சுழன்றாடு மத்தே

நவம்பர் 26, 2017

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வர்தா சென்றிருந்தபோது இரண்டு பெட்டிச் சர்க்காக்களை (ராட்டை) வாங்கி வந்திருந்தோம். நூற்க கற்றுக்கொண்டு, ஒரு சில நாட்கள் பயன்படுத்தினோம். பெட்டிச் சர்க்காவில் நூற்கப்படும் நூல் இன்று கதராடைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதிலிருந்த ஆர்வம் விரைவில் விலகிவிட்டது. ஆனால், சர்க்காவைப் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான உற்பத்திக் கருவிக்கான ஏக்கம் என் மனதில் எப்போதும் உண்டு. எதாச்சையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, மோர் கடையும் வேலையைத் தொடங்கினோம். அன்றிலிருந்து மோர் கடையும் அச்சிறு மத்தே எங்கள் சர்க்கா ஆனது. நான்கைந்து நாட்கள் மோர் கடைந்தால், அடுத்த வாரத்துக்குத் தேவையான நெய் கிடைத்துவிடுகிறது. நாங்கள் மூவரும் தினமும் பங்களிக்கக்கூடிய இன்னொரு செயலாக இது அமைந்துவிட்டது. தயிரை விட மோர் பிடித்திருக்கிறது. அதுவே ஆரோக்கியமானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில், மோர் என்றால் என்னவென்றே இப்போதுதான் உணர்கிறேன். இது போல், நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் எத்தனையோ?

****
நெய் என்பது கடைக்குச் சென்று புட்டியில் வாங்குவது அல்ல; பால் கறப்பது முதல் வெண்ணெய் உருக்குவது வரை நெய் உருவாக்குவதற்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது என்கிற அனுபவப் பாடம் என் பெண்ணுக்கு.

****

மகிழ்மலர் மோர்கடைந்து கொண்டிருந்தாள். நான் ஜெயமோகனின் கொற்றவை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி…ஆயர் சேரியில் கண்ணகி விழித்தெழும்போது:
‘புலரியில் கண்ணகி நூறு நூறு புறாக்கள் குறுகும் ஒலி கேட்டுப் பலகைமஞ்சம் விட்டெழுந்தபோது மூதாய்ச்சியர் மாயோன் புகழ்பாடி மோர்கடையும் ஒலியே அது என்றறிந்தாள்.’

இந்த வரியை அவளுக்குப் படித்துக் காண்பித்தேன்.
‘ஆமாம்பா. மோர் கடையும் போது புறாச் சத்தம் மாதிரியே கேக்குது.’

அன்றுமுதல் அதிகாலையில் எங்கள் திண்ணையில் புறாக்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

****

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம்.எஸ்.குரலில் அருமையாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ogm5odfetE4

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’

****

சென்ற வாரம், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவோடு மருத்துவர் ரமேஷ் வீட்டில் மூன்று நாட்கள் கழித்தோம். சிலப்பதிகாரம் சார்ந்தே அதிகமும் பேசினார். ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்’களும், முல்லைத்தீம்பாணியும் எங்களுள் ஆழப் பதிந்தன. (எம்.எஸ். பாடல் முல்லைத்தீம்பாணியில் இல்லை என்றறிகிறேன்)

 


காலச் சுழலில் சிக்கிய கர்நாடகஇசை

ஜூலை 17, 2008

ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.

சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.

ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?

முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.

அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.

ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.