சர்வோதய தினம் 2019

பிப்ரவரி 18, 2019

சுதந்திரத்துக்குப் பின்னான காந்தியத் தலைவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவரான ஜெகந்நாதன் நினைவு நாளையொட்டி, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முன்னெடுப்பில் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வோதய தின நிகழ்வுகளில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்து கொள்ள முடிந்திருக்கிறது.

இவ்வாண்டுக்கான ஜெகந்நாதன் விருது கட்டிடத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்.கீதா, மூத்த சர்வோதய இயக்கச் செயல்பாட்டாளர்களான சுந்தரராஜன், ராஜேந்திரன் ஆகியோருக்கும், மறைந்த இத்தாலிய காந்தியத் தலைவர் ஆல்பர்டோ லபாட்டே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த மூத்த செயல்பாட்டாளர்களோடு சேர்த்து இளம் நண்பர்களான ‘தன்னாட்சி’ நந்தகுமார், ‘குக்கூ’ சிவராஜ் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

நந்தகுமார் சிவா கிராம சபைகள் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பங்காற்றியிருக்கிறார்.

சிவராஜ் குழந்தைகளோடு பணியாற்றுவதற்கு ஒரு பெரிய இளைஞர் திரளை ஈர்த்திருக்கிறார்.

முந்தைய நாள், மாணவர்களோடு பேசிய ‘துலா’ அனந்து சமூகத்தின் மீதும், இயற்கையின் மீதும் கரிசனத்துடன் செய்ய வேண்டிய தொழில்கள் குறித்த தன் விரிவான, செறிவான, உணர்வுப்பூர்வமான உரை மூலம் வந்திருந்த அனைவரின் மனசாட்சிகளையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்.

நண்பர்கள் சிவகுருநாதன், ஸ்டாலின் ஆகியோரும் மூன்று நாட்களும் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி கடலைமிட்டாய், குக்கூ நூல்கள் ஆகியவற்றுக்கான விற்பனையரங்குகளை அமைத்து, மாணவர்களோடு உரையாடி சமூகநலத் தொழில்கள் குறித்த ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழா முடிந்தபிறகு, கடந்த ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து இந்தியா வந்துகொண்டிருக்கும் அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் வில்லிஸ் தன் மனைவி மிக்காவுடன் எங்களோடு வந்து எங்கள் கிராமத்திலும், கோவையில் பெற்றோர் வீட்டிலும் தங்கியிருந்தது மாறுபட்ட ஓர் அனுபவமாக அமைந்தது. கிராம மாணவர்களுக்கும் அயல்நாட்டினரோடு முதன்முதலாக உரையாடி பல்வேறு கேள்விகளைத் தொடுத்து உறவாட ஒரு வாய்ப்பு.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.


எழில்

நவம்பர் 20, 2018

வாணியோட கன்னுக்குட்டி பொண்ணா இருந்தா எழில்னு பேர் வைக்கப் போறேன்.

சரிடா.

ஆணா இருந்தா எழில்னு வர்றமாதிரி என்ன பேர் வைக்கலாம்?

எழில்ங்கிறதே பொதுப்பேருதான். காளையா இருந்தாலும் வைக்கலாம். பசுவா இருந்தாலும் வைக்கலாம்.

இல்லப்பா, அது எப்படிப்பா?

‘ஆமா, இவதான் எல்லாருக்கும் பேரு வைச்ச மகராசி. எத்தன பேருக்கு பேர் வைச்சுருக்க நீ?’ என்று செல்லமாக அதட்டினாள் அம்மா.

‘காரி, மதுரா, வாணி, நிலா, ராசு, கல்லு, குட்டா,…’ என்று மூச்சுவிடாமல் அடுக்கினாள். நாய்,ஆடு, மாடுகளுக்கு அவள் வைத்த பெயர்கள்.

பொம்மைகளுக்கு வைத்த பெயர்களை மறந்துவிட்டாள். ‘தாரா, மேகி, ஜாய்,…’ கைகாலாட்டும் புதிய மர பொம்மைக்கு டின்டின் என்று பெயரிடலாமா என்று யோசித்துவிட்டு, மீசை, தொப்பி இருப்பதால் கேல்குலஸ் என்ற பெயரை முடிவுசெய்திருக்கிறாள்.

ஒரு பார்பி பொம்மைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு காந்தாரி என்று பெயர் வைத்திருந்தாள்.

காந்தார மன்னன் சுபலனுக்குப் பின்னர் காந்தாரி என்ற பெயரைச் சூட்டியவர்கள் யாரேனும் உண்டா அறிஞர் பெருமக்களே?


குடி

நவம்பர் 20, 2018

கிராமம் நலம்பெற என்னவெல்லாம் செய்யலாம் என்று பயிலக மாணவர்களோடு எதேச்சையாக ஒரு சிறிய உரையாடல் நடந்தது. சுத்தம், பசுமை, கல்வி, சுற்றுச்சூழல் என்று பலவாறாகச் சொன்னார்கள்.

‘பசங்களா, எல்லாம் சரி, குடியை விட்டுட்டீங்களே,’ என்றேன்.

‘டாஸ்மாக்க மூடணும்ணா’

‘சரி, நாம என்ன பண்ணலாம்?’

‘நாங்க சொன்னா வீட்டுல அடிக்கிறாங்கண்ணா.’

‘எல்லாருக்கும் ஒரு மாலையைப் போட்டுவிடறது தாங்கண்ணா ஒரே வழி.’

‘அப்பவும் ரொம்ப நினெப்பு எடுத்தா, மாலையக் கழட்டி வைச்சிட்டுக் குடிச்சிட்டிட்டு வந்துட்டு, அப்புறமா மறுபடியும் மாலையப் போட்டுப்பாங்கண்ணா.’


பயிலகம்

நவம்பர் 20, 2018

(முகநூலில் செப்டெம்பர் 9ம் தேதி எழுதிய பதிவு)

எங்கள் பயிலகத்திற்கு ஒரு புதிய இடம் கிடைத்துள்ளது. தற்போது ஜப்பானில் வசித்துவரும் அற்புதமான தம்பதியினரான கிருஷ்ணக்குமார்-காயத்ரி தங்கள் நிலத்திலுள்ள வீட்டையும் அறைகளையும் பயிலகம் நடத்த அளித்துள்ளனர். அவர்களது நிலம் எங்களுடையதைக் காட்டிலும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இதுவரை அரச மரத்தடியில், விநாயகர் கோயிலருகில், பயலிகம் நடத்தி வந்தோம். அதற்கென ஒரு தனித்த எழில் இருக்கத்தான்செய்தது. ஆனால், சாதிப் பிரச்சனைகள், மழை, மற்றும் பிற சிக்கல்களும் இருந்தன.

இப்புதிய இடம் குழந்தைகள் மேலும் பல செயல்கள் செய்வதற்கு வழிவகுக்கக்கூடும். பிற நண்பர்கள் பிற வழிகளில் உதவியுள்ளனர். புதிய சவால்களும் உள்ளன…அவற்றையும் சந்தித்துத்தான் பார்ப்போம். ஆனால், இப்போது நாங்கள் தனித்துச் செயல்படவில்லை என்பதே பெரும் உற்சாகமாகத்தான் உள்ளது.


ராசு

நவம்பர் 20, 2018

(என் மனைவி நித்யா செப்டெம்பர் 6ம் தேதி முகநூலில் எழுதியது)

மதுரா
எங்கள் வீடு உள்ள தோட்டத்தில் இருக்கும் நாட்டு மாடுக்கு மகிழ் வைத்த பெயர் “மதுரா”. ” வாணி”யும், “நிலா” வும் காலேஜ் மாடுகள். போன வாரத்திலிருந்து எப்போ மதுரா ஈனுவால் என்று எல்லோரும் காத்துக்கொண்டு இருந்தோம், குறிப்பாக மகிழ்.

“அம்மா இந்த humansக்கு தான் labour ward,அது இதுனு… அன்னிக்கு விடமாட்டேங்கிறாங்க. ஆனா மதுரா ஈனும் போது, நான் பக்கத்திலே இருந்து குட்டி எப்படி வருதுனு பார்க்கப் போகிறேன். யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க இல்ல அம்மா” என்றாள்.

போன வார இறுதில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல ஊருக்கு கிளம்பும்போது, ” அம்மா இந்த வாரம் எனக்கு ஊருக்கு வர மனசே இல்லை. இங்கையே பாட்டு class இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! நம்ம ஊருக்கு போயிட்டு வருவதற்குள்ள மதுரா கன்னு போட்டுவிடுவாள். எனக்கு இங்கு இருக்கனும்” னாள். சமாதானம் சொல்லி அழைத்து சென்றோம். தோட்டத்து உரிமையாளர்களை அவள் பாட்டி, தாத்தா என்று அழைப்பாள், ஊருக்குப் போகும் முன்பு, பாட்டியிடம் “கன்னு போட்டுச்சுனா போன் பண்ணி சொல்லுங்கனு” சொல்லிவிட்டு வந்தாள்.

நான், ஐய், நமக்கு இந்த வாரம் சுவையான நாட்டு மாட்டு சீம்( சீப்பம்) பால் கிடைக்கும் என்ற குஷியோடு இருந்தேன்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பெருமழையில் வீழ்தருவே

ஜூலை 12, 2018

நாடெல்லாம் சுற்றியலைந்துவிட்டு, இவ்வாரம்தான் எங்கள் கிராமத்துக்குப் பெருமழை வந்துசேர்ந்தது. வந்தவுடன் விரிந்து பரந்த ஒரு புளியமரம் விழுந்துவிட்டது. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தது அம்மரம்.

மரம் விழும் போது கோவையில் இருந்தோம். அடுத்த நாள்தான் ஊருக்குச் சென்றேன்.

மரம் விழுந்த அதே நாள், எங்கள் பயிலகத்துக்கு வரும் 9 வயதுச் சிறுவன் இளங்கோவின் அம்மாவும் இறந்துவிட்டார். அவனைத்தான் முதலில் பார்க்கச் சென்றேன். வழியிலேயே கண்ணில் பட்டான். அவனது 4 வயது தங்கையுடனும் வேறு இரு குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்தான்.

இளங்கோ எங்கள் பயிலகத்துக்கு வரும் மாணவர்களில் மிகவும் கட்டுக்கடங்காதவன். எந்த வேலை சொன்னாலும், செய்யாமலிருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்துவிடுவான். மனது வைக்கும்போது, எதைச் சொல்லிக்கொடுத்தாலும் எளிதில் கற்றுக்கொள்வான். நல்ல புஷ்டியாக இருப்பான். எந்த உணவானாலும் அலாதியான அடக்கமுடியாத ஆவலுடன் உண்பான்.

அவனது தங்கையைச் சில சமயம் அழைத்துவருவான். மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்வான்.

ஒரு முறை அவனது ஆசிரியர் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கியிருக்கிறார். அதைப் பற்றி விசாரிக்க, அவனது பெற்றோரைப் பள்ளிக்குச் சென்று விசாரிக்குமாறு அறிவுறுத்த அவனது வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதுதான் அவன் அம்மாவுடன் பேசியிருக்கிறேன்.

‘என்னாச்சு இளங்கோ? உங்க வீட்டுக்குத்தான் வந்தேன். வா போகலாம்,’ என்றேன்.

‘அண்ணா, இருங்கண்ணா வந்தர்றேன். தாத்தா காசு குடுத்தாரு. கடைக்குப் போயிட்டிருக்கேன்,’ என்று அருகிலிருந்த கடைக்குச் சென்று குழந்தைகள் எல்லாருக்கும் மிட்டாய் வாங்கி வந்தான்.

அவனது அப்பா வீட்டிலிருந்தார். எனக்கு நாற்காலி போட்டுவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். இளங்கோவின் அம்மாவுக்கு இரண்டு மாதமாகவே உடம்பு சரியில்லை; காச நோய் வந்து, கழுத்தில் நீர்கோர்த்து, அது கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று ஒருவகையாகப் புரிந்து கொண்டேன்.

 

எங்கள் நாய் காரியைக் காணவில்லை என்று கடந்த இரு வாரங்களாய்த் தேடிக்கொண்டிருந்தோம். இளங்கோவும் அவன் நண்பர்களும்தான் சாலையில் வாகனம் அடித்து மடிந்து கிடந்த ஒரு கறுப்பு நாயைக் காண்பித்தனர். காரி என்றுதான் நான் நினைத்தேன். மகிழ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். ‘காரி இத்தாச்சோடு இருக்குமாப்பா? அடியில இத்தனை வெள்ளையும் காரிகிட்டக் கிடையாது. வேறெங்காவது போயிருக்கும், திரும்பி வந்துரும்.’

மறுபடி இளங்கோவைச் சந்தித்த போதும் காரியைப் பார்த்தானா என்று கேட்டேன்.
‘ஆமாங்கண்ணா.’
‘எங்க?’
‘அந்தப் பீக்குழில தான். அது காரி தாங்கண்ணா,’ என்று அப்போதும் உறுதியாகக் கூறினான்.

 

‘போன வாரம் கூட இளங்கோவ தினமும் பார்த்தோமே. அவன் ஒன்னுமே சொல்லலையே. என்ன ஏதுன்னாவது பார்த்திருக்கலாம்,’ என்று அவன் அப்பாவிடம் அங்கலாய்ப்பாகக் கூறினேன்.

‘அவனுக்கே அம்மாவுக்கு இவ்வளவு முடியலைனு தெரியாதுங்க. இப்ப அவந்தான் காரியமெல்லாம் பண்ணினான். இவனிருக்கும் போது நான் எப்படி பண்ணமுடியும்? இந்தப் புள்ளைக்குத்தான் எப்படிப் புரியவைக்கிறதுன்னு தெரியலங்க. அம்மாவை ஆஸ்பித்திரிக்குக் கூப்பிட்டுப் போயிருக்காங்க, மருந்து கொடுத்திட்டிருங்ககாங்கனுதான் சொல்லிட்டிருக்கேன்,’ என்றார் இளங்கோவின் அப்பா.

‘அண்ணா, இன்னிக்கு ட்யூசன் இருக்கா,’ என்றாள் அவன் தங்கை, மழலை தீராக் குரலில்.
‘இல்லம்மா, மழையா இருக்கு. அடுத்த வாரம் வைச்சுக்கலாம். நீயும் வா, சரியா.’

இளங்கோ கையிலிருந்த சீப்பால் கீழே கிடந்த நாவல் பழக் கொட்டைகளை நோண்டிக்கொண்டிருந்தான். ‘சும்மா இருக்க மாட்டியா,’ என்று அவன் தாத்தா அதட்டினார்.
‘டேய் இளங்கோ, பெரிம்மாட்டப் போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா’ என்று அவன் அப்பா கூறியதும்,
‘இல்லை பரவால்ல, வேண்டாங்க,’ என்று எப்போதும் போல் சம்பிரதாயமாக மறுத்தேன்.

சற்று தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவர், என்னை அங்கு தேநீர் குடிக்கச் சொல்வது சரியல்ல என்று சைகை காண்பிப்பது தெரிந்தது. மறுத்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

‘ஆஸ்பித்திரில இருந்து வந்தவுடனேயே எடுத்துட்டோம்ங்க. உடம்பு ஒரே கொதியா இருந்திச்சு. நல்ல வேளையா நேத்து அந்த மரம் நாங்க புதைச்சுட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் கீழே விழுந்துச்சு. இல்லைனா வண்டிய ஊருக்குள்ளதான் விட்டு எடுத்துட்டுப் போயிருக்கணும். இதுவரைக்கு யாரையும் நாங்க ஊருக்குள்ள கொண்டு போனதில்லை. பெரிய பிரச்சனையாப் போயிருக்கும்.’

—-

வேரோடு பெயர்ந்து சாய்ந்து கிடந்த மரத்தின் முன்னால் நிற்கும்போது, நெருங்கிய உறவுக்காரர் வீழ்ந்துகிடக்கும் சோகம் அப்பிக்கொண்டது. இளங்கோவின் வீட்டிலிருந்த போது எழுந்த அதே உணர்வு. காரியின் இன்மையில் எழும் அதே வெறுமை.

மரத்தின் அருகில் குடியிருக்கும் பார்வதி, ‘மரம் விழுந்த சத்தமே கேட்கல. அவ்வளவு மெதுவா சாய்ஞ்சுது,’ என்றார்.

பார்வதியின் வீட்டு மாடுகள் எல்லாம் அம்மரத்தடியில்தான் கொட்டகை அமைத்துக் கட்டிவைத்திருப்பார்கள். கொட்டகை மரத்துக்கு வடமேற்காக உள்ளது. அவர்களது வீடும் மரத்துக்கு வடக்கே மிக அருகில் உள்ளது. மரத்தின் தென்புறம் உயரமான கைபேசி கோபுரம் ஒன்று உள்ளது.

மரம் கிழக்கு நோக்கிச் சாலையின் மீது சாய்ந்திருந்தது. சாலையைத் தாண்டியுள்ள வீட்டின் சுற்றுச்சுவரைக்கூடத் தொடாமல், யாருக்கும் பாதிப்பில்லாமல் விழுந்துகிடந்தது. சில மின்கம்பிகள் மட்டுமே அறுந்துபோயிருந்தன. சாலையை மறித்த கிளைகளை விரைவிலேயே வெட்டி அகற்றிவிட்டனர்.

மீதி மரம் மணியகாரரால் ஏலம் விடப்படக் காத்துக்கிடக்கிறது. பல ஆயிரங்கள் பெறும்.

அந்த பிரம்மாண்ட மரத்தின் இன்னும் வாடிப்போகாத இலைகளில் பசுமை கசிந்துகொண்டிருந்தது. மழை மீண்டும் தூறத்தொடங்கியது. சிறது நேரம் மௌனமாக நின்றுவிட்டு நகர்ந்தேன்.


மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018