காந்தியின் தேசியம்

இம்மாத காலச்சுவடு இதழில் ‘காந்தியின் தேசியம்’ குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. இது குடியுரிமைச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை. எனினும் இச்சூழலில் காந்தியின் தேசியம் குறித்த கருத்துகளும், அவர் மிகவும் மதித்த தாகூர், தல்ஸ்தோய் ஆகியோர் தேசியத்தை எதிர்த்துக் கூறிய கருத்துகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


இணையத்தில் சந்தாதாரர்கள் மட்டுமே இப்போது படிக்கமுடியும். கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

/நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக்கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திரத் தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பாரென்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு./

—-

/தாகூரும் தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்திலிருந்த குழுமனப்பான்மையும் வன்முறையும் மிகையான பழம்பெருமையும், தாம்-பிறர் என்ற இருமையும், காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின்மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை; காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயப் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்ததால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை; தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சி நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்றாலும் அது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாதென்றும் எத்துணை குறைபாடுகள் இருந்தாலும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றும் பின்னர் கூறினார்./

/1909இல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (‘திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார்’ என்கிறார் ராமச்சந்திர குஹா.) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் “தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை” என்றும் “இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்” என்றும் “சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்” என்றும் தன்னிடம் சொன்னதாக வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்.

இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப்போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள்./

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: