(ஜனவரி 2023 காலச்சுவடு இதழின் காந்தி சிறப்புப் பகுதியில் வெளிவந்த எனது கட்டுரை.)
காந்தியின் அரசியலை ஏற்கின்ற பலரும் காந்தியின் அறிவியல் பார்வையைப் புறந்தள்ளுபவர்களாக இருப்பதைக் காண்கிறோம். இது காந்தியை ஏற்று அவருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களில் பெரும்பகுதியினர் அவருடன் கொண்டிருந்த முரண்பாடுகளில் ஒன்றாக எப்போதும் இருந்துள்ளது.
காந்தியின் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் முதற்பாதியில் கற்றோரிடையே உருக்கொண்டிருந்த பொதுப்பார்வைக்கு நேரெதிரானதாக இருந்தது. அறிவியல் வளர்ச்சியின் நீட்சியாகக் காணப்பட்டத் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலகப் பண்பாடுமே மக்களின் வளர்ச்சிக்கான ஐயத்திற்கு அப்பாற்பட்ட வழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த காலத்தில், அவை குறித்த மாறுபட்ட மதிப்பீடுகளை காந்தி முன்வைத்தார். தொழிற்புரட்சியின் எதிர்மறைத் தாக்கங்களைக் குறித்துப் பேசக்கூடிய மிகச்சிலரில் தலையானவராக காந்தி உருவெடுத்தார்.
அன்று காந்தி தொழில்மயமாதல் குறித்து வெளிப்படுத்திய கடுமையான கருத்துகளால் அறிவியலுக்கே எதிரானவராக அவரைப் பலரும் புரிந்துகொண்டனர். காந்தி மீதான விமர்சனங்கள் வாயிலாக அவர்களுக்குக் காந்தியின் அறிவியல் பார்வை குறித்திருந்த புரிதலும் மதிப்பீடுகளும் மதிப்பீடுகளில் நேர்ந்த மாற்றங்களும், காந்தியின் அறிவியல் பார்வையுமேகூட வெவ்வேறு கோணங்களில் துலங்குகின்றன. Brave New World என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியரான அல்டௌசு ஹக்சிலி 1933ம் ஆண்டு எழுதிய கட்டுரையில் காந்தியைப் பற்றிய இந்த மதிப்பீடு மிகக் கடுமையாக வெளிப்பட்டது.
‘தல்ஸ்தோயர்களும் காந்தியர்களும் நாம் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்கின்றனர்; வேறு சொற்களில், அறிவியலை முற்றும் துறந்துவிட்டு வானரங்கள் போல வாழவேண்டும், மீறிப்போனால், நம் இடைக்கால முன்னோர்களின் வழியில் வாழவேண்டும் என்கின்றனர். இந்த அறிவுரையின் இடர்ப்பாடு, இதைக் கடைப்பிடிக்க முடியாது என்பதே; வேறுவிதமாகச் சென்னால், 80-90 கோடி மக்களைப் பலியிடத் தயாராக இருந்தால், இதைக் கடைப்பிடிக்கலாம். நவீனத் தொழில்மயமாக்கம், வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வடிவில் செயல்படும் அறிவியல் ஏறத்தாழ மூன்று தலைமுறைகளில் உலகின் மக்கள்தொகை இரட்டிப்பாக வழிவகுத்துள்ளது. நாம் அறிவியலை அழித்துவிட்டு, இயற்கைக்குத் திரும்பினால், மக்கள் முன்பிருந்த நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் – நூறாண்டுகளில் அல்ல, நூறு வாரங்களிலேயே திரும்பிவிடுவார்கள். பஞ்சமும் கொள்ளைநோய்களும் படுவிரைவாகத் தம் வேலையைச் செய்துமுடிக்கும். தல்ஸ்தோயும், காந்தியும் மானுடநேயர்கள் என்று தம்மைக் கருதுபவர்கள். ஆனால், தைமூரும் செங்கிஸ் கானும் இழைத்த படுகொலைகள் கூட அற்பமானவையாகத் தோன்றவைக்கும் அழித்தொழிப்பைப் பரிந்துரைக்கிறார்கள்,’ என்று அல்டௌசு ஹக்சிலி எழுதினார்.
Science in the Changing World என்ற கட்டுரைத்தொகுப்பில் வெளிவந்த ஹக்சிலியின் கட்டுரையைச் சிறையில் படித்த ஜவகர்லால் நேரு அவருக்கு ஒரு மறுப்பு எழுதினார். அதில் காந்தி பெரும் இயந்திரங்களுக்கு எதிரானவரே அன்றி அறிவியலுக்கு எதிரானவர் அல்லர் என்று வாதாடினார். ஆனால் அக்கட்டுரையில் காந்தியுடனான முரண்பாடுகளையும் தீர்க்கமாக முன்வைத்தார். ’காந்தியின் இந்நிலைப்பாடு சரியானதாக இல்லாமற் போகலாம். அதில் தருக்கப்பிழை இருக்கலாம். ஆனால் அதற்கு அவர் அறிவியலை மறுக்கிறார் என்றோ இயந்திரம்சார் தொழிலை அழிக்க முனைகிறார் என்றோ பொருள்கொள்வது தவறு. […]
காந்தியின் அரசியல் கூட்டாளிகளும் அவரைப் பின்பற்றுவோரும் இந்நிலைப்பாட்டை ஏற்கிறார்கள் என்றுகூட உறுதியாகக் கூறமுடியாது. தனிப்பட்ட முறையில், நான் இதனோடு உடன்படவில்லை. இந்திய காங்கிரசும் தேசிய இயக்கமும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் காந்தி காங்கிரசுக் கட்சியைத் தன் நிலைப்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தவே இல்லை – ஒரு திட்டத்தைத் தவிர. அது இராட்டை என்பதை உலகம் அறியும்…’ என்ற நேரு காங்கிரசு கட்சி ஏன் கதரை ஓர் அரசியல் இயக்கமாக எடுத்துச் செல்கிறது என்பதையும் விளக்கினார். மேலும், ‘நான் இவற்றைக் கூறுவது இராட்டைக்கு ஆதரவாகப் பேசவேண்டும் என்பதற்காக அல்ல; இந்திய தேசியம் பேரெந்திரங்களுக்கு எதிரானதன்று, அறிவியலுக்கு அறவே எதிரானதன்று என்பதை நீங்கள் உணரத்தான். அதிகாரம் கிட்டும்போது, தேசிய இயக்கம் நாட்டை மிக வேகமாக தொழில்மயப்படுத்தும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதுவரையில், ஆதரவற்ற நிலையிலுள்ள நாங்கள், கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுத் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்யத்தான் வேண்டியுள்ளது. என்னைப் பற்றி இதைக் குறிப்பிட விரும்புகிறேன்: வாழ்க்கை குறித்த எனது நோக்கு முழுக்க அறிவியல்பூர்வமானது; சமயங்கள் நோக்கியோ அவற்றின் முறைகளை நோக்கியோ நான் எப்போதும் ஈர்க்கப்பட்டதில்லை. உடலுறவு, கருத்தடை, துறவறம் போன்றவற்றில் காந்தியுடன் முழுமையாக முரண்படுகிறேன். இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. இந்தியாவை இயந்திரமயமாக்கவே விரும்புகிறேன். எனினும் அது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றெண்ணுகிறேன். சமூகவுடைமையும் தொழில்மயமாதலும் இந்தியாவில் அமையவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்று நேரு எழுதினார். ‘இத்தகைய நம்பிக்கைகளையுடைய நானோ என்னைப் போன்ற பலரோ மக்களின் அழித்தொழிப்புக்கு வழிவகுக்கும் கொள்கையை – அறிவியலுக்கும் தொழிலுக்கும் எதிரான கொள்கையைக் கொண்ட ஒருவரோடு இத்தனை ஆண்டுகள் நெருங்கிப் பழகி ஒத்துழைக்க முடியுமா? அதற்காகவா வாழ்வின் பல்லாண்டுகளைச் சிறையில் கழிப்போம்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
காந்தியின் மீதான ஹக்சிலியின் கடுமையான விமர்சனைத்தை மறுக்கும் பொருட்டு நேரு இக்கடிதத்தை எழுதியிருந்தாலுமேகூட, அதில் அவருக்கும் காந்தியின் அறிவியல் மீது அதே எதிர்மறை நோக்கு இருந்தது என்பது மென்மையாக வெளிப்படுகிறது.
‘காந்தியின் சமகாலத்தவர்கள் பெரும்பாலானோர் செய்த தவறு, தொழில்நுட்பமும், (சமூக/நிர்வாக) அமைப்புகளும் அற்ப மானுட விலங்கை மீமானிடப் பிறவியாக்கும் என்றும் எல்லையற்ற ஆன்மிக ஞானத்திற்கு மாற்றினை அவற்றால் வழங்கமுடியும் என்றும் கருதியதுதான். அந்த மாற்றின் இருப்பை மறுப்பதே பழைமைவாதமாகி விட்டிருந்தது,’ என்று அதே அல்டௌசு ஹக்சிலி காந்தியின் மரணத்துக்குப் பின்னர் எழுதினார். அதில் காந்தியைக் குறித்த அவரது பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை உணரலாம். அதிகார/உற்பத்திப் பரவலாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஹக்சிலி, அக்கட்டுரையிலேயே, கைகளால் செய்யப்படும் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காந்தி கருதுவதை மறுப்பதாகவும், செயல்திறனைக் கூட்டுவதற்காக ஆற்றல்வாய்ந்த இயந்திரங்களைச் சரியான அளவில் பயன்படுத்துவதில் தனக்கு மறுப்பில்லை என்பதையும் கூறுகிறார். ஆனால் அத்தகைய இயந்திரங்களைப் பெரும் தொழிற்சாலைகளிலேயே செய்யவேண்டியிருக்கும் என்றும் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி பெரும் இயந்திரங்களைக் கொண்ட ஆலைகளில் நிகழவேண்டியிருக்கும் என்கிற முரணையும் சுட்டுகிறார்.
நேருவும் பின்னாளில் காந்தியின் அணுகுமுறைக்கு நெருங்கி வந்துள்ளார். 1963ல் பாராளுமன்ற உரையொன்றில் தனது அணுகுமுறையை காந்தியின் அணுகுமுறையோடு ஒப்பிட்டு உரசிப்பார்க்கிறார். “திட்டமிடுவோர் பொதுவாக ஏட்டறிவு சார்ந்த அணுகுமுறையில் செயல்படுவர். ஏட்டளவில் அது மிக நன்றாக இருப்பினும், சில நேரங்களில் மானுடக் கூறுகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் தேவையுள்ளது; மிகச் சிறந்த விளைவுகளைத் தரும் இடத்தில் ஒரு தொழிற்சாலையையோ இன்னபிறவோ நிறுவுவதே அதை உற்பத்தி செய்யச் சிறந்த வழி என்று அவர்கள் கூறலாம்.
அதன் விளைவாக, தேர்ந்தெடுத்த இடங்களில் தொழிற்கூடங்களையும் பிறவற்றையும் பெருக்கிக்கொண்டே செல்வார்கள். உற்பத்திக்கூடங்களை அங்கே குவிக்கக்குவிக்க, அங்கு இன்னொரு தொழிற்சாலையைத் தொடங்குவதும் எளிதாகிவிடுகிறது. இது தருக்கம்சார்ந்ததாக இருக்கலாம், அதிக உற்பத்தியையும் வழங்கலாம்; ஆனால், இந்தியாவின் பேரளவினைக் கணக்கில் கொண்டால், அது ஒரு மானுடநேய அணுகுமுறை அல்ல.
மேலும் மேலும் மகாத்மா காந்தியின் அணுகுமுறை குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக நான் அவரது பெயரைக் குறிப்பிடுகிறேன் என்பது விந்தையாகத்தான் உள்ளது. நான் முழுமையாகவே நவீன இயந்திரங்களை வியந்து புகழ்பவன்; சிறந்த இயந்திரங்களும், சிறந்த செய்நுட்பங்களும் எனக்கு வேண்டும். நாம் மிக வேகமாக இயந்திர யுகத்தை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளோம் – நகர்வோம். எனினும், இன்று இந்தியாவில் உள்ள நிலையைக் கருதினால், பெருவாரியான மக்கள் அதனால் (இயந்திர யுகத்தால்) தீண்டப்படவில்லை; நீண்ட காலத்துக்குப் பலன்பெறப் போவதுமில்லை. அவர்களை உற்பத்தியில் கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ளும் வேறு ஏதேனும் வழிமுறை வளரவேண்டும்; நவீன செய்நுட்பங்களோடு ஒப்பிட்டால், அவர்களது உற்பத்திக் கருவிகள் செயல்திறன் குறைந்தவையாக இருப்பினும், நாம் அவற்றைப் பயன்படுத்தவேண்டும்; இன்றேல், அவை வீணடிக்கப்படும். இந்த எண்ணத்தை நாம் மனதிலிறுத்திக் கொள்ளவேண்டும். நம் நாட்டின் ஏழைகளைக் குறித்து நாம் கூடுதலாகச் சிந்திக்கவேண்டும்; அவர்களது நிலை மேம்பட இயன்றவரை விரைவாக ஏதேனும் செய்தாக வேண்டும். இச்சிக்கல் என்னைப் பெரிதும் வருத்துகிறது,” என்கிற நேருவிடமும் அவர் முன்பு முரண்பட்ட அறிவியல்-பொருளாதாரத் தளத்திலும் காந்தியை நோக்கிய நகர்வைக் காணலாம்.
காந்தியை ஆழமாக உள்வாங்குகிற எவரும் வந்தடையக்கூடிய இடமாகவே இது உள்ளது. காந்தியம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதாகவோ அவ்வாறான ஒன்று இருப்பதாகவோ காந்தியே கருதாத போதுமேகூட, காந்தியின் செயல்பாடுகளிலிருந்தும் கருத்துகளிலிருந்தும் நம்மால் காந்தியத்தை ஒரு கோட்பாடாக வளர்த்தெடுத்துக் கொள்ள இயலும். காந்தியத்தின் பல்வேறு கூறுகளும் கூடிவரும் போதே காந்தியக் கோட்பாடு முழுமை கொள்கிறது. காந்தியத்திலிருந்து அரசியலையோ பொருளாதாரத்தையோ அறிவியலையோ பிரித்து விலக்கும்போது காந்தியம் வழங்கும் ஒட்டுமொத்த சித்திரம் சிதைவுறவே செய்கிறது. அந்த வகையில் காந்தியின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் அறிவியலுக்கும் அடித்தளமாக இருக்கும் கொள்கைகள் பொதுவானவை. குறிகிய காலப் பலன்களை ஒதுக்கி நிலையான உண்மைக்கான தேடல், சர்வோதயம் – பெரும்பான்மையினர் நலன் என்பதைத்தாண்டி அனைத்து மக்களும் நிகராகச் செழிக்க வேண்டும் என்ற எண்ணம், மானுட நேயத்துக்கும் இயற்கை வளங்கள் மீதும் பிற உயிர்கள் மீதுமான அக்கறைக்கும் இடையே உள்ள நீங்காத உறவு என்று பரந்துபட்ட அளவில் காந்தியத்தின் அடிப்படைகளாக வகுத்துக்கொள்ளலாம். அகிம்சைக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் காந்திய அறிவியல் நோக்குக்கும் இணைப்புச் சரடுகளாக இருப்பவை இந்த அடிப்படைகளே. நடைமுறையில் காந்தியே இந்த அடிப்படைகளில் இருந்து சில நேரங்களில் பிறழ்ந்து செயல்பட்டோ முரணான கருத்துகள் கூறியிருக்கவோ கூடும். எனினும் அவரது ஒட்டுமொத்த வாழ்வையும் செய்தியையும் ஆழ நோக்குகையில் முரண்களற்ற காந்தியம் என்ற முழுமையான கோட்பாடு திரண்டு வருகிறது.
உண்மைக்கான தேடலின் பகுதியாகவே காந்தி அகிம்சை என்ற நெறியை வந்தடைந்தார். அரசியல் தளத்தில் அகிம்சையைப் பின்பற்றுவதற்கான கருவிகளாகவே சத்தியாகிரகம், ஒத்துழையாமை ஆகியவற்றை வளர்த்தெடுத்தார். அதுபோலவே அவரது அறிவியல் பார்வையும் உண்மைக்கான தேடலாகவே அமைந்திருந்தது. கதர், கிராமத் தொழில்கள், கிராமத் தன்னாட்சி, நவீன இயந்திரங்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டை எதிர்த்தல், கட்டற்ற நுகர்வைத் தவிர்த்தல் ஆகியவையும் அவரது அறிவியல் நோக்கின் கருவிகளாக அமைந்தன. அவர் தன் வாழ்வையே சோதனைக்கூடமாகவும் தன் உடலையும் உள்ளத்தையும் சோதனைப்பொருள்களாகவும் ஆக்கினார்.
‘காந்தியடிகளைப் போலவே, ஐசக் நியூட்டன், அறிதலின் கரையில் தான் கூழாங்கல் பொறுக்கும் சிறுவன் என்றும் தன் எதிரே எல்லையற்ற பெருங்கடல் கண்டறியப்படாமல் விரிந்து கிடக்கிறது என்றும் ஒருமுறை கூறினார். காந்தியின் பணிவு மேலோட்டமானதல்ல. தான் உண்மையின் ஒரு கீற்றைத்தான் கணநேரம்தான் கண்டிருப்பதாக உண்மையிலேயே நம்பினார். இப்பணிவுதான் ஓர் உண்மையான அறிவியலாளருக்கான தரமுத்திரை. அத்தகைய பணிவான தளராத விடைதேடலே அறிவியலுக்குப் பின்னுள்ள அடிப்படை அகத்தூண்டுதல்,’ என்றார் ஆயுதம்தாங்கிய பொதுவுடைமைப் புரட்சியாளராக இருந்து, நீண்ட சிறைவாசத்தின்போது காந்தியராக மாறிய பன்னாலால் தாஸ்குப்தா (Revolutionary Gandhi).
உண்மைக்கான தேடலை முதன்மைப்படுத்திய காந்தி நிறுவனமாக்கப்பட்ட, அரசியல்படுத்தப்பட்ட நவீன அறிவியல்முன் மண்டியிட்டு வணங்க மறுத்தார். அறிவியலை வெறும் இயற்பியலாகவும் வேதியலாகவும் மருத்துவமாகவும் தொழில்நுட்பங்களாகவும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்ட விதிகளாகவும் சமன்பாடுகளாகவும் சூத்திரங்களாகவும் சுருக்கிக் கொள்ள மறுத்தார். அவரது மறுப்புக்குப் பின்னால், மரபுக்குத் திரும்புவோம், இயற்கைக்குத் திரும்புவோம், கிராமத்துக்குத் திரும்புவோம் போன்ற பின்னோக்கிய வாதங்கள் இல்லை. மக்களின் நீண்டகால நலனுக்குத் தேவையானது எது என்ற எதிர்காலத்தை நோக்கிய தேடல் மட்டுமே இருந்தது. அத்தேடலின் விளைவாக அவர் கண்டடைந்த எதையுமே புதியவை பழையவை, உள்நாடு அயல்நாடு, கைத்தொழில் உயர்தொழில்நுட்பம் என்ற பாகுபாடின்றி ஏற்கவும் மறுக்கவும் செய்தார்.
‘கதரின் அறிவியலுக்கு மிக உயர்ந்த தொழில்நுட்ப, இயந்திரவியல் திறன்கள் தேவைப்படுகின்றன. ஜெகதீஷ் சந்திர போஸ் தனது சோதனைக்கூடத்தில் நமது சக உயரினங்களான செடிகளின் சின்னஞ்சிறு இலைகளிடமிருந்து இயற்கையின் மறைபொருள்களைக் கவர்ந்தெடுக்கக் கொடுக்குமளவு கவனத்தை அதுவும் கோருகிறது,’ என்றார். புதியதும், பெரியதும், ஒருசில கூறுகளில் செயல்திறன் மிக்கதுமான உற்பத்தி முறைகள் உயர்ந்தவை என்ற மேலோட்டமான புரிதலுக்குள் காந்தி அடைபடவே இல்லை.
அறிவியலில் புதியன அறிதல், புதியன படைத்தல் என்பவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொள்ளாமல், அரசியலிலைப் போலவே யார் பலன் பெறுவார்கள், யார் பாதிப்படைவார்கள் என்ற தேடலுனேயே அணுகினார். ‘நீ அறிந்ததிலேயே பரம ஏழை உன்னுடைய செயலால் பயன்பெறுவானா?’ என்ற அவருடைய கடைசித் தாயத்தை அறிவியலுக்கும் கட்டிவிட்டார்.
‘அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை,’
என்ற வள்ளுவனின் வினாவே காந்தியின் வினாவாகவும் இருந்தது.
“ஒரு காலம் வருகிறது. அப்போது, உலகின் உண்மையான வளங்களையும் அறிவையும் பெருக்குகிறோம் என்று இறுமாந்து எண்ணியபடி இன்று தங்களது தேவைகளைப் பெருக்கிக் கொள்வதற்கு அலைமோதிக் கொண்டிருப்போர் தங்களது காலடித்தடத்தில் பின்னோக்கிச் சென்று, ‘நாம் என்ன காரியம் செய்து விட்டோம்?’ என்று பதைப்பார்கள். நாகரிகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. நாம் பெருமிதம் கொள்ளும் இந்த வளர்ச்சிக்கெல்லாம் இடையில், எனக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது, ‘இதெல்லாம் எதன் பொருட்டு?’” என்று காந்தி 1927ல் கேட்டார். ஐம்பது ஆண்டுகளின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மானுடத்தின் தார்மீக வளர்ச்சியை இம்மியும் கூட்டவில்லை என்ற வாலசின் கூற்றையும் மேற்கோள் காட்டினார்.
எனினும் அறிவியலின் அறம் சார்ந்த கேள்விகளையும் தெளிவான நடைமுறை ஏரணத்துடனேயே எதிர்கொண்டார். ‘ஒரு கிராமத்தில் பெரியம்மைப் பரவல் ஏற்படுகிறது என்று கொள்வோம். நம்மில் சிலர் தடுப்பூசியில் நம்பிக்கையற்றவர்களாய் இருப்பதால், தடுப்பூசி குத்திக்கொள்ள மறுக்கிறார்கள். எனினும் அவர்கள் மக்களிடம் சென்று தொண்டாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் இத்தடுப்பூசி தோல்வியடைந்துவிட்டது என்று உறுதியாக நம்புகிறோம். ஆனாலும் நாம் தொண்டாற்ற விரும்பும் மக்களிடம் இந்நோயைப் பரப்பும் நோய்த்தாங்கிகளாக நாம் இருந்துவிடக் கூடாது. எனவே நமது அகிம்சைக் கடன் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலோ அந்த இடத்தைவிட்டு அகல்வதிலோ இருக்கிறது. இந்த முதன்மை தர்மத்தின் முன்பு, தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற குறைந்த தர்மம் மறைந்துவிடுகிறது. பம்பாயிலும் சென்னையிலும் தடுப்பூசிச் சட்டம் குறித்த எனது கருத்தைக் கேட்டார்கள். மருத்துவர் வர்க்கியிடம், தடுப்பூசியில் நம்பிக்கையில்லாதவர்கள் அப்பகுதியைவிட்டு விலகவேண்டும்; இன்றேல், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினேன். இதுதான் அகிம்சை. ஒரு வகையில் இது எளிமையானது. இன்னொரு வகையில் இது அத்தனை எளிமையானதன்று,’ என்று ஒருமுறை எழுதியுள்ளார்.
இவ்வாறு சிறிதும் பெரிதுமான ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அறம், அகிம்சை, கடைசி தாயத்து என்று பல்வேறு கோணங்களில் அலசியே முடிவெடுத்தார். அத்தகைய முடிவுகள் சில நேரங்களில் தவறாக அமைந்துவிடுவதும் உண்டு. தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் நெருங்கிப் பணியாற்றிய ஹென்றி போலக்கின் மனைவியான மிலி போலக் தனது ‘காந்தி எனும் மனிதர்’ என்ற நூலில் அத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எழுதியுள்ளார்.
‘திரு.காந்தியின் உடல்நலச் சோதனைகள் சில அறிவார்ந்தவையாகவும் இல்லை; பயன்பயப்பனவாகவும் இல்லை என்பதையும் கூறவேண்டும். எனது முதல் குழந்தையின்மீது அத்தகைய ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொது அவள் ஆறு வராமே ஆன கைக்குழந்தை. உடலின் இயற்கைக் கடன்களைச் சீராக்க, ஈர மண் பட்டியை அவள் வயிற்றில் போட்டார். குழந்தை அதிர்ச்சியில் அழுது கதறியது. பின்னர் நீல நிறமாகி, விறைத்துப் போனது. நான் மண்பட்டியைக் கிழித்து, குழந்தையின் உடலை என்னுடலோடு சேர்த்தணைத்துச் சூடாக்கினேன். நல்லவேளையாகக் குழந்தை உடனே சரியாகிவிட்டது. ஆனால் வேறு பல நேரங்களில், பிற குழந்தைகளோடும் பெரியவர்களோடும் பணியாற்றும்போது, ஈர மண் பட்டிகள் மூலம் வீக்கத்தையோ அடைப்பையோ திரு.காந்தி சரிசெய்துள்ளதையும் நான் அறிவேன்,’ என்கிறார் மிலி போலக். அறிவியலாளர்களின் சோதனைகளில் தோல்வியுறுவதைப் போலவே காந்தியும் சில தோல்விகளைச் சந்தித்துள்ளார். சில பிழையான முடிவுகளையும் எடுத்துள்ளார். பொதுப்புரிதலுக்குப் பிழையாகத் தென்படும் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார். அவற்றைக் கொண்டு காந்தியின் அறிவியல் பார்வையைப் புறந்தள்ளுவது தோல்விகளைக் கொண்டு ஒரு விஞ்ஞானியை எடைப்போடுவது போன்றதுதான்.
காந்தியின் அறிவியல் பார்வையை மூன்று கல்லூரிகளில் அவர் ஆற்றிய உரைகள் மேலும் தெளிவுபடுத்துகின்றன.
‘நவீன அறிவியலாளர்களுக்கு ஊக்கம் தரும் ஆராய்ச்சி மனப்பாங்குக்கு எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன். அந்த உணர்வுக்கு எதிராக எனக்கு எந்த சச்சரவும் இல்லை. ஆனால் அந்த உணர்வு எடுத்துள்ள திசைக்கு எதிராகத்தான் எனது முறையீடு. நவீன அறிவியலின் வாடிக்கையாளர்களது பொருளியல் வளர்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கக்கூடிய விதிகளையும் வழிமுறைகளையும் கண்டறிவதிலேயே அது முதன்மையாக ஈடுபட்டுள்ளது. உண்மைக்கான தேடலில் ஈடுபடும் நவீன அறிவியலாளர்களின் ஊக்கம், முனைப்பு, தியாகம் ஆகியவற்றை நான் பாராட்ட மட்டுமே செய்கிறேன். என் அனுபவத்தில், இத்தகைய உணர்வினை நமது ஹக்கீம்களும் வைத்தியர்களும் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்தை வருத்தத்துடன் பதிவுசெய்கிறேன். எந்தக் கேள்வியுமின்றி சூத்திரங்களைப் பின்பற்றுகிறார்கள். மிகக் குறைவான பரிசோதனைகளையே மேற்கொள்கிறார்கள். உள்ளூர் மருத்துவத்தின் நிலை மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. புதிய ஆய்வுகளை அறிந்துகொள்ளாமல் இருப்பதால், அவர்களது தொழில் அவப்பெயர் பெற்றுள்ளது. இக்கல்லூரி இக்குறைபாட்டைக் களைந்து ஆயுர்வேதத்தையும் உனானியையும் அவற்றின் உச்சப்புகழுக்கு மீட்டுச்செல்லும் என்று நம்புகிறேன். எனவே, மேற்கத்திய அலகு இந்நிறுவனத்தில் இருப்பது நிறைவளிக்கிறது. இந்த மூன்று மருத்துவ முறைகளும் ஒன்றிணைந்து ஒத்திசைவுடன் கலந்து ஒன்று மற்றொன்றிலுள்ள குறைகளைக் களையும் என்று எதிர்பார்ப்பது அதிகப்படியாக இருக்காதே? இறுதியாக, இக்கல்லூரி எல்லா போலி மருத்துவத்துக்கும் – மேற்கத்தியப் போலியானாலும், கிழக்கத்தியப் போலியானாலும் அவற்றுக்கு எதிராக முகம்திருப்பும் என்று எதிர்பார்க்கிறேன். உண்மையான மதிப்பை மட்டுமே அங்கீகரிக்கும் என்றும் மருத்துவத் துறை என்பது வலியையும் துன்பத்தையும் நீக்குவதற்கானது; பெருங்கட்டணம் வாங்குவதற்கானதன்று என்று மாணவர்களை உணரச்செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன், ’ என்று 1921ம் ஆண்டு தில்லியில் திபியா கல்லூரியைத் தொடங்கிவைக்கும்போது உரையாற்றினார். மரபு என்பதற்காக மரபை ஏற்கவோ, அயலானது என்பதால் அயலானதைப் புறந்தள்ளவோ காந்தி முனையவில்லை என்பதை இவ்வுரையில் காணலாம்.
‘இந்தியாவில் 7,00,000 கிராமங்கள் உள்ளன. தாராளக் கல்வியைப் பெறும் நீங்கள், அக்கல்வியையும் அக்கல்வியின் கனிகளையும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கிராம மக்களிடம் எப்படி உங்கள் அறிவியல் அறிவைத் தொற்றவைக்கப் போகிறீர்கள்? கிராமங்களுக்குத் தேவையான கல்வியை நீங்கள் கற்கிறீர்களா? அற்புதமான வசதிகளுடன் இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரியில் நீங்கள் பெறும் கல்வி நடைமுறை சார்ந்ததாக இருக்குமா? கிராம மக்களின் நன்மைக்காக உங்களால் செயல்படமுடியுமா?’ என்று 1925ம் ஆண்டு திருவனந்தபுரம் கல்லூரியொன்றில் பேசினார். ‘அறிவியல் தேடலுக்கு எல்லைகளுண்டு. அந்த எல்லைகள் மானுடம் நம்மீது சுமத்தியுள்ள எல்லைகள்’ என்றும் அதே உரையில் குறிப்பிட்டார்.
“நாம் கிராம மக்களைச் சந்தித்து எப்படி அவர்களது பணத்தைக் கட்டடங்களும் ஆலைகளும் கட்டுவதற்குப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை அவர்களுக்கு ஒருபோதும் பயன்தரமாட்டா; ஒருவேளை அவர்களது பிற்காலத் தலைமுறைகளுக்குப் பயன்தரலாம் என்றெல்லாம் விளக்கினால், அவர்களுக்குப் புரியப்போவதில்லை. […] உங்கள் பேராசிரியர் நீங்கள் பயன்படுத்தும் சில வேதிப்பொருள்களின் தன்மைகளை அறியப் பல ஆண்டுகள் ஆகும் என்கிறார். ஆனால் யார் இந்த கிராமங்களை அறிந்துகொள்ள முனைவார்கள்? உங்கள் சோதனைக் கூடங்களில் சில சோதனைகள் 24 மணிநேரமும் நடைபெறுவதுபோல, உங்கள் உள்ளத்தில் ஒரு பெரிய மூலை கோடானுகோடி ஏழைகளுக்காக இதமாக இருக்கட்டும்…தெருவில் செல்லும் சாதாரணர்களைவிட உங்களிடம் நான் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். உங்களால் ஓர் அற்புதமான (கம்பியற்ற) தொலைத்தொடர்புக் கருவியைப் புற ஆய்வுகள் தேவைப்படாமல் அக ஆய்வுகள் மூலம் உருவாக்க முடியும் – அக ஆய்வற்ற எந்த ஆய்வும் பயனற்றது – அக்கருவியால் உங்கள் உள்ளங்களை கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களோடு இணைத்துக் கொள்ளமுடியும். நீங்கள் செய்யும் கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஏழைகளின் நலனையே தம் இறுதிக் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலொழிய, ராஜாஜி நகைச்சுவையாகச் சொன்னதுபோல, உங்கள் பணிமனைகள் அனைத்தும் சாத்தானின் பணிமனைகளாகிவிடும்,” என்று 1927ல் பெங்களூரு தேசிய அறிவியல் நிறுவனத்தில் உரையாற்றினார்.
விடுதலைக்குப் பின் இந்தியா காந்தியின் அறிவியல்-பொருளாதார நோக்குகளை நிராகரித்துப் பெருந்தொழில்களின் திசையில் தடம் மாறியது. எனினும் இன்றைய காலகட்டத்தில் காந்தியின் அறிவியல் நோக்குக்கான தேவை உலகளவில் எழுந்துள்ளது. சூழலியல் அழிவுகள் மானுடமும் இயற்கையும் அறிவியல் மீது விதித்துள்ள எல்லைகளைப் புலப்படுத்துகின்றன. அதிகாரமும் உற்பத்தியும் மையப்படுவதே பெரும் சூழலியல் நெருக்கடியை உருவாக்கியது என்கிற புரிதலுக்கு சூழலியல் செயல்பாட்டாளர்கள் வந்தடைந்துள்ளனர். இந்தச் சூழலியல் நெருக்கடிகள் அடித்தட்டு மக்களையே முதலில் பாதிக்கின்றன. இந்நிலையில் காந்தியின் ஒருங்கிணைந்த அரசியல்-அறிவியல் கோட்பாடு மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. மேலும் தீவிரமாக இதன் இன்றியமையாமை உணரப்படுகிறது.
இக்கட்டுரைக்கான சிந்தனையிலிருந்தபோது, சேலம்-திருவண்ணாமலை இடையே, கல்வராயன் மலைசூழ்ந்த பள்ளத்தாகிலுள்ள சிட்டிலிங்கி கிராமத்துக்கு ஒரு கூட்டத்துக்காகச் சென்றிருந்தேன். ஏற்கனவே சிட்டிலிங்கி பற்றி அறிந்திருந்தாலும், நான் அங்கு செல்வது அதுவே முதல்முறை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவத் தம்பதியினராகிய ரெஜி-லலிதா ஆகிய இருவரும் அப்பகுதியில் தம் மருத்துவப் பணிகளை ஒரு சிறிய குடிசையில் தொடங்கினர். பழங்குடியினர் வாழும் சிட்டிலிங்கிப் பகுதி அப்போது தமிழகத்திலேயே மிக அதிகமான குழந்தை இறப்புகளைக் கொண்டிருந்தது. இவர்கள் அங்கு பழங்குடிகளுக்கான மருத்துவமனை ஒன்றை அமைத்தனர். குழந்தை இறப்பு விகிதம் குறைய அது பெரிதும் உதவியது. அதன்பிறகு அங்கு வந்து சேர்ந்த கட்டடக் கலைஞர்களான கிருஷ்ணா-அணு இணையர் கல்விப் பணிகளிலும், மாற்றுக் கட்டடங்கள் கட்டப் பயிற்சியளிப்பதிலும் ஈடுபட்டனர். துளிர் என்ற பள்ளி தொடங்கப்பட்டது. உடல்நலம் பேண வெறும் மருத்துவம் போதாது; கல்வியும் வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் தேவை என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டது. அங்கிருந்து அவர்களது பார்வை விரிவடைந்து உணவை நோக்கிச் சென்றது. அப்பழங்குடி கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவை விளைவித்து, உட்கொண்டு, நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் வழிவகுக்கும் பொருட்டு உழவர்களை ஒன்றுதிரட்டி, இயற்கை வேளாண்மைக்கு மாற்றி, ஒரு விற்பனை அமைப்பையும் உருவாக்கினர். பல நூறு பழங்குடி உழவர்கள் இதன்மூலம் பலன்பெற்றனர். உணவுப் பழக்கத்திலிருந்து மறைந்துகொண்டிருந்த சிறுதானியங்கள் போன்றவை மீண்டும் அவர்களது உணவில் இடம்பிடிக்கத் தொடங்கின. அவர்களது வேளாண் வருமானமும் பெருகியது. கருவுற்றிருந்த பெண்களிடையே ஏற்படும் இரத்த சோகை போன்ற குறைபாடுகளும் ஊட்டமிக்க உணவுமூலம் குறைந்தன. மருத்துவம், கல்வி, பொருளாதாரம், உணவு ஆகியவற்றின் அடுத்த கட்டமாகத் திறமான ஆட்சி-நிர்வாக அமைப்புக்கான தேவையை அவர்கள் உணர்ந்தனர். பழங்குடி மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றிய மாதேசுவரி மஞ்சுநாத் என்ற பழங்குடிப் பெண் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்து வெற்றியும் பெற்றார். அவரது தலைமையில் கிராம நிர்வாக அமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கிராம சபைகள் கூடித் திறம்படச் செயல்படுகின்றன. இக்குழவினர் பேசும்போது காந்தியின் சுயராச்சியத்தை இவ்வாறாகத்தான் படிப்படியாகப் புரிந்துகொண்டு அதை நெருங்கியுள்ளதாகக் கூறினர். காந்திய அரசியலைப் புரிந்துகொள்வதோடு காந்திய அறிவியலைப் புரிந்துகொள்ளவும் இத்தகைய அனுபவங்களே துணைநிற்கின்றன. ஒற்றைப் புள்ளி ஏதொன்றிலும் தேங்கிவிடாமல், மக்களின் தேவைகளுக்கேற்ப விரிவடைந்து, ஒவ்வொரு சிக்கலுக்குமான மூல காரணிகளை ஆராய்ந்தறிந்து அவற்றை நீக்கி, மானுட நேயத்துடனும் சனநாயகத் தன்மையுடனும் இயற்கை மீதான அக்கறையுடனும் இயங்குவதே காந்திய அறிவியல்.
உதவிய நூல்கள்/கட்டுரைகள்
- M.K.Gandhi, ’The Collected Works of Mahatma Gandhi’, Publications Division, New Delhi.
- Jawaharlal Nehru, “Letter to Aldous Huxley refuting his characterisation of Congress views as anti-Science”, Mainstream, VOL LX No 6, New Delhi, January 29, 2022
- Aldous Huxley , “A NOTE ON GANDHI”, Huxley and Orwell on Gandhi, The Beacon, October 24, 2019.
- M.K.Gandhi, Jawaharlal Nehru, The Charkha and the Rose, Publications Division, New Delhi, 2007.
- Shambhu Prasad, “Gandhi’s Views On Current Topics”, https://www.mkgandhi.org/articles/views_on_sci.htm
- Ramachandra Guha, “Gandhi and Science”, The Telegraph, February 4th, 2006
- Millie Graham Polak, “Mr.Gandhi: The Man”, January 1931.
- M.K.Gandhi, Divya Joshi, “Gandhi on Khadhi”, Mani Bhavan Gandhi Sangrahalaya, Mumbai, 2002.
- M.K.Gandhi, R.K.Prabhu, “Industrialize and Perish!”, Navajivan Publishing House, February 1966.
சிந்தனை தூண்டும் ஆழ்ந்த கட்டுரை எழுதி பகிர்ததற்க்கு நன்றி.