திருக்குறள் தமிழிசை – இதயத்திற்கு இனிய இசை

ஜூலை 16, 2010

அண்மையில் கேட்ட, கேட்டுக்கொண்டே இருக்கிற இசை. வரவேற்க வேண்டிய இனிய முயற்சி. என் எண்ணங்கள் இன்னும் விரிவாய் – ஆங்கிலத்தில்.


சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் – ஓர் இனிய இசைவிருந்து

ஜூலை 31, 2008

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது – மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும் அருகிலிருந்த குற்றாலக்குறவஞ்சியையும் (அதிலும் மருத்துவர் ராமதாசுவின் படம்)  வாங்கிவந்தேன். இரண்டும் பொங்கு தமிழ் அறக்கட்டளையின் வெளியீடுகள்.

என் வெறுப்பை ஒதுக்கிவிட்டு நடுநிலையில் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன். இனிய ஆச்சர்யம் காத்திருந்தது. இரண்டுமே தரமான படைப்புகள். தமிழில் இத்தகைய முயற்சிகள் வெகு சில. இளையராஜாவின் திருவாசகத்தோடு ஒப்பிட முடியாது என்றாலும், அந்த வகை முயற்சி இது. தமிழ் இலக்கியங்களை நவீன ஒலிகளில் நேர்த்தியாய் வெளிக்கொணர முடியும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

இசையமைப்பாளர் ந.கோபிநாத் ஓர் அரிய கண்டுபிடிப்பு. பழந்தமிழ்ப் பாடல்களை அழகாய் இக்கால இசைக்குள் கட்டுப்படுத்துவது கடினம். பாரதியின் பாடல்களையே இளையராஜா, விசுவநாதன் தவிர பலரும் சிதைத்திருக்கிறார்கள். நவீன இசை என்பது கீபோர்ட், தபலா, சலிப்பூட்டும் பழைய தூர்தர்ஷன் இசையைத் தாண்டியதில்லை. கர்நாடக இசையில், திருப்புகழ் தவிர வேறு பாடல்கள் இடம்பெறுவது அரிது. தமிழ்ப் பாடல்கள் இசைக்குப் பொருந்தாது என்று அவர்களாய் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இத்தகு சூழலில், இதுவரை கேட்டறியாத ஓர் இசையமைப்பாளர் இனிய பாடல்கள் மூலம் ஒரு புதிய பாதையில் பயனிக்கறார். தமிழ்ச் சொற்கள் இதமாய் செவிகளுக்கு விருந்தாயின. மிகக்குறைந்த நேரமே நீடித்ததுதான் பெரும் குறை. மற்றபடி இப்படியோர் முயற்சியில் சிறுபிழைகள் மனதில் நிற்பதில்லை.

இக்கட்டுரை எழுதும் போதே எஸ்.ராமகிருஷ்ணின் இதே ஏக்கம் குறித்துப் படிக்க நேர்ந்தது. இளையராஜா இன்னமும் இந்தப் பக்கம் முழுக்கவனத்தை திருப்ப மறுத்தாலும், ந.கோபிநாத் அந்தக் குறையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார். இருந்தாலும் இளையராஜாவின் கைவண்ணம் பட்டால் இன்னும் எத்தனை திருவாசகங்கள் உருவாகக்கூடும்! ஹீம்…

இம்முயற்சிக்காக ந.கோபிநாத்தைப் போற்றுதும். பொங்கு தமிழ் அறக்கட்டளையைப் போற்றுதும். இத்தோடு நின்று விடாதீர்கள். உங்கள் இலக்கிய-இசைப் பயணம் இன்னமும் நீளட்டும்.


காலச் சுழலில் சிக்கிய கர்நாடகஇசை

ஜூலை 17, 2008

ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.

சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.

ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?

முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.

அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.

ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.