இருசுடரொடு இயமானன்

ஏப்ரல் 10, 2021

மகள் மகிழ்மலர் ஒரு திருவாசகப் பதிகம் பாடிக்கொண்டிருந்தாள். பெரும்பாலான திருவாசகப் பாடல்களை மோகனத்தில்தான் (முல்லைப்பண்) பாடுவார்கள். இப்பாடல் அவளுக்குப் புதிய ராகமான ஹம்சநாதத்தில் அமைந்துள்ளது.

போற்றிஎன் போலும் பொய்யர்
    தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
    நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
    புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்று இயமானன் வானம்
    இருசுடர்க் கடவு ளானே

(திருவாசகம் – திருச்சதகம், 7: 62-63)

இதில் வந்த இயமானன் என்ற சொல் அடிக்கடி கேட்டுப் பழகியதென்றாலும் வேறு எங்கு வருகிறது என்பது உடனே இருவருக்கும் பிடிபடவில்லை. சிறிது ஆராய்ச்சிக்குப்பின் திருவாசகத்திலேயே சிவபுராணத்திலும் ‘வெய்யாய்! தணியாய்! இயமானனாம் விமலா’ என்ற வரி உண்டு என்பது நினைவுக்கு வந்தது. ‘பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி,’ என்று மகிழ் பாடலைத் தொடர்ந்தாள். [பாடும்போது ஏனோ இயம்+ஆன+நாம் என்று பிரித்து மனதில் பதித்திருந்ததால் சட்டென்று நினைவு வரவில்லை என்றாள்.]

இச்சொல்லுக்குப் பொருள் தேடிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக்குச் சென்ற போது, அதற்கு ஆன்மா, உயிர், யாகத்தலைவன் ஆகிய பொருள்கள் தரப்பட்டிருந்தன. இயமானனாம் விமலா என்று தொடரில் இச்சொல்லுக்கு யாகத்தலைவன் என்ற பொருளைப் பேரகராதியில் தருகிறார்கள். பேரகராதியில் இயமானனுக்கு வேர்ச்சொல் வடமொழியின் எஜமான என்றும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எஜமானவின் வேர்ச்சொல் இயமானன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு பதிகங்களுக்கும் thevaaram.org பொழிப்புரையில் இயமாமனுக்கு ஆன்மா என்ற பொருளையே கொண்டுள்ளனர்.

பேரகராதியில் மணிமேகலையிலுள்ள ஒரு சொற்றொடரும் சுட்டப்பட்டிருக்கவே, கைவசமிருந்த மணிமேகலை நூலில் தேடியதில் ஒரு நெருங்கிய தொடர்பு தென்பட்டது.

இறைவன் ஈசனென
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
‘பரசும்நின் தெய்வம் எப்படித்து?’ என்ன –
இருசுடரோடு இயமானன் ஐம்பூத மென்று
எட்டு வகையும், உயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும்….

(மணிமேகலை; 27: 89).

சாத்தனாரின் சொல்லாட்சியான ’இருசுடரொடு இயமானன்’ திருவாசகத்திலும் அதே சூழலில் எடுத்தாளப்பட்டுள்ளது – ‘காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவு ளானே’. இயமானன், இருசுடரான சூரியன், சந்திரன், ஐம்பூதங்கள் ஆகிய எட்டு மூர்த்திகளாக உள்ளாய் என்பதே இதில் பொதிந்துள்ள கருத்து.

‘நின் கருணை வெள்ளப் புதுமது’ என்ற உவமையும் அதன் சொற்சுவையும் சொக்கவைக்கின்றன.

திருமுறையின் பிற இடங்களிலும் இயமானன் இதே சூழலில் பயன்படுத்தப்படுகிறது. சைவத்தில் இது முக்கியமானதொரு கருத்தாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மணிமேகலையில் சைவவாதியின் கூற்றாகவே இது வருதலால் அதற்கு முந்தைய நூல்களிலும் இச்சொற்சேர்க்கை வந்திருக்கக்கூடும்.

அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் – அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

(காரைக்கால் அம்மையார், 11ம் திருமுறை: 004 அற்புதத் திருவந்தாதி பாடல் 21)

தேவார மூவருக்கும் முன்னே இருந்த காரைக்கால் அம்மையாரின் காலம் மணிமேகலைக்கு முந்தையதாக இருக்ககூடும். (தேவாரம் இணையதளத்தில் வி. சா. குருசாமி தேசிகர், ஞானசம்பந்தர் காரைக்கால் அம்மையாரைப் பாடியிருப்பதைச் சுட்டி, இவரது காலம் ‘கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்’ என்கிறார். மணிமேகலை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.)

அப்பர், சுந்ததரர் ஆகியோரும் ஒருவரையொருவர் விஞ்சும் அழகான பாடல்களில் இயமானனைக் கையாண்டுள்ளனர்.
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
.
(திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, 94: பாடல் 1)

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
    சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
    தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
    முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே

(சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை, 9:பாடல் 3)

சுந்தரர் ஞாயிற்றுக்கு சவிதா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை’ என்பது எத்தனை எழில்மிகு வரிகள். [கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரை]

எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்

(அருணந்தி சிவாசாரியார், மூன்றாம் திருநெறி, பதிகம் 3-இருபா இருபது 2:14-15)

ஒரு சொல்லுக்குப் பின்னான பயணத்துக்குப்பின்னர், மகிழ்மலர் நன்கறிந்த நாஞ்சில் நாடன் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு சொல்லைத் தேடியும் எத்தனை முனைப்புடன் உழைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தமிழினியில் ‘யானைபோம் வழியில் வாலும் போம்’ என்ற கட்டுரையைப் படிக்கக் கொடுத்தேன். நாஞ்சில் நாடன் பெரிதும் அச்சுப்பிரதிகளைச் சார்ந்திருப்பவர். விசைப்பலகையின் ஒற்றைத் தட்டில் நமக்குப் பல செய்திகள் இணையத்திலிருந்து வந்துவிழுகின்றன. அச்சுப்பிரதிகள்கூட இல்லாத காலத்தில் நிகண்டுகளையும் அகராதிகளையும் தொகுத்தவர்களை நினைக்க மலைப்பாகத்தான் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்றான ‘இசையில் தொடங்குதம்மா’வும் ஹம்சநாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாம். தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் என்ற அப்பரின் சொற்றொடரும் மனதில் எழுந்தது.


கரையேறாக் கரவுகள்

திசெம்பர் 4, 2018

/நீங்கள் நான்கு மொழிகளில் புலமைபெற்றிருக்கிறீர்கள். பிற மொழியறிவு உங்கள் படைப்பு மொழிக்கு எத்தகைய வலுசேர்த்திருக்கிறது?

பிறமொழி அறிவு தமிழை மேலும் செழுமைப்படுத்த உதவுகிறது. சொல்வளத்தைப் பெருக்குகிறது. குறிப்பிட்ட ஒரு பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைத் தேடும்போது ஏற்கெனவே நாம் அறிந்த ஒரு சொல்லைத் தவிர, இதுவரையிலும் நாம் பயன்படுத்தாத சொற்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மொழியில் கச்சிதம் கூடுகிறது. மிகச் சரியான, பொருத்தமான சொல்லை இட வேண்டும் என்கிற முனைப்பையும் அக்கறையையும் உண்டாக்குகிறது. தவிர, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அதனுடனான கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதுதான். புனைவெழுத்தாளனுக்கு இது மிக அவசியமானது./

தமிழ் இந்துவில் வந்துள்ள பேட்டியில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் சொல்கிற இந்த கருத்து இன்னும் அதிக கவனமும் விரிவும் பெறவேண்டிய ஒன்று. பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழ்மொழியில் பெயர்க்கும்போது மொழியில் சொல்வளமும் கருத்துவளமும் கூடுகிறது; மொழிமீதான நமது (மொழிபெயர்ப்பவனின்) ஆளுமையும் அதிகரிக்கிறது.

நான் அண்மையில் சில ஆங்கிலக் கவிதைகளையும் சிறுவர்களுக்கான சரிதைகளையும் மொழிபெயர்த்தபோது, இதுவரை தமிழில் நான் பயன்படுத்தியிராத பல சொற்களைப் பயன்படுத்த நேர்ந்தது. புதிய தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. உதாரணமாக, Alligator என்பதற்கு முதலில் வழக்கம்போல் முதலை என்ற சொல்லே விழுந்தது. பிறகு அகராதியில் தேடியபோது கரவு என்ற சொல் கிடைத்தது. திருவாய்மொழியில் கரவார்தடம் என்ற தொடர் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சுட்டியது. மேலும் தேடியபோது,

 பரவாள் இவள் நின்று இராப்பகல்
    பனிநீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
   வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்
    தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
    திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே

என்ற இனிய பாசுரத்தை அடைந்தேன். தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப்பார்க்கும் (இணையத்தில்தான் எனினும்) வாய்ப்பு கிடைப்பதே ஒரு பேரனுபவம்தான். பல நூற்றாண்டுகளாய்ப் பல நாட்டு அறிஞர்களின் பேருழைப்பின் மூலம் உருவான பெட்டகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இட்டுச்சென்று கொண்டே இருக்கும்.

கரவு என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அதையே போட்டிருக்கிறேன். கரவு என்பதற்குப் பிறபொருள்களும் உள்ளன (மறைவு, வஞ்சனை, பொய்). ஆனால், ‘கரவு கரையேறியது’ என்கிற இடத்தில் இப்பொருளில்தானே வரமுடியும்.

Crocodile, alligator என்ற சொற்களையும், அவற்றின் வகைகளையும் குறிக்கும் வகையில், தமிழ்ப் பேரகராதியில் மட்டும் 28 சொற்கள் உள்ளன. இவற்றுள் பல திசைச்சொற்களும் இருக்கும்தான்.

Crocodile – இடங்கர் (கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257)), கடு, கோதிகை, சிஞ்சுமாரம், சீங்கண்ணி, தாலுசிகுவம், தீர்க்கவர்ச்சிகை, துவிதாதகி, நக்கரம் (நக்கரக் கடற்புறத்து – கம்பராமாயணம்), மகரம், மகாமுகம், மாசலம், மாயாதம், வன்மீன் , விடங்கர், அவகாரம், ஆட்கடியன், ஆலாசியம் (ஆண் முதலை), கிஞ்சுமாரம், கும்பீலம், சலகண்டகம்

Alligator – ஆட்பிடியன், கரா, கராம், (ஆண் முதலை), சாணாகமுதலை [தீங்குசெய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை ], செம்மூக்கன், நக்கிரம், முசலி.

ஆனால், Alligator சீனாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே உள்ளதால், உண்மையில் இச்சொற்கள் எல்லாமே crocodile வகைகளைக் குறிக்கின்றனவாகவே இருக்கக்கூடும்.

தடந்தொறும் கரையேறாக் கரவுகளாய், இத்தனை சொற்களும் மூழ்கிக்கிடக்கின்றன.

—-

அதே போல, மொழிபெயர்க்கும்போது புதிய சொற்றொடர்களை உருவாக்கவும் முடிகிறது. பழமொழிகளுக்கும் மொழிவழக்குகளுக்கும் இணையான வழக்குகள் தமிழில் இல்லாத போது, பெரும்பாலும் அதன் உட்பொருளையே தருகிறோம். ‘The tide had ebbed’ என்ற ஒரு ஆங்கில மொழிவழக்கு ஓரிடத்தில் வந்தது. ‘சூழல்/நிலைமை சீரடைந்துவிட்டது’ என்று எளிதில் பொருள்படும்படி சொல்லியிருக்கலாம். ஆனால், நேரடி மொழிபெயர்ப்பாக, ‘ஓதம் ஓய்ந்துவிட்டது’ (ஓதம் – tide) என்றே எழுதிப்பார்த்தேன். சரியாகத்தானே இருக்கிறது என்று அப்படியே எடுத்தாண்டுள்ளேன். நம் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ற புதிய மொழிவழக்குகளை உருவாக்குவதில் தவறில்லையே. சினுவா ஆச்சிபி Things Fall Apart நூலில் ஆப்பிரிக்கச் சொலவடைகளை நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்திருப்பார். அவற்றின் பொருளை விளங்கவைக்கும் வகையில் அழகாகத் தன் கதையாடலை அமைத்திருப்பார். அதுவும் அவரது மொழிக்கு ஓர் எழிலைக் கூட்டியிருந்ததாகத் தோன்றியது.

பேச்சு வழக்குக்கு நெருக்கமாக மட்டுமே எழுத்துமொழியையும் அமைக்கும் போது, குறிப்பாகக் கவிதைகளிலும் அவ்வாறு செய்யும்போது, மொழியின் வளம் குன்றிப்போகிறது என்பதாக உணர்கிறேன். (கவிதை வளம் தான் கவிதைக்கு முக்கியம் என்று கவிஞர்கள் கருதலாம். ஆனால் புதிய சொற்கள் கவிதைக்கொன்றும் பகையல்லவே.) ஆங்கிலத்தில் அந்தச் சிக்கல் இல்லை. எளிய நடையிலும் அரிதான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனோ, தமிழில் நமக்கு நாமே இந்த எளிமை விலங்கைப் பூட்டிக்கொண்டோம். புழக்கத்தில் ஒரு சொல் வந்துவிட்டால், அதை மட்டுமே எழுத்திலும் பயன்படுத்துகிறோம். அதற்கிணையான பிற சொற்கள் நாளடைவில் முற்றிலுமாக மறைந்துபோகின்றன. நாஞ்சில் நாடன் இதுகுறித்து நேர்ப்பேச்சிலும், எழுத்திலும் அதிகமும் வருந்துவார்.

ஆங்கிலத்தில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள தினமும் ஆங்கில இந்து படிக்கச்சொல்லித் தருகிறோம். தமிழைப் பள்ளியில் பாடமாக படிக்கின்றவர்களுக்குப் பழைய தமிழில் அருஞ்சொற்பொருள் காணவும் பழக்குகிறோம். ஆனால், நவீனத் தமிழில் புதிய சொற்களைக் கற்கும் வகையில் நம் வார இதழ்களும் நாளிதழ்களும் பெரும்பாலும் இல்லை, அப்படியிருக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பதுமில்லை. பல்லாயிரம் சொற்கள் யாரும் தீண்டாத அகராதிகளுக்குள்ளும், பழந்தமிழ் இலக்கியங்களுக்குள்ளும், சில சிற்றிதழ்களுக்குள்ளும் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கின்றன.

புரியாத சொற்களைக் காணும் போது, ஏன் புரியாமல் எழுதுகிறான் என்று திட்டுவதை விடுத்து, அகராதியைப் புரட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளத்தொடங்கலாம் (இணையத்திலேயே பலவும் உள்ளன). சிடுக்கிலா நடைவேறு, பொருத்தமான அரிய சொற்களைக் கையாள்வது வேறு. மொழிக்குப் புதிதாக ஏதும் தராவிடினும், இருப்பதையேனும் இழக்காமல் காக்கலாம். மீட்டெடுக்கலாம். பேசாக்கிளவியும் பேசலாம்.


காவல்துறை, ராணுவம் – இரு சிறுகதைகள்

நவம்பர் 20, 2018

(முகநூலில் 13 ஆகஸ்டு அன்று பதிந்தது.)

இம்மாதம் தமிழினி இணைய இதழில் காவல்துறை, ராணுவ அத்துமீறல்கள் குறித்து, சமகாலத்தில் கவனித்த நிகழ்வுகளையும் இலக்கியப் பதிவுகளையும் முன்வைத்து, ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

கட்டுரையை அனுப்பிய பிறகு தமிழில் இரண்டு முக்கியமான சிறுகதைகள் படிக்க நேர்ந்தது:

எம்.கோபாலகிருஷ்ணனின் சீசர்,
பாவண்ணனின் கண்காணிப்புக் கோபுரம்.

சீசர் கதையில் காவல்துறையினர் தமது நாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சியைச் சோதிப்பதற்காகவோ, மேலும் பயிற்சி அளிப்பதற்காகவோ, சுற்றி இருக்கும் மக்கள் மீது ஏவி வேடிக்கை பார்க்கின்றனர். அவர்கள் பாதிக்கப்படும் போது, ஈரமோ குற்றவுணர்வோ துளியுமின்றிக் கடந்து செல்கின்றனர்.

கண்காணிப்புக் கோபுரம் கதை, ஓர் எளிமையான நேர்மையான ராணுவ வீரன் சக வீரர்களாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டு, ‘மானம் மரியாத கோபம் ரோஷம் எல்லாத்தயும் காத்துல பறக்க உட்டாதான் ராணுவத்துல சிப்பாயா வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுவதைப் பேசுகிறது.

இரண்டு கதைகளும் இந்த அமைப்புகளிலுள்ள தனிமனிதர்களின் சிக்கல்களை மட்டும் பேசாமல், அமைப்பு ரீதியாகவே இவை எப்படி மனிதாபிமானத்தைத் துடைத்தெடுத்து வன்முறைக்கும் அத்துமீறலுக்கும் வித்திடுகின்றன என்பதை மையமாகக் கொண்டுள்ளதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.


சோதனைக்கூடச் சிறையில் அறிவியல்

நவம்பர் 20, 2018

பல பழைய முகநூல் பதிவுகளை இப்போது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன். ஆகஸ்டு மாதம் முகநூலில் எழுதியது. கிராம ராஜ்ஜியம் இதழிலும் வெளிவந்தது. இதை எழுதிய பிறகு, நான் பேசிய ஓர் இடத்தில், ஹீலர் பாஸ்கரும் பேசினார். முரண்படுவதற்கு ஏராளமாக இருப்பதாகவே உணர்ந்தேன். அப்பேச்சிலும் குறிப்பிட்டேன். ஆனால், அறிவியல், மருத்துவம், அடக்குமுறை பற்றி இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளில் மாற்றமில்லை.

ஆனால், அவரது கைது கண்டிக்கப்பட வேண்டியது என்று உறுதியாகச் சொல்வேன்.

எனக்கு ஹீலர் பாஸ்கர் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்த வரை, பெரிய அபிமானம் ஏற்படவில்லை. நான் மிகவும் மதிக்கிற சில நண்பர்கள் அவர்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவேன். என்னையும் சந்திக்கச்சொல்லியிருக்கிறார்கள் – எனக்கு ஈடுபாடு வரவில்லை என்று இதுவரை விட்டுவிட்டேன். கிராமத்தில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் தினமும் அவரது உரையைத் தொலைக்காட்சியில் காண்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறார்கள் – நவீன மருத்துவர்கள் தரும் மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். நான் பார்த்த அவரது ஒன்றிரண்டு காணொளிகளில் என்னால் பாதியைத் தாண்ட முடிந்ததில்லை. நான் நேரில் கேட்க நேரிட்ட அவரது ஒரு சீடரின் உரைகளில் பெருமளவு எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக, இன்றைய சூழலில், வீட்டில் பிரசவம் என்பதை நான் கடுமையாகவே எதிர்க்கிறேன்.

அவரது கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளலாம். அவரது மருத்துவ முறை தவறென்றால், பிற மருத்துவர்கள் அதைத் தவறென்று நிறுவலாம். எதிர்ப் பிரச்சாரங்களின் மூலமும் அர்ப்பணிப்பான மருத்துவ சேவையின் மூலமும் அவரது வாதங்களைத் தகர்த்தெறியலாம். அது தான் அறிவியலின் வழி. அது தான் சுதந்திரச் சிந்தனையைப் பேணுகிறவர்களின் வழி.

தமது கருத்துகளுக்கு முரணான கருத்துகள் கொண்ட எழுத்தாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்கும் சில எழுத்தாளர்களும் பதிவர்களும் கூட இவரது கைதினை வரவேற்றிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இக்கைது அறிவியலுக்கும் அறிவியல்-எதிர்ப்புக்குமான போராட்டம் அல்ல. அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுக்கும், அங்கீகாரம் பெறாத அமைப்புகளுக்கும் நடைபெறுகிற உரசலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

இன்றைக்கு இது மருத்துவத்துறையில் நடைபெற்றிருக்கிறது. நாளை எத்துறையில் வேண்டுமானாலும் நடைபெறலாம் – விவசாயத்தில், கல்வியில், பொருளாதாரத்தில், பொறியியலில், இலக்கியத்தில், ஆன்மீகத்தில், அரசியலில். மாற்று முறைகள் எங்கெல்லாம் முன்வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் நிறுவன வலிமை மாற்றுகளை நசுக்க முயல்கிறது.

இலுமினாட்டிச் சதி என்று ஒன்றும் கிடையாதுதான். அதை வெகு எளிதாக மறுத்துவிடமுடியும். ஆனால், இன்றைக்கு உலகின் சொத்துக்களும் நிறுவனங்களும் அதிகாரமும் 1% மக்களிடம் கணிசமான அளவு இருக்கிறது, 10% மக்களிடம் மேலும் கணிசமானவை உள்ளன என்பதற்கான தரவுகள் மறுக்கமுடியாதவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் போக்கினையும் பெருநிறுவனங்கள் பெருமளவு நிர்ணயிக்கின்றன என்பதையும் மறுக்கமுடியாது. இன்றைய அமைப்பில் தவிர்க்கவும் முடியாது.

நிறுவனமயமாக்கப்பட்ட அறிவியலை, அமைப்புகளுக்குள் முடங்கிக்கிடக்கும் அறிவியலை ஏற்றும் மறுத்தும், மாற்று முறைகளை முன்னெடுப்பதில்தான் அறிவியலின் அடுத்தகட்டப் பாய்ச்சல் நிகழமுடியும். அதை ஹீலர் பாஸ்கர் செய்தாரா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அவரைப் போன்றவர்களைச் சிறைப் படுத்துவதன் மூலம், நிறுவனங்களுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் அறிவியலைச் சிறைப்படுத்துகிறோம்.

இன்றைக்கு, மாற்று முறைகளைத் தேடி மக்கள் அலைபாய்வதற்குக் காரணம் யாரோ செய்கிற பிரச்சாரங்களோ, மரபின் மீதான பாசமோ, நவீன அறிவியல் மீதும் மருத்துவம் மீதும் உள்ள காழ்ப்போ அல்ல. மருத்துவ அமைப்பில் அவர்கள் அவ்வப்போது சந்திக்கிற அலட்சியமும், வியாபாரச் சுரண்டலும்தான் அவர்களை மாற்றுகளை நோக்கி – பல சமயம் தவறான மாற்றுகளை நோக்கி – நகர்த்துகிறது. அவர்கள் நவீன மருத்துவத்தைத் துறந்துவிட்டு அங்கு செல்வதில்லை. நவீன மருத்துவம் தீர்வுகள் தராத போதோ, அல்லது பிரச்சனைகளைப் பெரிதுபடுத்துகிற போதோ, மாற்றுகளை நாடிச் செல்கிறார்கள். அங்கும் வெற்றியும் தோல்வியும் சந்திக்கிறார்கள். உடனே அவர்கள் எல்லாரையும் முட்டாள்களாகவும் அறிவியலுக்கு எதிரானவர்களாகவும் சித்தரிப்பது என்ன மாதிரியான அறிவியல் அணுகுமுறை?

ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகளை இன்றைய நிறுவனங்களும் மருத்துவர்களும் மக்களுக்கு வழங்குவதில்லை என்றே சொல்லலாம். அவர்களது கவனத்தில் பெருமளவு நோய்களுக்கான சிகிச்சைகளிலேயே உள்ளது. தடுப்பூசி போன்றவை நோய் தடுப்புமுறைகள் தாம்எனினும், அவற்றின் கவனமும் நோய்கள் மீதுதான் குவிந்திருக்கின்றன. நோய்களுடன் நீண்ட நாள் வாழக் கற்றுக்கொண்டுவிட்டோம். கொள்ளைநோய் மரணங்களைத் மட்டுப்படுத்திவிட்டோம். இது நவீன மருத்துவத்தின் பெரும் சாதனைதான். ஆனால், ஒரு சராசரி மனிதனின் தேடல் நோய், நோயின்மை என்பதைத் தாண்டிய ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கியதாக உள்ளது. அதை அன்றாட உணவுப்பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சிகள், சரியான வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மூலமாகவே அடையமுடியும். இந்தத் தேடலும் மக்களை இத்தகைய அக்கறைகள் கொண்ட அமைப்புசாரா நபர்களிடம் அழைத்துச்செல்கிறது. தமது உடல்களையும் வாழ்க்கையையும் சோதனைக்களங்களாக்கி நலமான வாழ்வுக்கான சிறுசிறு தீர்வுகளைக் கண்டறிந்து பகிர்ந்து கொள்கிற எல்லாரையும் அறிவியலின் எதிரிகளாகக் கட்டமைப்பது அறிவியல் வளர்ச்சியை முடக்குகிற செயலன்றி, வேறென்ன? பல்கலைக்கழகங்களுக்கும், பெருநிறுவனச் சோதனைக்கூடங்களுக்கும், ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கும் நாமொன்றும் அறிவியலைப் பொட்டுக்கட்டிவிட வேண்டியதில்லை. பொதுமக்களின் அன்றாடச் செயல்பாட்டிலும், மரபான சிந்தனைமுறைகளிலும் அறிவியல் இருக்கக்கூடும் என்கிற குறைந்தபட்ச அங்கீகாரம் கொடுப்பது அறிவியலை ஜனநாயகப்படுத்துவதன் முதல்படி. அவற்றில் சரியானவற்றை விரிவான சோதனைக்கு உற்படுத்தி ஏற்பதும், சரியல்லாதவற்றை நிராகரிப்பதும் அறிவியலின் தொடர் பயணம். மரபான சிந்தனைமுறைகளிலோ, பாமர மக்களின் அனுபவப் பாடங்களிலோ, அமைப்புசாரா நபர்களின் செயல்பாட்டிலோ, அங்கீகாரம் கிடைக்கும்பவரை அறிவியலே இல்லை என்ற மறுப்பிலிருந்து தொடங்குவது அறிவியலின் பெயரால் நிகழ்த்தப்படும் அடக்குமுறை.

மருத்துவமனைகளிலும் மரணங்களும் இதர பாதிப்புகளும் மருத்துவர்களின் பிழைகளாலும் அலட்சியத்தாலும் நடக்கத்தான் செய்கின்றன. எத்தனை மருத்துவர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பெரும்பாலும், நல்ல மருத்துவர்கள்கூட குழு மனப்பான்மையுடன் மோசமான சக மருத்துவர்களைக் காப்பாற்றுகிறார்கள், அல்லது, கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். இப்போது, வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ஒரு சோகமான மரணத்தை முன்வைத்து மாற்று முறைகள் மொத்தத்தையும் ஓரங்கட்டி ஒழிக்க நினைப்பதன் மூலம், அறிவியல் போர்வை போர்த்திக்கொண்டு அமைப்புரீதியான பிழைகளையும் குறைகளையும் மூடிமறைப்பதற்கு வழிவகுக்கிறோம்.

அறிவார்ந்த விவாதங்களின் மூலமும், நடுநிலை தவறாத துணிச்சல் மூலமும், நேர்மையான செயல்பாட்டின் மூலமும், உயிர்கள் மீதும் இயற்கை மீதும் கொண்ட கரிசனத்தாலும் வளர்க்க வேண்டிய அறிவியலை, அமைப்புகளின் அசுர பலத்தின் மூலமாக வளர்ப்பது அறிவியலுக்கு எதிரானது. ஒரு சான்றிதழுக்குள் அறிவியலை முடக்கிவிடலாம் என்று நினைப்பது மூடநம்பிக்கை. மாற்றுக்குரல்களை நசுக்குவது சர்வாதிகாரம்.


தன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி

ஜூலை 23, 2018

(எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் வெளியீட்டு விழாவின் போது பேசிய அறிமுக உரையின் விரிவான எழுத்து வடிவம்)

கடந்த ஒரு வாரத்தை, எங்கள் கிராமத்தின் மெல்லிய பருவ மழையிலும் இதமான குளிர் காற்றிலும் கோபாலகிருஷ்ணனின் வெம்மையான எழுத்துகளோடு கழித்தேன்.

அழைப்பிதழில் மனைமாட்சியின் அட்டையிலும் ஈரமாய் மழைப்படம். என்னைத் தழுவிய மழையின் ஒரு துளியை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சியே.

கோபாலகிருஷ்ணனின் எழுத்துகளைப் படிப்பதற்கு முன்பே தியாகு நூலகத்தில் அவரது அறிமுகம் கிடைத்துவிட்டது. ஒரு நல்ல வாசகராகவே அவரை முதலில் அறிந்துகொண்டேன். பழகப்பழக ஓர் இனிய நண்பராக அறிந்துகொண்டேன். பின்னர்தான் மணல்கடிகை படித்தேன். அவரை ஒரு நல்ல நாவலாசிரியாக அடையாளம் கண்டுகொண்டேன். மனைமாட்சியில் அது உறுதிப்பட்டிருக்கிறது. ‘வாழ்விலே ஒரு நாள்’ என்ற புத்தகம் அரசு நூலகத்தில் தேடும் போது என் கைகளில் விழுந்தது. அலெக்ஸாண்டர் சோல்ஸனிட்சினின் ‘One day in the life of Ivan Denisovich” என்ற ரஷிய நாவலின் மொழிபெயர்ப்பு. சோவியத் குலாக்களின் கொடூரமும், நம் சூழலுக்கு அந்நியமான பனியும் குளிரும் தமிழில் அற்புதமாக வந்திருந்தது. அப்போது அவரை மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகக் கண்டுகொண்டேன். ஆங்காங்கு படித்த பல கவிதைகளின் மூலமாக சிறந்த கவிஞராகவும் கண்டுகொண்டேன். இப்போது, இந்த உரையின் பொருட்டுதான் அவரது சிறுகதைகளைத் தொகுப்பாகப் படித்தேன். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அவரது சிறுகதைகளுக்காகவே அவரைக் கொண்டாடித்தீர்க்கவேண்டும் என்று தோன்றியது.

தொடர் மின்வெட்டுகளால், அடுத்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, மழையில் நள்ளிரவில் அவரது முதல் தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’யிலிருந்த ‘ஒற்றைச் சிறகு’ சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். அடிபட்டிருந்த ஒரு பறவையையும், குப்பைத்தொட்டியருகில் கைவிடப்பட்ட ஒரு குழந்தையையும் பற்றிய கதை. படிக்கும் போது என் மீது ஒரு கரப்பான் பூச்சி பறந்துவந்து விழுந்தது. கையிலிருந்த புத்தகத்தால் அனிச்சையாய்த் தட்டிவிட்டேன். பூச்சி தலைகீழாக மழையில் வீழ்ந்தது. அதனால் திரும்ப முடியவில்லை. கதையை முடித்தபிறகு என்னால் அடுத்த கதைக்குச் செல்ல முடியவில்லை. மழையில் இறங்கிப் பூச்சியைத் திருப்பிவிட்டுவந்துதான் தொடர முடிந்தது.

அந்த அளவுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை கலைநேர்த்தியோடு படைத்திருக்கிறார். மானுடத்தின் மீதான நேயம் என்பதைத் தாண்டி அனைத்துயிர்களின் மீதும், இயற்கையின் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக ஆரம்ப காலம் முதலே கோபாலகிருஷ்ணனின் கதைகள் அவரைப் பிரகடணம் செய்கின்றன.

கு.ப.ரா.வின் ஆற்றாமை கதையைக் கொண்டாடுகிற அல்லது விமர்சிக்கிற அளவுக்கு கோபாலகிருஷ்ணனின் இரவு கதையையும் நாம் கொண்டாடலாம். ஆற்றாமை கதையில் கணவனைவிட்டுப் பிரிந்திருக்கிற சாவித்திரி அடுத்த உள்ளில் மகிழ்ந்திருக்கும் இளம் தம்பதியினரைக் கண்டு பொருமி, வாய்ப்பு கிட்டியபோது தடங்கல் ஏற்படுத்துகிறாள். இரவு கதையில் gender role reversal நடக்கிறது. உடல் செயலிழந்து படுத்தபடுக்கையாக இருக்கும் அண்ணன் திருமலை, தம்பியின் திருமணம் முடிந்த முதலிரவன்றுத் தொடர்ந்து இடையூறு செய்கிறான். “உடலற்றக் காமத்தின் ஊமை வலி உனக்குத் தெரிய நியாயமில்லை அம்மா” என்று கறுவுகிறான்.
இறுதியில், ‘திருப்திதானா பேயே’ என்று சாவித்திரியின் குற்றவுணர்வு ஆற்றாமையில் வெடிக்கிறது. திருமலையின் தாய், ‘ஏன்டா திருமலே இப்பிடி பண்றே..நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா…பாவம்டா’ என்கிறாள். ‘பாவந்தான்ம்மா..எதையாச்சும் அரச்சு ஊத்திரு. பாவந்தீந்துரும்’ என்கிற திருமலையின் மூலமாக, காமம் மட்டுமல்ல, ஆற்றாமையும் ஆண்பால் பெண்பால் அறியாது என்பதை இக்கதைமூலம் வெளிப்படுகிறது.

இத்தகைய gender role reversal மனைமாட்சியில் தொடர்ந்து நிகழ்கிறது.

மனைமாட்சியில் ஆறு கதைகள் மூன்று பகுதிகளாகச் சொல்லப்பட்டிருகின்றன. மனைமாட்சியைப் படிக்கும் போதும், படித்து முடிந்த பிறகும் எனக்குள் எழுந்த முதல் கேள்வி – ஒவ்வொரு பகுதியிலும் வருகிற இரண்டிரண்டு கதைகளுக்குள்ளே, ஒரு மெல்லிய இழைதான் தொடர்ச்சியாக இருக்கிறது. இவை ஆறும் தனித்தனி நாவல்களாகவேகூட வெளியிடப்பட்டிருக்கிலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு கதையிலும் அடர்த்தியும் சாராம்சமும் இருக்கின்றன. இந்த ஆறு கதைகளும் சேர்ந்து எப்படி ஒற்றை நாவலாகின்றன?

ஏற்கனவே தமிழிலும் உலக இலக்கியங்களிலும் பல கதைச்சரடுகளையுடைய நாவல்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை ஓர் ஊரின் கதையைச் சொல்லக்கூடும். ஒரு மனிதன் ஒரு நாளில் சந்திக்கின்ற பல்வேறு மனிதர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு காலகட்டத்தின் கதையைக் கூறக்கூடும். ஒரு குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களின் கதைகளைக் கூறக்கூடும். ஒரு குடியின் பல்வேறு தலைமுறைகளைப் பற்றி கூறக்கூடும். ஏதோ ஒரு வகையில் இவையெல்லாம் ஒரு மையச்சரடால் பிணைக்கப்படுகின்றன. மணல்கடிகையே கூட இப்படிப் பல கதைகளை ஒருங்கே கையாண்ட ஒரு நாவல்தான். ஐந்து நண்பர்களின் வாழ்க்கையைப் பின்தொடர்வதன் மூலமாக ஒரு நகரத்தின் கதையை, சமூகமாற்றத்தின் கதையை, ஒரு காலமாற்றத்தின் கதையைக் கூறுவார்.

அப்படியாக மனைமாட்சியின் ஆறு கதைகளை இணைக்கிற சரடு, அதன் தலைப்பிலேயே தொடங்கி, தொடர்ந்து வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் வள்ளுவன் விரல்பிடித்து அவனை ஏற்றும் மறுத்தும் நாவல் நகர்கிறது எனலாம்.

மனைமாட்சி நாவல் இன்றைய சமூகத்தில், குடும்ப வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைச் சொல்கிறது. சிக்கலான இன்றைய குடும்ப வாழ்வின் முக்கிய பரிமாணங்களை வெளிப்படுத்த ஒரு குடும்பம், ஒரு கதையால் சாத்தியமில்லை என்று கோபாலகிருஷ்ணன் ஆறு கதைகளைக் கையாண்டிருக்கிறார் போலும். பெண்ணின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச வந்த நாவலாகவும் இதைக்காணலாம்.

மணமான ஒரு சில நாட்களிலேயே எந்தத் தவறும் செய்யாமல் கணவனைப் பிரிந்த பின்னும், ஒரு பெண் பிரிவை மிக வலுவாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு எதிர்கொள்கிறாள். இன்னொரு பெண் கணவனோடு சேர்ந்தே இருக்கமுடியாத ஒரு சூழலை உருவாக்கிய பின், தன் மீது சுமத்தப்பட்ட பிரிவால் நொறுங்கிப்போகிறாள்.

உடன்வாழத்தகுதியற்றவன் என்று ஒற்றை நிகழ்வின் மூலமாக ஒரு பெண் நிராக்கிற ஒருவனை இன்னொரு பெண் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாள்.

வீட்டினர் அனைவுரும் வற்புறுத்தும்போதுகூட கணவனை இழந்த ஓர் இளம்பெண் மறுமணம் புரிய மறுக்கிறாள். வீட்டினர் கட்டாயத்தால் மணம்புரிந்துகொண்ட இன்னொரு பெண் உடனடியாக மணவாழ்வை முறிக்க முனைகிறாள்.

இப்படியாக இக்காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை எதிரெதிர் கோணங்களில் இந்நாவல் அணுகுகிறது. இரண்டிரண்டு கதைகளாய் வெம்மையையும் தண்மையையும் மாறிமாறித் தருகின்றது என்றும் சொல்லலாம்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

என்கிறார் வள்ளுவர், ஒரே பெண்ணிடம்தான் பிணியும் மருந்தும் உள்ளன என்கிற பொருளில். கோபாலகிருஷ்ணன் ஒரு கதையில் பெண்ணால் ஏற்படும் நோய்க்கு, இணைகதையில் பெண்ணையே மருந்தாக்கிக் காண்பிக்கிறார்.

இக்கதைகளின் சில கூறுகளையும் கதைமாந்தரின் சில சாயல்களையும் நாம் வேறு கதைகளில் பார்த்திருக்கிறோம். ஏன் வணிகத் திரைப்படங்களில் கூட கண்டிருக்கிறோம். முதல் கதையின் சாந்தியில் புதுபது அர்த்தங்கள் கீதாவும், கடைசிக் கதையின் கலைவாணியில் மௌன ராகம் ரேவதியும் எனக்கு நினைவில் வரத்தான் செய்தார்கள். ஆனால், நிஜ வாழ்வோடு இருக்கக்கூடிய நெருக்கம், கதைகளில் இருக்கிற அடர்த்தி, வாழ்க்கைக்குள் அவை செல்கின்ற ஆழம் என்று இந்நாவல் எட்டிப்பிடிக்கற தளம் முற்றிலும் வேறானது, வெகுவாய் மேலானது.

சில உறவுச்சிக்கல்களைப் பார்க்கும்போது, இவை நம்ப முடியாத நிகழ்வுகளோ என்றுகூடத் தோன்றலாம். ஆனாலும், அவை நாம் நம்ப விரும்பாத நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

முதல் கதையின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கிறது.

/கனலும் இரும்புக் கம்பியுடன் நெருங்கி நிற்கும் சாந்தியின் முகத்தைக் கண்டதும் பட்டென்று உடலைக் குறுக்கினான் தியாகு. வெறியேறிய கண்கள். வறட்டுச் சிரிப்பு. பாதங்களைப் பார்க்கிறாள். மறுகணம் அவள் பார்வை அவன் முகத்தில் படிகிறது. “ஒரு இழுப்பு இழுத்தாத்தான் நீ சரியா வருவே.”/

முதல் முறை இதைப் படிக்கும்போது ஏதோ நனவோடைக் காட்சியென அதிகம் கவனம் செலுத்தாமல் கடந்து சென்றுவிட்டேன். மறுமுறை பார்க்கும்தோதுதான் இப்படியொரு காட்சியை மனம் நம்ப மறுத்ததன் விளைவுதான் என்னை அப்படிக் கடந்து போகச் செய்தது என்று தோன்றுகிறது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி என்கிற பாத்திரத்தின் சிக்குகளை அவிழ்த்துச் செல்வதில் கோபாலகிருஷ்ணனின் படைப்பாளுமை வெளிப்படுகிறது. அவளது பாத்திரப்படைப்பு ஊகங்களுக்கு இடமில்லாமல் முற்றிலும் துலங்கிய பிறகு நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது. இங்கும் ஒரு gender role reversal செய்கிறார்.

பெண்கள் உள ரீதியான மிரட்டல்களாலும், வசைச்சொற்களாலும் ஆண்களைத் அச்சுறுத்துவதை நாம் பல கதைகளில் கண்டிருக்கலாம். ஆனால், உடல்ரீதியான வன்முறையைச் செலுத்துவதை இந்தக் கதை அளவுக்கு மூர்க்கமாய்ச் சொன்ன ஆக்கம் என்று நான் வாசித்தவற்றுள் வேறு எதுவும் இல்லை.

குழந்தைகளின் பொருட்டு தியாகு சாந்தியின் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்கிறான். கதையை இன்னும் கூர்ந்து கவனித்தால், சாந்தியின் பொருட்டுமே அவன் சாந்தியைச் சகித்துக்கொள்கிறான்.

இன்னொரு தளத்தில், இது நுகர்வு கலாச்சாரம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாபெரும் சீர்கேட்டைச் சித்தரிக்கிற கதையாகவும் உள்ளது. அண்மையில் வந்த சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை இதனோடு ஒப்பிடலாம்.

உண்மையில் இக்கதையைப் படிக்கிறவரை இப்பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்குறள் என்னுள் இவ்வளவு விரிந்திருக்கவில்லை.

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை உடையவளாக, கணவனின் வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை நடத்துகிறவளே சரியான துணையாக இருப்பாள் என்கிறார் வள்ளுவர். கதையை முடித்தபின் இக்குறள் பெரும் விரிவை ஏற்படுத்தியது.

காண்கிற பொருள்ளையெல்லாம் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பது ஒரு நோயாக இன்று உருவெடுத்துவிட்டது. கடனட்டைகள் எந்த அளவுக்கு நம்மை complusive buying disorder நோக்கித் தள்ளுகின்றன என்பதை இக்கதை விவரிக்கிறது. பல அதிர்ச்சியான தருணங்கள் இக்கதையில் உள்ளன.

இதன் இணைக்கதையும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினாலும், போகப்போக வெம்மையைத் தணிக்கும் தென்றாய் வருடத்தொடங்குகிறது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

என்று காமத்துப்பாலில் ஒரு குறளுண்டு. தீ தொட்டால்தான் சுடும். காம நோய் போல் விட்டாலும் சுடுமா என்கிறார் வள்ளுவர். இக்கதையின் பிரச்சனையே, ராஜம்பாய்க்கு தொட்டாலும் தீ சுடவில்லை என்பதுதான். எத்தனை தொலைவும், காலமும் கடந்தபின்னும் காமநோய் சுடுவதாக இருக்கிறது.

இரண்டாவது பகுதியில் வருகிற இரு கதைகளும் ஓரளவு பிணைக்கப்பட்ட இணை கதைகளாகவே உள்ளன.

ஆரம்பத்தில், ஓர் உக்கிர நாடகத்தில் இருந்து அபத்த நாடகத்துக்குள் நுழைந்த விட்ட உணர்வு ஏற்பட்டது. கட்டியவளைத் தெருவில் விட்டுவிட்டு அவளறியாமல் உணவகத்தில் ஒரு கட்டுகட்டுகிறான் கணவன். பொறுக்கமாட்டாத புது மனைவி பிரிந்து செல்கிறாள். இப்படியொரு அபத்த நிகழ்வோடு தொடங்கும் கதை பின்னர் பல்வேறு உளவியல் சிக்கல்கள் உறவுச் சிக்கல்கள் என்று விரிந்து செல்கிறது.

நாவலின் மூன்றாம் பாகத்தில் வரும் விநோதினி, இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு மறுமணம் செய்ய மறுப்பவளாக இருக்கிறாள். ஆனால், சுற்றத்தார் வற்புறுத்துகின்றனர். மறுமணம் ஓரளவு பரவலாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், இறந்துவிட்ட கணவன் குடும்பத்தின் சொத்து அவளுக்குச் சென்றடைவதில் தயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்நாவலில் அவள் மாமனார் சொல்கிறார்:
“என் பெரிய மருமகளுக்கும் பேரன் பேத்திக்கும்னு நான் குடுத்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி அவ நாளைக்கு மனசு மாறி இன்னொருத்தரைக் கட்டிட்டாலும் என் முடிவுல எந்த மாத்தமும் இருக்காது. ஆமா. நல்லாக் கேட்டுக்குங்க.”

இது இந்நாவலின் உச்சமான தருணங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

சில உடலுறவுக் காட்சிகளையும் வன்புணர்வுக் காட்சியையும் இத்தனை அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமா என்று, என்னுடைய இயல்புக்கு, எனக்கொரு விலகல் ஏற்படத்தான் செய்தது. ஆனால், கோபாலகிருஷ்ணன் ஒரு காட்சியையோ உணர்வையோ விவரிக்க முடிவுசெய்துவிட்டால், கட்டுக்கடங்கா ஆறாகத்தான் பாய்கிறார்.

உதாரணமாக, அவரது முனிமேடு தொகுப்பில் உள்ள பிற்பகல் விளையும் என்ற சிறுகதையில், ஒரு சிறுவன் தேங்காய் பன் மீது பிரியமாக இருக்கிறான். அந்தத் தேங்காய் பன் காட்சியை அத்தனைத் தித்திப்பாய் விவரிக்கிறார்:

‘தேங்காய் பன்னை சாப்பிடும்போது பலரும் பக்குவம் தெரியாமல் சாப்பிடுவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். முக்கோண வடிவில் இருக்கும் தேங்காய் பன்னின் கூரிய முனையை முதலில் பார்க்கும்போது வாகாய் பிளந்துகொண்டு விரல்களால் விண்டெடுக்க வசதியாகத்தான் தெரியும். பிளவினூடாக தேங்காயும் சர்க்கரையும் கலந்து மின்னும் பரப்பு பரவசப்படுத்தும். ஆனாலும் நுனியிலிருந்து பன்னை பிய்த்து சாப்பிடக்கூடாது. தேங்காயும் சர்க்கரையும் இதமான சூட்டிலிருக்கும் பன்னும் சேர்ந்து வெகு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ருசிக்கு மயங்கிவிட்டால் அதோ கதிதான். பிறகு கடைசியில் முக்கோணத்தின் அடிப்பக்கம் வரும்போதுதான் தெரியும் சேதி. பன்னின் தடிச்ச அடிப்பக்கத்தை வாயில் போட்டு மெல்லும்போது தேங்காயில்லாமல் சவசவப்பு மட்டும்தான் மிஞ்சும்.

சண்முகம் முதலில் வெறும் பன்னை மட்டும்தான் தின்பான். இதமான சூட்டில் வெறும் பன்கூட லேசான தித்திப்புடன் சுவையாகவே இருக்கும். இனிப்புக்கு நாக்கு மெல்லப்பழகுவதுபோல சுவை கூடும். இரண்டு அல்லது மூன்றாவது விள்ளலில் தேங்காயும் சர்க்கரையும் வாய்க்கத்தொடங்கிவிடும். இப்போது வெறும் பன்னின் சவசவப்பு காணாமல் போய் தேங்காய் பன்னின் அசலான சுவை தென்பட்டிருக்கும்.’

ஒரு தேங்காய் பன்னைக்கூட இத்தனை ரசனையுடன் விவரிப்பவர் காமத்தைப் பட்டும்படாமல் சொல்லிவிடவா முடியும்?

ஒரு இளம் பெண் எழுத்தாளர் ஸ்காட் பிட்ஜெரால்டுக்கு தனது கதையை அனுப்பி அவரது கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் இப்படி மறுமொழி அனுப்பியிருந்தார்.

Dear Frances:

I’ve read the story carefully and, Frances, I’m afraid the price for doing professional work is a good deal higher than you are prepared to pay at present. You’ve got to sell your heart, your strongest reactions, not the little minor things that only touch you lightly, the little experiences that you might tell at dinner. This is especially true when you begin to write, when you have not yet developed the tricks of interesting people on paper, when you have none of the technique which it takes time to learn. When, in short, you have only your emotions to sell.

This is the experience of all writers. It was necessary for Dickens to put into Oliver Twist the child’s passionate resentment at being abused and starved that had haunted his whole childhood. Ernest Hemingway’s first stories “In Our Time” went right down to the bottom of all that he had ever felt and known. In “This Side of Paradise” I wrote about a love affair that was still bleeding as fresh as the skin wound on a haemophile.

[….]

பின் குறிப்பாக அவர் சொன்னதும் முக்கியமானது:

P.S. I might say that the writing is smooth and agreeable and some of the pages very apt and charming. You have talent—which is the equivalent of a soldier having the right physical qualifications for entering West Point.

‘ஒரு எழுத்தாளன் தன் இதயத்தைத் திறந்து, தன் ஆழமான உணர்வுகளைக் கொட்டத் தயாராக இருக்கவேண்டும். எழுதுவதற்கான விலையை நீ கொடுக்கத்தயாராக இல்லை,’ என்கிறார்.

கோபாலகிருஷ்ணன் அந்த விலையையும் அதற்கு மேலும் தருவதற்குத் தயாராக இருப்பதாலேயே அவரால் இப்படியொரு படைப்பைப் படைக்க முடிகிறது. கசப்பும் வேதனையும் கருணையும் எல்லாம் உதிரமும் சதையுமாய்க் கலந்தே வருகின்றன. நாவலின் மங்கையின் சொற்களில்,

“அந்த ஒரு ராத்திரியில் எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன் ஆயுள் மொத்தத்திலேயும் அனுபவிக்க வேண்டிய கசப்பையும் வேதனையையும் ஒரே ராத்திரியில் அனுபவித்துவிட்டேன். வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் பார்த்துவிட்டேன். வக்கிரமும் குரூரமுமான ஒன்று, பயங்கரமானது. நினைத்தாலே வலிக்கும். ஆனால் அதே ராத்திரியில்தான் அந்த இருவரையும் பார்த்தேன். இப்போது நான் உயிரோடு இருப்பது அவர்களின் கருணையில்தான். அந்தப் பெண்ணின் கண்ணீரும் அவளது அம்மாவின் ஆக்ரோஷமும் மாறி மாறி என்னை அலைகழிக்கும். அடியோடு நினைவிலிருந்து அழிக்க முயன்றும் மறக்கவே முடியாத ராத்திரி. அதுதான் எனக்கு இத்தனை பக்குவத்தையும் துணிச்சலையும் தந்திருக்கிறது.”


பெருமழையில் வீழ்தருவே

ஜூலை 12, 2018

நாடெல்லாம் சுற்றியலைந்துவிட்டு, இவ்வாரம்தான் எங்கள் கிராமத்துக்குப் பெருமழை வந்துசேர்ந்தது. வந்தவுடன் விரிந்து பரந்த ஒரு புளியமரம் விழுந்துவிட்டது. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தது அம்மரம்.

மரம் விழும் போது கோவையில் இருந்தோம். அடுத்த நாள்தான் ஊருக்குச் சென்றேன்.

மரம் விழுந்த அதே நாள், எங்கள் பயிலகத்துக்கு வரும் 9 வயதுச் சிறுவன் இளங்கோவின் அம்மாவும் இறந்துவிட்டார். அவனைத்தான் முதலில் பார்க்கச் சென்றேன். வழியிலேயே கண்ணில் பட்டான். அவனது 4 வயது தங்கையுடனும் வேறு இரு குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்தான்.

இளங்கோ எங்கள் பயிலகத்துக்கு வரும் மாணவர்களில் மிகவும் கட்டுக்கடங்காதவன். எந்த வேலை சொன்னாலும், செய்யாமலிருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்துவிடுவான். மனது வைக்கும்போது, எதைச் சொல்லிக்கொடுத்தாலும் எளிதில் கற்றுக்கொள்வான். நல்ல புஷ்டியாக இருப்பான். எந்த உணவானாலும் அலாதியான அடக்கமுடியாத ஆவலுடன் உண்பான்.

அவனது தங்கையைச் சில சமயம் அழைத்துவருவான். மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்வான்.

ஒரு முறை அவனது ஆசிரியர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருக்கிறார். அதைப் பற்றி விசாரிக்க, அவனது பெற்றோரைப் பள்ளிக்குச் சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்த அவனது வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதுதான் அவன் அம்மாவுடன் பேசியிருக்கிறேன்.

‘என்னாச்சு இளங்கோ? உங்க வீட்டுக்குத்தான் வந்தேன். வா போகலாம்,’ என்றேன்.

‘அண்ணா, இருங்கண்ணா வந்தர்றேன். தாத்தா காசு குடுத்தாரு. கடைக்குப் போயிட்டிருக்கேன்,’ என்று அருகிலிருந்த கடைக்குச் சென்று குழந்தைகள் எல்லாருக்கும் மிட்டாய் வாங்கி வந்தான்.

அவனது அப்பா வீட்டிலிருந்தார். எனக்கு நாற்காலி போட்டுவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். இளங்கோவின் அம்மாவுக்கு இரண்டு மாதமாகவே உடம்பு சரியில்லை; காச நோய் வந்து, கழுத்தில் நீர்கோர்த்து, அது கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று ஒருவகையாகப் புரிந்து கொண்டேன்.

 

எங்கள் நாய் காரியைக் காணவில்லை என்று கடந்த இரு வாரங்களாய்த் தேடிக்கொண்டிருந்தோம். இளங்கோவும் அவன் நண்பர்களும்தான் சாலையில் வாகனம் அடித்து மடிந்து கிடந்த ஒரு கறுப்பு நாயைக் காண்பித்தனர். காரி என்றுதான் நான் நினைத்தேன். மகிழ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். ‘காரி இத்தாச்சோடு இருக்குமாப்பா? அடியில இத்தனை வெள்ளையும் காரிகிட்டக் கிடையாது. வேறெங்காவது போயிருக்கும், திரும்பி வந்துரும்.’

மறுபடி இளங்கோவைச் சந்தித்த போதும் காரியைப் பார்த்தானா என்று கேட்டேன்.
‘ஆமாங்கண்ணா.’
‘எங்க?’
‘அந்தப் பீக்குழில தான். அது காரி தாங்கண்ணா,’ என்று அப்போதும் உறுதியாகக் கூறினான்.

 

‘போன வாரம் கூட இளங்கோவ தினமும் பார்த்தோமே. அவன் ஒன்னுமே சொல்லலையே. என்ன ஏதுன்னாவது பார்த்திருக்கலாம்,’ என்று அவன் அப்பாவிடம் அங்கலாய்ப்பாகக் கூறினேன்.

‘அவனுக்கே அம்மாவுக்கு இவ்வளவு முடியலைனு தெரியாதுங்க. இப்ப அவந்தான் காரியமெல்லாம் பண்ணினான். இவனிருக்கும் போது நான் எப்படி பண்ணமுடியும்? இந்தப் புள்ளைக்குத்தான் எப்படிப் புரியவைக்கிறதுன்னு தெரியலங்க. அம்மாவை ஆஸ்பித்திரிக்குக் கூப்பிட்டுப் போயிருக்காங்க, மருந்து கொடுத்திட்டிருங்ககாங்கனுதான் சொல்லிட்டிருக்கேன்,’ என்றார் இளங்கோவின் அப்பா.

‘அண்ணா, இன்னிக்கு ட்யூசன் இருக்கா,’ என்றாள் அவன் தங்கை, மழலை தீராக் குரலில்.
‘இல்லம்மா, மழையா இருக்கு. அடுத்த வாரம் வைச்சுக்கலாம். நீயும் வா, சரியா.’

இளங்கோ கையிலிருந்த சீப்பால் கீழே கிடந்த நாவல் பழக் கொட்டைகளை நோண்டிக்கொண்டிருந்தான். ‘சும்மா இருக்க மாட்டியா,’ என்று அவன் தாத்தா அதட்டினார்.
‘டேய் இளங்கோ, பெரிம்மாட்டப் போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா’ என்று அவன் அப்பா கூறியதும்,
‘இல்லை பரவால்ல, வேண்டாங்க,’ என்று எப்போதும் போல் சம்பிரதாயமாக மறுத்தேன்.

சற்று தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவர், என்னை அங்கு தேநீர் குடிக்கச் சொல்வது சரியல்ல என்று சைகை காண்பிப்பது தெரிந்தது. மறுத்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

‘ஆஸ்பித்திரில இருந்து வந்தவுடனேயே எடுத்துட்டோம்ங்க. உடம்பு ஒரே கொதியா இருந்திச்சு. நல்ல வேளையா நேத்து அந்த மரம் நாங்க புதைச்சுட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் கீழே விழுந்துச்சு. இல்லைனா வண்டிய ஊருக்குள்ளதான் விட்டு எடுத்துட்டுப் போயிருக்கணும். இதுவரைக்கு யாரையும் நாங்க ஊருக்குள்ள கொண்டு போனதில்லை. பெரிய பிரச்சனையாப் போயிருக்கும்.’

—-

வேரோடு பெயர்ந்து சாய்ந்து கிடந்த மரத்தின் முன்னால் நிற்கும்போது, நெருங்கிய உறவுக்காரர் வீழ்ந்துகிடக்கும் சோகம் அப்பிக்கொண்டது. இளங்கோவின் வீட்டிலிருந்த போது எழுந்த அதே உணர்வு. காரியின் இன்மையில் எழும் அதே வெறுமை.

மரத்தின் அருகில் குடியிருக்கும் பார்வதி, ‘மரம் விழுந்த சத்தமே கேட்கல. அவ்வளவு மெதுவா சாய்ஞ்சுது,’ என்றார்.

பார்வதியின் வீட்டு மாடுகள் எல்லாம் அம்மரத்தடியில்தான் கொட்டகை அமைத்துக் கட்டிவைத்திருப்பார்கள். கொட்டகை மரத்துக்கு வடமேற்காக உள்ளது. அவர்களது வீடும் மரத்துக்கு வடக்கே மிக அருகில் உள்ளது. மரத்தின் தென்புறம் உயரமான கைபேசி கோபுரம் ஒன்று உள்ளது.

மரம் கிழக்கு நோக்கிச் சாலையின் மீது சாய்ந்திருந்தது. சாலையைத் தாண்டியுள்ள வீட்டின் சுற்றுச்சுவரைக்கூடத் தொடாமல், யாருக்கும் பாதிப்பில்லாமல் விழுந்துகிடந்தது. சில மின்கம்பிகள் மட்டுமே அறுந்துபோயிருந்தன. சாலையை மறித்த கிளைகளை விரைவிலேயே வெட்டி அகற்றிவிட்டனர்.

மீதி மரம் மணியகாரரால் ஏலம் விடப்படக் காத்துக்கிடக்கிறது. பல ஆயிரங்கள் பெறும்.

அந்த பிரம்மாண்ட மரத்தின் இன்னும் வாடிப்போகாத இலைகளில் பசுமை கசிந்துகொண்டிருந்தது. மழை மீண்டும் தூறத்தொடங்கியது. சிறது நேரம் மௌனமாக நின்றுவிட்டு நகர்ந்தேன்.


தமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’

ஜூலை 12, 2018

கோவை புத்தகக் கண்காட்சியில் ஒருமுறை சந்தித்தபோது, தமிழினி வசந்தகுமார் தமிழ்நாட்டின் மிகமுக்கியமான மெய்யியல் அறிஞர் என்று இரா.குப்புசாமியைக் குறிப்பிட்டு அவரது ‘அறிவு நிலைகள் பத்து’ நூலைப் படிக்கச்சொல்லிக் கொடுத்தார். சரி, அவர் பதிப்பித்த நூல், அதனால் அப்படிச் சொல்கிறாரோ என்ற அசட்டையாலோ என்னவோ நீண்டநாள் படிக்காமலிருந்துவிட்டு சில மாதங்கள் முன்னர் ஒரு நீண்ட பேருந்துப் பயணத்தின் போது படித்தேன். வள்ளுவர், வள்ளலார், திருமூலர், திருவாசகம், சித்த மரபையெல்லாம் இணைத்து எழுதப்பட்ட அருமையான நூல். நானாகத் தேடாது என்னைக் கண்டடைந்த புத்தகங்களில் சிறப்பானதொன்றாக இதைக் கருதுகிறேன். கனமான ஒரு மெய்யியல் நூலை, விறுவிறுப்பானதொரு நாவலைப் போல விடாமல் படித்துமுடித்தேன். இன்னும் ஆழமாய் மீண்டும் படிக்கவேண்டும். கால் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுத்திருந்த என் தந்தைக்கும் கொடுத்தேன். வலியை மறந்து அவரும் கூர்ந்து படித்தார்.

‘அறிவு நிலைகள் பத்து’ நூலில் குப்புசாமி தமிழுக்கு என்று தனியே ஒரு மெய்யியல் மரபு இருப்பதாக நிறுவுகிறார். ஆறாவது அறிவைத் தாண்டி மேலும் நான்கு அறிவு நிலைகளைக் குறிப்பிடுகிறார். அன்பு நிலையை, அருள் நிலையையே உயர்ந்ததாக முன்வைக்கிறார். நவீன நடையில் பழங்கவிதைகளுக்கிடையே இருக்கும் ஒப்புமைகளை நாம் எதிர்பார்க்காத வகையில் கண்டறிந்து முன்வைக்கிறார். இடையிடையே அவர் அறுதியிட்டுச்சொல்லும் சில விஷயங்களை இடக்கு செய்யும் என் பகுத்தறிவால் முற்றாக ஏற்றுக்கொள்ளமுடியாதிருப்பினும் மொத்த நூலையும் பெரும் வியப்புடன் படித்தேன் (அவரே அப்படியானவற்றை அறிவியல் புனைகதை மாதிரி படிக்கலாம் என்று சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்). குறிப்பாக வள்ளுவரைப் புதிய ஒளியில் பார்க்கச்செய்தார். பல குறள்களுக்கு இதுவரை நான் கண்டிராத, ஆனால் ஏற்கத்தகுந்த விளக்கங்களை அளிக்கிறார்.

இந்நூலைப் பற்றி ஜெயமோகனின் ஒரு சிறு குறிப்பும், போகன் சங்கரின் குறுங்குறிப்பும் மட்டுமே இணையத்தில் கண்ணில் பட்டன. நேர்பேச்சில் கோணங்கள் ஆனந்த் அவரது பரவலான வாசிப்புப் பின்புலம் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார்.

தமிழினி மின்னிதழில் இரா.குப்புசாமியின் கட்டுரை வந்துள்ளது. கதே பற்றிய ஆழமான, ஆர்வமூட்டும் அறிமுகத்தைத் தருகிறார். காலங்கள், துறைகள் கடந்து அவர் செய்யும் ‘அறிவு எண்’ ஒப்பீடு போன்றவை மட்டும இடறுகின்றன.

இறுதியில் தொடரும் என்ற சொல்லைக் கண்டபோது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.


சுனில் கிருஷ்ணன்

ஜூலை 1, 2018
[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]
நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.
சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.
பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.
காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.
காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.
அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.
வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.
ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.
இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)
அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.

இன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி

ஜூன் 11, 2018

இணையம், கிண்டில், நண்பர் தியாகுவின் நூலகம், தங்கை உறுப்பினராக உள்ள ஜஸ்புக்ஸ் நூலகம், நான் சளைக்காமல் வாங்கும் புத்தகங்கள் என்று படிப்பதற்கான நூல்களுக்குப் பஞ்சமே இல்லை எனும் போதும், இன்னும் நான் அரசு நூலகத்தை விடவில்லை. நாங்கள் மூன்று பேரும் உறுப்பினர்களாக உள்ளதால், கைநிறைய அள்ளிவரமுடிகிறது. பலரும் குறையாகக் கருதுவதுதான் எனக்கு அரசு நூலகங்களுக்குச் செல்வதில் இருக்கக்கூடிய அணுகூலமாகத் தெரிகிறது – எதையும் குறிப்பாகத் தேடாமல், எந்தத் திட்டமும் எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் புத்தகங்களை அடைய முடிவது. இதுவரை கேள்விப்பட்டிராத, யாரும் பரிந்துரைத்திருக்காத புத்தங்களைக்கூட அவ்வப்போது படித்துப்பார்க்கத் தோன்றும். பல சமயங்களில் புத்தகங்கள்தாம் நம்மைக் கண்டடைகின்றன.

அப்படி என்னைக் கண்டடைந்த ஒரு புத்தகம் நட் ஹாம்சனின் பசி. க.நா.சு. மொழிபெயர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான் எடுத்தேன். மூல எழுத்தாளரைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. புத்தகத்திலும் எந்தக் குறிப்பும் இல்லை. எந்த நாடு என்று தெரியவில்லை. பெயர்கூட ஆங்கிலத்தில் சரியாகத் தரப்படவில்லை. புரட்டிப் பார்த்தபோது முதல் பக்கத்தின் சில வரிகளே என்னை உள்ளே இழுத்துவிட்டன. படித்துக்கொண்டிருந்த வேறு பல புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இதைப் படிக்கத்தொடங்கினேன். பல பக்கங்கள் கடந்தபிறகுதான் கதை நடக்குமிடமான கிறிஸ்டியானியா நார்வே நாட்டில் உள்ளது என்று புரிந்தது. பாதிப் புத்தகம் முடிந்தபிறகுதான் இணையத்தில் தேடிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் அறியாமைக்குக் கண்ணாடி பிடித்தது. இந்த நாவல் (Hunger/Sult) 1890ல் வெளிவந்திருக்கிறது. உடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எழுதிய நார்வே எழுத்தாளர் Knut Hamsun, 1920ல் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். ஓஸ்லோ நகரத்தின் முந்தைய பெயர்தான் கிறிஸ்டியானியா (‘அங்கிருந்து வசித்தவன் எவனும் அதைப்பற்றிய நினைவுகளிலிருந்து என்றும் தப்ப முடியாது’ என்பது இப்புத்தகத்தின் தொடக்க பத்தியில் வருகிறது. க.நா.சு ஜார்ஜ் எகெர்டனின் ஆங்கிலப் பதிப்பைப் பின்பற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். பிந்தைய Robert Bly மொழிபெயர்ப்பில் இவ்வரி இன்னும் சிறப்பாக வந்துள்ளது: that strange city no one escapes from until it has left its mark on him. . .).

நட் ஹாம்சனை நவீன இலக்கியத்தின் தந்தை என்று ஐசக் பாஷ்விஸ் சிங்கர் கூறுகிறார். “The whole modern school of fiction in the twentieth century stems from Hamsun, just as Russian literature in the nineteenth century ‘came out of Gogol’s greatcoat. They were completely Hamsun’s disciples: Thomas Mann and Arthur Schnitzler (…) and even such American writers as Fitzgerald and Hemingway,” என்கிறார். ஹாம்சன் நனவோடை எழுத்துமுறையின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நார்வேவின் தஸ்தயெவ்ஸ்கி என்று அறியப்பட்டிருக்கிறார். இந்த நாவலின் நாயகனையும் குற்றமும் தண்டனையும் ரஸ்கோல்னிக்கோவையும் பலரும் ஒப்பிடுகின்றனர்; தனது நூலைவிட ரஸ்கோல்னிக்கோவிடம் அதிக ஆன்ம உணர்வெழுச்சிகளைக் கண்டுவிடமுடியாது என்று ஹாம்சனும் ஒரு கடிதத்தில் எழுதுகிறார். நாவலின் கூறுமுறை நிலவறைக் குறிப்புகளையும் நினைவுக்குக்கொண்டுவருகிறது.

35142960_10155555315598148_8873543016405532672_n

‘பசி’ நாவலின் கதைசொல்லி ஓர் இளம் எழுத்தாளன். எப்போதாவது, ஒருசில கதை கட்டுரைகள் சொற்ப ஊதியத்துக்குப் பதிப்பிக்கப்படுகின்றன. வேறு வேலை தேடும்போதெல்லாம் நிராகரிப்பைச் சந்திக்கிறான். விண்ணப்பக்கடிதத்தில் தேதி தவறாக எழுதியதால் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலைகூட கிடைக்காமல் போகிறது. உண்மையில் பசி தான் கதையின் நாயகன். 160 பக்கங்களுக்கு, வரிக்கு வரி பசி வியாபித்திருக்கிறது. பசி கதைநாயகனை விரட்டுகிறது; புரட்டி எடுக்கிறது; பைத்தியமாக்குகிறது; சிறப்பான கதை எழுதவைக்கிறது; உலகின் மிகச்சிறந்த படைப்பு அது என்று நம்பவைக்கிறது; அது பதிப்புக்கு ஏற்கப்பட்டபின், வேறு எதுவும் நல்லதாக எழுத முடியாமற் செய்கிறது; எழுதிய பக்கங்களைக் கிழத்தெறிய வைக்கிறது; காரணமில்லாமல் ஒரு பெண்ணை வம்புக்கிழுக்கவைக்கிறது; தேவையின்றிப் பொய் சொல்லவைக்கிறது; எதேச்சையாகக் கிடைக்கும் பணத்தை தானம் செய்யவைக்கிறது; தானம் கொடுத்துவிட்டுப் பின்னர் அதே பெண்ணிடமிருந்து மீண்டும் திருட வைக்கிறது; போட்டிருக்கும் சட்டைமுதல் கடைசிக் கோட்டின் பொத்தான்கள் வரை எல்லாவற்றையும் அடமானம் வைக்கச் செய்கிறது.

‘உடலில் பசி வயிற்றைத் திருகிற்று. ஒரு விநாடி ஓய்வு கிடைக்கவில்லை. எச்சிலை விழுங்கினேன் – அது உணவாகும் என்று நம்பினேன். பசியையாற்றும் என்று எண்ணினேன்,’ என்கிற வரி என்னை உலுக்கிப்போட்டது. எப்போதாவது கிடைக்கும் உணவையும் அதீத பசியால் வாந்தியெடுக்கிறான். தண்ணீர் கூட அவன் வயிற்றில் தங்குவதில்லை. வழியில் கிடைக்கும் மரத்துண்டுகளை, குப்பையில் கிடக்கும் ஆரஞ்சு தொப்பையை, தனது சட்டைப் பையை என்று அவன் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறான். தனது கைவிரலைக்கூட உண்ணலாமா என்கிற எண்ணம் அவனை ஆட்கொள்கிறது. ‘கண்கள் திறந்திருக்க நான் செத்துக் கொண்டிருந்தேன். கை விரலை வாயில் போட்டுச் சப்பினேன். உடனே ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றிற்று. கடித்துப் பார்த்தால்? சிறிதும் யோசிக்கத் தயங்காமல், கண்களை மூடிக்கொண்டு கடித்தேன்.’

இத்தனை பசியிலும் தன்மான உணர்வும் வறட்டுப் பெருமையும் அவனைவிட்டுப் பெரும்பாலும் விலகுவதில்லை. பசியின் உச்சங்களில் அவையும் அவ்வப்போது சமரசத்துக்கு உள்ளாகின்றன. நண்பன் அவனுக்கு இரவலாகத் தந்திருந்த கம்பளியைப் பல நாட்கள் அடமானம் வைக்காமல் பிடிவாதமாக இருக்கிறான். இறுதியில் அடமானம் வைக்கச்செல்லும்போது, அடகுக்கடைக்காரன் மறுத்துவிடுகிறான். ஒருவகையில் அது அவனுக்குத் திருப்தியாக இருக்கிறது. அவச்செயலிலிருந்து தப்பிவிட்டதாக மகிழ்கிறான்.

அவன் துரத்திச்சென்று வம்புக்கிழுத்த பெண் பின்னர் அவனைச் சந்திக்கும் போது அவன்பால் ஈர்க்கப்படுகிறாள். குடி போதையில்தான் அவன் அவ்வாறு நடந்துகொண்டான் என்று நம்புகிறாள். அவனும் முதலில் அதை மறுக்காமல் இருக்கிறான். பிறகு தன்னைப்பற்றியும் தனது ஏழ்மையைப் பற்றியும் கூறுகிறான். தனது பைத்தியகாரத்தனமான சில செயல்களைப்பற்றியும் அவளோடு பகிர்ந்துகொள்கிறான்.

“அன்றுகூட நீ குடித்திருக்கவில்லை. பைத்தியம் போல.’
“பசி, பைத்தியம் ஒன்றுமில்லை. நான் அப்போதுதான் சாப்பிட்டிருந்தேன்,” என்று அப்போதும் அவனது வறட்டு கௌரவத்தை விட்டுத்தராமல் பேசுகிறான்.

சிறிது நேரத்திலேயே உரையாடலுக்கும் கலவிக்குமிடையில் அவர்களது உறவு பிளவுபடவும், ‘காலிப்பயல் அல்ல என்பது அவளைச் சோர்வடையச் செய்ததா? நான் வெறும் ஏழை என்பது பிடிக்கவில்லையா?’ என்று நினைக்கிறான்.

அவளைவிட்டு விலகி வெளியேறும் போது: ’நான் வாசற்படியை விட்டு நகராமல் நின்று பிதற்றிக் கொண்டேயிருந்தேன். பைத்தியமாக இருக்க வேண்டுமா உணர்ச்சி மிகுந்து காணப்படுவதற்கு? அதற்கு அவசியமே இல்லையே! அறிவுள்ள ஏழை கவனிப்பவற்றை பணக்காரன் அறிவுள்ளவன் கவனிப்பதில்லை. பைத்தியகாரன், ஏழை இருவருமே ஒன்றுதான். நெருப்புச் சுட்ட வடுப் போல என் உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் ஏழ்மை வடுக்கள் இருந்தன.’

காஃப்காவின் பசிக் கலைஞன்(The Hunger Artist) என்ற சிறுகதை இந்நாவலோடு இணைத்துப்பார்க்கப்படுகிறது. பசிக் கலைஞனில் பசி குறியீட்டுத்தன்மையுடன் வருகிறது. தஸ்தயெவ்ஸ்கியின் முதலை (The Crocodile) கதையில், முதலையால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குள்ளிருந்து பேசும் மனிதனைக் காண மக்கள் கட்டணம் கட்டி வருவார்கள். அது போல, பசிக்கலைஞன் பட்டினிகிடப்பதை நிகழ்த்துகலையாகச் செய்கிற ஒருவனைப் பற்றிய கதை; கூண்டுக்குள் உணவின்றி பல நாட்கள் இருக்கும் அவனை மக்கள் கட்டணம் கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு அதில் ஆர்வம் இழந்துவிடுகின்றனர். சர்க்கஸில் சேர்கிறான். அங்கும் கூட்டம் விலங்குகளைப் பார்க்க நகர்ந்துவிடுகிறது. கவனிப்பாரற்று பசிக்கலைஞன் இறந்துபோகிறான். பசியோடு இருப்பதைத்தவிர அவனுக்கு வேறு எதுவும் தெரியாது, அல்லது அவன் விரும்புகிற உணவு அவனுக்குக் கிடைப்பதில்லை என்கிற வாதங்களையும் வெவ்வேறு தருணங்களில் முன்வைக்கிறான். ஆனால், பசி நாவலின் நாயகன் பசியின் ருசியில் அவ்வப்போது திளைத்தாலும், பெரும்பாலும் பசியால் துடிக்கிறான். அவன் பசியைக் கலையாகக் கொண்டவன் என்று கருதமுடியுமா, தெரியவில்லை. அவன் பசியால் வாடுகிற கலைஞன். பசியால் தன்னையே வருத்திக்கொள்கிற கலைஞன். பசியைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் அவனுக்கு இருக்கின்றன. ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை, அல்லது அவன் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை.

இந்நாவலில் பசி ஒரு குறியீடாக இல்லை. அபத்தமாக இல்லை. அதன் பேரியல் பொருளாதார, அரசியல் காரணிகளுக்குள் ஹாம்சன் செல்வதில்லை. முகத்தில் அறைகிறமாதிரி இயல்பாக, அப்பட்டமாக உள்ளது. இத்தனை இருண்ட, கனமான, சம்பவங்களும் பாத்திரங்களும் அதிகமற்ற ஒரு கதை ஒரு சில பக்கங்களில் விரக்தியை ஏற்படுத்திச் சலிப்பூட்டக்கூடும். இதில் அவ்வாறு நிகழாமற் தடுப்பது கசப்பும் அவலமும் கலந்த அங்கதம்.

ஹப்பால்டி என்கிற ஒரு பொய்யான பெயரையும் நபரையும் இவன் உருவாக்க, ‘ஆமாம், ஹப்பால்டி’ என்று தலையை ஆட்டிய கிழவனுடனான நீண்ட உரையாடல் இதற்கு எடுத்துக்காட்டு. ஹப்பால்டியின் அண்ணன், மனைவி, மகள் யாலஜாலி, அவர்களது தொழில், அழகு என்று விரிந்துகொண்டே செல்கிறது. ‘நான் சொன்னதை பூராவும் நம்பிவிட்டான். அதுபற்றி அவன் ஆச்சரியப்படவும் இல்லை. இது பற்றி எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். நான் சொல்வதைக்கண்டு அவன் ஆச்சரியப்பட வேண்டும் என்று நினைத்தேன் நான்,’ என்று அடுக்கிக்கொண்டே போகிறான். கடைசியில் சலித்துப்போய், ‘ஏனையா கிழவரே! நான் இங்கே உட்கார்ந்து கொண்டு பொய்யாகப் புளுகிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறாயா நீ? ஹப்பாலடி என்கிற பெயருடைய மனிதன் ஒருவன் இல்லவேயில்லை என்று எண்ணுகிறாயா நீ?’ என்று கோபித்துக்கொள்கிறான்.

கிறிஸ்டியானியா நகரில், தங்குமிடமற்றவர்களுக்கு, காவல்நிலையத்தில் இரவு தங்க அறை ஒதுக்குகிறார்கள். அவனும் ஓர் இரவு அங்கு தங்குகிறான். பத்திரிக்கையாளன், வீட்டு சாவி தொலைந்துவிட்டது என்று கதைக்கிறான். அதனாலேயே, காலையில் கிளம்புகையில், எல்லாருக்கும் உணவுச் சீட்டுகள் தரப்படும்போது, இவனுக்குத் தேவைப்படாது என்று தராமல் விட்டுவிடுகிறார்கள். கௌரவத்தை விடாமல், பசியோடு திரும்புகிறான். ‘ஒரு சீட்டு, எனக்கும் ஒரு சீட்டு வேண்டும், மூன்று நீண்ட இரவுகளும் பகல்களும் நான் ஒன்றுமே புசிக்கவில்லையே, ஒரு துண்டு ரொட்டி, எனக்கு யாரும் சீட்டுத் தரவில்லை, எனக்கும் கேட்கத் தைரியம் வரவில்லை. […] லக்‌ஷப் பிரபு மாதிரி கைகளை என் கோட்டுப் பைக்குள் போட்டுக்கொண்டு தலையை நிமிர்த்திக் கொண்டு ஜோராக வெளியேறினேன்.’

அங்கு தனியறையில் தங்கியிருந்த அந்த இரவிலும், சகிக்கமுடியாப் பசியும் ஆழ்ந்த இருளும் அவனைப் போதையேறிய உன்மத்த நிலைக்குத் தள்ளுகின்றன.

‘என் கற்பனையில் நான் ஒரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டேன். என் படுக்கையில் எழுந்து சொன்னேன். மொழியிலே இல்லாத வார்த்தை அது. நானாகக் கண்டுபிடித்தது. ‘குபோவா’ அதிலே அட்சரங்கள் இருக்கின்றன. கடவுள் பெயரால் சொல்லுகிறேன் – அது ஒரு புது வார்த்தைதான். ‘குபோவா’ மிகவும் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தை இது.

கண்களைத் திறந்து கொண்டு உட்கார்ந்திருந்த என் கற்பனையைக் கண்டு நானே ஆனந்தமடைகிறேன் – சிரிக்கிறேன்.என் கற்பனையை ரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும் – யாராவது திருடி விடுவார்கள். ரகசியமாக எனக்கு நானே பேசிக் கொள்கிறேன். பசி இப்போது இன்ப போதையைத் தந்துவிட்டது. பசிப் பரவசம் இது. காலியாகவும் வலியில்லாமலும் இருக்கிறேன் நான்.’

தான் கண்டுபிடித்த அச்சொல்லுக்கு ஒவ்வொரு அர்த்தமாகக் கொடுத்துப்பார்த்து ஒதுக்குகிறான். ‘அவ்வார்த்தை மனதை மீறியதொன்றைக் குறிக்க வேண்டும் – ஒரு ஆன்மீக அனுபவம், உணர்ச்சி, ஒரு நிலையைக் குறிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்னால். ஆன்மீகத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன். என் மன அரங்கிலே யாரோ எப்படியோ குறுக்கிட்டு ஏதோ தொல்லை தருவது போல இருக்கிறது.’

பாரதி ‘ஓம்’க்கு இணையான சொல்லைத் தமிழில் உருவாக்க முனைந்தது நினைவுக்கு வந்தது. அவனுக்கும் பசி பழக்கப்பட்ட கலைதானே.

——-

பி.கு.:
தனது முதுமையில், நட் ஹாம்சன் நாசிச ஆதரவாளராக இருந்திருக்கிறார். யூத வெறுப்பாளர் என்று சொல்லமுடியாது; ஆங்கிலேயர்கள் மீதான காழ்ப்பு அதற்குப் பெரும் காரணமாக இருந்திருக்கலாம். நார்வேயை ஜெர்மனி கைப்பற்றியபோது வரவேற்றிருக்கிறார். தனது நோபல் பரிசை கோயபல்ஸுக்கு அனுப்பியிருக்கிறார். ஹிட்லரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஆனால், ஹிட்லருடனான சந்திப்பு சுவாரசியமானது. அப்போது ஹாம்சனுக்கு 84 வயது. சரியாகக் காதுகேட்காது. ஹிட்லர் இலக்கியம் பற்றியும் மேதைமை குறித்தும் பேச நினைக்க, ஹாம்சன் அரசியல் பற்றியே பேசியிருக்கிறார். நார்வே நாட்டிலிருந்த ஜெர்மானியப் பிரதினிதியை விலக்க வேண்டும் என்று ஹாம்சன் ஹிட்லருடன் காரசாரமாக விவாதித்திருக்கிறார். ஹிட்லர் பேசும்போது அடிக்கடி குறுக்கிட்டு மறுத்துப்பேசியிருக்கிறார். இடையிடையே அழுதிருக்கிறார். ‘ஒரு சுவரோடு உரையாடிக்கொண்டிருக்கிறோம்,’ என்று மொழிபெயர்ப்பாளரிடம் கூறியிருக்கிறார். நல்ல வேளையாக, மொழிபெயர்ப்பாளர் அதையும் வேறு பல கூற்றுகளையும் மொழிபெயர்க்கவில்லை. ஹிட்லர், இறுதியாக, ‘வாயை மூடுங்கள்! உங்களுக்கு எதுவும் புரியவில்லை,’ என்று கோபமாகச் சென்றுவிட்டார். ‘குட் பை’ சொல்லி தனிப்பட்ட முறையில் ஹிட்லர் விடைபெறவில்லை என்று ஹாம்சன் அழுதிருக்கிறார். ஹிட்லர் தனது உதவியாளர்களிடம், ‘இதுமாதிரியான நபரை இனி ஒரு போதும் நான் சந்திக்க விரும்பவில்லை,’ என்று சினந்து கூவியிருக்கிறார்.

நாசிகளிடமிருந்து பலரை மீட்பதற்கும் ஹாம்சன் உதவியிருக்கிறார்.

உலகப்போர் முடிந்த பின்னர், ஹாம்சன் நாசிகளுடனான ஒத்துழைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். முதுமையாலும் அறியாமையாலும் அவ்வாறு நடந்திருக்கிறார் என்று தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

படைப்பாளி யார் என்று தெரியாமல் படைப்பை ரசித்தாகிவிட்டது. யாரென்று அறிந்தபின் ரசித்ததைத் திரும்பப் பெறமுடியுமா என்ன? இனியும் அவரது நூல்களைப் படிக்காமலிருக்கப் போவதில்லை. ஆனால் ஹிட்லர் நினைவு வராமல் படிக்கமுடியுமா என்பது சந்தேகமே. பசி நாவலை எழுதிய இளம் ஹாம்சனும், எழுத்துலக வாழ்க்கை முடிந்து நாசி ஆதரவாளரான முதிய ஹாம்சனும் ஒரே நபரெனக் கொள்ளமுடியுமா? இலக்கிய ரீதியாக, படைப்பு வேறு படைப்பாளி வேறு என்ற பாகுபாட்டினை அமைத்துக்கொண்டாலும்கூட, படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்புகள் குறித்த அறம்சார்ந்த சிக்கலான கேள்விகள் எழ ஹாம்சன் போன்றவர்கள் காரணமாகிறார்கள்.

நார்வேயில் மறுபடியும் ஹாம்சனை எச்சரிக்கையுடன் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஹாம்சனின் நூல்களின் புதிய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. கார்டியன் இதழின் புத்தக வலைப்பூவில், இப்படி எழுதுகிறார்கள்:
“The novel is what it is today in large part because of what Knut Hamsun wrought, which is a fact that no amount of revisionist history can wipe away. It’s time we accept this and try to figure some way to bring the man’s books back into the canon, while leaving his horrid politics out in the cold where they belong.”

நவீன இலக்கியத்தின் இரு முக்கியமான முன்னோடிகள் – மற்றவர் எஸ்ரா பவுண்ட் – பாசிச ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஹிம்.


மகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்

மார்ச் 13, 2018

மகாராஷ்டிரத்தில் போராட்டப்பாதையில் நடந்த விவசாயிகள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான, ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று, நதிநீர் இணைப்பால் அவர்களது நிலங்கள் மூழ்கவிருப்பது குறித்தது.

நதிநீர் இணைப்புதான் நம் தண்ணீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று இந்த கானல்நீரைக் கேட்டுக் கோரிக்கை வைக்கும் பெருவாரியான தமிழக விவசாயிகள், இதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்களாக. தமிழகத்திலும் பிற இடங்களிலும் நிலங்களை இழந்து, பாதச்சதைகிழிய நீங்கள் போராட்டம் செய்ய நேரிட்டால், நதிநீர் இணைப்பைத் தீர்வாகக் காட்டும் எந்த ஆன்மீக அறிவியல் அரசியல் சினிமா மேதைகளும் துணைவரப் போவதில்லை.

https://www.outlookindia.com/website/story/modis-pet-river-linking-project-is-a-reason-why-maharashtra-farmers-are-protesti/309398