காந்தியின் ஆதாரக் கல்விமுறை

ஜூன் 27, 2021

[நமது நம்பிக்கை (ஜூன் 2021) இதழில் வெளிவந்த கட்டுரை]

(1)

காந்தி முன்வைத்த கல்விமுறை அரசியல், பொருளாதார தளங்களில் அவரது பிறரது பங்களிப்புகளுக்கு இணையான ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருபதாம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்ட நவீன மாற்றுக் கல்விமுறைகளோடு ஒத்தும் முரண்பட்டும் இருப்பது காந்தியக் கல்விமுறை. கல்வி நோக்கில் எந்தவொரு நவீன முறைக்கும் இணையானது. காந்தியக் கல்விமுறை சுதந்திர இந்தியாவில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகம்.

இன்றைய மையநீரோட்டக் கல்விமுறை மதிப்பெண்களையும் மாணவர்களின் எதிர்காலப் பொருளாதார வெற்றியையுமே முதன்மையாகக் கருதுகின்றது. நிலவும் அரசியல்/அதிகார அமைப்புகளைப் பேணுதலும் வெளிப்படையாகப் புலப்படாத அதன் அடிநாதமாக உள்ளது. அதற்கு மாற்றாக உலகெங்கிலும் கல்வியில் பல சோதனை முயற்சிகள் நடைபெறத்தான் செய்கின்றன. இந்தியாவில் நிகழும் பல சோதனை முயற்சிகள் காந்தியக் கல்விமுறையின் சாரத்தை உள்வாங்கியே செயல்பட்டுள்ளன. ஆனால் இச்சோதனைகள் தனிநபர்களின் முன்னெடுப்பில் நிகழ்ந்துள்ள மிகச்சிறிய முயற்சிகள். பெரும்பாலான கல்வியாளர்களும் மாணவர்களும் காந்தியக் கல்வியின் அடிப்படைகள் குறித்த அறிமுகம்கூட இல்லாமலே இருக்கின்றனர். மாற்றுக்கல்வி முயற்சிகளுக்காகட்டும் மையநீரோட்டக் கல்விக்காகட்டும் காந்தியக் கல்விமுறையிலிருந்து பல கூறுகளை உள்வாங்கிக்கொள்வது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதோடு மட்டுமன்றி இன்று நம்மை எதிர்நோக்கும் பல சமூக-பொருளாதார-சூழலியல் சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும் உதவி செய்யும்.

(2)

காந்தி தென்னாப்பிரிக்காவில் தனது பிள்ளைகளுக்குத் தானே கற்றுத்தரத் தொடங்கியதிலிருந்தே கல்வி குறித்த வலுவான கருத்துகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார். பிறகு ஃபினிக்ஸ் பண்ணையும் தல்ஸ்தோய் பண்ணையும் நிறுவிப் பல குழந்தைகளுக்குக் கற்றுத்தந்த போது பல சோதனை முயற்சிகள் செய்தார். இவற்றிலெல்லாம் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தார். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டும் இருந்தார். இந்தியா வந்தபிறகும் அவரது கல்விச் சிந்தனைகளில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

திடமான தனிச்சரடுகளாக இருந்த காந்தியின் பல்வேறு சிந்தனைப் போக்குகளும், 1937ல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இந்திய மாகாணங்களில் காங்கிரஸ் அரசுகள் அமைந்தபோது, ஒன்றிணைந்து ஒரு முழுமையான வடிவம் பெறத் தொடங்கின. அப்போது ’ஆதாரக்கல்வி’ என்றும், பின்னர் ‘நயி தாலீம்’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்ட காந்தியக் கல்விமுறை மிகப்பெரும் சாத்தியங்கள் நிறைந்தவொன்றாக, ‘மௌனமான புரட்சிக்கு வழிகோலும் ஈட்டிமுனையாக’ உருவெடுத்தது. காந்திய வழியில் இயங்கும் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல ஆற்றல்மிக்கதாக அமைந்தது. உழைப்புக்கும் அமைதிக்கும் அன்புக்கும் அறத்துக்கும் அறிவுக்கும் சமமான அழுத்தம் கொடுத்தியங்கும் ஒரு புதிய உலகுக்கு இளம் உள்ளங்களை வழிநடத்திச்செல்லக்கூடிய வாய்ப்பினைக் கொண்டதாக இருந்தது. வெறும் கல்விமுறையாக மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சமூகத்துக்கமான ஒரு வாழ்க்கைமுறையாகத் தோன்றியது.

1937 அக்டோபரில் வர்தாவில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் அறிமுக உரை ஆற்றிய காந்தி, அவரது எண்ணப்போக்கையும், புதிய கல்விமுறைக்கான தேவையையும் முன்வைத்தார். அதே ஆண்டில் அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் வாயிலாக ஒரு புதியக் கல்விக் கொள்கை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ், அரியநாயகம், ஆஷாதேவி அரியநாயகம், வினோபா பாவே, ஆச்சார்ய கிருப்பளானி, காகா காலேல்கர் என்று பலரும் காந்தியின் புதிய பார்வையை ஆதரித்தனர்; மேலும் மெருகேற்றினர். ஜாக்கீர் ஹூசைன் தலைமையிலான ஒரு குழு, மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் விரிவான அறிக்கைகளும், பாடத்திட்டங்களும் அடுத்த சில மாதங்களில் வரையப்பட்டன. காங்கிரஸ் கட்சி இதையே தேசியக் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது.

காந்தியக் கல்விமுறை உடனடியாகப் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் (முக்கியமாகக் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டதால்), முதிர்ச்சி அடையும் முன்பே கைவிடப்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியக் கல்விமுறைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணித்தது. ஆனால், அடிப்படையில் இன்றைக்கும் என்றைக்குமான ஒரு முறையாகதான் நயி தாலீம் தென்படுகிறது.

காந்திய ஆதாரக் கல்விக்கொள்கையின் சில முக்கியக் கூறுகளைச் சற்றே விரிவாகக் காணலாம்:

1. ஏட்டுக்கல்வியும் எழுத்தறிவும் தம்மளவில் கல்வியின் முடிவாகிவிட முடியாது. கல்வியின் ஓர் அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.

“எழுத்தறிவுக்கு நான் எதிரானவன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இல்லவே இல்லை! மாறாக, அது எப்படிப் புகட்டப்பட வேண்டும் என்ற வழியைத்தான் காண்பிக்க விரும்புகிறேன்,” என்றும்

“நம் குழந்தைகளை நம் பண்பாடு மற்றும் நம் நாட்டின் அசலான மேதைமை ஆகியவற்றின் உண்மையான பிரதிநிதிகளாய் ஆக்கவேண்டும்,” என்றும் காந்தி கூறினார். (வர்தா உரை, 22-10-37)

2. தொழில் சார்ந்த கல்வி தரவேண்டும். தொழிற்கல்வி என்று தனியாக இல்லாமல், கைத்தொழில் மூலமாகப் பிற பாடங்களை அறிவியற்பூர்வமாகக் கற்பிக்க வேண்டும்.

“இதுவரை நான் சொல்லிவந்ததெல்லாம் அறிவுப் பயிற்சியோடு சேர்த்து, தொழிற்பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற அளவில்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால், இப்போது நான் சொல்வது – உடலுழைப்பு சார்ந்த தொழிலே அறிவாற்றலைத் தூண்டிவிடும் முக்கிய வழிமுறையாக வேண்டும்.”

“ஏதாவது கைத்தொழில் மூலமாகத்தான் கல்வி முழுவதுமே வழங்கப்படவேண்டும்”

அவ்வாறு செய்யும்போது, “தொழிற்கல்வி என்பது பல்வேறு அறிவுத்தளங்களிலும் குழந்தைகளின் மனங்களை விரிவடையச் செய்யக்கூடிய கருவியாகிறது.”

காந்தியின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மிகமுக்கியமான மாற்றம் இதுதான். இன்று வரையில் பலரும், வகுப்பறையில் கல்வியும் வெளியில் ஏதேனும் தொழிற்கல்வியும் அளித்தால், அதுவே காந்தியக் கல்வி என்று நம்பி வருகிறார்கள். இது காந்தியின் ஆரம்ப காலச் சிந்தனையேயன்றி, அவரது ஆதாரக் கல்விக் கொள்கைக்கு சற்றே முரணானது. நூல் நூற்றல், தோட்டவேலை, சுகாதாரப்பணிகள் மூலமாக மொழியறிவும், கணிதமும், அறிவியலும், புவியியலும், வரலாறும் கற்பிக்க முடியும் என்பது மிகப்பெரும் மாற்றங்களை விளைவிக்கக்கூடிய ஒரு புத்தம்புதிய கல்விச்சிந்தனை.

செயற்கல்வியை மாண்டிஸோரி போன்ற பல கல்வியாளர்களும் வலியுறுத்திவந்தனர். உடலுக்கும், புலன்களுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு ஆழமானது என்பது அவர்களால் நிறுவப்பட்டது. ஆனால், கல்விக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயற்கையான கருவிகளின் மூலமாகவும் பிற முறைகளின் மூலமாகவும் செயற்கல்வி அளிப்பதைவிட, காந்தி கூறுவது போல், ஓர் இயல்பான கைத்தொழில் மூலமாக அளிக்கப்படும் கல்வி பன்மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். மாணவர்களுக்குத் தங்கள் உற்பத்தியில் விளையும் பயன்களைக் காணும்போது பெரும் தன்னிறைவு கிட்டும். உடலுழைப்பின் போது தூண்டப்படும் ஆர்வத்தினைப் பயன்படுத்தி அறிவியற்பூர்வமாகக் கற்பிக்கப்படும் செய்திகள் மனதில் விரைவாகவும் ஆழமாகவும் பதியும்.

3. முழுமையான கல்வி கிராமங்களிலேயே வழங்கப்படவேண்டும். பள்ளிக்கல்விக்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்வது பயனற்றது. அது கிராம மக்களின் தொழிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களை அந்நியப்படுத்திவிடும்.

ஆதாரக் கல்வி பற்றிப் பேசும் போது வினோபா, “சேவாகிராமில் கற்பிப்பதுபோலவே பௌனாரில் (சில மைல் தொலைவில்தான் இருந்தாலும்) கற்பிக்கமுடியாது. ஏனெனில், பௌனாரில் நதி இருக்கிறது; சேவாகிராமில் இல்லை,” என்றார்.

4. தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதை காந்தி தொடர்ந்து வலியுறுத்தினார். ஆச்சார்ய கிருபளானி ஒருபடி மேலே சென்று நுட்பமான ஒன்றைப் பதிவுசெய்தார். ஆதாரக் கல்வியில், “உண்மையான பயிற்றுமொழி வேலைதான்; மொழியே அல்ல; பேசுமொழி என்பது தகவல் பரிமாற உதவும் ஊடகமேயன்றி பயற்றுமொழியல்ல,” என்றார்.

5. ஆதாரக் கல்வியின் புரட்சிகரமான இன்னொரு சிந்தனை பள்ளிகளைத் தற்சார்படையச் செய்வது. 1937ல் மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி வந்தபிறகும், இலவசக் கல்வி வழங்க வேண்டுமாயின், குடியின் வாயிலாக வரும் வருமானத்தில் தான் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை, காந்தியை மிகவும் ஆற்றாமை கொள்ளச்செய்தது. இன்றும் அந்நிலை நீடிக்கிறது. தொழில் சார்ந்த கல்வி வழங்கும்போது, அந்தத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலமாகவே தற்சார்பு அடைந்துவிட முடியும் சாத்தியத்தை உணர்ந்து வலியுறுத்தினார்.

“முழுமையாக நோக்கினால், இத்தகைய கல்வி தற்சார்பு உடையதாக இருக்க முடியும், இருக்க வேண்டும். தற்சார்புதான் அதன் நடைமுறைச் சாத்தியத்துக்கு உரைகல்.”

அப்படியொரு தற்சார்பு நிலையை அடைவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதில்தான் அரசாங்கத்தின் பங்கிருப்பதைக் கண்டார். பள்ளிகளில் உற்பத்திசெய்யப்படும் பொருள்களுக்கான சந்தையை உருவாக்கித்தரும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக நம்பினார்.

6. பள்ளி என்பது தனித்தீவாக இயங்காமல், மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம வாழ்வோடு இயைந்து சேவை செய்யவேண்டும். அப்போது மாணவர்களுடைய கல்வி என்பது சமூகம் முழுமைக்குமான கல்வியாக அமைந்துவிடும். காந்தியைப் பொருத்தவரை, ‘சமூகத்தின் ஆரோக்கியத்தை மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது; அதேபோல, சமூகத்தின் கல்வி – சுயராஜ்ய உணர்வை ஊட்டி வளர்த்துப்பேணக்கூடிய கல்வி – வெறும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது.’

“நமது செயல்பாடு 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நயி தாலீம் முறையில் கல்வி அளிப்பதோடு சுருங்கிவிடுவதில்லை; அது பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை முழுவதையும் தீண்டுவதாக இருக்கவேண்டும். [….]
கிராமத்தினர்க்கு நாம் ஆசிரியர்களாக வேண்டும்; உண்மையில் அதன் பொருள், கிராமத்தார்க்கு நாம் சேவகர்களாக வேண்டும் என்பதே. அதற்கான பரிசு அகத்திலிருந்து வரவேண்டும்; புறத்தேயிருந்தல்ல. உண்மையை நோக்கிய நமது தேடலில் நமக்கு மனிதத்துணை கிடைக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருட்டேயல்ல. நயி தாலீம் புறவயமான பொருளாதார உதவியைச் சார்ந்திருப்பதுமல்ல. விமர்சகர்கள் என்ன சொன்னாலும், அது அதன் வழியில் தொடரும். உண்மையான கல்வி தற்சார்புடையதாக இருந்தாகவேண்டும். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நாம் சொல்வதைச் செய்துகாட்டி, மனதின் உண்மையான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஒரே முறை இதுவென நிரூபித்தோமேயானால், இது ஒரு புதுமையான சிந்தனையாக ஏற்கப்படும். இன்று நயி தாலீமை நிந்தனை செய்பவர்கள் எல்லாரும் முடிவில் அதனைப் போற்றுபவர்களாக மாறுவார்கள்; நயி தாலீம் பரவலான ஏற்பினைக் கண்டடையும்.” (சேவாகிராமில் காந்தியின் உரை, 11-1-45)

வர்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆதாரக் கல்வி குறித்த கருத்துகளைத் தொகுத்துக்கொள்ள உதவுகின்றன:

  • இலவசமான, கட்டாயக்கல்வி தேசம் முழுவதும் ஏழாண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்.
  • இந்த கல்விக்காலம் முழுவதும் உடலுழைப்பு சார்ந்த ஓர் உபயோகமான தொழிலை மையமாக்கியே கல்விமுறை அமையவேண்டும். குழந்தையின் வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் மூலமாகவே, முடிந்தவரை மற்ற திறன்களுக்கான பயிற்சிகளும் ஒருங்கிணைப்படவேண்டும்.
  • இந்தக் கல்விமுறை மூலமாகப் படிப்படியாக ஆசிரியர்களின் ஊதியம் தற்சார்பான முறையில் வழங்கப்படும்.

(3)

கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், செயல்களின் மூலமாக பல்வேறு பாடங்களையும் பயில்வது என்பது காந்தியக் கல்விமுறைக்கும் பிற நவீன ஐரோப்பிய-அமெரிக்க கல்விமுறைகளுக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒற்றுமை. இவற்றிடையே இருக்கக்கூடிய மிக முக்கியமான வேறுபாடு கல்வியின் நோக்கம் குறித்ததாக இருக்கிறது. பெரும்பாலான நவீன முறைகள் முழுக்க முழுக்கக் குழந்தையை மையமாக வைத்துச் செயல்படுகின்றன. குழந்தைகளை ஒற்றைப்படையான பண்டங்களாகப் பார்க்கும் மையநீரோட்டக் கல்விமுறைக்கு மாற்றாக குழந்தையை மையப்படுத்தும் சிந்தனை முன்வைக்கப்படுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனாலும் இத்தகைய பார்வையில் உள்ள குறைபாடு குழந்தைக்கும் சமூகத்துக்குமான உறவின் மீது கவனம் இல்லாமற் போவதுதான். காந்தியக் கல்விமுறை அக்குறையைக் களைய முனைகிறது. குழந்தைகளின் கல்வி என்பதை தனிப்பட்ட செயல்பாடாகக் காணாமல் ஒட்டுமொத்த சமூகச் செயல்பாடாகக் காண்கிறது. அதிலும் குறிப்பாக, உள்ளூர்ச் சமூகங்களையே முதன்மைப்படுத்துகிறது. அந்தந்த இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்றமாதிரி, பயில்தல் முறைகள் மாறுபடும்; கற்பித்தல் முறைகளும் மாறுபடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கும் மண்ணுக்கும் மனிதருக்குமான உறவை அறுந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது. கல்வியென்பது மாணவர்களை மண்ணிலிருந்து அந்நியப்படுத்தி அப்புறப்படுத்தும் ஆயுதமாக மாறாமல், அவரவர் சமூகங்களுக்குப் பயன்படும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இந்தியச் சாதியமைப்பும் அது சார்ந்த சிக்கல்களும் உடலுழைப்பையும் தொழில் சார்ந்த கல்வியையும் மையப்படுத்தும் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்களாக இருக்கும். கடந்த காலத்திலும் காந்தியக் கல்விமுறை பல காரணங்களால் நம் நாட்டில் ஊன்றமுடியாமல் போனது. அதை அந்த முறையின் தோல்வியாகவோ காந்தியக் கருத்தியலின் தோல்வியாகவோ நாம் காணவேண்டியதில்லை. அக்கல்விமுறையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிச்சென்றுவிட்ட பின்னர்தான் அதன் தேவையை உணரத்தொடங்குகிறோம். நவீனச் சூழலியற் பார்வை நுகர்வினைக் குறைத்துக்கொண்ட தற்சார்பான சிறுசமூகங்களையே நாம் எதிர்கொண்டிருக்கும் மாபெரும் பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வாகக் காண்கிறது. நுகர்வையும் அதிகாரம் மையப்படுதலையும் பெருக்கும் கருவியாகவே இன்றைய கல்விமுறை இருக்கிறது. அதனால்தான் ‘எதிர்காலத்துக்கான வெள்ளிகள்’ என்று வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் புறக்கணிப்புப் போராட்டத்தை சுவீடன் நாட்டுப் பள்ளிமாணவி கிரேட்டா துன்பர்க் முன்னெடுப்பில் உலகம் முழுதும் குழந்தைகள் நடத்துகிறார்கள். சுற்றுச்சூழல் மீது மிகக்குறைவான எதிர்மறைப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தற்சார்பு சமூகங்களை அமைப்பதற்கு காந்தியக் கருத்தியல் இன்றியமையாத ஒன்று. அத்தகையதொரு சமூகத்தை உருவாக்க முனைந்தால் அதில் காந்தியக் கல்விமுறைக்குத் தவிர்க்கமுடியாத பங்கு இருக்கும்.

உதவிய நூல்கள்:

  1. Collected Works of Mahatma Gandhi, Publications Division, 1999
  2. The Story of Nai Talim, Marjorie Sykes, Nai Talim Samiti, 1988
  3. Towards New Education, M.K.Gandhi, Bharatan Kumarappa, Navjivan Publishing House, 1953
  4. ‘காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்’ என்று தலைப்பில் காந்தி இன்று ‘Gandhitoday.in’ இணைய இதழில் வந்த எனது கட்டுரை.

பாம்பும் பட்டாம்பூச்சியும்

ஜனவரி 17, 2020

(29-Nov-2019)

திருவண்ணாமலை மருதம் பள்ளி சென்றிருந்தபோது, அப்பள்ளியை நடத்தும் முக்கிய நபர்களில் ஒருவரான அருணோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருக்குக் கைபேசியில் ஓர் அழைப்பு வந்தது – தொடக்கப்பள்ளி வகுப்பறையின் அருகில் ஒரு லூனா மாத் (Luna moth) இருப்பதாக.

[Butterfly – வண்ணத்துப்பூச்சி, moth – பட்டாம்பூச்சி என்றோ அந்துப்பூச்சி என்றோ சில இயற்கை இதழ்களில் மொழிபெயர்க்கிறார்கள்; அந்திப்பூச்சி என்றும் சொல்கிறார்கள். ஆனால் பகலில் பறக்கும் அந்திப்பூச்சிகளையும் பார்த்திருப்பதாக அருண் கூறினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் தம்பலப்பூச்சி, தனுப்பீசம், பதமம், பொட்டு, விட்டிகை, விட்டில், ஈயலி, வெள்ளைவண்ணாத்தி, தட்டாரப்பூச்சி ஆகிய சொற்களும் ஏதேனும் mothஐக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன].

இதுவரை அங்கு லூனா மாத் தென்பட்டதில்லை என்பதால் அருணுக்கு நம்பிக்கையில்லை. வேறு ஏதாவது பொதுவான அந்திப்பூச்சியாக இருக்கலாம் என்றார். வேறொரு மாணவனை அனுப்பி உறுதி செய்யச் சொன்னார். அவன் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. லூனா மாத் தானாம் என்று உடனிருந்தவர்களை அழைத்துக்கொண்டு ஓடினார். ஒன்றும் புரியாமல் நானும் சென்றேன். உண்மையிலேயே காண்பரிய காட்சிதான். ஒரு கொய்யா மரத்தின் இலைகளோடு இலையாய், அசையாது தொங்கிக்கொண்டிருந்த லூனா மாத் அத்தனை அழகு. அடுத்த சில நிமிடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என்று அப்பள்ளியைச் சேர்ந்த அனைவரும் வந்து வந்து அதைக் கண்டு களிப்புடன் சென்றனர்.

அடுத்த நாள் மதியம் இன்னொரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். மருதம் பள்ளி வளாகத்தில் சில ஓலைக் குடில்கள் உண்டு. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அவ்வழியே சென்ற அருண் அடுத்த குடிலில் ஒரு பாம்பு வந்திருப்பதாகச் சொன்னார். சென்று பார்த்தோம். அதனருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அது ரஸ்ஸல்ஸ் குக்ரி என்ற வகைப் பாம்பின் குட்டி என்றான். (Russell’s kukri; Common/Banded kukri என்ற பாம்பினத்தை எண்ணெய்ப் பனையன் என்கிறது விக்கி). சன்னமாக இருந்தது. பெரிதானால் மேலும் சற்று தடிமனாகும் என்று விரல்களால் அளவு காட்டினான்.

“கடிக்காதா?” என்றேன்.

“அவ்வளவு சீக்கிரம் கடிக்காது. மிகவும் அருகில் கைவைத்தால் சீறும். தொட்டால்தான் கடிக்கும். மிகவும் சின்னப் பல்தான். பெரிதாகக் காயம் ஆகாது. விஷமும் கிடையாது,” என்றான்.

“எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

“அது நகர்ந்து செடிகளுக்குள் மறையும் வரை.”

சிறிது நேரம் நின்று, சில படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். அந்தப் பச்சைவெளியில், ஓலைக்குடிலின் வாயிலில் ரஸ்ஸல்ஸ் குக்ரியோடு அவன் தனியே அமர்ந்து அமைதியாக அதன் அசைவுகளை நோக்கியவாறு இருந்தான்.

எந்தப் பொதுத் தேர்வில் ரஸ்ஸல்ஸ் குக்ரி பற்றியும் லூனா மாத் பற்றியும் இவர்கள் பெற்றுள்ள கள அறிவைச் சோதிக்கப்போகிறார்கள்?


வானவில் பள்ளி

நவம்பர் 12, 2019

(4-அக்டோபர்-2019)

ஆண்டுதோறும், மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் சில நண்பர்கள் கூடிவருகிறார்கள். அதில் எப்படியோ எங்கள்மீதுள்ள பிரியத்தால் எங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். சென்ற வாரம் நாகப்பட்டினம் சிக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ‘வானவில்’ பள்ளியில் சந்தித்தோம். மூன்று நாட்கள் பள்ளியிலேயே தங்கியிருந்தேன்.

வானவில் பள்ளியைத் தொடங்கியவர் பிரேமா ரேவதி. இவர், சுனாமியின் பேரழிவுக்குப் பின் அங்கு மீட்புப்பணிகளுக்காகச் சென்றபோது அங்கு மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பிச்சையெடுக்கும் நாடோடிச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளோடு ஒரு குடிசையில் பணியாற்றத் தொடங்கினார். அது இன்று விரிவடைந்து ஓர் அழகான ஆரம்பப் பள்ளியாக வளர்ந்துள்ளது. அங்கேயே குழந்தைகள் தங்குவதற்கு விடுதியும் உணவும் அளிக்கப்படுகிறது. உயர் வகுப்புகளுக்குச் செல்லும் குழந்தைக்களுக்கும் இவர்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள். தரமான கல்வியை, குழந்தைகளை மையப்படுத்தும் நவீன முறைகளில் வழங்கிவருகிறார்கள்.

பிரேமா ரேவதி-நடராஜன் இணையர் இப்பள்ளியைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்குக் கல்வியின் மீது நாட்டம் ஏற்படுத்தும் வகையில் பயிற்றுவிக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பெற்றோர்களோடு தொடர்ந்து உரையாடுகிறார்கள். அவர்கள் ஒரு சமூகமாக இணைந்து வலுப்பெறவும் உதவுகிறார்கள். குழந்தைகள் மூலம் வரக்கூடிய வருமானத்தைத் துறந்து அவர்களைப் பள்ளிக்குச் செல்லப் பெற்றோர்களை அனுமதிக்கச் செய்வது பெரிய சவால்.

இப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் பேசுவதைக் கேட்டோம். அவர்கள் அனைவருமே பள்ளிகளில் மழைக்குக்கூட ஒதுங்கியதில்லையென்றும், பள்ளிகளின் நிழலைக்கூட மிதித்ததில்லை என்றுமே கூறினர். ஆனால். இன்றைக்கு அவர்களது குழந்தைகள் பலர் பட்டதாரிகளாகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளனர்.

பிரேமா ரேவதி திரைப்படங்களில் துணை இயக்குனராக இருந்தவர்; எழுத்தாளர். அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் வந்த அம்பேத்கரின் சாதியை அழித்தொழித்தல், அம்பேத்கர் அருகிருந்து ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நடராஜன் ஒரு சிற்பி; ஓவியர். ஆரம்பத்தில் சென்னையில் இருந்து அடிக்கடி பயணித்தவாறு செயல்பட்டுவந்தவர்கள், பின்னர் நாகப்பட்டினத்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். இருவருக்கும் அம்பேத்கர் பெரும் உந்துதலாக இருக்கிறார். நாங்கள் காந்தி குறித்துப் பலவாறு முரண்பட்டு விவாதித்துள்ளோம். ஆனால், ஓர் அரிய அர்ப்பணிப்புடனும் மனிதநேயத்துடனும் செய்யப்படும் களப்பணியைக் கண்டு வியப்பதற்கு எந்த முரண்களும் தடையாக வருவதில்லை.

வெள்ளம், புயல் என்று பல பேரிடர்களின் போது பலரும் தம்மால் இயன்றதைச் செய்கிறார்கள். ஆனால், இப்படியொரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தி அங்கேயே தங்கி, நீண்டகால நோக்கில் பணிசெய்பவர்கள் அரிதிலும் அரிதானவர்கள். இம்முறை கஜா புயலின்போதும் ஒருங்கிணைப்புப் பணிகளில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது.

இப்படியொரு பள்ளியை நடத்த, அரசாங்கத்தோடு, பெற்றோர்களோடு, உள்ளூர் மக்களோடு என்று பல்முனைப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். மிகுந்த பணத்தேவை இருக்கும். நினைத்துப்பார்க்க முடியாத பொறுமை தேவைப்படும்.

கடைசி நாளன்று பதினொன்றாவது படிக்கும் ஒரு சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவள் அங்கேதான் தங்கியிருக்கிறாளா என்று கேட்டேன். மேல் வகுப்புக்குச் சென்றுவிட்டதால், வேறு விடுதியில் தங்கி அரசுப்பள்ளியில் படிப்தாகவும், விடுமுறை விட்டால் இங்கு வந்துவிடுவதாகவும் சொன்னாள். ‘இது எனக்குத் தாய்வீடு மாதிரி’ என்றாள். இதுமாதிரி ஒரு குழந்தையேனும் நம்மைப்பற்றி நினைத்துவிட்டால், வாழ்வில் வேறென்ன வேண்டும்.


சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven)

நவம்பர் 12, 2019

(19-அக்டோபர்-2019)

நேற்று காந்திகிராமுக்குப் பேருந்தில் செல்லும்போது பின் இருக்கையில் இருந்த ஒரு பெண் கைபேசியில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைத் தாண்டி அவரது சொற்கள் செவிப்பறையில் அறைந்தன. மறுமுனையில் அவருடைய மகனாக இருக்கவேண்டும். பள்ளிசெல்லும் சிறுவன்.

‘ஏன் ஷூ நனைஞ்சுது?

சரி, இன்னிக்கு வேற ஷூ இருக்கில்ல, அதைப் போட்டுக்க. இல்லைனா, செருப்புப் போட்டுட்டு ஸ்கூலுக்குப் போ.

லேஸ் வைச்ச ஷூவேதான் போடணும்னு ஏதாவது கட்டாயமா?

ஃபைன் கட்டச்சொன்னா கட்டிருடா. எத்தன ரூபா ஃபைன்?

சரி, பத்து ரூபா எடுத்துட்டுப் போய்க்கோ. ஃபைன் கேட்டாக் கட்டிரு.

திட்டினாங்கன்னா திட்டு வாங்கிக்க.

அடிச்சாங்கன்னா அடி வாங்கிக்க.

இங்க இருந்துட்டு என்னை என்ன செய்யச் சொல்ற?

அழைப்பைத் துண்டித்து விட்டார். சற்று நேரத்தில் அவரே மறுபடி அழைத்துப் பேசினார். இம்முறை மூத்த மகனிடம் பேசினார் போலும்.

‘டேய், அவன் என்னடா ஷூ நனைஞ்சுபோச்சுன்னு அழுகறான்?

ஒன்னு செய். நீ உன்னோடு ஷூவை அவனுக்குக் குடுத்துடு. நீ செருப்புப் போட்டுட்டுப் போய்க்க.

என்ன லீவு போட்டுக்கிறேங்கிறானா. அவங்கிட்டக் குடு.

ஷூ இல்லைன்னு யாராவது லீவு போடுவாங்களாடா?

இப்ப நீ கிளம்பிப் போகப்போறியா இல்லையா? தோலை உறிச்சுருவேன்.

லீவப் பத்தி எங்கிட்டப் பேசாத. வந்தேன்னாப் பாரு…பிச்சுப் போடுவேன்.


அதற்குள் அவர்கள் நிறுத்தம் வந்துவிட்டது. பேசிக்கொண்டே இறங்கிச் சென்றுவிட்டார்.

வாழிய நம் பள்ளிகள். வாழ்க எம்மக்கள், வாழிய மணித்திரு நாடு.


கல்வி

பிப்ரவரி 10, 2019

நேற்று மழை வராமலே ஏராளமான ஈசல்கள் வந்தன. கொஞ்ச நேரத்தில் மகிழ்மலர்தான் கவனித்துச் சொன்னாள், ‘அம்மா, அங்க பாரு, 7 பல்லிக’. 7 விரைவில் 10 ஆனது. மின்விளக்கைச் சுற்றிப் பல்லிகளின் உக்கிரமான ஈசல் வேட்டைக்குப்பின் ஈசல்கள் கிட்டத்தட்ட காணாமல் போயின.

இன்று காலை, கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கக் காத்திருந்த அண்டங்காக்கைகளை விரட்டப் போனவள், சற்று நேரத்தில் சன்னலோரம் நின்று கூவுகிறாள், ‘அப்பா, ஒரு குட்டிப் பல்லி கோழிகிட்ட வந்துச்சா, அது புடிச்சு குத்து குத்துனு குத்திக் கொன்னே போடுச்சு. அப்புறம் எல்லாக் குஞ்சுகளும் வந்து ஓடிப் புடிச்சு விளையாண்டுட்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுதுக.’

முத்திநெறி அறியாத என்ற திருவாசகப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாள். ஓரளவு எளிமையான பாடல்தான். உரை எதுவுமின்றி நானும் அவளுமே பொருள் கூட்டி அறிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தோம். (இடையிடையே புணர்முலையார் போகம், கணியிழையார் கலவி எல்லாம் வேறு.)

‘பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு’ என்ற வரிக்கு ‘இளம்பெண்களுடைய சுட்டெரிக்கும் கடைக்கண் பார்வையின் முன்னால் பஞ்சுபோல எரிந்து துன்பப்பட்டு’ என்று நாங்களாக ஒரு பொருள் கற்பித்தோம்.

உடனே அவள், “நெஞ்சுக்கு நீதியும் பாட்டுல, ‘ பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ’னு ஒரு வரி வருமில்லப்பா?” என்று அவளுக்குத் தோன்றிய வகையில் இணைத்துப்பார்த்தாள். [அதன் பொருளை நானும் ஆராய்ந்ததில்லை. பெருந்தீ முன் பஞ்சுபோல அவள் பார்வைக்குமுன் துன்பங்கள் இல்லாமற் போகும் என்று பொருள் கொள்ளலாம். தீ முன் பஞ்சு படும் துன்பங்கள் போல, அவள் பார்வைக்கு முன் பெருந்தீயும் பொசுங்கிப்போகும் என்றும் பொருள்படுமோ? இரண்டையும் பின்னர் விவாதித்தோம்.]

“அட, ஆமாண்டா கண்ணு. பாரதியார் எங்க இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுத்திருக்கார் பாரு.”

[பின்னர் இணையத்தில் தேடியபோது திருவாசக வரிக்கு வேறு பொருள் கொடுத்திருப்பதை அறிந்தோம். பஞ்சு ஆய – பஞ்சு போன்ற, அடி – பாதங்கடையுடைய, மடவார் – பெண்டிரது, கடைக்கண்ணால் இடர்ப்பட்டு – கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு. சரி, இருந்துவிட்டுப் போகட்டும். ]

—-

அவள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது சரியான முடிவுதானா என்ற சஞ்சலம் ஏற்படும்போதெல்லாம், இப்படியாகப் போகிறது அவளது கல்வி. எங்களுடையதும்.

The child is father of the man – இதுவும் கவிஞர் வேறு அர்த்தத்தில் சொன்னதுதான். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொள்கிறேன்.


பயிலகம்

நவம்பர் 20, 2018

(முகநூலில் செப்டெம்பர் 9ம் தேதி எழுதிய பதிவு)

எங்கள் பயிலகத்திற்கு ஒரு புதிய இடம் கிடைத்துள்ளது. தற்போது ஜப்பானில் வசித்துவரும் அற்புதமான தம்பதியினரான கிருஷ்ணக்குமார்-காயத்ரி தங்கள் நிலத்திலுள்ள வீட்டையும் அறைகளையும் பயிலகம் நடத்த அளித்துள்ளனர். அவர்களது நிலம் எங்களுடையதைக் காட்டிலும் கிராமத்துக்கு அருகில் உள்ளது. இதுவரை அரச மரத்தடியில், விநாயகர் கோயிலருகில், பயலிகம் நடத்தி வந்தோம். அதற்கென ஒரு தனித்த எழில் இருக்கத்தான்செய்தது. ஆனால், சாதிப் பிரச்சனைகள், மழை, மற்றும் பிற சிக்கல்களும் இருந்தன.

இப்புதிய இடம் குழந்தைகள் மேலும் பல செயல்கள் செய்வதற்கு வழிவகுக்கக்கூடும். பிற நண்பர்கள் பிற வழிகளில் உதவியுள்ளனர். புதிய சவால்களும் உள்ளன…அவற்றையும் சந்தித்துத்தான் பார்ப்போம். ஆனால், இப்போது நாங்கள் தனித்துச் செயல்படவில்லை என்பதே பெரும் உற்சாகமாகத்தான் உள்ளது.


மகா கணபதிம்

மார்ச் 2, 2018

எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.

அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.

பாரதியின் ‘எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி’ பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.

வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.

எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.

எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.

மிக அதிக ஆரவாரத்துடன், ‘தன்னன்ன னாதினும்’ என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.

ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.

பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். “சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?” என்று கேட்டோம். ‘ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?’ என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, ‘நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்’ என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.

பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.

கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.

நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

 

27/Feb/2018


அனுபவக் கல்வி

நவம்பர் 7, 2017

நாராயணன் நாங்கள் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள தோப்பில் வேலை செய்பவர். சரியாகக் காது கேட்காது. கடும் உழைப்பாளி. காலை ஐந்தரை-ஆறு மணிக்கு வந்து தொழுவத்தைச் சுத்தம் செய்து பால் கறப்பதில் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு மேல் மாலை கறந்த பாலை பால்க்காரரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுவரை ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பார்.

எங்கள் கிராமத்தில் பலரும் பாம்புகளைப் பற்றிப் பல கதைகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் பார்க்கும் பாம்புகள் எப்போதும் கட்டுவிரியனாகவோ நாகமாகவோ தான் இருக்கின்றன. ஐந்து தலை நாகம் பற்றியெல்லாம் சிறுவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர்களுக்குப் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா, அல்லது எந்தப் பாம்பைப் பார்த்தாலும் விஷப்பாம்பு என்று அஞ்சுகிறார்களோ என்று எனக்குச் சில சமயங்களில் சந்தேகம் தோன்றுவதுண்டு.

‘நம்முடன் வாழும் பாம்புகள்’ என்று என்.பி.டி. பதிப்பித்துள்ள ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிரபல பாம்பு நிபுணர் விட்டேக்கரின் நூலின் மொழிபெயர்ப்பு. கருப்பு வெள்ளைப் படங்களுடன், பாம்புகளுக்கான தமிழ்ப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும், அவற்றைப் பற்றிய ஓரளவு விரிவான குறிப்புகளும் கொண்ட நூல்.

அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நாராயணனால் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கலாம் என்று தோன்றியதோ, அல்லது பாம்புப் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் இருக்கும் என்று தோன்றியதோ தெரியவில்லை- அவரிடம் அப்புத்தகத்தில் ஒரு படத்தைக் காண்பித்து இது என்ன பாம்பு என்று சைகையில் கேட்டேன். அவருக்குப் படிக்கத் தெரியாது. படத்தைப் பார்த்த உடன் கண்ணாடி விரியன் என்றார். அதற்கு முன்புள்ள படத்தில் கட்டுவிரியனையும், அதற்கும் முன்பு நாகத்தையும் சரியாகக் காண்பித்தார்.

‘எங்க அப்பா கண்ணாடி விரியன் கடிச்சுத்தான் செத்துப்போனார். அப்போ நான் நம்ம பாப்பா வயசுகூட இருந்திருக்க மாட்டேன். என் கடைசித் தம்பி கைக்குழந்தை,’ என்றார்.

‘அப்போ மழைக்கு வீடெல்லாம் ஒரே சொத சொதன்னு இருக்கும். தூங்கிட்டு இருக்கும் போது ஏதோ கடிச்சுது. ரொம்ப நேரம் எங்க அப்பா ஒன்னும் இல்லேன்னுட்டாரு. அப்புறம்தான் எங்க அம்மா கண்ணாடி விரியனப் பார்த்தாங்க. உடனே அடிச்சுட்டாங்க. பின்னாடியே முருங்க மரத்துகிட்ட இருந்து இன்னும் நாலு பாம்புக வந்தது. அந்தக் காலத்துல ஏது பஸ்ஸூ காரெல்லாம். அதுவும் நடு ராத்திரி வேற. வண்டிகட்டி அவர கொண்டு போறதுக்குள்ள இறந்துட்டாரு. மொழங்காலுக்கிட்ட கடிச்சிருந்தது. அம்மா அவருக்குத் தொடைல இறுக்கிக் கட்டுப் போட்டிருந்தாங்க. புதூர்ல ஒரு அம்மா, அந்த கட்டு எதுக்குன்னு அவுத்தாட்டாங்க. சீக்கிரமா விஷம் தலைக்கேறிடுச்சு.’

‘அதுக்கப்புறம் நாங்க யாரும் படிக்கலை. நான் பெரிசானப்புறம் என்னையும் ஒரு கட்டுவிரியன் கடிச்சிடுச்சி. ஆனா, அப்ப நான் வேலை செஞ்சிட்டிருந்த காட்டுக் கவுண்டர் கிட்ட கார் இருந்துச்சு. உடனே என்னை கேரளாவுல ஒரு கிருஸ்துவங்க ஆஸ்பித்திரி இருக்கு. அங்க கூட்டிட்டுப் போனாங்க. ஒரு கல்லு வைச்சு விஷத்தை உறிஞ்சி எடுத்துட்டாங்க.’

‘அப்புறம் எங்க அண்ணன் பொன்னுசாமி இல்ல…அவரு மாட்டுக்குச் சோளத்தட்ட அறுத்திட்டு இருக்கும் போது, சர்ருன்னு சுத்தி வந்து ஒரு கண்ணாடி விரியன் அவரு மொழங்கால்ல கடிச்சிருச்சு. ராத்திரி எட்டு மணிக்கு கே.பி.கே. பஸ்ஸூலதான் பொள்ளாச்சி கொண்டு போனோம். அப்பவே பத்தாயிரம் ரூபா செலவாச்சு.’

மேலும் சாரைப் பாம்பு பற்றி, நாகப் பாம்பு பற்றியெல்லாம் சொன்னார். அவர் சொன்ன தகவல்கள், உடல்கூறுகள் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தோடு ஒத்துப் போகிற மாதிரித்தான் இருந்தன.

உண்மையில், எத்தனை புத்தகங்களைப் புரட்டினாலும் என்னால் பாம்புகளைச் சரியாக அடையாளம் காணமுடியும் என்றோ, பாம்பு கடித்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றோ நம்பிக்கை இல்லை. குழவியோ தேனீக்களோ வீட்டுக்குள் கூடு கட்டிவிட்டால்கூட நாராயணனிடம்தான் ஓடுகிறோம். யார் யாருக்குக் கற்றுக்கொடுக்கிறோம்?

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊசலாடியபடியே அவர்களுக்கு நிகழும் அனுபவக் கல்வியை எந்தக் கல்விமுறையால் கொடுக்க முடியும்? அவர்களது அனுபவங்களில் இருந்து அவர்களை அந்நியப் படுத்தாமலேனும் இருக்கமுடியுமா?


ஒரு சிறுமியின் மரணம்

ஒக்ரோபர் 14, 2017

எங்கோ நடக்கும் மரணங்களைக் குறித்து ஆவேசமாகப் பொங்கும் மனம் விரைவில் வேறு செயல்களில் ஈடுபட்டுவிடுகிறது. அருகில் நிகழும் மரணம் விளைவிக்கும் குற்றவுணர்வு எத்தனை திசைதிருப்பல்களுக்குப் பின்னும் அகல மறுக்கிறது.

இவ்வாரம், பத்தாவது படிக்கும் மாணவியான நித்யா எங்கள் கிராமத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். பள்ளியில் ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதுதான் ஊரில் பேச்சு. பத்து நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் கைக்காயத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக்கூட கூறுகிறார்கள். சரியாகப் படிக்காததால், ஆசிரியர் பெற்றோரை அழைத்துவரச் சொல்லிக் கட்டாயப் படுத்தியிருக்கிறார். கூலி வேலை செய்யும் பெற்றோர் வேலைப் பளுவாலோ, அறியாமையாலோ அசட்டையாலோ பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கின்றனர். ஆசிரியர் தொடர்ந்து கண்டித்தும் எச்சரித்தும் வந்திருக்கிறார். அந்த நாளில், பள்ளிக்குக் கிளம்பி விட்டு, தலைசீவி, பேருந்துக்குக் காசு வாங்கிவிட்டு, பையை வீட்டிலேயே விட்டுவிட்டு அந்தக் கிணற்றில் விழுந்திருக்கிறாள். புதர் மண்டி, அது நாள் வரையில் வற்றிக் கிடந்த கிணற்றில் இந்த வாரம் தான் ஆழ்குழாய்க்குழியிலிருந்து நீர் நிரப்பியிருக்கிறார்கள். அந்த தோட்டத்துக்குச் செல்வதைக் கூட நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் வேலை செய்பவர் பார்த்திருக்கிறார். காலைக் கடன்களுக்காகச் செல்லலாம் என்று நினைத்து ஏதும் கேட்காமல் இருந்திருக்கிறார். பெற்றோர் ரேசன் கடை வரிசையில் நின்றிருந்துவிட்டு, அவளது பையையும் செருப்பையும் வீட்டில் பார்த்ததால், மகளைக் காணோம் என்று எல்லா இடங்களிலுல் தேடியிருக்கிறார்கள். எதேச்சையாக அந்தக் கிணற்றில் எட்டிப் பார்த்த யாருக்கோ பள்ளிச் சீருடை தெரிந்திருக்கிறது. பின் ஊரே கூடிவிட்டிருக்கிறது.

இது எதுவும் தெரியாமல் நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் எங்கள் தோப்பில் இருந்தோம். மாலை அந்தச் சிறுமியின் பிணம் அடக்கம் செய்யப்படும் போதுதான் செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்ந்தோம்.

‘நாங்களா இருந்திருந்தா வாத்தியாரத் தூக்கிட்டுவந்து வெட்டிப்போட்டிருப்போம்,’ என்கிறார்கள் சில மலையாளிகள்.
‘படிப்பு வரலைன்னா வாத்தியார் அடிக்காம என்ன பண்ணுவாங்க? அதுக்காக இந்தப் பொண்ணு இப்படிப் பண்றதா?’
‘யாரைச் சொல்லி என்ன பண்றது? இவங்க அப்பா அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்கணுமில்ல? போறதுக்குப் பயந்திட்டு இதுக பாட்டுக்கு வீட்டிலையோ உக்காந்துட்டா என்ன செய்யறது?’
‘ஒண்ணும் இல்லாதவங்கங்கிறாதால ஒண்ணும் செய்யாம விட்டுட்டாங்க. வசதியான குடும்பமா இருந்திருந்தா பெரியா ரகளை ஆயிருக்கும்.’
‘இதுவே எஸ்.சி. பொண்ணா இருந்திருந்தா சும்மா விட்டிருக்க மாட்டாங்க. நடந்திருக்கிறதே வேற.’

எத்தனையோ பேச்சுகள். மரணத்தை நோக்கித்தள்ளும் அளவிற்குப் பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. குழந்தையைக் குறைகூறுவதில் நியாயமில்லை. பெற்றோரைக் குறை சொல்வதிலும் பயனில்லை. நித்யா அமைதியான பெண் என்றும் பயந்த சுபாவம் என்றுமே எல்லாரும் கூறக்கேட்கிறேன். நித்யாவின் அண்ணனும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறான்.

காவல்துறை விசாரணையில், ஆசிரியர் கண்டித்திருக்கிறார்/அறிவுறுத்தியிருக்கிறார் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அவ்வாறே வந்தது.

அடுத்த நடவடிக்கை குறித்து நான் உரையாட முனைந்தபோது, பெற்றோரும் ஊர்ப்பெரியவர்களும் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஆசிரியருக்குத் தண்டனை வாங்கித்தந்தாக வேண்டும் என்பதில் ஏனோ எனக்கும் பெரிய வெறி இல்லை. தண்டனைகளில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதால் இருக்கலாம். மனமாற்றம் தான் இங்கு அவசியம். இது ஒருவரிடமுள்ள பிரச்சனையல்ல. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல பெற்றோர்களே அடிப்பதை ஊக்குவிக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல முடிவுகள் வரவேண்டும் என்கிற அழுத்தம் இன்று அரசுப் பள்ளிகளையும் நெருக்கத்தொடங்கிவிட்டது. நன்றாகப் படிக்காத குழந்தைகள், முன்பே வடிகட்டப்பட்டிருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பெரும் சுமையாகக் கருதுகிறார்கள்.

எனக்கு நானே என்னென்னவோ சால்சாப்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

இது இன்னொரு குழந்தைக்கு மறுபடி நேர்ந்துவிடக்கூடாது. எவரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ஆசிரியர்களுக்கு வந்துவிடக்கூடாது.

அடுத்த வாரம் இன்னொரு நண்பருடன் அந்தப் பள்ளிக்குச் செல்ல இருக்கிறேன். ஆசிரியர்களோடு கலந்துரையாடல், கவுன்சலிங் என்று என்னால் இயன்ற செயல்களைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள முனையவிருக்கிறேன்.

எங்கள் தோட்டம் இக்கிராமத்தில் இருந்தாலும், இதுவரை பக்கத்து கிராமத்தில்தான் குடியிருந்தோம். இதே கிராமத்துக்குக் குடிபெயர்ந்து ஒன்றரை மாதங்கள்தான் ஆகின்றன. குழந்தைகளோடு கூடுவதற்கு இங்கு இடம் அமையாததால், இன்னும் பயிலகம் தொடங்கவில்லை. குழந்தைகளோடு பணியாற்றத் தொடங்கவில்லை. ஒருவேளை இந்தத் தாமதத்தைத் தவிர்த்திருந்தால், இந்த மரணத்தைக்கூடத் தவிர்த்திருக்க முடியுமோ என்னவோ? என் தெளிவின்மையும் போதாமைகளும் பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

எங்கள் வீட்டுச் சன்னல்களிலிருந்து பார்த்தால் அந்தக் கிணறு இருக்கும் இடம் தெரிகிறது. அங்கு கிணறு இருப்பதை இதுநாள்வரை நாங்கள் அறியவில்லை. நித்யாவை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால், அவள் அந்தக் கிணற்றினை நோக்கிப் பதுங்கிச் சென்று, புதர்களில் சரிந்து விழுந்தபோது நாங்கள் நூறடி தொலைவில் தான் இருந்திருக்கிறோம். அங்கு பார்வை திரும்பியிருந்தால், அவளைக் கண்டிருக்கக்கூடும். அவள் அலறியிருந்தால் கேட்டிருக்கக்கூடும். எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் வழியில்தான் அவளுக்கு எழுப்பப்பட்ட மண் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சமாதி இனிவரும் மழையில் தரையோடு சமனாகிவிடும். என் மனம் ஒருபோதும் சமாதனமாகப் போவதில்லை.

ஒவ்வொரு முறை ஒரு குழந்தையை நோக்கிக் கையை உயர்த்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது கைகளில் கொலைக்கயிறு இருக்கக்கூடும் என்கிற உணர்வு எழட்டும். அவர்கள் உதிர்க்கும் வசைச் சொற்கள், கொடுக்கும் தண்டனைகள் உயிரைக் குடிக்கக்கூடும் என்பதை உணரட்டும். அன்பை மட்டுமே விதையுங்கள். கல்வி, மதிப்பெண்கள், உங்கள் ஊதியம் எல்லாமே இரண்டாம்பட்சம். நித்யா தேர்வில் தோல்வியடைந்திருந்தால் அடைந்திருக்கட்டுமே. மரணம் எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்குகிறது. கல்வி, கல்விமுறை, குழந்தைகள் குறித்து நமது பார்வைகளில், புரிதல்களில் பெருமாற்றங்கள் வந்தாகவேண்டும் – இன்னொரு அனிதாவையோ நித்யாவையோ இழப்பதற்குமுன்.


குழந்தைகளுக்கான புத்தகங்கள்

ஜனவரி 9, 2017

2016ல் படித்தவை என்று நானும் நண்பர்களும் பெரிய பட்டியல்கள் போடுவததைப் பார்த்துவிட்டு மகிழ்மலர், தானும் ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். மகிழின் சமவயதுக் குழந்தைகளுக்கும் இப்பட்டியல் பயன்படும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1. கு. அழகிரிசாமி சிறுகதைகள்
– அன்பளிப்பு
– இருவர் கண்ட ஒரே கனவு
– சாப்பிட்ட கடன்
– ராஜா வந்திருக்கிறார்

[இக்கதைகள் எவையுமே சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை என்று சொல்லமுடியாது. ஆனால், சிறுவர்களும் படிக்கக்கூடியவை. சாப்பிட்ட கடன் கதையின் முதல் பாதி அவளுக்குச் சற்றே சிரமமாக இருந்தது. அதன் பின் பாதியையும், மற்ற மூன்று கதைகளையும் மிகவும் ரசித்துப்படித்தாள்.]

2. குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்: அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்)
[குக்கூ நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்தது. முந்தைய ஆண்டுகளில் இதை நான் அவளோடு சேர்ந்து வாசித்தபோது, அவ்வளவு ஈர்ப்பாக இல்லை; இவ்வாண்டு, அவளே படிக்கும்போது, ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது; நான் ரசித்த பல இடங்களை அவளாலும் ரசிக்க முடிந்தது – உதாரணமாக, ஒரு வேற்றுக் கிரகத்து வியாபாரி விண்மீன்களை எண்ணிக்கொண்டு, அவற்றைத் தனது சொத்து என்று உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் பகுதி]

3. பனி மனிதன் (நாவல் – ஜெயமோகன்)
[நண்பர் செந்தில் கொடுத்தது. முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு, அவளுக்குப் பிடிக்குமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவளுக்குத் தந்தேன். மிக சுவாரசியமாகவும் வேகமாகவும் படித்து முடித்தாள். நாவலுக்கு இடையிடையே உள்ள பெட்டிச் செய்திகளைப் படிப்பதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், அவற்றைப் படிப்பதற்கான ஒரு பிடி கிடைத்தபின், ‘எப்படிப்பா இவருக்கு இதெல்லாம் தெரியும்,’ என்று வியந்துகொண்டே படித்தாள்.]

4. வான்வெளிக் கொள்ளையர் (முத்து காமிக்ஸ்)
[இதுவும் நண்பர் செந்தில் கொடுத்தது. ‘லாரன்ஸ் தப்பிச்சிடுவாரா?’ என்று அடிக்கடி கேட்டபடியே விறுவிறுப்பாகப் படித்தாள்.]

இச்சிறு பட்டியலில் சற்றே பெரிய குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் என்று அவள் கருதுபவை, அதிலும் அப்பாஅம்மாவின் துணையின்றிப் படித்தவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்டிக்குட்டி படக்கதைகள் இல்லை…பாரதி புத்தகாலயம், NBT பதிப்பித்த குட்டி நூல்களில் அநேகமாக அனைத்தையும் அவளுக்காகவும் எங்கள் பயிலகத்துக்காகவும் வாங்கியுள்ளோம்; பலவற்றை அவள் படித்தும்விட்டாள். சுப்பாண்டி கதைகள் (தொகுதி 1)தான் அவளாகப் படித்த முதல் பெரிய புத்தகம். அதனை அதற்குப்பிறகும் அவ்வப்போது மறுவாசிப்பு செய்கிறாள்.

எங்கள் பயிலகத்து மாணவர்கள் நிறைய வண்ணப்படங்களுடன் கூடிய சிறிய குழந்தைப் புத்தகங்களைப் புரட்டுவதையே விரும்புகின்றனர். தெனாலிராமன் எல்லா வயதினரிடமும் மிகப் பிரபலம். பெரிய வயது(12-15) மாணவர்கள் அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் படிக்கவேண்டும் என்று அவ்வப்போது எடுக்கின்றனர்…இதுவரை யாரும் அதிக பக்கங்களைக் கடக்கவில்லை. DK’s Visual Dictionary அவர்கள் அடிக்கடி நாடும் இன்னொரு புத்தகம்; பெரும்பாலும் புரியாமலே படம்பார்ப்பார்கள்; சில சமயம் விளக்கச்சொல்லிக் கேட்பார்கள். தமிழில் அது போல் கிடைத்தால், பிரமாதமாக இருக்கும்.

இந்த மாணவர்கள் மத்தியில்தான் தோழர் இரா.முருகவேளின் முகிலினி வெளியிடப்பட்டது. ‘நம்ம முகிலினி’ என்று ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அப்புத்தகத்தை அவர்கள் பார்ப்பார்கள். ஒரே ஒருவன் மட்டும், அதன் முதல் அத்தியாத்தைப் படித்துவிட்டு, ‘அண்ணா சூப்பர்’ என்றான். விரைவில் எவரேனும் முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கும்போது, எழுத்தாளர் யார் என்பதைவிட, அந்தப் புத்தகம் எந்தச் சூழலில் எவர் கொடுத்துக் கிடைத்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது.

நாங்கள் செல்லும் இரண்டு துவக்கப்பள்ளிகளிலும், பாவண்ணனின் ‘யானை சவாரி’ குழந்தைப் பாடல்களுக்கு (பாரதி புத்தகாலயம்) நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குழந்தைகள் விரும்பிப்பாடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட பல கிளாசிக்குகள் சிறுவர்களுக்கான சுருக்கப்பட்ட வடிவங்களில் பிரபலமாக உள்ளன. குழந்தைகளுக்காகவென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதைகளில் கிடைக்காத ஒரு பரந்த அனுபவம் இக்கதைகளில் கிடைப்பதுண்டு. (குழந்தைக் கதைகளில் வேறுவகையான அனுபவம் கிடைக்கும்…அதையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவற்றிற்கான தேவையும் உள்ளது.) தமிழில் அப்படியொரு நிலை இல்லை. கு.அழகிரிசாமியின் இச்சிறுகதைகளைப் போன்றவை இந்த இடைவெளியை நிரப்பக்கூடும். நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையையும் மகிழுக்குப் படித்துக் காண்பித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதைகள் பலவற்றை அவளோடு படித்தது நான் எதிர்பாராத ஒரு புது அனுபவமாக அமைந்தது; எனக்கும் அவரது கவிதைகளுக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது. அதை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது பரவசமாகிவிட்டார்.

சென்ற ஆண்டு, மகிழ் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இரு முறைகளில், ஒரு தடவை பாரதியின் வசன கவிதைகளையும், அடுத்த முறை கல்கியின் பார்த்திபன் கனவில் கணிசமான பகுதியையும் அவளுக்கு உரக்கப் படித்தேன். அதனால் உடல்நிலை சரியானது என்றெல்லாம் கூறமாட்டேன்; ஆனால் மோசமாகவில்லை என்பதற்கு உத்திரவாதம் தரமுடியும். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துக்காட்டும்படி கேட்டிருக்கிறாள். பார்த்திபன் கனவைத் தானே படித்து முடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறாள். படித்துவிட்டால், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று பல மாதங்களுக்குக் கல்கியிலிருந்தே பெரிய விருந்து வைத்துவிடலாம்.

Roald Dahl எழுதிய The Magic Finger மற்றும் The Umbrella Man, சேக்ஸ்பியரின் The Merchant of Venice, The Tempest (abridged versions) அவளுக்குப் படித்துக்காண்பித்திருக்கிறேன்; விரும்பிக் கேட்டாள். The Wizard of Oz, Twenty thousand leagues under the Sea ஆகியவற்றை அவளே படிக்க முனைகிறாள். ஏனோ, அவை பல மாதங்களாகப் பாதியிலேயே நிற்கின்றன. (இவ்வரிசையில் பல புத்தகங்களை நண்பர் தியாகு தனது நூலகத்திலிருந்து எங்கள் பயிலகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பெரிய பொக்கிஷமாக எங்கள் குழந்தைகளுக்காக அவை காத்துக்கொண்டிருக்கின்றன.)

தற்போது, உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி (தமிழினியிலிருந்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அன்பளிப்பு), மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள காட்டிலே கதைகள் ஆகிய சிறுவர் கதைத்தொகுப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறாள்.

(நண்பர்களும் தங்களது பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டால், சிறுவர்களுக்கான ஒரு விரிவான பட்டியல் உருவாகலாம்.)


இதையும் இங்கு சொல்லவேண்டும்: மகிழ், தோட்டத்தில் விளையாடியபடி குதூகலமாகக் கேட்டு, ஒரு சில பத்திகளை மனனம் செய்துகொண்ட ஆங்கிலக் கவிதை, வேர்ட்ஸ்வர்த்தின், ‘The Tables Turned’:

Up! up! my Friend, and quit your books;
Or surely you’ll grow double:



Books! ’tis a dull and endless strife:
Come, hear the woodland linnet,
How sweet his music! on my life,
There’s more of wisdom in it.

அம்மாவோடு சேர்ந்து பறவைகளையும் தொடர்ந்து பார்க்கிறாள் என்பது கூடுதல் ஆறுதல்.