பாம்பும் பட்டாம்பூச்சியும்

ஜனவரி 17, 2020

(29-Nov-2019)

திருவண்ணாமலை மருதம் பள்ளி சென்றிருந்தபோது, அப்பள்ளியை நடத்தும் முக்கிய நபர்களில் ஒருவரான அருணோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருக்குக் கைபேசியில் ஓர் அழைப்பு வந்தது – தொடக்கப்பள்ளி வகுப்பறையின் அருகில் ஒரு லூனா மாத் (Luna moth) இருப்பதாக.

[Butterfly – வண்ணத்துப்பூச்சி, moth – பட்டாம்பூச்சி என்றோ அந்துப்பூச்சி என்றோ சில இயற்கை இதழ்களில் மொழிபெயர்க்கிறார்கள்; அந்திப்பூச்சி என்றும் சொல்கிறார்கள். ஆனால் பகலில் பறக்கும் அந்திப்பூச்சிகளையும் பார்த்திருப்பதாக அருண் கூறினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் தம்பலப்பூச்சி, தனுப்பீசம், பதமம், பொட்டு, விட்டிகை, விட்டில், ஈயலி, வெள்ளைவண்ணாத்தி, தட்டாரப்பூச்சி ஆகிய சொற்களும் ஏதேனும் mothஐக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன].

இதுவரை அங்கு லூனா மாத் தென்பட்டதில்லை என்பதால் அருணுக்கு நம்பிக்கையில்லை. வேறு ஏதாவது பொதுவான அந்திப்பூச்சியாக இருக்கலாம் என்றார். வேறொரு மாணவனை அனுப்பி உறுதி செய்யச் சொன்னார். அவன் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. லூனா மாத் தானாம் என்று உடனிருந்தவர்களை அழைத்துக்கொண்டு ஓடினார். ஒன்றும் புரியாமல் நானும் சென்றேன். உண்மையிலேயே காண்பரிய காட்சிதான். ஒரு கொய்யா மரத்தின் இலைகளோடு இலையாய், அசையாது தொங்கிக்கொண்டிருந்த லூனா மாத் அத்தனை அழகு. அடுத்த சில நிமிடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என்று அப்பள்ளியைச் சேர்ந்த அனைவரும் வந்து வந்து அதைக் கண்டு களிப்புடன் சென்றனர்.

அடுத்த நாள் மதியம் இன்னொரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். மருதம் பள்ளி வளாகத்தில் சில ஓலைக் குடில்கள் உண்டு. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அவ்வழியே சென்ற அருண் அடுத்த குடிலில் ஒரு பாம்பு வந்திருப்பதாகச் சொன்னார். சென்று பார்த்தோம். அதனருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அது ரஸ்ஸல்ஸ் குக்ரி என்ற வகைப் பாம்பின் குட்டி என்றான். (Russell’s kukri; Common/Banded kukri என்ற பாம்பினத்தை எண்ணெய்ப் பனையன் என்கிறது விக்கி). சன்னமாக இருந்தது. பெரிதானால் மேலும் சற்று தடிமனாகும் என்று விரல்களால் அளவு காட்டினான்.

“கடிக்காதா?” என்றேன்.

“அவ்வளவு சீக்கிரம் கடிக்காது. மிகவும் அருகில் கைவைத்தால் சீறும். தொட்டால்தான் கடிக்கும். மிகவும் சின்னப் பல்தான். பெரிதாகக் காயம் ஆகாது. விஷமும் கிடையாது,” என்றான்.

“எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

“அது நகர்ந்து செடிகளுக்குள் மறையும் வரை.”

சிறிது நேரம் நின்று, சில படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். அந்தப் பச்சைவெளியில், ஓலைக்குடிலின் வாயிலில் ரஸ்ஸல்ஸ் குக்ரியோடு அவன் தனியே அமர்ந்து அமைதியாக அதன் அசைவுகளை நோக்கியவாறு இருந்தான்.

எந்தப் பொதுத் தேர்வில் ரஸ்ஸல்ஸ் குக்ரி பற்றியும் லூனா மாத் பற்றியும் இவர்கள் பெற்றுள்ள கள அறிவைச் சோதிக்கப்போகிறார்கள்?


குழந்தைகளுக்கான நூல்கள்: மகளின் பரிந்துரை

ஜனவரி 17, 2020

எல்லாரும் புத்தக சிபாரிகள் போடுகிறார்கள். குழுந்தைகளுக்கான ஒரு பரிந்துரைப் பட்டியலைப் போடலாமே என்று சில நண்பர்கள் முன்பே கேட்டிருந்தார்கள். நான் மகளைக் கேட்டேன். அவளுக்குப் பிடித்த ஐந்து, பத்து என்று தொடங்கினோம். வளர்ந்து நாற்பதைத் தாண்டிவிட்டது. இவை அனைத்தையும் நான் படிக்கவில்லை. பட்டியல் அவளுடைய தேர்வுதான். அனைத்தும் குழந்தை நூல்களல்ல. ஆனால் குழந்தைகளுக்குமானவை என்று கொள்ளலாம். [அவள் வயது பதினொன்று.]

1 டோட்டோ சான் – சன்னலில் ஒரு சிறுமி – National Book Trust [Totto-Chan: The Little Girl at the Window – Tetsuko Kuroyanagi]
2 மாயி-சான் – தோசி மாருகி – Books for Children [The Fire of Hiroshima – Toshi Maruki]
3 குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி; தமிழில்: வெ. ஸ்ரீராம் – க்ரியா பதிப்பகம் [The Little Prince – Antoine de Saint-Exupéry]
4 பனி மனிதன் – ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம்
5 வெள்ளி நிலம் – ஜெயமோகன் – விகடன்
6 குழந்தைகளும் குட்டிகளும் – ஓ பெரோவ்ஸ்கயா (தமிழில் : ருக்மணி) – Books for Children [Kids and Cubs – Olga Perovskaya]
7 கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் – தமிழில்: பெரியசாமித் தூரன் – தமிழினி பதிப்பகம் [The Call of the Wild – Jack London]
8 ஐம்பேரியற்கை – மாற்கு – தமிழினி பதிப்பகம்
9 தேவமலர் மற்றும் கதைகள் – தேசாந்திரி பதிப்பகம் (தேவமலர் – செல்மா லாகர்லெவ் – க.நா.சு., உயிராசை – ஜாக் லண்டன் – புதுமைப்பித்தன்; மேல்கோட்டு – நிக்கலாய் கோகல் – பாஸ்கரன்; விருந்தாளி – ஆல்பர் காம்யூ – க.நா.சு.) [The Legend of the Christmas Rose – Selma Lagerlöf, Love of Life – Jack London, The Overcoat – Nikolai Gogol, The Guest – Albert Camus]
10 மகாபாரதம் (வியாசர் விருந்து) – ராஜாஜி [Mahabharata – C. Rajagopalachari]
11 இளைஞர்களுக்கான கம்ப ராமாயணம் – சரஸ்வதி ராம்நாத் முன்னுரை – எழுதியவர் பெயர், பதிப்பகம் குறித்துவைக்கவில்லை [Ramayana]
12 நிழல் காட்டும் நிஜங்கள் (திருக்குறள் கதைகள்) – மலர்க்கொடி ராஜேந்திரன் – விஜயா பதிப்பகம்
13 மாயக்கண்ணாடி – உதயசங்கர் – நூல் வனம்
14 கடவுளைப் பார்த்தவனின் கதை – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: பாலு சத்யா – Books for Children [Leo Tolstoy – can’t identify the original – can someone help?]
15 ஒரு நாயின் கதை – பிரேம் சந்த் – தமிழில்: யூமா வாசுகி- Books for Children [ कुत्ते की कहानी/Story of a Dog – Munshi Premchand]
16 ரஸ்டியின் வீரதீரங்கள் – ரஸ்கின் பாண்ட் – தமிழில்: கே.பாலச்சந்திரன் – National Book Trust [The Adventures of Rusty – Ruskin Bond]
17 சாவித்திரிபாய் பூலே – வழிகாட்டியின் வாழ்க்கைப் பயணம் – தமிழில்: சாலை செல்வம் – அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகப் பதிப்பகம் [Savitri Bai – Journey of a Trailblazer – Azim Premji University Publication]
18 பாப்பாவுக்கு காந்தி – தி.ஜ.ர. – காந்திய இலக்கிய சங்கம்
19 ஐந்து சீன சகோதரர்கள் – Books for Children
20 ஃபெலுடா வரிசை – சத்யஜித் ரே – Books for Children [Feluda Series – Satyajit Ray]: அனுபிஸ் மர்மம், டார்ஜிலிங்கில் ஓர் அபாயம், பம்யாய் கொள்ளையர்கள்,…
21 சிறுவர் நாடோடிக் கதைகள் – வீர வேலுசாமி (பதிப்பாசிரியர்: கி.ரா) – அகரம் பதிப்பகம்
22. பெரிய மரமும் சிறிய புல்லும்: உலக நாடோடிக் கதைகள் – யூமா வாசுகி – Books for Children
23 காட்டிலே கதைகள் – மலையாள மூலம்: சிப்பி பள்ளிபுறம், தமிழில்: எல்.பி.சாமி – Books for Children
24 மாகடிகாரம் – விழியன் – Books for Children
25 Prodigy Series (Kizhakku) – லெனின், அக்பர், அலெக்ஸாண்டர், இலியட், பரமஹம்சர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், அமேசான் காடுகள், மலைகள்…
26 லயன் காமிக்ஸ் : உரைபனி மர்மம் , பெயிரூட்டில் ஜானி, மலைக்கோட்டை மர்மம், ஃளைட் 731, வான்வெளிக்கொள்ளையர்கள்,…
27 தும்பி இதழ்கள்
28 சுப்பாண்டியின் சாகசங்கள்

1. The Adventures of Burratino or the Little Gold Key – Alexei Tolstoy – Raduga Publishers Moscow
2. Black Beauty – Anna Sewell (Abridged)
3. The Call of the Wild – Jack London (Original)
4. Ben Hur – Lew Wallace (Abridged)
5. Alice’s Adventures in Wonderland – Lewis Carroll (Original)
6. The Wonderful Wizard of OZ – L. Frank Baum (Abridged)
7. The Black Arrow – Robert Louis Stevenson (Abridged)
8. 20,000 Leagues Under the Sea – Jules Verne (Abridged)
9. The Last of the Mohicans – James Fenimore Cooper (Abridged)
10. Gulliver’s Travels – Jonathan Swift (Abridged)
11. The Hound of the Baskervilles (Sherlock Holmes) – Sir Arthur Conan Doyle (Abridged)
12. Blue Umbrella – Ruskin Bond
13. Angry River – Ruskin Bond
14. The Magic Finger – Roald Dahl
15. Charlie and the Chocolate Factory – Roald Dahl
16. Charlie and the Great Glass Elevator – Roald Dahl


வானவில் பள்ளி

நவம்பர் 12, 2019

(4-அக்டோபர்-2019)

ஆண்டுதோறும், மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் சில நண்பர்கள் கூடிவருகிறார்கள். அதில் எப்படியோ எங்கள்மீதுள்ள பிரியத்தால் எங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். சென்ற வாரம் நாகப்பட்டினம் சிக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ‘வானவில்’ பள்ளியில் சந்தித்தோம். மூன்று நாட்கள் பள்ளியிலேயே தங்கியிருந்தேன்.

வானவில் பள்ளியைத் தொடங்கியவர் பிரேமா ரேவதி. இவர், சுனாமியின் பேரழிவுக்குப் பின் அங்கு மீட்புப்பணிகளுக்காகச் சென்றபோது அங்கு மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பிச்சையெடுக்கும் நாடோடிச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளோடு ஒரு குடிசையில் பணியாற்றத் தொடங்கினார். அது இன்று விரிவடைந்து ஓர் அழகான ஆரம்பப் பள்ளியாக வளர்ந்துள்ளது. அங்கேயே குழந்தைகள் தங்குவதற்கு விடுதியும் உணவும் அளிக்கப்படுகிறது. உயர் வகுப்புகளுக்குச் செல்லும் குழந்தைக்களுக்கும் இவர்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள். தரமான கல்வியை, குழந்தைகளை மையப்படுத்தும் நவீன முறைகளில் வழங்கிவருகிறார்கள்.

பிரேமா ரேவதி-நடராஜன் இணையர் இப்பள்ளியைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்குக் கல்வியின் மீது நாட்டம் ஏற்படுத்தும் வகையில் பயிற்றுவிக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பெற்றோர்களோடு தொடர்ந்து உரையாடுகிறார்கள். அவர்கள் ஒரு சமூகமாக இணைந்து வலுப்பெறவும் உதவுகிறார்கள். குழந்தைகள் மூலம் வரக்கூடிய வருமானத்தைத் துறந்து அவர்களைப் பள்ளிக்குச் செல்லப் பெற்றோர்களை அனுமதிக்கச் செய்வது பெரிய சவால்.

இப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் பேசுவதைக் கேட்டோம். அவர்கள் அனைவருமே பள்ளிகளில் மழைக்குக்கூட ஒதுங்கியதில்லையென்றும், பள்ளிகளின் நிழலைக்கூட மிதித்ததில்லை என்றுமே கூறினர். ஆனால். இன்றைக்கு அவர்களது குழந்தைகள் பலர் பட்டதாரிகளாகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளனர்.

பிரேமா ரேவதி திரைப்படங்களில் துணை இயக்குனராக இருந்தவர்; எழுத்தாளர். அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் வந்த அம்பேத்கரின் சாதியை அழித்தொழித்தல், அம்பேத்கர் அருகிருந்து ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நடராஜன் ஒரு சிற்பி; ஓவியர். ஆரம்பத்தில் சென்னையில் இருந்து அடிக்கடி பயணித்தவாறு செயல்பட்டுவந்தவர்கள், பின்னர் நாகப்பட்டினத்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். இருவருக்கும் அம்பேத்கர் பெரும் உந்துதலாக இருக்கிறார். நாங்கள் காந்தி குறித்துப் பலவாறு முரண்பட்டு விவாதித்துள்ளோம். ஆனால், ஓர் அரிய அர்ப்பணிப்புடனும் மனிதநேயத்துடனும் செய்யப்படும் களப்பணியைக் கண்டு வியப்பதற்கு எந்த முரண்களும் தடையாக வருவதில்லை.

வெள்ளம், புயல் என்று பல பேரிடர்களின் போது பலரும் தம்மால் இயன்றதைச் செய்கிறார்கள். ஆனால், இப்படியொரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தி அங்கேயே தங்கி, நீண்டகால நோக்கில் பணிசெய்பவர்கள் அரிதிலும் அரிதானவர்கள். இம்முறை கஜா புயலின்போதும் ஒருங்கிணைப்புப் பணிகளில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது.

இப்படியொரு பள்ளியை நடத்த, அரசாங்கத்தோடு, பெற்றோர்களோடு, உள்ளூர் மக்களோடு என்று பல்முனைப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். மிகுந்த பணத்தேவை இருக்கும். நினைத்துப்பார்க்க முடியாத பொறுமை தேவைப்படும்.

கடைசி நாளன்று பதினொன்றாவது படிக்கும் ஒரு சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவள் அங்கேதான் தங்கியிருக்கிறாளா என்று கேட்டேன். மேல் வகுப்புக்குச் சென்றுவிட்டதால், வேறு விடுதியில் தங்கி அரசுப்பள்ளியில் படிப்தாகவும், விடுமுறை விட்டால் இங்கு வந்துவிடுவதாகவும் சொன்னாள். ‘இது எனக்குத் தாய்வீடு மாதிரி’ என்றாள். இதுமாதிரி ஒரு குழந்தையேனும் நம்மைப்பற்றி நினைத்துவிட்டால், வாழ்வில் வேறென்ன வேண்டும்.


சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven)

நவம்பர் 12, 2019

(19-அக்டோபர்-2019)

நேற்று காந்திகிராமுக்குப் பேருந்தில் செல்லும்போது பின் இருக்கையில் இருந்த ஒரு பெண் கைபேசியில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைத் தாண்டி அவரது சொற்கள் செவிப்பறையில் அறைந்தன. மறுமுனையில் அவருடைய மகனாக இருக்கவேண்டும். பள்ளிசெல்லும் சிறுவன்.

‘ஏன் ஷூ நனைஞ்சுது?

சரி, இன்னிக்கு வேற ஷூ இருக்கில்ல, அதைப் போட்டுக்க. இல்லைனா, செருப்புப் போட்டுட்டு ஸ்கூலுக்குப் போ.

லேஸ் வைச்ச ஷூவேதான் போடணும்னு ஏதாவது கட்டாயமா?

ஃபைன் கட்டச்சொன்னா கட்டிருடா. எத்தன ரூபா ஃபைன்?

சரி, பத்து ரூபா எடுத்துட்டுப் போய்க்கோ. ஃபைன் கேட்டாக் கட்டிரு.

திட்டினாங்கன்னா திட்டு வாங்கிக்க.

அடிச்சாங்கன்னா அடி வாங்கிக்க.

இங்க இருந்துட்டு என்னை என்ன செய்யச் சொல்ற?

அழைப்பைத் துண்டித்து விட்டார். சற்று நேரத்தில் அவரே மறுபடி அழைத்துப் பேசினார். இம்முறை மூத்த மகனிடம் பேசினார் போலும்.

‘டேய், அவன் என்னடா ஷூ நனைஞ்சுபோச்சுன்னு அழுகறான்?

ஒன்னு செய். நீ உன்னோடு ஷூவை அவனுக்குக் குடுத்துடு. நீ செருப்புப் போட்டுட்டுப் போய்க்க.

என்ன லீவு போட்டுக்கிறேங்கிறானா. அவங்கிட்டக் குடு.

ஷூ இல்லைன்னு யாராவது லீவு போடுவாங்களாடா?

இப்ப நீ கிளம்பிப் போகப்போறியா இல்லையா? தோலை உறிச்சுருவேன்.

லீவப் பத்தி எங்கிட்டப் பேசாத. வந்தேன்னாப் பாரு…பிச்சுப் போடுவேன்.


அதற்குள் அவர்கள் நிறுத்தம் வந்துவிட்டது. பேசிக்கொண்டே இறங்கிச் சென்றுவிட்டார்.

வாழிய நம் பள்ளிகள். வாழ்க எம்மக்கள், வாழிய மணித்திரு நாடு.


கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் – சுதந்திரத்தின் நிறம்

நவம்பர் 12, 2019

(18-அக்டோபர்-2019)

காந்திகிராம் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் ஊழியரகத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சென்று வருகிறோம். ஊழியரகம் காந்திகிராம் பல்கலைக் கழகத்துக்கும் முன்னரே கட்டப்பட்டது. ஜெகந்நாதனும், இந்தியா வந்து குடியேறி தன்னலமற்ற காந்தியப் பணியாற்றிய அமெரிக்க மிசனரியான கெய்த்தானும் சேர்ந்து அருகிலிருந்த மலையிலிருந்து பெரும் கற்களைத் தாமே சுமந்து வந்து கட்டிய கட்டிடம் இது. கஃபார் கான் முதல் மார்டின் லூதர் கிங் வரை பலரும் வந்து சென்ற இடம். தமிழகத்தின் சர்வோதய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் களமாக இருந்த இடம். இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து காந்தி மீதும், கிருஷ்ணம்மாள் குடும்பத்தின்மீதும் பற்று கொண்ட பலரும் தொடர்ந்து வந்து செல்லும் இடம். சுதந்திரத்தின் நிறம் என்று இப்புத்தகத்தின் மூலத்தை இத்தாலிய மொழியில் எழுதிய லாரா கோப்பா அத்தகைய ஒருவர். இதை ஆங்கிலத்தில் பதிப்பித்த டேவிட் ஆல்பர்ட் இன்னொருவர். டேவிட் கடந்த நாற்பது ஆண்டுகளாக அனேகமாக ஒவ்வொரு ஆண்டும் இவர்களைக் காண இந்தியா வந்துகொண்டிருப்பவர். அவர்களது மூத்த மகன் என்றுதான் எல்லாக் கூட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்.

ஆண்டுதோறும் ஜெகந்நாதன் நினைவுநாளன்று நடைபெறும் சர்வோதய தினத்தன்று நாகப்பட்டினம் பகுதியிலிருந்து வரும் கிராமத்து மக்கள் நிறைந்திருக்க ஜெகந்நாதன் விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்கள் குக்கூ சிவராஜ், தன்னாட்சி நந்தக்குமார் ஆகியோருக்கும் ராஜேந்திரன், சுந்தரராஜன் போன்ற மூத்த சர்வோதய ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. அப்போதுதான் குக்கூ இளைஞர்கள் பலரும் முதன்முதலாக ஊழியரகத்துக்கு வந்தனர். அவர்களை அழைப்பதில் நானும் ஒரு சிறு பங்காற்றினேன் என்பதை இன்று நிறைவுடன் நினைத்துக்கொள்கிறேன்.

நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவின் போது குக்கூவோடு இணைந்து பணி செய்யும் இளைஞர்களும் எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களும் வாசகர்களும் ஊழியரகத்தை நிறைத்திருந்தனர். பொதுவாக அமைதியாக இருக்கும் ஊழியரகம் நேற்று இளமைத் துள்ளலுடன் காணப்பட்டது. கரவொலிகளும் சீழ்க்கையொலியும் சிரிப்பொலியும் கண்ணீரும் எனப் புதுப்பொலிவுடன் விளங்கியது. ஜெயமோகன் உரையும் சிறப்பாக அமைந்தது. நண்பர் பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ நூலை வெளியிடவும் இதைவிடப் பொருத்தமான இடம் அமைந்திருக்கமுடியாது.

‘குக்கூ ஆசிரமத்துல இருந்து வந்த பசங்க நேத்து என்னமாதிரி வேலை செஞ்சு இந்த இடத்தையெல்லாம் சுத்தப்படுத்திட்டாங்க. நாம அந்தக் காலத்துல வேலை செஞ்ச மாதிரியே இருக்காங்க,’ என்று கிருஷ்ணம்மாள் அம்மா அவரோடு பலகாலம் பணியாற்றியுள்ள சுந்தரராஜன் அவர்களிடம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சொன்னார்.

‘செய் அல்லது செத்து மடி’ என்ற காந்தியின் வாசகத்தை அம்மா அடிக்கடி சொல்வார். நாங்கள் சர்வோதய தின நிகழ்ச்சிகளை நடத்துவது எப்படி என்று திட்டமிடும் போதெல்லாம், அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு இறுதியில் எப்போதும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது குறித்தே பேசுவார். அதற்கு பணம் சேர்க்க வேண்டும், மக்களுக்கு போர்வைகள் சேர்க்கவேண்டும், ஆளுனரைப் பார்க்க வேண்டும், ஆட்சியரைப் பார்க்கவேண்டும், அனுமதியும் நிதியும் வாங்கவேண்டும் என்று உண்மையான செயல்திட்டங்களைப் பற்றியே அவரது கவனம் இருக்கும். நேற்றும் அவரது பேச்சை செய் அல்லது செத்து மடி என்ற ஒற்றை வரியிலேயே அடக்கலாம்.

2012ல் அவரை முதன்முதல் சந்தித்தபோது என் கரத்தைப் பற்றிக்கொண்டு வாஞ்சையுடன் பேசினார். இன்றுவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அதே அன்புடன்தான் கரங்களைப் பற்றிக் கொள்கிறார். அவரது குளிர்ந்த ஸ்பரிசம் ஒவ்வொரு முறையும் உடலுள் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது.

விடைபெறச் செல்லும் போது உறங்கிவிட்டிருந்தார். அவரது மகள் சத்யா, ‘சொல்லாமல் போய்விட்டால் அம்மா நிச்சயம் வருத்தப்படுவார்,’ என்று கூறி அவரை எழுப்பிவிட்டார். உடனே விழித்து, உறக்கம் கலைந்த சலிப்பு ஒரு கணநேரமும் தோன்றாமல், எழுந்து அமர்ந்து வழியனுப்பினார். ‘நித்யாவும் மகிழ்மலரும் ஏன் வரவில்லை, வாரம் ஒருமுறையேனும் மகிழோடு ஸ்கைப்பில் உரையாட வரவேண்டும், அம்மா கேட்டுக்கொண்டே இருக்கிறார்,’ என்றார் சத்யா அக்கா. நான் மிகவும் மதிக்கும் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி அவர்களது அற்புதமான குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம் என்ற உணர்வுதான் இப்போது மேலோங்குகிறது. இது எங்களுக்கு மட்டும் கிடைக்கும் தனி வரவேற்பல்ல; அவரோடு பழகும் ஒவ்வொருவருக்கும் அவரிடம் கிடைக்கும் அளவற்ற அன்பு. தம்மை நெருங்கிவரும் எல்லாரையும் தமது குடும்பத்தில் ஒருவராய் இணைத்துக் கொள்வதிலும் இவர்கள் காந்தியின் வாரிசுகளாகவே இருக்கிறார்கள்.

செயல் தரும் உற்சாகமே அம்மாவை இந்த வயதிலும் ஓடவைக்கிறது. சென்ற ஆண்டு சற்றே உடல்நலம் தளர்ந்திருந்தவர் கஜா புயலுக்குப் பின் மீண்டும் வீடுகள் கட்டும் பணி துரிதமடைந்ததால் துடியாகப் பயணம் செய்யத்தொடங்கிவிட்டார். இத்தனை இளைஞர்களுக்கு அவர் எந்தளவு ஊக்கம் தந்தாரோ அதைவிடப் பன்மடங்கு ஊக்கத்தை அவர்களது உற்சாகத்திலிருந்து அவர் அள்ளியெடுத்திருப்பார் என்பதை உறுதியாகக் கூறுவேன்.

இதைச் சாத்தியப்படுத்திய நண்பர் சிவராஜுக்கும் குக்கூ நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். இப்புத்தகமும் இதை வெளியிடும் நிகழ்வை ஒரு திருவிழாவாக்கியதும் அடுத்த தலைமுறைக்கு கிருஷ்ணம்மாவையும் சர்வோதயத்தையும் காந்தியையும் கடத்திச் செல்வதற்குப் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

நூல்: சுதந்திரத்தின் நிறம்

ஆசிரியர்: லாரா கோப்பா

வெளியீடு: தன்னறம்


வேருக்கு நீர்

நவம்பர் 12, 2019

ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவலை இம்மாதம்தான் படித்தேன். தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்துப் பேசும்போது சிலர் இதைக்குறிப்பிட்டதாலும், தற்செயலாகக் Kindle Unlimitedல் கண்ணில் பட்டதாலும் படிக்கத்தொடங்கினேன். மிகவும் பிடித்திருந்தது. காந்தி நூற்றாண்டு விழாவின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். காந்தி 150க்கும் பொருந்தி வருகிறது. பல ஆழமான உரையாடல்கள் மூலமகாக லட்சியவாதத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் ஏற்படும் உரசல்களுக்குள் ஆழமாகச் செல்கிறது. காந்தியின் மீதான அன்றைய ஆயுதம் தாங்கிய மார்க்சியர்களின் விமர்சனங்களையும் சித்தரிக்கிறது. இப்பகுதியை அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதையோடு ஒப்புநோக்கலாம். அவர் பல அடுக்குகளை அமைத்துத் தொட்ட ஒரு புள்ளியை, இவர் இந்நாவலில் மிக நேரடியாகத் தொட்டுவிடுகிறார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் குடும்ப வாழ்வில் சந்திக்க நேரும் சவால்களைச் சொல்வதில் பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.

அரசியல், இலட்சியவாதப் பின்புலத்தில் நடைபெறும் பல உரையாடல்களும், நிகழ்ச்சிகளும் ஒரு பழைய ருஷ்ய நாவலைப் படிக்கும் நிறைவைத் தந்தன. கேள்விகளை எழுப்பின. எளிமையான, இனிமையான நடை. ராஜம் கிருஷ்ணனின் பெயர் சிறுவயது முதலே பரிச்சயமானதுதான் என்றாலும், அவரது தனிமையான இறுதிக்காலம் குறித்து முகநூல் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருந்தாலும், ஏன் இவரை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். 80 படைப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்கிறது விக்கி. பிற நூல்கள் எப்படியோ, இது நல்லதொரு படைப்புதான்.


இடுக்கில் நுழைதல்

நவம்பர் 7, 2019

உலகம் திருக்குறளைப் பொதுமறையாக ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ, தமிழர்கள் திருக்குறளைப் பொதுமறையாகத்தான் கொண்டாடிவந்துள்ளார்கள். மதம் தாண்டி, ஒரு மொழியின், அம்மொழிபேசும் மக்களின் பொது அடையாளமாகக் குறள் கருதப்பட்டுவந்துள்ளது. இது ஏதோ திராவிடக் கட்சியினரின் சதியோ சாதனையோ அல்ல. அவர்களுக்கு முன்பே திருக்குறள் பல அறிஞர்களாலும் பொதுமறையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் உரையை விளக்கவுரையுடன் பதிப்பித்த வை.மு.கோ. அவ்வாறுதான் கூறுகிறார். சைவ மடமான திருப்பனந்தாள் காசி மடத்தின் உரைக்கொத்துப் பதிப்புகளிலேயே கூட இதைக்காணலாம். ராமக்கிருஷ்ண மடம் பதிப்பித்த கி.வ.ஜ. ஆய்வுரையிலும் இதே முடிவுக்கே வருகிறார்கள்.

வள்ளுவர் இன்ன மதம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் உரிமை பாஜகவுக்கும் உண்டு. ஆனால் திடீரென்று அவருக்கு ஆதாரமற்ற சமயச்சாயம் பூசுவதிலுள்ள அரசியல் கணக்குகள் ஆபத்தானவை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் ஒரு முக்கியமான சரடினை அறுக்கும் முயற்சி இது. ஒருவகையில் இது இவர்கள் இந்துத்துவக் கட்டமைப்பில் உள்ளடக்கியிருக்கும் சமணர்களையும் அந்நியப்படுத்தக்கூடும். தமிழின் முக்கியமான சமண, பௌத்தப் படைப்புகளை அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வழக்கமே உ.வே.சா. காலம் தொடங்கி இங்குண்டு.

குறள் சைவ நூல் அல்ல என்று சொல்பவர்கள் எல்லாரும் சைவ எதிர்ப்பாளர்களோ, இந்துமத எதிர்ப்பாளர்களோ அல்லர். சைவ நூல் என்பதால் திருவாசகத்துக்கு உருகாமலோ போய்விட்டோம். உண்மையில் என் மகள் திருமுறையிசை கற்றுக்கொள்ளத்தொடங்கிய கடந்த ஐந்தாண்டுகளில், திருக்குறளை விடவும் தேவாரமும் திருவாசகமுமே என் காதில் அதிகம் விழுந்துகொண்டிருக்கின்றன. திருக்குறள் சைவ நூலாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்.

திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் (உமா பதிப்பகம்) வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் வள்ளுவர் வைதிகக் கொள்கையினர் என்று கொண்டாலுமே இன்ன மதத்தவர் என்று கூறமுடியாது என்று எழுதுகிறார்:

/இவரது மதம் இன்னதென்று எவ்விதத்திலும் நன்கு விளங்கவில்லை. இவர் இந்நூலின் முதலிற் கூறிய கடவுள் வாழ்த்தும், பல சமயங்கட்கும் பொதுவாகவே உள்ளது; மற்ற விஷயங்களும் பெரும்பாலும் இப்படியே. இவரைச் சைவரென்றாவது வைஷ்ணவரென்றாவது ஒருசார்பாகக் கூறி யாவரும் ஒத்துக்கொள்ளும்படி நிறைநிறுத்துதற்குத் தக்க ஆதாரமொன்றுமில்லை. இவர்க்கு நாயனாரென்று வழங்குகிற பெயர் மாத்திரத்தைக் கொண்டு அவரைச் சைவரென்று சாதிக்கலாகாது; நாயனாரென்னும் அச்சொல் சைவசமயத்தில் மாத்திரமேயன்றி வைஷ்ணவ சமயத்திலும் ஜைந சமயத்திலும் கடவுளுக்கும் அடியார்கட்கும் பெயராக வழங்குதல் உணர்க. […]

இது நிற்க: இவரது மதம் ஜைனமாயிருக்கலாமென்று சிலர் ஊகிக்கிறார்கள்; […] ஜைநர்க்குச் சிறப்பாகவுள்ள புலால்மறுத்தல், கொல்லாமை என்ற ஒழுக்கங்களை மிக வற்புறுத்திக் கூறுதலும், அதிலும் “அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று” என யாகத்தை மறுத்தலும் முதலிய என்ப. அந்தத் திருக்குறளில் “உலகியற்றியான்”, “அந்தணர் நூல்”, “மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்”, “பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”, “அறுதொழிலோர் நூன்மறுப்பர்”, “அவியுணவி னான்றோர்” என்பவை முதலாகக் கூறியன கொண்டு இக்கொள்கை மறுக்கப்படும். இவர் வேதம், கடவுள், உயிர், பூதமைந்து, புலால்மறுத்தல், தவம் முதலியன கொண்டிருத்தலால், பௌத்தருமாகார். இனி, “மடியிலா மன்னவனெய்தும் அடியளந்தான், தாஅயத்தெல்லாம் ஒருங்கு” என்று கூறியிருத்தலாலும், “தாம்வீழ்வார் மென்தோட்டுயிலினினிதுகொல் தாமரைக்கண்ணானுலகு”, என்று சிற்றின்பத்தை எல்லாவற்றினுஞ் சிறந்த மோட்சலோகத்துப் பேரின்பத்தினும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய விடத்துத் தாமரைக் கண்ணானுலகு என்று திருமாலினது ஸ்ரீ வைகுண்ட லோகத்து இன்பத்தையே குறித்தலாலும், இவ்வுலகமாகிய லீலாவிபூதிக்கும் ஸ்ரீவைகுண்டமென்கிற நித்திய விபூதிக்கும் இறைவன் திருமாலேயென்று தெரிவித்த ஆசிரியர் திருமாலுக்கு உரிய அகாரத்தையே முதன்மொழியாகத் தொடங்கினாலும், இங்ஙன் அகச்சான்று பல இருத்தலால் இவரை வைஷ்ணவர், தம்மதத்தவரென்று சாதிக்கலாம். ஆயினும், தாமரைக்கண்ணானென்பது “மலர்மிலசையேகினான்” என்றாற்போன்று அடியார்களின் இதய கமலத்தின்கணுள்ளானென்ற பொருளைக் காட்டலாமாதலால் திருமாலையே சிறப்பாகக் காட்டுவதென்று கொள்ளவேண்டியதில்லை யென்றும், “அடியளந்தான் தாஅயது” என்று கூறியமாத்திரத்தானே திருமாலினிடத்துப் பக்தியினாற்றான் கூறினாரென்று கொள்ள முடியாதென்றும், பாணினி பகவான் “அ இ உண்” என்று தொடங்கினாற்போல இந்நூலாசிரியர் மங்களவெழுத்தாக அகரத்தைத் தொடங்கியிருக்கலாமென்றும், ஆகவே, இந்த அகச்சான்றுகள் இவரை வைணவரென்று நிலைநாட்டப்போதா என்று வைணவர் கூறுவதற்கு மறுப்புக் கூறவியலும்: இங்கனிருத்தலால், இந்த நூலாசிரியரை வேதவேள்விகளையும் சாதிகளையும் உடன்பட்ட வைதிகக் கொள்கையினரென்று சொல்லலாவதன்றி, இன்ன மதத்தவர்தாம் என்று உறுதியாகச் சொல்லி நாட்டுதற்கு ஏற்ற சிறந்த ஏது ஒன்றும் காணப்பட்டிலது. இங்ஙன் இருப்பது கருதியே திருவள்ளுவரின் திருக்குறளைப்பற்றி

“ஒன்றே பொருளெனின்வேறென்ப வேறெனின்,
அன்றென்ப வாறுசமயத்தார் – நன்றென்ன,
எப்பாலவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”

என்று கூறியதுமென்க./

திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பித்த திருக்குறள் உரைக்கொத்து நூலின் பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார்கள்:
“திருக்குறள் எனும் தமிழ்மறை ஓர் ஒப்பற்ற நூலாகும். […] எல்லா மதத்தினரும் எல்லாத் துறையினரும் உரிமை கொண்டாடும் சிறப்புடையது.”

இவர்களே இவர்களது பதிப்பில் (2002) சமய அடையாளமற்ற திருவள்ளுவரின் படத்தையே போட்டிருக்கிறார்கள்.

திரு.வி.க. திருக்குறளைப் பொதுநெறி, அருநெறி என்றும், தமது தமதென்று இடுக்கில் நுழைதல் கூடாது என்றும் கூறுகிறார். ( திருக்குறள் பன்முக வாசிப்பு – பதிப்பு: மாற்று/வெ.பிரகாஷ்)

“திருவள்ளுவர், நாயன்மார் ஆழ்வார்கட்கு முற்பட்டவர். அவர் அருளிய திருக்குறளோ மன்பதைக்குரிய அருள் மறை; பொது மறை. அத்தகைய ஒருவர் திருவுருவம் சைவ வைணவக் கோயில்களில் ஏன் அமைக்கப்படுவதில்லை? சைவ வைணவ நூல்களில் அடியவர் வாழ்த்தில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை? அவர் நூல் பூசைக்காலங்களில் ஏன் ஓதப்படுவதில்லை? அன்பவர்கள் உன்னுவார்களாக. முன்னாளில் திருவள்ளுவர் ஜைநர் என்று கொள்ளப்பட்ட வழக்கே, அவரைச் சைவ வைணவக் கோயில்களும், நூல்களும், சம்பிரதாயமும் புறக்கணிக்கக் காரணமாக நின்றிருக்கலாம் என்று எவரும் ஊகிக்கக் கூடும். பின்னே போந்த சைவ வைணவ அறிஞர்கள், திருவள்ளுவர் அறிவுறுத்திய அருணெறியின் பெற்றியுணர்து, அவரை ஏற்றுப் போற்றுவதோடு, அவரைத் தம்மவர் தம்மவர் என்று கொள்ளச் சொற்போரும் நிகழ்த்தலானார்கள்.

திருவள்ளுவர் அறிவுறுத்தியது பொதுநெறி – அருணெறி. ஜீவகாருண்ய ஒழுக்கம். அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில், பிறரெனில், அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருணெறியின்பாற் பட்டனவென்க. அருகர் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியவரல்லர். அவர் உலகிற்கே உரியர். அருணெறியோம்பப் போந்த ஆசிரியர் பலரும் உலகிற்குரியராவர். அவரைச் சமயவாதிகள் தங்கள் தங்களுக்கே உரியர் என்று கருதிக் கொள்கிறார்கள். அச்சுட்டறிவு பொது உணர்விற்கே கேடு சூழ்கிறது. சுட்டி இடுக்கில் நுழைதல் கூடாது. இடுக்கு இடுக்கணுறுத்தல் இயல்பு. பரந்த பொது வெளியில் உலவ முயல்வதே அறிவுடைமை. அவ்வறிவு சிறப்பளிக்கும்.”


உடுக்கை மாறிய வள்ளுவன்

நவம்பர் 7, 2019

உடுக்கை மாறிய வள்ளுவனுக்கு வந்த இடுக்கண் களையக் களத்தில் இறங்காவிட்டால் அவருடனான நட்புக்கொன்றும் களங்கம் வந்துவிடாதுதான். தற்காத்துத் தன்னைப் பேணிக்கொள்ளும் தகைமை அவர் எழுத்துக்குண்டு. இருப்பினும்…

வள்ளுவன் இனிய உளவாக மட்டுமே கூறியவரில்லை. கடும்சொற்களையும் அவ்வப்போது அள்ளி வீசுவார். தன்னை வியந்து அணியும் சிறுமை கண்டு பொங்குவார்.

பேதைமை, புல்லறிவாண்மை, இகல், கயமை போன்ற அதிகாரங்களில் புகுந்து விளையாடியிருப்பார்.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.’

என்று நக்கலாகவும் அதிரடித் தாக்குதல் நிகழ்த்துவார். முதலில் வள்ளுவனது வெண்தாடியைக் களைந்தால்தான் அவனைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும். மழித்தலா, நீட்டலா, பட்டையா, நெட்டையா என்பதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஔவையும் பாட்டியல்லள், ஐயனும் கிழவனல்லன் என்பது என் துணிபு.

இந்த முகநூல் யுகத்துக்கு மிகவும் தேவையான அதிகாரங்கள் நட்பு குறித்தவை. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என்று ஐந்து அதிகாரங்கள் எழுதியிருக்கிறார். படித்துப் பயன்பெறுங்கள். யாருடைய நட்பு அழைப்பை ஏற்கலாம், யாரைத் தொடர்வதை நிறுத்தவேண்டும் (unfollow), யாரை நட்புநீக்கம் செய்யவேண்டும் (unfriend), யாரை block செய்யவேண்டும், எவரிடம் அகலாது அணுகாது இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வள்ளுவனைப் படித்துத் தெளிவுறலாம்.

‘ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.’


காந்தியும் திருக்குறளும்

நவம்பர் 6, 2019

(சில ஆண்டுகளுக்கு முன் ‘காந்தி இன்று’ தளத்துக்காக எழுதிய கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்)

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத் திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.

தென்னாப்ரிக்காவில் தமிழர்களோடு ஏற்பட்ட தொடர்பிற்கு முன், காந்தி திருக்குறள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க  வாய்ப்பில்லை. அறிந்திருந்தால், அது அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. சிறுவயதில் அவரை மிகவும் ஈர்த்து வழிநடத்தியவை என்று இரண்டு கோட்பாடுகளைத்தான் குறிப்பிடுகிறார்: உண்மை, தீங்கிழைத்தவர்க்கும் நன்மையே செய்தல். (1) இரண்டுமே திருக்குறள் முன்வைக்கும் முக்கிய நெறிகள். அப்போது அவரைக் கவர்ந்த ஒரு குஜராத்திப் பாடலை, சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்தபோதும், ஷாமல் பட் எழுதிய அதே பாடலை மீண்டும் நினைவுகூர்கிறார்; புதிய ஏற்பாட்டில்  மலைப் பிரசங்கத்தைப் படிக்கும்போது இப்பாடல் அவர் நினைவுக்கு வருகிறது. 

பெற்ற ஒரு குவளை நீருக்கு, நிறைவான ஒரு வேளை உணவை அளி:

ஓர் எளிய வாழ்த்துக்கு, உற்சாகமாய்ப் பணிந்து வணங்கு:

சில நாணயங்கள் பெற்றிருந்தால், பொற்குவை திரும்பக் கொடு:

உயிர்காத்தவனுக்காய் உயிரையும் தரத் தயங்காதே.

சொற்களையும் செயல்களையும் இங்ஙனமே கருதுவர் அறிவோர்,

பெற்ற சிற்றுதவிக்குப் பதிலாய் பன்மடங்கு பேருதவி புரிவர்.

ஆனால், பெருஞ்சான்றோர் மனிதன் ஒன்றே என்றரிவர்;

இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்திடுவர்.

இப்பாடல், பல குறட்பாக்களின் இணைவடிவமாகத் தெரிகிறது:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். [104]

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. [102]

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. [987]

அதற்குப்பின்னும் காந்தியைப் பாதித்த, அவரே எழுதிய பலவற்றுள்ளும் குறளின் கருத்துகள் பொதிந்திருந்தாலும், வளரும் பருவத்தில் அவரை ஈர்த்த இப்பாடல் குறிப்பிடத்தகுந்தது.

காந்திக்குத் திருக்குறள் பற்றிய முதல் அறிமுகம் ஜி.யு.போப் மூலமாக நிகழ்ந்திருக்கலாம். (2) “நான் தமிழும் உருதுவும் கற்றுத்தருவதற்கு முன்வந்திருந்தேன். எனக்குத் தெரிந்த சிறிதளவு தமிழை கடற்பயணங்களின் போதும் சிறைவாசங்களின் போதும் கற்றிருந்தேன். போப் எழுதிய அருமையான தமிழ்க் கையேட்டினை நான் தாண்டவில்லை.” (3) ஜி.யு.போப் திருக்குறளை 1886ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அது இன்றளவும் பிரபலமாக உள்ளது. இக்கையேட்டுக்கான அறிமுகத்தில், போப் திருவள்ளுவரின் குறள் குறித்து, “இப்படைப்பின் ஆசிரியல் இதனை எல்லாவிதமான அறிவின் பெட்டகமாக அமைத்து, தமிழ் மக்களுக்கு வேதத்தின் இடத்தில் இருத்தக் கருதினார்.” திருக்குறளின் அமைப்பை விளக்கும்போது, ஏங்கிலிக்கன் கிருத்துவப் பாதிரியாரான இவர், ‘மூன்றாம் பால் புலனின்பம் சார்ந்தது; அதன் பெரும்பகுதி படிக்கத் தகுதியானதன்று,’ என்று காமத்துப்பாலைப் புறந்தள்ளிப் பேசுகிறார்.(4) (எனினும், மொழிபெயர்க்கும்பொது காமத்துப்பாலையும் சேர்த்தே மொழிபெயர்த்தார்.) கூடுதலாக, கையேட்டின் இரண்டாவது பகுதியில், திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு விரிவான அறிமுகம் தந்து, முதல் நான்கு அதிகாரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகிறார். ‘தமிழ்க் கவிதைக்கு மிகச் சிறந்த அறிமுகம்’ என்றும், ‘திருவள்ளுவரின் கவிதை எவ்வகையிலும் நீளமானதல்ல; ஆயினும், மதிப்பில், மொத்தத் தமிழ் இலக்கியத்தின் பிறநூல்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது; ஒட்டுமொத்த மக்கள் குழுவொன்றின் கூட்டு ஆன்மாவுக்குள் நுழைந்த மிகச்சில மகத்தான நூல்களில் இதுவும் ஒன்று; இதற்கு அழிவே கிடையாது,’ என்றும் திருக்குறளை விதந்து கூறுகிறார். ‘வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் கீழ்ச்சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று வாய்மொழி மரபுகள் கூறுகின்றன’ என்று சொல்லிவிட்டு, உடன் இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் வள்ளுவர் ‘உறுதியாக ஒரு பறையர்’ என்ற முடிவுக்கு வருகிறார். மேலும், ‘கிருத்துவ ஆகமநூல்களும் இக்கவிஞருக்கு உந்துதலாக இருந்த நூல்களில் அடங்கும்,’ என்றும் தயங்காமல் கூறுகிறார். “தற்போதும் பிற காலங்களிலும் தென்னிந்தியாவில் நிலவிய பல சிந்தனைகள் செயல்பாடுகளின் தடயமே திருக்குறளில் இல்லை; ஏனெனில், இம்முனிவரின் பரந்துபட்ட நம்பிக்கையாலும் நடத்தையாலும் இவை ஒதுக்கப்பட்டிருக்கும்; இவரது படைப்பு அறிவுறுத்துவதாகவும் சர்ச்சைகளைத் தவிர்ப்பதாகவும் உள்ளது. அவரது மெய்யியல் பகவத் கீதையைப் போன்ற பரந்துபட்ட தரிசனத்தைச் சார்ந்தது,” என்று போப் சொன்னது காந்தியைப் பெரிதும் ஈர்த்திருக்கக்கூடும். (5)

காந்தியின் எழுத்துகளில் போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், அவரது பிந்தைய எழுத்துகளின் அடிப்படையில், அவர் போப்பின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கக்கூடும் என்று ஊகிப்பது தவறாக இருக்காது. 

1905ம் ஆண்டு முதலே, அவரது உறவினர்களான சகன்லால் காந்தி, மகன்லால் காந்தி ஆகியோருக்கு எழுதிய பல கடிதங்களில் ஜி.யு.போப் பற்றிக் குறிப்பிடுகிறார். சகன்லாலை ஜி.யு.போப்பின் கையேட்டின் புதிய பதிப்பின் மூன்று பாகங்களையும் மூன்று பிரதிகள் வாங்கும்படி அறிவுறுத்துகிறார். (6) மார்ச் 1908ல், ஜி.யு.போப்புக்கு இந்தியன் ஒப்பினியன் இதழில் ஓர் அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார். டைம்ஸ் இதழில் வந்த அஞ்சலிக் கட்டுரையையும் பதிவிடுகிறார். இரண்டு அஞ்சலிக் குறிப்புகளிலுமே திருக்குறள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆச்சரியம்தான். “சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்தவேண்டியர்களில் டாக்டர்.போப்பைவிடத் தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை. அவரது உதாரணம் சென்னை மக்களை ஆராய்ச்சிப் பாதையில் வழிநடத்தி, அண்மைக்காலத்தில் புதைந்துபோன அவர்களது பெரும் வரலாற்றைக் குறித்து உலகம் அறியவும், இலக்கியம், மொழியியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றின் பொக்கிசங்கள் வெளிச்சத்திற்கு கொணரவும், மக்கள் தங்கள் எதிர்கால வளர்ச்சிப்பாதையைப் பற்றிய ஓர் அறிகுறியைப் பெறவும் மிளிரும் ஒளியாக உள்ளது,” என்று எழுதி அஞ்சலி செலுத்தினார். (7)

1909ல்தான் காந்தியின் வாழ்வில் திருக்குறள் நேரடியாக நுழைந்ததற்கான தடயத்தைக் காண்கிறோம். லியோ தால்ஸ்தோய் எழுதிய ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ (A Letter to a Hindu)  என்ற கட்டுரையைக் காந்தி தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் தால்ஸ்தோய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.  

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள். [311]

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [312]

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும். [313]

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். [314]

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. [315]

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். [317]

இந்த ஆறு குறட்பாக்களையும் குறிப்பிட்டு,  ‘இவ்வாறே எங்கும் நடந்தது. அன்பே மிக உயர்ந்த அறம் என்கிற புரிதல் எங்கும் மறுக்கப்படவில்லை. ஆனால், இந்த உண்மை பல்வேறு பொய்களோடு பிணைந்து  சிதைந்திருந்ததால், வெறும் சொற்களே எஞ்சியிருந்தன,’ என்கிறார் தால்ஸ்தோய். ‘இல்வாழ்க்கைக்கு மட்டுமே இந்த உயர்ந்த அறம் அவசியமாகக் கற்பிக்கப்பட்டது. பொது வாழ்வில் எல்லாவிதமான வன்முறையும் (சிறை, மரணதண்டனை, போர்கள்) பெரும்பான்மை மக்களைக் காக்க, அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சிறுபான்மையினர் மீது ஏவப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – இன்னமும் சிறிதே எஞ்சியிருக்கும் அன்புக்கு அது நேர்மாறாக இருந்தபோதிலும்.’ (8)

காந்திக்கு இக்குறள்களும், அவற்றையொட்டிய தால்ஸ்தோயின் கருத்துகளும் உறுதியாகப் பிடித்திருக்கும். தனிவாழ்வையும் பொதுவாழ்வையும் என்றைக்கும் அவர் பிரித்து வைத்ததில்லை. இக்கட்டுரையை முன்வைத்துத்தான் காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. ஆனால், திருக்குறள் பற்றிக் குறிப்பாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.

மகன்லால் காந்திக்கு 1910ல் எழுதிய ஒரு கடிதத்தில், திருக்குறள் வாசகம் ஒன்றைச் சற்றே வினோதமான சூழலில் குறிப்பிடுகிறார். “சந்தோக்கிற்குக் குழந்தை பிறந்துவிட்டதால், அவளைப்பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கற்க கசடறக் கற்பவை. போப்பின் இலக்கண நூலின் முதல் பக்கத்தில் உள்ள இந்த வாசகத்தை மனதில் அசைபோட்டுப் பார். தனது மனைவி மீதான காம உணர்வை வெல்வதைக் காட்டிலும் கடினமான பணி எதுவும் இருக்கமுடியாது.”  (9)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. [391]

என்ற குறளை மனதில் கொண்டு எழுதியுள்ளார். ஆனால், இதில் சுவையான செய்தி என்னவெனில், ‘கற்கக் கற்கக் கசடறும்’ என்ற பழமொழிதான் போப்பின் கையேட்டில் முதல்பக்கத்தில் உள்ள வாசகம். காந்தி தவறுதலாகச் சரியான ஒரு குறளைக் குறிப்பிட்டிருப்பது, அவர் திருக்குறளைப் படித்திருக்கவேண்டும் என்பதைப் பெருமளவு உறுதிசெய்கிறது என்பது இதில் ஓர் எதிர்பாராத நன்மை. இன்னொரு கடிதத்திலும் இத்தவறினை மீண்டும் செய்வார் என்பதைக் காண்போம். 

இந்தியா திரும்பியபின், நண்பர் ஜி.ஏ.நடேசனுக்கு, “எனக்கு தயவுசெய்து தமிழ்ப் புத்தங்களை அனுப்பி வையுங்கள். ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கும், சுந்தரம் போன்றவர்களுக்கும் எனக்குப் புத்தகங்கள் வேண்டும். டாக்டர்.போப்பின் அனைத்துப் புத்தகங்களும் வேண்டும். எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இதைச் செய்துவிடுங்கள்,” என்று எழுதினார். (10)

மகன் தேவதாஸ் காந்திக்கு, 1919ல் எழுதிய ஒரு கடிதத்தில் முன்பு போலவே தவறுதலாகத் திருக்குறள் வாசகத்தைக் குறிப்பிடுகிறார். “இவ்வாசகத்தை தமிழில் அடைமொழியாகக் கொள்ளவும்: கற்க கசடறக் கற்பவை. […] போப்பின் கையேட்டில் முதல் பக்கத்தில் இது வருகிறது. தெலுங்கில் இதன் மொழிபெயர்ப்பையும் அறிந்து அதையும் கொடுத்துவிடு.”  (11)

1920ல், அகமதாபாத்தில் ஆற்றிய ஓர் உரையில், ஜி.யு.போப் பற்றிக் கவித்துவமாகப் பேசினார்: “சென்னையில் எந்த இந்தியரும் போப் அளவுக்குத் தென்னிந்தியாவுக்குச் சேவை செய்துவிடவில்லை – இவர் இலியட் புகழ் போப் அல்லர். மனிதர்கள்மீது எப்போதும் நான் பேரன்போடு இருக்கிறேன். எனவே அவர்களது உள்ளங்களைக் கவரவேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன். தென்னிந்தியச் சகோதரர்களின் உள்ளங்களைக் கவர்வதற்காக, அவர்களது மொழியைக் கற்க வேண்டியிருந்தது. இப்போது போப் அவர்களின் எழுத்துகளில் இருந்து உடனடியாக மேற்கோள் காட்டமுடியவில்லையெனினும், இதைச் சொல்வேன்: விவசாயிகள்கூட தோட்டத்துக்கு நீர்பாய்ச்சும்போது இன்புற்று அனுபவிக்கக்கூடிய வகையில் தமிழில் இருக்கும் கவிதைகள் அற்புதமானவை. கதிரவன் உதிக்கும் முன்பே தோட்டங்களுக்குத் நீர் பாய்ச்சும் வேலை தொடங்கிவிடும். கம்பு, கோதுமை ஆகிய அனைத்தும் பனி முத்துகளால் மூடப்பட்டுள்ளன. மரங்களின் இலைகள் மீதுள்ள நீர்த்துளிகள் முத்துகள் போல ஒளிர்கின்றன. இப்பாடல்களைத்தான் விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சும்போது பாடுகிறார்கள்.” (12) இது அவர் போப்பின் கவிதைகளைப் படித்துள்ளார், குறிப்பாகத் திருக்குறளையும் படித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக உள்ளது.

அடுத்து, நாம் திருக்குறளை காந்தியின் பதிவுகளில் 1927ம் ஆண்டு காண்கிறோம். ரங்கூன் நகரிலிருந்து ஒரு நண்பர், கதர்ப் பிரச்சாரத்துக்காக இருபத்தைந்து ரூபாய் கொடையும் அதனோடு ஒரு கடிதமும் அனுப்புகிறார். அக்கடிதத்தை இறந்துபோன தனது தந்தைக்குப் பதினாறாம் நாள் சடங்குகளைச் செய்வதில் தனக்கிருக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்தித் தொடங்குகிறார். அது அடிமைத்தனமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருப்பதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்கள்மீது திணிக்கப்படும் ஒரு ஏமாற்றுவேலையாகயும் கருதுகிறார். அர்ப்பணிப்புடனும் கொடைநோக்குடனும் செய்யப்படும் ஈமச்சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் திருக்குறளைப் பயன்படுத்தி நிறுவுகிறார். 

“24-2-1927 யங் இந்தியா இதழில், நீங்கள் சொல்வது போல, ‘கொடைபெறுவதற்கு இரண்டு வர்க்க மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, பிறருக்கில்லை – தனக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், புனிதக் கல்வியைப் பிறருக்குக் கற்றுத்தரும் பிராமணன், உடல் ஊனமுற்றவர்கள் அல்லது பார்வையற்றவர்கள்.’ மரணமற்ற எங்கள் மாமுனி திருவள்ளுவர் ‘எல்லா உயிர்களிடத்தும் பொங்கிப்பெருகும் அன்பைக் கொண்டுள்ள சந்நியாசிகளே அந்தணர்’ என்று சொல்லியிருக்கிறார். கொடையளிப்பதற்கு உங்களைவிடச் சிறப்பான மனிதரையும்  ராட்டையைவிடச் சிறப்பான ஒரு நோக்கத்தையும் என்னால் காணமுடியவில்லை என்பதால் உங்களுக்கு இத்தொகையை அனுப்பியுள்ளேன். பெற்றோரின் நினைவினைப் போற்றுவதற்கு இன்னொரு வழியும் உண்டு. முனி வள்ளுவன் சொல்கிறான்: ‘மகன் தந்தைக்குச் செலுத்தக்கூடிய நன்றி என்பது இவனது தந்தை இவனைப்பெறப் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும என்ற பெயரை எடுக்கும்வண்ணம் உலகில் மிகச் சிறப்பாக நடந்துகொள்ளவதுதான்.’ இக்குறிக்கோளை எனது மனதில் நான் தாங்கியுள்ளேன் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.” (13)

இக்கடிதம் பின்வரும் குறள்களையொட்டி அமைந்துள்ளது:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். [30]

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல். [70]

காந்தி இக்கடிதத்தின் கருத்தினை அமோதிக்கும்வகையில், அர்த்தமற்ற சடங்குகளைத் தானும் எதிர்ப்பதாகவும், இக்கடிதம் எழுதியவரைப் போல பிறரும் தமக்குச் சரியென்று படுவதையே செய்ய முனைந்து தம்மையே ஏமாற்றிக்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் எழுதினார். எனினும் திருக்குறள் பற்றி நேரடியாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை.  

1927ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலில் காந்தி திருக்குறள் பற்றி நேரடியாகப் பேசியது பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எழுந்திருந்த ஒரு குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். அப்போது,

‘திருக்குறளில் காணக்கிடைக்கிற புதையல்களின்பால் எனது கவனத்தை நீங்கள் ஈர்த்தது சரிதான். உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் – சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை அதன் மூலமொழியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையோடும் குறிக்கோளோடும் நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். தமிழைக் கற்று முடிப்பதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுக்கவில்லை என்பது என் ஆழ்ந்த வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். பிராந்திய மொழிகளையேப் பாடமொழியாக ஆக்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். நாம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்; ஆங்கிலத்தைவிட தமிழையே விரும்பவேண்டும்; தமிழை மற்ற மொழிகளுக்கெல்லாம் மேலான இடத்தில் இருத்தவேண்டும்,’ என்று கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளியானது. (14)

அதே ஆண்டு, காந்தி தமிழகப் பயணத்தில் சந்தித்த பல கேள்விகளை, குறிப்பாக பிராமணர்-பிராமணரல்லாதார் மோதல் குறித்த உரையாடல்களைத் தொகுத்து, மகாதேவ் தேசாய் ஒரு குறிப்பு எழுதினார். ஒரு கேள்வியில் திருக்குறள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“கேள்வி. நீங்கள் குறள் பற்றி அறிவீர்கள். இந்நூலின் ஆசிரியர் பிறப்பால் சாதி இல்லை என்று சொல்கிறார் என்பதை அறிவீர்களா? பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்கிறார் அவர். 

பதில்: நிகழ்கால அத்துமீறல்களுக்கு எதிர்வினையாக அவர் இதைச் சொல்கிறார். தாம் உயர்ந்தவர் என்று ஒரு வர்ணம் கூறிக்கொள்ளும்போது, அதற்கெதிராக அவர் குரலை எழுப்ப வேண்டியிருந்திருக்கும். ஆனால் அது வர்ணத்தின் வேரைப் பிறப்பிலிருந்து அறுக்கவில்லை. ஏற்றத்தாழ்வுகளின் வேரையறுக்கும் ஒரு சீர்திருத்தவாதியின் முயற்சியே இது.” (15)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். [972]

என்ற குறளை முன்வைத்து இந்த உரையாடல் நடைபெறுவதை உணரலாம்.

இது திட்டமிடப்பட்ட உரையாடல் இல்லையெனினும், காந்தி சரியான குறிளை விரைவாக அடையாளம் கண்டுகொண்டு அதைக்குறித்துப் பெருமளவு சரியான புரிதலுடன் விளக்குவதாகவே தெரிகிறது. 

அடுத்து, 1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை காந்தி எழுதியுள்ளார். (16)

“திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.  வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. [327]

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

‘சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்

மரணத்தை நான் விதிப்பதில்லை;

என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,

அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன்.’

அடுத்த தேர்வு:

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. [339] 

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:

மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை.’ “

காந்திக்குத் திருவள்ளுவர் ஒரு ஹரிஜன் என்றும், நெசவாளர் என்றும் கூறப்பட்டது இரட்டை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தீண்டாமை இயக்கமும், கதர் இயக்கமும் தான் அவரது ஈடுபாட்டை மிகவும் அதிகமாய்க் கோரிய இயக்கங்கள். திருவள்ளுவர் முன்வைக்கும் அன்பு, அறம், கொல்லாமை, வாய்மை, ஈகை என்ற பல கருத்துகள் காந்தியின் கருத்துகளுக்கு முழுக்கவே இணையானவை.

காந்தியின் முதன்மைச் சீடரான வினோபா, திருக்குறளை நன்றாகக் கற்றிருந்தார். பல உரைகளில் திருக்குறளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் மேற்கோள் காட்டுவார் என்று அவரோடு நெருங்கிப் பழகிய நாராயண் தேசாய், என்னுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். காந்தியோடு தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த நாராயண் தேசாயை,  குஜராத்தில், அவரது சம்பூர்ண கிராந்தி வித்தியாலயத்தில் சந்தித்தபோது, புதிதாக வெளிவந்த ஒரு குஜராத்தி இலக்கியச் சிற்றிதழில் இருந்த திருக்குறள் பற்றிய ஒரு கட்டுரையை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்துப் படித்துக் காட்டியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மார்க்கண்டன் அவர்களோடு ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, வினோபாவிடம் அவர் ஏதேனும் செய்தி கேட்டதாகவும், அப்போது அவரது கைப்பட எழுதித்தந்த ஒரு குறள் பற்றியும் குறிப்பிட்டார்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய். [360]

ஆனால், காந்தியைப் பொருத்தவரை, இந்த இரு குறிப்புகளைத் தவிரத் திருக்குறள் பற்றிப் பேசியதற்கான வேறு தரவுகள் இதுவரை தென்படவில்லை. எனினும், ‘என் வாழ்க்கைதான் எனது செய்தி’ என்று சொன்னவரின் அச்செய்தியில் பல குறள்கள் மிளிரக் காணலாம்.

குறிப்புகள்:

  1. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 44
  2. Dr. G. U. Pope (1820.1908), translator of Thirukkural and Thiruvasagam, author of First Lessons in Tamil, A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, A Textbook of Indian History, etc.
  3. M.K.Gandhi, An Autobiography, Navajivan Publication, www.mkgandhi.org, Page 406
  4. G.U. Pope, First Lessons in Tamil: A Handbook of the Ordinary Dialect of the Tamil Language, London: W.H.Allen & Co. 1883, Part I, Page 5. 
  5. ibid…Part II, Pages 52-76.
  6. LETTER TO CHHAGANLAL GANDHI, Johannesberg, May 1, 1905, The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  7. THE LATE DR. POPE, The Collected Works of Mahatma Gandhi, Volume 8…Indian Opinion, 14-3-1908
  8. Leo Tolstoy, ‘A Letter to a Hindu’, Dec 14th, 1908….Indian Opinion, November 26, 1910. [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]
  9. LETTER TO MAGANLAL GANDHI, Tolstoy Farm [July 25, 1910], The Collected Works of Mahatma Gandhi, Volume 4
  10. LETTER TO G. A. NATESAN, Bombay, May 10, 1915, The Collected Works of Mahatma Gandhi, Volume 14
  11.  LETTER TO DEVDAS GANDHI, Ahmedabad, February 23, 1919, The Collected Works of Mahatma Gandhi, Volume 17
  12.  SPEECH AT GUJARATI SAHITYA PARISHAD, Ahmedabad, April 2, 1920, The Collected Works of Mahatma Gandhi, Volume 20
  13. TRUE ‘SHRADDHA’, The Collected Works of Mahatma Gandhi, Volume 39…Young India, 1-9-1927
  14. SPEECH AT PUBLIC MEETING, TUTICORIN, October 6, 1927, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…The Hindu, 8-10-1927.
  15. BRAHMIN-NON-BRAHMIN QUESTION, The Collected Works of Mahatma Gandhi, Volume 40…Young India, 24-11-1927
  16. TAMIL HOLY BOOK, The Collected Works of Mahatma Gandhi, Vol 67…Harijan, 6-7-1935 [Translation of the kurals as given in the original. Numbering of the Kurals done for this essay]

பொறுமையானவர்கள்

ஓகஸ்ட் 12, 2019

உண்மையில், எல்லாரையும்விட
அவர்கள்
பொறுமையானவர்கள்.

அதனால்தான்
பனிமலை பற்றியெரியும்போது
நிதானமாக அவர்களால்
விவாதிக்கமுடிகிறது.
நம் கொந்தளிப்பைப் பார்த்துக்
கைகொட்டிச் சிரிக்கமுடிகிறது.
மக்களாட்சி பற்றி
சகிப்புத்தன்மை பற்றி
வகுப்பெடுக்கமுடிகிறது.
கல்லெறியும்
கல்லெறிவதாய்ச் சொல்லப்படும்
சிறுவர்களின்
கண்களைக் குருடாக்குவதை
இரும்புக்கரம் கொண்டு அடக்குதல் என்று
விளக்கமுடிகிறது.
அன்னையர் தம் மக்களுடன்
ஒரே ஒரு நிமிடம்
ஒற்றைத் தொலைபேசியில் உரையாட
அனுமதித்து மேற்பார்வையிடுவதை
மென்மையான அடக்குமுறையென்று
மெச்சமுடிகிறது.

அதனால்தான்
ஒவ்வொருமுறையும்
கோட்சேவால் காந்தியைக்
கைநடுக்கமில்லாமல்
சுடமுடிகிறது.