வேருக்கு நீர்

நவம்பர் 12, 2019

ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவலை இம்மாதம்தான் படித்தேன். தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்துப் பேசும்போது சிலர் இதைக்குறிப்பிட்டதாலும், தற்செயலாகக் Kindle Unlimitedல் கண்ணில் பட்டதாலும் படிக்கத்தொடங்கினேன். மிகவும் பிடித்திருந்தது. காந்தி நூற்றாண்டு விழாவின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். காந்தி 150க்கும் பொருந்தி வருகிறது. பல ஆழமான உரையாடல்கள் மூலமகாக லட்சியவாதத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் ஏற்படும் உரசல்களுக்குள் ஆழமாகச் செல்கிறது. காந்தியின் மீதான அன்றைய ஆயுதம் தாங்கிய மார்க்சியர்களின் விமர்சனங்களையும் சித்தரிக்கிறது. இப்பகுதியை அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதையோடு ஒப்புநோக்கலாம். அவர் பல அடுக்குகளை அமைத்துத் தொட்ட ஒரு புள்ளியை, இவர் இந்நாவலில் மிக நேரடியாகத் தொட்டுவிடுகிறார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் குடும்ப வாழ்வில் சந்திக்க நேரும் சவால்களைச் சொல்வதில் பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.

அரசியல், இலட்சியவாதப் பின்புலத்தில் நடைபெறும் பல உரையாடல்களும், நிகழ்ச்சிகளும் ஒரு பழைய ருஷ்ய நாவலைப் படிக்கும் நிறைவைத் தந்தன. கேள்விகளை எழுப்பின. எளிமையான, இனிமையான நடை. ராஜம் கிருஷ்ணனின் பெயர் சிறுவயது முதலே பரிச்சயமானதுதான் என்றாலும், அவரது தனிமையான இறுதிக்காலம் குறித்து முகநூல் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருந்தாலும், ஏன் இவரை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். 80 படைப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்கிறது விக்கி. பிற நூல்கள் எப்படியோ, இது நல்லதொரு படைப்புதான்.


புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் – இருவர் இருவிதமாகக் கண்ட ஒரே ஒளி

ஜனவரி 12, 2019

புதுமைப்பித்தனின் புதிய ந‍ந்தன் கதை நான் மொழிபெயர்த்துவரும் காந்தி தொகுதிக்காகத்தான் படித்தேன். காந்தி வந்துசேர்வதற்கு முன்பே கதை முடிந்துவிட்டாலும், மிகச்சரியான கதையைத் தான் சுனில் கிருஷ்ணன் தேர்வு செய்திருக்கிறார்.


காந்தியும் பெரியாரும்(/அம்பேத்காரும்) எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படும் இன்றைய சூழலில், 1934ல் வந்த இக்கதை, அவர்களது அத்தனை முரண்களுடனும், அவர்கள் இணைகிற புள்ளியை மையப்படுத்துகிறது.
முதல் மேலோட்டமான வாசிப்புக்குச் சாதாரணமான தொடக்க‍ கால சீர்திருத்தக்கதையாகத்தான் தெரிந்தது.


ஆனால் மொழிபெயர்ப்பதில் இருக்க‍க்கூடிய அனுகூலம், படைப்புக்குள் நம்மை ஆழ்ந்து செல்ல வைத்துவிடுகிறது. புதிய ந‍ந்தன் கதையில் பல்வேறு அடுக்குகள் நுட்பமாகப் புனையப்பட்டிருப்பது புரிந்தது.


இப்போதுதான் ந‍ந்தனார் திரைப்படம் பார்த்திருந்த‍தால், ந‍ந்தன் கதையின் நவீன வடிவம் நன்றாக மனதில் நின்றிருந்த‍து.

‘நந்தன் பறைச்சேரியில் விடை பெற்றுக்கொண்ட பிறகு, பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்.’ போன்ற கூரிய வாசகங்களுடன் கதை தொடங்குகிறது. ஆங்கில ஆட்சி வந்த‍தே அறியாத நெடுந்தூக்க‍த்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


ஆங்கில ஆட்சி வந்த‍தன் அடையாளமாக முனிசிபல் விளக்கு வந்துவிடுகிறது. ஆனால் அதுவும் தீண்டப்படாமல் இருக்க, மரியாதையான தூரத்திலேயே இருக்கிறது.


ந‍ந்தன் ஆண்டையிடம் அடிமைப்பட்டிருப்பதாக உணர்வதே இல்லை. அவனது அனுமதிக்காகவும் ஆணைக்காகவும் காத்திருக்கிறான். கருப்பனும் அப்படித்தான். தன்னை அக்கிரகாரக் கிணற்றில் நீரள்ளிக் குடித்த‍தற்காக அடித்துக் குருடாக்கிய ஆண்டையிடம்தான் கடைசிவரை காவலனாக வேலை செய்கிறான். அவன் கிணற்றில் நீரள்ளியது புரட்சி செய்வதற்காக அல்ல; அது அறியாமையால் நிகழ்ந்த விபத்து.


பெரிய நிலக்கிழார்களாக இருந்தவர்கள் பிரித்தானிய அரசாங்க வேலைகளில் சென்று சேர்கிற சித்திரமும் வருகிறது. அப்படியானவர்களின் அடுத்த தலைமுறை காந்தியின் உந்துதலால் ஏற்பட்ட லட்சிய வேகத்தில் பெரும் மன மாற்றமடையும் சித்திரமும் வருகிறது. பழைய வேதியர் வழியில் வந்த புதிய வேதியரான பெரிய பண்ணையாகவும், சப்-ரெஜிஸ்டிராராகவும் இருந்தவரின் பிள்ளையான ராமநாதன், எம்.ஏ. படித்து கலெக்டராவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தால் ஈர்க்கப்பட்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு சிறைக்குச் செல்கிறான்.


என்னதான் ஆண்டைக்கு விசுவாசமாக இருந்தாலும் கருப்பனும் பிள்ளையை ஆண்டை மாதிரி ஆக்குகிறேன் என்று மதம் மாற்ற வந்த ஜான் ‘ஐயர்’ என்கிற போதகர் ஆசை காட்டும்போது இணங்குகிறான். மகன் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்கிற ஆசையும் அவனுக்கு உள்ளது. ஆங்கிலத்துக்கு ‘இங்குருசி’ என்ற சொல்லைப் புதுமைப்பித்தன் பயன்படுத்துகிறார். இன்றும் இந்தியில் அங்கிரேசி என்றுதான் சொல்கிறார்கள்.


ஆனால் மகனை முன்னேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற கருப்பன், ஆண்டையின் மகன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது, பெரும் பாவம் என்று சொல்லி மறுக்கிறான். முன்னேற வேண்டும் என்கிற நினைப்பை, சாதியப்பழைமையில் ஊறிய உணர்வுகள் சமன்செய்துவிடுகின்றன.

கருப்பனின் மகன் பாவாடை தானியேல் ஜான் ஆகி, கிருத்துவத்திலும் சாதி மறையவில்லை என்பதை அறிந்து முதல் விலக்கம் கொள்கிறான். வேளாள ஜான் ஐயர் வேளாளராகவே இருக்கிறார் – தானே முன்னின்று மதம்மாற்றிய தானியேலை “பறக்கழுதை வீட்டைவிட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுகிறார்.


பின்னர் கத்தோலிக்க மத‍த்தைத் தழுவி ‘சுவாமியார்’ ஆகப் பயிற்சிபெறுகிறான். அங்கும் ‘சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம்’ ஆகியவற்றைப் புதுமைப்பித்தன் சுட்டுகிறார்.


தானியேல் ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறான். தோழர் நரசிங்கம் ஆகிறான். ராமநாதனுக்கும் தன் தங்கைக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தந்தையைக் கட்டாயப்படுத்துகிறான் நரசிங்கம். ஆனால் அவனாலும் கருப்பனின் நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை.


தமிழ்நாட்டுக்கு ஹரிஜன நிதி திரட்ட வரும் காந்தியை ஆதனூருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்கிறான் ராமநாதன். அவனது சனாதனத் தந்தையும் பெரியாரிய நரசிங்கமும் காந்தியிடம் வாதம் செய்து வெல்லக் காத்திருக்கிறார்கள்.


ராமநாதனும் நரசிங்கமும் – இரண்டு பேரும் ஒரே உண்மையை இரண்டு விதமாகக் கண்டார்கள். புதிய ஒளியை இருவிதமாக‍க் காண்கின்றனர்.


ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் கருப்பனை ரயிலில் அடிபடாமல் காக்க முயன்று மூவருமாய் இரத்தக்களரியில் மடிந்து, மூவரது இரத்தமும் கலக்கும்போது, கருப்பனும் அதே ஒளியை வேறுவிதமாக‍க் கண்ட‍டைந்திருப்பான் என்பதை ஆசிரியர் நேரடியாக‍க் கூறாமல் விட்டுவிடுகிறார்.


உண்மையில், இது மூன்று பேர் மூன்று விதமாக‍க் கண்ட ஒரே ஒளிதான்.


2018ல் படித்தவை

ஜனவரி 3, 2019

கூட்டிக்கழித்துப் பார்த்தால், சென்ற ஆண்டு சிறிதும் பெரிதுமாக, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிறையப் படித்திருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனாலும் நிறைவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படித்து முடிக்க நினைத்த புத்தகங்கள் பலவும் முடிக்கப்படாமல் காத்திருக்கின்றன. பாதியில் தொக்கிக்கொண்டும், புத்தக அடுக்குகளில் புதையுண்டும் பல புத்தகங்கள் காத்துக்கிடக்கின்றன.

இந்த ஆண்டின் கணிசமான பகுதியைக் கவிதைகளோடு கழித்தேன். பட்டியலில் இடம் பெறாத புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள்-காமத்துப்பால் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி கொங்குதேர் வாழ்க்கை (தமிழினி), இசை, போகன் சங்கரின் கவிதைகள் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை நூல்கள், இணைய தளங்கள் என்று ஆண்டு முழுவதும் கவிதையின் வாசனையை முகர்ந்துகொண்டும் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டும் இருந்தேன். (கூடவே தொடரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும்.)

1984 – பல ஆண்டுகளாகப் படித்துப்படித்துக் குறிப்பான காரணம் ஏதுமின்றி பாதியில் விட்ட புத்தகம். இவ்வாண்டு முழுவதுமாய்ப் படித்துவிட்டேன். வலிமையான அரசுகள், தனிமனிதச் செயல்பாடுகளை வேவு பார்த்தல் ஆகியவை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தைக் கட்டியம் கூறும் நாவல். மேற்கோள்களுக்காக அடிக்கடி அங்கே செல்லப்போகிறேன் என்பது உறுதியாகப் புலப்படுகிறது. பாதியில் நிற்கும் மார்கரெட் ஆட்வுட்டின் Handmaid’s Tale இதே ரகம். ஜனவரியில் முடித்துவிட வேண்டும்.

ஹோமரின் இலியட், ஒடிசி ஆகிய நூல்களும் பல ஆண்டுகளாய்ப் படித்து விடுத்து எடுத்து, இவ்வாண்டு முடித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் போப் மொழிபெயர்ப்பு அபாரமானது. மூலத்துக்கு நெருக்கமாகக் கருதப்படும் வேறு சில நவீன மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கியே படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஹோமரின் உச்சங்களைப் போப் போல யாராலும் தொடமுடியவில்லை. ஒடிசியின் பல பகுதிகளை போப் எழுதவில்லை என்றும், நேர நெருக்கடியால் வேறு இருவருக்கு அயலாக்கம் (outsource) செய்துவிட்டார் என்றும் அறிந்தேன். மொழிபெயர்ப்பில் இலியடின் நேர்த்தி ஒடிசியில் நூல் முழுவதும் சீராக இல்லை என்றே சொல்லலாம்.

டால்ஸ்டாயின் Resurrection (புத்தியிர்ப்பு) என்னோடு பல காலம் தங்கியிருக்கப்போகிற இன்னொரு புத்தகம். நான் படித்துள்ள மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. நம் சமூக அமைப்பின் மீதும் சட்ட அமைப்பின் மீதும் பல நுட்பமான கேள்விகளை எழுப்புகிறது.

சி.எஸ்.புஸ்பராஜாவின் ‘ஈழப்போராடத்தில் எனது சாட்சியம்’ தமிழ்ச்சூழலில் இன்னும் அதிகம் பேசப்பட வேண்டிய நூல். 70களில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னணியை அறிய உதவும் நூல்.

இரா.குப்புசாமியின் அறிவு நிலைகள் பத்து தமிழினி வசந்தகுமாரின் அழுத்தமான சிபாரிசின் பேரில் படிக்கத்தொடங்கினேன். அவர் சொன்னதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது.

வினோபாவின் வாழ்க்கை வரலாறான Moved by Love முன்பொரு முறை படித்ததைக் காட்டிலும் இப்போது ஆழமாய் மனதைத் தொட்டது.

Slaughterhouse Five அவல நகைச்சுவையோடு போரின் அபத்தத்தை அழுத்தமாய்ப் பேசிய நூல்.

Whereas, Citizen: An American Lyric ஆகிய இரண்டும் அமெரிக்காவில் ஆதிகுடிகளும் கறுப்பின மக்களும் ஒழிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் வரலாற்றின்மீது கூர்மையான கவிதைகளின் மூலம் ஒளிபாய்ச்சும் நூல்கள்.

Things Fall Apart – ஐரோப்பிய மிசனரிகள் ஆப்பிரிக்கப் பழங்குடி சமூகத்தில் கிருத்துவத்தைப் பரப்பிய போது ஏற்பட்ட சிக்கல்களைப் பேசிய நூல். ஆங்கிலம் பேசாத ஒரு பகுதியின் கதையை ஆங்கிலத்தில் இவ்வளவு அழகாகச் சொன்ன நாவல்கள் வேறு உள்ளனவா என்று தெரியவில்லை. குறிப்பாக ஆப்பிரிக்கப் பழமொழிகளையும் மக்கள் வழக்குகளையும் ஆங்கிலத்தில் கொண்டுவந்திருந்த விதம் ஒரு சிறப்பான முன்மாதிரியாகத் தெரிகிறது. வேற்று மனிதர்கள் தம் பண்பாட்டினைத் திணிக்கும் முன் அச்சமூகமே மாற்றத்துக்கான ஏக்கத்துடன் சிதைவுற்றுக் கொண்டிருப்பதையும் சினுவா அசபே சித்தரித்திருப்பார்.

பசி, கில்காமெஷ் போன்ற பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் க.நா.சு. என்பதை ஒவ்வொரு முறையும் ஒரு நன்றியுணர்வுடனேயே நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

ஆஸ்கார் வைல்டின் The Picture of Dorian Gray ஆரம்பத்தில் ஆஸ்கார் வைல்டின் நகைமுரண் மேற்கோள்களைத் தொகுத்துப் போட்ட மாதிரி இருந்தாலும், பின்னர் வேறொரு தளத்துக்கு நகர்கிறது. தமிழில் வானகெட், ஆஸ்கார் வைல்ட் போன்றவர்களின் கூர்மையான அங்கதமும் நகைமுரணும் கொண்ட உரையாடல்களுக்குப் பஞ்சம்தான். இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை; மொழிபெயர்ப்பது பெரும் சவாலாகவே இருக்கும். ஆனால், தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கூட்ட இயலும்.

ஜூரெக் பெக்கரின் கட்டுரைத் தொகுப்பினை நூலகத்தில் எதேச்சையாகக் கண்டெடுத்தேன். அற்புதமான எழுத்தாளர். சிறு பிள்ளையாக இருந்தபோது யூத வதை முகாம்களில் இருந்து பின்னர் கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர். உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர் என்கிற முறையிலும், மேற்கு ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து விட்டாலும் சோசியலிசம் மீது மதிப்பு கொண்டிருந்தவர் என்கிற முறையிலும் அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘வைர ஊசி’ அஸ்வகோஷர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. பாரதி வைர ஊசி என்ற உபநிஷத்தை மொழிபெயர்த்து ‘பிராமணன் யார்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளான். இவ்விரண்டையும் தொகுத்து விரிவாக ஒரு குறிப்பு எழுதியுள்ளேன். விரைவில் பதிவிட வேண்டும்.

கஸ்தூர்பா குறித்த சுசீலா நய்யாரின் நினைவலைகளைப் படித்த உந்துதலில்தான் கஸ்தர்பா மீதான நீண்ட கட்டுரையை தமிழினி இதழில் எழுதத் தொடங்கினேன்.காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் இருந்த அற்புதமான உறவையும், கஸ்தூர்பாவின் கடைசிக் காலங்களில், சிறையில், காந்தி அவரை கனிவுடனும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்தகொண்டதையும் பேசுகிற முக்கியமான சிறிய நூல் இது.

பன்னாலால் தாஸ்குப்தாவின் Revolutionary Gandhi காந்தி பற்றி நான் படித்த நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு ஒரு விரிவான மதிப்புரை எழுதுவதற்காக இந்நூலை இவ்வாண்டு மறுவாசிப்பு செய்யக் கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்புதான்.

சகுந்தலை பற்றிய ரோமிலா தப்பாரின் நூல் ஒரு வித்தியாசமான முயற்சி. மகாபாரதத்தில் வரும் சகுந்தலை கதை, காளிதாசனின் நாடகம், பிற சகுந்தலை கதைகள், காலினிய காலத்தில் வந்த சகுந்தலை மொழிபெயர்ப்புகள், அவற்றின் காலம், களம், தாக்கம், மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைத்த எதிர்வினைகள் என்று அனைத்தையும் தொகுத்து விரிவாக ஆய்வு செய்யும் ஒரு நூல்.

பாவண்ணனின் நூறு சுற்றுக் கோட்டை கன்னட இலக்கியத்தின் முக்கியமான எழுத்தளர்களுக்கு அறிமுகமாக அமையும் ஒரு அருமையான தொகுப்பு.

எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி நூல் வெளியீட்டு விழாவில் என்னைப் பேச அழைத்திருந்ததை ஒட்டி அவருடைய பல படைப்புகளைப் படித்து முடித்தேன். அவரது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் மிகவும் ஈர்த்தன. சு.வேணுகோபாலின் பூமிக்குள் ஓடுகிறது நதி தொகுப்பிலும் பல சிறப்பான சிறுகதைகள் உள்ளன.

அம்புப்படுக்கை நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் பெற்றுத்தந்த நூல். அது குறித்தும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

என் மகளோடு சேர்ந்து படித்த சில புத்தகங்களும் உண்டு. நான் சிறுவயதில் முதன்முதலாகச் சுருக்கப்பட்ட வடிவில் படித்த ஆங்கில நாவல் Black Arrow. மகள் சுருங்கிய நாவலைப் படிக்க நான் முழு நாவலைப் படித்தேன். அடிக்கடி நாங்கள் ஆடும் இந்த ஆட்டம் பிடித்துள்ளது. அவள் படித்த நூல்களின் பட்டியல் ஒன்றும் உள்ளது. அவள் அனுமதி கொடுத்தால் விரைவில் வெளியிடுகிறேன் 🙂

எதிர்பாராமல் இவ்வாண்டு படித்தவை Game of Thrones வரிசை நாவல்கள். Binge reading செய்து வெகுசில நாட்களில் முடித்தேன். தொலைக்காட்சித் தொடருக்கு இணையான சுவாரசியத்தோடு இருந்தன. இப்படியான அதீத கற்பனை கொண்ட மிகு புனைவுகளையும் வணிக எழுத்துகளையும் அவ்வப்போது படிக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன்.

எழுத்தாளர்கள் எப்போதும் விருதுபெறும்போது மனைவிக்கு நன்றி சொல்வார்கள். அதுபோல, வாசகனாக, புத்தகங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, படிப்பதற்கு அனுமதி தந்து, அதற்கான நேரத்தையும் சூழலையும் ஏற்படுத்தித்தந்து, போட்டி போட்டுக்கொண்டு தானும் படித்து ஒரு நீளமான பட்டியலைக் கைவசம் வைத்துள்ள மனைவிக்கு ஒவ்வொரு ஆண்டும் நன்றி சொல்லிவிடுவதென்றும், அவரது அனுமதியோடு முடிவுசெய்துள்ளேன்.

தமிழில்: (படித்துமுடித்த வரிசையில்)

  1. என் தந்தை – சகுந்தலா பாரதி
  2. சுயசரிதை, பாரதி அறுபத்தியாறு – பாரதி
  3. ஈழப்போராடத்தில் எனது சாட்சியம் – சி.எஸ்.புஸ்பராஜா
  4. சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை
  5. இறுதி யாத்திரை – எம்,டி.வாசுதேவன் நாயர் (தமிழில் கே.வி.ஷைலஜா)
  6. யுத்தங்களுக்கிடையில் – அசோகமித்திரன்
  7. மரநிறப் பட்டாம்பூச்சிகள் – கார்த்திகைப் பாண்டியன்
  8. செம்புலம் – முருகவேள்
  9. காலவெளி – விட்டல் ராவ்
  10. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
  11. எல்லாம் கலந்த காற்று – கலாப்ரியா
  12. அறிவு நிலைகள் பத்து – இரா.குப்புசாமி
  13. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன்
  14. ஏழாம் உலகம் – ஜெயமோகன்
  15. குண்டலகேசி – இந்திரா பார்த்தசாரதி
  16. பசி – நட் ஹாம்சன் (க.நா.சு) (Hunger – Knut Hamsun)
  17. மண்ணில் தெரியுது வானம் – ந.சிதம்பர சுப்பிரமணியன்
  18. அம்புப் படுக்கை – சுனில் கிருஷ்ணன்
  19. ஜெயமோகன் குறுநாவல்கள்
  20. தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
  21. காலம் – வண்ணநிலவன்
  22. பிறிதொரு நதிக்கரை – எம்.கோபாலகிருஷ்ணன்
  23. மனைமாட்சி – எம்.கோபாலகிருஷ்ணன்
  24. முனிமேடு – எம்.கோபாலகிருஷ்ணன்
  25. அம்மன் நெசவு – எம்.கோபாலகிருஷ்ணன்
  26. புயல் – ரவீந்திரநாத் தாகூர் (த.நா.குமாரசாமி) (Noukadubi – Rabindranath Tagore)
  27. நூறு சுற்றுக் கோட்டை – பாவண்ணன்
  28. பனி மனிதன் – ஜெயமோகன்
  29. வைர ஊசி – அஸ்வகோஷர்
  30. கில்காமெஷ் – மொழிபெயர்ப்பு: க.நா.சு
  31. எரிவதும் அணைவதும் ஒன்றே – போகன் சங்கர்
  32. இத்தாலியத் திரைப்பட மேதை டி சிகா – எஸ்.ஆனந்த்

ஆங்கிலத்தில்:

  1. 1984 – George Orwell
  2. Titus Andronicus – Shakespeare (RR)
  3. Slaughterhouse Five – Kurt Vonnegut
  4. The court statement of Nathuram Vinayak Godse
  5. Moved by Love – Vinoba Bhave (Kalindi/Marjorie Sykes) (RR)
  6. J.P. A Biography – Allan Scarfe, Wendy Scarfe
  7. Sakuntala – Texts, Readings, Histories – Romila Thappar
  8. Annihilation of Caste – Ambedkar (RR)
  9. The Shattered Thigh and other plays – Bhasa (Translated by A.N.D.Haskar)
  10. Rhyming Rilke – Rainer Maria Rilke (Tr. Rolf A. Eberle)
  11. Resurrection – Leo Tolstoy
  12. The Black Arrow – R.L.Stevenson (RR)
  13. Government Brahmana – Aravind Malagatti (Tr. Dharani Devi Malagatti, Janet Vucinich, N. Subramanya)
  14. Hadji Murad – Leo Tolstoy
  15. Game of Thrones series – George R.R.Martin
  16. The Illiad – Homer (Tr.Alexander Pope)
  17. Charlie and the Chocolate Factory – Roald Dahl
  18. The Odyssey – Homer (Pope, Emily Wilson, Robert Fitzgerald, Robert Fagles)
  19. Chasing the Monsoon – Alexander Frater
  20. Whereas – Layli Long Soldier
  21. If not, Winter – Fragments of Sappho – Anne Carson
  22. Gandhi on Health – Mark Lindley
  23. Kasturba – A personal Reminiscence – Sushila Nayar
  24. Gandhiji on Religious Conversion – Sandhya Mehta
  25. Things Fall Apart – Chinua Achebe
  26. Arms and the Man – G.Bernard Shaw (RR)
  27. Waiting for Godot – Samuel Beckett
  28. Citizen: An American Lyric – Claudia Rankine
  29. Revolutionary Gandhi – Pannalal Dasgupta (RR)
  30. Rubaiyat of Omar Khayyam – Edward FitzGerald
  31. The Picture of Dorian Gray – Oscar Wilde
  32. Typhus – Jean-Paul Sartre (Tr. Chris Turner)
  33. My Father, The Germans and I : Essays, Lectures, Interviews – Jurek Becker (Edited by Christine Becker)

(RR – Books that I re-read this year – இவ்வாண்டு மீண்டும் வாசித்த புத்தகங்கள்)

2017ல் படித்தவை

2016ல் படித்தவை

2015ல் படித்தவை


கில்காமெஷ் – நம்காலத்தைப் பேசும் ஆதிகாவியம்

திசெம்பர் 27, 2018

உலகின் ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமெஷ் (c. 2100 BCE) தமிழில் க.நா.சு. மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது (சந்தியா பதிப்பகம்). சுமேரிய மொழியில், குனிப்பார்ம் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பல கற்கள் கிடைத்து, அவற்றிலிருந்து பலரது பங்களிப்பால் புரிந்துகொண்டு தொகுக்கப்பட்டது இக்காவியம்.

அதிலேயே சமகாலச் சிக்கல்கள் பலவற்றின் வேர்களைக் காணலாம்.

இதன் நாயகன் கில்காமெஷ். ‘எந்தக் கன்னிப் பெண்ணையும் அவள் காதலுக்கு அவன் விட்டு வைப்பதில்லை. பிரபுவின் மனைவியானாலும் சரி, போர் வீரனின் பெண்ணானாலும் சரி – எல்லாரும் அவன் பௌருஷத்துக்குப் பலியாகிவிடுகிறார்கள். ஆனால் இவன் மன்னன். நாட்டுக்குக் காவலன்; அறிஞன்; ஞானி; அழகன்; தீர்மானமுள்ளவன்.’

கில்காமெஷ் பெண்களிடம் அத்துமீறுவதைப் பொறுக்கமுடியாமல், தேவர்கள் அவனுக்குச் சமமான வலிமையுடன் எங்கிடுவைப் படைக்கிறார்கள். ஆனால், எங்கிடுவை ஒரு பெண் மூலமாகவே மயக்கி நகரத்து ஈர்க்கிறான் கில்காமெஷ். எங்கிடுவைத் தோற்கடிக்கிறான். எங்கிடு அவனது உற்ற நண்பனாக மாறுகிறான். ஆனால் அதன் பிறகு கில்காமெஷ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.

கில்காமெஷும் எங்கிடுவும் சேர்ந்து, கிருஷ்ணன்-அர்ச்சுனனை நினைவுபடுத்தும் வகையில், செடார் மரங்கள் நிறைந்த ஒரு காட்டினை அழிக்கிறார்கள். அந்த காட்டின் ரட்சகனாக இருக்கும் ஹம்பாபா ஒரு ராட்சசனாகக் காட்டப்படுகிறான். கில்காமெஷ் ஹம்பாபாவை வீழ்த்த சூரியக்கடவுளான காமாஷின் உதவியைக் கோருகிறான்.

கில்காமெஷ் நூலின் இப்பகுதியில் சில கவித்துவமான வரிகள் உள்ளன.

‘காமாஷ் இரவு உறங்கப் போய்விட்டான். அவன் தாயின் மடியில் வெளிச்சம் நிறைந்த தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவன் உறங்குகிறான்.’

காமாஷிடம் கில்காமெஷ்,

“ஹம்பாபாவின் இருப்பிடம் நோக்கி நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேயாக வேண்டும். இந்தக் காரியத்தை என்னால் செய்து முடிக்கமுடியாவிட்டால் ஏன் நீ இந்த எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தாய்? நீ எனக்கு உதவி செய்ய மறுத்தால் நான் எப்படி என் காரியத்தில் வெற்றி பெற முடியும்?”

என்று முறையிடுகிறான். காமாஷ் உதவுகிறான். நண்பர்கள் இருவரும் செடார் மரங்களை வெட்டத் தொடங்குகின்றனர்.

/செடார் மரம் விழுகிற சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட ஹம்பாபா கோபத்துடன் உரத்த குரலில் காடு அதிர, “யாரடா அவன் என் இருப்பிடம் வந்து என் செடார் மரத்தை வெட்டுவது? யாரடா அவன்?” என்று கத்தினான்./

ஹம்பாபா கில்காமெஷுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சரணடைந்தபோதும், நண்பர்கள் இருவரும் அவனை கொன்றுவிடுகின்றனர். செடார் மரங்களை வெட்டி, வேர்களை எரித்து, எடுத்துச்செல்கின்றனர். மரத்தைக் காக்கப்போரிடும் ‘ராட்சசன்’ நகரங்களைக் கட்டமைக்கும் வீர மனிதர்களிடம் தோற்கிறான்.

பின்னர் இங்கிடுவின் மரணத்துக்குப் பிறகு, கில்காமெஷ் மரணமிலா வாழ்வினை நாடிப் பெரும்பயணம் மேற்கொள்கிறான். மரணத்தை வென்று வாழும் உத்னபிஷ்டிம் என்பனைச் சந்திக்கிறான். உத்னபிஷ்டிம் நோவாவைப் போலவே ஒரு பெரும் பிரளயத்தைச் சந்தித்தவன். கடவுள் எச்சரிக்கை செய்ததால், அவனும் ஒரு படகினைக் கட்டி, அதில் விலங்குகளோடு குடியேறி பிரளயத்திலிருந்து தப்புகிறான்.

உத்னபிஷ்டிம், ‘மரணத்தை வெல்வதிருக்கட்டும்; முதலில் உன்னால் உறக்கத்தை வெல்லமுடிகிறதா பார்’ என்று கூறுவதுபோல், கில்காமெஷை ஏழு இரவுகள் உறங்காமலிருக்கச் சொல்கிறான். அவனோ ஏழ நாட்களையும் உறங்கியே கழிக்கிறான்.

மரணத்தை வெல்வதில் தோல்வியுற்ற கில்காமெஷுக்கு, உத்னபிஷ்டிம் மூப்பினை வெல்லும் ஒரு மலர் கடலுக்கடியில் இருப்பது பற்றிக் கூறுகிறான். அந்த மலரை கடலுக்கடியில் மூழ்கித் தேடி எடுத்துச் செல்கிறான் கில்காமெஷ். ஆனால், அவன் ஏமாந்த வேளையில், அதையும் ஒரு பாம்பு உண்டுவிடுகிறது.

மரணத்தையும் மூப்பையும் வெல்லமுடியாமல் தனது ஊரான ஊருகி திரும்பிய கில்காமெஷ் இந்தக் கதையை கல்லில் பொறிக்கிறான். பின்னர் இறந்துபோகிறான். ‘அவன் மகாபலசாலி – அவன் கைகளில் வீரம் செயல்பட்டது. அவன் செய்யாத தீரச் செயல்கள் இல்லை. ஆனாலும் அவன் மீண்டும் வரமாட்டான்.’

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் இயற்கையோடும் நிலையாமையோடும் பொருது கொண்டிருக்கிறான்.


தன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி

ஜூலை 23, 2018

(எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் வெளியீட்டு விழாவின் போது பேசிய அறிமுக உரையின் விரிவான எழுத்து வடிவம்)

கடந்த ஒரு வாரத்தை, எங்கள் கிராமத்தின் மெல்லிய பருவ மழையிலும் இதமான குளிர் காற்றிலும் கோபாலகிருஷ்ணனின் வெம்மையான எழுத்துகளோடு கழித்தேன்.

அழைப்பிதழில் மனைமாட்சியின் அட்டையிலும் ஈரமாய் மழைப்படம். என்னைத் தழுவிய மழையின் ஒரு துளியை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சியே.

கோபாலகிருஷ்ணனின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பே தியாகு நூலகத்தில் அவரது அறிமுகம் கிடைத்துவிட்டது. ஒரு நல்ல வாசகராகவே அவரை முதலில் அறிந்துகொண்டேன். பழகப்பழக ஓர் இனிய நண்பராக அறிந்துகொண்டேன். பின்னர்தான் மணல்கடிகை படித்தேன். அவரை ஒரு நல்ல நாவலாசிரியாக அடையாளம் கண்டுகொண்டேன். மனைமாட்சியில் அது உறுதிப்பட்டிருக்கிறது. ‘வாழ்விலே ஒரு நாள்’ என்ற புத்தகம் அரசு நூலகத்தில் தேடும் போது என் கைகளில் விழுந்தது. அலெக்ஸாண்டர் சோல்ஸனிட்சினின் ‘One day in the life of Ivan Denisovich” என்ற ரஷிய நாவலின் மொழிபெயர்ப்பு. சோவியத் குலாக்களின் கொடூரமும், நம் சூழலுக்கு அந்நியமான பனியும் குளிரும் தமிழில் அற்புதமாக வந்திருந்தது. அப்போது அவரை மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கண்டுகொண்டேன். ஆங்காங்கு படித்த பல கவிதைகளின் மூலமாக சிறந்த கவிஞராகவும் கண்டுகொண்டேன். இப்போது, இந்த உரையின் பொருட்டுதான் அவரது சிறுகதைகளைத் தொகுப்பாகப் படித்தேன். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவரது சிறுகதைகளுக்காகவே அவரைக் கொண்டாடித்தீர்க்கவேண்டும் என்று தோன்றியது.

தொடர் மின்வெட்டுகளால், அடுத்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழையில் நள்ளிரவில் அவரது முதல் தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’யிலிருந்த ‘ஒற்றைச் சிறகு’ சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். அடிபட்டிருந்த ஒரு பறவையையும், குப்பைத்தொட்டியருகில் கைவிடப்பட்ட ஒரு குழந்தையையும் பற்றிய கதை. படிக்கும் போது என் மீது ஒரு கரப்பான் பூச்சி பறந்துவந்து விழுந்தது. கையிலிருந்த புத்தகத்தால் அனிச்சையாய்த் தட்டிவிட்டேன். பூச்சி தலைகீழாக மழையில் வீழ்ந்தது. அதனால் திரும்ப முடியவில்லை. கதையை முடித்தபிறகு என்னால் அடுத்த கதைக்குச் செல்ல முடியவில்லை. மழையில் இறங்கிப் பூச்சியைத் திருப்பிவிட்டுவந்துதான் தொடர முடிந்தது.

அந்த அளவுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை கலைநேர்த்தியோடு படைத்திருக்கிறார். மானுடத்தின் மீதான நேயம் என்பதைத் தாண்டி அனைத்துயிர்களின் மீதும், இயற்கையின் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக ஆரம்ப காலம் முதலே கோபாலகிருஷ்ணனின் கதைகள் அவரைப் பிரகடணம் செய்கின்றன.

கு.ப.ரா.வின் ஆற்றாமை கதையைக் கொண்டாடுகிற அல்லது விமர்சிக்கிற அளவுக்கு கோபாலகிருஷ்ணனின் இரவு கதையையும் நாம் கொண்டாடலாம். ஆற்றாமை கதையில் கணவனைவிட்டுப் பிரிந்திருக்கிற சாவித்திரி அடுத்த உள்ளில் மகிழ்ந்திருக்கும் இளம் தம்பதியினரைக் கண்டு பொருமி, வாய்ப்பு கிட்டியபோது தடங்கல் ஏற்படுத்துகிறாள். இரவு கதையில் gender role reversal நடக்கிறது. உடல் செயலிழந்து படுத்தபடுக்கையாக இருக்கும் அண்ணன் திருமலை, தம்பியின் திருமணம் முடிந்த முதலிரவன்றுத் தொடர்ந்து இடையூறு செய்கிறான். “உடலற்றக் காமத்தின் ஊமை வலி உனக்குத் தெரிய நியாயமில்லை அம்மா” என்று கறுவுகிறான்.
இறுதியில், ‘திருப்திதானா பேயே’ என்று சாவித்திரியின் குற்றவுணர்வு ஆற்றாமையில் வெடிக்கிறது. திருமலையின் தாய், ‘ஏன்டா திருமலே இப்பிடி பண்றே..நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா…பாவம்டா’ என்கிறாள். ‘பாவந்தான்ம்மா..எதையாச்சும் அரச்சு ஊத்திரு. பாவந்தீந்துரும்’ என்கிற திருமலையின் மூலமாக, காமம் மட்டுமல்ல, ஆற்றாமையும் ஆண்பால் பெண்பால் அறியாது என்பதை இக்கதைமூலம் வெளிப்படுகிறது.

இத்தகைய gender role reversal மனைமாட்சியில் தொடர்ந்து நிகழ்கிறது.

மனைமாட்சியில் ஆறு கதைகள் மூன்று பகுதிகளாகச் சொல்லப்பட்டிருகின்றன. மனைமாட்சியைப் படிக்கும் போதும், படித்து முடிந்த பிறகும் எனக்குள் எழுந்த முதல் கேள்வி – ஒவ்வொரு பகுதியிலும் வருகிற இரண்டிரண்டு கதைகளுக்குள்ளே, ஒரு மெல்லிய இழைதான் தொடர்ச்சியாக இருக்கிறது. இவை ஆறும் தனித்தனி நாவல்களாகவேகூட வெளியிடப்பட்டிருக்கிலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு கதையிலும் அடர்த்தியும் சாராம்சமும் இருக்கின்றன. இந்த ஆறு கதைகளும் சேர்ந்து எப்படி ஒற்றை நாவலாகின்றன?

ஏற்கனவே தமிழிலும் உலக இலக்கியங்களிலும் பல கதைச்சரடுகளையுடைய நாவல்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை ஓர் ஊரின் கதையைச் சொல்லக்கூடும். ஒரு மனிதன் ஒரு நாளில் சந்திக்கின்ற பல்வேறு மனிதர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு காலகட்டத்தின் கதையைக் கூறக்கூடும். ஒரு குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு குடியின் பல்வேறு தலைமுறைகளைப் பற்றி கூறக்கூடும். ஏதோ ஒரு வகையில் இவையெல்லாம் ஒரு மையச்சரடால் பிணைக்கப்படுகின்றன. மணல்கடிகையே கூட இப்படிப் பல கதைகளை ஒருங்கே கையாண்ட ஒரு நாவல்தான். ஐந்து நண்பர்களின் வாழ்க்கையைப் பின்தொடர்வதன் மூலமாக ஒரு நகரத்தின் கதையை, சமூகமாற்றத்தின் கதையை, ஒரு காலமாற்றத்தின் கதையைக் கூறுவார்.

அப்படியாக மனைமாட்சியின் ஆறு கதைகளை இணைக்கிற சரடு, அதன் தலைப்பிலேயே தொடங்கி, தொடர்ந்து வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வள்ளுவன் விரல்பிடித்து அவனை ஏற்றும் மறுத்தும் நாவல் நகர்கிறது எனலாம்.

மனைமாட்சி நாவல் இன்றைய சமூகத்தில், குடும்ப வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைச் சொல்கிறது. சிக்கலான இன்றைய குடும்ப வாழ்வின் முக்கிய பரிமாணங்களை வெளிப்படுத்த ஒரு குடும்பம், ஒரு கதையால் சாத்தியமில்லை என்று கோபாலகிருஷ்ணன் ஆறு கதைகளைக் கையாண்டிருக்கிறார் போலும். பெண்ணின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச வந்த நாவலாகவும் இதைக்காணலாம்.

மணமான ஒரு சில நாட்களிலேயே எந்தத் தவறும் செய்யாமல் கணவனைப் பிரிந்த பின்னும், ஒரு பெண் பிரிவை மிக வலுவாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு எதிர்கொள்கிறாள். இன்னொரு பெண் கணவனோடு சேர்ந்தே இருக்கமுடியாத ஒரு சூழலை உருவாக்கிய பின், தன் மீது சுமத்தப்பட்ட பிரிவால் நொறுங்கிப்போகிறாள்.

உடன்வாழத்தகுதியற்றவன் என்று ஒற்றை நிகழ்வின் மூலமாக ஒரு பெண் நிராக்கிற ஒருவனை இன்னொரு பெண் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாள்.

வீட்டினர் அனைவுரும் வற்புறுத்தும்போதுகூட கணவனை இழந்த ஓர் இளம்பெண் மறுமணம் புரிய மறுக்கிறாள். வீட்டினர் கட்டாயத்தால் மணம்புரிந்துகொண்ட இன்னொரு பெண் உடனடியாக மணவாழ்வை முறிக்க முனைகிறாள்.

இப்படியாக இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை எதிரெதிர் கோணங்களில் இந்நாவல் அணுகுகிறது. இரண்டிரண்டு கதைகளாய் வெம்மையையும் தண்மையையும் மாறிமாறித் தருகின்றது என்றும் சொல்லலாம்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

என்கிறார் வள்ளுவர், ஒரே பெண்ணிடம்தான் பிணியும் மருந்தும் உள்ளன என்கிற பொருளில். கோபாலகிருஷ்ணன் ஒரு கதையில் பெண்ணால் ஏற்படும் நோய்க்கு, இணைகதையில் பெண்ணையே மருந்தாக்கிக் காண்பிக்கிறார்.

இக்கதைகளின் சில கூறுகளையும் கதைமாந்தரின் சில சாயல்களையும் நாம் வேறு கதைகளில் பார்த்திருக்கிறோம். ஏன் வணிகத் திரைப்படங்களில் கூட கண்டிருக்கிறோம். முதல் கதையின் சாந்தியில் புதுபது அர்த்தங்கள் கீதாவும், கடைசிக் கதையின் கலைவாணியில் மௌன ராகம் ரேவதியும் எனக்கு நினைவில் வரத்தான் செய்தார்கள். ஆனால், நிஜ வாழ்வோடு இருக்கக்கூடிய நெருக்கம், கதைகளில் இருக்கிற அடர்த்தி, வாழ்க்கைக்குள் அவை செல்கின்ற ஆழம் என்று இந்நாவல் எட்டிப்பிடிக்கற தளம் முற்றிலும் வேறானது, வெகுவாய் மேலானது.

சில உறவுச்சிக்கல்களைப் பார்க்கும்போது, இவை நம்ப முடியாத நிகழ்வுகளோ என்றுகூடத் தோன்றலாம். ஆனாலும், அவை நாம் நம்ப விரும்பாத நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

முதல் கதையின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கிறது.

/கனலும் இரும்புக் கம்பியுடன் நெருங்கி நிற்கும் சாந்தியின் முகத்தைக் கண்டதும் பட்டென்று உடலைக் குறுக்கினான் தியாகு. வெறியேறிய கண்கள். வறட்டுச் சிரிப்பு. பாதங்களைப் பார்க்கிறாள். மறுகணம் அவள் பார்வை அவன் முகத்தில் படிகிறது. “ஒரு இழுப்பு இழுத்தாத்தான் நீ சரியா வருவே.”/

முதல் முறை இதைப் படிக்கும்போது ஏதோ நனவோடைக் காட்சியென அதிகம் கவனம் செலுத்தாமல் கடந்து சென்றுவிட்டேன். மறுமுறை பார்க்கும்தோதுதான் இப்படியொரு காட்சியை மனம் நம்ப மறுத்ததன் விளைவுதான் என்னை அப்படிக் கடந்து போகச் செய்தது என்று தோன்றுகிறது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி என்கிற பாத்திரத்தின் சிக்குகளை அவிழ்த்துச் செல்வதில் கோபாலகிருஷ்ணனின் படைப்பாளுமை வெளிப்படுகிறது. அவளது பாத்திரப்படைப்பு ஊகங்களுக்கு இடமில்லாமல் முற்றிலும் துலங்கிய பிறகு நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது. இங்கும் ஒரு gender role reversal செய்கிறார்.

பெண்கள் உள ரீதியான மிரட்டல்களாலும், வசைச்சொற்களாலும் ஆண்களைத் அச்சுறுத்துவதை நாம் பல கதைகளில் கண்டிருக்கலாம். ஆனால், உடல்ரீதியான வன்முறையைச் செலுத்துவதை இந்தக் கதை அளவுக்கு மூர்க்கமாய்ச் சொன்ன ஆக்கம் என்று நான் வாசித்தவற்றுள் வேறு எதுவும் இல்லை.

குழந்தைகளின் பொருட்டு தியாகு சாந்தியின் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்கிறான். கதையை இன்னும் கூர்ந்து கவனித்தால், சாந்தியின் பொருட்டுமே அவன் சாந்தியைச் சகித்துக்கொள்கிறான்.

இன்னொரு தளத்தில், இது நுகர்வு கலாச்சாரம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாபெரும் சீர்கேட்டைச் சித்தரிக்கிற கதையாகவும் உள்ளது. அண்மையில் வந்த சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை இதனோடு ஒப்பிடலாம்.

உண்மையில் இக்கதையைப் படிக்கிறவரை இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்குறள் என்னுள் இவ்வளவு விரிந்திருக்கவில்லை.

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை உடையவளாக, கணவனின் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நடத்துகிறவளே சரியான துணையாக இருப்பாள் என்கிறார் வள்ளுவர். கதையை முடித்தபின் இக்குறள் பெரும் விரிவை ஏற்படுத்தியது.

காண்கிற பொருள்ளையெல்லாம் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பது ஒரு நோயாக இன்று உருவெடுத்துவிட்டது. கடனட்டைகள் எந்த அளவுக்கு நம்மை complusive buying disorder நோக்கித் தள்ளுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. பல அதிர்ச்சியான தருணங்கள் இக்கதையில் உள்ளன.

இதன் இணைக்கதையும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினாலும், போகப்போக வெம்மையைத் தணிக்கும் தென்றாய் வருடத்தொடங்குகிறது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

என்று காமத்துப்பாலில் ஒரு குறளுண்டு. தீ தொட்டால்தான் சுடும். காம நோய் போல் விட்டாலும் சுடுமா என்கிறார் வள்ளுவர். இக்கதையின் பிரச்சனையே, ராஜம்பாய்க்கு தொட்டாலும் தீ சுடவில்லை என்பதுதான். எத்தனை தொலைவும், காலமும் கடந்தபின்னும் காமநோய் சுடுவதாக இருக்கிறது.

இரண்டாவது பகுதியில் வருகிற இரு கதைகளும் ஓரளவு பிணைக்கப்பட்ட இணை கதைகளாகவே உள்ளன.

ஆரம்பத்தில், ஓர் உக்கிர நாடகத்தில் இருந்து அபத்த நாடகத்துக்குள் நுழைந்த விட்ட உணர்வு ஏற்பட்டது. கட்டியவளைத் தெருவில் விட்டுவிட்டு அவளறியாமல் உணவகத்தில் ஒரு கட்டுகட்டுகிறான் கணவன். பொறுக்கமாட்டாத புது மனைவி பிரிந்து செல்கிறாள். இப்படியொரு அபத்த நிகழ்வோடு தொடங்கும் கதை பின்னர் பல்வேறு உளவியல் சிக்கல்கள் உறவுச் சிக்கல்கள் என்று விரிந்து செல்கிறது.

நாவலின் மூன்றாம் பாகத்தில் வரும் விநோதினி, இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு மறுமணம் செய்ய மறுப்பவளாக இருக்கிறாள். ஆனால், சுற்றத்தார் வற்புறுத்துகின்றனர். மறுமணம் ஓரளவு பரவலாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், இறந்துவிட்ட கணவன் குடும்பத்தின் சொத்து அவளுக்குச் சென்றடைவதில் தயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்நாவலில் அவள் மாமனார் சொல்கிறார்:
“என் பெரிய மருமகளுக்கும் பேரன் பேத்திக்கும்னு நான் குடுத்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி அவ நாளைக்கு மனசு மாறி இன்னொருத்தரைக் கட்டிட்டாலும் என் முடிவுல எந்த மாத்தமும் இருக்காது. ஆமா. நல்லாக் கேட்டுக்குங்க.”

இது இந்நாவலின் உச்சமான தருணங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

சில உடலுறவுக் காட்சிகளையும் வன்புணர்வுக் காட்சியையும் இத்தனை அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமா என்று, என்னுடைய இயல்புக்கு, எனக்கொரு விலகல் ஏற்படத்தான் செய்தது. ஆனால், கோபாலகிருஷ்ணன் ஒரு காட்சியையோ உணர்வையோ விவரிக்க முடிவுசெய்துவிட்டால், கட்டுக்கடங்கா ஆறாகத்தான் பாய்கிறார்.

உதாரணமாக, அவரது முனிமேடு தொகுப்பில் உள்ள பிற்பகல் விளையும் என்ற சிறுகதையில், ஒரு சிறுவன் தேங்காய் பன் மீது பிரியமாக இருக்கிறான். அந்தத் தேங்காய் பன் காட்சியை அத்தனைத் தித்திப்பாய் விவரிக்கிறார்:

‘தேங்காய் பன்னை சாப்பிடும்போது பலரும் பக்குவம் தெரியாமல் சாப்பிடுவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். முக்கோண வடிவில் இருக்கும் தேங்காய் பன்னின் கூரிய முனையை முதலில் பார்க்கும்போது வாகாய் பிளந்துகொண்டு விரல்களால் விண்டெடுக்க வசதியாகத்தான் தெரியும். பிளவினூடாக தேங்காயும் சர்க்கரையும் கலந்து மின்னும் பரப்பு பரவசப்படுத்தும். ஆனாலும் நுனியிலிருந்து பன்னை பிய்த்து சாப்பிடக்கூடாது. தேங்காயும் சர்க்கரையும் இதமான சூட்டிலிருக்கும் பன்னும் சேர்ந்து வெகு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ருசிக்கு மயங்கிவிட்டால் அதோ கதிதான். பிறகு கடைசியில் முக்கோணத்தின் அடிப்பக்கம் வரும்போதுதான் தெரியும் சேதி. பன்னின் தடிச்ச அடிப்பக்கத்தை வாயில் போட்டு மெல்லும்போது தேங்காயில்லாமல் சவசவப்பு மட்டும்தான் மிஞ்சும்.

சண்முகம் முதலில் வெறும் பன்னை மட்டும்தான் தின்பான். இதமான சூட்டில் வெறும் பன்கூட லேசான தித்திப்புடன் சுவையாகவே இருக்கும். இனிப்புக்கு நாக்கு மெல்லப்பழகுவதுபோல சுவை கூடும். இரண்டு அல்லது மூன்றாவது விள்ளலில் தேங்காயும் சர்க்கரையும் வாய்க்கத்தொடங்கிவிடும். இப்போது வெறும் பன்னின் சவசவப்பு காணாமல் போய் தேங்காய் பன்னின் அசலான சுவை தென்பட்டிருக்கும்.’

ஒரு தேங்காய் பன்னைக்கூட இத்தனை ரசனையுடன் விவரிப்பவர் காமத்தைப் பட்டும்படாமல் சொல்லிவிடவா முடியும்?

ஒரு இளம் பெண் எழுத்தாளர் ஸ்காட் பிட்ஜெரால்டுக்கு தனது கதையை அனுப்பி அவரது கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் இப்படி மறுமொழி அனுப்பியிருந்தார்.

Dear Frances:

I’ve read the story carefully and, Frances, I’m afraid the price for doing professional work is a good deal higher than you are prepared to pay at present. You’ve got to sell your heart, your strongest reactions, not the little minor things that only touch you lightly, the little experiences that you might tell at dinner. This is especially true when you begin to write, when you have not yet developed the tricks of interesting people on paper, when you have none of the technique which it takes time to learn. When, in short, you have only your emotions to sell.

This is the experience of all writers. It was necessary for Dickens to put into Oliver Twist the child’s passionate resentment at being abused and starved that had haunted his whole childhood. Ernest Hemingway’s first stories “In Our Time” went right down to the bottom of all that he had ever felt and known. In “This Side of Paradise” I wrote about a love affair that was still bleeding as fresh as the skin wound on a haemophile.

[….]

பின் குறிப்பாக அவர் சொன்னதும் முக்கியமானது:

P.S. I might say that the writing is smooth and agreeable and some of the pages very apt and charming. You have talent—which is the equivalent of a soldier having the right physical qualifications for entering West Point.

‘ஒரு எழுத்தாளன் தன் இதயத்தைத் திறந்து, தன் ஆழமான உணர்வுகளைக் கொட்டத் தயாராக இருக்கவேண்டும். எழுதுவதற்கான விலையை நீ கொடுக்கத்தயாராக இல்லை,’ என்கிறார்.

கோபாலகிருஷ்ணன் அந்த விலையையும் அதற்கு மேலும் தருவதற்குத் தயாராக இருப்பதாலேயே அவரால் இப்படியொரு படைப்பைப் படைக்க முடிகிறது. கசப்பும் வேதனையும் கருணையும் எல்லாம் உதிரமும் சதையுமாய்க் கலந்தே வருகின்றன. நாவலின் மங்கையின் சொற்களில்,

“அந்த ஒரு ராத்திரியில் எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன் ஆயுள் மொத்தத்திலேயும் அனுபவிக்க வேண்டிய கசப்பையும் வேதனையையும் ஒரே ராத்திரியில் அனுபவித்துவிட்டேன். வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் பார்த்துவிட்டேன். வக்கிரமும் குரூரமுமான ஒன்று, பயங்கரமானது. நினைத்தாலே வலிக்கும். ஆனால் அதே ராத்திரியில்தான் அந்த இருவரையும் பார்த்தேன். இப்போது நான் உயிரோடு இருப்பது அவர்களின் கருணையில்தான். அந்தப் பெண்ணின் கண்ணீரும் அவளது அம்மாவின் ஆக்ரோஷமும் மாறி மாறி என்னை அலைகழிக்கும். அடியோடு நினைவிலிருந்து அழிக்க முயன்றும் மறக்கவே முடியாத ராத்திரி. அதுதான் எனக்கு இத்தனை பக்குவத்தையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.”


சுனில் கிருஷ்ணன்

ஜூலை 1, 2018
[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]
நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.
சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.
பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.
காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.
காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.
அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.
வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.
ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.
இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)
அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.

இன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி

ஜூன் 11, 2018

இணையம், கிண்டில், நண்பர் தியாகுவின் நூலகம், தங்கை உறுப்பினராக உள்ள ஜஸ்புக்ஸ் நூலகம், நான் சளைக்காமல் வாங்கும் புத்தகங்கள் என்று படிப்பதற்கான நூல்களுக்குப் பஞ்சமே இல்லை எனும் போதும், இன்னும் நான் அரசு நூலகத்தை விடவில்லை. நாங்கள் மூன்று பேரும் உறுப்பினர்களாக உள்ளதால், கைநிறைய அள்ளிவரமுடிகிறது. பலரும் குறையாகக் கருதுவதுதான் எனக்கு அரசு நூலகங்களுக்குச் செல்வதில் இருக்கக்கூடிய அணுகூலமாகத் தெரிகிறது – எதையும் குறிப்பாகத் தேடாமல், எந்தத் திட்டமும் எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் புத்தகங்களை அடைய முடிவது. இதுவரை கேள்விப்பட்டிராத, யாரும் பரிந்துரைத்திருக்காத புத்தங்களைக்கூட அவ்வப்போது படித்துப்பார்க்கத் தோன்றும். பல சமயங்களில் புத்தகங்கள்தாம் நம்மைக் கண்டடைகின்றன.

அப்படி என்னைக் கண்டடைந்த ஒரு புத்தகம் நட் ஹாம்சனின் பசி. க.நா.சு. மொழிபெயர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான் எடுத்தேன். மூல எழுத்தாளரைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. புத்தகத்திலும் எந்தக் குறிப்பும் இல்லை. எந்த நாடு என்று தெரியவில்லை. பெயர்கூட ஆங்கிலத்தில் சரியாகத் தரப்படவில்லை. புரட்டிப் பார்த்தபோது முதல் பக்கத்தின் சில வரிகளே என்னை உள்ளே இழுத்துவிட்டன. படித்துக்கொண்டிருந்த வேறு பல புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இதைப் படிக்கத்தொடங்கினேன். பல பக்கங்கள் கடந்தபிறகுதான் கதை நடக்குமிடமான கிறிஸ்டியானியா நார்வே நாட்டில் உள்ளது என்று புரிந்தது. பாதிப் புத்தகம் முடிந்தபிறகுதான் இணையத்தில் தேடிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் அறியாமைக்குக் கண்ணாடி பிடித்தது. இந்த நாவல் (Hunger/Sult) 1890ல் வெளிவந்திருக்கிறது. உடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எழுதிய நார்வே எழுத்தாளர் Knut Hamsun, 1920ல் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். ஓஸ்லோ நகரத்தின் முந்தைய பெயர்தான் கிறிஸ்டியானியா (‘அங்கிருந்து வசித்தவன் எவனும் அதைப்பற்றிய நினைவுகளிலிருந்து என்றும் தப்ப முடியாது’ என்பது இப்புத்தகத்தின் தொடக்க பத்தியில் வருகிறது. க.நா.சு ஜார்ஜ் எகெர்டனின் ஆங்கிலப் பதிப்பைப் பின்பற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். பிந்தைய Robert Bly மொழிபெயர்ப்பில் இவ்வரி இன்னும் சிறப்பாக வந்துள்ளது: that strange city no one escapes from until it has left its mark on him. . .).

நட் ஹாம்சனை நவீன இலக்கியத்தின் தந்தை என்று ஐசக் பாஷ்விஸ் சிங்கர் கூறுகிறார். “The whole modern school of fiction in the twentieth century stems from Hamsun, just as Russian literature in the nineteenth century ‘came out of Gogol’s greatcoat. They were completely Hamsun’s disciples: Thomas Mann and Arthur Schnitzler (…) and even such American writers as Fitzgerald and Hemingway,” என்கிறார். ஹாம்சன் நனவோடை எழுத்துமுறையின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நார்வேவின் தஸ்தயெவ்ஸ்கி என்று அறியப்பட்டிருக்கிறார். இந்த நாவலின் நாயகனையும் குற்றமும் தண்டனையும் ரஸ்கோல்னிக்கோவையும் பலரும் ஒப்பிடுகின்றனர்; தனது நூலைவிட ரஸ்கோல்னிக்கோவிடம் அதிக ஆன்ம உணர்வெழுச்சிகளைக் கண்டுவிடமுடியாது என்று ஹாம்சனும் ஒரு கடிதத்தில் எழுதுகிறார். நாவலின் கூறுமுறை நிலவறைக் குறிப்புகளையும் நினைவுக்குக்கொண்டுவருகிறது.

35142960_10155555315598148_8873543016405532672_n

‘பசி’ நாவலின் கதைசொல்லி ஓர் இளம் எழுத்தாளன். எப்போதாவது, ஒருசில கதை கட்டுரைகள் சொற்ப ஊதியத்துக்குப் பதிப்பிக்கப்படுகின்றன. வேறு வேலை தேடும்போதெல்லாம் நிராகரிப்பைச் சந்திக்கிறான். விண்ணப்பக்கடிதத்தில் தேதி தவறாக எழுதியதால் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலைகூட கிடைக்காமல் போகிறது. உண்மையில் பசி தான் கதையின் நாயகன். 160 பக்கங்களுக்கு, வரிக்கு வரி பசி வியாபித்திருக்கிறது. பசி கதைநாயகனை விரட்டுகிறது; புரட்டி எடுக்கிறது; பைத்தியமாக்குகிறது; சிறப்பான கதை எழுதவைக்கிறது; உலகின் மிகச்சிறந்த படைப்பு அது என்று நம்பவைக்கிறது; அது பதிப்புக்கு ஏற்கப்பட்டபின், வேறு எதுவும் நல்லதாக எழுத முடியாமற் செய்கிறது; எழுதிய பக்கங்களைக் கிழத்தெறிய வைக்கிறது; காரணமில்லாமல் ஒரு பெண்ணை வம்புக்கிழுக்கவைக்கிறது; தேவையின்றிப் பொய் சொல்லவைக்கிறது; எதேச்சையாகக் கிடைக்கும் பணத்தை தானம் செய்யவைக்கிறது; தானம் கொடுத்துவிட்டுப் பின்னர் அதே பெண்ணிடமிருந்து மீண்டும் திருட வைக்கிறது; போட்டிருக்கும் சட்டைமுதல் கடைசிக் கோட்டின் பொத்தான்கள் வரை எல்லாவற்றையும் அடமானம் வைக்கச் செய்கிறது.

‘உடலில் பசி வயிற்றைத் திருகிற்று. ஒரு விநாடி ஓய்வு கிடைக்கவில்லை. எச்சிலை விழுங்கினேன் – அது உணவாகும் என்று நம்பினேன். பசியையாற்றும் என்று எண்ணினேன்,’ என்கிற வரி என்னை உலுக்கிப்போட்டது. எப்போதாவது கிடைக்கும் உணவையும் அதீத பசியால் வாந்தியெடுக்கிறான். தண்ணீர் கூட அவன் வயிற்றில் தங்குவதில்லை. வழியில் கிடைக்கும் மரத்துண்டுகளை, குப்பையில் கிடக்கும் ஆரஞ்சு தொப்பையை, தனது சட்டைப் பையை என்று அவன் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறான். தனது கைவிரலைக்கூட உண்ணலாமா என்கிற எண்ணம் அவனை ஆட்கொள்கிறது. ‘கண்கள் திறந்திருக்க நான் செத்துக் கொண்டிருந்தேன். கை விரலை வாயில் போட்டுச் சப்பினேன். உடனே ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றிற்று. கடித்துப் பார்த்தால்? சிறிதும் யோசிக்கத் தயங்காமல், கண்களை மூடிக்கொண்டு கடித்தேன்.’

இத்தனை பசியிலும் தன்மான உணர்வும் வறட்டுப் பெருமையும் அவனைவிட்டுப் பெரும்பாலும் விலகுவதில்லை. பசியின் உச்சங்களில் அவையும் அவ்வப்போது சமரசத்துக்கு உள்ளாகின்றன. நண்பன் அவனுக்கு இரவலாகத் தந்திருந்த கம்பளியைப் பல நாட்கள் அடமானம் வைக்காமல் பிடிவாதமாக இருக்கிறான். இறுதியில் அடமானம் வைக்கச்செல்லும்போது, அடகுக்கடைக்காரன் மறுத்துவிடுகிறான். ஒருவகையில் அது அவனுக்குத் திருப்தியாக இருக்கிறது. அவச்செயலிலிருந்து தப்பிவிட்டதாக மகிழ்கிறான்.

அவன் துரத்திச்சென்று வம்புக்கிழுத்த பெண் பின்னர் அவனைச் சந்திக்கும் போது அவன்பால் ஈர்க்கப்படுகிறாள். குடி போதையில்தான் அவன் அவ்வாறு நடந்துகொண்டான் என்று நம்புகிறாள். அவனும் முதலில் அதை மறுக்காமல் இருக்கிறான். பிறகு தன்னைப்பற்றியும் தனது ஏழ்மையைப் பற்றியும் கூறுகிறான். தனது பைத்தியகாரத்தனமான சில செயல்களைப்பற்றியும் அவளோடு பகிர்ந்துகொள்கிறான்.

“அன்றுகூட நீ குடித்திருக்கவில்லை. பைத்தியம் போல.’
“பசி, பைத்தியம் ஒன்றுமில்லை. நான் அப்போதுதான் சாப்பிட்டிருந்தேன்,” என்று அப்போதும் அவனது வறட்டு கௌரவத்தை விட்டுத்தராமல் பேசுகிறான்.

சிறிது நேரத்திலேயே உரையாடலுக்கும் கலவிக்குமிடையில் அவர்களது உறவு பிளவுபடவும், ‘காலிப்பயல் அல்ல என்பது அவளைச் சோர்வடையச் செய்ததா? நான் வெறும் ஏழை என்பது பிடிக்கவில்லையா?’ என்று நினைக்கிறான்.

அவளைவிட்டு விலகி வெளியேறும் போது: ’நான் வாசற்படியை விட்டு நகராமல் நின்று பிதற்றிக் கொண்டேயிருந்தேன். பைத்தியமாக இருக்க வேண்டுமா உணர்ச்சி மிகுந்து காணப்படுவதற்கு? அதற்கு அவசியமே இல்லையே! அறிவுள்ள ஏழை கவனிப்பவற்றை பணக்காரன் அறிவுள்ளவன் கவனிப்பதில்லை. பைத்தியகாரன், ஏழை இருவருமே ஒன்றுதான். நெருப்புச் சுட்ட வடுப் போல என் உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் ஏழ்மை வடுக்கள் இருந்தன.’

காஃப்காவின் பசிக் கலைஞன்(The Hunger Artist) என்ற சிறுகதை இந்நாவலோடு இணைத்துப்பார்க்கப்படுகிறது. பசிக் கலைஞனில் பசி குறியீட்டுத்தன்மையுடன் வருகிறது. தஸ்தயெவ்ஸ்கியின் முதலை (The Crocodile) கதையில், முதலையால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குள்ளிருந்து பேசும் மனிதனைக் காண மக்கள் கட்டணம் கட்டி வருவார்கள். அது போல, பசிக்கலைஞன் பட்டினிகிடப்பதை நிகழ்த்துகலையாகச் செய்கிற ஒருவனைப் பற்றிய கதை; கூண்டுக்குள் உணவின்றி பல நாட்கள் இருக்கும் அவனை மக்கள் கட்டணம் கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு அதில் ஆர்வம் இழந்துவிடுகின்றனர். சர்க்கஸில் சேர்கிறான். அங்கும் கூட்டம் விலங்குகளைப் பார்க்க நகர்ந்துவிடுகிறது. கவனிப்பாரற்று பசிக்கலைஞன் இறந்துபோகிறான். பசியோடு இருப்பதைத்தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது, அல்லது அவன் விரும்புகிற உணவு அவனுக்குக் கிடைப்பதில்லை என்கிற வாதங்களையும் வெவ்வேறு தருணங்களில் முன்வைக்கிறான். ஆனால், பசி நாவலின் நாயகன் பசியின் ருசியில் அவ்வப்போது திளைத்தாலும், பெரும்பாலும் பசியால் துடிக்கிறான். அவன் பசியைக் கலையாகக் கொண்டவன் என்று கருதமுடியுமா, தெரியவில்லை. அவன் பசியால் வாடுகிற கலைஞன். பசியால் தன்னையே வருத்திக்கொள்கிற கலைஞன். பசியைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் அவனுக்கு இருக்கின்றன. ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை, அல்லது அவன் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை.

இந்நாவலில் பசி ஒரு குறியீடாக இல்லை. அபத்தமாக இல்லை. அதன் பேரியல் பொருளாதார, அரசியல் காரணிகளுக்குள் ஹாம்சன் செல்வதில்லை. முகத்தில் அறைகிறமாதிரி இயல்பாக, அப்பட்டமாக உள்ளது. இத்தனை இருண்ட, கனமான, சம்பவங்களும் பாத்திரங்களும் அதிகமற்ற ஒரு கதை ஒரு சில பக்கங்களில் விரக்தியை ஏற்படுத்திச் சலிப்பூட்டக்கூடும். இதில் அவ்வாறு நிகழாமற் தடுப்பது கசப்பும் அவலமும் கலந்த அங்கதம்.

ஹப்பால்டி என்கிற ஒரு பொய்யான பெயரையும் நபரையும் இவன் உருவாக்க, ‘ஆமாம், ஹப்பால்டி’ என்று தலையை ஆட்டிய கிழவனுடனான நீண்ட உரையாடல் இதற்கு எடுத்துக்காட்டு. ஹப்பால்டியின் அண்ணன், மனைவி, மகள் யாலஜாலி, அவர்களது தொழில், அழகு என்று விரிந்துகொண்டே செல்கிறது. ‘நான் சொன்னதை பூராவும் நம்பிவிட்டான். அதுபற்றி அவன் ஆச்சரியப்படவும் இல்லை. இது பற்றி எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். நான் சொல்வதைக்கண்டு அவன் ஆச்சரியப்பட வேண்டும் என்று நினைத்தேன் நான்,’ என்று அடுக்கிக்கொண்டே போகிறான். கடைசியில் சலித்துப்போய், ‘ஏனையா கிழவரே! நான் இங்கே உட்கார்ந்து கொண்டு பொய்யாகப் புளுகிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறாயா நீ? ஹப்பாலடி என்கிற பெயருடைய மனிதன் ஒருவன் இல்லவேயில்லை என்று எண்ணுகிறாயா நீ?’ என்று கோபித்துக்கொள்கிறான்.

கிறிஸ்டியானியா நகரில், தங்குமிடமற்றவர்களுக்கு, காவல்நிலையத்தில் இரவு தங்க அறை ஒதுக்குகிறார்கள். அவனும் ஓர் இரவு அங்கு தங்குகிறான். பத்திரிக்கையாளன், வீட்டு சாவி தொலைந்துவிட்டது என்று கதைக்கிறான். அதனாலேயே, காலையில் கிளம்புகையில், எல்லாருக்கும் உணவுச் சீட்டுகள் தரப்படும்போது, இவனுக்குத் தேவைப்படாது என்று தராமல் விட்டுவிடுகிறார்கள். கௌரவத்தை விடாமல், பசியோடு திரும்புகிறான். ‘ஒரு சீட்டு, எனக்கும் ஒரு சீட்டு வேண்டும், மூன்று நீண்ட இரவுகளும் பகல்களும் நான் ஒன்றுமே புசிக்கவில்லையே, ஒரு துண்டு ரொட்டி, எனக்கு யாரும் சீட்டுத் தரவில்லை, எனக்கும் கேட்கத் தைரியம் வரவில்லை. […] லக்‌ஷப் பிரபு மாதிரி கைகளை என் கோட்டுப் பைக்குள் போட்டுக்கொண்டு தலையை நிமிர்த்திக் கொண்டு ஜோராக வெளியேறினேன்.’

அங்கு தனியறையில் தங்கியிருந்த அந்த இரவிலும், சகிக்கமுடியாப் பசியும் ஆழ்ந்த இருளும் அவனைப் போதையேறிய உன்மத்த நிலைக்குத் தள்ளுகின்றன.

‘என் கற்பனையில் நான் ஒரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டேன். என் படுக்கையில் எழுந்து சொன்னேன். மொழியிலே இல்லாத வார்த்தை அது. நானாகக் கண்டுபிடித்தது. ‘குபோவா’ அதிலே அட்சரங்கள் இருக்கின்றன. கடவுள் பெயரால் சொல்லுகிறேன் – அது ஒரு புது வார்த்தைதான். ‘குபோவா’ மிகவும் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தை இது.

கண்களைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருந்த என் கற்பனையைக் கண்டு நானே ஆனந்தமடைகிறேன் – சிரிக்கிறேன்.என் கற்பனையை ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும் – யாராவது திருடி விடுவார்கள். ரகசியமாக எனக்கு நானே பேசிக் கொள்கிறேன். பசி இப்போது இன்ப போதையைத் தந்துவிட்டது. பசிப் பரவசம் இது. காலியாகவும் வலியில்லாமலும் இருக்கிறேன் நான்.’

தான் கண்டுபிடித்த அச்சொல்லுக்கு ஒவ்வொரு அர்த்தமாகக் கொடுத்துப்பார்த்து ஒதுக்குகிறான். ‘அவ்வார்த்தை மனதை மீறியதொன்றைக் குறிக்க வேண்டும் – ஒரு ஆன்மீக அனுபவம், உணர்ச்சி, ஒரு நிலையைக் குறிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்னால். ஆன்மீகத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன். என் மன அரங்கிலே யாரோ எப்படியோ குறுக்கிட்டு ஏதோ தொல்லை தருவது போல இருக்கிறது.’

பாரதி ‘ஓம்’க்கு இணையான சொல்லைத் தமிழில் உருவாக்க முனைந்தது நினைவுக்கு வந்தது. அவனுக்கும் பசி பழக்கப்பட்ட கலைதானே.

——-

பி.கு.:
தனது முதுமையில், நட் ஹாம்சன் நாசிச ஆதரவாளராக இருந்திருக்கிறார். யூத வெறுப்பாளர் என்று சொல்லமுடியாது; ஆங்கிலேயர்கள் மீதான காழ்ப்பு அதற்குப் பெரும் காரணமாக இருந்திருக்கலாம். நார்வேயை ஜெர்மனி கைப்பற்றியபோது வரவேற்றிருக்கிறார். தனது நோபல் பரிசை கோயபல்ஸுக்கு அனுப்பியிருக்கிறார். ஹிட்லரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஆனால், ஹிட்லருடனான சந்திப்பு சுவாரசியமானது. அப்போது ஹாம்சனுக்கு 84 வயது. சரியாகக் காதுகேட்காது. ஹிட்லர் இலக்கியம் பற்றியும் மேதைமை குறித்தும் பேச நினைக்க, ஹாம்சன் அரசியல் பற்றியே பேசியிருக்கிறார். நார்வே நாட்டிலிருந்த ஜெர்மானியப் பிரதினிதியை விலக்க வேண்டும் என்று ஹாம்சன் ஹிட்லருடன் காரசாரமாக விவாதித்திருக்கிறார். ஹிட்லர் பேசும்போது அடிக்கடி குறுக்கிட்டு மறுத்துப்பேசியிருக்கிறார். இடையிடையே அழுதிருக்கிறார். ‘ஒரு சுவரோடு உரையாடிக்கொண்டிருக்கிறோம்,’ என்று மொழிபெயர்ப்பாளரிடம் கூறியிருக்கிறார். நல்ல வேளையாக, மொழிபெயர்ப்பாளர் அதையும் வேறு பல கூற்றுகளையும் மொழிபெயர்க்கவில்லை. ஹிட்லர், இறுதியாக, ‘வாயை மூடுங்கள்! உங்களுக்கு எதுவும் புரியவில்லை,’ என்று கோபமாகச் சென்றுவிட்டார். ‘குட் பை’ சொல்லி தனிப்பட்ட முறையில் ஹிட்லர் விடைபெறவில்லை என்று ஹாம்சன் அழுதிருக்கிறார். ஹிட்லர் தனது உதவியாளர்களிடம், ‘இதுமாதிரியான நபரை இனி ஒரு போதும் நான் சந்திக்க விரும்பவில்லை,’ என்று சினந்து கூவியிருக்கிறார்.

நாசிகளிடமிருந்து பலரை மீட்பதற்கும் ஹாம்சன் உதவியிருக்கிறார்.

உலகப்போர் முடிந்த பின்னர், ஹாம்சன் நாசிகளுடனான ஒத்துழைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். முதுமையாலும் அறியாமையாலும் அவ்வாறு நடந்திருக்கிறார் என்று தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

படைப்பாளி யார் என்று தெரியாமல் படைப்பை ரசித்தாகிவிட்டது. யாரென்று அறிந்தபின் ரசித்ததைத் திரும்பப் பெறமுடியுமா என்ன? இனியும் அவரது நூல்களைப் படிக்காமலிருக்கப் போவதில்லை. ஆனால் ஹிட்லர் நினைவு வராமல் படிக்கமுடியுமா என்பது சந்தேகமே. பசி நாவலை எழுதிய இளம் ஹாம்சனும், எழுத்துலக வாழ்க்கை முடிந்து நாசி ஆதரவாளரான முதிய ஹாம்சனும் ஒரே நபரெனக் கொள்ளமுடியுமா? இலக்கிய ரீதியாக, படைப்பு வேறு படைப்பாளி வேறு என்ற பாகுபாட்டினை அமைத்துக்கொண்டாலும்கூட, படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்புகள் குறித்த அறம்சார்ந்த சிக்கலான கேள்விகள் எழ ஹாம்சன் போன்றவர்கள் காரணமாகிறார்கள்.

நார்வேயில் மறுபடியும் ஹாம்சனை எச்சரிக்கையுடன் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஹாம்சனின் நூல்களின் புதிய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. கார்டியன் இதழின் புத்தக வலைப்பூவில், இப்படி எழுதுகிறார்கள்:
“The novel is what it is today in large part because of what Knut Hamsun wrought, which is a fact that no amount of revisionist history can wipe away. It’s time we accept this and try to figure some way to bring the man’s books back into the canon, while leaving his horrid politics out in the cold where they belong.”

நவீன இலக்கியத்தின் இரு முக்கியமான முன்னோடிகள் – மற்றவர் எஸ்ரா பவுண்ட் – பாசிச ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஹிம்.


2016ல் படித்தவை

திசெம்பர் 31, 2016

இவ்வாண்டு படிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது என்பது இப்பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது. எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவ்வாண்டுதான் மிகவும் அதிகம் பயணம் செய்திருக்கிறோம்; கிராமக் குழந்தைகளோடு நிறைய நேரம் கழித்திருக்கிறோம்; மகிழ்மலரின் தேவார-திருவாசக இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம்; விவசாயம், தேங்காயெண்ணெய் ஆட்டுதல் என்று முற்றிலும் புதிதான பணிகளுக்குள் ஆழமாகச் சென்றிருக்கிறோம்; தோப்பில் ஒரு சிறு அறையினை எங்கள் உடலுழைப்பையும் அளித்துக் கட்டியுள்ளோம். நன்றாக உறங்கியிருக்கிறேன்; ஓரளவு எழுதியுமிருக்கிறேன்; தியாகு நூலக நண்பர்களைத் தொடர்ந்து சந்தித்து இலக்கிய-அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்; சில நல்ல திரைப்படங்களையும் கண்டிருக்கிறேன். இத்தனைக்குமிடையில் படிப்பதற்கு நிறைய நேரம் இருந்திருக்கிறது; சும்மா இருக்கும் சுகத்துக்கும் நிறைய நேரமிருந்திருக்கிறது; ஒரு புத்தகம் (முகிலினி) எங்கள் தோட்டத்தில் வெளியிடப்பட்டது என்பதெல்லாம் எல்லோரும் சபிக்கும் 2016ம் ஆண்டை பாசத்துடன் திரும்பிப் பார்க்கவைக்கின்றன.

பட்டியலில் பல புத்தகங்கள் அளவில் சிறியவை; அதனாலும் பட்டியலின் நீளம் கூடியிருக்கலாம். குறைபட்டுக்கொள்ளவும் விசயங்கள் இல்லாமலில்லை: அறிவியல், வரலாறு, விவசாயம், கல்வி குறித்தெல்லாம் மேலும் அதிகமாய்ப் படித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் படிக்கவேண்டும். படித்த புத்தகங்கள் குறித்து மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறேன்; மிகக் குறைவான குறிப்புகளே எடுத்திருக்கிறேன். எழுத வேண்டும்.  திருக்குறள் மொழிபெயர்ப்பு ஓராண்டாய்த் தடைபட்டு நிற்கிறது.

பட்டியலில் உள்ள புத்தகங்களில் அனேகமாக அனைத்தையும் துணிவுடன் பிறருக்குப் பரிந்துரைப்பேன். பரிந்துரைக்க முடியாதவற்றை பெரும்பாலும் பாதியில் நிறுத்திவிடுகிறேன் – அதுவே ஒரு நல்ல வடிகட்டிதான்.

ரஷ்ய எழுத்தாளர்கள் தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிகிறார்கள். தாஸ்தோவஸ்கியும் தால்ஸ்தோயும் இந்த ஆண்டும் என் படிப்பு நேரத்தை ஆக்கிரமிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இவ்வாண்டு படித்தவற்றுள் டாப் 2 புத்தகங்கள்: ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சின் The Second-hand Time,  Chernobyl Prayers.

அலெக்ஸிவிச் இலக்கியத்தின் எல்லைகளை விரித்திருக்கிறார். புனைவுகளும் கவிதைகளும் அரிதாகவே எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிற பல உயரங்களை இந்த இரண்டு புத்தகங்களிலும் எட்டியிருக்கிறார். அவரது எழுத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும், அவரது எழுத்துமுறையாலும் தொகுப்புமுறையாலும் தனித்து விளங்குகின்றன. படிக்கும் நமக்குள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. நாவல்களின் ஆழ அகலங்களைவிட அதிகமாய்ப் பயணப்பட்டிருக்கின்றன.

ஸெகண்ட் ஹாண்ட் டைம் சோவியத் வாழ்க்கை குறித்தும், அதன் சிதைவுக்குப் பின்னான மாற்றங்கள் குறித்தும் பல கோணங்களில் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது. சோவியத் கால அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி, ஒரு மோசமான வணிகச் சூழலில் சிக்கிக் கொண்ட மக்களின் உணர்வுகளை இந்நூலின் மையமாகக் கொள்ளலாம். நாங்கள் போராடியது சுதந்திரத்திற்காக, பிட்சாவுக்கும் பர்கருக்காகவும் அல்ல என்பது அடிக்கடி கேட்கும் ஒரு குரல். எத்தனை விதவிதமான குரல்கள்? ஒவ்வொரு குரலுக்கும் பல மாற்றுக்குரல்கள் ஒலிக்கின்றன. நிஜத்தில் நடந்ததிருக்கக்கூடும் என்று நாம் நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் கதையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் வெளிப்படுகிறது. ஒட்டுமொத்தமாய் ஒரு நாவலின் முழுமையை விஞ்சுகின்றன.

செர்னோபில் ப்ரேயர்ஸ் அணு உலை விபத்துக்குப் பின்னர் நிகழ்ந்த மக்களின் வரலாற்றினைப் பதிவு செய்கிறது. கடந்த காலமா எதிர் காலமா என்ற மயக்க நிலையை உருவாக்குகின்றது. கதிர்வீச்சுகளால் பாதிப்படுவோம் என்று தெரிந்தும் கணவனோடு அவன் சாகும்வரையில் துணையாக இருக்கும் இளம்பெண், கதிர்வீச்சுகளின் பாதிப்புகளைப் பற்றி அறியாமலே அப்பகுதியில் வேலைக்கு அமர்த்துபடுபவர்கள், தெரிந்திருந்தும் துணிந்து செல்பவர்கள், ரோபோக்கள் கூட செல்ல முடியாத நெருக்கத்திற்குச் சென்று வரும் ராணுவத்தினர் என்று பலரும் பேசுகிறார்கள். அவர்களது வாழ்க்கை, காதல், அவர்கள் படித்த இலக்கியம், அரசியல் என்று ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களைக் குறித்துப் பதிவு செய்கிறார்கள்.  அசாத்தியமான துணிச்சல், அசட்டுத்தனமான நம்பிக்கை என்று சோவியத் மனநிலையின் இருவேறு கூறுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. இதிலும் ஒவ்வொரு பதிவையும் ஒரு சிறுகதையாகக் கொள்ளலாம். உண்மை புனைவை விட விசித்திரமானது, சோகமானது; சுவாரசியமானதும்கூட என்கிற எண்ணம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இதைச் செய்திக்கட்டுரை என்று ஒதுக்கிவிட்டிருந்தால், இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பேரிழப்பாக இருந்திருக்கும். நல்ல வேளைவயாக நோபல் குழுவினர் அந்தத் தவிறைச் செய்யவில்லை.

‘பல குரல்களை இணைக்கும் எழுத்தின் மூலம், நமது காலத்தின் துயரத்துக்கும் துணிச்சலுக்கும், அவர் எழுப்பிய நினைவுச்சின்னத்துக்காக,’ அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  ‘நம் காலத்தின் உணர்வுகளின் சரித்திரத்தையும், ஆன்மாவின் சரித்திரித்தையும் அவர் எழுதினார்; கூறுபொருளால் மட்டுமின்றி வடிவ ரீதியாகவும் சோதனை செய்து ஒரு புது இலக்கிய வகைமையை அவர் உருவாக்கினார்,’ என்றும் நோபல் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நோபல் குழு அறிவித்தத்து. இப்பாராட்டுகள் எவ்வகையிலும் மிகையானவை அல்ல.

டோரிஸ் லெஸ்ஸிங்கின் Grass is Singing – இனவெறி, மாறும் விவசாய முறைகள், திருமணத்துக்குப் பின் கிராமத்துக்குக் குடிபெயரும் ஒரு இளம் பெண்ணின் தனிமை என்று இந்த நூல் பல விதங்களில் எனக்கு அணுக்கமாக இருந்தது.

அதே போல், கண்மணி குணசேகரனின் கோரை. அகற்றமுடியாத கோரை முளைத்தவிட்ட விவசாய பூமியை களமாகக் கொண்டு, மாறும் பொருளாதாரச் சூழலில் ஒரு விவசாயியின் வாழ்க்கையை நேரடியாகவும், நுட்பமாகவும் விவரிக்கிறது.

விருதுகள் அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்கள் முன்பே வண்ணதாசனின் உலகிலும் சஞ்சாரம் செய்துவந்தேன். பின்னர், நெல்லையின் ஈரத்திலிருந்து, அசோகமித்திரனின் வரண்ட தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல்.

தமிழ் நவீன கவிதைகளை இவ்வாண்டு அதிகம் படிக்கவில்லை. ஆனால், பாரதியும், பழந்தமிழ்ப் புலவர்களும், திருமுறை நால்வரும், ஆங்கிலக் கவிகளும்  ஆண்டு முழுவதும் துணைக்கு வந்தனர்.
இனி, பட்டியல்:

  1. How Children Learn – John Holt
  2. The Child’s Language and the Teacher – Krishna Kumar
  3. Vinoba on Education – Vinoba Bhave
  4. Woman in the Dunes – Abe Kobe
  5. Grass is Singing – Dorris Lessing
  6. Poems of Love and War – A.K.Ramanujan
  7. The Nation’s Favourite Poems (BBC Books)
  8. The Best of Ruskin Bond – Penguin
  9. சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
  10. அரூப நெருப்பு (சிறுகதைகள்) – கே.என்.செந்தில்
  11. கனிவு  – வண்ணதாசன்
  12. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  13. பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன்
  14. முகிலினி – இரா.முருகவேள்
  15. சிலப்பதிகார ஆய்வுரைகள் – ம.பொ சிவஞானம்
  16. வள்ளுவரும் இளங்கோவும் – அ .சா.ஞானசம்பந்தம்
  17. பகவான் புத்தர் – தர்மானந்த கோஸம்பி (மராத்தி) – தமிழில், கா.ஸ்ரீ.ஸ்ரீ.
  18. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம்
  19. Box – ஷோபா சக்தி
  20. இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (கிழக்கு பதிப்பகம்) (நான் முடித்தவை:)
    – மழை
    – போர்வை போர்த்திய உடல்கள்
    – கால எந்திரம்
    – நந்தன் கதை
    – ஒளரங்கசீப்
    – ராமானுஜர்
    – கொங்கைத்தீ
  21. பருவம் – எஸ்.எல். பைரப்பா – தமிழில், பாவண்ணன்
  22. தண்ணீர் – அசோகமித்திரன்
  23. படைப்பாளிகளின் உலகம் (கட்டுரைத் தொகுப்பு) – அசோகமித்திரன்
  24. வ.வே.சு. ஐயர் – தி.செ.சௌ.ராஜன்
  25. அறம் – ஜெயமோகன் (இணையத்தில் சில கதைகளைப் படித்தது. முழுத் தொகுப்பு இப்போதுதான் படிக்கிறேன்)
  26. தேர்ந்தெடுத்த கதைகள் – கி.ராஜநாராயணன்
  27. காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும் – அருணன்
  28. The SecondHand Time – Svetlana Alexievich
  29. Chernobyl Prayers – Svetlana Alexievich
  30. தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் – நா.தர்மராஜன்
    – இரண்டு ஹுஸ்ஸார்கள் (Two Hussars)
    – குடும்ப மகிழ்ச்சி (Family Happiness)
    – கஜக்கோல் (Kholstomer)
    – நடனத்திற்குப் பிறகு (After the Ball)
    – கிரைஸ்ஸர் சொனாட்டா (The Kreutzer Sonata)
  31. குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்
  32. Beowolf – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
  33. Sir Gwain and The Green Knight – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
  34. A Study in Scarlet – Arthur Conan Doyle
  35. The Sign of the Four – Arthur Conan Doyle
  36. The Hound of the Baskervilles – Arthur Conan Doyle
  37. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
  38. சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்
  39. Notes from Underground – Dostoevsky
  40. White Nights – Dostoevsky
  41. கோரை – கண்மணி குணசேகரன்
  42. சாகுந்தலம் – காளிதாசன்  (கவித்துவம் குறைவான உரைநடை மொழியாக்கம்தான்…மொழிபெயர்ப்பாளர் பெயர் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேன்; அல்லயன்ஸ் பதிப்பகம் என்று நினைக்கிறேன்)
  43. பாஞ்சாலி சபதம் – பாரதி
  44. என் கதை – கமலா தாஸ் – தமிழில், நிர்மால்யா
  45. உலகப் புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைகள்) – வைக்கம் முகம்மது பஷீர்
  46. தபால்காரன் (Vieille France (The Postman)) – மார்ட்டின் டுகார்ட் (Roger Martin du Gard) – தமிழில், க.நா.சு
  47. The Agricultural Testament – Sir Albert Howard
  48. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்
  49. A Street Car named Desire – Tennessee Williams
  50. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் – போகன் சங்கர்

கூடுதலாக, இவ்வாண்டு படித்த சில நீண்ட சிறுகதைகளும், ஒரு முக்கியமான கட்டுரையும்:

  1. The Crocodile – Dostoevsky
  2. The Cloak – Gogol
  3. What we talk about when we talk about love – Raymond Carver
  4. Patriotism and Government – Leo Tolstoy

பகுதி படிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ள சில புத்தகங்கள்:

  1. (கு.அழகிரிசாமி சிறுகதைகள்)
  2. (கு.ப.ரா சிறுகதைகள்)
  3. (The Story of Philosophy – Will Durant)
  4. (தொல்காப்பியம்)
  5. (சிலப்பதிகாரம் – உ.வே.சா. பதிப்பு)
  6. (Norton’s Anthology of English Literature, The Major Authors)
  7. (Where I am calling from – Short stories –  Raymond Carver)

 

தொடர்புடைய பதிவுகள் :

2015ல் படித்தவை

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


2015ல் படித்தவை

திசெம்பர் 31, 2016

தலைப்பில் பிழையில்லை. ஓராண்டு தாமதமாகத் தொகுத்தாலும், 2015ல் படித்த பல புத்தகங்கள் குறித்து சிறு குறிப்புகள் எழுதிவைத்திருந்ததால், பெரும்பாலான புத்தகங்களை நினைவுபடுத்திப் பட்டியலில் சேர்த்து விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

  1. வாழ்விலே ஒரு நாள், One Day in the life of Ivan Denisovich – சோல்ஸெனிட்சின் (எம்.கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு)
  2. தீட்டு (சிறுகதைகள்) – அழகிய பெரியவன்
  3. அன்னை (La Madre) – கிரேசியா டெலடா (Grazia Deledda) – தமிழில், தி.ஜானகிராமன்
  4. The Way Home – Contemporary Bengali Short fiction, Edited by Aruna Chakravarti, Penguin
  5. Life of Mahatma Gandhi – Loius Fischer
  6. The Portrait of a Lady – Henry James
  7. Makers of Modern Asia – Ramachandra Guha
  8. The Muddy River – P.A.Krishnan
  9. கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி
  10. உபரா – லட்சுமண் மானே (மராத்தி) – தமிழில் – எஸ்.பாலச்சந்திரன்
  11. கூந்தப்பனை (குறுநாவல்கள்) – சு.வேணுகோபால்
  12. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்) – சு.வேணுகோபால்
  13. வெண்ணிலை (சிறுகதைகள்) – சு.வேணுகோபால்
  14. நாஞ்சில் நாடன் கதைகள்
  15. சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  16. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்
  17. அஃகம் சுருக்கேல் (கட்டுரைகள்) – நாஞ்சில் நாடன்
  18. சாதியும் நானும் – தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன்
  19. மாதொருபாகன் – பெருமாள் முருகன்
  20. பாரதிபுரம் – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
  21. மகாமுனி – பிரேம் ரமேஷ்
  22. Summerhill – A.S.Nell
  23. Small is Beautiful – E.F.Schumacher
  24. Dismantling the Inner School – David H.Albert
  25. கடைசி டினோசர் – தேவதச்சன்
  26. விண் வரையும் தூரிகைகள் – தேவதேவன்
  27. அந்தக் காலம் மலையேறிப் போனது – இசை
  28. உணவே மருந்து – டாக்டர் எல்.மகாதேவன்
  29. தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும் – பால சிவகடாட்சம்
  30. ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது – எஸ்.என்.நாகராசன் (நேர்காணல்)

 

தொடர்புடைய பதிவுகள் :

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


இரா. முருகவேளின் முகிலினி – நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

மே 30, 2016

நாவல் அனுபவம் என்கிறார்கள். முகிலினி எனக்குப் பல முதல் அனுபவங்களை அளித்த ஒரு நாவல். முகிலினியின் புத்தக ஆக்கத்தில் (அறிந்தும் அறியாமலும்) மிகச்சிறு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. முன்னுரையில் என்னையும் என் மனைவியையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகு நூலகத்து நண்பர்களும், எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களும் சூழ, முகிலினி நூல் வெளியீட்டு விழா எங்கள் தோட்டத்தில் நடந்தது விழாக்காலக் களிப்பினை அளித்தது. இங்கேயே பிறந்து வளர்ந்தும், நானறிந்திராத கோயமுத்தூரை இந்நாவல் எனக்கு அறிமுகம் செய்தது வெட்கத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

கோவை தியாகு நூலகத்தில் அறிமுகமாகி, மிளிர் கல் மூலமாக அறிந்து, ஒரு சில சந்திப்புகளில் மிக நெருக்கமான நண்பராக இரா.முருவேளை உணர்ந்து கொண்டேன். நூலகத்தில் சனிக்கிழமை சங்கமங்களின் போதும், விஷ்ணுபுரம் விழாவின் போதும் சுற்றிலும் உள்ள அனேகரும் அவருக்கு முரணான கருத்துகளை அடித்துப் பேசும்போது, புன்சிரிப்பு மாறாமல் அனைவரையும் தனியொருவராய் அவர் எதிர்கொண்ட விதம் அவர்மீது ஒரு தனியான மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. விவசாயப் பின்னணியில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னதும், எங்கள் தோட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அடுத்த வாரமே வந்திருந்தார். பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். மார்க்சியப் பார்வையில் அவரும் காந்தியப் பார்வையில் நானும் வெகுசில முரண்களையும் பெரும்பாலும் ஒத்த நோக்கும் கொண்டிருந்ததாகவே உணர்ந்தேன். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியமான உணவு சார்ந்ததாகவோ, தொழில்நுட்பமாகவோ மட்டும் குறுகிவிடக்கூடாது, ஒரு சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக அமையவேண்டும் என்கிற புள்ளியில்தான் நாங்கள் சந்தித்தோம் என்று நினைக்கிறேன். இந்த அம்சத்தை மிக அழகாக நாவலின் பிற்பகுதியில் வளர்த்து எடுத்திருக்கிறார். ஒரு சிறு புள்ளி, ஒரு தேர்ந்த படைப்பாளியின் கைகளில் எப்படி ஒரு அழகான சிற்பமாக மாறுகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது ஒரு பேரனுபவம் தான்.

DSC_2932
முகிலினி ‘உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு’ என்று முருகவேள் முன்னுரையிலேயே இந்நாவலை அடையாளப்படுத்துகிறார். அதிலும் அண்மைக்கால வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலில், புனைவு எது, உண்மை எது என்கிற குறுகுறுப்பு வாசகனுக்கு இருந்துகொண்டே இருக்கும். புனைவு மிகுந்தால் நம்பகத்தன்மை சிதைந்துவிடும்; வரலாறு மிகுந்தால் வாசிப்பின்பம் குறைந்துவிடக்கூடும். இரண்டும் நேர்ந்துவிடாமல், 487 பக்கங்கள் பெரும்பாலும் விறுவிறுப்பாக நகர்கின்றன.

ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பல இழைகள் நாவலில் வருகின்றன. டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் வரலாறு, கோவையின் தொழிற்சங்க வரலாறு, இந்தி எதிர்ப்பு, திராவிட இயக்கம், சாதியச் சிக்கல்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள், நவீன இயற்கை விவசாயத்தின் தோற்றம், ஓர் இளம் வழக்குரைஞனின் வாழ்க்கை, பழங்குடியினர் பிரச்சனைகள் என்று பல்வேறு திரிகள்; இவையனைத்தும் கோவை மாவட்டத்தின் அறுபது ஆண்டுகால மாற்றத்தைச் சித்தரிப்பனவாகவும் அமைந்துவிடுகின்றன; ஒருவகையில் மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தை விவரிப்பதாகவும் கொள்ளலாம்; நம் காலத்தின் முக்கியமான பொருளாதார, சுற்றுச்சூழல் சித்தாந்தங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், மோதல்களையும் முரண்களையும் சமரசங்களையும் காட்சிப்படுத்தும் படைப்பாகவும் முகிலினியைப் பார்க்கலாம். எல்லாத் திரிகளையும் இணைத்து நொய்யல் நதியும், முகிலினி என்ற செல்லப்பெயருடன் பவானியும் நாவல் முழுவதும் ஓடுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டுவிட்ட என் தாத்தா மரணமடைவதற்குச் சில மாதங்கள் முன்னால் நொய்யல் நதிபற்றி என்னோடு நீண்ட நேரம் பேசினார். நொய்யலிருந்து குறிச்சிக் குளத்திற்கு (அது ஒரு தாசியால் நிர்மாணிக்கப்பட்டதால், தாசி குளம் என்று அறியப்பட்டது என்றார்) நீர் பாயும் வழித்தடத்தில் தான் அவரது வயல் இருந்தது. நெல் பயிரிட்டிருக்கிறார். நொய்யல் நதிமீது 32 சிறு அணைகள்  இருந்ததாகச் சொன்னார். இருட்டில் கைக்குக் கிடைத்த குமுதத்தையோ விகடனையோ எழுத்துக்கூட்டி உரக்கப் படிப்பார். நிறையப் படித்துவிட்டதாய் நினைத்திருந்த எனக்கு நொய்யல் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. என் தாத்தா பெயரும் ராஜு. நொய்யலை நேசித்த முகிலினியின் ராஜு என் தாத்தாவின் அடுத்த தலைமுறைதானெனினும், அவர்களது நொய்யல் அனுபவங்கள் ஓரளவு ஒரே மாதிரி இருந்திருக்கக்கூடும். என் அப்பாவும், தன் ஒரே பள்ளிச்சீருடையைத் துவைத்துக்கொண்டிருந்தபோது, நொய்யலின் ஓர் அணைமீதிருந்து விழுந்து காவிரியில் கலந்திருக்கவேண்டியவர்தான்; எப்படியோ பிழைத்துக்கொண்டார். முருகவேளின் நொய்யல் பழைய குடும்ப நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருந்தது.

இன்றைக்குப் பெரும் சிதைவை உருவாக்கும் பல தொழில்நுட்பங்களை, விடுதலைக்குப் பின்னான ஆரம்ப கட்டத்தில் அறிமுகப்படுத்தியவர்களை மிக எளிதில் கொடியவர்களாய், சதிகாரர்களாய்ச் சித்தரித்துவிடும் அபாயம் உள்ளது. பலரும் இன்று அதைச் செய்து கொண்டும் இருக்கிறோம். ஆனால், கஸ்தூரிசாமியையும், சௌந்திரராஜனையும், சௌதாமினியையும் முருகவேள் கருப்பு வெள்ளையில் காட்டிவிடவில்லை. தொழிற்சங்கப் போராளியான ஆரானைப் படைத்துள்ள அதே அக்கறையோடும் கவனத்தோடும் கரிசனத்தோடும்தான் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான இவர்களையும் படைத்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில், உலகம் முழுவதும் நவீனத் தொழில்நுட்பத்தின் மீது ஒரு விமர்சனமற்ற ஈர்ப்பு இருந்திருக்கிறது. இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இதில் பெரிய மாறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. வளரும் மக்கள் தொகையையும், அதைவிட வேகமாக வளர்ந்துவந்த மக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அதி நவீன தொழில்நுட்பத்தாலும் விஞ்ஞானத்தின் பாய்ச்சலாலும் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை அன்றைய தலைமுறைக்கு முழுமையாக இருந்திருக்கிறது. நேருவும் காமராஜரும் திராவிட இயக்கங்களும் அன்றைய இடதுசாரிகளும் முதலாளிகளும் முகிலினியில் இந்த நம்பிக்கையைப் பிரிதிபலிக்கும் வகையில் வருகின்றனர். அதற்கு எதிர்க்குரல் காந்தியிடமிருந்தும் குமரப்பாவிடமிருந்தும் கிளம்பின. தாகூருடையது அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும்  ஒலித்த இன்னொரு மாற்றுக்குரல் (முருகவேள் தாகூருக்கும் காந்திக்குமிடையில்  அடிப்படையான வேறுபாடுகள் இருந்ததாக நினைக்கிறார். நான் அடிப்படையான ஒற்றுமைகளும் வழிமுறைகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க முரண்களும் இருந்ததாகவே நோக்குகிறேன்). இந்த மாற்றுக்குரல்களின் மெல்லிய எதிரொலியையும் முகிலினியில் கேட்கலாம். வரைமுறையற்ற தொழில் வளர்ச்சியின் போதாமைகளுக்கும் பெரு நிறுவனப் பேராசைகளுக்கும் எதிரான வலுவான குரலை எழுப்புகிறது இயற்கை – மாசுபட்ட முகிலினியின் சீற்றமாய்.

இத்தகைய தொழில் வளர்ச்சிக்கு எதிராகவும் மாற்றாகவும் எழும் சுற்றுச்சூழல் போராட்டங்கள், இயற்கை வேளாண்மை சார்ந்த தனிநபர் முயற்சிகள், பிற மாற்றுகளுக்கான தேடல் என்று சித்தாந்தங்களைத் தாண்டிய அடுத்த கட்டத்திற்கு இளம் வழக்குரைஞர் கௌதம் வாயிலாக முகிலினி பயணிக்கிறது. அமெரிக்காவிலிருந்து திரும்புகிற இரு இளைஞர்கள் மூலமாய் மேலும் இரு எதிர்நிலைகளை முருகவேள் படைக்கிறார். டெக்கான் ரேயானைத் தோற்றுவித்த அதே குடும்பத்தைச் சார்ந்த ராஜ்குமார் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை வியாபார லாபத்திற்குப் பயன்படுத்துகிறான். துணையாக நாமறிந்த பல கார்ப்பரேட் சாமியார்களின் சாயலில் ஆஸ்மான் ஸ்வாமிகள். அதே வேளையில் உண்மையான தேடலில் தன் வாழ்வையே சோதனைக்கூடமாக்கிக் கொள்கிற திருநாவுக்கரசு. இயற்கை வேளாண்மையின் நோக்கங்களும் கிராமப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அதன் இடமும் அதன் போதாமைகள் குறித்த ஐயங்களும் பல விவாதங்கள் மூலமாக வலுவாக வெளிப்படுகின்றன.

இடையில் ஜான் க்ரிஷாம் நாவல்களின் விறுவிறுப்போடு ஒரு தனித் திரி நாவலில் பிரிகிறது. மூடப்பட்ட ஆலையில் கொள்ளை, வாகனங்களின் துரத்தல் காட்சி, நீதி மன்ற விவாதங்கள் என்று திடீரென்று வேறொரு தளத்திற்கு திசைமாறுவது போலிருந்தது. இது அவசியம்தானா என்கிற கேள்வியும் எழாமலில்லை. ஆனால், இந்தத் திரியையும் நாவலின் மையமான தேடலோடு அழகாக இணைத்து விடுகிறார் முருகவேள். தொழில் வளர்ச்சியால் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் எதற்கு நகர்கிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள் என்பதன் தேடல் இந்த வழக்கின் மூலமாக நிகழ்கிறது.   ‘ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு அவர்கள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றமும் சாட்டுவது நியாயமானது அல்ல. இந்த அணை கட்ட உழைத்தவர்கில் இவர்களின் முன்னோர்களும் உண்டு. அந்த அணை டெக்கான் ரேயானுக்கும் பயன்பட்டது. அதற்கு நிதியுதவி அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இந்த கம்பெனி ஏற்படுத்திய பேரழிவில் பங்குண்டு. அடித்த கொள்ளையிலும் பங்குண்டு. இவர்கள் நஷ்டப்படக்கூடாது என்று அரசு முனைந்து நிற்கிறது. ஆனால் எல்லாவற்றையும் இழந்த இந்த மக்கள் நீதி மன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கிறார்கள்,’ என்று பல நெருடலான வாதங்களை இந்த வழக்கின் வாயிலாக முன்வைக்கிறார் முருகவேள்.

திருநாவுக்கரசு பாத்திரம் நான் எனது அண்மைக்காலப் பயணங்களில்  சந்தித்த பல உண்மை மனிதர்களை நினைவுபடுத்துகிறது. தேவைகளைக் குறைப்பதும், தற்சார்பை அடைவதுமே ஒரு நிலையான தீர்வுக்கான வழி என்கிற தரப்பின் பிரதிநிதியாய்த் திருநாவுக்கரசு வருகிறான். ‘தமிழகம் முழுவதும் அறிவு ஜீவிகள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்து பரிசோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆயுதப் புரட்சியின்போது செய்யப்படுவதைப் போன்றே இந்த சோதனை முயற்சிகளிலும் தியாகங்கள் செய்யப்படுகின்றன,’ என்கிற சொற்கள் நானறிந்த பலருக்கும் நெருக்கமாகப் பொருந்துகிறது.

டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ், இயற்கைக்குத் திரும்புவோம் போன்ற அமைப்புகளாக டெக்கான் ரேயான் மறு அவதாரம் எடுக்கிறது.

ராஜூவும் ஆரானும் தொடங்கிய தேடலை கௌதமும், திருநாவுக்கரசுவும் தொடர்கிறார்கள்.

நொய்யல் சாக்கடையாகிவிட்டாலும் முகிலினியின் கலகலவென்ற சிரிப்போடு நாவல் முடிகிறது.

மிகுந்த சமூக அக்கறையுடனும் நிறைந்த இலக்கிய நேர்த்தியுடனும் ஒரு சிறப்பான படைப்பினை அளித்துள்ள முருகவேளுக்கு வாழ்த்துகள்.

நூல்: முகிலினி
ஆசிரியர்: இரா.முருகவேள்
பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்

பி.கு.
நாவலின் முன்னுரையில் தோழர் முருகவேள் எங்களைப் பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
‘இந்நூலை முடிக்கும் தருவாயில் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடுபவர்களின் நோக்கம் பற்றிய குழப்பம் ஏறக்குறைய ஒரு பெரிய மனத்தடையை ஏற்படுத்திவிட்டது. அந்த நேரத்தில் நண்பர் வெ.சுரேஷ் மூலம் அறிமுகமான நண்பர் கண்ணன், நித்யா ஆகியோருடனான உரையாடல் நல்ல புரிதலை வழங்கியது. கண்ணன் வழங்கிய அறிவார்ந்த, கூர்மையான, அதேநேரம் சுருக்கமான கருத்துகள் இல்லையென்றால் நான் மேலும் பலபக்கங்கள் எழுதி வாசகரின் மதிப்பிற்குரிய நேரத்தை வீணடித்திருக்கக்கூடும்.’

இவ்வளவு பெருந்தன்மையுடன் அவர் இப்படி எழுதியிருக்காவிட்டாலும், இதே மாதிரியான ஓர் உணர்வைத்தான் முகிலினி எனக்கு அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.