சுதந்திரத்துக்குப் பின்னான காந்தியத் தலைவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவரான ஜெகந்நாதன் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னெடுப்பில் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வோதய தின நிகழ்வுகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் விருது கட்டிடத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்.கீதா, மூத்த சர்வோதய இயக்கச் செயல்பாட்டாளர்களான சுந்தரராஜன், ராஜேந்திரன் ஆகியோருக்கும், மறைந்த இத்தாலிய காந்தியத் தலைவர் ஆல்பர்டோ லபாட்டே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த மூத்த செயல்பாட்டாளர்களோடு சேர்த்து இளம் நண்பர்களான ‘தன்னாட்சி’ நந்தகுமார், ‘குக்கூ’ சிவராஜ் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
நந்தகுமார் சிவா கிராம சபைகள் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பங்காற்றியிருக்கிறார்.
சிவராஜ் குழந்தைகளோடு பணியாற்றுவதற்கு ஒரு பெரிய இளைஞர் திரளை ஈர்த்திருக்கிறார்.
முந்தைய நாள், மாணவர்களோடு பேசிய ‘துலா’ அனந்து சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும் கரிசனத்துடன் செய்ய வேண்டிய தொழில்கள் குறித்த தன் விரிவான, செறிவான, உணர்வுப்பூர்வமான உரை மூலம் வந்திருந்த அனைவரின் மனசாட்சிகளையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்.
நண்பர்கள் சிவகுருநாதன், ஸ்டாலின் ஆகியோரும் மூன்று நாட்களும் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி கடலைமிட்டாய், குக்கூ நூல்கள் ஆகியவற்றுக்கான விற்பனையரங்குகளை அமைத்து, மாணவர்களோடு உரையாடி சமூகநலத் தொழில்கள் குறித்த ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
விழா முடிந்தபிறகு, கடந்த ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து இந்தியா வந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் வில்லிஸ் தன் மனைவி மிக்காவுடன் எங்களோடு வந்து எங்கள் கிராமத்திலும், கோவையில் பெற்றோர் வீட்டிலும் தங்கியிருந்தது மாறுபட்ட ஓர் அனுபவமாக அமைந்தது. கிராம மாணவர்களுக்கும் அயல்நாட்டினரோடு முதன்முதலாக உரையாடி பல்வேறு கேள்விகளைத் தொடுத்து உறவாட ஒரு வாய்ப்பு.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
