

38

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள் வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

ஜனவரி 15, 2015

கானகத்தின் ஓரத்தில்
சுள்ளி எரித்துக் குளிர்காயும்
சில்லுண்டிகளை வைத்து
எடை போடாதே என்றார்கள்.
சரி, நியாயம் தான் என்று
மையத்தைப் பார்த்தேன்.
கானகத்தை எரித்தவர்கள்.


மாண்ட சொர்க்கம்

ஜனவரி 14, 2015

சொர்க்கம் நிச்சயம்
என்றுதான் சொன்னார்கள்.
ஆனாலும்
அவனே எதிர்பார்க்கவில்லை
சொர்க்கத்துக்கு அனுப்புவார்கள் என்று.

காலணிகளை மட்டும் கழற்றவியலாது என்றார்கள்.
அதனாலென்ன, இங்கே வியர்க்கவா போகிறது என்றான்.

சொர்க்கத்தின் தோட்டத்தில்
எதிரிகளின் குண்டுகளில் சிதறிய
அவனது குழந்தை
விளையாடிக்கொண்டிருந்ததுகண்டு
பரவசமாகி நெருங்கினான்.
அவனது மகளின்
நீட்டிய கரங்களில்
பவளமல்லிப் பூக்களை
அள்ளிப் போட்டாள்
இன்னொரு
சிறுமி.

பள்ளிக்கூடத்து பெஞ்சுக்கடியில்
ஒளிந்திருந்தபோது
பின்மண்டை துளைக்கப்படுமுன்
அவனது செந்நிற பூட்ஸ்களை
மட்டுமே பார்த்திருந்தாள்
அவள்.

கடக்க முடியாத
காலச்சுழலில்
நரகத்தின்
நுழைவாயில்களடைத்த
சுவர்ணப்பரப்பில்
கழற்ற முடியாத
செந்நிறம் படர்ந்த பூட்ஸ்களைப்
பாதங்களில் சுமந்தொளிந்தலைகிறான்.


ஆவி பறக்க

திசெம்பர் 30, 2014

இதயத்தில் அரும்பியதும்
அவரசரமாய்
விரல்வழி வெளியேறியது.
இன்னும் கொஞ்ச நாள்
இதயத்திலேயே
அடைகாத்திருக்கலாம்.
மடிகணினியின் வெப்பத்திலாவது
பத்திரப்படுத்திச் செப்பனிட்டிருக்கலாம்.

தன்னிச்சையாய்
முகநூலுக்குள் துள்ளிக்குதித்தது.
சூடு ஆறிவிடுமாம்.

இப்போது குறைப்பிரசவமாய்
உங்கள் விழிகளுக்குள்
வழிந்தோடிக் கொண்டுள்ளது.


அவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை

நவம்பர் 10, 2014

தாத்தாவிடம் நீங்க ஸ்டூடன்ட் நான் ப்ரின்சிப்பல் என்கிறாள்
ஆத்தாவை, தாத்தா குறும்பு செய்யாமல் பார்த்துக்கொள் என்கிறாள்
அத்தையும் மாமாவும் சீண்டவும் சண்டையிடவும் வேண்டியதை வாங்கிவரவும்.

காது சரியாகக் கேளாத கொள்ளுத்தாத்தாவுக்குத்
விஸ்தாரமாய்த் தாளம் போட்டுப் பாடிக் காண்பிக்கிறாள்.

கண் பிடுங்கப்பட்ட பார்பி பொம்மை
பள்ளங்களை மறைக்கத் துணி கட்டிக்கொண்டு
நேற்றுவரை காந்தாரியாக இருந்தது;
இன்று கையில் தென்னங்குச்சித் தராசு சகிதம்
நீதி தேவைதையாகிவிட்டது.
விழி என்ற செல்லப்பெயருமுண்டு.

தோட்டம் பார்க்கச் செல்லும்போது
கன்றுக்குட்டிக்குக் கைபேசியில்
தான்வருவதைத் தெரியப்படுத்துகிறாள்.

அவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை.
அதைப் பற்றிய கவலை அவளுக்கு மட்டும் இல்லை.
சுற்றியிருந்த எல்லோரையும் எல்லாவற்றையும்
குழந்தைகளாக்கிக் கொண்டாள்.


சாக்கடையில் விழாத பந்து

ஏப்ரல் 27, 2012

எனக்குச் சாக்கடையில் கைவிடப் பிடிக்காது.

பந்து விழுந்தால் எடுக்க மறுத்துவிடுவேன்.

பந்தை அடிக்கும்போதும்,

அடித்தபந்து அருகில் வரும்போதும்,

சாக்கடையில் விழக்கூடாது என்பதிலேயே

கவனமாய் இருந்தேன்.

ஆனாலும் சாக்கடையில் விழுந்து மீட்கப்பட்ட பந்தில்

விளையாடாமல் இருந்ததில்லை.

விளையாடியும்

நானொன்றும் சச்சினாகிவிடவில்லை.

இன்றும் சிறுவர்கள் எங்களூர்ச் சாலையில்

விளையாடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

சாக்கடை இன்னும் அகலமாய் ஆழமாய்

கிளைபரப்பித் ததும்பி நிற்கிறது.


விழித்திருந்த இரவினிலே

நவம்பர் 24, 2011

உடல் சாய்ந்தவுடன் கண்சாய்ந்துவிடும் எனக்கு

அரிதாய் வாய்க்கும் சில உறக்கமற்ற இரவுகள்.

அப்போதுதான் தெரிகிறது

அருகிலுறங்கும்

அவள்

தளிர்க்கரங்கள் மார்மீது விழுவதுவும்,

மென்முகம் என்முகத்தோடு இணைவதுவும்,

இசைபாடும் அவள் சுவாசத்தின் இளஞ்சூடும்,

மடிமீது படர்ந்திடும் அவள் சிறுபாதமும்,

உடலெங்கும் பரவிடுமோர் பரவசமும்

எனக்கெனக் கென்றேங்கும் முழங்காலும் அதன்கீழும்,

மனதினிலே அரும்பிடுமோர் பெருங்கனிவும்

ஆற்றொழுக்காய் ஊற்றெடுக்கும் கவிச்சொல்லும்

மறக்குமுன்னே பதியவெண்ணும் படபடப்பும்

எழுந்துவிட்டால் இதையிழப்போ மெனும்பதைப்பும்

இடையிடையே இடைவருடும் அவளுதைப்பும்

அப்பப்பா!

முகம்திருப்பி அவள் தேன்னுதலில்

இதமாகப் பதிக்கின்றேன் என்னிதழை.

இன்று மட்டும்

என்னைக் கொஞ்சம் விழிப்பில் வைத்தால்

வணங்குவேன் தாயே!


சோப் என்கிற கறைநீக்கி

நவம்பர் 10, 2011

சோப் ஓர் உன்னதக்

கண்டுபிடிப்பு.

எந்தக் கறைபடிந்தாலும்

கழுவிவிடமுடியும்.

எனவே கறைபடிவதைப்பற்றிக்

கவலைப்பட வேண்டியதேயில்லை.

சோப்பை நம்பாதவர்கள்

பரிதாபத்திற் குரியவர்கள்.

அவர்கள்

அழுக்கின் சுமையோடே

வாழ்கிறார்கள்.

அல்லது,

அழுக்கு சுமையென்று

அறியாமலே வாழ்கிறார்கள்.

அல்லது,

அழுக்கே அண்டக்கூடாதென்ற

அபத்தப்பிடிவாதத்தோடு வாழ்கிறார்கள்.

ச்சே!

எந்த சோப் நல்ல சோப்?


பழையன கழிதல்

நவம்பர் 10, 2011

‘அப்பா! இன்னிக்கு நீ பேசனும்’

கடந்த சில வாரங்களாய்

மகளைப் பள்ளியில்விடச்

செல்லும்போது தினமும்

கேட்கும் வாசகம்.

ப்ளேஃக்ரூப்பில் இருந்தவளை

​நர்சரி வகுப்புக்கு மாற்றியிருந்தோம்.

பழைய வகுப்புக்கே செல்லவேண்டுமாம்,

அதுகுறித்து ஆசிரியையிடம்

நான் பேசவேண்டுமாம்.

‘சரிடா! நான் பேசறேன்.

ஆனா நர்சரிலமாதிரி

ப்ளேஃக்ரூப்பில நிறைய விளையாட்டிருக்காது,

பரவால்லையா?’

‘பரவால்லப்பா, எனக்கு

ப்ளேஃக்ரூப்தான் பிடிக்கும்’

எப்போதும் போல் சரியென்றேன்.

கார் பள்ளியை நெருங்கியது.

‘அப்பா, இன்னிக்கு நீ பேசவேண்டாம்.

நான் குட்கேர்ளா அவங்க

எங்க அனுப்பறாங்களோ

அங்கயே போயிக்கிறேன்.’

​மறுநாள் காலை.

‘அப்பா! இன்னிக்கு நீ பேசனும்’