மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018


காலச் சுழலில் சிக்கிய கர்நாடகஇசை

ஜூலை 17, 2008

ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.

சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.

ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?

முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.

அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.

ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.