ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’ நாவலை இம்மாதம்தான் படித்தேன். தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்துப் பேசும்போது சிலர் இதைக்குறிப்பிட்டதாலும், தற்செயலாகக் Kindle Unlimitedல் கண்ணில் பட்டதாலும் படிக்கத்தொடங்கினேன். மிகவும் பிடித்திருந்தது. காந்தி நூற்றாண்டு விழாவின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். காந்தி 150க்கும் பொருந்தி வருகிறது. பல ஆழமான உரையாடல்கள் மூலமகாக லட்சியவாதத்துக்கும் வாழ்வின் யதார்த்தங்களுக்கும் ஏற்படும் உரசல்களுக்குள் ஆழமாகச் செல்கிறது. காந்தியின் மீதான அன்றைய ஆயுதம் தாங்கிய மார்க்சியர்களின் விமர்சனங்களையும் சித்தரிக்கிறது. இப்பகுதியை அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதையோடு ஒப்புநோக்கலாம். அவர் பல அடுக்குகளை அமைத்துத் தொட்ட ஒரு புள்ளியை, இவர் இந்நாவலில் மிக நேரடியாகத் தொட்டுவிடுகிறார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் குடும்ப வாழ்வில் சந்திக்க நேரும் சவால்களைச் சொல்வதில் பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.
அரசியல், இலட்சியவாதப் பின்புலத்தில் நடைபெறும் பல உரையாடல்களும், நிகழ்ச்சிகளும் ஒரு பழைய ருஷ்ய நாவலைப் படிக்கும் நிறைவைத் தந்தன. கேள்விகளை எழுப்பின. எளிமையான, இனிமையான நடை. ராஜம் கிருஷ்ணனின் பெயர் சிறுவயது முதலே பரிச்சயமானதுதான் என்றாலும், அவரது தனிமையான இறுதிக்காலம் குறித்து முகநூல் மூலமாகக் கொஞ்சம் அறிந்திருந்தாலும், ஏன் இவரை இதுவரை நான் படித்ததே இல்லை என்பதை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார். 80 படைப்புகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்கிறது விக்கி. பிற நூல்கள் எப்படியோ, இது நல்லதொரு படைப்புதான்.